கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10 அக்டோபர், 2025

பாலாஜி ராஜூ கவிதைகள்

 


பாலாஜி ராஜூ கவிதைகள்

அன்புள்ள பாலாஜி,

நீண்ட நாளைக்குப் பின் இன்றைக்குத்தான் உங்கள் வலைத்தளத்தைக் கண்டடைந்தேன். ஏற்கனவே நீங்கள் பகிர்ந்திருந்த சுட்டியில் உள்ள முகவரியை மாற்றி விட்டீர்கள் போலிருக்கிறது. அப்புறம் என் கதைக்கு நீங்கள் எழுதிய விமர்சனத்தின் சுட்டி என் தளத்தில் இருந்தது. அதிலிருந்து மீண்டும் உங்கள் தளத்தை அடைந்தேன்.

மீண்டும் கவிதைகளுக்குள் நீங்கள் இறங்கியிருப்பது மகிழ்ச்சியாயிருக்கிறது. கவிதை இருப்பதிலேயே சவாலான வடிவம் என்று நான் அவையடக்கத்துக்காகவெல்லாம் சொல்லவில்லை. அது உண்மையிலேயே அப்படித்தான் என்று உங்களுக்கும் தெரியும். ஆனால் நீங்கள் கவிதைகளிலேயே உழல்கிற மனிதன் என்று எனக்குத் தெரியும். அதனால் கவிதையின் சிடுக்குகளும், நுணுக்கங்களும் உங்களுக்கு எளிதில் புலப்படும். நீங்கள் இப்போது எழுதியிருக்கிற சில கவிதைகளை வாசித்தேன். எல்லாக் கவிதைகளுமே எனக்குப் பிடித்திருந்தது. சமயத்தில் கவிதை உங்களை வைத்து தன்னை எழுதிக் கொள்கிறது என்று பட்டது. கலைக்கு ஒப்புக்கொடுத்தவனை அது ஒருபோதும் கைவிடுவதில்லை. ஒவ்வொரு கவிதையும் தன்னளவில் முழுமையானதாக இருந்தது. நிற்க. நான் விமர்சனம் எழுதுவதற்கு தற்போதெல்லாம் விரும்புவதில்லை. அதற்கான கலைச்சொற்களை உபயோகித்து புனைவு மொழியைச் சிக்கலாக்கிக் கொள்ள விரும்பவில்லை என்பதனால்தான். அதனால் கீழ்க்காணுவது விமர்சனமன்று. உங்களிடம் பேசினால் என்ன சொல்வேனோ அதை எழுத்தில் கொடுத்திருக்கிறேன் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.

காத்திருப்பின் கவிதை முதலில். முற்று என்ற தலைப்பு காத்திருப்பு முற்றுப்பெறுவதைக் குறிக்கிறது. நாங்கள் காத்திருந்தோம் என்று துவங்கி அது பிரபஞ்சத்தின் காத்திருப்பாக மாறுகிறது. பின் அது ‘அவனின்’ காத்திருப்பு முற்றுப்பெறுவதில் முடிவடைகிறது. 

கவிதையில் இருக்கும் ஒரு வசதி தத்துவத்தை நேரடியாகவே பேசலாம். நமக்கான தத்துவத்தைக் கூட உருவாக்கிக் கொள்ளலாம். இக்கவிதை ‘நாங்கள்’லிலிருந்து பிரபஞ்சம் நோக்கி விரிவடைகிறது. பிண்டத்திலுள்ளது அண்டத்திலும் என்பார்கள். அதைத்தான் இக்கவிதை பேசுகிறது என்று நினைக்கிறேன். அத்வைதம் இருப்பதெல்லாம் நான் மட்டுமே என்கிறது. இங்கு அந்த இருப்பு “காத்திருப்பாகக்’ கூறப்படுகிறது. (என் மனதில் இந்தக் கணம் என்ன தோன்றுகிறதோ அதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.)

பிரார்த்தனை அழகான கவிதை. இரந்து நிற்பவனுக்குக் கையளிக்கும் நிலையிலிருப்பதை எண்ணிக் குற்றவுணர்வு கொள்பவனின் பிரகடனம். வீடிலியின் பதாகை, கீழிறங்கி வரும் புனிதக்கை என்ற கூர்மையான பதப்பிரயோகங்கள். ரஜினி சொல்வது போல இறைவன் காசை தூக்கிப்போட்டு விளையாடுகிறான். அது விழுவதைப் பொறுத்து நாம் காருக்குள் இருக்கிறோமா, அல்லது வெளியிருந்து இரக்கிறோமா என்பது.

