கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15 டிசம்பர், 2025

“உருவாய் அருவாய் உளதாய் இலதாய்”



1.  “உருவாய் அருவாய் உளதாய் இலதாய்”

சொல்வனம் இணைய இதழில் என்னுடைய புதிய கட்டுரைத்தொடர் துவங்கியிருக்கிறது. அத்வைதம்: அகவிடுதலைக்கான பயணம் என்ற தலைப்பில். அதனது முதல் அத்தியாயம்  “உருவாய் அருவாய் உளதாய் இலதாய்” அத்வைத வேதாந்தம் பற்றிய சிறு விளக்கத்தையும், அதன் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்தும் பேசுகிறது. இருவாரங்களுக்கொரு முறை இத்தொடரின் ஒவ்வொரு பகுதியும் வெளியாகும். அத்வைத வேதாந்தம் குறித்து அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கும், ஏற்கனவே அத்தத்துவத்தைக் கற்றுக் கொண்டவர்களுக்கு வாசித்து அனுபவிப்பதற்காகவும் பயனுள்ள தொடராக இருக்கும் இது.

26 நவம்பர், 2024

சஹிதா: அணையா நெருப்பு

 

கே.வி. ஷைலஜாவின் நாவலை முன்வைத்து


நன்றி: சொல்வனம்


மொழியாக்கங்களுக்குப் புகழ் பெற்ற கே.வி. ஷைலஜாவுக்கு சஹிதா முதல் நாவல். (பாலச்சந்திரன் சுள்ளிக்காட்டின் சிதம்பர நினைவுகள் அவர் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்து தமிழகத்திலும் புகழ்பெற்ற நூல்) நான் வாசிக்கும் அவர்களது முதல் நூலும் அதுவே. சஹிதா ஒரு கேரள கிராமத்திலுள்ள இஸ்லாமியக் குடும்பத்துப் பெண். அவளுக்கு தன் இந்துத் தோழியின் இல்லத்தில் கண்ட கடவுள் கண்ணன் மீது காதல் ஏற்பட்டு விடுகிறது. கண்ணன் மீது கொண்ட மையல், ஆன்மிகத் தவிப்பாகப் பரிணாமம் அடைந்து, இந்த இல்லற வாழ்விலிருந்து விடுதலையடைய வேண்டும் என்ற தாகம் அவளை எங்கும் பின் தொடர்ந்தபடியே இருக்கிறது. 

இல்லற வாழ்வு என்ற சொற்றொடரில் இங்கு நான் குறிப்பிட விழைவது திருமண பந்தத்தை மட்டுமன்று. நாம் இந்த இக வாழ்வை மேற்கொள்ளும் போது பிற மனிதர்களிடம் கொள்ளும் பரிவர்த்தனை தவிர்க்க இயலாதது. நாம் வாழும் சமூகமும் தான் கட்டமைத்திருக்கிற விதிகளின் பாற்பட்டு ஒருவர் நடந்து கொள்ளவேண்டும் என்றுதான் எதிர்பார்க்கும். பொருளாதாரத்திலும், மனித உரிமைகளுக்கான சட்டங்களை இயற்றிப் பேணிக்காப்பதிலும் உயர் நிலையில் விளங்கும் சமூகங்களிலேயே கூட ஆண்களுக்கென்றும், பெண்களுக்கென்றுமான தனித்தனி விதிகள் அமைந்திருக்கும்போது, நம் நாட்டைப்போன்று இன்றும் பெண்களை ஆணுக்குக் கீழான உயிராக பார்க்கும் சமூகங்களில் ஒரு பெண் ஆன்மிக விடுதலை தேடிப் பயணம் மேற்கொள்ளுதல் என்பது சிந்தித்துப் பார்க்க இயலாத ஒன்று. என் தனிப்பட்ட வாழ்வில் இப்படி தாகங்கொண்ட இரு பெண்களை நான் பார்த்திருக்கிறேன். என் மனைவியும், அவரது தாயாரும். என் மாமியார் ஆன்மிகத்திலும், பக்தியிலும், தத்துவத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். அத்வைத வேதாந்தத்தை முறையாக ஒரு குருவிடத்திலும், தன் கணவனிடத்திலும் கற்றவர். ஆனால் இறுதி வரை தான் ஒரு பெண்ணுடல் எடுத்ததாலேயே தன்னால் ஆன்மிகத்தில் தான் விரும்பும் நிலையை அடைய முடியவில்லை என்றும், விரும்பும் ஆன்மிகத்தலங்களுக்கு (காசி, ரிஷிகேஷ்) செல்ல முடியவில்லை என்றும் குறைபட்டுக் கொண்டே இருப்பார். பிறவித்தளையறுக்கும் வேதாந்தக் கல்வியைப் பெற்ற அவருக்கு, அடுத்த பிறவியில் தான் ஆணாகப் பிறந்தால் மட்டுமே வீடுபேறு அடைய முடியும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை இருந்தது. அதுவே இறைவனிடம் அவரது இறுதிக் கோரிக்கையாகவும் இருந்தது. இந்துக் குடும்பங்களில் பிறக்கும் பெண்களுக்கே ஆன்மிகப்பாதையைத் தேர்ந்தெடுத்தல் என்பது அசாத்தியமான விஷயமாக இருக்கும் போது, இந்த நாவலின் நாயகி சஹிதா ஒரு இஸ்லாமியக் குடும்பத்துப் பெண். அவள் சந்திக்கும் சவால்களும், அவளுக்குள் நிகழும் போராட்டங்களும் எத்தகையனவாக இருக்கும் என்பதை நாம் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம்.

சஹிதாவுக்குள்  சுடர் விட்டு எரியும், அணையா நெருப்பென அவளைக் கணந்தோறும் வாட்டும் அவளது ஆன்மிக நாட்டம் அவள் பெற்றோரையும், சகோதரியையும், கணவனையும், பெற்ற பெண்ணையும் கூடப் பிரிந்து வெளியேற அவளைத் தூண்டுகிறது. சஹிதா என்ற பெண்ணின் மனதின் ஆன்மிக ஏக்கங்களை, இல்லற வாழ்வின் மீது அவளுக்குண்டான கிலேசங்களை, தன்னைச் சுற்றிலும் உள்ள தனக்கு நெருங்கிய உறவுகள், தோழமைகள் இவர்களுக்குத் தன் தவிப்பைப் புரியவைத்து, அவர்களிடமிருந்து விலகிச் செல்லுதலை சாத்தியமாக்கிக் கொள்ள அவள் நிகழ்த்தும் போராட்டங்களை, இல்லறத்திலும் நிலைக்க இயலாமல், ஆன்மிகப் பாதையில் செல்வதால் தான் துறந்து செல்லப்போகும் உறவுகளின் இழப்பையும் தாங்க முடியாமல் அவள் மனத்துக்குள் என்னேரமும் நிகழும் கொந்தளிப்புகளை என அத்தனையையும் மிகத்துல்லியமாக ஆவணப்படுத்தியிருக்கிறார் நாவலாசிரியர்.

சஹிதா ஒரு பெண்ணின் கதை மட்டுமல்ல. அவளைச் சுற்றியுள்ள பல பெண்களின் கதையும் கூட. நாவலின் முற்பகுதியில் சஹிதாவைச் சுற்றியுள்ள, அவள் வாழ்விற்கு நெருக்கமான பல பெண்களின் கதையும் விரிகிறது. ஒன்பது வயதில் திருமணம் முடித்து, பதிமூன்று வயதில் பூப்பெய்தியதும் கணவன் வீட்டுக்குச் சென்று இரண்டரை ஆண்டுகள் மட்டுமே அவனோடு வாழ்ந்து, அவனை பாம்புக்கடிக்கு பலி கொடுத்து, தனியளாயினும், பிறருக்கு உதவுதல், பசியாற்றுதல் என்று தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கெனவே தன்னை மாற்றிக் கொண்ட சஹிதாவின் இத்தாமு; சபரிமலைக்கு மாலை போட்டிருக்கும் அப்பாவுக்கு அபச்சாரம் நேர்ந்து விடக்கூடாது என்பதற்காக தீட்டுத்துணி காயும் அறைக்குள்ளேயே தங்கி குருதிப்போக்கின் நாட்களைக் கழிக்கும் லீலா, மற்றும் அவள் வீட்டுப் பெண்கள்; ரத்தச் சிவப்பும், சுருண்ட கரு நீல முடியுமாக சஹிதா வீட்டுக்குள் ஒரு மோகினியைப் போல நுழையும் பேரழகியும், தன் கணவனைத் தொட மறுத்து பேய் பிடித்து ஆடும் ஜமீலா; சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்து, அண்ணனின் பாசத்தில் திளைத்தும், அண்ணியின் புறக்கணிப்பின் வலியேற்று துன்புற்றும் நாட்களைக் கடத்தி, பின் சஹிதாவின் தந்தையின் அன்பின் குடைக்குள் நுழைந்து வாழும் தாய் அஸ்மா; உடன் பிறந்தவர்களுக்கும் கணவனுடன் பிறந்தவர்களுக்குமே வாழ்க்கையை ஒப்புக் கொடுத்து தளர்ந்து போன ஜரீனா பீவி;  திருமணம் முடிந்து துபாய் சென்ற கணவன் விபத்தில் சிக்கி மருத்துவப் படுக்கையில் இருப்பதைக் கூட அறியாது வாழும் நளினி; இப்படிப் பல பெண்களின் வாழ்க்கைப் பயணம் துரித கதியிலும், அதே நேரம் துல்லியமாகவும் விவரிக்கப்படுகிறது. சஹிதா என்ற ஒரு பெண் தன் உள்ளத்தில் கனன்று சுழலும் ஆன்மிக நெருப்பைக் காத்து, அதன் மூலம் விடுதலையடைய வேட்கை கொண்டுள்ள பயணத்தில் மத்தியில், இத்தனைப் பெண்களின் கதைகளும் உரைக்கப்படுவது எதனால்? ஒருவேளை அவள் தேர்ந்தெடுத்துள்ள பாதை அவளுக்கு அத்தனை எளிதாக இருக்கப் போவதில்லை என்பதை அவளுக்கும், வாசகர்களாகிய நமக்கும் உணர்த்துவதற்காகத்தானா? இத்தனைப் பெண்கள் அவளைச் சுற்றி தங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கையில், அவள் மட்டும் தனக்குச் சிறகுகள் முளைத்து வெளியே பறந்து விட வேண்டும் என்று கனவை ஏந்திக் கொண்டிருப்பது நியாயமா என்று அவளைச் சுற்றியுள்ளவர்கள் சொல்லற்ற கேள்விகளால் துளைப்பதாகவே நான் கற்பனை செய்து கொண்டேன்.

