அசோகமித்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அசோகமித்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 மே, 2022

பிரயாணம் - மனிதன் மற்றுமொரு விலங்கே!

 

பிரயாணம் - சிறுகதை

அசோகமித்திரன்

பிரயாணம் - மனிதன் மற்றுமொரு விலங்கே!

அசோகமித்திரன் 

ஜெகதீஷ் குமார்

.இந்த கதையின் முடிவை வாசிக்கையில் வாசகராகிய நமக்கு வாழ்வின் பொருள் குறித்த அடிப்படையான கேள்விகள் எழுகின்றன. கடைசி வரியில் கதை முடிந்தாலும், அவ்வரியிலிருந்து கதை வாசகன் மனதில், குறிப்பாக அவன் ஆன்மிகத்தில் ஈடுபாடுள்ளவனாகவும் இருப்பானாயின், நீண்டு கொண்டே செல்கிறது. இக்கதையின் முடிவு ஒரு ஆங்கிலக்கதையின் பாதிப்பு என்று இணையத்தில் உலவி வருகிறது. நான் அக்கதையை வாசித்ததையும், இரண்டையும் ஒப்பிடும்போது கூட, எனக்கு அ.மியின் கதையே சிறந்ததாகப் படுகிறது.

அம்ப்ரோஸ் பியர்ஸினுடைய கதையில் மனைவி இறக்கிறாள் கணவன் உடலைக் காப்பாற்ற ஓநாய்களுடன் போராடுகிறான். இறுதியில் மனைவியைக் குதறிவிடுகின்றன ஓநாய்கள். ஆனால் மனைவியின் வாயில் ஒரு ஓநாயின் கடித்துத் துண்டாக்கப்பட்ட காது இருக்கிறது.

இக்கதை பிரயாணம் கதையைப் போலவே இருக்கிறது. முடிவை இந்தக் கதையிலிருந்து அசோகமித்திரன் கையாண்டிருக்கிறார். எவ்வகையில் இந்த முடிவு அவரது கதையில் வேறுபடுகிறது என்று பார்க்கலாம். இங்கு ஓநாய்களால் குதறப்பட்டு முண்டமாகக் கிடப்பவர் ஒரு யோகி. தன் வாழ் நாளெல்லாம் யோகம் பயின்றவர். தன் மூச்சு இயங்குவது கூடப் பிறர் அறியாது மென்மையாக இயங்கும் வண்ணம் தன் உடலையும், பிராணனையும் தயார் செய்தவர். நமது யோக பரம்பரையில் ஒரு ஆன்மிக வாதிக்கு உடல், மனம், புத்தி இவை அனைத்தும் உயர் நிலைக்குச் செல்வதற்கான கருவிகளே. என்னதான் வாழ்நாள் முழுக்க தன்னுடலையும், மனத்தையும் அவன் தயார் செய்தாலும் யாக்கை நிலையாமையை அவனைப் போல் உணர்ந்தவர் இருக்க முடியாது. சதாசிவ பிரம்மேந்திரர் போன்ற ஞானியர் உடல் உணர்வைக் கடந்து, தன் கை வெட்டுப்பட்டு ரத்தம் கொட்டும் நிலையிலும் எதுவும் நடவாதது போல நடந்து செல்வதை நாம் கதைகள் வாயிலாக அறிகிறோம். ஞானியருக்கு உடல் என்பது ஒரு வாகனமே. அங்கனம் இருக்க, இங்கு மயக்க நிலைக்குச் சென்ற, தன் சீடனால் இறந்து விட்டோம் என்று தீர்மானிக்கப்பட்ட குருதேவர், தன் இறுதிக்கணத்தில், ஓநாய்களால் தாக்கப்படும்போது தன்னிலைக்கு ஒரு கணம் வருகிறார். அக்கணத்தில் வாழ்வாசை என்ற உயிர்களின் அடிப்படையான இச்சையே அவரை உந்திச் செலுத்துகிறது. இங்கு நாம் அவதானிக்க வேண்டிய விஷயம், அவரிடம் நாம் காண்பது தன்னுயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் போராட்டத்துக்கான அறிகுறிகளை மட்டுமல்ல. ஒரு ஓநாயின் காலை அதன் தோள்பட்டையோடு பிய்த்து எடுத்திருக்கிறார். தன்னைத் தற்காத்துக் கொள்ளும் நேரத்தில் ஒருவருக்கு வரும் அசுர பலம் அளப்பரியது.

இந்த முடிவை வாசிக்கையில் வாசகராகிய நமக்கு வாழ்வின் பொருள் குறித்த அடிப்படையான கேள்விகள் எழுகின்றன. கடைசி வரியில் கதை முடிந்தாலும், அவ்வரியிலிருந்து கதை வாசகன் மனதில், குறிப்பாக அவன் ஆன்மிகத்தில் ஈடுபாடுள்ளவனாகவும் இருப்பானாயின், நீண்டு கொண்டே செல்கிறது. யோகம் என்பது உடலை உறுதியோடும், நலத்தோடும் வைத்திருத்தல் மட்டும்தானா? யோகப்பயிற்சி ஒருவனை உடல் மீது பற்றற்ற நிலைக்கு எடுத்துச் செல்ல உதவாதா? ஆன்மிகத்தில் எவ்வித உயர் நிலை அடைந்தாலும், தன் உடலைக் காப்பாற்றிக்கொள்ளப் போராடும் எளிய உயிர்தானா ஒரு யோகி?  இதே இடத்தில் தன்னை முழுதுணர்ந்த ஒரு ஞானி இருந்திருப்பின் தன் உயிருக்குப் போராடியிருப்பாரா? அல்லது தன்னை முழுதளித்திருப்பாரா? யோக மார்க்கத்திற்கும், ஞான மார்க்கத்திற்கும் உள்ள இடைவெளியைக் குறிப்பிட விரும்புகிறாரா அசோகமித்திரன்?

