16 ஆகஸ்ட், 2026

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலையிலிருந்து ஒரு நூல்



எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் சிறுகதைகளின் தொகுப்பு ஒன்று ஆங்கிலத்தில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக அச்சகம் வழியாக வெளிவந்துள்ளது. இந்த நூலில் நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அ.முத்துலிங்கம் அவர்களின் ஐந்து கதைகள் இடம்பெற்றுள்ளன. எகேலுவின் கதை, தீர்வு, புதுப்பெண்டாட்டி, இலையுதிர்காலம், ஆதிப்பண்பு ஆகிய கதைகள் அவை. இந்த ஐந்து கதைகளும் சென்ற 2023-2024 காலகட்டத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அமெரிக்க இலக்கிய இதழ்களான ஸ்பில்வோர்டு பிரஸ், டிஃபங்க்ட், கான்சிக்வென்ஸ் ஆகியவற்றிலும் மற்றும் பிரிட்டிஷ் இலக்கிய இதழான இம்ப்ஸ்பையர்டு இதழிலும் வெளிவந்தன. இவற்றில் கான்சிக்வென்ஸ் இதழ் போரின் கொடுங்கரங்களால் நசுக்கப்படும் மக்களின் கதைகளைப் பதிப்பிக்கும் இதழாக வெளிவந்தது. அதில் அ. முத்துலிங்கம் அவர்களின் “புதுப்பெண்டாட்டி” கதை வந்தது.

பொதுவாக அமெரிக்க, ஆங்கில இலக்கிய இதழ்களுக்குக் கதையோ, மொழிபெயர்ப்பையோ அனுப்பினால் அது பிரசுரத்துக்குத் தகுதியாக உள்ளதா, இல்லையா என்பதை அறிவிக்கவே நாலிலிருந்து ஆறு மாதங்கள் எடுத்துக் கொள்வார்கள். என்னுடைய கதைகளுக்கும், நான் மொழிபெயர்த்த பல கதைகளுக்கும் அவை வெளிவருவதற்கு நான் மாதக்கணக்கில் காத்துக்கொண்டிருந்திருக்கிறேன். ஒரே நேரத்தில் பல்வேறு இதழ்களுக்கு படைப்புகளை அனுப்பியிருக்கிறேன். ஒரு இதழ் நிராகரித்தால் இன்னொன்று அதை வெளியிட்டுவிடாதா என்ற எதிர்பார்ப்புதான். “சப்மிட்டபிள்” என்ற இணையப்பக்கத்தின் வழியாக எண்ணற்ற இதழ்களுக்கு நம் படைப்புகளை அனுப்ப முடியும். என்னுடைய பக்கத்தில் பார்க்கும்போது படைப்புகள் நிராகரிக்கப்பட்டதன் எண்ணிக்கை குறைந்தது ஐம்பது முறையாவது வரும். ஒவ்வொருமுறை நிராகரிக்கப்படும்போதும் படைப்புகளை மெருகேற்றுவது குறித்து எதையாவது கற்றுக்கொண்டேயிருப்பேன். புனைவெழுத்திலும் சரி, மொழியாக்கத்திலும் சரி. 



அ. முத்துலிங்கம் அவர்களின் கதைகளை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்பிய எந்த இதழும் இதுவரை ஒருமுறைகூட நிராகரித்ததில்லை என்பதை இப்போது உணரும்போது என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை. அவருடைய சிறுகதைகள் வெவ்வேறு களங்களையும், ஆவலூட்டும் கதைமாந்தர்களையும், ஒரு நல்ல சிறுகதைக்குரிய இலக்கணத்தையும் கொண்டவை. அவருடைய எந்தக்கதையை வாசித்தாலும் அது நினைவில் நெடுங்காலம் நிற்கும். இன்னொருவருக்கு அந்தக்கதையை அழகாகச் சொல்லிவிட முடியும். மெல்லிய பகடி எல்லாக் கதைகளிலும் இழைந்தோடும். பலகதைகளை அவர் எழுதியே சில பத்தாண்டுகள் இருக்கும். ஆனால் அவற்றை ஆங்கிலத்தில் வெளியிடும் இதழ்கள் அக்கதைகளின் புதுமையாலும், அவற்றின் தனித்துவமான இலக்கிய அழகியலாலும் கவரப்பட்டும்தான் அவற்றை உடனடியாகப் பதிப்பித்திருக்கின்றன என்றே எண்ணத்தோன்றுகிறது.

