விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

4 அக்டோபர், 2025

விஜய் ரங்கராஜனின் “உள்ளச்சம்”

 




அன்புள்ள விஜய்,

உங்கள் உள்ளச்சம் வாசித்தேன். இதற்கு முன் நீங்கள் எழுதிய சில கதைகளை வாசிக்க வாய்க்கவில்லை. உங்கள் மொழி திருத்தமாகவும், அழகாகவும், தெள்ளிய ஓடை போன்றும் இருந்தது. அது உங்கள் பலம். நிறைய உவமைகள், ஒப்பீடுகள்.  கதையில் அர்ஜூன், அஷ்வத் இருவருக்குமான மோதல்களில் கதையின் தீவிரம் கூடிக் கொண்டே செல்கிறது. சிறுபெண் நந்திதாவும், தாய் ரம்யாவும் அழகாக வடிவமைக்கப் பட்டிருக்கிறார்கள். ஒரு கதையாக மிக நேர்த்தியாக, எந்தப் புரிதல் குறைகளும் இன்றி சொல்லப்பட்ட கதை. 

எனக்கு ஏனோ அஷ்வத்தும் ஒரு கே-வாக இருக்கக் கூடும் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. அதற்கான குறிப்புகளை கதைக்குள் முதலிலேயே கொடுத்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை. ஒரு பால் சேர்க்கையாளர்கள் சமூகத்தால் விலக்கி வைக்கப்படுகிறார்கள் என்பதை இக்கதை காட்டுகிறது. ஆனால் ஒழுக்கவாதம் பேசுபவர்கள் இரட்டை நிலைப்பாட்டை எடுப்பதையும் கதை காட்டுகிறது. இதற்கு முன் பெற்றோரால் நிராகரிக்கப்பட்ட ஒருபால் சேர்க்கையாளன் ஒருவனின் கதையை நீங்கள் எழுதி வாசித்திருக்கிறேன். என் கேள்வி அவர்களுக்கு சமூகத்தில் ஏற்படும் புறக்கணிப்பு தாண்டி வேறு பிரச்னைகளை இலக்கியத்தில் அலச முடியுமா என்பதுதான். அமெரிக்காவில் கே-லிட் நிறைய எழுதப்படுகிறது. நான் எதையும் வாசித்ததில்லை. எனக்கு அவர்கள் உறவில் நிகழும் சிக்கல்கள், அவர்கள் நிலைப்பாட்டில் இருந்து கொண்டே தங்கள் உலகில் எவ்வாறு தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதையும் இலக்கியத்தில் பேச வேண்டும் என்று தோன்றுகிறது. இப்படிச் சொல்கிறேன் - ஒருவேளை ஒருபால் சேர்க்கை முழுக்க அங்கீகரிக்கப்பட்ட சமூகத்தில் அவர்கள் எப்படி நிகழ்வார்கள்? அப்போது புதிதாக எழுந்து வரும் பிரச்னைகள் என்னவாக இருக்கும்? 

கதையை, உரையாடல்களை தூய தமிழில் அமைத்திருந்தது நன்றாக இருந்தது. ஆனால் சில இடங்களில் உவமைகள் தேய்வழக்குகள் போன்று தோன்றின. இன்னும் கொஞ்சம் தீவிரமான விமர்சனமாக வைக்க வேண்டுமென்றால் கதை பல இடங்களில் சொல்லப்படுகிறது. காட்டப்பட்டிருக்கலாம். உங்கள் மொழியின் மீதிருக்கும் பிரியத்தில், உரிமையில் சொல்கிறேன்.

ஜெகதீஷ் குமார்

விரிவான வாசிப்புக்கு நன்றி ஜெகதீஷ். தன்பால் உறவாளர்கள் ஒதுக்கப்படுவதும், ஒழுக்கவாதத்தின் இரட்டை நிலைப்பாட்டையும் இக்கதை பேசுகிறது தான். ஆனால் என்னைப் பொறுத்தவரை அதையும் தாண்டி, internalized homophobia தான் இக்கதையின் முக்கியப் புள்ளி. அஷ்வத் தான் கே என்பதை மனதளவில் கூட ஒத்துக்கொள்ளாமல், வெளியே நடித்துக் கொண்டிருக்கிறான். மற்றவர்களை விட தீவிரமாக homophobia வை வெளிப்படுத்துகிறான். 

நீங்கள் சொல்வது சரிதான். சமமாக அங்கீகரிக்கப்பட்ட உலகில் வேறு நுட்பமானத் தளங்களுக்குச் செல்லலாம். ஆனால் ஆண்பெண் உறவு இரண்டாயிரம் ஆண்டுகளாக sublime செய்யப்பட்டு பக்தியாக்கப்பட்டு தான் வேறு நுட்பங்களுக்குச் செல்கிறது. மற்ற உறவுகளுக்கு அவ்வளவு காலம் காத்திருக்க முடியாது என்பது சரிதான். ஆனால் இப்போது தானே தொடங்கியிருக்கிறது. எழுதுவோம். 

கண்டிப்பாக, டெக்னிக்கை பலப்படுத்தவேண்டும். முயன்றுகொண்டே இருக்கிறேன். இன்னுமே கூட தீவிர விமர்சனம் தான் எனக்கு வேண்டும் :)

விஜய் ரங்கராஜன்.



26 நவம்பர், 2024

சஹிதா: அணையா நெருப்பு

 

கே.வி. ஷைலஜாவின் நாவலை முன்வைத்து


நன்றி: சொல்வனம்


மொழியாக்கங்களுக்குப் புகழ் பெற்ற கே.வி. ஷைலஜாவுக்கு சஹிதா முதல் நாவல். (பாலச்சந்திரன் சுள்ளிக்காட்டின் சிதம்பர நினைவுகள் அவர் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்து தமிழகத்திலும் புகழ்பெற்ற நூல்) நான் வாசிக்கும் அவர்களது முதல் நூலும் அதுவே. சஹிதா ஒரு கேரள கிராமத்திலுள்ள இஸ்லாமியக் குடும்பத்துப் பெண். அவளுக்கு தன் இந்துத் தோழியின் இல்லத்தில் கண்ட கடவுள் கண்ணன் மீது காதல் ஏற்பட்டு விடுகிறது. கண்ணன் மீது கொண்ட மையல், ஆன்மிகத் தவிப்பாகப் பரிணாமம் அடைந்து, இந்த இல்லற வாழ்விலிருந்து விடுதலையடைய வேண்டும் என்ற தாகம் அவளை எங்கும் பின் தொடர்ந்தபடியே இருக்கிறது. 