கடைசி இரண்டு வரிகள் நம்மை மேலும், மேலும் கேள்விகளுக்கும், வாழ்வின் பொருளற்றதன்மை ஒருவனின் இறுதிக் கணத்தில் உறுதி செய்யப்படுவதற்கும் இட்டுச் செல்கின்றன. ஆனால் ஒருவேளை இந்த இரண்டு வரிகளை நீக்கி விட்டாலும் இந்தச் சிறுகதை உன்னதமான அனுபவமாகவே இருக்கும் என்பதைச் சொல்ல விரும்புகிறேன்.

சற்றே நம் கவனத்தை குருவிடமிருந்து சீடனுக்குக் கொண்டு செல்வோம். மனித வாடை படாத ஒரு பிரதேசத்தில் நோயுற்ற குருவோடு நின்றிருக்கும் அவனுக்கு ஒரே குறிக்கோள். தன் குருவை சிற்றாறு தாண்டியுள்ள ஹரிராம்புகூருக்கு அழைத்துச் சென்று அவருக்கு மருத்துவ உதவிகள் கிட்டச் செய்திட வேண்டும். அவர் இறந்து விட்டார் என்று அறிந்த பின் அவரை மலைச்சரிவு தாண்டியுள்ள சமவெளியில் அடக்கம் செய்ய வேண்டும் என்ற நோக்கமாக அந்தக் குறிக்கோள் மாறுகிறது. அவனோடு சேர்ந்துதான் நாம் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறோம். மலைகளின் பின்னால் சூரியன் விழ அவற்றின் நிழல்களே அவை மீது விழுவதைப் பார்க்கிறோம். இரவும், நிழல்களும் ஒன்றறக் கலக்கும் அந்தச் சில நிமிடங்களைக் கண்ணுறுகிறோம். புதிய அனுபவங்கள்! 

ந்தப் பிரதேசத்தில் பறவைகளே கிடையாது. காற்று மிகவும் லேசாக வீசிக்கொண்டிருந்தாலும் மலைச்சாரலில் மோதிப் பிரதிபலிக்க வேண்டியிருந்ததால் ‘கும்’மென்ற ஒலி தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது.

உறைந்த பேரலைகள் போல் மலைச்சிகரங்கள்

அவன் குருவுக்கு கிழங்கு மாவில் கஞ்சி கிண்டுகிறான். அதற்கு அவன் உறைந்த மண்ணென்ணையை எரிக்கிறான். உறைந்த மண்ணெண்ணை என்ற அவதானிப்பே புதுமையாக இருந்தது. ஜெயமோகன் எழுதிய மெல்லிய நூல் சிறுகதையில் பாபு வேகவைத்த வாழைப்பழங்கள் சாப்பிடுவார் என்று குறிப்பிட்டிருப்பார். வாழைப்பழத்தை எதற்கு வேகவைக்க வேண்டும்? வேகவைப்பதற்கு முன் சோகன்ராம் அந்த வாழைப்பழங்களை கழுவுவான். வாழைப்பழங்களை எதற்குக் கழுவ வேண்டும்? கதைகளில் இவ்விதம் வரும் விநோதமான செய்திகளை அறிந்து கொள்வதே ஆர்வமூட்டுவதாக உள்ளது. அது போலத்தான் உறைந்த மண்ணெண்ணையும்.

சீடன் ஒரு வருடப் பயிற்சியில் மனலயம் பெற்றவன். குருதேவரின் அருகில் அமர்ந்து மலைகளையும், நட்சத்திரங்களையும் பார்த்துக் கொண்டு தனக்குள்ளே விரிகிறான். ஆனால் குருதேவரைக் காக்க வேண்டும் என்ற முனைப்பில் அந்த விசால உணர்வைக் கைவிடுகிறான். 

காற்றின் ஒலிதாண்டி மெல்ல அந்தச் சீறல் ஒலி கேட்கிறது. பல ஜதை மின்மினிப் பூச்சிகள் மின்னுகின்றன. ஓநாய்கள் அவனைச் சுற்றி வளைக்கின்றன.

தமக்குரிய விதியில் இம்மியளவு பிறழாமல் அவை வலம் வந்தன.  எனக்கு அந்த ஓநாய்கள் மீது பெரும் பரிவு ஏற்பட்டது. அவற்றைக் காலம் காலமாக நான் அறிந்து பழகியதுபோல ஒரு உணர்வு ஏற்பட்டது. ஒரு நிலையில் நானே அவற்றுடன் சேர்ந்து என்னையே சுற்றி வருவதுபோலத் தோன்றிற்று. என்கிறான் சீடன். 

கொள்ளிக்கட்டை அணைய, ஓநாய் தாக்குகிறது. இவன் கட்டையை வாயில் திணிக்கிறான். குருதேவரின் கம்பளத்தைக் கிழிக்கின்றன. இப்போது அவனையும் இரண்டு மூன்றாகத் தாக்குகின்றன. அந்தப் போரில் நானும் ஒரு பயங்கர விலங்காக மாறிப்போயிருந்தேன். ஒரு நிலையில் நாங்கள் இரு தரப்பினரும் சம வலிமை பெற்றவர்களாகத் தோன்றினோம். ஓநாய்களுக்குள் ஓநாயாக நான் இருந்தேன். என்கிறான்.

இந்த இடத்தைக் கதையின் முதல் உச்சமாகப் பார்க்க வாய்ப்பிருக்கிறது என்று எண்ணுகிறேன். ஓநாய்களுடன் பொருதும் ஒருவன் ஒரு கணத்தில் ஓநாய்களில் ஒருவனாகவே, தன்னை ஒரு தூய விலங்காகவே உணரும் தருணம். அந்த விலங்கை அவன் தனது இரட்டைச் சகோதரனாகவே நினைக்கிறான். ஒரு இரட்டைச் சகோதரனிடம் ஏற்படும் அன்புடனும், குரோதத்துடனும் நான் அதைத் தாக்கினேன். என்கிறான். ஒரு கணத்தில் தன் குருவின் உடலையும் மறந்து ஓநாயைத் துரத்திக் கொண்டு பின் செல்கிறான். ஒரு விலங்கு இன்னொன்றின் மீது வெற்றிகொள்ளத் துடிக்கும் துடிப்பே அவனைச் செலுத்துகிறது. அவனது அந்த வெறியே குருவின் உடலை மறக்கச் செய்து, ஓநாய்கள் அவ்வுடலை இழுத்துச் செல்ல வழிவகுக்கிறது. 