2023 ல் நான் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் கதைகளை தொடர்ந்து மொழிபெயர்த்துக் கொண்டிருந்தேன். அவற்றில் சில அமெரிக்க இலக்கிய இதழ்களில் வெளியாயின. அவற்றை வாசித்துவிட்டு அ.மு அய்யா அவரே என்னை அலைபேசியில் அழைத்தார். ஜெ கதைகளின் இலக்கியச்சுவையை குன்றாமல் குறையாமல் நான் ஆங்கிலத்திலும் கொண்டு வந்திருப்பதாகப் பாராட்டினார். சொற்றொடர்களை இணைத்தும், பிரித்தும் ஆங்கிலத்தில் உருவாக்க நான் எடுத்துக்கொண்டிருந்த சுதந்திரத்தை அவர் பாராட்டியதும்தான் எனக்கே என்னுடைய மொழிபெயர்ப்பு முறை மீது மிகுந்த நம்பிக்கை வந்தது. புனைவெழுத்துக்குச் செல்வதற்கு முன்னால் ஒரு பாலமாகத்தான் நான் மொழியாக்கப் பணியைக் கைக்கொண்டிருந்தேன். ஆனால் “என் சில கதைகளை உன்னால் மொழிபெயர்க்க இயலுமா?” என்று அவர் கேட்டுக்கொண்டபோது மறுக்க இயலவில்லை. 

அ.மு அய்யா தன் கதைகளின் மொழிபெயர்ப்பில் மிகுந்த கவனம் செலுத்துபவர். நான் ஒவ்வொரு கதையையும் மொழிபெயர்த்து அவருக்கு அனுப்புவேன். அவர் அதை வரிக்கு வரி வாசித்து விட்டு எந்தெந்த இடங்கள் நன்றாக வந்துள்ளன, எங்கெல்லாம் திருத்தங்கள் தேவை என்று அறிவுறுத்துவார். அது மட்டுமல்ல, கனடிய இலக்கிய இதழ் ஒன்றில் பிரதிமேம்படுத்துனராகப் பணிபுரிந்த ஒருவரிடம் நான் மொழிபெயர்த்த கதைகளைக் கொடுத்து அவரிடம் கருத்துக் கேட்பார். முதலிரண்டு கதைகளை அவர் திருத்திக் கொடுத்தார். ஆனால் அவர் திருத்திய இடங்கள் மொத்தம் ஐந்துக்கும் மேலில்லை. மூன்றாவது கதையிலிருந்து, “இந்த மொழிபெயர்ப்பாளர் கதைகளில் திருத்துவதற்கென்று எதுவுமேயில்லை. நீங்கள் எனக்கு வீணாகப் பணம் கொடுக்கிறீர்கள்,” என்று சிரித்துக்கொண்டே கூறினாராம்.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக பிரசுரத்துக்கு இந்தக்கதைகளை அனுப்பி ஓர் ஆண்டாக்கும் மேலாகிறது. ஒரு வாரம் முன்பு அ.மு அவர்களிடம் பேசியபோது இந்த நூல் வெளியாகி விட்டது என்று சொன்னார். “எனக்கு ஒரு பிரதி அனுப்பியிருக்கிறார்கள். மொழிபெயர்ப்பாளர் என்ற முறையில் உங்களுக்கும் பிரதி அனுப்ப வேண்டும். அவர்களுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்,” என்றார். அவர் குரலில் குழந்தையின் குதூகலம்! “இப்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். சொல்வனம் இதழில் அத்வைத வேதாந்தம் குறித்த ஒரு தொடரை பதினேழு பகுதிகள் எழுதி முடித்துவிட்டேன் என்றும், விரைவில் என்னுடைய முதல் ஆங்கில நாவலுக்கான பணிகளில் இறங்குவேன் என்றும் அவரிடம் சொன்னேன். “அய்யா, இப்போதும்கூட உங்களுக்குள் இருக்கும் அந்தக் குழந்தையை நீங்கள் தொலைத்து விடாமல் பாதுகாத்துக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கும் என்னுள் உறையும் அந்தக் குழந்தையைக் காத்துக்கொள்ள வேண்டும். அதற்கான உந்துதலையும், உத்வேகத்தையும் நான் உங்களிடமிருந்துதான் பெற்றுக்கொள்கிறேன்,” என்று அவரிடம் சொன்னேன். 


