மொழிபெயர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மொழிபெயர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16 ஆகஸ்ட், 2026

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலையிலிருந்து ஒரு நூல்



எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் சிறுகதைகளின் தொகுப்பு ஒன்று ஆங்கிலத்தில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக அச்சகம் வழியாக வெளிவந்துள்ளது. இந்த நூலில் நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அ.முத்துலிங்கம் அவர்களின் ஐந்து கதைகள் இடம்பெற்றுள்ளன. எகேலுவின் கதை, தீர்வு, புதுப்பெண்டாட்டி, இலையுதிர்காலம், ஆதிப்பண்பு ஆகிய கதைகள் அவை. இந்த ஐந்து கதைகளும் சென்ற 2023-2024 காலகட்டத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அமெரிக்க இலக்கிய இதழ்களான ஸ்பில்வோர்டு பிரஸ், டிஃபங்க்ட், கான்சிக்வென்ஸ் ஆகியவற்றிலும் மற்றும் பிரிட்டிஷ் இலக்கிய இதழான இம்ப்ஸ்பையர்டு இதழிலும் வெளிவந்தன. இவற்றில் கான்சிக்வென்ஸ் இதழ் போரின் கொடுங்கரங்களால் நசுக்கப்படும் மக்களின் கதைகளைப் பதிப்பிக்கும் இதழாக வெளிவந்தது. அதில் அ. முத்துலிங்கம் அவர்களின் “புதுப்பெண்டாட்டி” கதை வந்தது.

பொதுவாக அமெரிக்க, ஆங்கில இலக்கிய இதழ்களுக்குக் கதையோ, மொழிபெயர்ப்பையோ அனுப்பினால் அது பிரசுரத்துக்குத் தகுதியாக உள்ளதா, இல்லையா என்பதை அறிவிக்கவே நாலிலிருந்து ஆறு மாதங்கள் எடுத்துக் கொள்வார்கள். என்னுடைய கதைகளுக்கும், நான் மொழிபெயர்த்த பல கதைகளுக்கும் அவை வெளிவருவதற்கு நான் மாதக்கணக்கில் காத்துக்கொண்டிருந்திருக்கிறேன். ஒரே நேரத்தில் பல்வேறு இதழ்களுக்கு படைப்புகளை அனுப்பியிருக்கிறேன். ஒரு இதழ் நிராகரித்தால் இன்னொன்று அதை வெளியிட்டுவிடாதா என்ற எதிர்பார்ப்புதான். “சப்மிட்டபிள்” என்ற இணையப்பக்கத்தின் வழியாக எண்ணற்ற இதழ்களுக்கு நம் படைப்புகளை அனுப்ப முடியும். என்னுடைய பக்கத்தில் பார்க்கும்போது படைப்புகள் நிராகரிக்கப்பட்டதன் எண்ணிக்கை குறைந்தது ஐம்பது முறையாவது வரும். ஒவ்வொருமுறை நிராகரிக்கப்படும்போதும் படைப்புகளை மெருகேற்றுவது குறித்து எதையாவது கற்றுக்கொண்டேயிருப்பேன். புனைவெழுத்திலும் சரி, மொழியாக்கத்திலும் சரி. 



அ. முத்துலிங்கம் அவர்களின் கதைகளை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்பிய எந்த இதழும் இதுவரை ஒருமுறைகூட நிராகரித்ததில்லை என்பதை இப்போது உணரும்போது என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை. அவருடைய சிறுகதைகள் வெவ்வேறு களங்களையும், ஆவலூட்டும் கதைமாந்தர்களையும், ஒரு நல்ல சிறுகதைக்குரிய இலக்கணத்தையும் கொண்டவை. அவருடைய எந்தக்கதையை வாசித்தாலும் அது நினைவில் நெடுங்காலம் நிற்கும். இன்னொருவருக்கு அந்தக்கதையை அழகாகச் சொல்லிவிட முடியும். மெல்லிய பகடி எல்லாக் கதைகளிலும் இழைந்தோடும். பலகதைகளை அவர் எழுதியே சில பத்தாண்டுகள் இருக்கும். ஆனால் அவற்றை ஆங்கிலத்தில் வெளியிடும் இதழ்கள் அக்கதைகளின் புதுமையாலும், அவற்றின் தனித்துவமான இலக்கிய அழகியலாலும் கவரப்பட்டும்தான் அவற்றை உடனடியாகப் பதிப்பித்திருக்கின்றன என்றே எண்ணத்தோன்றுகிறது.

