11 ஏப்ரல், 2026

துருவேறிய சிறகு

 

சு. வெங்கட்டின் நீல வியாபகம் சிறுகதை குறித்து

அன்புள்ள வெங்கட்,

நீலவியாபகம் கதை அகிலாண்டம் பிளாட்பாரத்தில் உருண்டு நிற்கும் ஒரு கொய்யாப்பழத்த்தை எடுத்து உண்ணலாமா என்று யோசிப்பதில் துவங்குகிறது. உணவு கதை நெடுக அவரைத் தொடர்ந்தபடியே இருக்கிறது. பாரதியும், நாஞ்சில் நாடனும், ஜெயமோகனும் தங்கள் கலையில் நிகழ்த்திக்காட்டிய ஒரு அறச்சீற்றம்: உணவுண்ணல் என்பது ஒவ்வொரு உயிரின் அடிப்படை உரிமை. அதை எவரும் மறுக்கலாகாது. அதை நீங்களும் உங்கள் கதையில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறீர்கள். மற்ற படைப்பாளிகளைப் போலன்று, மிக மவுனமான சொல்லல் மூலம், மிக நேர்த்தியான சித்திரங்களைத் தீட்டுவதன் மூலம் வாசகனிடம் அந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள். உணவு நிமித்தம் ஓர் உயிரை இழிவு செய்தல் தகுமா? இதைத்தான் நான் இந்தக் கதையிலிருந்து புரிந்து கொண்டேன். இந்தப் புரிதல் தவறாகக் கூட இருக்கலாம்.

மிகச் சிறந்த கதைகளை மட்டுமே எழுதுவேன் என்று கங்கணம் கட்டியிருக்கிறீர்கள் போல. உங்கள் வசீகரமான மொழி கதையின் ஓட்டத்தின் மீது ஒரு கனத்த போர்வையை போல வியாபித்து அதன் நடையை மென்மையாக்கி விடுகிறது. பெரும்பாலும் விவரணைகளாலும், சொல்லிச் செல்லுதலாலும் நகரும் கதை. பாத்திரங்கள் ஒன்றிரண்டு வரிகளே உரையாடிக் கொள்கின்றன. அதிலும் சில இந்திச் சொற்கள். கதை சொல்ல வரும் விஷயத்துக்கு இந்த மாதிரியான கூறுமுறை மிகப்பொருத்தம்.

அகிலாண்டத்தோடு அவனது வாழ்க்கையின் முன்னும், நிகழ்காலத்துக்கும் மாறிமாறிப் பயணிக்கிறோம். சராசரி வாழ்க்கைக்குச் சரிப்பட்டு வராதவர் அவர். அதே நேரம் இந்த உலகம் போஷித்துக் காக்க வேண்டிய மேதையும் அல்லர். சுருக்கமாகச் சொன்னால் சோம்பித் திரியும் சோம்பேறி. சோறு உண்டு விட்டு மனம் போனபோக்கில் திரிபவர். குடும்பத்தைக் கண்டுகொள்ளாதவர். அதனாலேயே மனைவி, மகனிடம் ஏச்சும் பேச்சும் வாங்குபவர். இவர் மாதிரியான மனிதரை உங்களது இலக்கியம் மையக் கதாபாத்திரமாக்கியிருக்கிறது. சொல்லப்போனால் சமுதாயத்தால் கைவிடப்பட்டவர்களின் கடைசிப்புகலிடம்தானே இலக்கியம்?

சில சொற்றொடர்கள் சட்டென்று வாசிப்பை நிறுத்தி யோசிக்க வைத்தன; மெல்லிய புன்னகையை வரவழைத்தன.

புதர்களுக்குப் பின்னால் முக்காடிட்டு வாய்மூடி நின்ற பெண்கள் வெறுப்பாய் ரயிலையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

என்பது ஒரு உதாரணம். இந்த வாக்கியத்தின் வலி கொஞ்சம் நிறுத்தி யோசித்தால்தான் உறைக்கும். ஒரு கலைஞனால் மட்டுமே எழுதக்கூடிய வரி.

எங்கிருந்தோ வந்து ரயிலுடன் சேர்ந்துகொண்ட சாலையில் பேருந்து ஒன்று சிறு துள்ளலுடன் சென்றுகொண்டிருந்தது. இரண்டிலும் பயணிப்பவர்களில் சிலர் இனி எப்பொழுதும் நிகழாத சந்திப்பை ஒருவருக்கொருவர் நிகழ்த்திக்கொண்டனர்.