பத்திரம் எல்லாருடைய அனுபமும்தானே! மொழியைக் கனவாகக் கொண்ட கலைஞனுக்கு பத்திரத்தின் மொழி, நுணுங்கிய அர்த்தமற்ற வார்த்தைகளாகத்தான் தெரியும். சென்ற பருவத்தில் என் முதுகலைக்காக ஓர் ஆய்வறிக்கை நாற்பது பக்கங்களில் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. முழுக்க முழுக்க செயப்பாட்டு வினை வாக்கியங்களினால் எழுதப்பட வேண்டிய கட்டுரை. ஆங்கிலத்தின் புனைவுமொழியில் கனவு காணும் எனக்கு இந்தக் கட்டுரை எழுதியது சித்திரவதையாக இருந்தது. மொழி வெளிப்பாட்டில் நிறையத் தவறுகள் செய்தேன். செத்துப்போன மொழியில் அது எழுதப்பட வேண்டும். அப்போதுதான் அது ஆய்வறிக்கை போலத் தோற்றமளிக்கும். என் பேராசிரியர் எனக்கு ஏகப்பட்ட திருத்தங்களைச் சொன்னார். ஒருவழியாக முடித்து விட்டேன். கடைசியாகத் திருப்தியுடன் கைநாட்டுப் போட்டது எனக்குள் இருந்த அந்த ஹிப்பி கலைஞன்தான்.

மறக்கப்படுபவை எளிமையான கவிதைதான். ஆனால் பாதங்களும், காலணிகளும் ஏற்றிவைக்கப்படும் குறியீடுகளாகச் செயல்படும்போது அவை வேறு அர்த்தங்களைக் காட்டி நிற்கக் கூடும்.

அடுக்குகள் - கடைசி ஏழுவரிகளில் அபாரமான கவித்துவம் மிளிர்கிறது. அதற்காகவே மேற்கண்ட வரிகளை மன்னித்து விடலாம்.

நானும் அவனும் கவிதை என்னை என்னவோ செய்தது. உங்கள் தளத்தில் ஜெ-யின் ‘அருகே கடல்’ வாக்கியத்தை வைத்திருக்கிறீர்கள். அதில் ஒருவன் தன்னை இரண்டாகக் கிழித்து தன் இணையுருவத்துடன் பொருதுவான் (இக்கதை என் மனத்துக்கும் அணுக்கமானது. நீங்கள் சொல்லி நான் மொழிபெயர்த்தது என்று நினைக்கிறேன்.) இதிலும் கவிஞனும், பந்தயவீரனும் இணையாக ஓடுகிறார்கள். இறுதியில் வீரன் வீட்டின் நிசப்தத்தை அனுபவிக்கிறான், கவிஞன் மைதான இரைச்சலைக் கேட்கிறான். ஒவ்வொரு நல்ல கலையிலும் இந்த உருமாற்றம் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.

புதிய நகரம் அற்புதமான கவிதை. கடைசி இரண்டு வரிகளுக்கும் முன்பே கவிதை முடிந்து விட்டது. அந்த மூன்று புள்ளிகள் கூடத் தேவையில்லை என்று தோன்றுகின்றது. கவிதையை மீண்டும் மீண்டும் வாசித்து அனுபவித்தேன். பெரிய பாவனைகளின்றி, பாசாங்குகளின்றி, எளிய சொற்களால் உங்களால் ஒரு கவிதையை உருவாக்கி விடமுடிகிறது. கவிதாதேவி உங்களுக்கு ஆசி வழங்கி விட்டாள்!

நான் மேற்சொன்ன கருத்துக்கள் பரிணாமம், சட்டகம், குவளை ஆகிய கவிதைகளுக்கும் பொருந்தும். கவிதையின் வாசகனாக எனக்குச் சொல்வதற்கொன்றுண்டு. இலக்கியத்தின் பிற வடிவங்கள் போன்றே கவிதைக்கும் அது தரும் அனுபவமே முதன்மையானது. அதன் பின்னரே அக்கவிதையை அணுகி ஆராய்ந்து அதன் மறைபொருட்களைக் கண்டறிந்து ருசிக்க வேண்டும். உங்களது ஒவ்வொரு கவிதையும் ஒரு தனித்த அனுபவத்தைத் தருகிறது. அதன் தேர்ந்தெடுத்த சொற்களை மெல்ல கண்களால் சுவைக்க முடிகிறது. (மெல்ல மெல்ல என்று ஒரு கவிதை துவங்குகிறது, சட்டென்று என் வாசிப்பின் வேகம் குறைந்தது). இதற்கு முன் நீங்கள் எழுதிய கவிதைகளில் எனக்கு ஒரு விமர்சனம் இருந்தது. நீங்கள் கவிதைகளை வலிந்து முடித்து வைக்கிறீர்கள் என. ஆனால் இன்று நான் வாசித்த கவிதைகள் அனைத்தும் அவையே அழகாக அமைந்து முடிகின்றன. ஒவ்வொரு கவிதையும் தன்னளவில் முழுமையானதாக மிளிர்கிறது. அவ்வப்போது புக்காவ்ஸ்கியாக மாறி முலை மறந்த குழந்தையின் நினைவாக மதுக்கோப்பையையும் கவ்விக் கொள்கிறீர்கள். நீங்கள் இக்கவிதைகளைத் தொகுப்பாகக் கொண்டு வரவேண்டும் என்பதே என் ஆவல்.