சில நாட்கள் முன்பு காரில் சென்று கொண்டிருந்த போது, வலது பக்கம் திருப்புகையில் ஒரு அணில் சாலையைக் கடந்து கொண்டிருந்தது. நான் திருப்பிய வேகத்துக்கு என்னால் உடனே வண்டியை நிறுத்த முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் சரியாக நடுச்சாலைக்கு வந்துவிட்ட அணில், நான் வண்டியை மேலேற்றுவதற்குள் சரேலென்று திரும்பி, வந்த வழியே சென்று விட்டது. அன்று நான் அதன் மேல் ஏற்றி விடுவேன் என்றே அஞ்சிக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த அணில் நொடிப்பொழுதுக்கும் குறைவான நேரத்தில், அதென்ன சொல்வார்கள், மயிரிழையில் தன்னைக் காப்பாற்றிக் கொண்டது. இங்குள்ள ஒவ்வொரு உயிருள்ளும் எப்படித் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையான இச்சை பதிந்திருக்கிறது என்று எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. பிரயாணம் கதையில் குரு மரணத்தருவாயில் தன் வாழ்வை இன்னும் சில கணங்களேனும் நீட்டித்துக் கொள்ள வேண்டும் என்ற அந்த ஆதி இச்சையின் பாற்பட்டுத்தான் அந்த ஓநாயின் காலைப் பிய்த்தெடுக்கிறார். அந்தக் கணத்தில் அவரும் ஒரு விலங்கெனவே திகழ்கிறார். சீடன் ஓநாய்களுடன் பொருதும் கணத்தில், தன்னைத் தற்காத்து, அவற்றை வெல்லும் இச்சை உந்த, தன் குருவின் உடலையும் மறந்து தானும் ஒரு விலங்காகி விடுகிறான்.





கதை

  • மரணத்தருவாயிலிருக்கும் தன் குருவுக்கு மருத்துவ உதவி கிட்டச் செய்வதற்காக மலை விளிம்பில் இருக்கும் ஆசிரமத்திலிருந்து, நடக்க இயலாத நிலையில் இருக்கும் அவரை ஒரு பலகையில் வைத்து இழுத்து வருகிறான் சிஷ்யன். 

  • மலையடிவாரம் பல நூறு அடிகள் கீழே. அங்கு ஓர் ஓடை. மலை விளிம்போரமாக பத்துப் பனிரெண்டு மைல் நடந்தால் ஒரு கணவாய், அதன் பின் சமவெளி, அது தாண்டி ஒரு சிற்றாறு. அதன் அக்கரையில்தான் முதன் முதலாக மனித வாடை வீசும் ஹரிராம்புகூர் என்னும் கிராமம். அங்குதான் அவர்கள் செல்ல வேண்டும். 

  • ஆசிரமத்திலிருந்து ஆண்டுக்கு இரண்டு மூன்று முறை அங்கு அத்தியாவசியத் தேவைகளுக்காகப் போய் வருவார்கள். அப்போதெல்லாம் இரண்டு பகல்களே பிடித்தது பயணம். ஆனால் இன்று பாதி மலை இறங்குவதற்குள் ஒரு பகல் போய்விட்டது. அரை மணி நேரத்தில் இருட்டிவிடும்.

  • சிஷ்யன் குருவை கம்பளியால் சுற்றி, குளிரிலிருந்து பாதுகாக்கிறான்.

  • தன்னிடமிருந்த கிழங்கு மாவு கொண்டு, உறைந்த மண்ணெணெயை எரித்து, கஞ்சி கிண்டி குருவுக்கு ஊட்டுகிறான். தானும் குடிக்கிறான்.

  • கஞ்சிப் பாத்திரத்தைக் கழுவாமல் துணியால் துடைக்கிறான். தண்ணீரைச் சேமிக்க. நீர் தீர்ந்தால் கீழே சென்று ஓடையில்தான் எடுத்து வர இயலும். 

  • குரு நாதர் ஒரு யோகி. ஐம்பது வருடம் யோகம் பயின்றவர். மூச்சுவிடுவதே தெரியாது. இப்போது வாயைத் திறந்தபடி சுவாசித்துக் கொண்டிருந்தார்.

  • இயற்கை வருணனை. மலைகள் மீது மலைகளின் நிழல்கள். இரவும், நிழல்களும் ஒன்றறக் கலக்கச் சில நிமிடங்களே இருந்தன.

  • குளிர் இறங்கிக்கொண்டே இருக்கிறது. பனியும் பொழியும். குருதேவரின் கணப்புக்குச் சுள்ளி பொறுக்கிறான். கணப்புக்கு மட்டுமல்ல. பகலில் காணும் அடிசுவட்டுக்குரியவை இரவில் வந்து விடும் என்பதால்.

  • சுள்ளிகளை எரித்து, அவற்றைச் சுற்றி தான் கொண்டு வந்த விறகுகளைத் தணலாக எரிய வைக்கிறான். . அந்தப் பிரதேசத்தில் பறவைகளே கிடையாது. காற்று மிகவும் லேசாக வீசிக்கொண்டிருந்தாலும் மலைச்சாரலில் மோதிப் பிரதிபலிக்க வேண்டியிருந்ததால் ‘கும்’மென்ற ஒலி தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது.

  • குருதேவரின் அருகில் அமர்ந்திருக்கிறான். உறைந்த பேரலைகள் போல் மலைச்சிகரங்கள். தனக்குள் விரியும் உணர்வை அடைகிறான். திடீரென்று மலைகள் இவனை நோக்கி வருவது போலிருக்க மன லயம் கலைகிறது. பின் நட்சத்திரங்களைப் பார்க்கிறான். வெறியுடன் பறந்து செல்லும் உருவங்கள். 