என்று இன்னொரு கவித்துவமான இடம். திருச்செந்தாழையை நினைவுபடுத்தும் எழுத்து. அவரை வாழும் தமிழ் விழாவில் சந்தித்தேன். ஒரு அரைநாள் அவரோடு நியூயார்க் தெருக்களில் உரையாடிபடியே சுற்றினோம். எழுத்தாளனாக அறிந்திருந்த அவர் நண்பராகப் பரிச்சயமாகி பிரிகையில் ஒரு சகோதரனைப் போலாகி விட்டார். இத்தனைக்கும் நாங்கள் அவர் எழுதிய கதையைப் பற்றிக்கூடப் பேசவில்லை.

இவர்களை இனி தன்னால் கரை சேர்க்க முடியாதென்றெண்ணி அங்கம்மா பகடைகளைத் தூரப்போட்டாள்.

என்று இன்னொரு இடத்தில் எழுதுகிறீர்கள்

எழுத்தாளன் என்பவன் ஒரு பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக எழுதுபவனல்ல. அவன் ஒரு குறிப்பிட்ட பிரச்னையைச் சரியான சூழ்நிலையில் வைத்து சித்தரித்து அதன் மகத்துவத்தை உணரச் செய்வதுதான் அவன் வேலை என்று பொருள்படும்படி இந்த வாழும் தமிழ் விழாவில் பேசிக்கொண்டிருக்கும்போது விவேக் ஆங்கிலத்தில் ஒரு வாக்கியத்தைக் கூறினார். இந்தக் கதையின் பெரும்பாலான பகுதிகளில் நீங்கள் அந்தச் சித்திரத்தை துல்லியமாக வரைந்து காட்டியபடியே செல்கிறீர்கள். என் சிறுகதைத் தொகுப்புக்கு நான் எழுதிய முன்னுரைக்கு “புனைவெனும் அறாக்கனவு” என்று தலைப்பிட்டிருந்தேன். புனைவு என்பது ஒரு துல்லியமான, அறாத கனவுதான். அது துல்லியமாகவும், அறாத்தன்மையோடும் இருப்பதற்காக மெனக்கெட வேண்டியதுதான் கதைசொல்லியின் வேலை. அந்த வேலையை மிகத்திறம்படச் செய்திருக்கிறீர்கள். 

தான் கட்டியிருந்த வேட்டியின் நுனியில் அவர் பதித்துச் சென்ற செருப்பின் அடையாளத்தைத் தட்டிக் கொண்டே எழுந்து வெளியே எட்டிப் பார்த்தார்.

நிலவில் ஒளிரும் தார்ச் சாலையெனத் தூரத்திலிருந்த தொழுவத்தில் மினுக்கும் கரிய உடலுடன் எருமைகள் வரிசையாக அமர்ந்திருந்தன. எருமைகளின்  எண்ணிக்கையை அகிலாண்டம் அவ்விருட்டில் மனதுக்குள் கணிக்க முயன்றார். ஓரிடத்தில் திரள்வதும் சட்டெனக் கலைவதுமாய் இருள் அவரை குழப்பியதில் எண்ணிக்கை ஒன்றுபோல இல்லை.

குடிசைக்குள் மண் சுவர்கள் சிவந்து அனலில் நகர்வது போல இருந்தது.

எளிமையாகச் சொன்னால் உங்கள் கேமரா மிக ஷார்ப்பாக வேலை செய்திருக்கிறது.

இந்த அகிலாண்டத்தை எப்படிப் புரிந்து கொள்வது? அவர் ஏன் இப்படி இருக்கிறார்? 

“அங்க தான் அந்தோ கிழக்கு பக்கம் ரெண்டு நட்சத்திரம் பக்கத்து பக்கத்துல இருக்கு பாருங்க அது எங்கிருந்தோ வந்திருந்தது. அப்புறம் எங்க போனாலும் ஜோடியா தான் வருதுங்க”

“அப்படி இருக்கிறது கூட நல்லாத்தான் இருக்கு டா. எதுக்கும் கவலைப்படாம, யோசிக்காம அப்படியே போய்கிட்டே இருக்கிறது. எனக்கும் அப்படியெல்லாம் எல்லாரையும் ஒருநாள் பார்க்கணும்னு ஆசை இருக்குடா”, என்று சொல்லிப் பெரு மூச்சு விட்டுக்கொண்டே கீழே அமர்ந்திருந்த அந்தக் கைதியைப் பார்த்தார்.