2023 ல் நான் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் கதைகளை தொடர்ந்து மொழிபெயர்த்துக் கொண்டிருந்தேன். அவற்றில் சில அமெரிக்க இலக்கிய இதழ்களில் வெளியாயின. அவற்றை வாசித்துவிட்டு அ.மு அய்யா அவரே என்னை அலைபேசியில் அழைத்தார். ஜெ கதைகளின் இலக்கியச்சுவையை குன்றாமல் குறையாமல் நான் ஆங்கிலத்திலும் கொண்டு வந்திருப்பதாகப் பாராட்டினார். சொற்றொடர்களை இணைத்தும், பிரித்தும் ஆங்கிலத்தில் உருவாக்க நான் எடுத்துக்கொண்டிருந்த சுதந்திரத்தை அவர் பாராட்டியதும்தான் எனக்கே என்னுடைய மொழிபெயர்ப்பு முறை மீது மிகுந்த நம்பிக்கை வந்தது. புனைவெழுத்துக்குச் செல்வதற்கு முன்னால் ஒரு பாலமாகத்தான் நான் மொழியாக்கப் பணியைக் கைக்கொண்டிருந்தேன். ஆனால் “என் சில கதைகளை உன்னால் மொழிபெயர்க்க இயலுமா?” என்று அவர் கேட்டுக்கொண்டபோது மறுக்க இயலவில்லை. 

அ.மு அய்யா தன் கதைகளின் மொழிபெயர்ப்பில் மிகுந்த கவனம் செலுத்துபவர். நான் ஒவ்வொரு கதையையும் மொழிபெயர்த்து அவருக்கு அனுப்புவேன். அவர் அதை வரிக்கு வரி வாசித்து விட்டு எந்தெந்த இடங்கள் நன்றாக வந்துள்ளன, எங்கெல்லாம் திருத்தங்கள் தேவை என்று அறிவுறுத்துவார். அது மட்டுமல்ல, கனடிய இலக்கிய இதழ் ஒன்றில் பிரதிமேம்படுத்துனராகப் பணிபுரிந்த ஒருவரிடம் நான் மொழிபெயர்த்த கதைகளைக் கொடுத்து அவரிடம் கருத்துக் கேட்பார். முதலிரண்டு கதைகளை அவர் திருத்திக் கொடுத்தார். ஆனால் அவர் திருத்திய இடங்கள் மொத்தம் ஐந்துக்கும் மேலில்லை. மூன்றாவது கதையிலிருந்து, “இந்த மொழிபெயர்ப்பாளர் கதைகளில் திருத்துவதற்கென்று எதுவுமேயில்லை. நீங்கள் எனக்கு வீணாகப் பணம் கொடுக்கிறீர்கள்,” என்று சிரித்துக்கொண்டே கூறினாராம்.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக பிரசுரத்துக்கு இந்தக்கதைகளை அனுப்பி ஓர் ஆண்டாக்கும் மேலாகிறது. ஒரு வாரம் முன்பு அ.மு அவர்களிடம் பேசியபோது இந்த நூல் வெளியாகி விட்டது என்று சொன்னார். “எனக்கு ஒரு பிரதி அனுப்பியிருக்கிறார்கள். மொழிபெயர்ப்பாளர் என்ற முறையில் உங்களுக்கும் பிரதி அனுப்ப வேண்டும். அவர்களுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்,” என்றார். அவர் குரலில் குழந்தையின் குதூகலம்! “இப்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். சொல்வனம் இதழில் அத்வைத வேதாந்தம் குறித்த ஒரு தொடரை பதினேழு பகுதிகள் எழுதி முடித்துவிட்டேன் என்றும், விரைவில் என்னுடைய முதல் ஆங்கில நாவலுக்கான பணிகளில் இறங்குவேன் என்றும் அவரிடம் சொன்னேன். “அய்யா, இப்போதும்கூட உங்களுக்குள் இருக்கும் அந்தக் குழந்தையை நீங்கள் தொலைத்து விடாமல் பாதுகாத்துக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கும் என்னுள் உறையும் அந்தக் குழந்தையைக் காத்துக்கொள்ள வேண்டும். அதற்கான உந்துதலையும், உத்வேகத்தையும் நான் உங்களிடமிருந்துதான் பெற்றுக்கொள்கிறேன்,” என்று அவரிடம் சொன்னேன். 