A Primal Quality in impspired

The Fall in Defunct Magazine

The Story of Ekolu in Spillwords Press

Dilemma in Spillwords Press


 

11 ஏப்ரல், 2026

துருவேறிய சிறகு

 

சு. வெங்கட்டின் நீல வியாபகம் சிறுகதை குறித்து

அன்புள்ள வெங்கட்,

நீலவியாபகம் கதை அகிலாண்டம் பிளாட்பாரத்தில் உருண்டு நிற்கும் ஒரு கொய்யாப்பழத்த்தை எடுத்து உண்ணலாமா என்று யோசிப்பதில் துவங்குகிறது. உணவு கதை நெடுக அவரைத் தொடர்ந்தபடியே இருக்கிறது. பாரதியும், நாஞ்சில் நாடனும், ஜெயமோகனும் தங்கள் கலையில் நிகழ்த்திக்காட்டிய ஒரு அறச்சீற்றம்: உணவுண்ணல் என்பது ஒவ்வொரு உயிரின் அடிப்படை உரிமை. அதை எவரும் மறுக்கலாகாது. அதை நீங்களும் உங்கள் கதையில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறீர்கள். மற்ற படைப்பாளிகளைப் போலன்று, மிக மவுனமான சொல்லல் மூலம், மிக நேர்த்தியான சித்திரங்களைத் தீட்டுவதன் மூலம் வாசகனிடம் அந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள். உணவு நிமித்தம் ஓர் உயிரை இழிவு செய்தல் தகுமா? இதைத்தான் நான் இந்தக் கதையிலிருந்து புரிந்து கொண்டேன். இந்தப் புரிதல் தவறாகக் கூட இருக்கலாம்.

மிகச் சிறந்த கதைகளை மட்டுமே எழுதுவேன் என்று கங்கணம் கட்டியிருக்கிறீர்கள் போல. உங்கள் வசீகரமான மொழி கதையின் ஓட்டத்தின் மீது ஒரு கனத்த போர்வையை போல வியாபித்து அதன் நடையை மென்மையாக்கி விடுகிறது. பெரும்பாலும் விவரணைகளாலும், சொல்லிச் செல்லுதலாலும் நகரும் கதை. பாத்திரங்கள் ஒன்றிரண்டு வரிகளே உரையாடிக் கொள்கின்றன. அதிலும் சில இந்திச் சொற்கள். கதை சொல்ல வரும் விஷயத்துக்கு இந்த மாதிரியான கூறுமுறை மிகப்பொருத்தம்.

அகிலாண்டத்தோடு அவனது வாழ்க்கையின் முன்னும், நிகழ்காலத்துக்கும் மாறிமாறிப் பயணிக்கிறோம். சராசரி வாழ்க்கைக்குச் சரிப்பட்டு வராதவர் அவர். அதே நேரம் இந்த உலகம் போஷித்துக் காக்க வேண்டிய மேதையும் அல்லர். சுருக்கமாகச் சொன்னால் சோம்பித் திரியும் சோம்பேறி. சோறு உண்டு விட்டு மனம் போனபோக்கில் திரிபவர். குடும்பத்தைக் கண்டுகொள்ளாதவர். அதனாலேயே மனைவி, மகனிடம் ஏச்சும் பேச்சும் வாங்குபவர். இவர் மாதிரியான மனிதரை உங்களது இலக்கியம் மையக் கதாபாத்திரமாக்கியிருக்கிறது. சொல்லப்போனால் சமுதாயத்தால் கைவிடப்பட்டவர்களின் கடைசிப்புகலிடம்தானே இலக்கியம்?