அவர் ஓர் எளிய உயிர். ஒரு சிறுமியுடன் இணைந்து சட்டென்று குழந்தையாக மாறி, மரத்தின் கிளைகளில் பறவைகள் கட்டிய கூடுகளை ஆராய முடியும். அவர் வெறுமனே “இரு”க்கிறார். இது ஒரு ஞானியின் நிலை. ஆனால் அகிலாண்டத்துக்கு உதவாக்கரை பட்டம் மட்டும்தான். 

அப்புறம் கதையில் கொஞ்சம் டிடாக்டிக் தன்மை எட்டிப்பார்க்கிறது. இது குறையென்று இல்லை. இது இதுதான் என்ற போதம் இருந்தால் அதையும் கையாளலாம்; நான் அப்பகுதியையும் ரசித்தேன். 

ஒவ்வொரு வீட்டிலும் சிறிதும் பெரிதுமாகத் துருப்பிடித்த ஏதோ ஒன்று இருக்கிறது. ஒரு காரணத்திற்காகச் செய்யப்பட்டு உலகத்திற்கு வரும் அது, ஒளி இழந்து வேறொன்றாக மாறிவிடுகிறது. புதியதாக இருக்கும்போது அதற்குத் தான் எத்தனை மதிப்பு. மிகக் கவனமாக எடுப்பதும், கையாள்வதும் என அதன் மீது எத்தனை அக்கறை. ஏதோ ஒரு கட்டத்தில் உதாசீனப்படுத்தப்பட்டு வீட்டிற்குள் ஒரு மூலையில் நிறுத்திவிட, மெல்ல அதற்குள் வேறு ஒன்று குடிகொண்டு அரித்துவிடுகிறது. ஒரு சிலவற்றைத் துரு நீக்கிச் சரி செய்துவிடலாம். சிலவற்றை தீயிலிட்டே வேறொன்றாக்க முடியும். அது ஒரு சுழற்சி போல. அழிவே இல்லாமல் ஒன்று மற்றொன்றாக மாறிக்கொண்டேயிருக்கிறது என்று நினைத்துக்கொண்டான்.

திருப்புறம்பியம், திருப்பனந்தாள், திருவிடைமருதூர் என்று ஊர்பெயர்கள் ஒவ்வொன்றும் ஒரு மெல்லிய காலமயக்கத்தை அளிக்கின்றன. ஏதோ காலத்தின் பின்சென்று புராதன கிராமங்களின் பெயர்களைக் கேட்பதைப் போல. ஆனால் இவை இன்றும் இருக்கும், இயங்கும் ஊர்கள். அகிலாண்டத்தைப் போலவே அவையும் ஒரு எழுத்தாளன் கைபட்டுத்தான் தங்கள் இருப்பை நிரூபிக்க வேண்டியுள்ளது.

கதையின் இறுதிப்பகுதியை சற்றே வேகமாகச் சொல்லிச் சென்றதுபோலிருந்தது. துருப்பிடித்த சிறகு துருவேறிய இரும்பில் விழுந்து பறவையின் சிறகொடிந்த ஒலியை எழுப்புவது அபாரமான கற்பனை, படிமம்.

வாழ்த்துக்கள் வெங்கட்.








12 ஜனவரி, 2026

நுண்பொருள் காண்பது அறிவு


நுண்பொருள் காண்பது அறிவு

அத்வைதம்: அகவிடுதலைக்கான பயணம் என்ற தலைப்பில் நான் எழுதி வரும் வேதாந்தம் குறித்த தொடரின் மூன்றாவது பகுதி சொல்வனம் இதழில் வெளியாகியுள்ளது. எந்த ஒரு அறிவையும் ஓர் அறிவைக் கொடுக்கும் கருவியால் மட்டுமே அறிய இயலும். அறிபவனாகவே இருக்கும் என்னை எந்தக் கருவியால் அறிந்து கொள்ள இயலும்? இப்பகுதியில் அறிவைக் கொடுக்கும் கருவிகளான பிரமாணங்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. பிரமாணங்கள் ஆறுவகை. அத்தனைப் பிரமாணங்களையும் பகுதி மூன்று மற்றும் நான்கில் விளக்கப்படும்.

