16 ஆகஸ்ட், 2026

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலையிலிருந்து ஒரு நூல்



எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் சிறுகதைகளின் தொகுப்பு ஒன்று ஆங்கிலத்தில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக அச்சகம் வழியாக வெளிவந்துள்ளது. இந்த நூலில் நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அ.முத்துலிங்கம் அவர்களின் ஐந்து கதைகள் இடம்பெற்றுள்ளன. எகேலுவின் கதை, தீர்வு, புதுப்பெண்டாட்டி, இலையுதிர்காலம், ஆதிப்பண்பு ஆகிய கதைகள் அவை. இந்த ஐந்து கதைகளும் சென்ற 2023-2024 காலகட்டத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அமெரிக்க இலக்கிய இதழ்களான ஸ்பில்வோர்டு பிரஸ், டிஃபங்க்ட், கான்சிக்வென்ஸ் ஆகியவற்றிலும் மற்றும் பிரிட்டிஷ் இலக்கிய இதழான இம்ப்ஸ்பையர்டு இதழிலும் வெளிவந்தன. இவற்றில் கான்சிக்வென்ஸ் இதழ் போரின் கொடுங்கரங்களால் நசுக்கப்படும் மக்களின் கதைகளைப் பதிப்பிக்கும் இதழாக வெளிவந்தது. அதில் அ. முத்துலிங்கம் அவர்களின் “புதுப்பெண்டாட்டி” கதை வந்தது.

பொதுவாக அமெரிக்க, ஆங்கில இலக்கிய இதழ்களுக்குக் கதையோ, மொழிபெயர்ப்பையோ அனுப்பினால் அது பிரசுரத்துக்குத் தகுதியாக உள்ளதா, இல்லையா என்பதை அறிவிக்கவே நாலிலிருந்து ஆறு மாதங்கள் எடுத்துக் கொள்வார்கள். என்னுடைய கதைகளுக்கும், நான் மொழிபெயர்த்த பல கதைகளுக்கும் அவை வெளிவருவதற்கு நான் மாதக்கணக்கில் காத்துக்கொண்டிருந்திருக்கிறேன். ஒரே நேரத்தில் பல்வேறு இதழ்களுக்கு படைப்புகளை அனுப்பியிருக்கிறேன். ஒரு இதழ் நிராகரித்தால் இன்னொன்று அதை வெளியிட்டுவிடாதா என்ற எதிர்பார்ப்புதான். “சப்மிட்டபிள்” என்ற இணையப்பக்கத்தின் வழியாக எண்ணற்ற இதழ்களுக்கு நம் படைப்புகளை அனுப்ப முடியும். என்னுடைய பக்கத்தில் பார்க்கும்போது படைப்புகள் நிராகரிக்கப்பட்டதன் எண்ணிக்கை குறைந்தது ஐம்பது முறையாவது வரும். ஒவ்வொருமுறை நிராகரிக்கப்படும்போதும் படைப்புகளை மெருகேற்றுவது குறித்து எதையாவது கற்றுக்கொண்டேயிருப்பேன். புனைவெழுத்திலும் சரி, மொழியாக்கத்திலும் சரி. 



அ. முத்துலிங்கம் அவர்களின் கதைகளை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்பிய எந்த இதழும் இதுவரை ஒருமுறைகூட நிராகரித்ததில்லை என்பதை இப்போது உணரும்போது என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை. அவருடைய சிறுகதைகள் வெவ்வேறு களங்களையும், ஆவலூட்டும் கதைமாந்தர்களையும், ஒரு நல்ல சிறுகதைக்குரிய இலக்கணத்தையும் கொண்டவை. அவருடைய எந்தக்கதையை வாசித்தாலும் அது நினைவில் நெடுங்காலம் நிற்கும். இன்னொருவருக்கு அந்தக்கதையை அழகாகச் சொல்லிவிட முடியும். மெல்லிய பகடி எல்லாக் கதைகளிலும் இழைந்தோடும். பலகதைகளை அவர் எழுதியே சில பத்தாண்டுகள் இருக்கும். ஆனால் அவற்றை ஆங்கிலத்தில் வெளியிடும் இதழ்கள் அக்கதைகளின் புதுமையாலும், அவற்றின் தனித்துவமான இலக்கிய அழகியலாலும் கவரப்பட்டும்தான் அவற்றை உடனடியாகப் பதிப்பித்திருக்கின்றன என்றே எண்ணத்தோன்றுகிறது.