சில சொற்றொடர்கள் சட்டென்று வாசிப்பை நிறுத்தி யோசிக்க வைத்தன; மெல்லிய புன்னகையை வரவழைத்தன.

புதர்களுக்குப் பின்னால் முக்காடிட்டு வாய்மூடி நின்ற பெண்கள் வெறுப்பாய் ரயிலையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

என்பது ஒரு உதாரணம். இந்த வாக்கியத்தின் வலி கொஞ்சம் நிறுத்தி யோசித்தால்தான் உறைக்கும். ஒரு கலைஞனால் மட்டுமே எழுதக்கூடிய வரி.

எங்கிருந்தோ வந்து ரயிலுடன் சேர்ந்துகொண்ட சாலையில் பேருந்து ஒன்று சிறு துள்ளலுடன் சென்றுகொண்டிருந்தது. இரண்டிலும் பயணிப்பவர்களில் சிலர் இனி எப்பொழுதும் நிகழாத சந்திப்பை ஒருவருக்கொருவர் நிகழ்த்திக்கொண்டனர்.

என்று இன்னொரு கவித்துவமான இடம். திருச்செந்தாழையை நினைவுபடுத்தும் எழுத்து. அவரை வாழும் தமிழ் விழாவில் சந்தித்தேன். ஒரு அரைநாள் அவரோடு நியூயார்க் தெருக்களில் உரையாடிபடியே சுற்றினோம். எழுத்தாளனாக அறிந்திருந்த அவர் நண்பராகப் பரிச்சயமாகி பிரிகையில் ஒரு சகோதரனைப் போலாகி விட்டார். இத்தனைக்கும் நாங்கள் அவர் எழுதிய கதையைப் பற்றிக்கூடப் பேசவில்லை.

இவர்களை இனி தன்னால் கரை சேர்க்க முடியாதென்றெண்ணி அங்கம்மா பகடைகளைத் தூரப்போட்டாள்.

என்று இன்னொரு இடத்தில் எழுதுகிறீர்கள்

எழுத்தாளன் என்பவன் ஒரு பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக எழுதுபவனல்ல. அவன் ஒரு குறிப்பிட்ட பிரச்னையைச் சரியான சூழ்நிலையில் வைத்து சித்தரித்து அதன் மகத்துவத்தை உணரச் செய்வதுதான் அவன் வேலை என்று பொருள்படும்படி இந்த வாழும் தமிழ் விழாவில் பேசிக்கொண்டிருக்கும்போது விவேக் ஆங்கிலத்தில் ஒரு வாக்கியத்தைக் கூறினார். இந்தக் கதையின் பெரும்பாலான பகுதிகளில் நீங்கள் அந்தச் சித்திரத்தை துல்லியமாக வரைந்து காட்டியபடியே செல்கிறீர்கள். என் சிறுகதைத் தொகுப்புக்கு நான் எழுதிய முன்னுரைக்கு “புனைவெனும் அறாக்கனவு” என்று தலைப்பிட்டிருந்தேன். புனைவு என்பது ஒரு துல்லியமான, அறாத கனவுதான். அது துல்லியமாகவும், அறாத்தன்மையோடும் இருப்பதற்காக மெனக்கெட வேண்டியதுதான் கதைசொல்லியின் வேலை. அந்த வேலையை மிகத்திறம்படச் செய்திருக்கிறீர்கள். 

தான் கட்டியிருந்த வேட்டியின் நுனியில் அவர் பதித்துச் சென்ற செருப்பின் அடையாளத்தைத் தட்டிக் கொண்டே எழுந்து வெளியே எட்டிப் பார்த்தார்.