இல்லற வாழ்வு என்ற சொற்றொடரில் இங்கு நான் குறிப்பிட விழைவது திருமண பந்தத்தை மட்டுமன்று. நாம் இந்த இக வாழ்வை மேற்கொள்ளும் போது பிற மனிதர்களிடம் கொள்ளும் பரிவர்த்தனை தவிர்க்க இயலாதது. நாம் வாழும் சமூகமும் தான் கட்டமைத்திருக்கிற விதிகளின் பாற்பட்டு ஒருவர் நடந்து கொள்ளவேண்டும் என்றுதான் எதிர்பார்க்கும். பொருளாதாரத்திலும், மனித உரிமைகளுக்கான சட்டங்களை இயற்றிப் பேணிக்காப்பதிலும் உயர் நிலையில் விளங்கும் சமூகங்களிலேயே கூட ஆண்களுக்கென்றும், பெண்களுக்கென்றுமான தனித்தனி விதிகள் அமைந்திருக்கும்போது, நம் நாட்டைப்போன்று இன்றும் பெண்களை ஆணுக்குக் கீழான உயிராக பார்க்கும் சமூகங்களில் ஒரு பெண் ஆன்மிக விடுதலை தேடிப் பயணம் மேற்கொள்ளுதல் என்பது சிந்தித்துப் பார்க்க இயலாத ஒன்று. என் தனிப்பட்ட வாழ்வில் இப்படி தாகங்கொண்ட இரு பெண்களை நான் பார்த்திருக்கிறேன். என் மனைவியும், அவரது தாயாரும். என் மாமியார் ஆன்மிகத்திலும், பக்தியிலும், தத்துவத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். அத்வைத வேதாந்தத்தை முறையாக ஒரு குருவிடத்திலும், தன் கணவனிடத்திலும் கற்றவர். ஆனால் இறுதி வரை தான் ஒரு பெண்ணுடல் எடுத்ததாலேயே தன்னால் ஆன்மிகத்தில் தான் விரும்பும் நிலையை அடைய முடியவில்லை என்றும், விரும்பும் ஆன்மிகத்தலங்களுக்கு (காசி, ரிஷிகேஷ்) செல்ல முடியவில்லை என்றும் குறைபட்டுக் கொண்டே இருப்பார். பிறவித்தளையறுக்கும் வேதாந்தக் கல்வியைப் பெற்ற அவருக்கு, அடுத்த பிறவியில் தான் ஆணாகப் பிறந்தால் மட்டுமே வீடுபேறு அடைய முடியும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை இருந்தது. அதுவே இறைவனிடம் அவரது இறுதிக் கோரிக்கையாகவும் இருந்தது. இந்துக் குடும்பங்களில் பிறக்கும் பெண்களுக்கே ஆன்மிகப்பாதையைத் தேர்ந்தெடுத்தல் என்பது அசாத்தியமான விஷயமாக இருக்கும் போது, இந்த நாவலின் நாயகி சஹிதா ஒரு இஸ்லாமியக் குடும்பத்துப் பெண். அவள் சந்திக்கும் சவால்களும், அவளுக்குள் நிகழும் போராட்டங்களும் எத்தகையனவாக இருக்கும் என்பதை நாம் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம்.

சஹிதாவுக்குள்  சுடர் விட்டு எரியும், அணையா நெருப்பென அவளைக் கணந்தோறும் வாட்டும் அவளது ஆன்மிக நாட்டம் அவள் பெற்றோரையும், சகோதரியையும், கணவனையும், பெற்ற பெண்ணையும் கூடப் பிரிந்து வெளியேற அவளைத் தூண்டுகிறது. சஹிதா என்ற பெண்ணின் மனதின் ஆன்மிக ஏக்கங்களை, இல்லற வாழ்வின் மீது அவளுக்குண்டான கிலேசங்களை, தன்னைச் சுற்றிலும் உள்ள தனக்கு நெருங்கிய உறவுகள், தோழமைகள் இவர்களுக்குத் தன் தவிப்பைப் புரியவைத்து, அவர்களிடமிருந்து விலகிச் செல்லுதலை சாத்தியமாக்கிக் கொள்ள அவள் நிகழ்த்தும் போராட்டங்களை, இல்லறத்திலும் நிலைக்க இயலாமல், ஆன்மிகப் பாதையில் செல்வதால் தான் துறந்து செல்லப்போகும் உறவுகளின் இழப்பையும் தாங்க முடியாமல் அவள் மனத்துக்குள் என்னேரமும் நிகழும் கொந்தளிப்புகளை என அத்தனையையும் மிகத்துல்லியமாக ஆவணப்படுத்தியிருக்கிறார் நாவலாசிரியர்.

சஹிதா ஒரு பெண்ணின் கதை மட்டுமல்ல. அவளைச் சுற்றியுள்ள பல பெண்களின் கதையும் கூட. நாவலின் முற்பகுதியில் சஹிதாவைச் சுற்றியுள்ள, அவள் வாழ்விற்கு நெருக்கமான பல பெண்களின் கதையும் விரிகிறது. ஒன்பது வயதில் திருமணம் முடித்து, பதிமூன்று வயதில் பூப்பெய்தியதும் கணவன் வீட்டுக்குச் சென்று இரண்டரை ஆண்டுகள் மட்டுமே அவனோடு வாழ்ந்து, அவனை பாம்புக்கடிக்கு பலி கொடுத்து, தனியளாயினும், பிறருக்கு உதவுதல், பசியாற்றுதல் என்று தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கெனவே தன்னை மாற்றிக் கொண்ட சஹிதாவின் இத்தாமு; சபரிமலைக்கு மாலை போட்டிருக்கும் அப்பாவுக்கு அபச்சாரம் நேர்ந்து விடக்கூடாது என்பதற்காக தீட்டுத்துணி காயும் அறைக்குள்ளேயே தங்கி குருதிப்போக்கின் நாட்களைக் கழிக்கும் லீலா, மற்றும் அவள் வீட்டுப் பெண்கள்; ரத்தச் சிவப்பும், சுருண்ட கரு நீல முடியுமாக சஹிதா வீட்டுக்குள் ஒரு மோகினியைப் போல நுழையும் பேரழகியும், தன் கணவனைத் தொட மறுத்து பேய் பிடித்து ஆடும் ஜமீலா; சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்து, அண்ணனின் பாசத்தில் திளைத்தும், அண்ணியின் புறக்கணிப்பின் வலியேற்று துன்புற்றும் நாட்களைக் கடத்தி, பின் சஹிதாவின் தந்தையின் அன்பின் குடைக்குள் நுழைந்து வாழும் தாய் அஸ்மா; உடன் பிறந்தவர்களுக்கும் கணவனுடன் பிறந்தவர்களுக்குமே வாழ்க்கையை ஒப்புக் கொடுத்து தளர்ந்து போன ஜரீனா பீவி;  திருமணம் முடிந்து துபாய் சென்ற கணவன் விபத்தில் சிக்கி மருத்துவப் படுக்கையில் இருப்பதைக் கூட அறியாது வாழும் நளினி; இப்படிப் பல பெண்களின் வாழ்க்கைப் பயணம் துரித கதியிலும், அதே நேரம் துல்லியமாகவும் விவரிக்கப்படுகிறது. சஹிதா என்ற ஒரு பெண் தன் உள்ளத்தில் கனன்று சுழலும் ஆன்மிக நெருப்பைக் காத்து, அதன் மூலம் விடுதலையடைய வேட்கை கொண்டுள்ள பயணத்தில் மத்தியில், இத்தனைப் பெண்களின் கதைகளும் உரைக்கப்படுவது எதனால்? ஒருவேளை அவள் தேர்ந்தெடுத்துள்ள பாதை அவளுக்கு அத்தனை எளிதாக இருக்கப் போவதில்லை என்பதை அவளுக்கும், வாசகர்களாகிய நமக்கும் உணர்த்துவதற்காகத்தானா? இத்தனைப் பெண்கள் அவளைச் சுற்றி தங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கையில், அவள் மட்டும் தனக்குச் சிறகுகள் முளைத்து வெளியே பறந்து விட வேண்டும் என்று கனவை ஏந்திக் கொண்டிருப்பது நியாயமா என்று அவளைச் சுற்றியுள்ளவர்கள் சொல்லற்ற கேள்விகளால் துளைப்பதாகவே நான் கற்பனை செய்து கொண்டேன்.