2023 ல் நான் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் கதைகளை தொடர்ந்து மொழிபெயர்த்துக் கொண்டிருந்தேன். அவற்றில் சில அமெரிக்க இலக்கிய இதழ்களில் வெளியாயின. அவற்றை வாசித்துவிட்டு அ.மு அய்யா அவரே என்னை அலைபேசியில் அழைத்தார். ஜெ கதைகளின் இலக்கியச்சுவையை குன்றாமல் குறையாமல் நான் ஆங்கிலத்திலும் கொண்டு வந்திருப்பதாகப் பாராட்டினார். சொற்றொடர்களை இணைத்தும், பிரித்தும் ஆங்கிலத்தில் உருவாக்க நான் எடுத்துக்கொண்டிருந்த சுதந்திரத்தை அவர் பாராட்டியதும்தான் எனக்கே என்னுடைய மொழிபெயர்ப்பு முறை மீது மிகுந்த நம்பிக்கை வந்தது. புனைவெழுத்துக்குச் செல்வதற்கு முன்னால் ஒரு பாலமாகத்தான் நான் மொழியாக்கப் பணியைக் கைக்கொண்டிருந்தேன். ஆனால் “என் சில கதைகளை உன்னால் மொழிபெயர்க்க இயலுமா?” என்று அவர் கேட்டுக்கொண்டபோது மறுக்க இயலவில்லை. 

அ.மு அய்யா தன் கதைகளின் மொழிபெயர்ப்பில் மிகுந்த கவனம் செலுத்துபவர். நான் ஒவ்வொரு கதையையும் மொழிபெயர்த்து அவருக்கு அனுப்புவேன். அவர் அதை வரிக்கு வரி வாசித்து விட்டு எந்தெந்த இடங்கள் நன்றாக வந்துள்ளன, எங்கெல்லாம் திருத்தங்கள் தேவை என்று அறிவுறுத்துவார். அது மட்டுமல்ல, கனடிய இலக்கிய இதழ் ஒன்றில் பிரதிமேம்படுத்துனராகப் பணிபுரிந்த ஒருவரிடம் நான் மொழிபெயர்த்த கதைகளைக் கொடுத்து அவரிடம் கருத்துக் கேட்பார். முதலிரண்டு கதைகளை அவர் திருத்திக் கொடுத்தார். ஆனால் அவர் திருத்திய இடங்கள் மொத்தம் ஐந்துக்கும் மேலில்லை. மூன்றாவது கதையிலிருந்து, “இந்த மொழிபெயர்ப்பாளர் கதைகளில் திருத்துவதற்கென்று எதுவுமேயில்லை. நீங்கள் எனக்கு வீணாகப் பணம் கொடுக்கிறீர்கள்,” என்று சிரித்துக்கொண்டே கூறினாராம்.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக பிரசுரத்துக்கு இந்தக்கதைகளை அனுப்பி ஓர் ஆண்டாக்கும் மேலாகிறது. ஒரு வாரம் முன்பு அ.மு அவர்களிடம் பேசியபோது இந்த நூல் வெளியாகி விட்டது என்று சொன்னார். “எனக்கு ஒரு பிரதி அனுப்பியிருக்கிறார்கள். மொழிபெயர்ப்பாளர் என்ற முறையில் உங்களுக்கும் பிரதி அனுப்ப வேண்டும். அவர்களுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்,” என்றார். அவர் குரலில் குழந்தையின் குதூகலம்! “இப்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். சொல்வனம் இதழில் அத்வைத வேதாந்தம் குறித்த ஒரு தொடரை பதினேழு பகுதிகள் எழுதி முடித்துவிட்டேன் என்றும், விரைவில் என்னுடைய முதல் ஆங்கில நாவலுக்கான பணிகளில் இறங்குவேன் என்றும் அவரிடம் சொன்னேன். “அய்யா, இப்போதும்கூட உங்களுக்குள் இருக்கும் அந்தக் குழந்தையை நீங்கள் தொலைத்து விடாமல் பாதுகாத்துக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கும் என்னுள் உறையும் அந்தக் குழந்தையைக் காத்துக்கொள்ள வேண்டும். அதற்கான உந்துதலையும், உத்வேகத்தையும் நான் உங்களிடமிருந்துதான் பெற்றுக்கொள்கிறேன்,” என்று அவரிடம் சொன்னேன். 


A Primal Quality in impspired

The Fall in Defunct Magazine

The Story of Ekolu in Spillwords Press

Dilemma in Spillwords Press


 

மேலும் வாசிக்க