நிலவில் ஒளிரும் தார்ச் சாலையெனத் தூரத்திலிருந்த தொழுவத்தில் மினுக்கும் கரிய உடலுடன் எருமைகள் வரிசையாக அமர்ந்திருந்தன. எருமைகளின்  எண்ணிக்கையை அகிலாண்டம் அவ்விருட்டில் மனதுக்குள் கணிக்க முயன்றார். ஓரிடத்தில் திரள்வதும் சட்டெனக் கலைவதுமாய் இருள் அவரை குழப்பியதில் எண்ணிக்கை ஒன்றுபோல இல்லை.

குடிசைக்குள் மண் சுவர்கள் சிவந்து அனலில் நகர்வது போல இருந்தது.

எளிமையாகச் சொன்னால் உங்கள் கேமரா மிக ஷார்ப்பாக வேலை செய்திருக்கிறது.

இந்த அகிலாண்டத்தை எப்படிப் புரிந்து கொள்வது? அவர் ஏன் இப்படி இருக்கிறார்? 

“அங்க தான் அந்தோ கிழக்கு பக்கம் ரெண்டு நட்சத்திரம் பக்கத்து பக்கத்துல இருக்கு பாருங்க அது எங்கிருந்தோ வந்திருந்தது. அப்புறம் எங்க போனாலும் ஜோடியா தான் வருதுங்க”

“அப்படி இருக்கிறது கூட நல்லாத்தான் இருக்கு டா. எதுக்கும் கவலைப்படாம, யோசிக்காம அப்படியே போய்கிட்டே இருக்கிறது. எனக்கும் அப்படியெல்லாம் எல்லாரையும் ஒருநாள் பார்க்கணும்னு ஆசை இருக்குடா”, என்று சொல்லிப் பெரு மூச்சு விட்டுக்கொண்டே கீழே அமர்ந்திருந்த அந்தக் கைதியைப் பார்த்தார்.

அவர் ஓர் எளிய உயிர். ஒரு சிறுமியுடன் இணைந்து சட்டென்று குழந்தையாக மாறி, மரத்தின் கிளைகளில் பறவைகள் கட்டிய கூடுகளை ஆராய முடியும். அவர் வெறுமனே “இரு”க்கிறார். இது ஒரு ஞானியின் நிலை. ஆனால் அகிலாண்டத்துக்கு உதவாக்கரை பட்டம் மட்டும்தான். 

அப்புறம் கதையில் கொஞ்சம் டிடாக்டிக் தன்மை எட்டிப்பார்க்கிறது. இது குறையென்று இல்லை. இது இதுதான் என்ற போதம் இருந்தால் அதையும் கையாளலாம்; நான் அப்பகுதியையும் ரசித்தேன். 

ஒவ்வொரு வீட்டிலும் சிறிதும் பெரிதுமாகத் துருப்பிடித்த ஏதோ ஒன்று இருக்கிறது. ஒரு காரணத்திற்காகச் செய்யப்பட்டு உலகத்திற்கு வரும் அது, ஒளி இழந்து வேறொன்றாக மாறிவிடுகிறது. புதியதாக இருக்கும்போது அதற்குத் தான் எத்தனை மதிப்பு. மிகக் கவனமாக எடுப்பதும், கையாள்வதும் என அதன் மீது எத்தனை அக்கறை. ஏதோ ஒரு கட்டத்தில் உதாசீனப்படுத்தப்பட்டு வீட்டிற்குள் ஒரு மூலையில் நிறுத்திவிட, மெல்ல அதற்குள் வேறு ஒன்று குடிகொண்டு அரித்துவிடுகிறது. ஒரு சிலவற்றைத் துரு நீக்கிச் சரி செய்துவிடலாம். சிலவற்றை தீயிலிட்டே வேறொன்றாக்க முடியும். அது ஒரு சுழற்சி போல. அழிவே இல்லாமல் ஒன்று மற்றொன்றாக மாறிக்கொண்டேயிருக்கிறது என்று நினைத்துக்கொண்டான்.

