கிரிக்கெட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிரிக்கெட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12 ஜூலை, 2013

தோனி வழி


நேற்றிரவு (அல்லது இன்று அதிகாலை) உறங்கச் செல்லும்போது மணி இரண்டரைக்கும் மேல். இந்திய – மேற்கிந்திய – இலங்கை முத்தரப்பு ஒருநாள் போட்டிகளின் இறுதியாட்டம், இந்தியா, இலங்கைக்கு இடையே. இலங்கை 202 ரன்களில் ஆட்டமிழ்ந்திருந்தாலும், அந்த இலக்கை அடைவது இந்தியாவுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது என்று தோன்றியது. ஆடுகளம் ஸ்விங்க் பந்து வீச்சுக்குச் சாதகமாக இருந்ததும், அஸ்வினுக்கும், ஜடேஜாவுக்கும் பந்து நன்றாகச் சுழன்றதும் இந்த ஆட்டம் பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துகிற ஒன்றாக இருக்கப் போகிறதென்று ஊகித்திருந்தேன். மிகுந்த சிரமப்பட்டே இந்தியா இவ்விலக்கை தொட இயலும் என்றும் கணித்திருந்தேன். ஆட்டம் மிகுந்த ஸ்வாரஸ்யமாக இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் முழு ஆட்டத்தையும் பார்த்துவிடத் துணிந்தேன்.
பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தப்போகிற ஆட்டம் இது என்ற என் ஊகத்தை வழக்கம் போலவே பொய்யாக்கி விட்டார் தோனி. நூற்றி நாற்பது ரன்களுக்கு மேல் விக்கெட்டுகள் சடசடவென சரிய, புவனேஷ் குமார், ப்ரவீன் குமார் மற்றும் இஷாந்த் சர்மாவுடன் சேர்ந்து கொண்டு ஆட்டத்தின் கடைசி ஓவரில் தன் அற்புதமான அடிகளால் இலக்கைத் தாண்டினார். நான் முப்பத்தி ஏழாவது ஓவரிலிருந்தே இந்தியா தோற்று விடும் என்ற கணிப்புடனேயே பார்த்துக் கொண்டிருந்தேன். கடைசி ஓவரில் கூட அவர் பதினைந்து ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. முதல் பந்தைத் தவறவிட்ட அவர் இரண்டாவதில் ஒரு சிக்சர், மூன்றாவதில் ஒரு பவுண்டரி, நான்காவதில் இன்னும் ஒரு சிக்சர் என்று அநாயாசமாக விளாசித் தள்ளி இலங்கையின் கனவைத் தகர்த்தார். அதற்கு முந்தைய பத்து ஓவர்களின் சிங்கிள் கூட எடுப்பது சிரமமாக இருந்தது என்பதை கவனத்தில் கொண்டால் தோனி கடைசி ஓவரில் செய்தது கனவிலும் நடக்க இயலாத ஒரு விஷயம் என்பது புரியும். ஹெரத் பட் பட்டென்று ஒரே ஓவரில் ஜடேஜாவையும், அஸ்வினையும் பெவிலியனுக்குத் திருப்பி விட்டார். அதற்குச் சற்று முன்புதான் இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அற்புதமாகச் செலுத்திக் கொண்டிருந்த ராய்னாவும் அவுட்டாகியிருந்தார். ஏழு விக்கெட்டுகள் இழந்த நிலையில் மலிங்காவின் நான்கு ஓவர்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை இந்தியாவுக்கு இருந்தது.
முன்னதாக ரோஹித் சர்மா ஒரு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்திருந்தார். இந்த்த் தொடர் முழுவதுமே அவரது ஆட்டத்தை மிகுந்த உவப்புடன் ரசித்து வந்தேன். அதுவும் இறுதியாட்டத்தில் அவரது ஆட்டம் ஒரு தேர்ந்த கலைஞன் நிதானமாகத் தன் படைப்பை உருவாக்குவதை ஒத்திருந்தது. ஸ்விங்க பந்துக்கு ஏற்றபடி தன் ஆட்டமுறையை அழகாக மாற்றிக் கொண்டு ஆடிய அவரது ஒவ்வொரு ஷாட்களையும் நான் அனுபவித்துப் பார்த்தபடி இருந்தேன். சாம்பியன்ஸ் ட்ராஃபியிலும், இந்தத் தொடரிலும் அவரது ஆட்டம் அவருக்கு அணியில் நிரந்தர இட்த்தைப் பெற்றுத் தரும் என்று நம்பலாம். நான் எதிர்பார்த்து ஒழுங்காக ஆடாமல் போன வீரர் தினேஷ் கார்த்திக். அவர் நன்றாக ஆட வேண்டுமென்று ரகசியமாக என்னுள் ஓர் ஆசை இருந்தது.
தோனி எல்லாவற்றையும் சாதித்து விட்டார். வாங்க வேண்டிய எல்லாக் கோப்பைகளையும் வாங்கிக் குவித்து விட்டார். ஆனாலும் அவர் மீது பல விமர்சனங்கள் உண்டு. நல்ல வீரர்கள் உள்ள அணியில் நல்ல நேரத்தில் கேப்டனாக இருப்பது; தனக்குப் பிடித்தமான வீரர்களுக்கே அணியில் இடம் தருவது; தேவையற்ற பிடிவாதத்துடன் அதிர்ச்சி தரும் முடிவுகளை எடுப்பது போன்றவை. அந்த விமர்சனக் கூட்டத்தில் நானும் அவ்வப்போது இடம் பெறுவதுண்டு. கங்குலிதான் சிறந்த கேப்டன் என்று சொல்கிற கூட்ட்த்தில் இருந்தவன் நான். தோனியின் ஆட்டத்தையும், அவர் அணியை உச்சிக்கு அழைத்துச் சென்ற விதத்தையும் நான் ரசித்திருந்தாலும் அவருக்கு நான் பரம ரசிகனாக இதுவரை இருந்ததில்லை. நேற்றுகூட அடிபட்ட நிலையில் எதற்காக அணிக்குள் வந்தார் என்ற சந்தேகக் கேள்வியோடே ஆட்ட்த்தைப் பார்க்க ஆரம்பித்தேன்.
தோனியின் நேற்றைய ஆட்டத்தைப் பார்த்தவர்களுக்குத் தெரியும். அதை ச் சொல்லி விளக்கி விட முடியாது. வர்ணனையாளர்கள் கூட தோனி சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்த போது Unbelievable! என்றார்கள். அந்த ஒரு வார்த்தைதான் அவர் நேற்று ஆடிய ஆட்டத்துக்கு பொருந்தும். நடக்க முடியாத ஒரு காரியத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் தோனி. நேற்றிலிருந்து அவரது தீவிர ரசிகனாகி விட்டேன் நான்.
இந்த ஆண்டில் நான் பார்த்த ஒரு நாள் போட்டிகளிலேயே மிகச் சிறந்த போட்டி இது.


