ஆன்மிகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆன்மிகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19 ஜனவரி, 2018

அதுதான் நீ

என்னைத் தவிர யாரால் இயலும்?
இவ்வாழியில் நீந்திக் களிக்க
கற்பனைகளால் என்னைப் புனைந்து கொள்ள
எல்லாவற்றிற்கும் மேலெழும்ப முயன்றபடி இருக்க
அறியா நிலங்களைத் தொடும் துணிச்சல் கொண்டிருக்க
இம்முயற்சியில் என்னையே கிழித்துக் கொள்ள
யாரால் இயலும் என்னைத் தவிர?

நானே ஆழியென்று அறிவார்ந்த அலையொன்று 
இயம்பும் வரைக்கும்.

20 ஆகஸ்ட், 2011

நான்கு கேள்விகள்


 சாதன சதுஷ்டய சம்பத்திகளை அடைந்த பின்னர் ஞானயோகத்துக்குள் பிரவேசிக்க வேண்டும். ஞானயோகம் என்பது விசார ரூபமாக இருக்கிறது. சாதன சதுஷ்டய பண்புகள் பக்க விளைவுகளாக மன அமைதியையும், மகிழ்ச்சியையும் உருவாக்கும். அத்தோடு திருப்தி அடைந்து விடாமல் மேற்கொண்டு நம் பயணத்தைத் தொடர்ந்தால்தான் இறுதி இலக்கான ஆன்ம விடுதலையை அடைய முடியும். ஆன்ம விடுதலை ஆத்ம ஞானத்தினால் மட்டுமே அடையப்படுகிறது. ஞானத்தை அடைவதற்கான ஒரே சாதனம் விசாரம் மட்டுமே. எப்படி ஒரு பொருளின் இருப்பு ஒளியின் துணையின்றி நமக்கு விளங்குவதில்லையோ அதேபோல் விசாரம் தவிர்த்த பிற சாதனைகள் மூலம் ஞானம் உற்பத்தி ஆகாது. மேற்குறிப்பிட்ட பண்புகள் அனைத்தும் கர்மங்களின் மூலமே அடையப்படும். கர்மத்தின் மூலம் அடையப்படும் எதுவும் காரக வியாபாரம் எனப்படும். கர்மயோகம், தியானம் முதலியன இதில் அடங்கும். ஆனால் விசாரமானது பிரமாண வியாபாரம் எனப்படுகிறது. அறிவைக் கொடுக்கும் கருவியான பிரமாணத்தைப் பயன்படுத்தி விசாரம் செய்வதின் மூலம் ஞானத்தை அடைகிறோம். ஆத்ம ஞானத்துக்கான ஒரே கருவி உபநிஷத் அல்லது வேதாந்தம் ஆகும். மேலும் உபநிஷத் என்பது ஒரு ஷப்தப் பிரமாணம். உபநிஷத்தின் உட்பொருள் அறிந்த ஞானி ஒருவர் அதன் மந்திரங்களைச் சொல்லக் காதால் கேட்டு, அதன் பொருள் விளங்கும் வரை சிந்தித்துத் தெளிதலே விசாரம் எனப்படுகிறது. எனவே குரு என்பவர் இந்தப் பிரமாண வியாபாரத்தில் ஒரு முக்கிய அங்கமாகிறார். அதாவது வேதாந்த விசாரம் என்பது எப்போதும் குருமுகமாகவே செய்யப்பட வேண்டும்.
          விசாரம் என்பது எந்த முறையில் செய்யப்பட வேண்டும் என்பதைக் காணலாம். இதற்கு விசாரப் பிரகாரம் அல்லது விசார சொரூபம் என்று பெயர். தகுதிகளை அடைந்த மாணவன் குருவை அடைந்து கேட்க வேண்டிய கேள்விகளாக நான்கு விஷயங்கள் கூறப்படுகின்றன. அவை;
1.    கஹ அஹம் - நான் யார்?       இது ஜீவ விஷயமான கேள்வி ( ஜீவ விஷய ப்ரஸ்ன: )
2.    கதம் இதம் ஜாதம் – இவ்வுலகம் எவ்வாறு தோன்றியது?      இது உலக சம்பந்தமான கேள்வி ( ஜகத் விஷய ப்ரஸ்ன: )
3.    கோவை கர்த்தா அஸ்ய வித்யதே – இவ்வுலகம் இப்படி இருப்பதற்கு யார் காரணம்? யார் இவ்வுலகைத் தோற்றுவித்தார்கள்?      இது ஈஸ்வர சம்பந்தமான கேள்வி ( ஈஸ்வர விஷய ப்ரஸ்ன: )
4.    உபாதானம் கிம் அஸ்தி இஹ – மேற்சொன்ன மூன்றுக்கும் ஆதாரமாக, அதிஷ்டானமாக இருப்பது எது?
விசாரம் என்பது இத்தகைய தன்மை வாய்ந்ததுதான். இதுவே உபநிஷதங்களின் பேசுபொருள் ஆகும். வேதாந்தத்தின் நான்கு முக்கியமான விஷயங்கள்; 1. ஜீவன். 2. ஜகத். 3. ஈஸ்வரன் 4. பிரம்மம்.
முதலில் நான் யார் என்னும் கேள்விக்கு இவ்வாறு விசாரம் செய்ய வேண்டும். பார்க்கப்படும் பஞ்சபூதங்களால் ஆன இந்த ஸ்தூல உடல் நான் அல்ல. புலன்களின் கூட்டமும் நான் அல்ல. பார்ப்பவன் நான் அல்ல. பார்ப்பவனைப் பார்க்கிறவனும் நான் அல்ல. இதற்கெல்லாம் வேறானவன் நான் என்று அறியவேண்டும். இதற்கான கருவி த்ருக் – த்ருஷ்ய விவேகம். பார்ப்பவன் பார்க்கப்படும் பொருளாக இருக்கமுடியாது என்பதே இந்த விவேகத்தின் மூலம் நாம் அடையும் தெளிவு. ஷங்கரர் எந்த முறைப்படி நாம் சிந்திக்க வேண்டும் என்று இங்கு காட்டுகிறார்.
இரண்டாவது உலகம் எதிலிருந்து வந்தது என்ற விசாரம். இந்தக் கேள்விக்குப் பலவித பதில்கள் நிலவுகின்றன. தர்க்க மதம் உலகம் அணுவிலிருந்து தோன்றியது என்று சொல்கிறது. சாங்கிய மதத்தைச் சார்ந்தவர்கள் உலகம் பிரக்ருதியிலிருந்து வந்ததாகக் கூறுகிறார்கள். சிலர் உலகம் இயற்கையிலிருந்து தோன்றியதாகக் கூறுகிறார்கள். ஆனால் வேதாந்தமோ உலகம் அஞ்ஞானத்திலிருந்து தோன்றியதாகக் கூறுகிறது. நாம் பார்க்கும் அனைத்துமே அஞ்ஞானத்திலிருந்து தோன்றியுள்ளது. இவ்வுலகம் சமஷ்டி (தொகுப்பு) அஞ்ஞானத்திலிருந்து தோன்றியுள்ளது. அஞ்ஞானத்தின் பிறிதொரு பெயர் மாயை. மாயை என்பது அநிர்வசனீயம் எனப்படுகிறது. அதாவது அதை விளக்க முடியாது. ஆனால் ஞானத்தினால் மாயையை ஒடுக்கி விட முடியும். இவ்வுலகம் இவ்வாறு இருக்கக் காரணம் என்ன என்று மற்றொரு கேள்வி கேட்கப்படுகிறது. நம் மனதில் தொடர்ந்து வரும் எண்ணமான விதவிதமான சங்கல்பங்களே இவ்வுலகம் இவ்வாறு இருக்கக் காரணமாகும். எனவே இவ்வுலகம் இவ்வாறிருக்க மாயை சாதாரண காரணமாகவும், சங்கல்பம் விசேஷ காரணமாகவும் இருக்கின்றன.
இந்த உலகத்துக்கும், அஞ்ஞானத்துக்கும் ஒன்றே ஆதாரமாக இருக்கின்றது. அதை நாம் காண இயலாது. அதன் சொரூபம் இருத்தல். அது அவ்யயம், அதாவது மாறாமல் இருக்கிறது. எல்லாப் பானைகளுக்குள்ளும் களிமண்ணின் இருப்பு மாறாமல் இருப்பதைப் போல் எல்லாவற்றுக்குள் அது மாறாமல் தொடர்ந்து இருக்கிறது.
அந்த ஆதாரமான தத்துவமே எனக்கும் ஆதாரமாக இருக்கிறது. அந்த ஆதாரம் ஒன்றுதான். அவனை நான் பார்க்க முடியாது. அவன் அறிவு சொரூபமாக இருக்கிறான். அவனே நான். நான் அனைத்தையும் வேடிக்கை பார்ப்பவன். இப்படிப்பட்ட நான் அழியாத சத் பிரம்மமாகவே  இருக்கிறேன். இந்தப் பகுதியில் அபரோக்ஷ அனுபூதி கூறும் இக்கருத்து ஒரு ஜீவ பிரம்ம ஐக்கியம் ஆகும். இது இந்நூலில் உள்ள ஒரு மஹா வாக்கியம்.
மேற்கூறப்பட்ட கருத்து நம் அனுபவத்துக்கு விரோதமாகவே உள்ளது. ஆனால் இந்த வாக்கியத்தில் சிரத்தை வைத்து மீண்டும் மீண்டும் விசாரத்தை மேற்கொள்ள வேண்டும்.

3 ஆகஸ்ட், 2011

விடுதலையின் இச்சை


ஆத்ம ஞானம் தேடும் ஒரு சாதகனின் தகுதிகளில் முதலில் வைராக்யம், விவேகம், சமம், தமம் இவற்றைப் பார்த்தோம். அடுத்ததாக உபரமம் அல்லது உபரதி என்ற பண்பு விளக்கப்படுகிறது.  இது கர்மத்தியாகம். சங்கல்ப பூர்வமான கர்மங்களையும், சில பொறுப்புகளையும் விட்டு விடுதலையாவதை இப்பண்பு வலியுறுத்துகிறது. இதன் மூலம் ஞான யோகப் பயிற்சிக்கான, சிரவணத்துக்கான காலத்தை நாம் சம்பாதிக்கிறோம். உபரதி என்ற பண்பு, சமம் மற்றும் தமம் ஆகிய பண்புகளைத் தொடர்ந்து பாதுகாத்து வருதலையும் குறிக்கும். உள், வெளி விஷயங்களிலிருந்து திரும்பி அப்படியே இருத்தல் மேலான உபரதி: என்று அபரோக்ஷ அனுபூதி குறிப்பிடுகின்றது.