A Primal Quality in impspired

The Fall in Defunct Magazine

The Story of Ekolu in Spillwords Press

Dilemma in Spillwords Press


 

15 டிசம்பர், 2024

இதாலோ கால்வினோ - தேன் கூடுகளின் வீடு.


இதாலோ கால்வினோ - தேன் கூடுகளின் வீடு.
மொழியாக்கம்: ஜெகதீஷ் குமார்

தொலைதூரத்தில் இருந்து பார்ப்பது சிரமமாக இருந்தது. ஏற்கனவே ஒருவர் இங்கு வந்திருந்தாலும் கூட திரும்பிச் செல்லும் வழியை நினைவுபடுத்திக் கொள்ள முடியாது. ஒருகாலத்தில் இங்கு ஒரு பாதை இருந்தது. ஆனால் நான் மல்பெர்ரி புதர்களை வளர்த்து அதன் தடயங்களை அழித்து விட்டேன். இங்கு என் வீடு திறமையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தது. புதர்களின் கரையில் மறைந்து, பள்ளத்தாக்கிலிருந்து பார்க்க முடியாத அளவிற்கு ஒரு அடுக்குக் கட்டிடமாக, செந்நிறச் சாளரங்களும், வெண்ணிறச் சுண்ணம் பூசப்பட்டும் இருந்தது.
       சுற்றியிருந்த கொஞ்ச நிலத்தில் நான் வேலை செய்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. நத்தைகள் மெல்லும் லெட்யூசுகள் கொண்ட துண்டு காய்கறித் தோட்டம் எனக்குப் போதுமானதாயிருந்தது. முள் கரண்டி கொண்டு கிளறி உருளைக் கிழங்கு பயிரிட மேற்கூரை கொண்ட ஒரு துண்டு நிலமும். எல்லாம் கருநீல நிறத்தில் மொட்டு விட்டுக் கொண்டிருந்தன. எனக்கான உணவுக்காக நான் வேலை செய்தால் போதுமானது. யாருடனும் பங்கிட்டுக் கொள்ள என்னிடம் எதுவும் இல்லை.
       கூரையின் மேல் ஊர்ந்து கொண்டிருக்கிற, பயிரிட்ட நிலத்தின் மேல் மெல்லப் பரவிக் கொண்டிருக்கிற மல்பெர்ரிப் புதர்களை நான் வெட்டி விடவில்லை. நான் உள்பட எல்லாவற்றையும் அவை சூழ்ந்து மூழ்கடித்து விட வேண்டும் என்று விரும்பினேன். சுவர்களின் பிளவுகளுக்கிடையில் பல்லிகள் கூடு கட்டியிருந்தன. எறும்புகள் தரையின் செங்கற்களின் கீழே தங்கள் புற்றுகளைக் குவித்து வைத்திருந்தன. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பிளவு உருவாவதைப் பார்ப்பதற்காக எதிர்பார்த்திருந்தேன். மனித இனத்தின் நகரங்கள் களைகளால் அமுக்கப்பட்டு, விழுங்கப்படுவதைச் சிந்தித்தபடியிருந்தேன்.
       என் வீட்டின் மேற்புறம் துண்டுகளாய் இருந்த முரட்டுப் புல்வெளிகளில் என் ஆடுகளை மேய விட்டிருந்தேன். அதிகாலையில் முயல்களை வாசனை பிடித்தபடி சில நாய்கள் கடந்து போகும். நான் அவற்றைக் கல்லெறிந்து துரத்துவேன். நான் நாய்களை வெறுத்தேன், மனிதனிடம் அவை காட்டும் சுயமரியாதையற்ற நன்றியுணர்வையும் சேர்த்து. எல்லா வீட்டு மிருகங்களையுமே நான் வெறுத்தேன். வழவழத்த தட்டுகளில் மீந்து போனவற்றை நக்குவதற்காக அவை மனிதனிடம் காட்டும் போலித்தனமான கருணையையும் வெறுத்தேன். ஆடுகள் மட்டுமே என்னால் சகித்துக் கொள்ளக் கூடிய விலங்குகள். அவை நெருக்கத்தை எதிர்பார்ப்பதும் இல்லை. கொடுப்பதும் இல்லை.