6 ஜனவரி, 2026

செயற்பாலது ஓரும் அறன்

 அத்வைதம்: அகவிடுதலைக்கான பயணம் என்ற தலைப்பில் சொல்வனம் இதழில் நான் எழுதி வரும் வேதாந்தக் கட்டுரைத் தொடரின் இரண்டாம் பகுதி வெளியாகியுள்ளது. எதற்காக ஒருவர் அத்வைத தத்துவத்தைக் கற்க வேண்டும் என்ற கேள்விக்கான விடையாக இந்தப் பகுதி அமைந்துள்ளது.




26 டிசம்பர், 2025

“வானப்ரஸ்தம்” சொல்வனம்- புனைவு வனம் நிகழ்வில்

 



என்னுடைய சிறுகதை “வானப்ரஸ்தம்” குறித்து நண்பர்கள் பாலாஜி ராஜூவும், விவேக்கும் சொல்வனம்- புனைவு வனம் நிகழ்வில் கருத்துரையாடினார்கள். நானும் கலந்து கொண்டு என் கருத்துக்களையும், அவர்களது கேள்விகளுக்கான பதில்களையும் அளித்தேன். பாலாஜி ராஜூ நிறைய கவிதைகளையும், அண்மைக்காலமாக சிறுகதைகளையும் எழுதி வருகிறார். விவேக் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சிறுகதைகள் எழுதி வருகிறார். அமெரிக்க இதழ்களில் அவரது கதைகள் வெளியாகி இருக்கின்றன. மேலைத்தத்துவத்திலும், மேலை இசையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டு கற்று வருபவர். அது குறித்து அவர் எழுதும் கட்டுரைகள் ஆழமானவை. இருவரும் கலந்து கொண்டு என் கதை குறித்து அலசியது எனக்கு மகிழ்ச்சி. அவர்களுக்கு நன்றி. நிகழ்வை ஏற்பாடு செய்த பாஸ்டன் பாலா, நிர்மல் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.


20 டிசம்பர், 2025

பாலாஜிராஜூவின் “எழுகை”

 பாலாஜிராஜூவின் “எழுகை”





அன்புள்ள பாலாஜி,

எழுகை கதை கொடுத்த அனுபவம் அலாதியானது. கிறிஸ்துமஸ் காலமும், பனியும் நம்மைச் சூழ்ந்து கொள்கின்றன. சாண்டாவை விற்கும் அந்த மர்ம மனிதரும், கதை சொல்லியும் சந்திக்கும் புள்ளி கவித்துவமானது மட்டுமல்ல, குறியீட்டுத் தன்மை கொண்டதும் கூட. முதலில் ஒரு சிறுகதையாக இது மிகுந்த அழகுணர்ச்சியுடனும், கவித்துவத்துடன், மாசு மருவின்றி எழுதப்பட்டிருக்கிறது என்பதைச் சொல்லி விடுகிறேன். கதை சொல்லியின் மனதில் இருக்கும் அந்தச் சிறிய பிரச்னை “எட்டு வயது லிவோனா இன்னமும் சாண்டாவை நம்புகிறாள்” என்பது. ஆனால் அவனது உண்மையான பிரச்னையாக நான் பார்ப்பது “சிறு வயதில் கிறிஸ்துமஸ் தினத்தையும் எனக்கு வரும் பரிசுகளையும் எதிர்பார்த்துக் காத்துக்கிடந்த நாட்கள், கடந்த கால நினைவுகளாகக் கூட என்னில் எழுவதில்லை” என்பதுதான். இதுதான் இந்தக் கதையின் அடி நாதம். பிரச்னை லிவோனாவுடையது அல்ல, கதை சொல்லியுடையது. வளர்ந்து முதிர்ந்தபின்னர் சிறு குழந்தையின் உற்சாகமான, சிலிர்ப்பூட்டும் இதயத்தை மீட்டெடுப்பது எவ்வாறு என்பதுதான் கதையின் கேள்வி. அந்தக் கேள்விக்கான விடையாக, சற்றே அந்தப்பக்கம் எட்டிப்பார்க்கும் வாய்ப்பு கதை சொல்லிக்குக் கிடைத்திருக்கிறது.