  • கண்கள் மூடி சுவாசிக்கிறான். உறக்கத்துக்குள் தள்ளுகிறது. மீண்டும் மலைகள். நட்சத்திரங்கள், குருதேவரின் மூச்சு என்று கவனம் போகிறது.

  • நான் எக்காரணம் கொண்டும் அன்றிரவு என் நினைவை இழக்கக் கூடாது. மலையைத் தாண்டி, சமவெளியைத் தாண்டி, வனத்தைத் தாண்டி, ஆற்றைத் தாண்டி, ஹரிராம்புகூரை அடைந்தே தீரவேண்டும். என் குருதேவருக்கு வைத்திய உதவி கிட்டும்படி செய்ய வேண்டும். 

  • ஒலிகள். காற்றின் ஒலி. ஓடையின் ஒலி. எல்லாத் திசைகளிலும் விரிகிறான். அந்தத் தனியான ஒலி, சீறல் ஒலி, கேட்கிறது. ஒரு வருடப் பயிற்சியில் அடைந்த மனலயம் தேவையற்றதாகப் போய்விடுகிறது. இரண்டு மின்மினிப் பூச்சிகள். கழியை வீசுகிறான். ஓநாய் அடிவாங்கி ஓடிவிடுகிறது.

  • ஜூவாலையில் குருதேவரைப் பார்க்கிறான். அவர் வாய் மூடியிருந்தது. மூச்சு வரவில்லை. இறந்து விட்டார்.

  • கடைசிச் சுவாசத்துக்குப் பசும்பால் விடமுடியவில்லை. அவரைச் சமவெளியில் பாதுகாப்பாகப் புதைக்க வேண்டும் என்று எண்ணுகிறான். ஓரு ஓநாய் அவரை முகர்ந்து விட்டது. அடுத்து ஒரு ஓநாய்ப் படை வர நேரமாகாது.

  • குரு உறங்குவது போலதான் தோன்றுகிறார். அவர் கால்கள், கைகளைக் கட்டுகிறான். அரைச்சந்திரன் வெளிச்சத்தில் இரவு விடியக் காத்திருக்கிறான். கிழக்கு வானில் வெளிர்ச்சாயம் தோன்றியவுடன், பலகையை இழுத்துக் கொண்டு நடக்க ஆரம்பிக்கிறான். ஒரு ஓநாய் அவனைப் பின் தொடர்கிறது.

  • குருவின் உடல் எடை கூடிவிட்டது. மிகுந்த சிரமத்துடன் பலகையைத் தள்ளுகிறான். இரவுக்குள் சமவெளியை அடைந்து விடமுடியுமா? பல இடங்களில் பாறை வெடித்து பல நூறு அடிகளுக்குக் கீழிறங்கியது. அவற்றில் விழுந்த மிருகங்களின் அழுகிய உடல்கள்.

  • வெளிச்சம் குறைகிறது. உடல் சோர்வு அதிகரிக்கிறது. சமவெளி கண்ணுக்குத் தெரிகிறது. ஆனால் அதை நம்பிப் பயணத்தைத் தொடர முடியாது. மீண்டும் சுள்ளிகளுக்காக அலைகிறான்.  நேற்றைவிட இன்று நான் ஒரு நாள் வயது கூடுதலானவன்; உடல் களைப்பும் பலஹீனமும் அதிகரித்தவன்.

  • சுள்ளிகளை எரித்து, எரியும் விறகுடன் குருதேவரின் அருகிலேயே சுற்றிச் சுற்றி வருகிறான். அருகில் செங்குத்தாக இறங்கும் பெரும் பள்ளம்.என் குருதேவர் நேற்றும் உடலால் எனக்கு எவ்வித உதவியும் செய்ய இயலாதவர். அந்த விதத்தில் நேற்றும் நான் தனியன்தான். ஆனால் நேற்று இல்லாத பீதி இன்று என் அறிவைச் சுருக்கிக்கொண்டிருந்தது. குருவை சமவெளியில் அடக்கம் செய்ய வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறான். காற்றோசையோடு வேறொரு ஓசையும் கேட்கிறது. பல ஜதை மின்மினிப்பூச்சிகள் அவனை நோக்கி முன்னேறுகின்றன.

  • ஓநாய்கள் சுற்றி வருகின்றன. பகலெல்லாம் இருந்த பீதி போய் ஆழ்ந்த அமைதி வருகிறது. சிந்தனைகளே எழவில்லை.

  • ஓநாய்களுக்கும் இவனுக்கும் அந்த விளையாட்டு தொடர்கிறது. இப்படியே இருந்தால் விரைவில் விடிந்து விடும்.

  • தமக்குரிய விதியி இம்மியளவு பிறழாமல் அவை வலம் வந்தன.  எனக்கு அந்த ஓநாய்கள் மீது பெரும் பரிவு ஏற்பட்டது. அவற்றைக் காலம் காலமாக நான் அறிந்து பழகியதுபோல ஒரு உணர்வு ஏற்பட்டது. ஒரு நிலையில் நானே அவற்றுடன் சேர்ந்து என்னையே சுற்றி வருவதுபோலத் தோன்றிற்று.

  • கொள்ளிக்கட்டை அணைய, ஓநாய் தாக்குகிறது. இவன் கட்டையை வாயில் திணிக்கிறான். குருதேவரின் கம்பளத்தைக் கிழிக்கின்றன. இப்போது அவனையும் இரண்டு மூன்றாகத் தாக்குகின்றன. அந்தப் போரில் நானும் ஒரு பயங்கர விலங்காக மாறிப்போயிருந்தேன். ஒரு நிலையில் நாங்கள் இரு தரப்பினரும் சம வலிமை பெற்றவர்களாகத் தோன்றினோம். ஓநாய்களுக்குள் ஓநாயாக நான் இருந்தேன்.