ஒரு நாவல் என்பது பிரதானமாக அதன் முக்கியக் கதாபாத்திரங்கள் தங்கள் உள்ளத்தில் மேற்கொள்ளும் உளவியல் பரிணாம வளர்ச்சியே என்று நான் கருதுகிறேன். ஒரு வாசகராக ஒரு நாவலின் மையக் கதாமாந்தர்கள் எங்கனம் பல்வேறு சூழ்நிலைகளையும், சவால்களையும் எதிர்கொள்கின்றனர் என்றும், அவ்வனுபவங்களின் மூலம், அவர்கள் தாங்கள் இருந்த நிலையிலிருந்து என்ன மாதிரியான மாற்றங்களை அடைகிறார்கள் என்பதை அவதானிப்பதுமே நாவல் வாசிப்பில் வாசகனைக் கிளர்ச்சியடையச் செய்யும் செயல்களாகும். இந்தப் பயணத்தை மேற்கொள்ளும் வாசகனையும் கதாமாந்தர்களுக்கு நிகழும் அனுபவங்கள் மிக நுண்மையாக பாதிக்கவும், அவனுள் மாற்றத்தை ஏற்படுத்தவும் செய்கின்றன. இந்த நாவலில் ஆசிரியர் தனது கதா மாந்தர்களான சஹிதா மற்றும் அவளுக்கு நெருங்கிய மனிதர்கள் எங்கனம் மாற்றமடைகின்றனர் என்பதை மிக ஆழமாகப் பதிவு செய்திருக்கிறார். ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மேல், பிற பாத்திரங்களின் முக்கியத்துவம் மங்கி சஹிதாவின் ஆன்மிகத் தவிப்பே பிரதானமாக மேலோங்கி நிற்கிறது. சம்பவங்கள் அவளது உள ஏக்கத்தின் வெளிப்பாடாகவே நிகழ்கின்றன. உரையாடல்கள் அவள் எடுக்கவிருக்கும் முடிவின் சாதக, பாதகங்களைப் பற்றிய வாதப்பிரதிவாதங்களாகவே நிகழ்கின்றன. குறியீட்டளவில் கூட அவள் செல்லும் இடங்கள், காணும் கனவுகள், பிற உயிர்களின் செயல்களை அவள் பொருள்படுத்தும் விதம் ஆகியன அவளது ஆன்மிகத்தாகத்தின் பருப்பொருள்களெனவே விளங்குகின்றன.

மூன்று ஆண்கள் சஹிதாவுக்கு முக்கியமானவர்கள்: சஹிதாவின் அத்தா கரீம்;  அவளது கணவன் நாசிம்; அவளது ஆன்மிகத் தோழன் ஆதி. இது தவிர தன் மனைவியின் இழப்பில் மனநிலை பிறழ்ந்த நிசார், அவளைத் தன் தோழியாக வரித்துக் கொள்ளும் இசையமைப்பாளர் நந்தா, அவள் தொடங்கும் தொழிலுக்கு உதவி புரியும் சீமத்தாத்தா என்று மேலும் சில ஆண்களும் சஹிதாவின் வாழ்க்கைக்குள் வந்து அவளது அகத்தூண்டலின் வளர்ச்சிக்குப் பங்காற்றுகிறார்கள்.

சஹிதா சிறுவயதிலிருந்தே தந்தையின் அன்பிற்காக ஏங்குகிறாள். அவரோ அவளது தங்கை வஹிதாவையே தன் செல்வமாக நினைக்கிறார். அவரது ஆன்மிக நம்பிக்கை கூட அடிப்படை இஸ்லாமியத்திலிருந்து விலகி சூஃபி மரபின் மிண்டா தங்ஙளை வணங்குவதாக இருக்கிறது. ஒருவேளை சஹிதா தன்னுடைய தனித்துவம் மிக்க ஆன்மிகப் பாதையைத் தேர்ந்தெடுத்ததற்கு அவள் தன் தந்தை மீது கொண்டிருந்த பிரேமை கூடக் காரணமாக இருக்கலாம். 

இறுதி வரை அவளுக்கு உடன் நிற்பவன் அவள் கணவன் நாசிமே. தன் தாய் ஜரீனாவின் சீற்றங்களையும், அவள் மருமகள் மீது காட்டும் வன்மத்தையும் பொறுத்துக் கொண்டு, மனைவிக்கு அரணாக எல்லா இடத்திலும் நிற்கிறான். சஹிதாவிடம் அவன் மேற்கொள்ளும் உரையாடல்கள் அவளுக்கு அவளது ஏக்கத்தின், கனவுகளின் அபத்தத்தைப் புரியவைத்து அவளை மீண்டும் இல்லற வழிக்குத் திருப்பும் முயற்சிகளாக இருப்பினும், சிறிது சிறிதாக அந்த உரையாடல்களின் மூலம், எதிர்காலத்தில் சஹிதா தன்னையும், குடும்பத்தையும் விட்டு நிரந்தமாக வெளியேறி விட்டால் தனக்குள் நிகழப்போகும் துக்கத்தைத் தேற்றிக்கொள்ளும் வழியாகவே அவன் காண்பதாகப் பார்க்கிறேன். அவர்களுக்குப் பெண் குழந்தை அமீரா பிறந்து பதினெட்டு ஆண்டுகள் ஆயினும் சஹிதா தன் நோக்கத்தில் மாறாதிருப்பதை அருகிருந்து கண்ணுறுகிறவன் அவன்தான். எனவே, உலகே எதிர்த்து நின்றாலும் அவளது முடிவுகளுக்குத் துணையாக நான் நிற்பேன் என்று உறுதி கொண்டவன் அவன். சஹிதா வீட்டை விட்டு வெளியேறும்போது அவள் ஆதியுடன் தன் பயணத்தைத் தொடரவேண்டும் என்ற முடிவில் உறுதியாயிருப்பவனும் அவனே. நாசிம் போன்ற கணவன் அமைந்திருக்கவில்லையெனில் சஹிதா தன் ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கியிருக்க முடியுமா என்பது ஐயமே.

அயல் நாட்டிலிருந்து வந்து, இந்திய ஆன்மிகத்தில் தன்னைக் கரைத்துக் கொண்டு தன் பெயரையும் மாற்றிக் கொண்ட ஆதி, சஹிதாவுக்குப் பொருத்தமான ஆன்மிகத் தோழன். அவன் அவளுடன் நிகழ்த்தும் உரையாடல் சஹிதாவுக்கு அவனைப்பற்றியும், தன்னைப் பற்றியுமே புரிந்து கொள்ள உதவுகின்றது.

நாவல் ஒரே கோட்டில் பயணிக்காமல் முன், பின்னாக நகர்ந்து கொண்டே இருக்கிறது. சஹிதாவுக்கு குழந்தை பிறந்து ஆறு ஆண்டுகள் கழித்தபின், அவளது சொந்தத் தொழில் முயற்சிகள் எல்லாம் விளக்கப்பட்டபின் அவளது திருமணம் நிகழ்ந்த விதம் வருணிக்கப்படுகிறது. சட்டென்று நாவல் நம்மை சஹிதாவின் குழந்தைப் பருவத்துக்குள் இட்டுச் செல்கிறது. மீண்டும், மீண்டும் சஹிதாவின் கடந்தகால வாழ்விற்குள் எட்டிப்பார்ப்பதன் மூலம், அவள் நிகழ்காலத்தின் ஏன் சிலவிதமான முடிவுகளை எடுக்கிறாள் என்பதை வாசகர் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள முடிகிறது என்று நினைக்கிறேன். நாவலின் ஒரு அத்தியாயத்தில் சிறுமி சஹிதாவின் வீட்டுக்கு வரும் பிச்சைக்காரர்களைப் பற்றிய குறிப்புகள் வருகின்றன. வேலாயுத பண்டாரமும், குட்டப்பனும் தனக்குப் பிச்சையளிக்க வரும் சிறுமி சஹிதாவுக்குச் சொல்லும் கதைகளில் அவள் மெய்மறந்திருக்கிறாள். அம்மா அதற்காக அவளைக் கண்டிக்கும்போதும், அடிக்கும்போதும் அவள் மனம் அவர்கள் சொல்லும் கதைகளையே நாடிச் செல்லுகிறது. குட்டப்பன்தான் அவளுக்கு சிதம்பரம் நடராஜர் பற்றிச் சொல்பவன். திருமணம் ஆகி கணவன் இல்லம் வந்தபின், அவனது அனுமதியுடன் கடவுளர் பிரதிமைகளை வீட்டுக்குள் (மாமியாருக்குத் தெரியாமல்) வைத்துக் கொள்கிறாள். தன் குழந்தைமையிலிருந்து உடன் வந்த நீலநிறக் கண்ணன் மாயமாகி அந்த இடத்திற்கு அண்ட சராசரத்தையும் தன் களி நடனம் மூலம் அளந்த சிவன் எப்படி வந்தானென்று அவளால் அப்போது கண்டடைய முடியவில்லை. 