       என்னைப் பாதுகாத்துக் கொள்ள எனக்கு சங்கிலி பூட்டிய நாய்கள் தேவையில்லை. மனிதர்களின் அசிங்கமான பாதுகாப்புக் கருவிகளான புதர்களோ, தாழ்ப்பாளோ கூடத் தேவையில்லை. என் நிலம் தேன்கூடுகளால் சூழப்பட்டது. தேனீக்களின் பறத்தலென்பது முட்களாலான புதரைப் போல; என்னால் மட்டுமே அதைக் கடக்க இயலும். இரவில் தேனீக்கள் உறங்கினாலும் ஒரு மனிதனும் என் வீட்டருகில் வருவதில்லை. மக்கள் என்னைக் கண்டு அஞ்சினார்கள். அவர்கள் அஞ்சுவது சரிதான். அவர்கள் என்னைப் பற்றிக் கூறுகிற கதைகள் உண்மை என்பதனால் அல்ல. அவை பொய்களே. அவை அவர்கள் வழக்கமாகக் கூறும் விஷயங்களே. ஆனால் அவர்கள் என்னைக் கண்டு அஞ்சுவதும் சரியே. நானும் அதையே விரும்பினேன்.
       மலைமுகட்டின் மேலாகக் காலையில் நான் செல்லும் போது, வீழ்ந்து கிடக்கும் பள்ளத்தாக்கையும், உயர்ந்த கடலையும், என்னைச் சுற்றிலுமுள்ள உலகையும் பார்க்கமுடியும். போலித்தனமான அண்டை வீட்டுத்தனத்தினால் சிதலமாகிக் கிடக்கிற மனித இனத்தின் வீடுகளைப் பார்க்கிறேன். அழுக்கு மஞ்சளும் வெண்ணிறமுமான நகரத்தைப் பார்க்கிறேன். அதன் ஜன்னல்கள் மின்னுவதைப் பார்க்கிறேன். அதன் நெருப்புகளின் புகையைப் பார்க்கிறேன். ஒருநாள் புற்களும், புதர்களும் அதன் பரப்புகளை மூடிவிடும்; கடல் மேலெழுந்து அதன் சிதலங்களைப் பாறைகளாக்கி விடும்.
       இப்பொழுது என்னுடன் தேனீக்கள் மட்டுமே உள்ளன. நான் கூடுகளிலிருந்து தேன் எடுக்கும் போது அவை என்னைக் கொட்டாமல் சுற்றி ரீங்கரித்தபடி இருக்கும். உயிருள்ள தாடியைப் போல சூழ்ந்திருக்கும். தேனீக்கள், நட்பான, வரலாறற்ற பழங்கால இனம். வருடக்கணக்கில் தேனீக்களுடனும், ஆடுகளுடனும் இந்தப் புதர்களின் கரையில் வாழ்ந்து வருகிறேன். முன்பெல்லாம் ஒவ்வொரு வருடம் கழிவதையும் சுவற்றில் குறித்து வைக்கிற பழக்கம் இருந்தது. இப்போது மல்பெர்ரிப் புதர்கள் எல்லாவற்றையும் சூழ்ந்து விட்டன. நான் எதற்காக மனிதர்களோடு வாழ்ந்து, அவர்களுக்காக வேலை செய்ய வேண்டும்? அவர்களது வியர்வை படிந்த கரங்களையும், குரூரமான சடங்குகளையும், அவர்களது நடனங்களையும், சர்ச்சுகளையும், அவர்களது பெண்களின் அமிலம் கொண்ட எச்சிலையும் வெறுக்கிறேன். அவர்கள் என்னைப் பற்றிச் சொல்லுகிற கதைகளெல்லாம் உண்மையல்ல. நம்புங்கள். அவர்கள் எப்போதுமே என்னைப் பற்றிய கதைகளைச் சொல்லிக் கொண்டுதானிருக்கிறார்கள். பொய்ப் பன்றிகள்!
       நான் யாரிடமும் கடன் பட்டதுமில்லை; யாருக்கும் கொடுப்பதுமில்லை. இரவில் மழை பெய்தால் காலையில் கரையோரம் நெளிகிற நத்தைகளை சமைத்து உண்பேன். காட்டுக்குள் நிலம் மென்மையான, ஈரம் படர்ந்த நாய்க்குடைகளால் விரவிக் கிடக்கும். காடு எனக்குத் தேவையான அனைத்தையும் கொடுத்து விடுகிறது. எரிப்பதற்கான குச்சிகள், பைன் கூம்புகள், மற்றும் கொட்டைகள். முயல்களையும், பறவைகளையும் வலை