அண்மையில் ஒரு கதை எழுதுவதற்காக (அது பற்றி அடுத்த பாராவில் சொல்கிறேன்) தலைப்பு தேடி திருமூலரை வாசித்தேன். சேய விளக்கு என்ற சொல், ஆன்மாவின் ஒளி என்ற பொருள் தரும், அதை வாசித்ததும் மனம் அதிலேயே சுற்றிக் கொண்டிருந்தது. திருமூலரின் மேலும் சில பாடல்களை அன்று வாசித்துக் கொண்டிருந்தேன். மனம் பூரிப்பில் மிதந்தது. அத்வைதத்தின் கலைச்சொற்களின் அறிமுகம் தவிர வேறெந்த முன்னறிவும் அவர் பாடல்களை ரசிக்கத் தேவையில்லாமல் இருந்தது. ஒவ்வொரு வரியும், சொல்லும், ஓர் இனிய அனுபவம். அந்த சுகத்தை உங்கள் கவிதைகளிலும் அனுபவித்தேன் (உ.வெ.பு.இ - உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை).

கதை பற்றி. தினமணி ஆசிரியர் பாவை சந்திரன் என் எண்ணைக் கண்டுபிடித்து தீபாவளி மலருக்கு ஒரு சிறுகதை கேட்டார். எனக்கு பூரிப்பு தாங்கவில்லை. மூன்று நாட்களில் வேண்டுமென்று. என்னால் முடிக்க முடியுமா என்று தெரியவில்லை என்றேன். முயற்சி செய்யுங்கள் என்றார். இரண்டு நாட்களில் முடித்து விட்டேன். தலைப்பு சேயவிளக்கு என்று வைக்கவில்லை (இன்னொரு கதைக்கு வைப்பதற்காக முன்பதிவு செய்திருக்கிறேன். உங்கள் கவிதைக்கு உபயோகிப்பதானால் என்னிடம் முன் அனுமதி பெறவும் 😀).ஒரு நாள் முழுக்க எடிட் செய்து அனுப்பி வைத்தேன். வழக்கம் போல அனுதான் ஆசிட் டெஸ்ட். (எழுதுவதை மனைவியிடம் காட்டக்கூடாது என்ற கொள்கையுடைய ஆணாதிக்கக் கும்பலைச் சேர்ந்தவன் அல்லன் நான்!). தலைப்பும் அனுவிடமே வாங்கினேன்: வானப்ரஸ்தம். கதை வெளியானதும் பகிர்கிறேன்.

நிறைய எழுதிவிட்டேன். ஆனால் பேசுவதை விட எழுதுவது எளிதாக இருக்கிறது. நீண்ட நேரம் பேசுகிறோம். ஆனால் நிறைய சொல்லாமல் விட்ட மாதிரியே இருக்கிறது. எழுதும்போது நம் மேதாவித்தனத்தைக் காண்பித்துக் கொள்வதற்கும் ஒரு வாய்ப்பு.

புதுவீடு எப்படியிருக்கிறது? அது பற்றிக்கூட ஒரு கட்டுரை எழுதியிருக்கிறீர்கள். பழைய வீட்டு ஓனர் என்ற முறையில் ஏதாவது ஆலோசனை வேண்டுமெனில் அணுகவும். வீட்டில் தங்கைக்கும், குழந்தைகளுக்கும் அன்பு.

ஜெகதீஷ் குமார்


வணக்கம் ஜெகதீஷ்,

முழுநேர எழுத்தாளனாகிவிட்டீர்கள் என்று தெரிகிறது. பாவை சந்திரன் உங்களைத் தேடி அழைத்திருப்பது உங்கள் எழுத்து பலரையும் கவர்ந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது (அதிலொன்றும் எனக்கு ஆச்சரியம் இல்லை). தீபாவளி மலரில் கதை என்பது உங்கள் எழுத்துக்கு இன்னொரு அழகிய பரிசுதான். இரண்டு நாட்களில் உங்களால் கதை எழுத முடிகிறது என்பது எனக்கு சற்று மலைப்பாக இருக்கிறது. ஆனால் மனம் குவிந்தால் அது சாத்தியம்தான் என்றும் காட்டுகிறது. 

‘வானப்ரஸ்தம்’ தலைப்பு மிகவும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. ஊராக இருந்தால் தீபாவளி மலரை கடையில் வாங்கி உங்கள் பெயரை அட்டவணையில் தேடி வாசித்திருப்பேன். விகடன் தீபாவளி மலரை இதுபோல பலமுறை வாங்கி நாஞ்சில் நாடன் எஸ்.ரா. என்ற பெயர்களையெல்லாம் இன்னமும் பரிச்சயம் செய்துகொண்ட நாட்கள் நினைவிலாடுகின்றன. இதில் இன்னொரு முக்கியமான அம்சம் எந்தப் பெரிய தலைகளுடன் உங்கள் கதைகள் வரப்போகிறது என்பதில் இருக்கிறது. உங்கள் கதை தமிழகத்தில் இலக்கியக் குறுங்குழு தாண்டிப் பொது வாசகர்கள் பலரையும் சென்றடையப்போகிறது என்பதும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

‘சேய விளக்கு’ தலைப்பு இன்னமும் அருமை. இந்தத் தலைப்பு உங்களில் கதையாக வளரட்டும், வளர்ந்துவிடும்.