“இது நம்பிக்கை சார்ந்த சம்பிரதாயம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறாய். நாம் இருவரும் நம்முடைய பால்ய காலத்துக்கு திரும்புவதற்கான அழகிய வாய்ப்பு இது. இந்த மாபெரும் நாடகத்தில் நாம் பங்கெடுத்து நடிப்பதில் பெரும் உவகையிருக்கிறது, நம்மை மறந்து ஒன்றில் ஈடுபடுவதன் மாயம் இருக்கிறது. அது ஏன் உனக்குப் புரிவதில்லை?” என்ற எமிலியின் கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை 

இதற்கான வாய்ப்புகள் நம்முன்னே எப்போதுமே இருந்து கொண்டுதான் இருக்கின்றன. நாம் அதைக் கண்டுகொள்ளும் அளவுக்கு விழிப்புடன் இருக்கிறோமா என்பதுதான் கேள்வி. இக்கதை எமிலி மூலமாக கேட்கும் கேள்விகள் மிக அழுத்தமானவை. நடுவயது தாண்டிய அனைவரும், குறிப்பாக தீவிர இலக்கியம் வாசித்து மண்டை சூடேறிப்போன அறிவுஜீவிகள் (என்று நினைத்துக் கொள்கிற) நாமெல்லாரும் நம்மையே கேட்டுக் கொள்கிற கேள்விகள். இதோ, சாளரத்துக்கு வெளியே அந்த மாயம் எப்போதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. எட்டிப்பார்க்கும் அளவுக்கு நமக்கு இதயமும் நேரமும் இருக்கிறதா என்பதுதான் கேள்வி.

சிறுகதையின் வடிவம் என்பது எப்போதுமே கவிதைக்கும், புனைவுக்கும் நடுவில் ஊசலாடிக் கொண்டிருப்பது. நான் எழுத முயற்சிக்கும் கதைகளில் புனைவு அதிகமாகவும், கவித்துவம் கிட்டத்தட்ட இல்லாமலும்தான் இருக்கிறது. உங்கள் கதைகளில் கவிதைகளே சிறுகதைகளாக மாறிவிடுகின்றன. இதைப் பாராட்டாகத்தான் சொல்கிறேன். குறிப்பாக இந்தக் கதை, கிட்டத்தட்ட ஒரு நீள்கவிதை என்றே சொல்லி விடலாம். இதை நீங்கள் முதலில் கவிதையாக எழுதிப் பார்த்திருக்க வாய்ப்பிருக்கிறது. கதை வடிவில் இது மிளிர்கிறது என்றே சொல்ல வேண்டும்.

மிகுந்த கவனத்துடன் சொற்களைப் பொறுக்கியெடுத்து கதையை எழுதியிருக்கிறீர்கள். உங்களது தமிழ்ச் சொற்கள் வாசிக்க சுகமான அனுபவமாக இருந்தது. வரைமான்கள், உப்புப்பரல்கள், (அந்த பொதியுந்து) என்று அழகான சொற்கள் கதை நெடுக விரவி கதை மீது ஒரு விதமான அடர்ந்த அமைதியைப் போர்த்துகின்றன. துருவேறிய தகரத்தைக் கீறியது போன்ற குரல் என்ற உவமை நன்றாக இருந்தது.  பனியில் உறங்கும் நகரின் வர்ணனை, நிதானமாக நிகழ்வுகளை விவரித்துக் கொண்டே செல்லுதல் என்று புனைவெழுத்தில் உங்களுடைய வீச்சைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் எழுத்தில் உள்ள நிதானத்துக்குக் காரணம் “எனக்குச் சொல்ல ஒரு கதையிருக்கிறது” என்ற உங்கள் உறுதியும், உங்கள் கதை சொல்லும் திறன் மீது உங்களுக்குள்ள நம்பிக்கையும்தான் என்று தோன்றுகிறது. மிக அழகான ஒரு கதையைக் கொடுத்ததற்கு நன்றியும், வாழ்த்துக்களும், பாலாஜி.

இக்கதை வாசித்ததும் எனக்கு இரு கதைகள் நினைவுக்கு வந்தன. ஒன்று நான் மொழிபெயர்த்த கதை. “குழந்தைப் பருவத்தில் பனிப்பொழிவு” என்று. இன்னொன்று செல்மா லாகர் லெவ் எழுதி க.நா.சு மொழிபெயர்த்த தேவமலர் என்ற நீண்ட கதை. இரண்டையும் பகிர்கிறேன். நேரமிருக்கும்போது வாசிக்கவும். கட்டாயமில்லை.