விரித்துப் பிடிப்பேன். அதற்காக எனக்குக் காட்டு விலங்குகளின் மீது பிரியம் உண்டென்றோ, மனிதனின் அபத்தமான பாசாங்குகளில் ஒன்றான ‘இயற்கை மீது அபிமானம்’ கொண்டவனென்றோ எண்ணி விட வேண்டாம். இவ்வுலகில் வலிமையுள்ளது மட்டுமே வெல்லும் என்பதும், நாம் ஒருவரையொருவர் விழுங்குவதே நியாயம் என்பதும் எனக்குத் தெரியும். நான் உண்ண விரும்பும் விலங்குகளை மட்டுமே கொல்கிறேன். அதுவும் வலை விரித்தே, துப்பாக்கியால் அல்ல. எனவே என் இரையைத் தேடி எடுக்க நாயின் உதவியோ, மனிதர்களின் உதவியோ தேவையில்லை.
       காட்டில் கோடரிகள் மரம் வெட்டும் மந்தமான ஒலி என்னை எச்சரிக்காத பொழுதுகளில் நான் சில மனிதர்களை சந்திக்க நேர்வதுண்டு. நான் அவர்களை பார்க்காதது போல் பாவிப்பேன். ஞாயிற்றுக் கிழமைகளில் காட்டுக்குள் எரிபொருள் சேகரிக்க குடியானவர்கள் வருவார்கள். அவற்றைச் சேகரித்து கற்றாழைக் கட்டைப் போல் தலையில் சுமப்பார்கள். வெட்டப்பட்ட மரங்கள் கயிறுகளால் இழுத்துச் செல்லப்பட்டு சொரசொரப்பான பாதைகளை உருவாக்கியிருந்தன. புயலின் போது மழை நீர் அவற்றில் சேகரமாகி நிலச்சரிவைத் தூண்டி விடும். மனித இனத்தின் நகரங்களில் உள்ள ஒவ்வொன்றும் இதே போன்றே அழிவைச் சந்திக்கட்டும். ஒரு நாள் நான் இவ்வழியே நடந்து செல்லும் போது நிலத்தின் மீதாக எழுகிற சிம்னிகள், அரித்துக் கிடக்கிற தெருக்களைச் சந்திப்பதைப் பார்ப்பேன். காட்டின் மத்தியில் ஓடுகிற இருப்புபாதைத் தடங்களில் இடறுவேன்.
       ஆனால் என்னை அழுத்திக் கொண்டிருக்கிற என் தனிமையின் காரணமாக நட்சத்திர ஒளி நீண்ட ஒரு மாலைப் பொழுதில் எந்த ஒரு குறிப்பிட்ட எண்ணமுமின்றி மனித இனத்தின் வீடுகளை நோக்கி நான் சென்றிருக்க வாய்ப்புண்டா என்று நீங்கள் வியப்புறலாம். தோட்டங்கள் சூழ்ந்த சுவர்கள் கொண்ட வீடுகளை நோக்கி ஓர் இதமான மாலைப்பொழுதில் நான் சென்றேன். கீழே இருந்த் குறு ஆப்பிள் மரங்களைத் தாண்டிச் சென்றேன். ஆனால் பெண்கள் சிரிப்பும், தூரத்திலொரு குழந்தையின் கூக்குரலும் கேட்டவுடன் திரும்பி விட்டேன். அதுதான் கடைசி முறை. நான் இப்போது தனியனாகத்தான் இருக்கிறேன். அத்தவறை நான் மீண்டும் இழைத்து விடுவேனோ என்று உங்களைப் போலவே நானும் அவ்வப்பொழுது அஞ்சுவதுண்டு. எனவே உங்களைப் போலவே நானும் முன் போல வாழ்ந்து வருகிறேன்.
       என்னைக் கண்டு உங்களுக்கு அச்சம் ஏற்படுது சரிதான். ஆனால் அன்று நிகழ்ந்த அந்த நிகழ்வினால் அல்ல. அது நிகழ்ந்ததோ, இல்லையோ. அது பல வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது. இப்போது அது பற்றிப் பொருட்படுத்தத் தேவையில்லை.