ஒரு நாவல் என்பது பிரதானமாக அதன் முக்கியக் கதாபாத்திரங்கள் தங்கள் உள்ளத்தில் மேற்கொள்ளும் உளவியல் பரிணாம வளர்ச்சியே என்று நான் கருதுகிறேன். ஒரு வாசகராக ஒரு நாவலின் மையக் கதாமாந்தர்கள் எங்கனம் பல்வேறு சூழ்நிலைகளையும், சவால்களையும் எதிர்கொள்கின்றனர் என்றும், அவ்வனுபவங்களின் மூலம், அவர்கள் தாங்கள் இருந்த நிலையிலிருந்து என்ன மாதிரியான மாற்றங்களை அடைகிறார்கள் என்பதை அவதானிப்பதுமே நாவல் வாசிப்பில் வாசகனைக் கிளர்ச்சியடையச் செய்யும் செயல்களாகும். இந்தப் பயணத்தை மேற்கொள்ளும் வாசகனையும் கதாமாந்தர்களுக்கு நிகழும் அனுபவங்கள் மிக நுண்மையாக பாதிக்கவும், அவனுள் மாற்றத்தை ஏற்படுத்தவும் செய்கின்றன. இந்த நாவலில் ஆசிரியர் தனது கதா மாந்தர்களான சஹிதா மற்றும் அவளுக்கு நெருங்கிய மனிதர்கள் எங்கனம் மாற்றமடைகின்றனர் என்பதை மிக ஆழமாகப் பதிவு செய்திருக்கிறார். ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மேல், பிற பாத்திரங்களின் முக்கியத்துவம் மங்கி சஹிதாவின் ஆன்மிகத் தவிப்பே பிரதானமாக மேலோங்கி நிற்கிறது. சம்பவங்கள் அவளது உள ஏக்கத்தின் வெளிப்பாடாகவே நிகழ்கின்றன. உரையாடல்கள் அவள் எடுக்கவிருக்கும் முடிவின் சாதக, பாதகங்களைப் பற்றிய வாதப்பிரதிவாதங்களாகவே நிகழ்கின்றன. குறியீட்டளவில் கூட அவள் செல்லும் இடங்கள், காணும் கனவுகள், பிற உயிர்களின் செயல்களை அவள் பொருள்படுத்தும் விதம் ஆகியன அவளது ஆன்மிகத்தாகத்தின் பருப்பொருள்களெனவே விளங்குகின்றன.

மூன்று ஆண்கள் சஹிதாவுக்கு முக்கியமானவர்கள்: சஹிதாவின் அத்தா கரீம்;  அவளது கணவன் நாசிம்; அவளது ஆன்மிகத் தோழன் ஆதி. இது தவிர தன் மனைவியின் இழப்பில் மனநிலை பிறழ்ந்த நிசார், அவளைத் தன் தோழியாக வரித்துக் கொள்ளும் இசையமைப்பாளர் நந்தா, அவள் தொடங்கும் தொழிலுக்கு உதவி புரியும் சீமத்தாத்தா என்று மேலும் சில ஆண்களும் சஹிதாவின் வாழ்க்கைக்குள் வந்து அவளது அகத்தூண்டலின் வளர்ச்சிக்குப் பங்காற்றுகிறார்கள்.

சஹிதா சிறுவயதிலிருந்தே தந்தையின் அன்பிற்காக ஏங்குகிறாள். அவரோ அவளது தங்கை வஹிதாவையே தன் செல்வமாக நினைக்கிறார். அவரது ஆன்மிக நம்பிக்கை கூட அடிப்படை இஸ்லாமியத்திலிருந்து விலகி சூஃபி மரபின் மிண்டா தங்ஙளை வணங்குவதாக இருக்கிறது. ஒருவேளை சஹிதா தன்னுடைய தனித்துவம் மிக்க ஆன்மிகப் பாதையைத் தேர்ந்தெடுத்ததற்கு அவள் தன் தந்தை மீது கொண்டிருந்த பிரேமை கூடக் காரணமாக இருக்கலாம். 

இறுதி வரை அவளுக்கு உடன் நிற்பவன் அவள் கணவன் நாசிமே. தன் தாய் ஜரீனாவின் சீற்றங்களையும், அவள் மருமகள் மீது காட்டும் வன்மத்தையும் பொறுத்துக் கொண்டு, மனைவிக்கு அரணாக எல்லா இடத்திலும் நிற்கிறான். சஹிதாவிடம் அவன் மேற்கொள்ளும் உரையாடல்கள் அவளுக்கு அவளது ஏக்கத்தின், கனவுகளின் அபத்தத்தைப் புரியவைத்து அவளை மீண்டும் இல்லற வழிக்குத் திருப்பும் முயற்சிகளாக இருப்பினும், சிறிது சிறிதாக அந்த உரையாடல்களின் மூலம், எதிர்காலத்தில் சஹிதா தன்னையும், குடும்பத்தையும் விட்டு நிரந்தமாக வெளியேறி விட்டால் தனக்குள் நிகழப்போகும் துக்கத்தைத் தேற்றிக்கொள்ளும் வழியாகவே அவன் காண்பதாகப் பார்க்கிறேன். அவர்களுக்குப் பெண் குழந்தை அமீரா பிறந்து பதினெட்டு ஆண்டுகள் ஆயினும் சஹிதா தன் நோக்கத்தில் மாறாதிருப்பதை அருகிருந்து கண்ணுறுகிறவன் அவன்தான். எனவே, உலகே எதிர்த்து நின்றாலும் அவளது முடிவுகளுக்குத் துணையாக நான் நிற்பேன் என்று உறுதி கொண்டவன் அவன். சஹிதா வீட்டை விட்டு வெளியேறும்போது அவள் ஆதியுடன் தன் பயணத்தைத் தொடரவேண்டும் என்ற முடிவில் உறுதியாயிருப்பவனும் அவனே. நாசிம் போன்ற கணவன் அமைந்திருக்கவில்லையெனில் சஹிதா தன் ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கியிருக்க முடியுமா என்பது ஐயமே.