அவளது கேரள வீட்டின் தோட்டத்திற்குப் பின்னால் வேலிப்படப்பிற்கு அந்தப்புறம் ஒரு பாழடைந்த மாடிவீடு. அதில் உடைகள் துறந்து வாழும், மனநிலை பிறழ்ந்த யாயா பாட்டி. சிறுமி சஹிதா மட்டுமே அவளை தைரியமாகக் காணச் செல்கிறாள். இந்தக் காட்சியை நாவலாசிரியர் விவரித்திருந்த விதம், இந்த நாவலின் கலை உச்சங்களின் ஒன்று இந்த இடம் என்று என்னை எண்ண வைத்தது. மேலும் சில பகுதிகளை இந்த நாவல், இந்த வடிவத்தில் அது கொண்டிருக்கும் கலை உச்சங்களெனக் குறிப்பிடலாம். அடுத்ததாக இந்த நாவலில் என் கவனத்தை மிகவும் ஈர்த்த பகுதி சஹிதாவுக்குக் குழந்தை அமீரா பிறந்ததும், அவர்கள் பகுதியில் வாழும் சாந்தம்மா சேச்சி முதல் பதினைந்து நாட்களுக்குக் குழந்தையையும், பிள்ளைத்தாய்ச்சிப் பெண்ணையும் நான்தான் கவனித்துக் கொள்வேன் என்று ஆணையிட்டு விடுகிறாள். அந்தப் பதினைந்து நாட்களும் அவள் சஹிதாவையும், குழந்தையையும் எவ்வாறெல்லாம் கவனித்துக் கொள்கிறாள் என்று மிக நுட்பமாக விவரித்திருக்கிறார் ஷைலஜா. தமிழர் வாழ்க்கையின், மலையாளிகளின் வாழ்க்கையின் ஒரு மிக முக்கியமான பகுதி இவ்விடத்தில் மிகத்துல்லியமாக ஆவணமாக்கப்பட்டிருகிறது. இன்னொரு காட்சி. சரிதாவின் மாமனார் சீமத்தாத்தா இறந்து அவருக்கு இறுதிச்சடங்கும் முடிந்தபின் நிகழ்வது. சிறுவன் சரண் சீமத்தாத்தாவின் கார் பானட்டில் மீது ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கிறான். சரணின் பெரியப்பா ஓடி வந்து, “டேய் சரண், எறங்குடா, தாத்தா திட்டுவாரேடா,” என்று அவனை மிரட்ட, அவனோ காரின் மேல் குத்துக் காலிட்டு உட்கார்ந்து, “பெரிப்பா, தாத்தாதான் இப்ப இல்லயே, என்ன யாரும் இனிமே கேக்க முடியாது, நான் என்ன வேணாலும் செய்வேன்,” என்று அந்த காரை ஓங்கிக் குத்துகிறான். புரிந்து கொள்ளாத உளவியல் என்பது பெரியவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் பொருந்தும் என்று இந்தக் காட்சி விளக்குகிறது. கீழ்மையும், வன்மமும் குழந்தைகளிடத்து வெளிப்படுவதைக் காணும்போது நாம் ஏன் துணுக்குறுகிறோம்?  இதில் ஒளிந்துள்ள உளவியல் மர்மம்தான் என்ன? நமக்குள் நாம் ஒளித்து வைத்துள்ள கீழ்மைகளை அவர்கள் நினைவுறுத்துவதாலா? தூய உயிர் என்று மட்டுமே நாம் நம்பும் குழந்தைகளிடத்தும் வன்மம் போன்ற கீழ்மைக் குணங்கள் சாத்தியமுண்டு என்று அறிவதால் ஏற்படும் துணுக்குறலா அது?

சௌகத் என்ற எழுத்தாளரின் மொழி ஆழம் என்ற நூலை வாசித்த சஹிதா அவருக்குக் கடிதம் எழுதுகிறாள். அவர் அவளை வந்து சந்திக்கிறார். ஒரு யோகியின் சுயசரிதம் நூலைப் பரிசளிக்கிறார். சஹிதா அதை வாசிக்கிறாள். இப்படிச் சின்னச் சின்னதான குறிப்புகள், எவ்வாறு மெல்ல, மெல்ல சஹிதா தன் ஆன்மிகப் பாதை எது என்பதில் தெளிவடைகிறாள் என்பதை காட்டுகின்றன. கவனமற்று வாசிக்கையில் நாம் தவறவிட்டுவிடக் கூடிய சாத்தியங்களுள்ள குறிப்புகள் அவை. குழலூதும் கண்ணனில் துவங்கி, சிதம்பர சிவன் வழியாக சன்யாச தீட்சை வேண்டும் ஆவலாகப் பரிணமிக்கிறது அவளது ஏக்கம். பின் தன் நண்பர்கள் ராதா, ஹரியின் குழந்தை விஷ்ணுவைப் பார்த்ததும், தன் வாழ்வைக் கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு அர்ப்பணம் செய்யவேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது. கூழாங்கல் மாற்றி விளையாடும் விஷ்ணுவின் கண்களில் அவள் கண்ணனையே காண்கிறாள். தன் ஆன்மிகச் சாதனையின் ஒரு பகுதியாக சஹிதா ரேக்கி ஹீலிங்க் செய்கிறாள். ஜோதி அம்மாவின் கடிதமும், நாசிமும், சஹிதாவும் காரில் செல்கையில் வழியில் குறுக்கிடும் நாடி ஜோதிடக்காரியின் ஆருடமும் சொல்வது ஒன்றையே: சஹிதாவின் வாழ்வின் பணி என்பது நான்கு சுவர்களுக்குள் அடைக்கப்பட்டு விடுவதல்ல. மகத்தான காரியங்களுக்காகவே அவளது பிறப்பு அமைந்திருக்கிறது. நந்தா, சக்தி தம்பதியர் அளிக்கும் விருந்தில் நந்தா இசையமைத்த பாடலை எலலாரும் பாடுகிறார்கள். அந்தப் பாடலின் சாரமே அவளது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துகிறது.

“காஷாயம் - சிவாலயம்

சர்வம் - கர்மம்

விருப்பாட்சம்

மகா மோட்சம்

சரணாகதி”

சஹிதாவின் கணவன், தோழிகள் அனைவரும் அவளிடம் அவள் முடிவு குறித்து வாதிடுகிறார்கள். மாற்றிக்கொள்ளும்படி மன்றாடுகிறார்கள். சஹிதாவை விட பத்து வயது அதிகமான சரிதாவால் மட்டும் அவள் முடிவை ஏற்றுக்கொள்ளவே முடிவதில்லை. ஒருவழியாக அவள் சன்யாசம் மேற்கொள்வதை ஏற்றுக் கொண்டாலும், அவள் இன்னொரு ஆடவனுடன் வெளியேறுவதில் அவளுக்கு உடன்பாடே ஏற்படுவதில்லை. மிகவும் கடுமையாக அவள் முடிவுகளை எதிர்க்கிறாள். சஹிதாவின் கணவன் நாசிம்தான் மனைவிக்கு ஆதரவாக அவளிடம் வாதிடுகிறாள்.

ஆனால் சஹிதாவின் இந்த முடிவை மூர்க்கமாக எதிர்ப்பதும், அவள் வெளியேறினால் மொத்தமாக அறுத்துக் கொண்டு வெளியேற வேண்டும் என்ற நிபந்தனை விதிப்பதும் அவளது மாமியார் ஜரீனாதான். நாவலின் உச்ச நாடகீயத்தருணங்களில் ஒன்று ஜரீனா சஹிதாவின் பெற்றோர்களிடம் அவள் வெளியேறுவதற்கான நிபந்தனைகளை விதிப்பது. சஹிதா தன் மகள் அமீரா தன் முடிவு எவ்விதம் புரிந்து வைத்திருக்கிறாள் என்று அறிந்து கொள்ள அவளுடன் நிகழ்த்தும் உரையாடலும் நாவலின் கவித்துவம் கவிந்த நாடகீயத் தருணமே.

இறுதியில் முறையாக விவாகரத்து பெற்று ஆதியுடன் வெளியேறுகிறாள் சஹிதா. அவனுடன் ரமணாஸ்மரத்தில் பிக்ஷைக்கு நின்று கொண்டிருப்பதாய் ஒரு படிமம் அவள் மனக்கண்ணில் வந்து செல்கிறது. இறுதி வரை தன் முடிவில் உறுதியாக நின்று, தன் ஆன்மிகத் தவிப்பைத் தணித்துக் கொள்கிறாள் சஹிதா. வானம் குடையென விரிந்திருக்கும் இவ்வாழ்வு இனி அவளுக்கு என்ன மாதிரியான சவால்களை அளிக்கப் போகிறது? அனைத்தையும் துறந்து, இப்பேரிருப்பின் இயல்பில் கரைந்து விட எண்ணங்கொண்டு வெளியேறியவளை அப்பேரிருப்பே இருகரம் கொண்டு அணைத்துக் கொள்ளுமா? தன் சிறகுகளுக்குள் வைத்துக் அடைகாத்துக் கொள்ளுமா? அக்கம்மா தேவி போன்று பல பெண் ஞானியரைக் கண்ட தேசம்தான் நம்முடையது. வேதாந்த வகுப்புகளில் கலந்து கொள்வதற்காக நான் சென்ற ஆசிரமங்களில் நிறைய பெண் துறவியரைச் சந்தித்திருக்கிறேன். அவர்கள் பொருள் தேடும் வாழ்வை விடுத்து ஞானத்துக்காக அனைத்தையும் துறந்து வந்ததைக் கண்டு வியந்திருக்கிறேன். அவர்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் சஹிதாவுக்கு நிகழ்ந்தது போன்ற அனுபவங்கள் நிகழ்ந்திருக்கும்தானே! அத்தனை சவால்களையும் மீறித்தானே அவர்கள் இன்றிருக்கும் நிலையை அடைந்திருக்க இயலும்! அவர்கள் வாழ்விற்க்குள் சஹிதா போன்று எத்தனை நாவல்கள் பொதிந்திருக்கின்றனவோ?

நாவலாசிரியர் கே.வி. ஷைலஜாவின் மொழி மனதுக்கு நெருக்கமானது. நிறைய இடங்களில் அது கட்டற்றுப் பிரவகிக்கிறது. பல இடங்களில் அவரது மொழியின் தனித்துவம், இப்படி ஒரு நடையை நம்மால் மேற்கொள்ள முடியுமா என்ற ஏக்கத்தைத் தோற்றுவிக்கிறது. நீண்டகாலம் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து வந்ததன் மூலம், அவரது மொழிக்கு லயமும், இசையும், சொற்களின் தனித்துவமும் ஒன்று கூடி, அவர் நமக்குக் காட்ட விரும்பும் உலகின் மாயத்தை எளிதில் நிகழ்த்திக் காட்டுகின்றன. மிகக் கச்சிதமான திட்டமிடல், அதே நேரம் நாவலில் கட்டற்றுப் பெருகும் பாங்கு, எண்ணற்ற கதை மாந்தர்கள் நாவலுக்குள் தோன்றிக் கொண்டே இருப்பது, அதே நேரம் நாவல் தன் குறிக்கோளை நோக்கி சீரொழுக்கான நதியைப் போன்று பயணிப்பது, நாவலின் உரையாடல்கள் அதன் மையத்தை நோக்கியே இருப்பது என்று ஓர் ஆகச் சிறந்த நாவலுக்குரிய அம்சங்களைப் பெற்றிருக்கிறது சஹிதா. நான் அண்மையில் வாசித்த நாவல்களில் முழுமையும், ஒருமையும் கூடி என்னை வசீகரித்த நாவல்களில் ஒன்று சஹிதா. அவரது வாசகர் பலருடையதைப் போல எனது அவாவும் அவர் நிறைய புனைவு எழுத வேண்டுமென்பதுதான். 