  • ஒரு இரட்டைச் சகோதரனிடம் ஏற்படும் அன்புடனும், குரோதத்துடனும் நான் அதைத் தாக்கினேன்.

  • ஓநாய்கள் குருதேவரின் சடலத்தைக் கவ்வி இழுத்துக் கொண்டிருந்தன. இழுத்துக்கொண்டு பள்ளத்தில் விழுந்து விடுகின்றன. இவன் பலகை தடுக்கி மயங்கி விடுகிறான்.

  • காலை. பள்ளத்தின் குருதேவரின் உடல். வயிறு குதறப்பட்டு, தலை காணாமல் போய். கைவிரல்களைக் கட்டியிருந்த கயிறு அறுந்து, அவரது வலது கைப்பிடியில் தோள் பட்டையோடு பிய்த்து எடுக்கப்பட்ட ஓநாயின் கால்.


19 ஜனவரி, 2011

மானசரோவர்

 மானசரோவர்
ஆசிரியர் : அசோகமித்திரன்
பதிப்பகம் : கிழக்கு
பக்கங்கள் : 207
விலை : ரூ. 90



மானசரோவர் திரையுலகை மையமாக வைத்து அசோகமித்திரன் எழுதியுள்ள மற்றுமொரு நாவல். அவரது மிகப் பிரபலமான இன்னொரு நாவலான கரைந்த நிழல்கள் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலை என்ற ஒரு அருமையான நாவலை வாசித்தது நினைவுக்கு வருகிறது. மானசரோவரில் அசோகமித்திரனின் கண்களினூடாக நாம் பார்க்கும் திரையுலகம் மட்டுமல்ல, அதை ஆதாரமாகக் கொண்டு வாழும் மனிதர்களும், அவர்களின் வினோத குணங்களும் காணக்கிடைக்கின்றன.

இரண்டு முறை வாசித்துவிட்டேன். அசோகமித்திரனின் நேர்மையான சொல் முறைக்காகவே மீண்டும் ஒரு முறை படிக்கலாம். இந்தக் குட்டி நாவலை பாகம் பாகமாகப் பிரித்து எழுதியிருக்கிறார். இரண்டு கதை சொல்லிகள் மாறி மாறி ஒவ்வொரு பாகத்திலும் தன்னிலையிலிருந்து கதை சொல்லுகிறார்கள். விறுவிறுப்பாகவும், அதேநேரம் ஆழ்ந்த தத்துவ தளங்களிலும் பயணப்பட்டுச் செல்லும் இந்த நாவலை சாவி வார இதழில் தொடராக எழுதினார் என்றறிய ஆச்சரியமாக இருக்கிறது. (ஆனால் ஏற்கனவே எழுதி வைத்திருந்த நாவலை கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்து வெளியிடச் செய்திருக்கிறார்). இருந்தாலும் வார இதழ் தொடர்களுக்கே உரித்தான வகையில் ஒவ்வொரு அத்தியாமும் ஒரு மெல்லிய அதிர்ச்சியோடு முடிகின்றது.