என்னுடைய கவிதைகள் கவிதை அனுபவமாக உங்களை இப்படித் தொட்டிருப்பது எனக்கு மிகவும் நிறைவை அளிக்கிறது. கவிதைகள் நமக்குள் ஏதேனும் சலனத்தை ஏற்படுத்துகிறதா என்பதுதான் சரியான கவிதை வாசிப்பு எனும் நம்பிக்கை எனக்குள் இன்னமும் ஆழமாக வளர்ந்துள்ளது. உங்கள் வாசிப்பு எனக்கு இந்தப் புரிதலை இன்னும் உறுதி செய்கிறது (என்னுடைய கவிதைகளை முன்வைத்து மட்டும் இதைச் சொல்லவில்லை). 

மீண்டும் நீங்கள் குறிப்பிட்ட கவிதைகளை வாசித்துப் பார்த்தேன், இந்தக் கவிதைகள் மேல் சற்று நம்பிக்கை வைத்தது சரியான தேர்வுதான் என்று தோன்றியது. ஏனோ உங்கள் வார்த்தைகள் இன்னமும் சற்று மலைக்க வைக்கிறது, சிறு சங்கடமும்தான். இன்னும் பொறுப்பாக கவிதை எழுது என்று மனம் சொல்கிறது.

‘புதிய நகரம்’ கவிதை ஆத்மாநாமின் ‘புறநகர்’ என்ற கவிதையால் தூண்டப்பட்டு எழுதியது. கொஞ்சம் எதிர்மறைத் தன்மை இருந்தாலும் கவிதை அளித்த கற்பனைக் களம் பிடித்திருந்ததால் எழுதினேன். நீங்கள் மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள், கவிதை அதற்கு முந்தைய வரியிலேயே முடிந்துவிட்டது,

கடைசி மூன்று வரிகளை நீக்கிவிட்டேன்.

தனிப்பட்ட ரீதியாக எனக்கு ‘பிரார்த்தனை’ கவிதை நம்பிக்கை அளித்தது, பல வருடங்களாக மனதுக்குள் வேறுவேறு விதமாக எழுதிப் பார்த்த கவிதை. வீட்டில் ஏதோ வேலை செய்துகொண்டிருக்கையில் திடீரென்று தோன்றி பரபரப்பாக உடனே எழுதிப் பார்த்தேன். இன்னும் சில கவிதைகளை எழுதிவிட்டு தொகுப்பு குறித்து அவசியம் சிந்திக்கிறேன் ஜெகதீஷ்.

ஜெ உங்கள் கதை குறித்த செய்தி அறிந்தால் மகிழ்வார். அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது இதுபோன்ற சில மைல்கல்களைத்தான். நீங்கள் அவரிடம் இதை நேரடியாகப் பகிரவும், தயங்கவேண்டாம். அவர் எழுத்து குறித்து எதைப் பேசினாலும் குறித்துவைத்துக்கொள்ளவும், நேர் உரையாடலில் அவரிடமிருந்து வரும் சில விசயங்கள் அவர் எழுத்தில் இதுவரை எழுதியிராதது என்பதைக் கடந்த சிலவருடங்களாகவே கவனித்து வருகிறேன்.

அனைவரும் நலம் ஜெகதீஷ், புதிய வீட்டை என்னுடைய பாஸ் நன்றாக அனுபவிக்கிறார், வீட்டை மெருகேற்ற மிகவும் மெனக்கெடுகிறார் :). 

கதையை வாசிக்க ஆர்வமாக இருக்கிறேன், தொடர்பில் இருப்போம்.

பாலாஜி ராஜூ

—-------------------------

அன்புள்ள பாலாஜி,

ஆத்மா நாம் எனக்கும் பிடித்த கவிஞர்தான். நீங்கள் பகிர்ந்த கவிதையில் ஒரு காலகட்டத்தின் வெறுமையுணர்வும், மந்தகதியில் நகரம் இயங்குவதும் காட்டப்படுகின்றது. உங்கள் கவிதை இங்கிருந்து பல மடங்கு மேலே வந்து விட்டது என்று சொன்னால் நாமின் ஆத்மா என்னை மன்னித்து விடும் என்றே கருதுகிறேன். கண்டிப்பாக உங்கள் கவிதையில் காட்சிப்படிமங்கள் வலிமையாக அமைந்திருக்கின்றன (நெருப்பை அணியும் மரங்கள், குருதி ஓடும் குளங்கள், கத்தியால் கீறும் அணுக்கமானவர்கள்). அவரது தலைமுறையிலிருந்து நகர்ந்து வந்து புதிய நகரம் உங்கள் கரங்களில் புதுப்பரிணாமத்தை அடைந்திருக்கிறது. சொற்தேர்விலும், வெளிப்பாட்டிலும் உங்கள் கவிதை காத்திரமாக இருக்கிறது.

கவிதைகளில் என் கருத்துக்களைப் பரிசீலித்ததற்கு நன்றி. அதே நேரம் ஓர் எச்சரிக்கை. நான் வாசித்தவுடன் உடனே தோன்றும் கருத்தையே குறிப்பிடுகிறேன். எனவே நீங்கள் அலசி ஆராய்ந்த பின் என் கருத்தை ஏற்கலாமா, வேண்டாமா என்று முடிவு செய்யுங்கள். 