நமக்கு நேரும் எல்லா துக்கங்களையும் வெறுப்பின்றி சகித்துக் கொள்ளுகிற சகிப்புத்தன்மை அல்லது பொறுமை என்ற தன்மையை திதிக்ஷா என்ற பண்பு வலியுறுத்துகிறது. நாம் விரும்பாத ஒன்று நடக்கும் போது அதை மாற்றுவதற்கு முழு முயற்சி எடுக்க வேண்டும். அப்படியும் அந்த நிலையை மாற்ற முடியவில்லையென்றால், வரும் விளைவுகளை குறை சொல்லாது ஏற்றுக் கொள்ளவேண்டும். நமக்கு விருப்பமான ஒன்றை அடையும் முயற்சியில் எந்தத் துன்பம் வரினும் இயல்பாகவே பொறுத்துக் கொள்வோம். எனவே திதிக்ஷா என்ற சகிப்புத்தன்மையை அதிகரிக்க வேண்டும் எனில் மோக்ஷத்தை அடையும் இச்சையான முமுக்ஷுத்துவத்தை அதிகரிக்க வேண்டும். நமக்கு வரும் துன்பங்கள், துயரங்கள் இவற்றைக் கண்டுகொள்ளாதிருக்க வேண்டும். எதை நாம் பொருட்படுத்துவதில்லையோ அதற்கு மெய்த்தன்மை குறைகிறது. துன்பங்கள் வரும் போது அவற்றைப் பொறுமையுடன் பழகப் பழக அவற்றின் பாதிப்பு குறையும். வாழ்க்கையில் மிகப்பெரிய துன்பமே துன்பம் வந்து விடுமோ என்ற பதற்றம் கலந்த எதிர்பார்ப்புதான். திதிக்ஷா உடையவருக்கு இந்த பதற்றம் இருக்காது. உலக வாழ்க்கையின் வெற்றிக்கே திதிக்ஷா மிக அவசியம். நாம் இந்த மனித சரீரம் எடுத்திருப்பதே முற்பிறவிகளில் நாம் செய்த புண்ணியம் பாதி, பாவம் பாதி இவற்றின் சேர்க்கையின் விளைவாகத்தான். எனவே புண்ணியத்தின் பலனான சுகமும், பாவத்தின் பலனான துக்கமும் எப்படியும் வந்தே தீரும் என்ற தெளிவு இருந்தால் திதிகக்ஷையை எளிதில் பின்பற்ற முடியும்.
          ஸ்ரத்தா என்ற அடுத்த பண்பு குரு, வேதம் இவற்றின் மீதுள்ள பக்தியே ஆகும். வேதாந்தம் என்பது ஒரு பிரமாணம் ஆகும். அதாவது வேதாந்தம் என்ற கருவியின் உதவி கொண்டுதான் நாம் உண்மையை அறியவிருக்கிறோம். அக்கருவியை உபயோகப்படுத்தும் ஆசிரியரே குரு. வேதாந்தத்தையும், ஆசிரியரையும் பிரிக்க இயலாது. பிரித்தால் உண்மையை அறிய இயலாது. ஸ்ரத்தை எதனால் தேவை? அனுபவத்துக்கு முன்னால் இருக்கும் ஒரு படியே நம்பிக்கை. அனுபவத்துக்கு முற்றிலும் எதிராக இருக்கும் ஒரு கருத்தைக் கேட்டு, நம் அனுபவத்தைச் சரி செய்து, வேதம் சொல்லும் வாக்கியம்தான் உண்மை என்று உணரும் வரைப் பயணம் செய்ய, ஸ்ரத்தையே துணை புரியும். மனதில் சரியான அறிவு இருந்தும் அந்த அறிவில் நம்பிக்கை இல்லையென்றால் அது உண்மையில் ஞானமே அல்ல. எனவே ஸ்ரத்தையே இறுதியில் ஞானமாக மாறுகிறது.
          உபநிஷத் ஈஸ்வரனிடமிருந்தே வந்தது என்ற புத்தியை வளர்த்தலும், வேதத்தின் மேலும், ஆச்சாரியார் மேலும் உள்ள சந்தேக புத்தியை நீக்குதலும் ஸ்ரத்தையை வளர்க்க உதவி செய்யும். ஸ்ரத்தை நாம் செய்த புண்ணியத்தின் பலன். ஸ்ரத்தையை வளர்க்க தர்மப்படி வாழ வேண்டும்.
          அடுத்த பண்பு சமாதானம். மனதை முழு முயற்சியுடன் சத் காரியத்தில் குவித்திருத்தல் சமாதானம் ஆகும். இது மன உறுதியைக் குறிக்கிறது.
          தியானமும், மீண்டும், மீண்டும் மனதை ஒரே விஷயத்தில் பொருத்திப் பழகுதலும் சமாதானம் என்ற பண்பை வளர்க்க உதவும். முதலில் சமாதானம் சிரவணத்திலும், பிறகு நிதித்யாசனத்திலும் இருக்க வேண்டும்.
          இறுதியாக முமுக்ஷுத்துவம். நான் பந்தத்திலிருந்து விடுதலை அடைய வேண்டும் என்ற தீவிர இச்சை பிரதானமாக இருத்தலே முமுக்ஷுத்துவம் எனப்படுகிறது. அதுதான் நமது பிரதான லட்சியம் என்று முடிவு செய்த பிறகு அதற்காக சகல விஷயங்களையும் தியாகம் செய்வதற்காகத் தயாராக இருக்க வேண்டும். சம்சாரம் என்றழைக்கப்படுகிற மனதின் நிறைவின்மையிலிருந்து நான் எப்போது விடுதலையடைவேன் என்ற எண்ணம் உறுதியாக இருக்கும் நிலையே முமுஷுத்துவம் எனப்படுகிறது.
          இத்துடன் சாதகனின் தகுதிகளான சாதன சதுஷ்டய சம்பத்தி நிறைவடைகிறது. இப்பண்புகளை அடைந்தவுடன் மனத்திருப்தி அடைந்து விடாமல் மேலும் தொடர்ந்து விசாரம் செய்ய வேண்டும். ஞானயோக விசாரம் பற்றி மேலும் விரிவாகக் காண்போம்.

6 ஜூலை, 2011

சாதகனின் தகுதிகள்


    அபரோக்ஷ அனுபூதி என்ற நூலின் துவக்கத்தில் ஷங்கரர் தான் நோக்கத்தையும், யாருக்காக இந்த நூல் இயற்றப்படுகிறது என்பது பற்றியும், இந்த நூலை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும் குறிப்பிடுகிறார்.
அபரோக்ஷ அனுபூதி என்ற இந்த நூலைக் கற்பதன் தலையாய நோக்கம் மோக்ஷம் என்ற பலனுக்காகவே. மோக்ஷம் என்பது குறித்து நம்மிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. ஆனால் சாஸ்திரத்தின் அடிப்படையில் மோக்ஷம் என்பதன் உண்மையான பொருள் முழுமையான மனநிறைவு என்பதாகும். இந்த முழு மனநிறைவு எந்தச் செயலாலும் அடையப்படுவதில்லை. தன்னைப் பற்றிய உண்மையான ஞானத்தால் மட்டுமே அடையப்படுகிறது. மோக்ஷம் என்பது ஜீவன் முக்தி என்றும் அழைக்கப்படுகிறது. ஜீவன் முக்தி என்றால் இந்த உடலில் வாழும்போது நிறைவுடன் வாழ்தல் என்று பொருள். ஆத்ம ஞானத்தை அடையும் ஒருவன் தனது பிராரப்தம் முடியும் வரை ஜீவன்முக்தனாக வாழ்ந்து இறக்கிறான். அவ்வாறு இறத்தல் அவனது கடைசி மரணம் ஆகும். அதற்குப் பிறகு அவனுக்கு மரணம் இல்லை. அதாவது அவனுக்கு மறுபிறப்பில்லை. ஒரு ஜீவன்முக்தன் இறுதியாக உடலை விடும் நிகழ்வு விதேஹ முக்தி எனப்படுகிறது.
மனதை முழுமையாக நிறைக்கும் ஆவல் கொண்ட, மோக்ஷம் தவிர வேறெதுவும் லட்சியமில்லை என்ற தீர்மானம் கொண்ட, அந்த லட்சியத்தை அடையும் பயணத்தைத் துவக்குவதற்கான தகுதிகளையும் கொண்ட சத்புருஷர்களுக்காகவே இந்நூல் இயற்றப்படுகிறது. முழுமையாகத் தகுதிகளை அடையாதவர்கள் சாஸ்திரத்தைக் கற்க விழையலாமா என்ற ஐயம் எழக்கூடும். தகுதிகள் அற்ற ஒருவர் சாஸ்திரத்தைக் கற்கத் துவங்கும் போது, முதலில் சாஸ்திரம் அவருக்குத் தகுதிகளைக் கொடுத்து, பிறகு தொடர்ந்த சாஸ்திரக் கல்வி அதன் இறுதிப் பலனான ஆத்ம ஞானத்தையும், மோக்ஷத்தையும் கொடுக்கிறது.
இந்நூலைக் கற்கவிருப்பவர்கள், முழுமுயற்சியுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும், மீண்டும், மீண்டும் நன்கு விசாரம் செய்ய வேண்டும். சாஸ்திரத்தைப் பலமுறை படிக்கும்போதுதான் மனதிலிருக்கும் தோஷம் ஒவ்வொன்றாக நீங்கி ஞானமும், ஞானநிஷ்டையும் வாய்க்கும்.
அடுத்ததாக ஷங்கரர் சாஸ்திரத்தைக் கற்பதற்கான, அதாவது ஞானயோகப் பயிற்சியில் ஈடுபடுவதற்கான தகுதிகள் பற்றியும், அவற்றை எவ்வாறு அடைவது என்பது பற்றியும் விளக்குகிறார். இதற்கு அதிகாரித்துவ லாப உபாயம் என்று பெயர். ஒருவன் தனக்கு விதிக்கப்பட்டிருக்கிற கடமைகளை ஒழுங்காகச் செய்தல் என்ற ஸ்வதர்ம அனுஷ்டானத்தை கடைபிடித்து இறைவனைத் திருப்திப்படுத்துவதன் மூலம் வைராக்யம் முதலிய நான்கு பண்புகள் உற்பத்தியாகின்றன. ஸ்வ என்றால் அவரவர்களுக்குரிய என்று பொருள். ஒருவன் எந்த ஆஸ்ரமத்தில் இருக்கிறான் என்பதைப் பொறுத்து அவனது கடமைகள் மாறுபடும். ஆஸ்ரம் என்றழக்கப்படுகிற வாழ்க்கை நிலை, நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆஸ்ரமத்திலும் இருக்கிறவர்களுக்கென்று உரிய கடமைகளைச் செவ்வனே ஆற்றுவதன் மூலம் நம் மனம் செம்மையடைந்து, ஞானயோகப் பயிற்சிக்கான தகுதிகளைப் பெறுகிறது. ஸ்வதர்மத்தை மட்டும் கடைபிடித்து தகுதிகள் அடைவதற்குத் தாமதமாகுமெனில் யாத்திரை, உபவாசம் போன்ற தவங்களைச் செய்வதன் மூலம் தகுதியை அடையலாம்.
இனி தகுதிகளைப் பற்றிப் பார்க்கலாம். ஷங்கரர் இங்கு முதலில் வைராக்யம் என்ற தகுதியைப் பற்றிப் பேசுகிறார். வைராக்யம் என்பது அதிகபட்ச இன்பம் பயக்கக் கூடிய பிரம்மலோகம் தொடங்கி, பூலோகம் வரையிலான அனைத்து உலகங்களிலும், அந்த உலகப் பொருட்களிலும் உள்ள பற்றின்மையேயாகும். த்ருஷ்ட ஸ்ருத விஷயே வைராக்யம். பார்த்த, கேள்விப்பட்ட பொருட்களின் மீதுள்ள பற்றின்மையே வைராக்யம். இரண்டு விதமான வைராக்யங்கள் உள்ளன. ஒன்று, ஜிகாஸா வைராக்யம், அதாவது ஒரு பொருள் மீது கொண்ட வெறுப்பினாலோ, அல்லது பலவீனத்தாலோ வரும் பற்றின்மை அல்லது வெறுப்பு. மற்றொன்று, ஜிக்ஞாஸா வைராக்யம், அதாவது பொருட்கள் நிலையற்றவை என்ற அறிவினால் வரும் பற்றின்மை. உண்மையான வைராக்யம் என்பது பற்றின்மையே தவிர வெறுப்பு அல்ல. It is indifference; not hatred. வைராக்யம் கொண்ட ஒருவர் அன்பு, பாசம் கருணை போன்ற பண்புகளைக் கொண்டிருக்க மாட்டார் என்பது பொருளல்ல. காக்கையின் எச்சத்தைக் கண்டால் நமக்கு என்ன பாவனை ஏற்படுமோ அதே பாவனைதான் மோகத்தைக் கொடுக்கும் உலகப் பொருட்களிடத்தும் ஏற்பட வேண்டும். இப்படிப்பட்ட பாவனை கொண்ட வைராக்யம்தான் முழுமையானது.
வைராக்யம் என்ற இந்தப் பண்பு ஷமம், தமம் முதலிய பண்புகள் உற்பத்தியாகக் காரணமாகிறது. குரு சேவை, தவம், ஸ்ரத்தை முதலிய பண்புகளுக்கும் காரணமாகிறது.
அடுத்ததாகப் பேசப்படும் பண்பு விவேகம். விவேகம் என்ற சொல்லுக்கு விவேசனம், பிரித்தல் என்று பொருள். நிலையான, உண்மையான பொருளும், நிலையற்ற பொருளும் கலந்துள்ளது. அதை அறிவளவில் பிரித்தலே விவேகம் எனப்படுகிறது. அறிவினால் பிரித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்து, இது நித்யம், இது அனித்யம் என்ற நிஸ்சய அறிவுடன் புத்தி இருந்தால் அந்த அறிவே விவேகம் எனப்படுகிறது. தன் சொந்த அனுபவத்தையும், உலகோர் அனுபவத்தையும் சுயமாக ஆராய்ந்தும், காரணம் காரியத்தைக் காட்டிலும் மேலானது என்ற அனுமானத்தின் அடிப்படையிலும், ஸ்ருதியின் மேலுள்ள ஸ்ரத்தையால் ஏற்பட்ட, நித்யத்தைப் பற்றிய ஆபாச (அரைகுறை) ஞானத்தினாலும் என்னுடைய உண்மையான தன்மை சாஸ்வதமானது; நான் பார்த்து அனுபவிக்கும் இந்த உலகம் என் உண்மையான தன்மையான ஆத்ம ஸ்வரூபத்துக்கு மாறானது என்ற அறிவை ஒருவன் அடைகிறான். இந்த அறிவை அடைவதற்கு சாத்விகமான மனதால் மட்டுமே முடியும். சாத்விகமான மனம் மட்டுமே பிரித்துப் பார்க்கும் ஆற்றலுடையது. கீதையில் பகவான் சாத்விகப் பண்புகள், சாத்விக உணவு போன்றவை பற்றி விரிவாகக் கூறுகிறார்.
விவேகத்தின் பலன் வைராக்யம் ஆகும். விவேகம் விதை என்றால் வைராக்யம் மரம். விவேகமும், வைராக்யமும் ஒன்றுக்கொன்று உதவிக் கொள்ளும் பரஸ்பர உபகாரிகள். எண்ணெய் தொன்னையையும், தொன்னை எண்ணெயையும் தாங்கிப் பிடிப்பதைப் போல.
மூன்றாவது பண்பு ஷமம் எனப்படும் மன அடக்கம் அல்லது மன அமைதி ஆகும். முதலில் சாஸ்திரத்தில் சிந்திக்காதே என்று சொல்லப்பட்ட விஷயங்களின் எண்ண ஓட்டங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.நிஷித்த சிந்தா திரஸ்கார: இவ்விதமான எண்ணங்கள் ரகசியமானவையாதலால் நாம்தான் முயற்சி செய்து செயல் வடிவம் எடுக்கும் முன் இவற்றை நிறுத்த வேண்டும். இரண்டாவது அனர்த்த சிந்தா திரஸ்கார: பயனற்ற விஷயங்களைச் சிந்திப்பதை நிறுத்துதல். இதனால் நமக்கு ஏற்படும் பெரும் இழப்பு காலம் ஆகும். நமக்கு உள்ளேயிருக்கும் சம்ஸ்காரங்களிலிருந்து தோன்றும் பதிவுகள் விடாது தியாகம் செய்யப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இதுவே ஷமம் ஆகும்.
ஷமம் என்ற பண்பை அடைவதற்கான உபாயங்கள்: வைராக்யம் ஷமத்தை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது. அடுத்து நற்பண்புகளை வளர்த்திக் கொள்ளுதல். கீதையில் பகவான் தெய்வாசுர சம்பத் என்ற தலைப்பில் சொன்ன தெய்வீகப் பண்புகளை பயிலுதல்; பிறகு தியானம்; இது மனதுக்குக் கொடுக்கும் பயிற்சி ஆகும். ரமண மகரிஷி உன் எண்ணங்களைக் கவனித்துக் கொண்டேயிருந்தால் மனம் தானாகவே அடங்கி விடும் என்று கூறியிருக்கிறார். எந்தவித எண்ணங்கள் எழுந்தாலும் அவை பாதிக்காமல் மனதைப் பாதுகாத்தலே ஷமம் எனப்படும்.
நான்காவது பண்பு தமம் ஆகும். இது இந்திரியக் கட்டுப்பாடு அல்லது புலன் அடக்கம் ஆகும். இதுவும் இருவகையில் மேற்கொள்ளப் படுகிறது. சாஸ்திரத்தில் தடை செய்யப்பட்ட செயல்களை நிறுத்துதல். நிஷித்தப் பிரவிருத்தி திரஸ்கார: பயனற்ற செயல்களை நிறுத்துதல். அனர்த்தப் பிரவிருத்தி திரஸ்கார: புலன்களைத் தண்டித்தலே தமம் (தண்டனம் தம:) என்றும், வெளிப்புலன்களை ஒழுங்கு படுத்துதலே தமம் என்றும் ( நிக்ரஹ பாஹ்ய வ்ருத்தினாம் தம: இதி அபிதீயதே) கூறப்படுகிறது.
இனி தமத்துக்கான உபாயங்களைப் பார்க்கலாம். புலன்களை மயக்கும் சூழ்நிலையிலிருந்து விலகிவிடுதல் தமத்துக்குப் பேருதவியாக இருக்கும். தனிமையைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நமக்கு பலஹீனம் உள்ள விஷயத்தில் விரதம் எடுத்துக் கொள்ள வேண்டும். விரதம் எடுத்துக் கொள்ளுதல் நமக்கு ஒரு கட்டுப்பாட்டைக் கொடுக்கும். 