சத்யன் குமார் என்கிற வட இந்திய நட்சத்திர நடிகனுக்கும், தமிழ்த்திரையுலகில் கதைக்குழுவில் சொற்ப ஊதியத்துக்குப் பணிபுரிந்து கொண்டிருக்கும் கோபால்ஜிக்கும் (சத்யன் குமாரின் விளிப்பில்) இடையே நிலவும் அபூர்வமான நட்பின் தன்மைதான் கதை. ஒரு பெரிய நட்சத்திர நடிகனுக்கு அன்றாட வருமானத்துக்கே திண்டாடிக் கொண்டிருக்கும் ஒரு நோஞ்சான் எழுத்தாளர் மீது (வேறு யார்? அசோகமித்திரன்தான்) ஏற்படும் இனம் புரியாத ஈர்ப்பும், பிரமிப்பும், அதனால் அவன் அவரை நோக்கிச் செலுத்தப்படுவதும், அவரைப் பின்தொடர்ந்து சென்று இறுதியில் தன்னிலை தெளிதலுமே கதையின் அடிநாதம். பிரிவினைக்கு முந்தைய இந்தியாவில் பெஷாவரில் பிரிந்த இஸ்லாமியச் சிறுவன் பின் மும்பை வந்து சத்யன் குமார் என்ற நடிகனானவன். புகழின் உச்சத்தில் இருந்தவன். காதலில் தோற்றுத் துவண்டு போகும் அவனது சோக நடிப்புக்கும், இறுதியில் அவன் காதலுக்காக செய்யும் தியாகத்துக்கும் தேசமே சொக்கிக் கிடந்திருக்கிறது. ஜவஹர்லால் நேருவே தனியாக அழைத்துப் பாராட்டுமளவு பிரபலமானவன். முப்பதெட்டு வயதாகியும் திருமணம் புரிந்து கொள்ளாமலேயே இருந்து விட்டவன். புகழ் தேயத்தொடங்கும் போது மதராசிக் கம்பெனிகளுக்கு நடிக்க வரும் பிற வட இந்திய நட்சத்திரங்களைப் போலவே அவனும் படம் பண்ணுவதற்காகச் சென்னை வருகிறான். சமீபத்தில் விஜய் டிவியில் கமல் பேட்டி பார்த்தபோது ஒருவேளை இந்த சத்யன் குமார் பாத்திரம் யூசுஃப் கான் என்ற இயற்பெயர் கொண்ட இந்தி நடிகர் திலீப் குமாரைக் குறிக்கிறதோ என்று தோன்றியது. நிச்சயமாகத் தெரியவில்லை. வட இந்தியாவிலிருந்து தமிழகம் வரும் எவருக்குமே இது ஒரு விசித்திரப் பிரதேசமாகத்தான் காட்சி தரும். அதுவும் கதை நடப்பது அறுபதுகளில். ஹிந்தி தெரிந்த ஆட்களைச் சந்திப்பதே சிரமமாக இருக்கிறது. அங்கு அவன் சந்திக்கும் கோபாலின் புன்னகை யாரையோ அவனை நினைவுபடுத்துகிறது.
இவனது புகழும், கவர்ச்சியும் சற்றும் பாதிக்காதைப் போல நடந்துகொள்ளும் கோபால்ஜி இவன் மனதுக்கு மிகவும் நெருக்கமாகி விடுகிறார். அவர் வீட்டுக்கே தேடிச் சென்று அவர் கொடுக்கும் ஃபில்டர் காஃபிக்காகக் காத்திருக்கிறான். அவருக்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவ வேண்டும் என்று நினைக்கிறான். கோபால்ஜியிடம் சத்யன் குமார் கொண்டிருக்கிற நெருக்கம் காரணமாக அவன் எப்போது சென்னைக்கு நடிக்க வந்தாலும் அவரையே அவனுக்கு உதவியாக அனுப்பி வைக்கின்றன படக்கம்பெனிகள். பெரிய நடிகர்கள் சகவாசத்தையெல்லாம் விரும்பாத கோபால் அவனுக்கு இலக்கிய ஆர்வம் உண்டு என்றறிந்து ஆச்சரியப்படுகிறார். ஆனால் அவன் அடிக்கடி வீட்டுக்கு வருவது அவர் மனைவிக்குப் பிடிக்கவில்லை. குடிகாரனையும், பொம்பளைப் பொறுக்கியையும் கூட்டிக் கொண்டு எதுக்கு வீட்டுக்கு வருகிறாய் என்கிறாள். கோபாலுக்குத் திருமணமாகி புக்ககம் சென்று விட்ட மகளும், பள்ளிக்குச் செல்லும் மகனும் உண்டு. திடீர் திடீரென்று பித்துப் பிடித்த மாதிரி உளறுகிறாள். மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்று அவனை மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறார் கோபால். அவர் வீட்டில் யாருக்கும் ஆண்பிள்ளை தங்குவதில்லை. அதை நிரூபிப்பது போலவே அவர் மகனும் அன்றே இறந்து போகிறான். அவன் எப்படி இறந்து போகிறான் என்று நான் சொல்ல மாட்டேன். மனைவிக்குப் பைத்தியம் முற்றிவிடுகிறது. அவளை அவளது தாய் வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்.
தமிழ்நாட்டிலிருந்து ஒரு துணைநடிகையை அழைத்துக் கொண்டு மும்பை சென்று இவளைத்தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்று எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறான் சத்யன் குமார். மனத்தில் மட்டும் கோபால்ஜியின் நினைவு நீங்குவதில்லை அவனுக்கு. மெல்லியதாக மாரடைப்பு வந்து படுத்தவுடன் அவரைப் பார்க்கவேண்டும் என்ற உந்துதல் அதிகமாகி விடுகிறது. உடனே கிளம்பிச் சென்னை செல்கிறான். காரை எடுத்துக் கொண்டு பல இடங்களிலும் சுற்றி அவரைத் தேடுகிறான். எங்கும் பார்க்க முடியவில்லை. பிறகு ஒரு பெண்கள் மறுவாழ்வு நிலையத்தை நடத்தி வரும் பெண்மணியின் மூலம் துப்பு கிடைத்து அவரது சொந்த ஊருக்கு அவரைப் பின்தொடர்ந்து செல்கிறான். அவரைச் சந்திக்கும் போது அவர் தனது குருநாதர் ஸ்தானத்தில் உள்ள ஒரு சித்தரோடு இருப்பதைப் பார்க்கிறான். கோபால்ஜி நான் ஏன் உங்களைப் பார்க்க வந்தேன் தெரியுமா என்று கேட்கிறான். கோபால்ஜி இல்லாத நேரம் அவர் வீட்டுக்குச் சென்றதையும், அங்கு அவரது மனைவியுடன் தான் நடந்து கொண்ட விதம் பற்றியும் சொல்ல விழைகிறான். கோபால்ஜி இப்போது அதெல்லாம் வேண்டாமே என்று மென்மையாக மறுக்கிறார். சித்தரோ அருகில் இருக்கும் நீர்நிலையில் சென்று முழுகிவிட்டு வா, அதுதான் உன் பாவங்களைத் தீர்க்கும் மானசரோவர் என்கிறார். சத்யன் குமார் அதுபோலவே செய்கிறான். இரண்டு நட்புள்ளங்களுக்கிடையே ஏற்பட்டிருந்த கறை  வடு எதையும் ஏற்படுத்தாமலேயே மறைந்து விட வழி வகுத்து விடுகிறார் சித்தர். அசோகமித்திரன் வழக்கம் போலத் தன் நாவலை படக்கென்று முடித்துக் கொள்கிறார்.

கிழக்கு பதிப்பகம் பற்றிச் சொல்ல வேண்டும். கச்சிதமான வடிவத்தில், ஏறக்குறைய எழுத்துப்பிழைகளே இன்றி, வாங்கக்கூடிய விலையில் நூல்களை வெளியிடுகிறார்கள். அவற்றின் வடிவமைப்பின் காரணமாகவே எனக்கு அவர்கள் வெளியிடும் புத்தகங்களின் மீது மோகம் வந்து விட்டது. கடல்புரத்திலேயும், மானசரோவரும், அவர்கள் வெளியிட்டதுதான். நிறைய இலக்கியத் தொடர்பான நூல்களை வெளியிட்டால் நமக்கெல்லாம் சலுகை விலையில் புத்தகங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
நன்றி : வாசகர் அனுபவம்.