* * *


ஹான் காங் -புனைவும் இலக்கியமும்

  




நன்றி: சொல்வனம்


தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்குக்கு 2024- ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.  தென்கொரியாவிலிருந்து இந்த விருதைப் பெறும் முதல் எழுத்தாளர் இவர். ஹான் காங் தன் நாட்டினரால் ஆற்றல் வாய்ந்த தொலை நோக்குப் பார்வையாளர் என்று கொண்டாடப்படுபவர். வரலாற்றுத் துயரை துணிவுடன் எதிர்கொள்ளும், மனித வாழ்வின் பலவீனங்களை வெளிப்படுத்தும், அவரது கவித்துவமிக்கதும் தீவிரமானதுமான உரைநடைக்காக ஹான் காங்குக்கு இந்த விருது அளிக்கப்படுவதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது. நோபல் கமிட்டியின் தலைவரான ஆண்டர்ஸ் ஓல்சன், தன் அறிக்கையில், “ஹானின் எழுத்து உடலுக்கும், ஆன்மாவுக்கும், இறந்தவர்களுக்கும், உயிருள்ளவருக்கும் இடையில் உள்ள தொடர்பு குறித்த தனித்துவமிக்க விழிப்புணர்வோடு எழுதப்படும் புதுமையுடையது,” என்று குறிப்பிடுகிறார்.

ஐம்பத்து மூன்று வயதான ஹானின் தந்தையும் ஒரு நாவலாசிரியரே. அவரது குடும்பம் பொருளாதார ரீதியான சிரமத்தின் காரணமாக அடிக்கடி இடம்பெயர வேண்டியிருந்தது. “இப்படி இடம் மாறிக்கொண்டே இருந்தது சிறுகுழந்தையான எனக்குக் கடினமாக இருந்தது. ஆனால் நான் எப்போதும் புத்தகங்களால் சூழப்பட்டிருந்தேன். அவை என்னைக் காப்பாற்றின,” என்று ஹான் தான் அளித்த நேர்காணல் ஒன்றில் குறிப்பிடுகிறார்.

ஹானுக்கு 9 வயதாக இருந்தபோது, ​​குவாங்ஜு எழுச்சிக்கு சில மாதங்களுக்கு முன்பு அவரது குடும்பம் சியோலுக்கு குடிபெயர்ந்தது, அப்போது அரசாங்கத் துருப்புக்கள் ஜனநாயக சார்பு எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்றனர். இந்த நிகழ்வு மனித குலத்தின் வன்முறைத்திறன் குறித்த தன் பார்வையை வடிவமைத்ததாக ஹான் கூறுகிறார். அவரது எழுத்திலும் இதன் பாதிப்பு உண்டு. 2014-ல் வெளிவந்த “மனிதச் செயல்கள்” ( Human Acts ) என்ற நாவல் போராட்டக் குழு ஒன்றின் மீது காவல்துறை நிகழ்த்தும் சோதனையைக் கூர்மையாக அவதானிக்கிறது.

கொரியாவின் யோன்சேய் பல்கலைக் கழகத்தில் இலக்கியம் பயின்ற ஹான் வெளியிட்ட முதல் படைப்பு கவிதைகளே. 1998 ல் வெளிவந்த இவரது முதல் நாவல் “கருப்பு மான்” ( Black Deer ) தொலைந்து போன பெண்ணொருத்தியின் மர்மத்தை ஆராய்வது. இந்த காலகட்டத்தில்தான் இவருக்குத் தாவரமாக மாற ஆசைப்படும் பெண்ணொருத்தியின் கதையைச் சிறுகதையாக எழுதும் எண்ணம் தோன்றியிருக்கிறது. பின்னாளில் இக்கதை ஒரு நாவலாக உருக்கொண்டது. 

2016-க்கான புக்கர் விருது வென்ற இவரது மீமெய்யியல் நாவலான  த வெஜிடேரியன், தமிழில் “மரக்கறி” என்ற பெயரில் கவிஞர் சமயவேல் மொழியாக்கத்தில் வெளிவந்துள்ளது. இந்த நாவல் மன அழுத்தத்துக்கு ஆளான இல்லத்தரசி ஒருவரை மையமாகக் கொண்டது. அவள் தன் மன அழுத்தம் காரணமாக இறைச்சி உண்ணுவதை நிறுத்தி தன் இல்லத்தினரை அதிர்ச்சிக்கு ஆளாக்குகிறார். காலப்போக்கில் உண்ணுவதையே முற்றிலுமாக நிறுத்தி விடுகிறாள். சூரிய ஒளியை மட்டுமே உண்டு வாழக்கூடிய ஒரு மரமாக வாழ ஏங்குகிறாள். 

த வெஜிடேரியன் மனத்தெளிவுக்கும், மனப்பிறழ்வுக்கும் இடையேயான எல்லைகளை ஆராய்கிறது. ஆசைக்கும், வன்முறைக்கும் இடையேயான எல்லைகள்; செயலூக்கத்துக்கும், வெறிச்செயலுக்கும் இடையேயான எல்லைகள் ஆகியவற்றையும் ஆராய்கிறது. 2007-ல் கொரிய மொழியில் மூன்று தனித்தனி நாவல்களாக வெளியிடப்பட்ட இந்த நாவல் நேர்த்தியாகவும், சிலிர்ப்பூட்டும் வகையிலும் சொல்லப்பட்ட ஓர் இருண்ட நாவல். டெபோரா ஸ்மித் இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

இந்த நாவலின் மையக்கதாபாத்திரம் யோங்-ஹை இறைச்சி உண்பதை நிறுத்தி விடுவது மட்டுமல்லாமல், உடலுறவிலும் நாட்டமிழந்து விடுகிறாள். அவள் பிரா அணிந்து கொள்வதை நிறுத்தியதை பெண்மைக்கு மாறான நடத்தை என்றும், அவளது அப்போதைய மாற்றத்தைச் சரிசெய்து கொள்வதற்கான தவறான செயல் என்றும் அவள் கணவன் எச்சரிக்கிறான். அவள் ஏதோ நோய்க்கு அடிமையானதைப் போல அவளது குடும்பமே அவளது சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறது. அவளது தந்தை அவளுக்கு வலுக்கட்டாயமாக உணவளிக்க முயற்சிக்கிறார், அவளை அறைந்து, பின்னர் சிறிது பன்றி இறைச்சியை அவள் உதடுகளில் திணிக்கிறார். அவள் வாயைத் திறக்காதபோது அவர் அவளை மீண்டும் அறைகிறார். 

நாவல் முழுக்கவே யோங்-ஹையின் செயல்கள் ஏதோ ஒரு ஆணின் பார்வையிலேயே காட்டப்படுகின்றன. நாவலின் முதல் பகுதி அவளது கணவனின் பார்வையில் உள்ளது. தன் மைத்துனியைப் பற்றி ஏக்கத்துடன் கற்பனை செய்பவன் அவள் கணவன். தொலைபேசியில் அவள் குரலைக் கேட்டதும் கிளர்ச்சியடைபவன். அவன் தன்னை வலுக்கட்டாயமாக உடலுறவுக்கு உட்படுத்த முயலும்போது யோங்-ஹை தன்னை வழங்குவதில்லை. அவன் மீது வசைச் சொற்களைப் பொழிகிறாள். மீறி அவன் வன்புணர்வு செய்யும்போது கூரையை வெறித்தபடி படுத்துக் கிடக்கிறாள், ஒரு ஜப்பானிய வீரனுக்குப் போர்க்காலத்தில் இன்பமளிக்கும் விலைமாதுவைப் போல. அவளது நடத்தையாலேயே அவள் அவனைத் தன்னிடமிருந்து விலகிச் செல்ல வைத்து விடுகிறாள்.

நாவலின் இரண்டாவது பகுதி யோங்-ஹையின் மைத்துனரின் பார்வையில் சொல்லப்படுகிறது. தவறான பெண்ணை மணந்து கொண்டதாக வருந்தும் அவன் ஹையின் பேச்சு, ஆடையுடுத்தும் விதம், உணவுண்ணாமையால் துருத்தித் தெரியும் அவளது கன்னத்து எலும்புகள் ஆகியவற்றால் கவரப்படுகிறான். அவன் மனைவியுடன் ஒப்பிடுகையில் அவள் அழகற்றவள்தான். ஆனால் அவள் வனாந்தரத்தில் வளரும் ஒரு மரத்தைப் போல புத்துணர்வைப் பரப்பிக் கொண்டிருப்பதாக அவனுக்குப் படுகிறது. ஆனால் இத்தருணத்தில் ஹை இறைச்சியைத் துறந்து இரண்டு ஆண்டுகளாகியிருக்கிறது. அவளது திருமண வாழ்க்கை முறிந்து, மனநலக் காப்பகத்தில் பல மாதங்கள் கழிக்கிறாள். அவளது மைத்துனன் ஒருமுறை தன் மனைவி மூலம் ஹையின் பிருஷ்டத்தில் உள்ள மங்கோலியன் குறியைப் பற்றிக் கேள்விப்படுகிறான். அந்தப் பிம்பத்தால் உந்தப்பட்டு, நிர்வாணமாக உடலுறவில் ஈடுபடும் ஆண்களும் பெண்களும் கொண்ட, அவர்களின் உடல் முழுவதும் பூக்களால் வர்ணம் பூசப்பட்ட ஓவியங்களால் தன் நோட்டுப் புத்தகத்தை நிரப்புகிறான். பின் அவளது நிர்வாண உடலில் பூக்களை வர்ணம் தீட்டுவதற்கு ஒப்புக்கொள்ள வைக்கிறான். அந்தச் செயலின் மூலம் அவள் மீது தனக்குள்ள காம இச்சையிலிருந்து விடுதலையடைகிறான்.

“இது ஒரு அழகான இளம் பெண்ணின் உடலாக இருந்தது, வழக்கமான ஆசைப் பொருளாக இருந்தது, ஆனால் இப்போது அது அனைத்து ஆசைகளையும் நீக்கிய உடலாக இருக்கிறது. இப்போது அவள் அடைந்திருப்பது உடலாசையைப் போல அவ்வளவு மோசமானது அல்ல. அவள் துறந்திருப்பது அவளுடைய உடல் பிரதிநிதித்துவப்படுத்தும் வாழ்க்கையைத்தான்.”

என்கிறான்.

பெண்ணின் அந்தரங்க வாழ்க்கைக்குள்ளாக வெளிச்சம் பாய்ச்சியதில் இந்த நாவல் வழக்கத்துக்கு மாறான ஒரு பாதையைத் தேர்ந்தெடுக்கிறது. பெண்ணின் வலி, இன்பம், ஆர்வம், வெறுப்பு, புரிந்து கொள்ள முடியாத தனிமை ஆகியவற்றை ஆராய்கிறது. இது பெண்ணிய நாவல் என்ற தோற்றத்தை முதலில் கொடுத்தாலும் இந்த நாவல் ஆராயும் விஷயங்கள் அதையும் மீறியவை. முதல் பகுதியில் திருமணம், சமூகம் என்ற இரு விஷயங்களின் மீது வெளிச்சம் பாய்ச்சும் நாவல், இரண்டாம் பகுதியில் கலை, பாலுணர்வு, பெண்ணுடல் போன்றவற்றின் மீதான பொதுப்பார்வையையும் ஆராய்கிறது. இறுதிப்பகுதியில் இயற்கை மற்றும் மரணம் அதன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. 