கதை தினமணியில் வருவது உண்மையிலேயே மகிழ்ச்சிதான். ஆனால் அதே நேரம் இலக்கியப் பத்திரிகையில் எழுதும் திருப்தி வருமா என்று ஐயமாக இருக்கிறது. பாவைசந்திரன் புதிய பார்வை இதழின் ஆசிரியராக இருந்தவர். ஒரு காலத்தில் (அவர் காலத்தில்) அதை பாடபுத்தகம் மாதிரி வாசித்திருக்கிறேன். எனக்குப் பிரியமான சுபமங்களா, புதியபார்வை இரண்டிலும் பணி புரிந்திருக்கிறார். இலக்கியம் அறிந்தவர். தினமணி வாசகர்களும் கொஞ்சம் சீரியஸாக இருந்தாலும் வாசிப்பார்கள் என்றுதான் தோன்றுகிறது. சொற்கட்டுப்பாட்டாலும், வேகமாக எழுதியதாலும் கொஞ்சம் அடர்த்தி குறைத்து எழுதியிருக்கிறேனோ என்ற மெல்லிய ஐயம் எனக்கு. கதை வந்தபின் மீண்டும் பரிசீலித்து திருத்தங்கள் செய்வேன்.

பிரார்த்தனை எனக்கும் பிடித்திருந்தது. எல்லாக் கவிதைகளுமே. நிறையக் கவிதைகள் எழுதுங்கள். கதைகளும்.

ஜெகதீஷ் குமார்.



 




19 அக்டோபர், 2024

உடைந்து எழும் நறுமணம் - இசை கவிதைகள்






நன்றி: கவிதைகள் மின்னிதழ்


கவிஞர் இசையின் உடைந்து எழும் நறுமணம் தொகுதியில் உள்ள கவிதைகள் ஒவ்வொன்றும் அவற்றை அணுகும் வாசகருக்குத் தன்னளவிலேயே தெளிவாகத் துலங்குகின்றன. அவற்றைக் கவிநயம் பாராட்டி, விளக்கி எழுதுவதென்பது ரத்தினக்கற்களை பட்டுத்துணி கொண்டு மூடுவது போல ஆகிவிடுமோ என்று சற்று தயக்கமாகக் கூட இருக்கிறது. இத்தொகுப்பில் உள்ள பல கவிதைகளில் கவிஞர் இசை எழுப்பியுள்ள அதிர்வுகளோடு என்னால் ஒத்ததிர முடிந்தது. தொகுப்பிற்கான தன்னுரையில் கவிஞரே குறிப்பிடுவது போல் அவரது கவிதைகளின் பிரதான அடையாளமான பகடியின் துணையின்றி கவிதைகளின் ஆதாரமான ‘புதிதை’ச் சமைக்கப் பிரயத்தனப்பட்டிருக்கிறார். 


உடைந்து எழும் நறுமணம், நாச ஊளை மற்றும் வெந்துயர் முறுவல் என்று மூன்று பகுதிகளாக இத்தொகுப்பு பிரிக்கப்பட்டிருக்கிறது. முதல் பகுதியில் தொல்காப்பியம் சுட்டும் நிலமும், பொழுதும் பயின்று வருகின்றன. கவிஞர் அந்திக்கு மயங்கி  மனமழிந்து வரும் வழியில் உறைந்து நின்று விடுகிறார். கொக்குகளும், மயில்களும், புறாக்களும் பறந்து கொண்டே இருக்கின்றன. தீக்கொன்றையில் ஓடோடி உச்சிக்கிளையேகும்அணில்கள் நிறைந்த முற்றத்தில் அன்னை பிள்ளைகளுக்குச் சோறூட்டுகிறாள். இரண்டாம் பகுதி ஊரடங்கு காலத்தையும், மூன்றாவது காதலையும் கருப்பொருளாகக் கொண்டுள்ளன. எல்லாக் கவிதைகளிலுமே கவித்துவம் செறிந்து மிளிர்கிறது. 