24 ஜூன், 2011

ஆன்மிகத்தின் நுழைவாயில்


வேதாந்த நூல்களில் மூன்று நூல்கள் பிரஸ்தான த்ரயம் என்றழைக்கப்படுகின்றன. அவை உபநிஷத், பிரம்ம சூத்திரம், மற்றும் பகவத் கீதை ஆகியனவாகும். இவற்றில் உபநிஷத் ஸ்ருதிப் பிரஸ்தானம் ஆகவும், பிரம்ம சூத்திரம் சூத்திரப் பிரஸ்தானம் ஆகவும், பகவத் கீதை ஸ்ம்ருதிப் பிரஸ்தானம் ஆகவும் செயல்படுகின்றன. ஆதி ஷங்கரர் இந்த மூன்றுக்கும் பாஷ்யம் (விளக்கம்) எழுதியுள்ளார். இதனால் அவருக்கு பாஷ்யக்காரர் என்ற பெயர் உண்டு.
          பாஷ்யம் மட்டுமன்றி ஷங்கரர் சுயமாகவும் பல நூல்களை இயற்றியுள்ளார். ஆத்ம போதம், உபதேச சாகஸ்ரீ, அபரோக்ஷ அனுபூதி போன்றவை அவற்றில் அடங்கும். இவற்றில் நாம் அபரோக்ஷ அனுபூதி என்ற நூலின் கருத்துக்களைப் பார்க்கவிருக்கிறோம்.
          பிரஸ்தான த்ரயத்தின் அடிப்படையில் சுயமாக இயற்றப்படும் நூல்களுக்கு பிரகரண கிரந்தங்கள் என்று பெயர். இவை வேதாந்தத்தின் துவக்க நிலையில் இருப்பவர்களுக்காக இயற்றப்படுபவை. மூன்று வகையான பிரகரண கிரந்தங்கள் உள்ளன. அவை,
1.    முழு வேதாந்தத்தின் சாரத்தையும் தருவது. எ.கா. தத்துவ போதம்.
2.    ஒரு தலைப்பை மட்டும் எடுத்துக் கொண்டு விளக்குவது. எ.கா. பஞ்சதசி. இந்நூலின் ஒவ்வொரு அத்யாயமும் ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு விளக்கும்.
3.    முதலில் முழு வேதாந்தத்தையும் சுருக்கமாகச் சொல்லிவிட்டு, பிறகு ஒரு தலைப்பை மட்டும் எடுத்துக் கொண்டு விரிவாகப் பேசுவது. நாம் பார்க்கவிருக்கும் அபரோக்ஷ அனுபூதி இந்த வகை நூல்களுக்கு உதாரணம்.
அப்படி அபரோக்ஷ அனுபூதியில் விரிவாக விளக்கப்படும் தலைப்பு நிதித்யாசனம் அல்லது தியானம். அதாவது ஒரு நிதித்யாசகன் எவ்வாறு இந்த உலகம் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்று விளக்கப்படுகிறது. வித்யாரண்யர் என்பவர் அபரோக்ஷ அனுபூதிக்கு வித்யாரண்ய தீபிகா என்ற பெயரில் விளக்கம் எழுதியுள்ளார்.
          அனுபூதி என்ற சொல்லுக்கு ஞானம், உணர்தல் அல்லது அனுபவித்தல் என்று பொருள். நமது ஒவ்வொரு அனுபவத்திலும் நமக்கு அறிவு ஏற்படுகிறது. ஆனால் நாம் பெறும் அறிவு உடனே அனுபவத்தை தர வேண்டும் என்ற அவசியமில்லை. ஆத்மா பற்றிய உபதேசத்தைக் கேட்டு அந்த அறிவு நம் மயமாகும் போது நாம் பெற்ற அறிவு அனுபூதியாக மாறுகிறது. இந்நூலில் நாம் பெற்ற ஞானத்தை அனுபூதியாக்கும் உபாயம் கூறப்பட்டுள்ளது. பெற்ற ஞானம் ஞான நிஷ்டையடையும் போதுதான் ஞானத்தின் பலனான மோக்ஷம் கிட்டுகிறது. ஆத்மா பற்றி நாம் அடையும் ஞானத்துக்குப் பகைவன் நமது சம்ஸ்காரங்களும், வாசனைகள் எனப்படுகின்ற பதிவுகளும் தான். அத்தடையை நீக்க நாமே முயல வேண்டும். இதன் பின் ஞான நிஷ்டை எளிதில் சித்திக்கும். அனுபூதி என்பதற்குத் தடையில்லாத ஞானம் என்று பொருள்.
          அபரோக்ஷம் என்ற சொல்லுக்கான விளக்கத்தைப் பார்ப்போம். அக்ஷம் என்ற சொல்லுக்குப் புலன்கள் என்று பொருள். பரோக்ஷம் என்பதற்குப் புலன்கள் தாண்டி இருப்பது என்றும், ப்ரத்யக்ஷம் என்பதற்குப் புலன்களின் எல்லைக்குள் இருப்பது என்றும் பொருள். ஆனால் அபரோக்ஷம் என்னும் சொல்லுக்கு புலன்களுக்குத் தொலைவிலும் இல்லாத, புலன்களின் எல்லைகளுக்குள்ளும் இல்லாத சுயமாக விளங்கும் ஒரு பொருளைக் குறிக்கிறது. பார்க்கப்படுவதும் அல்லாத, பார்க்க இயலாததும் அல்லாத பிரம்மத்தையே அபரோக்ஷம் என்ற சொல் குறிக்கிறது. அதுவே பிரம்மம் என்பது அத்வைதம் என்றும் குறிக்கப்படுகிறது. பிருஹதாரண்யக உபநிஷத்தில் அபரோக்ஷம் என்ற சொல்லுக்கு ஆத்மா என்று பொருள் சொல்லப்படுகிறது.
          அபரோக்ஷ அனுபூதி நூற்றி நாற்பத்து நான்கு ஸ்லோகங்கள் கொண்டது. பதினோரு ஸ்லோகங்கள் வேதாந்த அறிமுகத்துக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றன. பிறகு த்வம் பத விசாரமும், இந்த உலகத்தை மித்யா என்று புரிந்து கொள்வதும், ராஜயோகம் என்ற தலைப்பில் தியானமும் விளக்கப்படுகின்றன. ஆத்ம ஞானத்தினுடைய தன்மையும், ஞானி இந்த உலகத்தை எவ்வாறும் பார்ப்பான் என்பதும் விளக்கப்படுகின்றன.
          நூல் ஒரு பிரார்த்தனை ஸ்லோகத்துடன் துவங்குகிறது. நூலாசிரியர் தான் துவங்கிய இந்த நூல் நல்லமுறையில் இயற்றி முடிக்கப்பட வேண்டும் என்பதே பிரார்த்தனையுடைய தலையாய நோக்கம் ஆகும். இதற்கு கிரந்த சமாப்தி என்று பெயர். பிரார்த்தனை ஒரு கர்மம் ஆதலால் நூல் இயற்றுவதில் ஏதேனும் தடைகள் இருப்பின் அவற்றை அது நீக்கும். அதே நேரம் இந்த நூலைப் பயிலும் மாணவர்களுக்கு, அவர்கள் வாழ்வில் எதைச் செய்தாலும் பிரார்த்தனையுடன் ஆரம்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்துவதற்காகவும் பிரார்த்தனை செய்யப்படுகிறது. பிரார்த்தனையின் மூன்றாவது பலன் படன சமாப்தி. அதாவது இதை பயிலும் மாணவர்கள் இந்நூலை நன்முறையில் பயின்று முடிக்க வேண்டும் என்பதாகும்.
          பிரார்த்தனை மூன்று பேரை நோக்கிச் செய்யப்படுகிறது. முதலில் சகுனப் பிரம்மமாகவுள்ள தனது இஷ்ட தேவதையை நோக்கியும், இரண்டாவது இந்த உலகின் முழுமையான காரணமாக சமஷ்டி தத்துவமாக உள்ள ஈஸ்வரனை நோக்கியும், இறுதியில் நமக்கு ஆத்ம தத்துவத்தை போதிக்கும் உருவை நோக்கியும் பிரார்த்தனை செய்யப்படுகிறது.
          பிரார்த்தனை ஸ்லோகம் இவ்வாறு ஆரம்பிக்கிறது.
          ஸ்ரீஹரிம் பரமானந்தம் உபதேஷ்டார மீஸ்வரம்
          வ்யாபகம் சர்வ லோகானாம் காரணம் தம் நமாம்யகம்
பொருள்: என் இஷ்ட தேவதையாகவும், குருவாகவும், எங்கும் நிறைந்தவராகவும் உள்ளவரை வணங்குகிறேன்.
ஸ்ரீ என்ற சொல்லுக்கு செல்வம் என்று பொருள். இங்கு மோக்ஷத்தை அடைய விரும்புபவர்களுக்கு செல்வம் ஆத்ம வித்யை ஆகும். ஹரி என்றால் நீக்குபவர் என்று பொருள். பிரம்ம வித்யயா அஞ்ஞானம் ஹரதி இதி ஸ்ரீ ஹரி – அஞ்ஞானத்தை அழித்து பிரம்மஞானம் என்னும் செல்வத்தை வழங்குபவரே ஸ்ரீஹரி ஆவார். பரமானந்தம் என்றால் ஸ்ரீஹரியின் சொரூபமே மேலான ஆனந்தம் என்பது பொருள்.  உபதேஷ்டாரம் என்பது ஈஸ்வரனாகவே இருக்கும் குருவைக் குறிக்கிறது. குரு உபதேசிக்கும் வார்த்தைகளில் ஸ்ரத்தை வருவதற்காகவே குருவிடம் அளவற்ற மதிப்பு காட்டப்படுகிறது. ஈஸ்வரம் என்ற சொல்லின் மூலம் இந்த உலகின் நிமித்த காரணமாக (intelligent cause) இருப்பவர் என்றும், வ்யாபகம் சர்வலோகானாம் என்ற சொற்றொடரின் மூலம், உலகின் உபாதான காரணமாக (material cause) இருப்பவர் என்றும் ஈஸ்வரன் குறிப்பிடப்படுகிறார்.
          