ஹை மரக்கறி உணவுக்கு மாறியது, தன்னை ஒரு மிருகமாக உணர்ந்து வாழ்வதை நிராகரிக்கும் ஒரு முயற்சி. மைத்துனரால் அவள் உடலெங்கும் தீட்டப்பட்ட வண்ணப்பூக்கள் அவளுக்கு வரும் கெட்ட கனவுகளிலிருந்து அவளுக்கு விடுதலை அளிக்கின்றன. முதல் பகுதியில் மூன்று ஆண்டுகள் மனநல காப்பகத்தில் கழிக்கும் அவள் மூன்றாம் பகுதியிலும் அங்கேயே கழிக்கிறாள். அவளை அங்கு வந்து சந்திக்கிறாள் அவளது சகோதரி. அவளது பார்வையில்தான் இந்த இறுதிப் பகுதி சொல்லப்படுகிறது. தன் குழந்தைப் பருவத்தை ஹையுடன் மிருகத்தனமான தந்தையுடன் கழித்த அவளது சகோதரிக்கும் ஹையின் நடத்தைகள் குழப்பத்தை விளைவிப்பதாகவே உள்ளன. 

“ஹை அவளுக்கு நினைவூட்டும் எதையும் அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவளால் தன்னை ஒருபோதும் கடக்க முடியாத எல்லைக்கு மேல் தனியாக உயர்ந்ததற்காக ஹையை மன்னிக்க முடியவில்லை. ஹையின் அசாத்தியமான பொறுப்பற்ற தன்மையை அவளால் மன்னிக்கவே முடியவில்லை. ஹை தன்னை ஒரு கைதியைப் போல் தனியாக விட்டு விட்டு வேறெங்கோ வசித்துக் கொண்டிருப்பதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சிறைக்கம்பிகளைப் போலிருந்த சமூகம், திருமணம், உடல், பாலுறவு, கலை போன்றவற்றின் மாயையை ஹை  உடைத்திருக்கிறாள். அவற்றை உடைக்கு முன்பு, அவை அங்கு இருந்ததையே அவளது சகோதரி அறிந்திருக்கவில்லை.” 

ஹான் இதுவரை எட்டு நாவல்கள், பல குறு நாவல்கள், கட்டுரை மற்றும் கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். “த ஒயிட் புக்” என்ற நாவலும் சர்வதேச புக்கர் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டதுதான். அவரது இன்னொரு நாவலான “கிரீக் லெசன்ஸ்” பேசும் திறனை இழந்த பெண் ஒருத்தி பழைமையான கிரேக்க மொழியைக் கற்றுக் கொள்வதன் மூலம் அதை மீட்டெடுக்க முயலவதைப் பற்றியது. “ஒரு மொழியைப் பகிர்ந்து கொள்வதில் உள்ள விவரிக்க முடியாத நம்பிக்கையின் கொண்டாட்டம் இந்த நாவல்” என்று டைம்ஸ் பத்திரிக்கை குறிப்பிடுகிறது.

இருபது ஆண்டுகளாக இவரது படைப்புகளை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் கற்பித்து வரும் இலக்கியப் பேராசிரியர் அங்கி முகர்ஜி, “ அவரது எழுத்து உடலுக்கும், பால் பிரிவினைக்கும், அமைப்புகளுக்கு எதிரான போராட்டத்துக்குமான அரசியலைத் திரும்பத் திரும்ப பேசிக் கொண்டே இருக்கிறது. ஆனால் ஒருபோதும் அது இலக்கியத்துக்கு உரிய கற்பனையையும், அழகியலையும் விட்டு விடுவதில்லை. அவரது எழுத்து எப்போதும் உபதேசம் செய்வதில்லை. மாறாக அது விளையாட்டுத்தனமாகவும், வேடிக்கையாகவும், அதிமெய்யியல் தன்மையோடுமே இருக்கின்றது,” என்று குறிப்பிடுகிறார்.


நன்றி:

Leaves Sprouting on her Body - Adam Mars-Jones - London Review of Books

The Darkness of Primitive Desires - LARB

Han Kang Is Awarded Nobel Prize in Literature - The New York Times

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு - தினமணி



18 ஜூன், 2022

ஜெயகாந்தனின் சுயதரிசனம் வாசிப்பனுபவம்

நன்றி: ஹிந்து தமிழ், ஓவியர் ஜீவா

 

சிவராமனின் தந்தை கணபதி சாஸ்திரிகள் வீட்டை விட்டுச் சென்று விடுகிறார். சதா நேரமும் சிடுசிடுவென்று இருக்கும் அவன் மனைவி ராஜமும், செருப்புக்கடையில் வேலை பார்க்கும் அவன் தம்பியும், ஏன் அவனுமே கூட இது பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. கணபதி சாஸ்திரிகள் புரோகிதத்தைத் தொழிலாகக் கொண்டவர். கறுப்பாகவும், குள்ளமாகவும் உள்ளவர். பிராமணனுக்கு உரிய தோற்றத்தில் இருப்பவர். ஒன்றரை மாதம் கழித்து அவரிடம் இருந்து சிவராமனுக்கு ஒரு கடிதம் வருகிறது. அதோடு ஒரு கத்தை எழுதப்பட்ட நோட்டுத்தாள்களும். அதைத் தன் சுயதரிசனமாக எழுதியிருப்பதாகச் சொல்கிறார்.நேரமிருக்கும் போது படிக்கச் சொல்கிறார்.

தன் தந்தையின் பால்ய சினேகிதரான வெங்கிட்டுவையர் அவனிடம் சொல்கிறார். ஒரு நாள் நடுத்தெருவில் வைத்து அவன் தந்தையை அவரது குரு சுந்தர கனபாடிகள் அசிங்கமாகத் திட்டியதாகவும், அதற்கு இப்படிப் பேசுகிறீர்களே நீர் பிராமணரா என்று அவர் கேட்டதாகவும், அதற்கு குரு அவரிடம் காயத்ரி மந்திரத்துக்கு உனக்கு அர்த்தம் தெரியுமா, தெரியாமலேயே அதைச் சொல்லி, புரோகிதம் செய்து பிழைக்கிறாயே என்று சொல்லி, அர்த்தம் சொல்லவில்லையென்றால் நீ பூணூலைக் கழற்ற வேண்டும் என்று சினத்துடன் கூறுகிறார். திடீரென்று எல்லார் முன்னிலையிலும் தான் பிராமணன் இல்லையென்று கூறி, தன் பூணூலை அறுத்துவிட்டுச் சென்றுவிட்டதாகவும், அதன் பின் தான் அவர் திரும்பவில்லை என்றும் கூறுகிறார்.

வீட்டுக்கு வந்து தந்தையின் எழுத்துக்களை வாசிக்கிறான் சிவராமன். அதில் அவர் தன்னுடைய அவதானிப்புகளைப் பட்டியலிடுகிறார். இருநூறு வருடங்களுக்கு முன் இருந்த எவரும் இப்போது இல்லை. இப்போதுள்ள எவரும் இன்னும் இருநூறு வருடம் கழித்து துளிக்கூட மிச்சமிருக்கப் போவதில்லை. இதில் எவர் உயர்ந்தவர், எவர் தாழந்தவர். எந்த வகையிலான வாழ்க்கை மேன்மை வாய்ந்தது? எது தாழ்ந்தது என்ற கேள்விகளைக் கேட்டுக்கொள்கிறார்.

 என் பிள்ளைகள் என்னைப் போல குடுமி வச்சுண்டு, உடம்பிலே சட்டையும், கால்லே செருப்பும் போட உரிமை இல்லாம – இந்தக் காலம் பார்த்துப் பரிகசிக்கிற ஒரு ஒதுக்கப்பட்ட கூட்டமா வாழணும்னு நான் ஆசைப்படலே. அதனாலேதான் அவாளை இங்கிலீஷ் படிக்க வச்சேன். கிராப்பு வச்சுக்கச் சொன்னேன். இதுக்கு அர்த்தம் என்ன? நான் எப்படி இருக்கணும்னு ஆசைப்பட்டு என்னாலே இருக முடியலையோ அப்படி யெல்லாம் அவாளை ஆக்கித் திருப்தி பட்டுண்டேனா? ஆமாம்; ‘ஒதுங்கிப்போ ஒதுங்கிப்போ’ன்னு சொல்லிச் சொல்லி நானேதான் ஒதுங்கிப் போயிட்டேனே!… ஒரு ஜாதி தாழ்ந்தது எவ்வளவு பொய்யோ அவ்வளவு பொய் இன்னொரு ஜாதி உயர்ந்ததும். இது எப்போ தெரியறதுன்னா தாழ்த்தி ஒதுக்கப்பட்ட ஜாதியைப் போலவே உயர்ந்து ஒதுங்கிப்போன ஜாதியும் படற கஷ்டத்திலே எனக்குத் தெரியறது.

என்று எழுதுகிறார். 

ஒரு வக்கீல் வீட்டுக்குப் புரோகிதம் செய்யப்போகும் போது அவர் மகன் தட்சிணை குறைவாகக் கொடுக்கிறார். மந்திரமும் குறைந்திருந்ததே என்று சொல்கிறார். அர்த்தம் தெரியாமல் மந்திரம் சொல்லலாமா என்று கேட்கிறார்.

அறுபது வருடங்கள் பொய்யாக வாழ்ந்து விட்டதாக நினைக்கிறார். இப்போது தன் தோற்றத்திலும் மாறி, தன் மனசாட்சிக்கு துரோகம் செய்யாத நேர்மையான மனுஷனாக இப்போது இருப்பதாகச் சொல்கிறார்.

அவரது எழுத்துக்களைப் படிக்கப் படிக்க, அவரது மகன்களும், மருமகளும் அவற்றில் அவரை மட்டுமா பார்த்தார்கள் என்று கேட்டு முடிக்கிறார் ஜெயகாந்தன். 



ஐந்தாவது மருந்து - வாசிப்பனுபவம்

 ஜெயமோகன் ஐந்தாவது மருந்து


எய்ட்ஸூக்கு தமிழ் நாட்டில் சித்த மருத்துவத்தின் மூலம் தளவாய் என்பவன் மருந்து கண்டு பிடிக்கிறான்.சித்தமும், அலோபதியும் அடிப்படையில் வேறு எனினும் இப்போதைய சித்த மருத்துவம் அலோபதியின் கூறுகளை உள்ளிழுத்துக் கொண்டது. நமக்குக் கிடைக்கும் சித்த நூல்கள், ஏற்கனவே அழிந்த நூல்களில் இருந்து தொகுக்கப்பட்டு உருவானவையே.சித்தத்தின் படி, மனித உடல் சம நிலையை இழப்பதே நோய். நோய்க்கு எதிராக உடலைத் தயாரிப்பதே மருத்துவம்.