அயல் நாட்டிலிருந்து வந்து, இந்திய ஆன்மிகத்தில் தன்னைக் கரைத்துக் கொண்டு தன் பெயரையும் மாற்றிக் கொண்ட ஆதி, சஹிதாவுக்குப் பொருத்தமான ஆன்மிகத் தோழன். அவன் அவளுடன் நிகழ்த்தும் உரையாடல் சஹிதாவுக்கு அவனைப்பற்றியும், தன்னைப் பற்றியுமே புரிந்து கொள்ள உதவுகின்றது.

நாவல் ஒரே கோட்டில் பயணிக்காமல் முன், பின்னாக நகர்ந்து கொண்டே இருக்கிறது. சஹிதாவுக்கு குழந்தை பிறந்து ஆறு ஆண்டுகள் கழித்தபின், அவளது சொந்தத் தொழில் முயற்சிகள் எல்லாம் விளக்கப்பட்டபின் அவளது திருமணம் நிகழ்ந்த விதம் வருணிக்கப்படுகிறது. சட்டென்று நாவல் நம்மை சஹிதாவின் குழந்தைப் பருவத்துக்குள் இட்டுச் செல்கிறது. மீண்டும், மீண்டும் சஹிதாவின் கடந்தகால வாழ்விற்குள் எட்டிப்பார்ப்பதன் மூலம், அவள் நிகழ்காலத்தின் ஏன் சிலவிதமான முடிவுகளை எடுக்கிறாள் என்பதை வாசகர் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள முடிகிறது என்று நினைக்கிறேன். நாவலின் ஒரு அத்தியாயத்தில் சிறுமி சஹிதாவின் வீட்டுக்கு வரும் பிச்சைக்காரர்களைப் பற்றிய குறிப்புகள் வருகின்றன. வேலாயுத பண்டாரமும், குட்டப்பனும் தனக்குப் பிச்சையளிக்க வரும் சிறுமி சஹிதாவுக்குச் சொல்லும் கதைகளில் அவள் மெய்மறந்திருக்கிறாள். அம்மா அதற்காக அவளைக் கண்டிக்கும்போதும், அடிக்கும்போதும் அவள் மனம் அவர்கள் சொல்லும் கதைகளையே நாடிச் செல்லுகிறது. குட்டப்பன்தான் அவளுக்கு சிதம்பரம் நடராஜர் பற்றிச் சொல்பவன். திருமணம் ஆகி கணவன் இல்லம் வந்தபின், அவனது அனுமதியுடன் கடவுளர் பிரதிமைகளை வீட்டுக்குள் (மாமியாருக்குத் தெரியாமல்) வைத்துக் கொள்கிறாள். தன் குழந்தைமையிலிருந்து உடன் வந்த நீலநிறக் கண்ணன் மாயமாகி அந்த இடத்திற்கு அண்ட சராசரத்தையும் தன் களி நடனம் மூலம் அளந்த சிவன் எப்படி வந்தானென்று அவளால் அப்போது கண்டடைய முடியவில்லை. 

அவளது கேரள வீட்டின் தோட்டத்திற்குப் பின்னால் வேலிப்படப்பிற்கு அந்தப்புறம் ஒரு பாழடைந்த மாடிவீடு. அதில் உடைகள் துறந்து வாழும், மனநிலை பிறழ்ந்த யாயா பாட்டி. சிறுமி சஹிதா மட்டுமே அவளை தைரியமாகக் காணச் செல்கிறாள். இந்தக் காட்சியை நாவலாசிரியர் விவரித்திருந்த விதம், இந்த நாவலின் கலை உச்சங்களின் ஒன்று இந்த இடம் என்று என்னை எண்ண வைத்தது. மேலும் சில பகுதிகளை இந்த நாவல், இந்த வடிவத்தில் அது கொண்டிருக்கும் கலை உச்சங்களெனக் குறிப்பிடலாம். அடுத்ததாக இந்த நாவலில் என் கவனத்தை மிகவும் ஈர்த்த பகுதி சஹிதாவுக்குக் குழந்தை அமீரா பிறந்ததும், அவர்கள் பகுதியில் வாழும் சாந்தம்மா சேச்சி முதல் பதினைந்து நாட்களுக்குக் குழந்தையையும், பிள்ளைத்தாய்ச்சிப் பெண்ணையும் நான்தான் கவனித்துக் கொள்வேன் என்று ஆணையிட்டு விடுகிறாள். அந்தப் பதினைந்து நாட்களும் அவள் சஹிதாவையும், குழந்தையையும் எவ்வாறெல்லாம் கவனித்துக் கொள்கிறாள் என்று மிக நுட்பமாக விவரித்திருக்கிறார் ஷைலஜா. தமிழர் வாழ்க்கையின், மலையாளிகளின் வாழ்க்கையின் ஒரு மிக முக்கியமான பகுதி இவ்விடத்தில் மிகத்துல்லியமாக ஆவணமாக்கப்பட்டிருகிறது. இன்னொரு காட்சி. சரிதாவின் மாமனார் சீமத்தாத்தா இறந்து அவருக்கு இறுதிச்சடங்கும் முடிந்தபின் நிகழ்வது. சிறுவன் சரண் சீமத்தாத்தாவின் கார் பானட்டில் மீது ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கிறான். சரணின் பெரியப்பா ஓடி வந்து, “டேய் சரண், எறங்குடா, தாத்தா திட்டுவாரேடா,” என்று அவனை மிரட்ட, அவனோ காரின் மேல் குத்துக் காலிட்டு உட்கார்ந்து, “பெரிப்பா, தாத்தாதான் இப்ப இல்லயே, என்ன யாரும் இனிமே கேக்க முடியாது, நான் என்ன வேணாலும் செய்வேன்,” என்று அந்த காரை ஓங்கிக் குத்துகிறான். புரிந்து கொள்ளாத உளவியல் என்பது பெரியவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் பொருந்தும் என்று இந்தக் காட்சி விளக்குகிறது. கீழ்மையும், வன்மமும் குழந்தைகளிடத்து வெளிப்படுவதைக் காணும்போது நாம் ஏன் துணுக்குறுகிறோம்?  இதில் ஒளிந்துள்ள உளவியல் மர்மம்தான் என்ன? நமக்குள் நாம் ஒளித்து வைத்துள்ள கீழ்மைகளை அவர்கள் நினைவுறுத்துவதாலா? தூய உயிர் என்று மட்டுமே நாம் நம்பும் குழந்தைகளிடத்தும் வன்மம் போன்ற கீழ்மைக் குணங்கள் சாத்தியமுண்டு என்று அறிவதால் ஏற்படும் துணுக்குறலா அது?