திருப்புறம்பியம், திருப்பனந்தாள், திருவிடைமருதூர் என்று ஊர்பெயர்கள் ஒவ்வொன்றும் ஒரு மெல்லிய காலமயக்கத்தை அளிக்கின்றன. ஏதோ காலத்தின் பின்சென்று புராதன கிராமங்களின் பெயர்களைக் கேட்பதைப் போல. ஆனால் இவை இன்றும் இருக்கும், இயங்கும் ஊர்கள். அகிலாண்டத்தைப் போலவே அவையும் ஒரு எழுத்தாளன் கைபட்டுத்தான் தங்கள் இருப்பை நிரூபிக்க வேண்டியுள்ளது.

கதையின் இறுதிப்பகுதியை சற்றே வேகமாகச் சொல்லிச் சென்றதுபோலிருந்தது. துருப்பிடித்த சிறகு துருவேறிய இரும்பில் விழுந்து பறவையின் சிறகொடிந்த ஒலியை எழுப்புவது அபாரமான கற்பனை, படிமம்.

வாழ்த்துக்கள் வெங்கட்.








12 ஜனவரி, 2026

நுண்பொருள் காண்பது அறிவு


நுண்பொருள் காண்பது அறிவு

அத்வைதம்: அகவிடுதலைக்கான பயணம் என்ற தலைப்பில் நான் எழுதி வரும் வேதாந்தம் குறித்த தொடரின் மூன்றாவது பகுதி சொல்வனம் இதழில் வெளியாகியுள்ளது. எந்த ஒரு அறிவையும் ஓர் அறிவைக் கொடுக்கும் கருவியால் மட்டுமே அறிய இயலும். அறிபவனாகவே இருக்கும் என்னை எந்தக் கருவியால் அறிந்து கொள்ள இயலும்? இப்பகுதியில் அறிவைக் கொடுக்கும் கருவிகளான பிரமாணங்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. பிரமாணங்கள் ஆறுவகை. அத்தனைப் பிரமாணங்களையும் பகுதி மூன்று மற்றும் நான்கில் விளக்கப்படும்.

6 ஜனவரி, 2026

செயற்பாலது ஓரும் அறன்

 அத்வைதம்: அகவிடுதலைக்கான பயணம் என்ற தலைப்பில் சொல்வனம் இதழில் நான் எழுதி வரும் வேதாந்தக் கட்டுரைத் தொடரின் இரண்டாம் பகுதி வெளியாகியுள்ளது. எதற்காக ஒருவர் அத்வைத தத்துவத்தைக் கற்க வேண்டும் என்ற கேள்விக்கான விடையாக இந்தப் பகுதி அமைந்துள்ளது.




26 டிசம்பர், 2025

“வானப்ரஸ்தம்” சொல்வனம்- புனைவு வனம் நிகழ்வில்

 



என்னுடைய சிறுகதை “வானப்ரஸ்தம்” குறித்து நண்பர்கள் பாலாஜி ராஜூவும், விவேக்கும் சொல்வனம்- புனைவு வனம் நிகழ்வில் கருத்துரையாடினார்கள். நானும் கலந்து கொண்டு என் கருத்துக்களையும், அவர்களது கேள்விகளுக்கான பதில்களையும் அளித்தேன். பாலாஜி ராஜூ நிறைய கவிதைகளையும், அண்மைக்காலமாக சிறுகதைகளையும் எழுதி வருகிறார். விவேக் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சிறுகதைகள் எழுதி வருகிறார். அமெரிக்க இதழ்களில் அவரது கதைகள் வெளியாகி இருக்கின்றன. மேலைத்தத்துவத்திலும், மேலை இசையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டு கற்று வருபவர். அது குறித்து அவர் எழுதும் கட்டுரைகள் ஆழமானவை. இருவரும் கலந்து கொண்டு என் கதை குறித்து அலசியது எனக்கு மகிழ்ச்சி. அவர்களுக்கு நன்றி. நிகழ்வை ஏற்பாடு செய்த பாஸ்டன் பாலா, நிர்மல் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.


மேலும் வாசிக்க