எய்ட்ஸ் என்பது உருமாறி வரும் வைரஸால் ஏற்படுகிறது. எனவே சித்தத்தின் ஜீவம், அஜீவம் மற்றும் ரசாயன மருந்துகள் இதற்குப் பயன்படாது. 500 ஆண்டுகளுக்கு முன் தென்காசி ராஜ குடும்பம் ஒரு விநோதநோயால் இறக்கிறார்கள். நோயின் குறிகள் அனைத்தும் அது எய்ட்ஸ் என்று சுட்டுகின்றன. வைத்தியர் எழுதி வைத்த குறிப்புகள் தனது தாத்தாவின் அண்ணன் மூலம் தளவாய்க்கு ஓலைச் சுவடியாக வந்து சேருகிறது. மாம்பழச் சித்தர் ஊருக்குள் வந்து நோயாளிகளை ஆராய்ச்சி செய்கிறார். மூலாதார அக்னி வலுவிழப்பதுதான் நோய்க்குக் காரணம் என்று கண்டறிகிறார். ஆயிரம் ஆண்டுகள் முன் போகர் கருங்குரங்கு ரத்தம், சிறு நீர் கொண்டு மருந்து தயாரிக்கிறார். இது அந்த நோய்க்குத் தயாரிக்கப்பட்ட முதல் மருந்து, ஜீவ மருந்து. பின் மாம்பழச் சித்தர் பஞ்ச பாஷாணம் செய்து நோயைக் குணப்படுத்துகிறார்.

ஆஃபிரிக்க குரங்குகளில் இந்த வைரஸ் இருக்கிறது. ஆஃபிரிக்காவில்தான் மனிதன் முதலில் தோன்றினான். மனிதனுக்குள்ளும் இது உண்டு. ஆனால் அவனை மட்டும் ஏன் இந்த நோய் தாக்குகிறது? அவன் குரங்காக இல்லாமல் ஆன போது அவனை இந்த வைரஸ் தாக்கத்துவங்கியதா? ஜீவம், அஜீவம் மற்றும் ரசாயனம் போன்றவை முதல் மூன்று மருந்துகள். நான்காவது மருந்து நுண்கதிர்கள். முதல் மூன்று மருந்துகளிலும் நான்காவது மருந்தைச் செலுத்தி ஐந்தாவது மருந்தைக் கண்டுபிடிக்கிறான் தளவாய். பல வருடம் நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஓமனக்குட்டியும் தாமஸூம் இம்மருந்தால் குணமடைகிறார்கள். இந்த மருந்தை வெளியிடச் சொல்லி நண்பர்கள் கோரும்போது தளவாய் மறுத்து விடுகிறான். அதற்கான காரணத்தையும் சொல்கிறான்.ஒரு தொற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும்தோறும், அந்த நோயை உருவாக்கும் வைரஸ் தன்னை உருமாற்றியபடியே இருக்கிறது. எனில் இப்போது மருந்து கண்டுபிடித்து அந்த வைரஸை அழித்தாலும் இன்னும் நூறு வருடங்களில் அது உருமாறி மனித குலத்தை வேறு வடிவில் தாக்கி அழிக்கும். அப்போது ஏற்படும் உயிர்ச்சேதம் இப்போதுள்ளதை விடப் பன்மடங்கு இருக்கும். எனவே எதிர்காலத்தில் வரப்போகும் மிகப்பெரிய அழிவொன்றைத் தவிர்க்க, தற்போது ஏற்படும் அழிவை ஏற்றுக்கொள்வதும், எய்ட்ஸோடு வாழப் பழகுவதுமே வழிகள் என்கிறான். மனித குலம் அழியக் காரணமாக இருக்கும் இம்மருந்தை வெளியிட மாட்டேன் என்று தளவாய் சொல்லி விடுகிறான்.


14 ஜனவரி, 2015

மீண்டும் எழுத்துக்கு

மீண்டும் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஒருபக்கமும், வீரியத்தோடும், விடாமலும் எழுத இயலுமா என்ற ஐயம் மறுபக்கமும் ஒன்றையொன்று சமன் செய்தபடி நாட்கள் கடந்துவிட இன்று முகநூலில் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருந்தபோது உழவர் திருநாளிலிருந்தே எழுத ஆரம்பித்து விட்டால் என்ன என்று தோன்றியது. மீண்டும் எழுதத்துவங்கி இரண்டு நாட்களாகிறது. ஒருமணி நேரம் கணினித்திரையையும், படுக்கறையின் சகல பரிமாணங்களையும் பராக்கு பார்த்தபடி யோசித்ததில் முக்கால் பக்கம் எழுத முடிந்தது. கட்டுரையோ, சிறுகதையோ என்றால் எழுத ஆரம்பிப்பதற்கு முன்பே மனதில் ஒரு தெளிவான வடிவம் பிறந்திருக்கும். நீண்டநாள் கனவான நாவலைக் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறேன். மனத்துக்குள் தெளிவான வடிவம் இல்லாததாலும், எங்கேயாவது போய் முட்டி நின்று விடுவோமோ என்ற ஐயம் காரணமாகவும் வரிகள் மெதுவாகவே வளர்கின்றன.
மாலத்தீவுகளில் இருந்து வேலையை விட்டுவிட்டு வந்து இப்போது அமெரிக்காவில் தெற்குகரோலினா மாகாணத்தில் ஆசிரியர் பணிபுரிய ஆரம்பித்து ஐந்து மாதங்களாகி விட்டது. இந்த அமெரிக்க வாழ்க்கைக்குத் தகவமைத்துக் கொள்வதற்கே இத்தனை நாட்களாகி விட்டன. மாலத்தீவுகளைப் போல, இங்கே அவ்வளவு நேரம் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் இருக்கும் நேரத்தை பள்ளியின் பணிச்சுமையை தளர்த்திக் கொள்ளும் செயல்களிலேயே செலவிட்டிருக்கிறேன். மீண்டும் எழுத ஆரம்பித்து இரண்டு நாட்களிலேயே ஏன் எழுத்தைத் தவம் என்று சொல்கிறார்கள் என்று புரிந்தது. எழுத்தைத் தவமாகக் கொள்ளவே எனக்கும் ஆசை. ஆனால் பழக்கங்கள் என்னை கட்டியிழுத்துக் கொண்டிருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக என் முயற்சியில் சோம்பலையும், தள்ளிப்போடும் குணத்தையும் வெல்லவேண்டும்.
        மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கும் நாள் தமிழர் திருநாள் என்பது மட்டுமல்ல. இன்றுதான் எழுத்தாளர் பெருமாள் முருகன் தான் எழுத்துலகை விட்டு விலகுவதாக அறிவித்திருந்தார். இன்று முழுதும் என் மனம் கனத்தபடியே இருந்தது. பெருமாள் முருகன் இறந்து விட்டதாக அறிவித்திருந்தார் அவர். உண்மையில் ஓர் எழுத்தாளனின் மரணமாகவே அது எனக்குப் பட்டது. அவரது நாவல்கள் பெயரை மட்டும் கேள்விப்பட்டதுண்டு. வாசித்ததில்லை. எல்லாவற்றையும் இணையத்திலேயே வாசிக்க விழையும் இக்காலத்தில், தமிழ் இலக்கியவாதிகள் தங்கள் படைப்புகளை இணையத்திலும் வெளியிடும் முயற்சியையும் மேற்கொள்ளவேண்டும். காசுக்கு விற்கப்படும் ஆயிரம் பிரதிகளால் எந்தத் தமிழ் எழுத்தாளனின் பொருளாதாரமும் மேம்பட்டு விடப்போவதில்லை. தமிழ் எழுத்தாளர்களில் அதிகம் வாசிக்கப்படும் ஜெயமோகன் தன் பெரும்பாலான படைப்புகளையும் இணையத்திலேயே வெளியிட்டு விடுகிறார். ஆண்டுக்கு ஐந்து நாவல்களைத் தளத்தில் வெளியிட்டு பிற எழுத்தாளர்கள் வெளியிடும் நாவல்களை சுண்டைக்காய் அளவுக்கு சின்னதாக்கி விடுகிறார். ஒரு சமூகத்துடன் உண்மையில் உரையாட விரும்பும் ஓர் எழுத்தாளனுக்கு இணையமே இன்றைய தேதியில் வலிமையான சாதனம். பிரசித்தமான பல எழுத்தாளர்களைவிட, வலைப்பதிவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களின் எழுத்து சுவையானதாகவும், சிந்தனைத் தீவிரத்துடனும் இருக்கிறது. வலைப்பூக்களில் குப்பையைக் கொட்டிக் கொண்டிருந்த பலர் இன்று முகநூலில் ஐக்கியமாகி விட, வலைப்பதிவு எழுதுபவர்கள் எண்ணிக்கை தேய்ந்து போய் இன்றைக்கு திறம் உள்ளவர்கள் மட்டும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். திரைப்படம் குறித்த பதிவுகளையே அதிகம் எழுதி வந்த சிலர் நல்ல பதிவர்களும் அவற்றைக் குறைத்துக் கொண்டு புத்தகங்கள் பக்கம் திரும்பி இருக்கிறார்கள்.பதிவர்கள், எழுத்தாளர்கள் என்ற வேறுபாடு இனியும் தேவையா என்று தோன்றுகிறது. நூல் வடிவில் தங்கள் எழுத்து வந்து விட்டதாலேயே எழுத்தாளர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்கிறார்கள் புதியவர்கள் சிலர். பல பதிவர்கள் தங்கள் தளத்திலேயே கவிதை, சிறுகதை, குறுநாவல் என்று தரமிக்க படைப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பிறகு எதற்கு வேறுபாடு. இனி எல்லாரும் எழுத்தாளர்களென்றே அறியப்படுவோம். அந்த வார்த்தை தரும் கவுரவம்தானே பலரை எழுத்துக்குள் ஈர்க்கிறது?
தொடர்ந்து எழுத எண்ணம் கொண்டுள்ளேன்.இலக்கியமும், ஆன்மிகமுமே கருப்பொருள்களாயிருக்கும். யார் வாசிக்கிறார்கள் என்ற கவலை அவசியமில்லை என்று நினைக்கிறேன். எனவே பின்னூட்ட வசதியையும் தடை செய்து விட்டேன். என்னை வாழ்த்த, வைய என் மின்ன்ஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
        இலக்கியம் பயிலவும், ஆன்ம ஞானத்தில் ஊறித்திளைக்கவும் என் எழுத்து எனக்குத் துணைபுரியும் என்று நம்புகிறேன். தொடர்ந்து இந்த எழுத்துத் தொழிலில் நான் ஈடுபட்டிருக்க எல்லாம் வல்ல இறை துணை நிற்க வேண்டுமென்று வேண்டுகிறேன்.