2 ஜூன், 2011

இல்லறம்




ஸ்வாமி குருபரானந்தர் இல்லறம் என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையைக் கேட்டேன். உரை கேட்கும்போது எடுத்து வைத்துக்கொண்ட குறிப்புகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இது உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
        அப்பைய தீக்ஷிதர் தான் எழுதிய நூலின் முன்னுரையில் சிவபெருமானையும், பார்வதியையும் வணங்கித் துதிக்கும்போது, அவர்கள் இருவரும் இணைந்து வாழ்வது அவரவரது தவத்தின் பயனாகவே என்று கூறுகிறார். நம் வாழ்வில் நாம் யாருடன் சேர்ந்து வாழ்ந்தாலும் அது நாமும் அவர்களும் செய்த தவத்தின் பயனாகவே என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
        மனித இனம் தனித்து வாழும் குணம் கொண்ட இனம் அல்ல. அதெற்கென்று இருக்கிற சமுதாய அமைப்பில் இணைந்து வாழ்வதற்குரிய வகையில்தான் அவர்களது இயல்பு படைக்கப்பட்டிருக்கிறது. நமது தேவைகளுக்காக பிறமனிதர்களுடன் நாம் இணைந்து வாழ்வது நமக்கு அவசியமாகிறது. தனிமையில் மகிழ்ச்சி அடைவதென்பது ஆதியில் ஹிரண்யகர்பனாலும் கூட முடியாத காரியமாக இருந்தது, எனவேதான் இருமை படைக்கப்பட்டது என்று ஓர் உபநிஷத் கூறுகிறது. மேலும் ஒரு மனிதன் பிறருடன் பழகும்போதுதான் அவன் மனம் வளர்ச்சி அடைகிறது. இரண்டு பேர் நெருங்கிப் பழகும்போது ஒருவரிடமிருந்து மற்றவர் அன்பையும், தியாகத்தையும் பெற்றுப் பிறருக்கு வழங்குகிறார். எனவே ஒருவரது மனம் எப்படிப் பட்டதென்பது அவர் யாருடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார் என்பதைப் பொறுத்து உள்ளது.
        நமது கலாசாரத்தில் ஒரு மனிதனது வாழ்வை நான்கு நிலைகளாகப் பிரித்துள்ளனர் நமது முன்னோர். அதில் முதல் நிலை பிரம்மசரிய ஆஸ்ரமம் எனப்படும். ஆஸ்ரமம் என்பதற்கு வாழ்க்கை நிலை என்று பொருள். இந்த ஆஸ்ரமத்தில் ஒருவனது உறவு தாயிடமும், பிறகு தந்தையிடமும் ஆரம்பிக்கிறது. பிறகு ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் பிற உறவினர்களிடமும் உறவு தொடர்கிறது.
        அடுத்து கிருஹஸ்த ஆஸ்ரமம். இதில் ஒரு மனிதனுக்குப் பெரும்பாலான தொடர்பு மனைவியிடம் இருக்கிறது (ஒரு பெண்ணுக்கு கணவனிடம்.). பிறகு வரும் வானப்பிரஸ்த ஆஸ்ரமத்தில் அவன் அதிக காலத்தை இறைபக்தியிலேயே செலவிடுவதால் அவனது பெரும்பான்மையான தொடர்பு அவனது இஷ்ட தெய்வத்திடமே இருக்கிறது. கடைசி ஆஸ்ரமமான சன்யாச ஆஸ்ரமத்தில் அவன் குருவிடம் தொடர்பு கொண்டு மனதைப் பக்குவப்படுத்தி ஞானத்தை அடைந்து அசங்கமான நிலையை, அதாவது தன் இருப்புக்கும், மனநிறைவுக்கும் பிறரைச் சார்ந்திராத நிலையை அடைகிறான். நம்மிடமே நாம் மகிழ்ந்திருக்கும் இந்நிலையே நம் வாழ்வின் லட்சியம். அதுவரை நமக்கு உறவுகள் தேவையாக இருக்கிறது. ஆனால் அதே உறவுகளை எவ்வாறு கையாள்வது என்று அறியாமல் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
        உறவுகளைக் கையாள்வது எங்ஙனம்? உறவுகளை நாம் சாதனையாக மாற்றிக்கொள்ள வேண்டும். உறவுகள் பணத்தின் அடிப்படையிலோ, அதிகாரத்தின் அடிப்படையிலோ இருக்கக் கூடாது. உறவுகளுக்கு ஆதாரமாக அன்பும், தியாகமுமே இருக்க வேண்டும்.
        பொதுவாக ஒருவருடன் நெருங்கிப் பழகும்போது அவரது பலவீனங்கள் நமக்குத் தெரிய ஆரம்பிக்கும். ஆனால் அவற்றைப் பிறர் முன் சுட்டிக் காட்டக் கூடாது. அவற்றைத் தனிமையில்தான் சுட்டிக்காட்ட வேண்டும். அதையும் உடனே சுட்டிக்காட்டாது, பிறகுதான் சுட்டிக்காட்ட வேண்டும். நமது வாக்கை நாம் சொல்லிக் கொடுக்கத்தான் பயன்படுத்தவேண்டுமே அல்லாது திட்டுவதற்குப் பயன்படுத்தக் கூடாது. அதே போல் ஒருவர் கோபமாக இருக்கும்போது அந்தக் கோபத்தைத் தூண்டும் வகையில்  செயல்புரியக் கூடாது.  நம் விருப்பு வெறுப்புகளைப் பிறர் மீது திணிக்கக் கூடாது.
        அதேபோல் கருத்து வேறுபாடுகள் தோன்றும் போது விட்டுக் கொடுத்துப் பழக வேண்டும். நம் ஒரு மனதிலேயே இவ்வளவு போராட்டங்கள் வரும்போது, இரு மனங்களில் எவ்வளவு போராட்டங்கள் வரும்? எனவே இருவருக்குமிடையில் கருத்து வேறுபாடுகள் வரும்போது அமர்ந்து பேச வேண்டும். அல்லது நடுநிலையில் உள்ளவர்களை நாட வேண்டும்.
        இல்லறவாதிகளுக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் மூன்று முக்கியக் கடமைகளைத் தருகிறார். அவை, யக்ஞம், தானம், மற்றும் தவம் ஆகியன. யக்ஞம் என்பது இறைவழிபாட்டையும், வீட்டை ஒரு கோயில் போல வைத்துக் கொள்வதையும், விருந்தோம்பலையும் குறிக்கிறது.
தானம் நாம் ஈட்டிய செல்வத்தைப் பிறரிடம் பகிர்ந்து கொள்வதைக் குறிக்கிறது. பொருள் ஈட்டுவது தவறென்று நம் வேதம் சொல்லவில்லை. பூத்யைன ப்ரமதி பவ்யம், உன் வாழ்க்கை நிலையை உயர்த்திக் கொள் என்றுதான் சொல்கிறது. நாம் ஈட்டிய பொருளைக் கொண்டு நம் உறவினர்களுக்கும், நம்மைச் சார்ந்த ஏழைகளைக்கும் உதவி செய்யவேண்டும்.
 தவம் என்பது கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்தையும் குறிக்கிறது. இல்லறத்தில் இருப்பவர்கள் எல்லா போகங்களையும் அனுபவித்துக் கொள்ளலாம் என்று வேதம் சொல்கிறது. ஆனால் ஒரு காலத்தில் இந்திரியங்கள் சக்தி இழக்கும். அதற்கு நம்மைத் தயார் செய்து கொள்ளவேண்டும். கோயில்களுக்கு யாத்திரை செல்வது போன்றவையும் தவம் என்ற சாதனையின் கீழ் அடங்கும்.
இந்தச் சாதனைகளைப் பின்பற்றி நாம் அடையும் மனமுதிர்ச்சியின் உதவியால், இந்த உலகம் நமக்கு ரிடையர்மென்ட் கொடுப்பதற்கு முன்பு நாமே ரிடையர்மென்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்து உறவுகளையும் விட்டு நட்புடனும், மகிழ்ச்சியுடனும் விலக வேண்டும்.