வணக்கம் ஜெகதீஷ்,

கதையை இத்தனை தீவிரமாக நீங்கள் வாசித்தது எனக்கு மிகவும் நிறைவையும், கொஞ்சம் மலைப்பையும் அளிக்கிறது. பெரிய மனதோடு பாராட்டுகிறீர்கள், கொஞ்சம் சங்கடத்தோடு அதையும் ஏற்றுக்கொள்கிறேன்.

என்னிடம் இந்த கதைக் கரு சில மாதங்களாகவே இருந்தது. கிறிஸ்துமஸ் தினம் குறித்து ஒரு கதை எழுதவேண்டும் என்ற உந்துதலும் நீண்ட நாட்களாகவே எனக்குள் இருந்தது. முதலில் எனக்கு தோன்றியது, ‘எல்லோரும் கொண்டாடும் பனி, அதை வேலையாகச் செய்பவனுக்கு எப்படிப் பொருள்படுகிறது?’ என்பதுதான். லிவோனா அவளுடைய அப்பாவிடம், “உலகிலேயே மிகச் சிறந்த வேலை உன்னுடையது அப்பா” என்று சொல்வதாக மனதில் வைத்திருந்தேன். ஆனால், ஆந்தப் புள்ளியிலிருந்து கதை வளரவில்லை.

பிறகு அதே கேள்வியை அவனுக்கான இன்னொரு கோணமாக மாற்றிக்கொண்டேன். ஒரு நாள் அதிக உறக்கமில்லாத இரவைக் கழித்துவிட்டு, காலையில் எப்படியவது இந்தக் கதையுடன் மோதிப் பார்க்கவேண்டும் என்று எழுதத் தொடங்கினேன். அந்த மர்ம மனிதர் எனக்குள் வந்தவுடன் கதை தானாக வளர்ந்தது. ஒன்றரை மணிநேரத்தில் மொத்தக் கதையையும் முடித்துவிட்டுதான் கீழே இறங்கினேன். நான் இதுவரை எழுதிய கதைகளில் விரைவாக எழுதி முடித்த ஒன்று.

கதை கவித்துவமாக இருப்பது ஒன்று, அதற்கு நீங்கள் அளித்த வாசகக் கோணமும் மிகவும் கவித்துவமானதுதான். மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள், நாம் பல அற்புதங்களைத் தவற விடுகிறோம். கதை எழுப்பிய கேள்வி எமிலி அவனிடம் கேட்பதுதான், நீங்கள் சரியாக இதைத் தொட்டிருக்கிறீர்கள். இந்தக் கதை எழுதி முடித்த பிறகும் எனக்குள் இன்னும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. இதுபோன்ற ஒரு பேசுபொருளை நான் இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு கவிதையாகவும் எழுதியிருக்கிறேன். 

கதை வெளியில் வாசிக்கப்படுவது ஒன்று, எழுதும் நமக்குள்ளும் ஏதோ ஒன்றை நிகழ்த்துகிறது. இந்தக் கதை தத்துவார்த்தமாக என்னைத் தொந்தரவு செய்கிறது, கடைசிப் பத்தி எனக்கு நானே சொல்லிக்கொண்டதுதான். நான் இப்படி ஒன்று நிகழும் என்பதை இதுவரை உணர்ந்ததில்லை, நீங்கள் கடந்திருக்கலாம். அதனால்தான் சொல்கிறேன், ‘பொற்குகை இரகசியம்’ கதையை எழுதிய எழுத்தாளன் மீது எனக்கு ஒரு பிரேமையும், அபார மதிப்பும் இருக்கிறது. எல்லோருக்கும் அப்படி ஒரு கதை நிச்சயம் நிகழும் என்றே தோன்றுகிறது. ஜெ சொல்வது எத்தனை உண்மை. ஆம், ‘இலக்கியம் அருளும் தெய்வம்தான்’.

நான் கதைக்கு ‘லிவோனாவின் பரிசு’ என்று பெயர் வைக்கலாமா என்றும் யோசித்தேன். ஆனால், கதை எழுதிய பிறகு அவனுக்கானது என்று நன்றாகப் புரிந்தது. அதனால் ‘எழுகை’ என்று தலைப்பு வைத்தேன்.