       அந்தப் பெண், அன்று அறுவடைக்கு வந்த அந்தப் பெண் – நான் இங்கு வந்து அப்பொழுது சிறிது காலமே ஆகியிருந்தது. நான் முழுவதுமாக மனித உணர்வுகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தேன் – அவள் ஒரு மலைச் சரிவின் மீது வேலை செய்து கொண்டிருக்கையில் கண்டேன். அவள் என்னை வாழ்த்தினாள். நான் பதிலிறுக்காது நகர்ந்தேன். நான் அப்பொழுது மனித உணர்வுகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தேன். அது போல ஒரு பழைய வெறுப்பினாலும். அந்த வெறுப்பின் காரணமாக – அது அவள் மீது அல்ல – அவள் அறியாது அவளைப் பின் தொடர்ந்து சென்றேன்.
       மக்கள் இப்போது சொல்லிக் கொண்டிருக்கிற கதை நிச்சயம் தவறுதான். ஏனெனில் அன்று அந்தப் பள்ளத்தாக்கில் யாரும் இல்லை.எனவே என் கரங்கள் அவள் குரல்வளையைச் சுற்றியபோது யாரும் அவளைக் கேட்டிருக்க முடியாது. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமானால் என் கதையை முதலில் இருந்து சொல்லியாக வேண்டும்.
சரி, அந்த மாலையைப் பற்றி இனிப் பேச வேண்டாம். இப்போது நான் இலைகளைத் துளையிடுகிற நத்தைகளோடு லெட்யூசுகளைப் பங்கிட்டுக் கொண்டு வாழ்ந்து வருகிறேன். நாய்க்குடைகள் எங்கு வளரும் என்றும் அவற்றில் நல்லது எது, விஷம் கொண்டது எது என்றும் என்னால் சொல்ல இயலும். பெண்கள் பற்றியும், அவர்களது விஷம் பற்றியும் இப்போது சிந்திப்பதில்லை. கற்புடனிருப்பது என்பது பழக்கம் தவிர வேறென்ன?
       புல்லரிவாளோடு வந்த அந்த கறுத்த பெண்தான் கடைசி. வானம் மேகங்கள் நிறைந்து கிடந்தது. கருத்த மேகங்கள் மிதந்து சென்றது நினைவுக்கு வருகிறது. இது போன்று மேகங்கள் விரைகிற, மலைச்சரிவில் ஆடுகள் மேய்கிற ஒரு பொழுதில்தான் முதல் மனித இணைப்பு நிகழ்ந்திருக்க வேண்டும். மனிதத் தொடர்பில் பரஸ்பர திகிலும், வெட்கக்கேடுமே நிகழ வாய்ப்புண்டு. அவற்றைத்தான் அவள் கண்களில் காண விரும்பினேன். அந்தத் திகிலையும், வெட்கக்கேட்டுணர்வையும். அதற்காகவே அந்தக் காரியத்தைச் செய்தேன். நம்புங்கள்.
       யாரும் என்னைப் பற்றி ஒரு வார்த்தை சொன்னதில்லை. சொல்லவும் முடியாது. ஏனெனில் அந்த மாலையில் பள்ளத்தாக்கில் யாரும் இல்லை. ஆனால் லாந்தர் விளக்கில் ஒரு பழைய புத்தகத்தின் அர்த்தத்தை என்னால் விளங்கிக் கொள்ள முடியாத இரவுகளில், இருளில் மலைகள் தொலைந்து போய்விடுகிற இரவுகளில் கீழே தங்கள் இசையோடும், ஒளியோடும் இருக்கிற மனித ஜீவன்களை என்னால் உணர முடிகிறது. உங்கள் எல்லாரது குரல்களும் என்னைக் குற்றஞ்சாட்டுவதை என்னால் உணர முடிகிறது.
       ஆனால் அந்தப் பள்ளத்தாக்கில் யாருமே என்னைப் பார்த்திருக்கவில்லை. அவர்கள் அந்த மாதிரிப் பேசுவதற்குக் காரணம் இங்கு வரும் பெண்கள் வீடு திரும்பாதுதான்.
       மேலும் எப்பொழுதும் இவ்வழிச் செல்லுகிற நாய்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று, உறுமியபடி மோப்பம் பிடித்து, தங்கள் பாதத்தால் தரையைக் கிளறினால், அதற்குக் காரணம் அங்கு ஏதேனும் ஒரு எலி வளை இருப்பதுதான். சத்தியமாக, அங்கிருப்பது ஏதேனும் ஒரு எலி வளைதான்