***


உழைத்தல் என்பது வாழ்வைக் கொண்டு செலுத்துவதற்காக ஒவ்வொருவரும் மேற்கொள்ளும் ஓர் அன்றாடச் செயல். செயலின் தன்மை எத்தன்மையுடையதாயினும், அது அன்றாடம் மேற்கொள்ளப்படுகின்றது என்பதனாலேயே அதில் சலிப்பும், துயரும், அழுத்தமும், சுமையும் உணரப்படுவெதென்பது தவிர்க்க இயலாதது. தவிர்க்க ஒரே வழி அச்செயலைக் கொண்டாட்டமாக மாற்றிக் கொள்வதுதான். இன்னொரு கவிதையில் நடனமாடும் ஒருத்தி தன் ஒத்திகையையே நிகழ்ச்சியாக மாற்றி, மேடையின் கீழே அமர்ந்து தன்னைத் துன்புறுத்தும் பூதத்தை விழுங்கி விடுகிறாள். செயல் கொண்டாட்டமாக மாறியபின் வாழ்வில் இனிமை ஊறத்துவங்குகிறது. செயல் புரிபவனை மட்டுமல்ல, துணை நிற்பவர்களையும் அவ்வினிமை நிறைக்கிறது. உழைப்பின் மகத்துவம் பற்றிப் பலநூறு கவிதைகள் எழுதப்பட்டிருப்பினும் இக்கவிதை எளிய சொற்களில், எளிய சித்திரத்தில், கவியின் குழந்தை மனம் கண்டு வியந்த வகையில் உழைக்கும் மக்களிடையேயான கொண்டாட்ட மனநிலையை வரைந்து காட்டுகிறது. எந்த மாயக்கணத்தில் இந்த அற்புதம் நிகழ்கிறது? இந்த ரசவாதத்திற்கு எது வினையூக்கி? அந்த மாயக்கணம் கவிஞர் அவதானிப்பில் துல்லியமாக இக்கவிதையில் வெளிப்பட்டிருக்கிறது. ஒரு கவிதை மெல்லமெல்ல பரிணமிப்பதை, ஒரு பூவைப்போல இதழ் விரித்து மலர்வதைக் காணும் வாய்ப்பு இக்கவிதையில் அமைகின்றது.




 சிரிப்பு லாரி


ஐவர் கைமாற்றிக் கைமாற்றி

சுமையேற்றிக் கொண்டிருந்தனர்.

பெருமூச்சுகளும், முனகல்களும்

வரிசை கட்டி லாரியில் ஏற்றப்படுகின்றன.

முகங்கள் கல்லென இறுகி

உடல்கள் வியர்த்து அழுதன.


இடையில்

ஒருவன் தடுமாறி விழப்போனான்.

நண்பர்கள் அவனைக் கேலி பேசிச் சிரித்தனர்.


விழப்போனவனும் சேர்ந்து சிரிக்க

இப்போது

அங்கே தோன்றி விட்டது ஒரு விளையாட்டு.


பிறகு 

அவர்கள்

கைமாற்றிக் கைமாற்றி விளையாடத் துவங்கி விட்டார்கள்.


அந்த லாரியில் 

பாதிக்கு மேல் சிரிப்புப் பெட்டிகள்.


***

சிறிய, எளிய உண்மைதான். ஆனால் நாம் காணத்தவறிக்கொண்டே இருக்கிறோம். உலகை வண்ணங்களாலும், சரிகைகளாலும் ஆன பட்டுத்துணியொன்று போர்த்தியிருக்கிறது. அதன் மின்னலிலும், வண்ணத்திலும் கிறங்கி, ஆங்காங்குள்ள ஓட்டைகளில், அவ்வப்போது தலைகாட்டி இளித்து நம்மைத் துயருக்குள்ளாக்கும் பிரச்னைகளை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறோம். மாறாக, அந்தப் பட்டுத்துணியைத் தூக்கிப்பார்த்தால் தெரியும் சேதி! அந்தத் துணிவு ஒரு சிலருக்கே வாய்க்கிறது. அவர்களே இவ்வுலகின் சாரத்தை அறிந்தவர்கள். சாதாரண மனிதர் பட்டுத்துணியின் வண்ணங்களில் சிக்கிக் கொண்டவர்கள். துணிக்கு அடியில் மறைந்து கிடப்பதைப் பார்க்காமல் தவிர்த்து விடவே அவர்களுக்குப் பரிந்துரைக்கிறார் கவிஞர்.


பட்டு


திடீர் ஆய்வுகளின் போது 

ஒரு அரசு அலுவலகத்தைப் பார்த்திருக்கிறாயா?


எல்லாக் குப்பைகளின் மீதும்

எல்லா அழுக்குகளின் மீதும்

பளபளக்கும் விரிப்புகள் பல

அவசரவசரமாகப் போர்த்தப்படும்.


உலகைப் போர்த்தியிருக்கும் 

அந்தப் பளபளக்கும் பட்டை

தூக்கிப் பாராதே தம்பி!


***


ஒவ்வொரு பெண்ணுமே அன்னைதான். தத்தி நடக்கும் பேதையாயினும், துள்ளித் திரியும் பெதும்பையாயினும், கருப்பை கொண்ட ஒவ்வொரு பெண்ணும், பிரபஞ்சத்தையே தன்னில் சுமக்கும் திறனும், உள்ளமும் வாய்ந்த பேரன்னைதான். இவ்வுலகைச் சுமப்பதற்காகவே அவள் மீண்டும், மீண்டும் பிறக்கிறாள். தாயாகி அனைத்தையும் தாங்குகிறாள். அவள் முன் நின்று கையேந்தினால் உங்களுக்கும் ஒரு வாய் உருண்டைச் சோறு கிடைக்கும். 


அமுது 


அவளுக்கு மொத்தம் மூன்று வாய்கள்.


அணிலோடித் திரியும் முற்றத்தில்

நின்று கொண்டு

வேடிக்கை காட்டியபடியே

பிள்ளைகளுக்கு உணவூட்டுவாள்.


சேலைத்தலைப் பிடித்தபடி

கால்களைச் சுற்றிச்சுற்றிக் குழையும் ஒன்று.