29 ஏப்ரல், 2011

தர்மத்தின் மதிப்பு


ஸ்வாமி தயானந்த சரஸ்வதி அவர்களது தர்மத்தின் மதிப்புதான் என்ன? என்ற சிறிய நூல் தர்மம் என்று நாம் சொல்லக்கூடிய ஒவ்வொரு விஷயத்தினுடய மதிப்பையும் பூரணமாக அறிந்து கொள்ள உதவுகிறது. தர்மம் என்ற சொல்லுக்குப் பெரும்பாலோர் தானம் செய்வது என்ற பொருளையே மனதில் கொள்கின்றனர். ஆனால் தர்மம் என்ற சொல்லுக்கு வாழ்க்கை நெறி என்பதே பொருளாகும். நமது வேதங்கள் சமுதாயத்தில் ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்று பல்வேறு நெறிகளை வகுத்துக் கொடுத்துள்ளன. அவ்வாறு தர்மத்தைப் பின்பற்றி வாழும் மனிதனின் மனம் சரியான திசையில் வளர்ச்சி அடைகின்றது. இதன் மூலம் வாழ்வின் சகல துன்பங்களிலிருந்தும் விடுபடுவதற்கான பாதையில் பயணிப்பதற்கான முழு தகுதியை அவன் அடைகிறான். எனவே இந்த உலக வாழ்க்கையில் நிம்மதியாகவும், ஆனந்தமாகவும் வாழ விரும்புபவர்களும், வாழ்வு கொடுக்கும் இன்பம், துன்பம் என்ற இரட்டைகளிலிருந்து விடுபட் விரும்புபவர்களும் தர்மம் என்றால் என்ன, அதை எவ்வாறு பின்பற்றுவது என்று தெளிவாக அறிந்து செயல்பட வேண்டும். இதை தெளிவாகச் சொல்வது மட்டுமல்ல, தர்மத்தைப் பின்பற்றுவதற்குத் தேவையான பண்புகளை விளக்கி, அப்பண்புகளை நம் மயமாகவே ஆக்கிக் கொள்வதற்கான யுக்திகளையும் அளிக்கிறது இந்த நூல்.
தர்ம நெறிப்படி வாழ்வதன் முக்கிய நோக்கம் ஒருவனை உள்ளத்தூய்மை பெறச் செய்வதே. இதனால் அவன் மனம் ஆத்ம ஞானம் பெறுவதற்கு ஏற்ற பாத்திரமாகிறது. ஆத்ம ஞானத்தை அடைவதற்கான வழிகளைப் பற்றி அவர் விளக்கியுள்ள மற்றொரு நூல் சாதனமும், சாத்யமும். இந்நூல் ஒரு மனிதனின் இறுதி லட்சியம் என்ன என்பது பற்றியும், அதை அடைவதற்கான பாதையைப் பற்றியும் பேசுகிறது.

விலங்குகள் தங்கள் இயல்புப்படியே வாழ்கின்றன. அதுபோலன்றி மனிதனுக்கு எவற்றைச் செய்ய வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது. எனவே அவன் செயல்பாடுகளுக்கான அளவுகோல்கள் கொடுக்கப்படாவிட்டால் அவன் செயல்கள் அழிவுக்கு வழிவகுத்து விடும். அந்த அளவுகோல்களே தர்மம் எனப்படும்
பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தெய்வ சம்பத் என்ற தலைப்பில் இருபது பண்புகளைப் பட்டியலிடுகிறார். அப்பண்புகள் அனைத்தும் இந்நூலில் விளக்கப்பட்டு, அவற்றின் உட்கூறுகள் பற்றிய விசாரமும் நடத்தப்படுகின்றது. கீதையில் கிருஷ்ணர் கூறும் அப்பண்புகளாவன; தற்பெருமையின்மை, டம்பமின்மை, அஹிம்சை, பொறூமை, நேர்மை, குருவுக்குப் பணிவிடை, தூய்மை, விடாமுயற்சி, தன்னடக்கம், இந்திரிய விஷயங்களில் ஆசையின்மை, அஹங்காரமின்மை, பிறப்பு, இறப்பு, மூப்பு, வியாதி இவற்றிலுள்ள தோஷத்தைக் கண்டறிதல், தீமைகளைச் சிந்தித்தல், பற்றின்மை, இது எனக்கு சொந்தம் என்ற புத்தியின்மை, மக்கள், மனைவி, வீடு இவற்றில் அபிமானமின்மை, இஷ்டமானவை, இஷ்டமில்லாதவை இவற்றில் சமமான சித்தத்தைப் பெற்றிருத்தல், என்னிடத்தில் மாறாததும், என்னைத் தன்னைவிட வேறாகக் கருதாததுமான பக்தி, தனித்த இடத்தை நாடல், ஜனங்களின் கூட்டத்தில் நாட்டமின்மை, ஆத்ம விஷ்யமான ஞானத்தில் எப்பொழுதும் ஈடுபட்டிருத்தல் தத்துவ ஞானத்தின் பலனான மோக்ஷத்தை எப்பொழுதும் மனதில் நிறுத்தல் ஆகியனவாகும். இவற்றை ஞானம் என்றே கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். பொய் சொல்லக்கூடாது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் ஏன் பொய் சொல்லக்கூடாது என்று யாராலும் நாம் மனமார ஏற்றுக்கொள்ளும்படி விளக்க முடிவதில்லை. பொய் சொன்னால் சாமி கண்ணைக் குத்தி விடும், பிறருக்கு அதனால் பாதிப்பு என்று விளக்கங்கள் வருகின்றனவே தவிர, உலகத்தில் பொய் சொல்லி நன்றாக வாழ்கிறவர்களையும் நாம் பார்க்க நேர்வதால் நம்மால் பொய் சொல்லக்கூடாது என்பதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. ஆனால் இந்நூலில் ஸ்வாமிஜி ஒவ்வொரு பண்பையும் நாம் ஏன் பின்பற்ற வேண்டும் என்பதற்கு அற்புதமான விவாதங்களை முன் வைத்து, நம்மைத் தெளிவு பெறச் செய்கிறார்.

25 மார்ச், 2010

சாதன சதுஷ்டயம் - 5



ஸமாதானம்
மன ஒருமுகப்பாடு. சித்தஸ்ய ஸ்தைர்யம். ஏகாக்ர:
யோக சாஸ்திரம் இதையே ஸமாதி: என்கிறது.
தியானிக்க வேண்டிய பொருளில் இருக்க வேண்டிய மன ஒருமுகப்பாடே ஸமாதானம் எனப்படுகிறது.

ஸமாதானத்தை அடைவதற்கான உபாயம் என்ன?
1. வைராக்யம் அதிகரித்தல் வேண்டும்.
2. முமுக்ஷுத்வம் – அடைய விரும்பும் பொருளில் ஆர்வம்.
3. அப்யாஸம் – மனதை ஒருமுகப்படுத்தி தொடர்ந்து பயிற்சி செய்தல். தியானப் பயிற்சி.
4. த்ருதி: - உறுதி. உறுதியாக இருந்து பழகுதல். செய்ய வேண்டும் என்று முடிவு செய்த
விஷயங்களை உறுதியோடு நின்று செய்து முடிக்க வேண்டும்.

ஸமாதானத்தை அடைவதன் பலன் என்ன?
1. மனோ பலம் – மோஹம் (குழப்பம்) என்ற எதிரியிடமிருந்து நம்மைக் காப்பாற்றும்.
2. ஸ்ரவண நிஷ்டா – சாஸ்திரத்தை முழுமையாகக் கூர்ந்து கேட்போம்.



முமுக்ஷுத்வம்

மோக்ஷம் வேண்டும் என்கிற தீவிர ஆசை. தீவிர இச்சா. இச்சை என்றாலே நம்மைச்
செயலில் தூண்டும் அளவுக்கு வளர்ந்த ஆசை என்று அர்த்தம்.
ஜானாதி – ஆசைப்படுதல் – செயல்படுதல்
அறிதல் – இச்சதி – யததே.
முமுக்ஷுத்வத்தின் இருபடிகள்
1. மோக்ஷத்தை அடையும் ஆசை.
2. மோக்ஷத்தைஅடையும் பாதையைக் கண்டு கொள்ளல்.
மோக்ஷத்தைஅடையும் பாதையைக் கண்டு கொண்டவனுக்கு ஜிக்ஞாஸு என்று பெயர்.
ஜிக்ஞாஸு என்றால் ஞாதும் இச்சும் – கண்டு கொண்டதை அறிய வேண்டும் என்பதில் உள்ள ஆவல்.
முமுக்ஷுத்வத்தை அடைவதற்கான உபாயம் என்ன?
1. விவேகம் – அநித்யத்தின் மீது வைராக்யமும், நித்யத்தின் மீது ஆசையும் வளர்த்தல்.
2. கர்ம யோகம் – மேலான பொருள் மீது ஆசை வர சித்த சுத்தி வேண்டும். அதற்குக் கர்ம யோகம் பழக வேண்டும்.

முமுக்ஷுத்வத்தை அடைவதன் பலன் என்ன?
1. ஸ்ரவண சித்தி:
2. தடைகள் நீங்கி முன்னேறும் சக்தி கிடைக்கும்.
3. பிற அனைத்து சாதனைகளையும் பின்பற்றுவது எளிதாகும்.

ஓம் பூர்ணமதப் பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவஷிஷ்யதே

சாதன சதுஷ்டயம் - 4


திதிக்ஷா
திதிக்ஷா என்ற சொல்லுக்குப் பொருத்துக் கொள்ளுதல், சகித்துக் கொள்ளுதல் என்றுபொருள். த்வந்த்வ ஸ்ஹிஷ்னுத்துவம் அதாவது, குளிர், வெப்பம், மானம், அவமானம் போன்ற எதிரெதிர் அனுபவங்களான இருமைகளை சகித்துக் கொள்ளுதல்.
அசிந்தயா சஹனம் – acceptance. மனதளவில் குறை சொல்லாமல் எதையும் செய்தல்.
துன்பம் வரும்போது அதை நீக்க முழு முயற்சி செய்ய வேண்டும். அதை நீக்கும் போதும் அதன் பின்னரும் பொறுமையாக இருக்க வேண்டும்.