23 செப்டம்பர், 2024

மொழிபெயர்ப்புக்கான கனடிய இலக்கியத் தோட்டத்தின் விருது



கனடிய தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2023-க்கான மொழிபெயர்ப்பு விருது எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பவா செல்லத்துரையின் புகழ்பெற்ற நூலான “சொல்வழிப்பயணம்” நூலை A Journey Through Words என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயெர்த்திருந்தேன். அதற்கு முன் ஜெயமோகனின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அவை அமெரிக்க, ஆங்கில இதழ்களில் வெளியாகி கவனம் பெற்றன. புது தில்லியின் ரத்னா பதிப்பகம் அவற்றை நூலாக A Fine Thread and Other Stories என்ற பெயரில் வெளியிட்டது. இப்பணிகளைக் கருத்தில் கொண்டு எனக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. 

கனடிய இலக்கியத்தோட்டத்தின் நிறுவனர்களில் ஒருவரான எழுத்தாளர் திரு. முத்துலிங்கம் சென்ற மாதம் அலைபேசியில் அழைத்து என்னிடம் இதை அறிவித்தார். எனக்கு விருது அறிவிக்கப்பட்ட மகிழ்ச்சியைவிட அவர் மூலம் தெரிவிக்கப்பட்டதுதான் பெரும் உவகை கொள்ள வைத்தது.  முத்துலிங்கம் அய்யா தமிழின் ஆகச் சிறந்த படைப்பாளி. அவர் கையால் இந்த விருது வழங்கப்படுவது எனக்குப் பேறு. 

இதற்கான விருது விழா கனடாவின் ஓண்டாரியாவில் வரும் அக்டோபர் 20 தேதி நடக்கிறது. என் மனைவி அனுஷாவும், நானும் அங்கு பதினெட்டாம் தேதி வாக்கில் செல்வோம். கனடா செல்வதற்கான விசாவுக்கு விண்ணப்பித்து, இன்னும் இரண்டொரு நாட்களில் கனடிய எம்பஸியிலிருந்து  கடவுச்சீட்டை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்,

கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், கொடையாளர்கள் ஆகியவர்களின் ஆதரவுடன் ஓர் அறக்கட்டளையாக 2001ம் ஆண்டு ரொறொன்ரோவில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் பொதுவான நோக்கம் உலகமெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதாகும். தமிழ், ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்பு, அரிய தமிழ் நூல்களை மீள் பதிப்பு செய்வது, தமிழ் பட்டறைகள் நடத்துவது, நூலகங்களுக்கு இலவசமாக தமிழ் நூல்கள் அளிப்பது, தமிழ் சேவையாளர்களுக்கு விருதுகள் வழங்குவது ஆகியவை இதனுள் அடங்கும்.



என்னுடன் சேர்ந்து புனைவுக்கான விருதை ஏ.எம். றஷ்மியும், அல்புனைவு விருது பி. விக்னேஸ்வரனுக்கும், கவிதை விருது இளவாலை விஜயேந்திரனுக்கும், இலக்கியம் மற்றும் சமூகப்பணிக்கான விருது பார்வதி கந்தசாமிக்கும் வழங்கப்படுகிறது. 

இவ்வாண்டுக்கான இயல் விருது பெறுபவர் சிந்து வெளி ஆய்வாளர் திரு. ஆர். பாலகிருஷ்ணன். இந்திய ஆட்சிப்பணி அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ‘தமிழ் ஒரு மாநிலத்தின் மொழியல்ல, அது ஒரு நாகரிகத்தின் மொழி’ என்றும் ‘சங்க இலக்கியம் இந்தியத் துணைக்கண்டத்திற்கான இலக்கியம்’ என்றும் தொடர்ந்து வலியுறுத்திவருபவர். சிந்துவெளி நாகரிகத்துக்கும் பண்டைய தமிழகத்திற்கும் உள்ள உறவு குறித்த பாலகிருஷ்ணன் எழுதிய ‘Journey of a Civilization: Indus to Vaigai’ என்கிற நூல் வெளியானபோது, அது சிந்துவெளி ஆய்வுலகில் பல தாக்கங்களை ஏற்படுத்தியது. பின்னர் வெளியான அதன் தமிழ்ப் பதிப்பான ‘ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை’ உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களிடைய பெரும் வரவேற்பைப் பெற்றது. தனது முப்பது ஆண்டிற்கும் மேலான ஆராய்ச்சியில் உருவான இந்த நூலை மக்கள் பதிப்பாகக் கொண்டுவர தமிழ்நாடு அரசிற்கு அர்ப்பணித்துள்ளார். அது விரைவில் வெளிவர உள்ளது. திருக்குறள், சங்க இலக்கியம் ஆகிய இரண்டையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதை தனது வாழ்நாள் பணியாகச் செய்து வருகிறார் பாலகிருஷ்ணன். 