சௌகத் என்ற எழுத்தாளரின் மொழி ஆழம் என்ற நூலை வாசித்த சஹிதா அவருக்குக் கடிதம் எழுதுகிறாள். அவர் அவளை வந்து சந்திக்கிறார். ஒரு யோகியின் சுயசரிதம் நூலைப் பரிசளிக்கிறார். சஹிதா அதை வாசிக்கிறாள். இப்படிச் சின்னச் சின்னதான குறிப்புகள், எவ்வாறு மெல்ல, மெல்ல சஹிதா தன் ஆன்மிகப் பாதை எது என்பதில் தெளிவடைகிறாள் என்பதை காட்டுகின்றன. கவனமற்று வாசிக்கையில் நாம் தவறவிட்டுவிடக் கூடிய சாத்தியங்களுள்ள குறிப்புகள் அவை. குழலூதும் கண்ணனில் துவங்கி, சிதம்பர சிவன் வழியாக சன்யாச தீட்சை வேண்டும் ஆவலாகப் பரிணமிக்கிறது அவளது ஏக்கம். பின் தன் நண்பர்கள் ராதா, ஹரியின் குழந்தை விஷ்ணுவைப் பார்த்ததும், தன் வாழ்வைக் கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு அர்ப்பணம் செய்யவேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது. கூழாங்கல் மாற்றி விளையாடும் விஷ்ணுவின் கண்களில் அவள் கண்ணனையே காண்கிறாள். தன் ஆன்மிகச் சாதனையின் ஒரு பகுதியாக சஹிதா ரேக்கி ஹீலிங்க் செய்கிறாள். ஜோதி அம்மாவின் கடிதமும், நாசிமும், சஹிதாவும் காரில் செல்கையில் வழியில் குறுக்கிடும் நாடி ஜோதிடக்காரியின் ஆருடமும் சொல்வது ஒன்றையே: சஹிதாவின் வாழ்வின் பணி என்பது நான்கு சுவர்களுக்குள் அடைக்கப்பட்டு விடுவதல்ல. மகத்தான காரியங்களுக்காகவே அவளது பிறப்பு அமைந்திருக்கிறது. நந்தா, சக்தி தம்பதியர் அளிக்கும் விருந்தில் நந்தா இசையமைத்த பாடலை எலலாரும் பாடுகிறார்கள். அந்தப் பாடலின் சாரமே அவளது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துகிறது.

“காஷாயம் - சிவாலயம்

சர்வம் - கர்மம்

விருப்பாட்சம்

மகா மோட்சம்

சரணாகதி”

சஹிதாவின் கணவன், தோழிகள் அனைவரும் அவளிடம் அவள் முடிவு குறித்து வாதிடுகிறார்கள். மாற்றிக்கொள்ளும்படி மன்றாடுகிறார்கள். சஹிதாவை விட பத்து வயது அதிகமான சரிதாவால் மட்டும் அவள் முடிவை ஏற்றுக்கொள்ளவே முடிவதில்லை. ஒருவழியாக அவள் சன்யாசம் மேற்கொள்வதை ஏற்றுக் கொண்டாலும், அவள் இன்னொரு ஆடவனுடன் வெளியேறுவதில் அவளுக்கு உடன்பாடே ஏற்படுவதில்லை. மிகவும் கடுமையாக அவள் முடிவுகளை எதிர்க்கிறாள். சஹிதாவின் கணவன் நாசிம்தான் மனைவிக்கு ஆதரவாக அவளிடம் வாதிடுகிறாள்.

ஆனால் சஹிதாவின் இந்த முடிவை மூர்க்கமாக எதிர்ப்பதும், அவள் வெளியேறினால் மொத்தமாக அறுத்துக் கொண்டு வெளியேற வேண்டும் என்ற நிபந்தனை விதிப்பதும் அவளது மாமியார் ஜரீனாதான். நாவலின் உச்ச நாடகீயத்தருணங்களில் ஒன்று ஜரீனா சஹிதாவின் பெற்றோர்களிடம் அவள் வெளியேறுவதற்கான நிபந்தனைகளை விதிப்பது. சஹிதா தன் மகள் அமீரா தன் முடிவு எவ்விதம் புரிந்து வைத்திருக்கிறாள் என்று அறிந்து கொள்ள அவளுடன் நிகழ்த்தும் உரையாடலும் நாவலின் கவித்துவம் கவிந்த நாடகீயத் தருணமே.

இறுதியில் முறையாக விவாகரத்து பெற்று ஆதியுடன் வெளியேறுகிறாள் சஹிதா. அவனுடன் ரமணாஸ்மரத்தில் பிக்ஷைக்கு நின்று கொண்டிருப்பதாய் ஒரு படிமம் அவள் மனக்கண்ணில் வந்து செல்கிறது. இறுதி வரை தன் முடிவில் உறுதியாக நின்று, தன் ஆன்மிகத் தவிப்பைத் தணித்துக் கொள்கிறாள் சஹிதா. வானம் குடையென விரிந்திருக்கும் இவ்வாழ்வு இனி அவளுக்கு என்ன மாதிரியான சவால்களை அளிக்கப் போகிறது? அனைத்தையும் துறந்து, இப்பேரிருப்பின் இயல்பில் கரைந்து விட எண்ணங்கொண்டு வெளியேறியவளை அப்பேரிருப்பே இருகரம் கொண்டு அணைத்துக் கொள்ளுமா? தன் சிறகுகளுக்குள் வைத்துக் அடைகாத்துக் கொள்ளுமா? அக்கம்மா தேவி போன்று பல பெண் ஞானியரைக் கண்ட தேசம்தான் நம்முடையது. வேதாந்த வகுப்புகளில் கலந்து கொள்வதற்காக நான் சென்ற ஆசிரமங்களில் நிறைய பெண் துறவியரைச் சந்தித்திருக்கிறேன். அவர்கள் பொருள் தேடும் வாழ்வை விடுத்து ஞானத்துக்காக அனைத்தையும் துறந்து வந்ததைக் கண்டு வியந்திருக்கிறேன். அவர்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் சஹிதாவுக்கு நிகழ்ந்தது போன்ற அனுபவங்கள் நிகழ்ந்திருக்கும்தானே! அத்தனை சவால்களையும் மீறித்தானே அவர்கள் இன்றிருக்கும் நிலையை அடைந்திருக்க இயலும்! அவர்கள் வாழ்விற்க்குள் சஹிதா போன்று எத்தனை நாவல்கள் பொதிந்திருக்கின்றனவோ?

நாவலாசிரியர் கே.வி. ஷைலஜாவின் மொழி மனதுக்கு நெருக்கமானது. நிறைய இடங்களில் அது கட்டற்றுப் பிரவகிக்கிறது. பல இடங்களில் அவரது மொழியின் தனித்துவம், இப்படி ஒரு நடையை நம்மால் மேற்கொள்ள முடியுமா என்ற ஏக்கத்தைத் தோற்றுவிக்கிறது. நீண்டகாலம் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து வந்ததன் மூலம், அவரது மொழிக்கு லயமும், இசையும், சொற்களின் தனித்துவமும் ஒன்று கூடி, அவர் நமக்குக் காட்ட விரும்பும் உலகின் மாயத்தை எளிதில் நிகழ்த்திக் காட்டுகின்றன. மிகக் கச்சிதமான திட்டமிடல், அதே நேரம் நாவலில் கட்டற்றுப் பெருகும் பாங்கு, எண்ணற்ற கதை மாந்தர்கள் நாவலுக்குள் தோன்றிக் கொண்டே இருப்பது, அதே நேரம் நாவல் தன் குறிக்கோளை நோக்கி சீரொழுக்கான நதியைப் போன்று பயணிப்பது, நாவலின் உரையாடல்கள் அதன் மையத்தை நோக்கியே இருப்பது என்று ஓர் ஆகச் சிறந்த நாவலுக்குரிய அம்சங்களைப் பெற்றிருக்கிறது சஹிதா. நான் அண்மையில் வாசித்த நாவல்களில் முழுமையும், ஒருமையும் கூடி என்னை வசீகரித்த நாவல்களில் ஒன்று சஹிதா. அவரது வாசகர் பலருடையதைப் போல எனது அவாவும் அவர் நிறைய புனைவு எழுத வேண்டுமென்பதுதான். 