19 மே, 2010

இ20 –உலகக் கோப்பை 2010 – தொடர்ந்து பொய்யாக்கப்படும் எதிர்பார்ப்புகள்










இங்கிலாந்து கிரிக்கெட் அணி 2010க்கான 20-20 உலகக் கோப்பையை வென்றிருக்கிறது. கிரிக்கெட் என்ற ஜென்டில்மேன் விளையாட்டைக் கண்டுபிடித்த நாடு ஒரு உலகக் கோப்பையைக் கைப்பற்றுவதற்கு இத்தனை வருடங்கள் பிடித்தது ஆச்சரியம்தான். உலகக் கோப்பைப் போட்டிகளின் தொடக்கத்தில் இங்கிலாந்து கோப்பையை வெல்லும் என்று யாரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. கே.பி. ஒருவரைத்தவிர நட்சத்திர அந்தஸ்து கொண்ட வீரர்கள் இல்லாத இங்கிலாந்து அணியின் பலம் இம்முறை அவர்களின் துவக்கப் பந்துவீச்சு மற்றும் களப்பணி (அதாவது ஃபீல்டிங்). ரயன் சைட்பாட்டம், ப்ராட் அப்புறம் இன்னொருத்தர் பேர் ஞாபகம் வரமாட்டேனென்கிறது. சுழல் பந்து வீச்சு கிலோ என்ன விலை என்று கேட்கிற அணியின் ஸ்வான் கூட நன்றாக வீசுகிறார். இறுதிப் போட்டியில் முதல் பத்து ஓவர்களின் நாற்பத்துச் சொச்சம் ரன்களை மட்டுமே கொடுத்தார்கள். அடுத்த பத்தில் நூறு ரன்கள் ஒழுகின. (அதுதான் ஆஸ்திரேலியா)
துவக்க ஆட்டக்காரர்கள் கீஸ்வெட்டெர் மற்றும் லம்(ப்) இருவருமே நன்றாக ஆடுகிறார்கள். க்ளார்க்கை அவுட்டாக்க காலிங்வுட்டின் ஒரு கேட்ச் இன்னும் மனசிலேயே நிற்கிறது. ஆங்கிலேய அணி மென்மேலும் வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துக்கள். ஆஸ்திரேலிய அணியினர் வேற்றுக் கிரகத்திலிருந்து வந்து ஆடவில்லை என்று ஒத்துக் கொள்வதற்காகவாவது இந்த மாதிரித் தோல்விகள் அவர்களுக்குத் தேவை.