இன்னொன்று, அமெரிக்காவில் இது எனக்கு பன்னிரண்டாவது குளிர்காலம். பித்துப் பிடிக்க வைக்கும் அளவுக்கு அழகும், வெண்மையும், கருணையே அற்ற தூய்மையும் கொண்டது பனிப்பொழிவு, இத்தனை ஆண்டுகளாக எனக்குள் அது என்ன நிகழ்த்துகிறது என்பதைப் புரிந்துகொள்ளாமல் தவித்துக்கொண்டிருந்தேன் (Angst). மிகையாக இதைச் சொல்லவில்லை, ஒவ்வொரு முறை பனிபொழிகையிலும் மனதுக்குள் ஒரு பதைப்பு என்னிடம் இருக்கிறது. இது மிகச் சிறிய கதை, இதில் சில பத்திகளில் அதை புனைவாக விவரித்ததும் எனக்குள் ஒரு ஆழ்ந்த அமைதி ஏற்பட்டது. எதையோ ஓரளவுக்கு கடந்த அமைதி. நீங்கள் இயற்கை குறித்து குழுவில் பகிர்ந்திருந்தது எத்தனை உண்மை.

நீங்கள் தத்துவம் அறிந்தவர், இந்த உணர்வை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்வீர்கள் என்று ஆழமாக நம்புகிறேன். மேலும், உங்களிடம் இதையெல்லாம் பகிர்வதற்கு இந்தக் கதை ஒரு வாய்ப்பை அளித்திருக்கிறது, அதற்கு இலக்கியத்துக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். 

நீங்கள் அனுப்பிய இரண்டு கதைகளையும் கண்டிப்பாக வாசிக்கிறேன். மிக்க நன்றி ஜெகதீஷ். 


அன்புள்ள பாலாஜி,

மாலத்தீவுகளிலிருந்து அமெரிக்கா வந்த சில நாட்களில் வேலையின் காரணமாக வாசிப்பை விட்டு விட்டேன். சில ஆண்டுகள் கழித்து மீண்டும் வாசிக்க முயல்கையில் என்னால் உள்ளே செல்லவே முடியவில்லை. இதை இன்னும் பின்னோக்கி நீட்டித்துப் பார்த்தால் மாலத்தீவுகளில் இருக்கையில் கூட தீவிர இலக்கியம்தான் வாசித்துக் கொண்டிருந்தேன். அதனால் அந்த வாசிப்பே கொஞ்சம் திருகலாகக் கூட இருந்தது. வாசிக்கையிலேயே இதற்கு எப்படி வாசிப்பனுபவம் எழுதலாம், இதிலிருந்து புத்திசாலித்தனமாக எதைக் கண்டுபிடிக்கலாம் என்று. சிந்தித்துப் பார்த்தால், நான் உண்மையிலேயே ஆழ்ந்து வாசித்தது என் பதின்ம வயதுகளில்தான் என்று தோன்றியது. உள்ளே இருந்த அந்தக் குழந்தை வாசித்துக் கொண்டிருந்தது. அந்தக் குழந்தைக்கு சாண்டாக்களில் நம்பிக்கை இருந்தது. அந்த மாதிரியான வாசிப்பை மீண்டும் கொண்டு வர நான் மிகவும் சிரமப்பட்டேன். பல விஷயங்களைத் துறக்க வேண்டியிருந்தது. விமர்சனம், அறிவுஜீவித்தனம், போன்றவை. முழுமையாகத் துறக்க முடியவில்லைதான். ஆனால் துறக்கத் துறக்க வாசிப்பதும், எழுதுவதும் எளிதாகிக் கொண்டே வருவதைக் காணமுடிகிறது.

உங்கள் கதையை இப்படி என்னுடைய அனுபவத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள முடிகிறது. மீண்டும் எழுத்தில் இறங்க நான் செய்ய வேண்டி இருந்ததெல்லாம் நான் தவற விட்ட குழந்தைமையை மீட்டெடுத்துக் கொள்வதை மட்டும்தான். அதைத்தான் இந்தக் கதை சுட்டுகிறது என்று நினைக்கிறேன்.

 பாலாஜிராஜூவின் “எழுகை”


மேலும் வாசிக்க