இரு கவிதைகள்
1. செவ்வகத்தைச் சதுரம் என்றே கொள்க. இரண்டிலும் எதிரெதிர் பக்கங்கள் இணையானவை அளவில் சமமானவை. நான்கு மூலைகளிலும் பாகை தொண்ணூறுதானே. ஓரிணை மற்றோரிணையவிட நீண்டிருப்பது காலத்தின் அவசியம் கருதியே. ஓரிணை நீள்வதின் தேவை அறிந்து காலந்தோறும் குறுக்கி வாழந்தது மற்றோரிணை. நவீன சமத்துவம் கருத்தில் கொண்டு இனி செவ்வகத்தைச் சதுரம் என்றே அழைத்து வைப்போம். 2. தண்ணீரினுள் அமிழும் பந்து தலை சிலுப்பி மேலே எழும்பும். காற்றடைத்த பொருளுக்குத் தண்ணீருடன் உறவு இல்லை. மேற்பரப்பில் வழியும் நீரை வளிக்காற்று உண்டு விடும். பந்துக்கில்லை பந்தமும் பாசமும். பந்துக்குள்ளும், வெளியும் ஒரே காற்றுதான். தோல் கிழிந்தால் வேற்றுமை அழியும். பந்து என்பது காற்றேதான்.