25 ஜனவரி, 2013

கிளிஞ்சல்களும், நத்தைக் கூடுகளும்


நத்தைக் கூடுகளைப் பற்றிய வியாக்கியானம்
இந்தக் கட்டுரைகளை நான் எனது வலைப்பூவான பெருங்கனவைத் துவங்கிய புதிதில் எழுதினேன். எழுத வேண்டும் என்ற ஆர்வம் பின்புறம் கிழிந்த ட்ரவுசர் போட்டிருந்த காலத்திலிருந்தே அரித்துக் கொண்டிருந்த ஒன்று. மேலும் பெருங்கனவைத் துவக்கிய காலகட்டத்தில் நான் ஆன்மிக நாட்டம் அதிகம் கொண்டவனாயிருந்தேன். ஆன்மிக வளர்ச்சிக்கு இந்த வலைப்பூ உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தில் துவங்கி, பிறகு இதை மேற்கொண்டு எப்படி நகர்த்துவது என்று திகைத்து நின்ற போது, பிரபல பதிவர்கள் என்ன மாதிரி தங்கள் வலைப்பூக்களில் எழுதுகிறார்கள் என்று கவனிக்க ஆரம்பித்தேன். அதே போன்ற கட்டுரைகளை நானும் எழுதினேன். இந்தத் தொகுப்பில் உள்ள இருபத்தேழு கட்டுரைகளில் பெரும்பாலானவை திரைப்படம் குறித்து இருப்பதற்குக் காரணமும் அதுவே.
எப்போதுமே எனது பிரதானமான ஆர்வங்கள் இரண்டு. ஆன்மிகமும், இலக்கியமும். இரண்டு துறைகளிலுமே தவறான வழிகாட்டுதல்களின் மூலம் நாம் வழி தப்பி விடுவதற்கானச் சாத்தியங்கள் உண்டு. எழுதுவது என்பது பெரும்பாலும் நான் என்னைச் சரியான பாதையில் இருத்திக் கொள்வதற்கான  முயற்சியே.
ஜெகதீஷ் குமார்.

நான் இந்தத் தளத்தில் அவ்வப்போது எழுதி வந்த கட்டுரைகளைத் தொகுப்பாக கிளிஞ்சல்களும், நத்தைக் கூடுகளும் என்ற தலைப்பில் pdf உருவில் இணைத்துள்ளேன். கீழ்கண்ட சுட்டியைத் தொடர்ந்து அந்தத் தொகுப்பைத் தரவிறக்கிக் கொள்ளலாம். 