திதிக்ஷாவை அடைவதற்கான உபாயம் என்ன?
பொறுமையைப் பழகியே பொறுமையாக இருக்க வேண்டும்.
எதை மாற்ற முடியாது என்று தெரிகிறதோ அதைப் பொறுத்துக் கொள்ளும் அறிவைப் பழக வேண்டும். மாற்ற முடியுமெனில் அதை மாற்ற முயற்சி செய்ய வேண்டும்.
மாற்ற முடியாத துன்பங்களை தவமாகப் பாவித்து அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நம் பலத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும். கஷ்டத்தை தாங்கும் சக்தியுடையவனே பலமுள்ளவன். நாயமாத்மா பலஹீனேன லப்யதே – இந்த ஆத்மா பலவீனர்களால் அடையப்படுவதில்லை என்று கீதையில் பகவான் கூறுகிறார்.
முமுக்ஷுத்வம் – மோக்ஷத்தை அடையும் விருப்பத்தை அதிகப்படுத்திக் கொள்ளுதல்.
உபேக்ஷா – indifference கஷ்டத்தைக் கொள்ளாமல் இருத்தல்.
வரும் துன்பத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக பரிகாரம் செய்தல் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். அந்தப் பரிகாரங்களையே பரிகாரம் செய்ய வேண்டும்.

திதிக்ஷாவை அடைவதன் பலன் என்ன?
பொறுமையே ஒரு பலன்தான்.
மற்ற சாதனைகளை பொறுமை இருந்தால்தான் செய்ய வேண்டும் - சாதனாந்தர நிஷ்டா
சாதனைகளைப் பின்பற்றுவதற்குண்டான தடைகளை நீக்கும்.
அஹிம்சையைப் பின்பற்ற முடியும்.

ஸ்ரத்தா:
ஸ்ரத்தா என்பதற்கு நம்பிக்கை அல்லது விசுவாசம் என்று பொருள்.
எதில் நம்பிக்கை?
குரு வேதாந்த வாக்யேஷூ விஸ்வாஸ: ஸ்ரத்தா
குரு மற்றும் வேதாந்த வாக்யங்களில் நம்பிக்கை வேண்டும்.

நம்பிக்கையின் அவசியம்
ஏற்கனவே தெரிந்த ஒன்றை நம்ப வேண்டிய அவசியம் இல்லை. தெரியாத ஒன்றை அடையும் வரை அதன் மீது நம்பிக்கை வேண்டும்.
ஸ்ரத்தையே ஞானத்தின் முதல் படி.
அறிவு வந்துவிட்டல் ஸ்ரத்தையின் தேவை இல்லை.
ஸ்ரத்தையே ஞானமாகப் பரிமாணம் அடைகிறது. ஸ்ரத்தாவான் லபதே ஞானம் என்கிறது
கீதை. உபநிஷத் விஷயத்தில் ஞானம் ஏற்படும் வரை ஸ்ரத்தை தேவை.
கீதை மூன்று வித ஸ்ரத்தைகளைப் பற்றிக் கூறுகிறது. சாத்விகம், தாமஸம், ராஜஸம்.
இதில் சாத்விக ஸ்ரத்தையே நமக்குத் தேவை.


ஸ்ரத்தையை அடைவதற்கான உபாயம் என்ன?
உபநிஷத் இறைவனின் வார்த்தை என்கிற புத்தி.
குரு ஈஸ்வர வாக்யத்தை எடுத்துச் சொல்கிறார் என்கிற புத்தி.
ஞானத்தின் பலனைப் பார்க்கும் பொழுது ஸ்ரத்தை வரும். எனவே ஞானம் யாரிடம்
உள்ளதோ அவரிடம், குருவிடம் சென்று சேவை செய்யும் போது ஸ்ரத்தை வளரும்.
வினயம் – பணிவு. உடல், சொல் மற்றும் அறிவு அளவில் பணிவைக் கைக்கொள்ள
வேண்டும். திறந்த மனத்துடன் இருக்க வேண்டும்.

ஸ்ரத்தையை அடைவதன் பலன் என்ன?
ஞானத்திற்கு நாம் ஒரு பாத்திரமகின்றோம். பாத்திரம் என்றாலே கீழே விழுவதிலிருந்து காப்பாற்றப் படுதல் என்று அர்த்தம். ஸ்ர்த்தை நிறைந்த மனிதனிடம் அளிக்கப்படும் ஞானம் கீழே விழுந்து வீணாகாது காப்பாற்றப் படுகிறது.
குரு ஒரு சிஷ்யனிடம் சோதனை செய்யும் விஷயம் – ஸ்ரத்தா.
சிஷ்யனிடம் உள்ள ஸ்ரத்தையே குருவைப் பேச வைக்கும்.
சாஸ்திர விசாரம் முடியும் வரை நம்மை ஞானயோகத்தில் ஈடுபடுத்துவதே
ஸ்ரத்தைதான்.
சாஸ்திரம் பலனைக் கொடுக்க வேண்டுமெனில் ஸ்ரத்தை அவசியம்.ப்ரமாண வியாபாரம்.
ஆன்மிக வாழ்விற்கு மட்டுமல்ல, சாதாரண வாழ்விற்கே நம்பிக்கை அவசியம்.

சாதன சதுஷ்டயம் - 3


ஷமாதி ஷட்க ஸம்பத்தி:
ஷமம்
ஷமம் என்ற சொல்லுக்கு மன அமைதி அல்லது மன ஒடுக்கம் என்று பொருள்.
ஞானத்தை அடையும் பிரதானமான கருவி மனம். மனம் ஒரு கருவி. அது என்றுமே கர்த்தாவின் கையில்தான் இருக்க வேண்டும். புத்திதான் கர்த்தா. மனம் கருவி. புத்தியின் சொல்படி மனம் நடக்க பயிற்சி அளிக்க வேண்டும். பதிவுகளை எடுத்துக் கொண்டு சதா சஞ்சலப்படும் மனம் ஞானத்துக்குரிய கருவி அல்ல.

எந்த சாதனைகளை மேற்கொண்டு மனதை நம் வசப்படுத்த முடியும்?
வைராக்யம்
அடுத்த சாதனையான தமம்.
மனதை ஒழுங்குபடுத்த கீதையில் பகவான் வைராக்யம், அப்யாஸம் என்ற இருவித உபாயங்களைக் கொடுக்கிறார்.
நற்பண்புகளை வளர்த்துக் கொள்ளுதல், தீய பண்புகளை நீக்குதல்.
வாய்மை என்னும் குணம் மனதை அமைதிப்படுத்தும்.
தேவையற்றவைகளை நினைக்காதே என்று மனதுக்கு ஆர்டர் போட வேண்டும்.
த்யானம், ஜெபம் பழகுதல்.


மனதை அமைதிப்படுத்துவதால் கிடைக்கும் பலன் என்ன?
வைராக்யத்தை அதிகப்படுத்தும்.
இந்திரியக் கட்டுப்பாடு வரும்.
ஞானயோகம் மனதைக் கொண்டு செய்யும் ஒரு சாதனை. எனவே மன அமைதி ஞானயோகத்துக்குத் துணை செய்யும்.
மன அமைதியே ஒரு பலன்.
ஷமம் தமம் போன்ற குணங்கள் ஒன்றுக்கொன்று உதவி செய்யும். இதற்கு அந்யோன்ய ஆஸ்ர: என்று பெயர்.

தமம்
இந்திரிய ஒழுக்கம் அல்லது புலன் அடக்கம்.
குறிப்பாக ஞானேந்திரியங்களான கண், காது, நாக்கு முதலியவற்றை நன்முறையில் பயன்படுத்துதல்.
உடலின் ஆரோக்யம் உணவைச் சார்ந்தது. மனதின் ஆரோக்யம் ஐம்புலன்கள் மூலம் எந்த விஷயத்தை மனத்துக்கு கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்தது.
உடலுக்கு ஒரு வாய். மனதுக்குப் பத்து வாய்கள். எனவே மனதுக்குத் தேவையற்ற விஷயங்களைக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
புத்தர் நடக்கும் விதத்தைப் பற்றி வர்ணிக்கும் பொழுது,
அலோல சக்ஷு: யுக மாத்ர தர்ஸி என்று சொல்லப் படுகிறது.
அதாவது, அவர் அசையாத கண்களுடண், எவ்வளவு தூரம் பார்க்க வேண்டுமோ அவ்வளவு தூரம் மட்டுமே பார்த்துக் கொண்டு நடப்பாராம்.

எந்த உபாயங்களின் மூலம் தமத்தை வளர்த்துக் கொள்ள முடியும்?
ஓரிடத்தில் இருந்து பழுகுதல். எடுத்துக்காட்டாக, அதிகம் பேசுவது நம் பலவீனமெனில் வாரத்தில் ஒருநாள் மௌனம் காத்தல்.
விரத ரூபமாக ஸ்ங்கல்பத்தை மேற்கொள்ளுதல்.
புலன்களுக்கு நூறு சதவீதம் சுதந்திரம் கொடுக்காமலிருத்தல்.
எந்தச் சூழ்நிலையில் இருந்தால் கட்டுப்பாட்டை இழப்போமோ அந்தச் சூழ்நிலையில் இருந்து விலகி இருத்தல்.
சத்சங்கம் மற்றும் துர்சங்கத் தியாகம்.


தமத்தின் பலன்கள் யாவை?
இந்திரிய சக்தி – புலன்கள் சக்தியுடன் இருக்கும்.
ஷமத்தை வளர்க்க மிகவும் உதவும்.
குருசேவை போன்றவற்றில் ஈடுபட முடியும்.

உபரமம்
ஷமம், தமம் முதலியவற்றைத் தொடர்ந்து செய்தல், தேவையற்றதிலிருந்து விலகி நம்கடமைகளை மட்டும் செய்தல் (ஸ்வதர்ம அனுஷ்டானம்) முதலியன உபரமம் எனப்படும்.

உபரமத்தை அடைவதற்கான உபாயம் என்ன?
மிகுந்த விழிப்புணர்வோடு இருந்து ஷம, தமத்தை மேற்கொள்ள வேண்டும்.


உபரமத்தை அடைவதன் பலன் என்ன?
ஷம, தமம் நமக்குள் நிற்கும்.
ஸ்ரவணத்துக்கு உதவும்.

சாதன சதுஷ்டய சம்பத்தி - 2


வைராக்யம்
ராக: என்றால் பற்று, ஒட்டிக் கொள்ளுதல் என்று பொருள்.
விராக: என்றால் பற்றின்மை, பற்று நன்றாகப் போய் விடுதல் என்று பொருள்.
எனவே வைராக்யம் என்பதற்கு பற்று நீங்கிய தன்மை, பற்றை விட்ட தன்மை உடையமனநிலை என்று பொருள்.
வைராக்யம் என்பது ஒரு செயலன்று. அது ஒரு சாத்யம். A state of mind.

எதில் பற்றற்ற தன்மை இருக்க வேண்டும்?
“இக அமுத்ர போகே விராக:”
இந்த உலகிலும், பிற உலகங்களிலும் இன்பத்தைக் கொடுக்கும் பொருட்களில்
விருப்பமில்லாது இருத்தலே வைராக்யம் எனப்படும்.
இவ்வுலகப் பொருட்களை சாஸ்திரம் இரு வகையாகப் பிரிக்கிறது.
ஒன்று த்ருஷ்டம் அதாவது பார்க்கப்படும் பொருட்கள். மற்றொன்று ஸ்ருதம். கேட்கப்பட்ட பொருட்கள். இவ்விரு வகையான பொருட்கள் மீதும் பற்றின்றி இருத்தலே வைராக்யம்.
பற்றின்மையும், வெறுப்பும் ஒரே விதமான குணங்கள் அல்ல.
பொருட்கள் கொடுக்கும் இன்பத்திற்கு அடிமையாகாமல் இருத்தலே பற்றின்மை ஆகும்.

வைராக்யத்தை எந்தெந்த உபாயங்களின் மூலம் அடையலாம்?
வைராக்யத்தின் மூல காரணம் விவேகம் ஆகும். ஆனால் விவேகமே வைராக்யத்தைக் கொடுத்து விடாது. எனவே கீழ்க்காணும் உபாயங்களை மேற்கொள்ள வேண்டும்.