பெண்கள் அணியின் உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவிற்கு. அசத்தலான நகம் கடிக்கும் முடிவு. கிவி வீராங்கனைகள் உயிரைக் கொடுத்துப் போராடினார்கள். கடைசி பந்தில் ஐந்து ரன் வித்தியாசத்தில் தோற்றனர். வெறும் நூற்றுச் சொச்ச ரன்களை மட்டுமே எடுத்து அதை வெற்றிகரமாகப் பாதுகாத்தது ஆஸி. இரு அணியினரின் களப்பணியும், இந்திய (ஆண்கள்) அணியினுடையதைவிடச் சிறப்பாக இருந்தது. ஆஸி அணித்தலைவர் மைக்கேல் க்ளார்க் தலைமையில் எல்லா ஆஸி ஆண் வீரர்களும் பெண்கள் இறுதிப் போட்டியைப் பார்த்து நகம் கடித்தனர்; தலைமேல் கை வைத்தனர்; துள்ளிக் குதித்து உற்சாகத்தை பகிர்ந்து கொண்டனர்.
எனக்கென்னமோ இ20 உலகக் கோப்பை வருடத்திற்கொருமுறை வருவது சரியாகப்படவில்லை. கிரிக்கெட்டை அழகான நிலையற்ற தன்மைகளின் விளையாட்டு என்பார்கள். அது இ20ல் மிக அதிகம். கோப்பை வாங்கி ஒரு பிறந்தநாள் கொண்டாடுவதற்குள் அந்த மகிழ்ச்சியை இன்னொரு அணி பறித்து விடுகிறது. குட்டி அணிகளுக்கெல்லாம் இ20லாவது பெரிய அணிகளுடன் ஆடும் வாய்ப்பு கொடுக்கப் பட வேண்டும். நாலு வருடத்துக்கொருமுறை 24 அணிகளுடன் ஆடினாலென்ன?
இந்திய அணி எல்லாரும் எதிர்பார்த்த மாதிரியே விளையாடியது. சூப்பர் 8 ல் நல்ல வேளை மூன்று போட்டிகள்தான். மூன்றிலும் தோல்வியை தழுவியது. தோனியின் செல்லப் பிள்ளைகளான மணிக்கட்டு கழண்டு போன யுவராஜ், உள்ளூர்ப் புலி யூசுஃப், திடீர் நட்சத்திரம் விஜய், அனைவருமே அவரை ஏமாற்றிவிட்டனர். அணிக்குள் வந்ததிலிருந்து நன்றாக பந்து வீசிக்கொண்டிருந்த ஜடேஜா பலிகடா ஆனார். ஐ.சி.சி விருது வாங்கின காம்பீர் தடுமாறியதைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. ரன் எடுக்க வேண்டும் என்பதைவிட, தனக்கு ஷார்ட்பிட்ச் பந்தை ஆடத்தெரியும் என்று பிறருக்கு நிரூபிக்க வேண்டுமென்பதற்காகவே ஆடியதைப் போலிருந்தது. ராய்னா நன்றாக ஆடினார். மற்றவர்கள் மதுபான விடுதியில் ரகளை செய்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.
ஒரு வருடத்தில் சில ஒருநாள் போட்டிகளை மட்டுமே அதுவும் வேற்று நாட்டில்தான் ஆட முடிகிற பாகிஸ்தான் மூன்று உலககோப்பை அரையிறுதிப் போட்டிகளுக்கும் தேர்வாகியிருக்கிறது.
முதல் கோப்பையையே கைப்பற்றிய கிரிக்கெட் வல்லரசான இந்தியா, கடந்த இருஆண்டுகளிலுமே சொதப்பிக் கொண்டுதான் இருக்கிறது. அதனாலென்ன? இந்தா, அப்பாவி ஜிம்பாப்வே இருக்கிறது, ஆசிய கோப்பை இருக்கிறது. அப்புறம் டெஸ்ட் தகுதியைக் காப்பாற்றிக் கொள்ள ஆஸ்திரேலியாவை வேறு அழைத்திருக்கிறோம். அதெல்லாம் சீக்கிரம் மறந்து போய் விடும்.

மேலும் வாசிக்க