14 ஆகஸ்ட், 2011

ஜேசுதாசின் சங்கீத மழை



       இரவு உணவுக்கு அமர்கையில் நிகழும் வழக்கமாகவே அன்றும் தொலைக்காட்சியைப் போட்டு விட்டு நேரடியாக நியோ கிரிக்கெட்டுக்குத் தாவினேன். மீண்டும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக ராகுல் திராவிட் தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி முடித்தவுடன் விளம்பரம் போட்டு விட்டதால் சானல் மாற்ற வேண்டியதாகி விட்டது. சானல்களில் தவ்வித் தவ்வி ராஜ் தொலைக்காட்சிக்கு வந்த போது, ஓர் ஆணும்,  பெண்ணும் மேடையொன்றில் ஆளுக்கொரு மூலையில் நின்றபடி முக்கி, முக்கிப் பாடிக் கொண்டிருந்தனர். கூல் கோடை என்ற கோடை விடுமுறைக்கான திறந்தவெளி நிகழ்ச்சி அது. தொலைக்காட்சி ம்யூட்டில் இருந்ததால் என்ன பாடலென்று தெரியவில்லை. காமெரா பார்வையாளர் பக்கம் திரும்பிய போதுதான் மழை பெய்து கொண்டிருந்தது தெரிந்தது. குடை பிடித்தபடி சிலர் அடக்கமாய் நின்றிருக்க, நூற்றுக்கணக்கான இசைப்பிரியர்கள் தெப்பலாய் நனைந்தபடி சன்னதம் வந்ததைப் போல் ஆடிக்கொண்டிருந்தனர். என்ன பாடலாயிருக்கும் என்று ஒலியைக் கூட்டிப் பார்த்தேன். ‘ கரிகாலன் காலைப் போல . . .’ என்று துருப்பிடித்த பிளேடு தொண்டையில் சிக்கிக் கொண்ட அவஸ்தையில் பாடிக்கொண்டிருந்த அந்தப் பெண் மீது கூடச் சாரல் அடித்துக் கொண்டிருந்தது. மழையும், மேடைக் கச்சேரியும் பார்த்தவுடன் எனக்கு உடனே ஜேசுதாஸ் ஞாபகம் வந்தது ( நமக்குத்தான் அவர் ஜேசுதாஸ். என் மலையாள நண்பர்கள் அவரைச் சரியாக யேசுதாஸ் என்றே குறிப்பிடுகிறார்கள்.)
       பனிரெண்டு உறுப்பினர்கள் கொண்ட என் தாத்தா வீட்டின் இன்னொரு உறுப்பினராகவே வானொலி என்ற மாயப்பெட்டி இருந்த காலத்தில்தான் எஸ்பிபியும், ஜேசுதாசும் எனக்கு அறிமுகமாயினர். இவர்தான் இந்தப்பாடலைப் பாடுகிறார் என்று இனம் பிரித்துப் அறியமுடியாத வயது எனக்கு. சிறுவர் பூங்காவில் குழந்தைகளைக் கூட்டி வைத்துக் கொண்டு, ஆசிரியையாக இருக்கக்கூடும் என்று நான் நம்பிக்கொண்டிருந்த பெண்ணொருத்தி சொல்கிற கதைகளுக்கும், அந்தக் குழந்தைகள் பாடுகிற பாடல்களுக்கும், கதை சொல்பவரே கதையின் பாத்திரங்களாகக் குரல் மாற்றிப்பேசி, சொந்தக்குரலில் வர்ணனைகளையும் தொடரும் ஓரங்க நாடகங்களும்தான் எனக்கு விருப்பமாயிருந்தன. இரவில் படுக்கை நேரத்தில் யார் தலைமாட்டில் வானொலியை வைக்க வேண்டும் என்று வீட்டுக்குள் பெரிய சண்டை நிகழும். நிகழ்ச்சியின் தன்மைக்கேற்ப வானொலி தலைமாடு மாறும். நானும் ஒரு நீளத்துண்டும், தையல் பிரிந்து பஞ்சு எட்டிப்பார்க்கும் அழுக்குத் தலையணை ஒன்றும் அடங்கிய என் படுக்கையை வானொலிக்கருகில் மாற்றியபடியே இருப்பேன். கடைசித் தலைமாட்டுக்குச் சென்றவுடன் துவங்குவது ‘காலத்தால் அழியாத காவிய’ப் பாடல்களாகத்தான் இருக்கும். டி.எம்.சௌந்தர்ராஜனும், பி.சுசீலாவும் பெரும்பாலான நேரத்தை எடுத்துக் கொள்வார்கள் அவ்வப்போது தலைகாட்டும் பி.பி. ஸ்ரீனிவாசை எனக்குப் பிடித்திருந்தது.
       பின்னால் கொஞ்சம் வளர்ந்து எஸ்.பி.பி, ஜேசுதாஸ் கட்சிக்கு நிரந்தரமாய்த் தாவியபின், மரபிசை சார்ந்த திரைப்பாடல்களென்றாலே ஜேசுதாஸ்தான் என்றாகி விட்டிருந்தது தெரியவந்தது. சிந்துபைரவியின் அத்தனைப் பாடல்களையும் உருத்தட்டி, ஜேசுதாஸின் ஆவியே எனக்குள் புகுந்து கொண்ட மாதிரி பாடித் திரிந்திருக்கிறேன். அவரது பல பாடல்களைப் பாடிப் பார்க்கும் போதெல்லாம் அந்த மாதிரி அவரால் மட்டும்தான் பாட முடியும் என்று தோன்றும். அவரது கர்நாடக சங்கீதத்தைக் கேட்கிற அளவுக்கு அறிவு வளர்ந்தும் இந்தத் தீர்மானம் மாறாமல்தான் இருந்தது. கல்லூரி முடித்த பருவத்தில் கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி இசை மீது அடங்காத காமம் ஏற்பட்டது (அவசர அவசரமாய் அனுபவிப்பதை அப்படித்தானே சொல்லமுடியும்? தீராக்காதல் என்று சொல்வது பொருத்தமாய் இருக்காதே!)
       சாஸ்திரிய இசை கற்பதன் மீதிருந்த ஆர்வக்கோளாறில் கர்நாடக இசைக்கச்சேரிகளுக்குப் போனதைப் பற்றிச் சொல்ல வேண்டும். ஒருமுறை பள்ளிபாளையத்தில் ஒரு கிராமத்துக் கோயிலில் நடந்த கச்சேரிக்குச் சென்றிருந்தேன். முதல் இரண்டு மணி நேரங்களுக்கு நெளிந்தபடி, கச்சேரி கேட்க வந்த சங்கீத ஆசிரியைகளையும், அங்குமிங்கும் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்கும் பட்டுப்பாவாடை கட்டிய எட்டு வயதுச் சிறுமிகளான அவர்களது மாணவிகளையும் (அவர்கள் சங்கீத மாணவிகளாக இருக்க வேண்டும்), விரைவிலேயே அவர்களுக்கு அரங்கேற்றம் நிகழ்த்திப் பார்த்து விட வேண்டும் என்ற கனவிலிருக்கிற அவர்களது பெற்றோர்களையும், மீதி தொண்ணூறு சதவீத பிராமணக் கிழவர்களையும் பராக்கு பார்த்தபடி அமர்ந்திருந்தேன்; அவ்வப்போது கோயில் வாசலில் விட்டு வந்த என் இருநூற்றைம்பது ரூபாய் புதுச் செருப்பையும்.
       சீர்காழி சிவசிதம்பரம் ஒவ்வொரு கீர்த்தனையையும் துவங்குவதற்கு முன் அதன் ராகம், தாளம் மற்றும் இயற்றியவர் பெயர் பற்றிய குறிப்புகளைக் கொடுத்ததும், அதை நான் பவ்யமாக என் டயரியில் குறித்துக் கொண்டதை என் அருகில் இருந்த பெரியவர் கவனித்து என்னைப் பற்றித் தவறாக நினைத்துக் கொண்டார் போலும். பாடப்பட்டுக் கொண்டிருக்கும் கீர்த்தனைகளின் நுணுக்கங்கள் பற்றி என்னிடம் விளக்க ஆரம்பித்து விட்டார். சீர்காழி எந்தெந்த இடங்களில் தவறு செய்கிறார் என்றும், மேல் ஸ்தாயியில் சஞ்சரிக்க வேண்டிய இடங்களிலெல்லாம் அவர் குரல் மேம்போக்காக நிரவி விட்டுக் கீழிறங்கிக் கொள்வதைக் குறிப்பிட்டுக் காட்டி, ‘ இது ச்சீட்டிங் ‘ என்றார். இது டார்ச்சர் என்று சொல்லியிருந்தால் ஆட்சேபணையின்றி ஒப்புக்கொண்டிருப்பேன்.
       துக்கடா பகுதி வந்ததும்தான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். கீர்த்தனைகளைப்போல் நிரவி, நிரவிப் பாடாமல், அழகான, சிறிய, இனிய பாடல்கள். அதில் சில தமிழ்ப்பாடல்களும் உண்டு. தன் தந்தையின் பிரசித்தி பெற்ற பாடலான ‘சின்னஞ்சிறு பெண்போலே’ பாடியபோது எனக்கு எங்கள் ஊர் குளித்தலை கடம்பர் கோயில் ஒலிபெருக்கி நினைவுக்கு வந்தது. அது வழியாக அந்தப்பாடலை நிறைய தடவை கேட்டிருக்கிறேன்.
       நான் செல்லும் எல்லாக் கச்சேரிகளிலும் இதே கதைதான். சுதா ரகுநாதன், நெய்வேலி சந்தான கோபாலன் போன்றோர் கச்சேரிக்கெல்லாம் போனாலும் முதல் இரண்டுமணி நேரங்களுக்கு என் உலகில் சஞ்சாரம் செய்து விட்டு துக்கடா துவங்கும் போது பூவுலகுக்குத் திரும்பி வருவேன். எங்கள் தொழிற்சாலை காசாளர் சண்முகம் ஒருமுறை பிராமணர்கள் இல்லம் பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி ஒன்றில் சௌமியா கச்சேரி இருப்பதாகக் கூறி என்னையும் அழைத்துச் சென்றார். முதலில் பூணூல் அணிவிக்கப்படும் சிறுவன் ஸ்ரீமன் நாராயண பாடினான். அழகாக இருந்தது. சௌமியா ஜலதோஷம் பிடித்த தொண்டையில் கரகரப்பாகவே கச்சேரியைக் கொண்டு போனார். ஆனால் அவருக்கு வயலின் வாசித்த எம்பார் கண்ணன் கையில் வயலினை ஒரு குழந்தையைப் போல் வைத்துக் கொண்டிருக்க, அதிலிருந்து பரவிய தெய்வீக இசைக்கு அவரே கரைந்து கொண்டிருந்தார். அதைப் பார்த்து நானும் கரைந்தேன்.
       ஒருநாள் என் தொழிற்சாலையில் காலை ஷிஃப்டில் இருந்தேன். எந்திரங்கள் பதப்படுத்தித் துப்பிக் கொண்டிருந்த துணிகளிலிருந்து மாதிரி எடுத்துக்கொண்டு அவற்றின் சாயம் போகும் தன்மையைப் பரிசோதிப்பதற்காக ஆய்வகம் வந்தேன். காசாளர் சண்முகம் என்னைப் பார்க்க விரும்பியதாகச் சொன்னார்கள். கொடுத்த சம்பளத்தைத் திரும்பப் பிடுங்கிக் கொள்வதற்கான சாத்தியங்கள் நிறைந்த நிலையில் அப்போது எங்கள் தொழிற்சாலை ஓடிக்கொண்டிருந்ததால் கொஞ்சம் யோசனையாகத்தான் சென்றேன். ஆனால் அவர் சொன்ன விஷயம் சம்பள உயர்வை விட மகிழ்ச்சி தரக்கூடியதாகிறது.
அன்று மாலை ஜேசுதாஸ் சேலம் வருகிறாராம். பைபாஸ் ரோட்டுக்கு அருகில் ஓர் இடத்தைச் சொல்லி, அங்குள்ள ஐயப்பன் கோயில் ஒன்றின் திறப்பு விழாவின் திறப்பு விழாவின் சிறப்புக் கச்சேரிக்காக வருவதாகச் சொன்னார்.
ஷிஃப்ட் மூன்றரை மணிக்குத்தான் முடியுமென்றாலும் ஒருமணிநேரம் அனுமதி கேட்டுக் கொண்டு சேலம் புறப்பட்டேன். சண்முகம் வேலைப்பளுவால் வரமுடியாதென்று சொல்லி விட்டார். சேலம் பைபாஸில் இறங்கி ஒரு டவுன் பேருந்தைப் பிடித்து சாலையோரமாகவே அமைந்திருக்கிற அந்த ஐயப்பன் கோயிலை அடைந்தால் ஜேசுதாஸ் இன்னும் வந்திருக்கவில்லை.
ஆனால் கோயிலுக்குப் பின்புறமிருந்த வெற்று நிலத்தில் போடப்பட்டிருந்த கச்சேரி மேடைக்கு முன்னால் கூட்டம் கூட ஆரம்பித்து விட்டது. நான் முதலில் கோயிலுக்குப் போய் விட்டு அப்புறம் மேடைக்கு  முன் சென்றமரலாமா என்று யோசித்தபடியே கோயில் வாயிலில் காத்திருக்க, சற்று நேரத்தில் ஒரு கார் வந்து நின்று உள்ளிருந்து ஜேசுதாஸ் இறங்கினார். கச்சேரி கேட்க வந்த கூட்டத்துக்கு அவர் வந்தது தெரியவில்லை. நிர்வாகிகள் மட்டும் நாலைந்து பேர் அவரைச் சூழ்ந்து கொண்டு, அவரைக் கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். நானும் நிர்வாகிகளில் ஒருவனாகி அவர்களைப் பின்தொடர்ந்தேன்.
சன்னிதானத்தில் நான் ஜேசுதாஸுக்கு எதிரில் நின்றிருந்தேன். உதடுகள் மென்மையாகத் துடித்தபடி மனமுருக வேண்டிக்கொண்டிருந்தார். அவர் என்னைவிடக் குள்ளமாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது. அந்த தாடியும் ஜிப்பாவும்தான் அவரை சற்று உயரமாகக் காட்டுகிறதோ என்று தோன்றியது.
சரியாக ஆறுமணிக்கு மேடையேறினார். எனக்கு மூன்றாவது வரிசையில் இடம் கிடைத்து விட்டது. மேடையில் அமர்ந்தவுடன் பைக்குள்ளிருந்து ஒரு படத்தை எடுத்துத் தன் எதிரில் வைத்து, கண்மூடி வணங்கினார். பிறகு கீர்த்தனைகளை அந்த வெண்கலக் குரலில் ஆரம்பித்தவுடன் நான் அவருள் மூழ்கி விட்டேன்.
கர்நாடக சங்கீதத்தில் ஜேசுதாஸ் சங்கீதம் என்றே ஒரு பிரிவு இருப்பதாகச் சொல்வார்கள். அவரது மானச தர்மத்துக்கு ஏற்ற வகையில் அவருக்கே உரித்தான பாணியில் அவர் சாஸ்திரீய சங்கீதத்தை நமக்குத் தருகிறார். அந்தக் குரலைப் போன்றதொரு இசைக்கருவியை மனிதன் இதுவரையிலும் கண்டுபிடிக்கவேயில்லை என்றுதான் நினைக்கிறேன். எந்த ஸ்தாயியிலும் தெய்வீகமாக சஞ்சாரம் செய்யும் சாரீரம் அவருடையது. அன்றைக்கு இறைவனையே நேரில் கண்டது போல்தானிருந்தது எனக்கு.
கச்சேரி துவங்கி இருபது நிமிடங்களுக்குள் தூறலாக ஆரம்பித்த மழை வலுத்து பொத்துக் கொண்டு ஊற்ற ஆரம்பித்து விட்டது. இருந்தும் பார்வையாளர்கள் ஒருவர் கூட நகரவில்லை. மேடை பல இடங்களில் ஒழுக ஆரம்பித்து விட்டது. ஜேசுதாஸ் பாடுவதை நிறுத்தவில்லை. ஒருவர் குடை கொண்டு வந்து அவர் பின்னால் நிற்க அவர் அவரிடம் மென்மையாகக் கையசைத்து மறுத்து விட்டார். காற்று மழையை அவர் திசைக்குக் கொண்டு சென்று சாரல் அவர் மீது கடுமையாக அடிக்க ஆரம்பித்து விட்டது. அவர் பாடுவதை நிறுத்தவில்லை. நான் உள்பட கூட்டம் முழுவதும் தெப்பலாய் நனைந்து விட்டது. கீர்த்தனைகள் நிறைவடைந்து துக்கடா ஆரம்பித்தபோதும் மழையும் நிற்கவில்லை; கூட்டமும் கலையவில்லை. எனக்குள் எலும்புகளெல்லாம் நடுங்க ஆரம்பித்து விட்டன. ஜேசுதாஸ் குரல் நடுங்காமல் அந்தக் குளிரில் எப்படிப் பாடுகிறார் என்பது ஆச்சரியமாகவே இருந்தது. துக்கடா பகுதியில் பெரும்பாலும் ஐயப்பன் பாடல்கள்தாம். கூட்டம் எழுந்து ஆட ஆரம்பித்து விட்டது. நானும்தான். இசை இறைவனுக்கு மிக நெருக்கமானது என்று அன்று அனுபவத்தில் உணர்ந்தேன்.
கச்சேரி முடிந்து சற்று நேரம் கழித்துதான் மழைவிட்டது. இரவு நேரமாகிவிட்டபடியால் பைபாஸூக்கு ஆட்டோவில்தான் செல்லமுடிந்தது. வயிற்றுக்குள் பசி தீயாய்க் கனன்று கொண்டிருந்தது. பேருந்து நிறுத்தத்தில் இருந்த தள்ளுவண்டிக்கடையில் கோழி பிரியாணி சாப்பிட்டேன். குளிருக்கு இதமாக இருந்தது. வீட்டுக்குச் சென்று சேர்ந்து படுக்கையில் வீழ்ந்ததும் உறக்கத்துள் விழுந்து விட்டேன். காலையில்தான் அந்த சந்தேகம் வந்தது. ஜேசுதாஸ் கச்சேரியைக் கேட்ட அந்த அனுபவங்களும், அன்றிரவு நான் சாப்பிட்டது உண்மையிலேயே கோழி பிரியாணிதானா என்ற சந்தேகமும் இன்றுவரை என்னிலிருக்கின்றன.

மேலும் வாசிக்க