1. விவேக அப்யாஸம் அடைந்த அறிவை மீண்டும், மீண்டும் மனதில் கொண்டு வந்து பயிற்சி செய்தல்.
2. துக்க தோஷ அனுதர்ஸனம் – பொருட்கள் சிறு,சிறு இன்பத்தை அளித்தாலும், அவை இறுதியில் துன்பத்திற்கே வழி வகுக்கின்றன என்ற தெளிவு.
3. உலகின் பொருட்கள் நிலையற்றது என்ற அறிவை மீண்டும், மீண்டும் கொண்டு வருதல்.
4. பொருட்களை அன்பவிக்கும் என் புலன்கள் நிலையற்றவை என்று தெளிதல்.
5.பலஹீனத்துவம் – பொருட்கள் என்னையும், என் புலன்களையும் பலவீனப்படுத்தும்.
6. அத்ருப்திகரத்வம் – இவ்வுலகில் எப்பொருளுக்கும், எம்மனிதனுக்கும் ஒருவனை முழுமையாகத் திருப்திப்படுத்தும் ஆற்றல் கிடையாது.
7. எந்தப் பொருளுக்கு அடிமையாகி விடுகிறோமோ அந்தப்பொருளை பகிர்ந்து கொடுக்கும் எண்ணம் வராது.
8. பொருட்கள் நம் சுதந்திரத்தைப் பறித்து விடும்.
இது போன்ற தொடர்ந்த விவேக அப்யாஸமே நாளடைவில் வைராக்யமாகப் பரிணாமம் அடையும்.

சங்கல்பத் த்யாகம்
ஒரு பொருளைப் பற்றி நினைத்து, நினைத்துதான் அப்பொருள் மீது பற்று வருகிறது.
இது போன்ற சங்கல்பத்திற்குக் காரணம், ஸோபனா அத்யாஸம். அதாவது அது எனக்கு
நன்மையைத் தரும் என்னும் எண்ணம்.
எனவே வைராக்யம் பூரணமடைய விஷயத் தியானம் செய்யாமல் இருக்க வேண்டும்.

சத்சங்கம்
சிறு சிறு வைராக்யமுள்ளவர்கள் ஒன்று கூடும்போது அவர்கள் ஒருவ்ருக்கொருவர்உதவி செய்து கொள்வதால் வைராக்யம் மேலும் வளர்கிறது.
நம்மை விட வைராக்யம் அதிகமுள்ளவர்களிடம் பழகி நம் வைராக்யத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

கர்மயோகம்
கர்மயோக முறைப்படி நம் தர்மத்தை அனுசரித்து வாழ்தல் வைராக்யத்தைத் தரும்.
விசாரம் செய்து ஞானம் வரவில்லையெனில் மீண்டும் மீண்டும் விசாரம் செய்.
கர்மயோகம் செய்து வைராக்யம் வரவில்லையெனில் மீண்டும் மீண்டும் கர்மயோகம் செய் என்று ஒரு கூற்று உண்டு.

வைராக்யத்தின் பலன் என்ன?
தைத்ரிய உபநிஷத் ஸ்லோகம் ஒன்று கீழ்வருமாறு கூறுகிறது.
ஒரு பொருளை அனுபவிக்கும் போது ஒரு மடங்கு சுகம் எனில், அந்தப் பொருள் மீது
உள்ள வைராக்யம் நூறு மடங்கு சுகம் தரும்.
சாஸ்த்ரப் ப்ரவிருத்தி – வைராக்யம் சாஸ்திரம் நோக்கி, நிலையானதை நோக்கி
நம்மைச் செலுத்தும்.
சத்குண ஹேது: வைராக்யம் நற்பண்புகளான தெய்வீக குணங்களை அடைய உதவும்.

சாதன சதுஷ்டய சம்பத்தி - 1


சாதன சதுஷ்டய சம்பத்தி
விவேகம்

விவேகம் என்ற சொல்லுக்குப் பின் வரும் பொருள்கள் உண்டு.
(1) ப்ருதக்த்வேன ஞானம் – பிரித்துப் புரிந்து கொள்ளுதல்
பிரித்துப் புரிந்து கொள்ளுதல் எனும் போதே இரண்டு முற்றிலும் வேறான பொருட்கள் கலந்திருக்கின்றன என்று அர்த்தம்.
(2) விஷேஷ ரூபேண ஞானம் – தெளிவாகப் புரிந்து கொள்ளுதல்.
(3) அன்யோன்ய தர்ம (அ) வ்யாவர்த்த ரூபேண ஞானம் – ஒரு விதமான வஸ்து மற்றொன்றுடன் கலந்து விடாமல் புரிந்து கொள்ளுதல்.
(4) விசாரம் – ஆராய்தல்
(5) சத்வ சுத்தி: - மனத்தூய்மை.

வேதாந்தம் என்பது ஒரு கண்ணாடியைப் போல. அந்தக் கண்ணாடி முன் நின்றால் அதுநம் மனதையும், அதற்கு ஆதாரமாய் இருக்கும் தத்துவத்தையும் காட்டும்.
அந்தக் கண்ணாடி முன் நிற்கையில் நமக்கு ஒரு சுய அறிவு வேண்டும்.
ஒரு ஸ்லோகம் சொல்கிறது. இரு கண் அற்றவர்க்குக் கண்ணாடி எவ்விதம் உதவும்?யாருக்கு சுய அறிவு இல்லையோ அவனுக்கு சாஸ்திரம் எவ்விதம் உதவும்?
அந்த சுய அறிவே விவேகம், சுயம் ப்ரக்ஞா எனப்படுகிறது.

தர்க்க சாஸ்திரம் மனதில் தோன்றும் ஒவ்வோர் எண்ணத்தையும் ஞானம் என்கிறது.
அதிலும் யதார்த்த ஞானம் மற்றும் அயதார்த்த ஞானம் என்று இருவிதமான ஞானம் உண்டு.எவ்விதம் பொருள் உள்ளதோ அவ்விதமே தோன்றும் எண்ணத்துக்கு யதார்த்த ஞானம்என்று பெயர். வெளியில் ஒரு பொருள் இருக்க, மனதில் வேறு எண்ணம் தோன்றினால்அதற்கு அயதார்த்த ஞானம் அல்லது விபரீத ஞானம் என்று பெயர்.
எனவே யதார்த்த ஞானத்துடன் இருத்தலே விவேகம் என்ப்படுகிறது.

விவேகத்தின் லக்ஷணம்
நித்ய அநித்ய வஸ்து விவேக:
எது நிலையானது, எது நிலையற்றது என்பது பற்றிய அறிவு விவேகம் எனப்படும்.
நிலையான மற்றும் நிலையற்ற இரண்டு முற்றிலும் வேறான பொருட்கள்
கலந்திருக்கின்றன. அவ்விரு பொருட்கள், ஜடமான உலகமும், உணர்வு சொரூபமான ப்ரம்மமும் ஆகும்.
ப்ரம்மம் நித்யமானது, உலகம் அநித்யமானது என்ற அறிவே விவேகம்.
இந்த அறிவின் அடிப்படையிலேயே பிற குணங்கள் உருவாகும். எனவே இதுவேவேதாந்தத்தின் முதல் படியாகவும், பிற மூன்று குணங்களுக்கும் விதையாகவும் அமைந்துள்ளது.
விவேகம் என்ற அறிவை நாம் இவ்வுலக வாழ்விலிருந்தே பெற வேண்டும்.
இவ்வுலக வாழ்வு நமக்கு விவேகத்தைக் கொடுத்திருந்தால் நாம் இவ்வுலகை நன்குபயன்படுத்தியிருக்கிறோம் என்று பொருள். எனவே நன்றாக விவேகம் வந்தவுடன் உலகை விட்டு விடுவோம்.

விவேகத்தின் மூலம் உலகின் மீது நமக்கு என்ன விதமான பாவனை ஏற்படும்?
உலகப் பொருட்களிடமிருந்து விலகும் தன்மை.
உலகின் அனைத்துப் பொருட்கள் மீதும் வைராக்யம் (பற்றற்ற தன்மை) எனும் பாவனை.
நித்யமான பொருளை அடையும் விருப்பம்.
உலகில் மேற்கொள்ளப்படும் செயல்கள் அனைத்தும் சாதனையேயன்றி சாத்யமில்லைஎன்கிற தெளிவு.

எந்த உபாயத்தின் மூலம் நிலையானது, நிலையற்றது பற்றிய அறிவு அடையப்படும்?
1. சாஸ்திரம் அல்லது ஸ்ருதி என்று அழைக்கப்படும் வேதாந்தம் அல்லது உபநிஷத்.
2. ஸ்ருதி சம்மத தர்க்கம் – உபநிஷத்துகளை மையமாகக் கொண்டு விளக்கும் தர்க்கம்.
3. கேவல தர்க்கம் – சுய அறிவைக் கொண்டு சிந்தித்தல். உ– ம். எதெல்லாம்
உறுப்புகளுடன் கூடியதோ அதெல்லாம் அழிவுக்குரியது.
4. அனுபவப் ப்ரமாணம் – நம் மற்றும் பிறரது அனுபவங்கள்.

இதில் அனுபவம் என்பது ஆராய்ந்து பார்க்கப்பட்டால் மட்டுமே அறிவைக் கொடுக்கும்.
ஆராய்ந்து பார்க்கப்படாத அனுபவம் விருப்பு, வெறுப்புகளையே வளர்க்கும்.

அனுபவத்தை ஆராய்ந்து பார்க்கும் மனதை அடைதல் எவ்வாறு?
மனதை சாத்விக குணப் ப்ரதானமான மனதாக மாற்ற வேண்டும்.
சாத்விக மனமே அனுபவத்தை ஆராயும் தன்மை கொண்டது.
சாத்விக மனம் அறிவைக் கொடுக்கும்.
ராஜஸ மனம் விருப்பு, வெறுப்பைக் கொடுக்கும்.
தாமஸ மனம் சோம்பேறித்தனத்தைக் கொடுக்கும்.

மனதை சத்வ குணப் ப்ரதானமாக மாற்றுவது எப்படி?
கீதையில் பகவான் சாத்விக குணம் சம்பந்தமான விஷயங்களைக் கூறுகிறார்.
அவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பயில வேண்டும்.
சாத்விக குணங்களாவன: சாத்விக பூஜை, சாத்விக ஸ்ரத்தை, சாத்விக ஆஹாரம் முதலியன.
ஸ்வாமி சித்பவானந்தரிடம் ஒரு முறை சாத்விக ஆஹாரம் பற்றிக் கேட்டதற்கு, “அளவாய்ச் சாப்பிட்டால் அது சாத்விக உணவு” என்றார்.
எனவே எந்தச் செயலுமே அளவுடன் இருந்தால் அது சாத்விகம் என்று அறிந்து கொள்ளலாம்.
விவேகத்தினால் விளையும் பலன் என்ன?
உலகம் நிலையற்றது என்ற அறிவால், இவ்வுலகின் மீது வைராக்யம் என்ற பாவனை ஏற்படும். எனவே வைராக்யம் என்ற அடுத்த குணத்துக்கு விவேகமே விதை.
நிலையான பொருளான பரமாத்மாவை அடைய வேண்டும் என்கிற ஆர்வம் –
முமுக்ஷுத்வம் – ஏற்படும்.

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.