* * *


ஹான் காங் -புனைவும் இலக்கியமும்

  




நன்றி: சொல்வனம்


தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்குக்கு 2024- ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.  தென்கொரியாவிலிருந்து இந்த விருதைப் பெறும் முதல் எழுத்தாளர் இவர். ஹான் காங் தன் நாட்டினரால் ஆற்றல் வாய்ந்த தொலை நோக்குப் பார்வையாளர் என்று கொண்டாடப்படுபவர். வரலாற்றுத் துயரை துணிவுடன் எதிர்கொள்ளும், மனித வாழ்வின் பலவீனங்களை வெளிப்படுத்தும், அவரது கவித்துவமிக்கதும் தீவிரமானதுமான உரைநடைக்காக ஹான் காங்குக்கு இந்த விருது அளிக்கப்படுவதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது. நோபல் கமிட்டியின் தலைவரான ஆண்டர்ஸ் ஓல்சன், தன் அறிக்கையில், “ஹானின் எழுத்து உடலுக்கும், ஆன்மாவுக்கும், இறந்தவர்களுக்கும், உயிருள்ளவருக்கும் இடையில் உள்ள தொடர்பு குறித்த தனித்துவமிக்க விழிப்புணர்வோடு எழுதப்படும் புதுமையுடையது,” என்று குறிப்பிடுகிறார்.

ஐம்பத்து மூன்று வயதான ஹானின் தந்தையும் ஒரு நாவலாசிரியரே. அவரது குடும்பம் பொருளாதார ரீதியான சிரமத்தின் காரணமாக அடிக்கடி இடம்பெயர வேண்டியிருந்தது. “இப்படி இடம் மாறிக்கொண்டே இருந்தது சிறுகுழந்தையான எனக்குக் கடினமாக இருந்தது. ஆனால் நான் எப்போதும் புத்தகங்களால் சூழப்பட்டிருந்தேன். அவை என்னைக் காப்பாற்றின,” என்று ஹான் தான் அளித்த நேர்காணல் ஒன்றில் குறிப்பிடுகிறார்.

ஹானுக்கு 9 வயதாக இருந்தபோது, ​​குவாங்ஜு எழுச்சிக்கு சில மாதங்களுக்கு முன்பு அவரது குடும்பம் சியோலுக்கு குடிபெயர்ந்தது, அப்போது அரசாங்கத் துருப்புக்கள் ஜனநாயக சார்பு எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்றனர். இந்த நிகழ்வு மனித குலத்தின் வன்முறைத்திறன் குறித்த தன் பார்வையை வடிவமைத்ததாக ஹான் கூறுகிறார். அவரது எழுத்திலும் இதன் பாதிப்பு உண்டு. 2014-ல் வெளிவந்த “மனிதச் செயல்கள்” ( Human Acts ) என்ற நாவல் போராட்டக் குழு ஒன்றின் மீது காவல்துறை நிகழ்த்தும் சோதனையைக் கூர்மையாக அவதானிக்கிறது.

கொரியாவின் யோன்சேய் பல்கலைக் கழகத்தில் இலக்கியம் பயின்ற ஹான் வெளியிட்ட முதல் படைப்பு கவிதைகளே. 1998 ல் வெளிவந்த இவரது முதல் நாவல் “கருப்பு மான்” ( Black Deer ) தொலைந்து போன பெண்ணொருத்தியின் மர்மத்தை ஆராய்வது. இந்த காலகட்டத்தில்தான் இவருக்குத் தாவரமாக மாற ஆசைப்படும் பெண்ணொருத்தியின் கதையைச் சிறுகதையாக எழுதும் எண்ணம் தோன்றியிருக்கிறது. பின்னாளில் இக்கதை ஒரு நாவலாக உருக்கொண்டது. 

2016-க்கான புக்கர் விருது வென்ற இவரது மீமெய்யியல் நாவலான  த வெஜிடேரியன், தமிழில் “மரக்கறி” என்ற பெயரில் கவிஞர் சமயவேல் மொழியாக்கத்தில் வெளிவந்துள்ளது. இந்த நாவல் மன அழுத்தத்துக்கு ஆளான இல்லத்தரசி ஒருவரை மையமாகக் கொண்டது. அவள் தன் மன அழுத்தம் காரணமாக இறைச்சி உண்ணுவதை நிறுத்தி தன் இல்லத்தினரை அதிர்ச்சிக்கு ஆளாக்குகிறார். காலப்போக்கில் உண்ணுவதையே முற்றிலுமாக நிறுத்தி விடுகிறாள். சூரிய ஒளியை மட்டுமே உண்டு வாழக்கூடிய ஒரு மரமாக வாழ ஏங்குகிறாள். 

த வெஜிடேரியன் மனத்தெளிவுக்கும், மனப்பிறழ்வுக்கும் இடையேயான எல்லைகளை ஆராய்கிறது. ஆசைக்கும், வன்முறைக்கும் இடையேயான எல்லைகள்; செயலூக்கத்துக்கும், வெறிச்செயலுக்கும் இடையேயான எல்லைகள் ஆகியவற்றையும் ஆராய்கிறது. 2007-ல் கொரிய மொழியில் மூன்று தனித்தனி நாவல்களாக வெளியிடப்பட்ட இந்த நாவல் நேர்த்தியாகவும், சிலிர்ப்பூட்டும் வகையிலும் சொல்லப்பட்ட ஓர் இருண்ட நாவல். டெபோரா ஸ்மித் இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

இந்த நாவலின் மையக்கதாபாத்திரம் யோங்-ஹை இறைச்சி உண்பதை நிறுத்தி விடுவது மட்டுமல்லாமல், உடலுறவிலும் நாட்டமிழந்து விடுகிறாள். அவள் பிரா அணிந்து கொள்வதை நிறுத்தியதை பெண்மைக்கு மாறான நடத்தை என்றும், அவளது அப்போதைய மாற்றத்தைச் சரிசெய்து கொள்வதற்கான தவறான செயல் என்றும் அவள் கணவன் எச்சரிக்கிறான். அவள் ஏதோ நோய்க்கு அடிமையானதைப் போல அவளது குடும்பமே அவளது சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறது. அவளது தந்தை அவளுக்கு வலுக்கட்டாயமாக உணவளிக்க முயற்சிக்கிறார், அவளை அறைந்து, பின்னர் சிறிது பன்றி இறைச்சியை அவள் உதடுகளில் திணிக்கிறார். அவள் வாயைத் திறக்காதபோது அவர் அவளை மீண்டும் அறைகிறார். 