கனடிய இலக்கியத்தோட்டத்தின் விருதுகள் மீது எனக்கு மிகுந்த மதிப்புண்டு. சென்ற ஆண்டுகளில் பெரும் மேதைகளுக்கு இயல் விருது வழங்கப்பட்டிருக்கிறது. தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கான மொழிபெயர்ப்புகள் இதற்கு முன்பு  கல்யாண் ராமன்,  ரா. கார்த்திகேசு, வைதேகி ஹெர்பெர்ட், மார்த்தா ஆன் செல்பி ஆகியோருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இவர்கள் நிரையில் இணைவது எனக்குப் பெருமை. அதே நேரம், தொடர்ந்து செயலில் ஈடுபட்டிருக்கச் செய்யும் வினையூக்கியாகவும் இவ்விருதினைக் கொள்வேன்.




16 ஜூலை, 2022

தேன்கூடுகளின் வீடு மொழியாக்கம் - சொல்வனம் இதழில்

 இடாலோ கால்வினோவின் தேன்கூடுகளின் வீடு என்ற சிறுகதை என் மொழியாக்கத்தில் சொல்வனம் இதழில் வெளியாகியுள்ளது. நன்றி சொல்வனம்.

கதையை வாசிக்க

தேன்கூடுகளின் வீடு

Image Courtesy: Wikimedia Commons.


20 மே, 2010

அற்புதமான நாவல்கள்

இருபதாம் நூற்றாண்டில், அதுவும் அதன் பின் ஐம்பது ஆண்டுகளில், இந்தியாவில் பல அற்புதமான நாவல்கள் வெளிவந்துள்ளன. பல நல்ல இலக்கியங்கள், தேர்ந்த மொழி பெயர்ப்பாளர்களின் கடின உழைப்பால் தமிழ் இலக்கிய உலகிற்கு வந்தன.

அன்புள்ள ஜெகதீஷ் குமார்,நீங்க கேட்ட பட்டியல்:

1. கங்கைப் பருந்தின் சிறகுகள் - லக்ஷ்மீ நந்தன் போராவங்கம்
2. ஆரோக்கிய நிகேதனம் - தாரா சங்கர் பானர்ஜி
3. கொல்லப்படுவதில்லை - மைத்ரேயி தேவி
4. நீலகண்டப் பறவையைத் தேடி - அதீன் பந்த்யோபாத்யாய்
5, பதேர் பாஞ்சாலி - விபூதி பூஷண்பந்த்யோபாத்யாய்குஜராத்தி
6. வாழ்க்கை ஒரு நாடகம் - பன்னாலால் படேல்இந்தி
7. சதுரங்கக் குதிரைகள் - கிரிராஜ் கிஷோர்
8. தர்பாரி ராகம் - ஸ்ரீலால் சுக்லகன்னடம்
9. ஒரு குடும்பம் சிதைகிறது - எஸ். எல். பைரப்பா
10. மண்ணும் மனிதரும் - சிவராம காரந்த்
11. முதலில்லாததும் முடிவில்லாததும் - ஸ்ரீரங்க
12. சம்ஸ்காரா - யு. ஆர். அனந்தமூர்த்தி
13, சிக்கவீர ராஜேந்திரன் - மாஸ்தி வெங்கடேச அய்யங்கார்மலையாளம்
14. அண்டைவீட்டார் - பி. கேசவதேவ்
15. பாத்தும்மாவின் ஆடும் இளம்பருவத்தோழியும் - வைக்கம் முகமது பஷீர்.
16. ஏணிப்படிகள் - தகழி சிவசங்கரப்பிள்ளை
17. மீசான் கற்கள் - புனத்தில் குஞ்ஞப்துல்லாமராட்டி
18. பங்கர்வாடி - வெங்கடேஷ் மாட்கூல்கர்
19. யயாதி - வி. எஸ். காண்டேகர்பஞ்சாபி
20. வெண்குருதி - நானக் சிங்தெலுங்கு
21. அற்ப ஜீவி - ஆர்.விஸ்வனாத சாஸ்திரிஉருது
22. அக்னி நதி - குர் அதுல் ஐன் ஹைதர்
thanks sammuvam,thanks baski reviews

மேலும் வாசிக்க