சாதன சதுஷ்டயம்
1
ஓம் ஸஹனா அவது ஸஹனௌ புனக்து
ஸஹவீர்யம் கரவாவஹை
தேஜஸ்வினா வதீதமஸ்து மாவித் விஷாவஹைஹி
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி
சதுஷ்டயம் என்றால் நான்கினுடைய சேர்க்கை என்று பொருள். சாதன சதுஷ்டயம் என்றால் நான்கு சாதனைகளின் தொகுப்பு என்பது பொருள்.
வேதாந்தத்தின் முதல் மற்றும் முக்கியமான படி இது.
இந்த நான்கு சாதனைகளும் ஒரு மனிதன் தன் இறுதி இலக்கான மோக்ஷத்தை அடைவதற்கான அடிப்படைத் தகுதிகளாகும்.
சங்கரர் இந்த உலகிற்கான லக்ஷணம் கொடுக்கையில், சாதன சாத்ய சொரூபம் ஜகத் என்றார். எனவே இவ்வுலகில் அனைத்து விஷயங்களுமே வெவ்வேறு சாதனைகளின் மூலம் அடையப் பெறும் சாத்யங்களின் தொகுப்பாகவே உள்ளன.


சாத்யம் என்றால் என்ன?
சாதனேன ஆப்யம் சாத்யம்.
ஒரு சாதனையினால் அடையப்படுவது சாத்யம்.
வாழ்வில் நாம் எதை அடைய வேண்டுமென்றாலும் சாதனையின் மூலமாகத்தான் அடைய முடியும். சாதனையின்றி சாதிப்பார் இல்லை என்பது முதுமொழி.

சாத்யத்தின் மற்றுமொரு விளக்கம் – எது நம்மால் தேர்ந்தெடுக்கப்படுகிறதோ அது சாத்யம் எனப்படுகிறது. இதற்குப் புருஷார்த்தம் என்று பெயர்.
சாத்யத்தை தேர்ந்தெடுப்பதில் நமக்கு CHOICE உண்டு. ஆனால் சாதனையில் நமக்கு CHOICE கிடையாது.

சாதனை என்றால் என்ன?
எது நம்மை சாத்யத்தில் சேர்க்குமோ அது சாதனை எனப்படும்.
சாத்யம் ஒன்றாக இருப்பினும் சாதனை பலவாக இருந்து அவற்றின் தொகுப்பே அந்த சாத்யத்தைக் கொடுக்கும்.
சாதனைகள் நேரடி சாதனை (சாக்ஷாத்) மற்றும் அமுக்கிய சாதனை என்று
இரு வகைப்படும்.
ஹோமகுண்டத்திற்க்கு செங்கல் நேரடி சாதனை என்றால்,அதைச் சுமந்துவரும் கழுதை அமுக்கிய சாதனை.



எந்த சாத்யத்தை அடைவதற்காக இந்த நான்கு சாதனைகளும்?
மோக்ஷம் என்ற சாத்யத்தை அடைவதற்காக. இந்நான்கு சாதனைகளும் அதை
அடைய நம்மைத் தகுதிப்படுத்தும்.
எது சாதனையின்றி சாத்யமாகவே உள்ளதோ அது பரமசாத்யம்(ULTIMATE GOAL) எனப்படும். அதற்கு மேல்அடைவதற்கு வேறு சாத்யமே இல்லை.



மோக்ஷம் அல்லது முக்தி
மோக்ஷம் என்பது மனதின் முழுநிறைவு. ஆழ் மனதில் உள்ள நிறைவு.
வயிற்றுக்கு வரும் பசி போல மனதுக்கு வரும் பசியே ஆசை. மனதின் ஒரு ஆசையைத் தீர்த்தால் மற்றோர் ஆசை பிறக்கிறது. நிறைக்க முடியாத இப்படிப்பட்ட மனதை நிறைத்தலே மோக்ஷம் எனப்படுகிறது.
மோக்ஷம் என்பதற்குப் பிறிதொரு பொருள் பந்தநிவிர்த்திஹி அதாவது பந்தத்தில் (கட்டுகளில்) இருந்து விடுபடுதல்.
பந்தம் என்பது நம் மனதில் இருக்கிற ஒரு பாவனை (Self Judgement)
நம்மைக் குறித்து நாம் கொண்டிருக்கும் முடிவே பந்தம் எனப்படும்.
அஹம்தா மமதா பந்தஹ நான் எனது என்னும் எண்ணமே பந்தம்.
நமக்குத் தொடர்பில்லாத ஒன்றைத் தொடர்பு படுத்திக் கொள்வதே பந்தம்.
நான் அல்லாத ஒன்றை நான் என்று நினைப்பதே பந்தம்.

பந்தம் எப்படி வந்தது?
எதை நீ, நீ என்று நினைக்க வேண்டுமோ, எதை நீ, உனக்கு அல்லாதது என்று நினைக்க வேண்டுமோ அது உனக்குத் தெரியவில்லை.
எனவே நீ அல்லாததை நீ என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்.
இதற்குக் காரணம் அறியாமை. அஞ்ஞானம்.


எதைப் பற்றிய அறியாமை?
நான் யார் என்பதைப் பற்றிய அறியாமை.
எனவே நான் யார் என்கிற அறிவை அடைய வேண்டும்.
அந்த அறிவை, அறிவைக் கொடுக்கும் கருவியின் மூலமே அடைய வேண்டும்.
அறிவைக் கொடுக்கும் கருவிக்கு ப்ரமாணம் என்று பெயர்.
ப்ரமா – ஞானம், கரணம் – கருவி.
ப்ரமாணங்களில் பல வகை உண்டு. அறிவை நேரடியாகக் கொடுக்கும் கருவிக்கு ப்ரத்யக்ஷப் ப்ரமாணம் என்று பெயர். யூகத்தின் மூலம் அறிவைக் கொடுக்கும் கருவி அனுமாணப் ப்ரமாணம் எனப்படும்.
சொற்கள் மூலம் அறிவைக் கொடுக்கும் கருவிக்கு ஷப்தப் ப்ரமாணம் என்று பெயர்.
உபநிஷத் அல்லது வேதாந்தம் ஒரு ஷப்தப் ப்ரமாணம் ஆகும்.
வேதாந்தோ நாம உபநிஷத் ப்ரமாணம்
வேதாந்தம் என்பது உபநிஷத் ரூபமாக இருக்கும் ப்ரமாணம்.

வேதாந்தம் எதைப் பற்றிய அறிவைக் கொடுக்கிறது?
அழியாத, நித்யமான பொருளைப் பற்றிய அறிவைக் கொடுக்கிறது.
கண்ணால் காணும் அனைத்தும் அழிவுக்குறியது என்று சாஸ்திரம் கூறுகிறது.
அழியாத ஒரே ஒரு பொருள்தான் உண்டு. அதை அறியவே உபநிஷத் துணை புரிகிறது.

அழியாத பொருளை அறிவதால் என்ன பலன்?
அழியாத பொருள் பற்றிய அறிவை அடைந்தால், அந்த அழியாத பொருளையே அடையலாம்.
அறிவைக் கொடுக்கும் கருவியைப் பயன் படுத்தும் போது அது அறிவைக் கொடுக்க
வேண்டுமெனில் அதற்கு சாதன சதுஷ்டய சம்பத்தி எனப்படும் நான்கு பண்புகளும் அவசியம்.

சாதன சதுஷ்டய சம்பத்தி எனப்படும் நான்கு பண்புகளும் யாவை?
1. விவேகம்
2. வைராக்யம்
3. ஷமாதி ஷட்க சம்பத்திஹி (இது ஆறு பண்புகளின் தொகுப்பு ஆகும்)
அவை, ஷமம் – மனக்கட்டுப்பாடு
தமம் – இந்த்ரியக் கட்டுப்பாடு
உபரமம் – விலகியிருத்தல், கடமையைச் செய்தல்
திதிக்ஷா – பொறுமை, சகித்துக் கொள்ளுதல்
ஸ்ரத்தா – நம்பிக்கை
ஸமாதானம் – மன ஒருமுகப்பாடு
4. முமுக்ஷுத்வம்
இந்த நான்கு சாதனைகளும் சம்பத்தி (செல்வம்) எனப்படும்.
இந்த நான்கு சாதனைகளின் இருப்பிடம் நமது மனம். எனவே இது ஒரு அகச்செல்வம் ஆகும்.
இந்நான்கு பண்புகளும் நம்மிடம் குறைவாக இருப்பதால், இவையே நமக்கு முதலில்சாத்யமாகி விடுகின்றது. அதாவது, சாதன சதுஷ்டயம் சாத்ய சதுஷ்டயமாகி விடுகிறது.இந்நான்கு சாதனைகளைப் பற்றி விரிவாகவும், இந்த சாதனைகள் ஒவ்வொன்றின் லக்ஷணம், அவற்றை அடையும் உபாயம் மற்றும் அவற்றை அடைவதால் உண்டாகும் பலன் ஆகியவை பற்றி பின்வரும் பக்கங்களில் விரிவாகக் காணலாம்.

30 செப்டம்பர், 2009

புருஷார்த்தம்




ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் மிகவும் தேவைப்படும் விஷயம் மனநிறைவு.
அம்மனநிறைவை நாடித்தான் அவன் பல்வேறு முயற்சிகளை தன் வாழ்வில் தொடர்ந்து
மேற்கொள்கிறான். அம்முயற்சிகள் மூலம் அவன் அடையும் பொருட்கள் அவனுக்கு முழுமையான் மனநிறைவைத் தரும் என்று நம்புகிறான். ஆனால் அவனது அனுபவமோ அதற்கு நேர்மாறாக இருக்கிறது.

ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நான்கு விஷயங்களை அடைவதற்கு முயல்கிறான்.
அவை, அறம், பொருள், இன்பம், வீடு. இவற்றில் பொருள் என்பது நம் வாழ்விற்குத் தேவையான அடிப்படைத் தேவைகளைக் குறிக்கிறது. அடிப்படைத் தேவைகள் பூர்த்தி அடைந்தவுடன் அவன் இன்பத்தை நாடுகிற முயற்சியில் ஈடுபடுகிறான்.

தான் அடைந்த பொருள் மற்றும் இன்பத்தை அனுபவிப்பதற்கான புண்ணியம் இருந்தால் மட்டுமே ஒருவனால் அவற்றை அனுபவிக்க முடியும் என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. இல்லையெனில் அவை இருந்தும் அவற்றை அனுபவிப்பதற்கான உடல்,மனம் மற்றும் சூழ்நிலைகள் அவனுக்கு வாய்க்காது.

புண்ணியத்தை அடைய வேண்டுமெனில் ஒருவன் தன் வாழ்வினை தர்மப்படி அமைத்துக் கொள்ள வேண்டுமென்று சாஸ்திரம் கூறுகிறது. தர்ம வாழ்க்கை வாழ்வதற்கான வழிமுறைகளை வேதத்தின் முதல் பகுதி கூறுகிறது. இது கர்மகாண்டம் என்று அழைக்கப்படுகிறது. இதில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தி நம் வாழ்விற்குத் தேவையான பொருள் மற்றும் இன்பத்தை அடைந்து கொள்ளலாம்.
பொருள், இன்பம் இவற்றை எவ்வளவுதான் அனுபவித்தாலும் முழுமையான மனநிறைவு என்பது வாழ்வில் கிடைப்பதில்லை.
முழுமையான மன நிறைவை பொருட்கள் மூலமோ, இன்பத்தை அனுபவிப்பதன்
மூலமோ மன நிறைவு அடைய முடியாத மனிதனுக்கு வேதம், வீடு என்ற ஒரு விஷயத்தை அறிமுகப்படுத்துகிறது. வீடு என்றும் மோக்ஷம் என்றும் கூறப்படும்
இதை அடைவதற்கு உண்டான வழிமுறைகளையும் நமக்கு வேதமே தருகிறது.

மேலும் வாசிக்க