நாவல் முழுக்கவே யோங்-ஹையின் செயல்கள் ஏதோ ஒரு ஆணின் பார்வையிலேயே காட்டப்படுகின்றன. நாவலின் முதல் பகுதி அவளது கணவனின் பார்வையில் உள்ளது. தன் மைத்துனியைப் பற்றி ஏக்கத்துடன் கற்பனை செய்பவன் அவள் கணவன். தொலைபேசியில் அவள் குரலைக் கேட்டதும் கிளர்ச்சியடைபவன். அவன் தன்னை வலுக்கட்டாயமாக உடலுறவுக்கு உட்படுத்த முயலும்போது யோங்-ஹை தன்னை வழங்குவதில்லை. அவன் மீது வசைச் சொற்களைப் பொழிகிறாள். மீறி அவன் வன்புணர்வு செய்யும்போது கூரையை வெறித்தபடி படுத்துக் கிடக்கிறாள், ஒரு ஜப்பானிய வீரனுக்குப் போர்க்காலத்தில் இன்பமளிக்கும் விலைமாதுவைப் போல. அவளது நடத்தையாலேயே அவள் அவனைத் தன்னிடமிருந்து விலகிச் செல்ல வைத்து விடுகிறாள்.

நாவலின் இரண்டாவது பகுதி யோங்-ஹையின் மைத்துனரின் பார்வையில் சொல்லப்படுகிறது. தவறான பெண்ணை மணந்து கொண்டதாக வருந்தும் அவன் ஹையின் பேச்சு, ஆடையுடுத்தும் விதம், உணவுண்ணாமையால் துருத்தித் தெரியும் அவளது கன்னத்து எலும்புகள் ஆகியவற்றால் கவரப்படுகிறான். அவன் மனைவியுடன் ஒப்பிடுகையில் அவள் அழகற்றவள்தான். ஆனால் அவள் வனாந்தரத்தில் வளரும் ஒரு மரத்தைப் போல புத்துணர்வைப் பரப்பிக் கொண்டிருப்பதாக அவனுக்குப் படுகிறது. ஆனால் இத்தருணத்தில் ஹை இறைச்சியைத் துறந்து இரண்டு ஆண்டுகளாகியிருக்கிறது. அவளது திருமண வாழ்க்கை முறிந்து, மனநலக் காப்பகத்தில் பல மாதங்கள் கழிக்கிறாள். அவளது மைத்துனன் ஒருமுறை தன் மனைவி மூலம் ஹையின் பிருஷ்டத்தில் உள்ள மங்கோலியன் குறியைப் பற்றிக் கேள்விப்படுகிறான். அந்தப் பிம்பத்தால் உந்தப்பட்டு, நிர்வாணமாக உடலுறவில் ஈடுபடும் ஆண்களும் பெண்களும் கொண்ட, அவர்களின் உடல் முழுவதும் பூக்களால் வர்ணம் பூசப்பட்ட ஓவியங்களால் தன் நோட்டுப் புத்தகத்தை நிரப்புகிறான். பின் அவளது நிர்வாண உடலில் பூக்களை வர்ணம் தீட்டுவதற்கு ஒப்புக்கொள்ள வைக்கிறான். அந்தச் செயலின் மூலம் அவள் மீது தனக்குள்ள காம இச்சையிலிருந்து விடுதலையடைகிறான்.

“இது ஒரு அழகான இளம் பெண்ணின் உடலாக இருந்தது, வழக்கமான ஆசைப் பொருளாக இருந்தது, ஆனால் இப்போது அது அனைத்து ஆசைகளையும் நீக்கிய உடலாக இருக்கிறது. இப்போது அவள் அடைந்திருப்பது உடலாசையைப் போல அவ்வளவு மோசமானது அல்ல. அவள் துறந்திருப்பது அவளுடைய உடல் பிரதிநிதித்துவப்படுத்தும் வாழ்க்கையைத்தான்.”

என்கிறான்.

பெண்ணின் அந்தரங்க வாழ்க்கைக்குள்ளாக வெளிச்சம் பாய்ச்சியதில் இந்த நாவல் வழக்கத்துக்கு மாறான ஒரு பாதையைத் தேர்ந்தெடுக்கிறது. பெண்ணின் வலி, இன்பம், ஆர்வம், வெறுப்பு, புரிந்து கொள்ள முடியாத தனிமை ஆகியவற்றை ஆராய்கிறது. இது பெண்ணிய நாவல் என்ற தோற்றத்தை முதலில் கொடுத்தாலும் இந்த நாவல் ஆராயும் விஷயங்கள் அதையும் மீறியவை. முதல் பகுதியில் திருமணம், சமூகம் என்ற இரு விஷயங்களின் மீது வெளிச்சம் பாய்ச்சும் நாவல், இரண்டாம் பகுதியில் கலை, பாலுணர்வு, பெண்ணுடல் போன்றவற்றின் மீதான பொதுப்பார்வையையும் ஆராய்கிறது. இறுதிப்பகுதியில் இயற்கை மற்றும் மரணம் அதன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. 

ஹை மரக்கறி உணவுக்கு மாறியது, தன்னை ஒரு மிருகமாக உணர்ந்து வாழ்வதை நிராகரிக்கும் ஒரு முயற்சி. மைத்துனரால் அவள் உடலெங்கும் தீட்டப்பட்ட வண்ணப்பூக்கள் அவளுக்கு வரும் கெட்ட கனவுகளிலிருந்து அவளுக்கு விடுதலை அளிக்கின்றன. முதல் பகுதியில் மூன்று ஆண்டுகள் மனநல காப்பகத்தில் கழிக்கும் அவள் மூன்றாம் பகுதியிலும் அங்கேயே கழிக்கிறாள். அவளை அங்கு வந்து சந்திக்கிறாள் அவளது சகோதரி. அவளது பார்வையில்தான் இந்த இறுதிப் பகுதி சொல்லப்படுகிறது. தன் குழந்தைப் பருவத்தை ஹையுடன் மிருகத்தனமான தந்தையுடன் கழித்த அவளது சகோதரிக்கும் ஹையின் நடத்தைகள் குழப்பத்தை விளைவிப்பதாகவே உள்ளன. 

“ஹை அவளுக்கு நினைவூட்டும் எதையும் அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவளால் தன்னை ஒருபோதும் கடக்க முடியாத எல்லைக்கு மேல் தனியாக உயர்ந்ததற்காக ஹையை மன்னிக்க முடியவில்லை. ஹையின் அசாத்தியமான பொறுப்பற்ற தன்மையை அவளால் மன்னிக்கவே முடியவில்லை. ஹை தன்னை ஒரு கைதியைப் போல் தனியாக விட்டு விட்டு வேறெங்கோ வசித்துக் கொண்டிருப்பதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சிறைக்கம்பிகளைப் போலிருந்த சமூகம், திருமணம், உடல், பாலுறவு, கலை போன்றவற்றின் மாயையை ஹை  உடைத்திருக்கிறாள். அவற்றை உடைக்கு முன்பு, அவை அங்கு இருந்ததையே அவளது சகோதரி அறிந்திருக்கவில்லை.” 