இன்னொன்று 

இடுப்பில் அமர்ந்திருக்கும்.


இருவருக்கும் மாறிமாறி ஊட்டுவாள்.

யாரோ ஒருவர் 

முரண்டு பிடித்துச் சிணுங்குகையில்

“அணிலுக்கு ஊட்டி விடுவேன்”

என்று மிரட்டுவாள்.


நாளடைவில்

ஓட்டங்களிலிருந்து ஆசுவாசத்துக்குத் திரும்பியது அணில்.


மெல்லமெல்ல

அச்சத்திலிருந்தும் சந்தேகங்களிலிருந்தும் கீழிறங்கி வந்தது அது.


மெல்லமெல்ல 

மேலெழும்பி வந்தாள் அன்னை.


இன்று

கொஞ்சம் அமுதெடுத்து அணிலுக்கு ஊட்டினாள்

பேரன்னை.


அப்போது அவளுக்கு அளவிறந்த வாய்கள்.


***

நீ உண்ணும் ஒவ்வொரு அரிசியிலும் இறைவன் உன் பெயரை எழுதியிருக்கிறான் என்று சொல்வார்கள். இது நாம் அனுபவிக்கும் மகிழ்ச்சி, துன்பம் போன்ற எல்லா அனுபவங்களுக்குமே பொருந்தும். அந்த விழிப்புணர்வுடன் வாழ்வை நடத்துகிறவனுக்கு துக்கம் இல்லை. இக்கவிதையில், ‘இரண்டு துண்டுகளிடையே அதன் நெஞ்சம்’ தவித்தபோது என்னுள்ளமும் கிடந்து தவித்தது. வாசகனின் உள் உறையும் குற்ற உணர்ச்சிகளை வலியோடு நிமிண்டி எடுக்கும் முள்ளாக இக்கவிதை இருக்கிறது. கவிதையின் துவக்கப் பத்தியில் ‘எப்போதும்’, ‘என் நாய்க்கு’ என்ற சொற்கள், இந்த நிகழ்வு அன்றாடம் நிகழ்கிறது என்பதையும், அது நமக்கு அணுக்கமானவருக்கே நிகழ்கிறது என்பதையும் குறிக்கிறது. அனுதினமும் நடந்தாலும் மனதை அச்செயலின் குரூரம் தீண்டாமலேயே சென்று விடுகின்றது. அதைச் சுட்டிக்காட்ட ஒரு கவிதை வர வேண்டியிருக்கிறது.


பிஸ்கட்


எப்போதும் 

ஒரு பிஸ்கட்டை இரண்டாகப் பிட்டு

என் நாய்க்கு எறிவேன்.


அரை பிஸ்கட்டிற்கு

முழு உடலால் நன்றி செலுத்தும்

பிராணி அது.


இரண்டு முறைகள்

அந்த நன்றியைக் கண்டுகளிப்பேன்.


இருமுறையும் 

அது என்னைப் போற்றிப் பாடும்.


ஒவ்வொரு முறையும்

என் முகத்தை

அவ்வளவு ஏக்கத்தோடு 

பார்த்துக் குழையும்.


இரண்டாம் துண்டு என் இஷ்டம்.


இரண்டு துண்டுகளிடையே

அதன் நெஞ்சம்

அப்படிக் கிடந்து தவிக்கும்.


உச்சியில் இருக்கும் எதுவோ

இதைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.


அதுதான் 

என் பிஸ்கட்டை

ஆயிரம் துண்டுகள் ஆக்கிவைத்தது.


***






9 அக்டோபர், 2024

டெய்ரி மரத்துக் கனிகள் - மதார் கவிதைகள்

நன்றி: கவிதைகள் மின்னிதழ்


சில கவிதைகளைப் பற்றிப் பேசி விட்டாலேயே அவற்றின் தூய்மையைச் சற்றே களங்கப்படுத்தி விடுவோமோ என்ற அச்சம் மனதில் உருவாகி விடுகிறது. ஆனாலும் ஓர் அரிய கவிதை கண்ணில் படும்போது, அதை சஹிருதயர்களிடம் பகிர்ந்து கொள்ளும் இன்பத்துக்காகவே, அந்தக் கவிதைக்குள் நம் வியாக்கியானங்களூடே செல்லும் பயணம் தரும் உவகைக்காகவே அது பற்றிப் பேசலாம் என்றும் தோன்றுகிறது. கீழ்வரும் மதாரின் தலைப்பற்ற கவிதை அதற்கொரு உதாரணம்.