17 ஜூலை, 2010

அசோகமித்திரனின் பிரயாணம்

   அசோகமித்திரன் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். அவரது படைப்புகள் பலவற்றை நான் படித்ததில்லை. சிறு வயதில் பள்ளிப் பருவத்தில் அவரது கரைந்த நிழல்களையும்,  ஒற்றனையும், பதினெட்டாவது அட்சச்கோட்டையும் எங்கிருந்தோ   கிடைத்து படித்தேன். அப்போது எனக்கு அவற்றின் இலக்கிய மதிப்பு பற்றி பெரிய அபிப்ராயம் இல்லையென்றாலும் கூட அவை கொடுத்த வாசிப்பனுபவம் அலாதியானது
        அப்போது நான் சாண்டில்யன், கல்கிராஜேஷ் குமார்லக்ஷ்மிரமணி சந்திரன் (இருவருமே  அம்மாவுக்கு 
பிரியமான  எழுத்தாளர்கள்போன்ற எழுத்தாளர்களை மட்டுமே அறிந்திருந்தேன். சுஜாதா கூட அப்போது எனக்கு அறிமுகமாகவில்லை. கேளிக்கை இலக்கியம், தீவிர இலக்கியம் இது பற்றியெல்லாம் பேதம் பிரித்துப் பார்க்கத்  தெரியாத வயது. தொலைக்காட்சியின் ஆதிக்கம் இல்லாத காலம். எனவே வாசிப்பு ஒன்றே உகந்த பொழுதுபோக்காக இருந்தது. வாசிக்கும்போது நாம் ஒரு பிரத்யேக உலகிற்குள் சஞ்சரிக்கும் அனுபவத்தை அது தர வேண்டும் என்பதே வாசிப்புக்கு என் அளவுகோலாக வைத்திருந்தேன். கதையும் கதை தரும் அனுபவமும்தான் முக்கியமாகப் பட்டதே தவிர எழுத்தாளர் பெயரோ அவர் ஆளுமை தருகிற மயக்கமோ அப்போது என்னை ஆட்கொண்டிருக்கவில்லை 
அந்த நாவல்கள் வாசித்துப் பல வருடங்கள் ஓடிவிட்டாலும் அவற்றின் பக்கங்களில் விவரிக்கப்பட்டிருந்த சிற்சில சம்பவங்கள் ஓவியத்தின் தீற்றலைப்  போல என்னுள் அப்படியே உறைந்து போய்விட்டன. இரண்டு நாவல்களின் கதைகளும் நீராவி படர்ந்த கண்ணாடியினூடே பார்ப்பதைப் போல மங்கலாக ஞாபகமிருக்கின்றன. பதினெட்டாவது அட்சக் கோட்டில் என்னை மாதிரியே ஒரு சிறுவன் தன் வயதொத்த ஹைதராபாத் சிறுவர்களுடன் கிரிக்கெட் ஆடுவது மட்டும் நினைவிருக்கிறது.   அந்தச் சிறுவன் நிச்சயமாக அசோகமித்திரனாகத்தான் இருக்க வேண்டும். ஒற்றன் அவரது அயோவா எழுத்துப் பட்டறை அனுபவங்களைப் பற்றியது என்று நினைக்கிறேன். எல்லாம் நினைக்கிறேன்தான். படிப்பது எல்லாமே மறந்து விடுகிறது. அப்புறம் என்னத்துக்கு இப்படி மாஞ்சு, மாஞ்சு படிக்கிறீங்க? என்று என் மனைவி கேட்கும் கேள்விக்கு நான் கொடுக்கும் அறிவுபூர்வமான பதில்கள் அவளுக்கு எப்பொழுதுமே ஏற்புடையதாக இருந்ததில்லை. இருப்பினும் ஏதோ ஒன்று இலக்கியத்தின் பக்கம் இழுத்துக் கொண்டுதானிருக்கிறது.
அசோகமித்திரனுக்கு வருவோம். ஒற்றனில் அவர் தனது எளிமையான, பூடகமும், குறியீடுகளுமற்ற மொழிநடையால் உருவாக்கிக் கொடுத்திருந்த ஒரு புது உலகத்தைப் போன்று வேறொருவர் படைப்புகளில் அதற்கப்புறம் என்னால் அரிதாகவேதான் நுழைய முடிந்திருக்கிறது. வாசகனைக் கவர வேண்டுமென்றோ, அவனை சுவாரசியப்படுத்தும்படியாகச் சம்பவங்களைப் பின்னிக் கொடுக்கவேண்டுமென்ற பிரக்ஞையிலோ அவர் எழுதுவதில்லையெனினும் அவரது வார்த்தைகள் சங்கிலிக் கண்ணிகள் போன்று ஒன்றோடொன்று பிணைந்து நமக்கு புதிய அனுபவத்தை உருவாக்கித் தந்துவிடுகின்றன. அந்தச் சூழ்நிலையில் நாமே நின்று கொண்டிருப்பதைப் போன்று; நாம் பாத்திரமாகி நடமாடும் கதையையே எழுத்தாளன் நமக்குச் சொல்வது போன்று. இயல்பாகத் தன் அனுபவங்களையே அவர் பதிவு செய்வது போலத் தோன்றினாலும் அவரது சொல்முறையில் பொதிந்திருக்கும் மாயம் கதைக்கு ஒரு தனி நிறத்தைக் கொடுத்துவிடுகிறது. அது அசோகமித்திரனின் நிறம்.
             தற்போது மீண்டும் தமிழ் படிக்கும் ஆர்வம் துளிர்த்திருக்கும் போது கையில் அசோகமித்திரன் இல்லை. சமீபத்தில் தாய்நாடு சென்று திரும்பியபோது வாங்கி வந்த புத்தகங்களில் மானசரோவர் இருக்கிறது. தற்போதைக்கு எஸ்.ராவின் உப பாண்டவமும் (படிக்க வேண்டுமென்றால் பக்கத்தில் அவரே வேண்டும் போலிருக்கிறது), ஜில்லி கூப்பரின் போலோவும் நேரத்தை எடுத்துக் கொண்டிருப்பதால் மானசரோவர் காத்துக் கொண்டிருக்கிறது. அவரது சிறுகதைகளை அழியாச் சுடர்களில் படித்தேன். ( தமிழின் மிகச்சிறந்த படைப்பாளர்களின் எழுத்துக்களை அயராது பதிப்பித்து வரும் அழியாச் சுடர்களுக்கும், ராமுக்கும் நன்றி.) சிறுகதைகளில் அசோகமித்திரனின் பிரத்யேக உலகம் காணக் கிடைக்கவில்லை. பெரும்பாலான சிறுகதைகள் அவர் சாட்சியாக இருந்து பார்த்த பிறர் வாழ்வில் நடந்த சம்பவங்களின் அடிப்படையிலேயே எழுதப்பட்டிருப்பதாய்ப் பட்டது. கதைகளைச் சட்டென்று முடித்து விடுகிறார். அவர் சிறுகதைகளைப் புரிந்துகொள்வதற்கு இன்னும் சற்று இலக்கியப் பயிற்சி வேண்டுமோ என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் திடீரென்று ரத்தினம் மாதிரி ஒரு கதை கண்ணில் பட்டது. (மற்றதெல்லாம் ஒன்று குறைவில்லை. மாணிக்கங்கள்தாம்) கதையின் பெயர் பிரயாணம். அவர் தன் குருவோடு கழித்த ஓர் இரவைப் பற்றியது.
     தனக்கு ஒரு வருடம் யோகம் சொல்லிக் கொடுத்த குருவுக்கு வயோதிகத்தின் காரணத்தால் உடல் தளர்ந்திருப்பதால் எங்கு சென்றாலும் அவரை ஒரு கட்டையில் வைத்து இழுத்துச் செல்கிறார். இளமையில் பிராணாயாமம், யோகம் எல்லாம் செய்து ஸ்வாசம் நிகழ்வதே தெரியாமல் வாழ்ந்துகொண்டிருந்த குருவுக்கு இப்போது சாதாரணமாக சுவாசிப்பதே பெரும்பாடாக இருக்கிறது. இருவரும் எங்கெல்லாமோ பயணித்து இறுதியில் ஒரு மலை உச்சியை அடைவதிலிருந்து கதை ஆரம்பிக்கிறது. யாருமற்ற அம்மலையில் இருவரும் ஒரு பாழ் குடிசையில் தங்குகிறார்கள். மிகுந்த களைப்புடனும், உயிர் போகும் நிலையிலுமிருக்கும் தன் குருவுக்கு, தன் தோள்பையிலிருந்து கிழங்கு மாவு எடுத்து கஞ்சி வைத்துக் கொடுக்கிறார். இரண்டு வாய் குடித்து விட்டுக் கண் மூடிக் கொள்கிறார் குரு. சிறிது நேரம் கழித்து அவரது இதயத் துடிப்பைச் சோதித்து அவர் இறந்துவிட்டதை அறிய வருகிறார் அசோகமித்திரன். குரு கடைசியாக அவரிடம் கேட்டிருந்த காரியங்கள் இரண்டு. சாகும் தருவாயில் அவர் வாயில் பசும் பால் விட வேண்டும்; அவரைச் சமவெளியில்தான் புதைக்க வேண்டும். இரண்டாவதையாவது நிறைவேற்ற நினைக்கிறார் அ.மி. ஆனால் அவரைக் கீழே கொண்டு செல்வதற்கு முன் இருள் சூழ்ந்து விடும். விடியும் வரைக் காத்திருக்க வேண்டும். பிணத்தை உள்ளே வைத்து விட்டுக் குடிசைக்கு வெளியில் சிந்தித்தபடி அமர்ந்திருக்கிறார். இரண்டு மின்மினிப் பூச்சிகள் அருகில் ரீங்கரிக்கின்றன. அவற்றை விரட்டப் போக அவை மின்மினிப் பூச்சிகள் அல்ல, ஓர் ஓநாயின் இரு கண்கள் என்று தெரிய வருகிறது. இனி தன் குருவை இங்கு வைத்திருப்பது பாதுகாப்பானதல்ல என்று உணர்ந்து அவரைக் கட்டையில் படுக்க வைத்து கீழே இழுத்துச் செல்கிறார். வழியில் அவரை ஓர் ஓநாய்க் கூட்டம் சூழ்ந்து கொள்கிறது. எல்லாம் குருவின் மேல் பாய ஆயத்தமாயிருக்கின்றன. இவர் ஒரு உடைந்த மரக்கிளையை எடுத்துக் கொண்டு சுழற்றிச் சுழற்றி அவைகளை விரட்டுகிறார். இருந்தும் இரண்டு ஓநாய்கள் அவரது குருவை இழுத்துக் கொண்டு ஒரு புதர்ப்பக்கம் போய் விடுகின்றன. பதற்றத்தோடு அவைகளைத் தடுக்கப்போன அ.மி. கட்டை தடுக்கித் தரையில் வீழ்ந்து மயங்குகிறார். அவர் மயக்கம் தெளிந்து எழுந்து என்ன கண்டார் என்பதை நீங்கள் கதையில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
     கதையில் வரும் பாத்திரங்கள் அசோகமித்திரனும், சில ஓநாய்களும்தான். அவரது குருவுக்கு இறந்துபோவதைத் தவிர வேறு பங்களிப்பு எதுவும் கதையில் இல்லை (என்று சொல்லி விட முடியாது). அட்ரீனலின் அதிக அழுத்தத்தில் பரவும் ஒரு உச்சக்கட்ட விநாடியில் ஒரு மனிதனுக்குள் உறைந்து கிடக்கும் வாழ வேண்டும் என்ற உந்துதல் அவனை ஓநாய்களில் ஒருவனாக்கி விடும் அபூர்வக்கணம் இக்கதையில் நிகழ்வது கதையை வேறு தளத்தில் நகர்த்தி விடுகிறது. கதை முழுவதுமே முற்றிலும் வேறு ஒரு தளத்தில் தான் நிகழ்கிறது. கதை படித்ததும் ஏற்படும் அனுபவத்தை ஒருவேளை ஒரு தேர்ந்த எழுத்தாளர் அழகாக விளக்கலாம். என்னால் முடியவில்லை. அசோகமித்திரன் மீதான பிரமிப்பு மட்டும் மாறாது அப்படியே நிலைத்து விட்டது.

மேலும் வாசிக்க