மதாரின் பெரும்பாலான கவிதைகளைப் போலவே இதுவும் மேலோட்டமாக எளிமையாகத் தெரியும், கவிதைக்குள் புதிதாக நுழைபவர்கூட எளிதில் அனுபவிக்க முடிகிற, புரிந்து கொள்ள முடிகிற கவிதைதான். ஆனாலும், கோடையில் என் வீட்டுக் கொல்லைப்புறத்தில் நிமிடங்களுக்கொரு முறை விடாது சிறகடித்தபடி நீரருந்த வரும் தேன்சிட்டு தன் பூஞ்சையான சிறு உடலுக்குள் பொதித்து வைத்துள்ள, நாமறிந்து கொள்ள முடியாத ரகசியங்களைப் போலவே, இக்கவிதையும் தன் எளிமையான வடிவத்தில், உயிரினங்களுக்கிடையில் இன்னதென்று விளக்கிவிட முடியாதபடி நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆழமானதொரு தொடர்பைச் சுட்டுறுத்துகிறது. பெற்றோரைச் சுற்றி வந்து பழம் பெற்றும் கொள்ளும் எளிய நுட்பம்தான் இக்கவிதையில் இன்னொரு வடிவம் எடுத்திருக்கிறது. கவிதைக்குள் எப்பொழுதேனும் அபூர்வமாகச் சந்தம் தென்படும்போதும், கவிதை தன் வடிவத்தை கதை சொல்லுவதற்குப் பயன்படுத்தும் போதும் என்னையறியாமல் ஒரு புன்முறுவல் தோன்றி விடுகிறது. இவ்விரண்டும் இக்கவிதையில் நிகழ்ந்திருக்கிறது.



ஜன்னலில் இருந்து பார்த்தால் 

பச்சை மரங்கள் நிறைந்த

தெரு தெரியும்

நித்தம் அதிலொரு காகம்

வருவதும் போவதுமாய் திரியும்


தெருவில் இருந்து பார்த்தால்

அண்டை வீதிகளை

சென்றடையும் சாலை விரியும்

சத்தம் எப்போதும்

சம்பிரதாயச் சடங்காய் இரையும்


சாலையில் இருந்து பார்த்தால்

மாநகர் முழுதும் பயணப்பட தேவையான சாத்திய வழிகள் நீளும்


தெருவில்

சாலையில்

மாநகரில்

முன்னெப்போதோ

நடந்த விபத்தில்

இழந்த கால்களோடு

ஜன்னலண்டை அமர்ந்திருக்கிறேன்


இக்கணம் நான்

மாநகரைப் பார்க்க பிரயாசைப் படுகிறேன்

எங்ஙனம் பார்க்க?

ஜன்னலில் இருந்து பார்த்தால்

பச்சை மரங்கள் நிறைந்த

தெருதான் தெரிகிறது


நித்தம் வரும் காகம்

இப்போது வருகிறது


மரத்தின் உச்சிக்கொம்பில் 

அமரும் அது

தனது ஒற்றைப் பார்வை

ஒன்றின் வாயிலாகவே

மாநகர் முழுவதையும் 

கூர்மையாகப் பார்க்கிறது


நான் வெறுமனே

காகத்தின் கண்களை

கூர்மையாகப் பார்க்கிறேன்


* * *

இன்னொரு தலைப்பற்ற கவிதை. தொடர் வண்டி நிலையத்தில் படுத்திருக்கும் சோம்பேறி நாய் கேட்கும் சங்கீதம். எதனாலும் எழுப்பப்பட முடியாத அதனால் பூமியின் இதயம் துடிப்பதையும் கேட்டு விட முடிகிறது. முழுக்கவிதையும் அந்த நாய் கேட்கும் இசைத்துணுக்கைப் போலவே நம் மனதில் அதிர்கிறது. ஒலிக்குறிப்புகளுக்கென்று கவிஞர் தேர்ந்தெடுத்துள்ள சொற்கள் வியப்பூட்டுபவை. மறக்க இயலாதவை.


காலை, வாலை மிதிப்பது தவிர

வேறெதெற்கு உசும்பாமல் 

படுத்திருக்கிறதந்த கருப்பு வெள்ளை நாய்

தொடர் வண்டி பிடிக்க ஓடும்

எந்தச் செருப்பும்

எழுப்பவில்லை

ரயில் வருகிறதென

ஒலி எழுப்பும் 

எந்திரக்காரியாலும் முடியவில்லை

ஒரு காதை பூமிக்கும்

இன்னொரு காதை வானுக்கும் கொடுத்து

ஒருக்களித்து துயிலும் இது

பூமியின் இதயம் வேகமாகத் 

துடிப்பதைக் கேட்கிறது

தசக் தசக் தடக் ததக் தபக் தரக்

செப்பல் அணிந்து குழந்தையொன்று

நடந்து வந்தால் கேட்கிறது

தஙக் தஞக் தணக் தநக் தமக் தனக்


* * *

மிகச் சாதாரணமான ஓர் உருவகத்தில் துவங்கி, வாளி வகுப்பறை என்ற அசாதாரணமான மற்றொரு படிமத்துக்குள் இறங்கும் மற்றொரு கவிதை. மிகத்தூய்மையானதும், வாசகர் மனக்கண்ணிலேயே நிகழ்த்தி விட இயலக்கூடியதுமான இது போன்ற சிறிய கவிதைகள் என்றுமே உவப்பானவை.


வாசல் தெளிப்பவள்

மழையாக்குகிறாள்

நீரை

வாளி வகுப்பறைக்குள்

இறுக்கமாக அமர்ந்திருந்தவை

இப்போது தனித்தனியாக

விளையாடச் செல்லுகின்றன.


மேலும் வாசிக்க