ஹான் இதுவரை எட்டு நாவல்கள், பல குறு நாவல்கள், கட்டுரை மற்றும் கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். “த ஒயிட் புக்” என்ற நாவலும் சர்வதேச புக்கர் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டதுதான். அவரது இன்னொரு நாவலான “கிரீக் லெசன்ஸ்” பேசும் திறனை இழந்த பெண் ஒருத்தி பழைமையான கிரேக்க மொழியைக் கற்றுக் கொள்வதன் மூலம் அதை மீட்டெடுக்க முயலவதைப் பற்றியது. “ஒரு மொழியைப் பகிர்ந்து கொள்வதில் உள்ள விவரிக்க முடியாத நம்பிக்கையின் கொண்டாட்டம் இந்த நாவல்” என்று டைம்ஸ் பத்திரிக்கை குறிப்பிடுகிறது.

இருபது ஆண்டுகளாக இவரது படைப்புகளை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் கற்பித்து வரும் இலக்கியப் பேராசிரியர் அங்கி முகர்ஜி, “ அவரது எழுத்து உடலுக்கும், பால் பிரிவினைக்கும், அமைப்புகளுக்கு எதிரான போராட்டத்துக்குமான அரசியலைத் திரும்பத் திரும்ப பேசிக் கொண்டே இருக்கிறது. ஆனால் ஒருபோதும் அது இலக்கியத்துக்கு உரிய கற்பனையையும், அழகியலையும் விட்டு விடுவதில்லை. அவரது எழுத்து எப்போதும் உபதேசம் செய்வதில்லை. மாறாக அது விளையாட்டுத்தனமாகவும், வேடிக்கையாகவும், அதிமெய்யியல் தன்மையோடுமே இருக்கின்றது,” என்று குறிப்பிடுகிறார்.


நன்றி:

Leaves Sprouting on her Body - Adam Mars-Jones - London Review of Books

The Darkness of Primitive Desires - LARB

Han Kang Is Awarded Nobel Prize in Literature - The New York Times

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு - தினமணி



19 அக்டோபர், 2024

உடைந்து எழும் நறுமணம் - இசை கவிதைகள்






நன்றி: கவிதைகள் மின்னிதழ்


கவிஞர் இசையின் உடைந்து எழும் நறுமணம் தொகுதியில் உள்ள கவிதைகள் ஒவ்வொன்றும் அவற்றை அணுகும் வாசகருக்குத் தன்னளவிலேயே தெளிவாகத் துலங்குகின்றன. அவற்றைக் கவிநயம் பாராட்டி, விளக்கி எழுதுவதென்பது ரத்தினக்கற்களை பட்டுத்துணி கொண்டு மூடுவது போல ஆகிவிடுமோ என்று சற்று தயக்கமாகக் கூட இருக்கிறது. இத்தொகுப்பில் உள்ள பல கவிதைகளில் கவிஞர் இசை எழுப்பியுள்ள அதிர்வுகளோடு என்னால் ஒத்ததிர முடிந்தது. தொகுப்பிற்கான தன்னுரையில் கவிஞரே குறிப்பிடுவது போல் அவரது கவிதைகளின் பிரதான அடையாளமான பகடியின் துணையின்றி கவிதைகளின் ஆதாரமான ‘புதிதை’ச் சமைக்கப் பிரயத்தனப்பட்டிருக்கிறார். 


உடைந்து எழும் நறுமணம், நாச ஊளை மற்றும் வெந்துயர் முறுவல் என்று மூன்று பகுதிகளாக இத்தொகுப்பு பிரிக்கப்பட்டிருக்கிறது. முதல் பகுதியில் தொல்காப்பியம் சுட்டும் நிலமும், பொழுதும் பயின்று வருகின்றன. கவிஞர் அந்திக்கு மயங்கி  மனமழிந்து வரும் வழியில் உறைந்து நின்று விடுகிறார். கொக்குகளும், மயில்களும், புறாக்களும் பறந்து கொண்டே இருக்கின்றன. தீக்கொன்றையில் ஓடோடி உச்சிக்கிளையேகும்அணில்கள் நிறைந்த முற்றத்தில் அன்னை பிள்ளைகளுக்குச் சோறூட்டுகிறாள். இரண்டாம் பகுதி ஊரடங்கு காலத்தையும், மூன்றாவது காதலையும் கருப்பொருளாகக் கொண்டுள்ளன. எல்லாக் கவிதைகளிலுமே கவித்துவம் செறிந்து மிளிர்கிறது. 


***


உழைத்தல் என்பது வாழ்வைக் கொண்டு செலுத்துவதற்காக ஒவ்வொருவரும் மேற்கொள்ளும் ஓர் அன்றாடச் செயல். செயலின் தன்மை எத்தன்மையுடையதாயினும், அது அன்றாடம் மேற்கொள்ளப்படுகின்றது என்பதனாலேயே அதில் சலிப்பும், துயரும், அழுத்தமும், சுமையும் உணரப்படுவெதென்பது தவிர்க்க இயலாதது. தவிர்க்க ஒரே வழி அச்செயலைக் கொண்டாட்டமாக மாற்றிக் கொள்வதுதான். இன்னொரு கவிதையில் நடனமாடும் ஒருத்தி தன் ஒத்திகையையே நிகழ்ச்சியாக மாற்றி, மேடையின் கீழே அமர்ந்து தன்னைத் துன்புறுத்தும் பூதத்தை விழுங்கி விடுகிறாள். செயல் கொண்டாட்டமாக மாறியபின் வாழ்வில் இனிமை ஊறத்துவங்குகிறது. செயல் புரிபவனை மட்டுமல்ல, துணை நிற்பவர்களையும் அவ்வினிமை நிறைக்கிறது. உழைப்பின் மகத்துவம் பற்றிப் பலநூறு கவிதைகள் எழுதப்பட்டிருப்பினும் இக்கவிதை எளிய சொற்களில், எளிய சித்திரத்தில், கவியின் குழந்தை மனம் கண்டு வியந்த வகையில் உழைக்கும் மக்களிடையேயான கொண்டாட்ட மனநிலையை வரைந்து காட்டுகிறது. எந்த மாயக்கணத்தில் இந்த அற்புதம் நிகழ்கிறது? இந்த ரசவாதத்திற்கு எது வினையூக்கி? அந்த மாயக்கணம் கவிஞர் அவதானிப்பில் துல்லியமாக இக்கவிதையில் வெளிப்பட்டிருக்கிறது. ஒரு கவிதை மெல்லமெல்ல பரிணமிப்பதை, ஒரு பூவைப்போல இதழ் விரித்து மலர்வதைக் காணும் வாய்ப்பு இக்கவிதையில் அமைகின்றது.




 சிரிப்பு லாரி


ஐவர் கைமாற்றிக் கைமாற்றி

சுமையேற்றிக் கொண்டிருந்தனர்.

பெருமூச்சுகளும், முனகல்களும்

வரிசை கட்டி லாரியில் ஏற்றப்படுகின்றன.

முகங்கள் கல்லென இறுகி

உடல்கள் வியர்த்து அழுதன.


இடையில்

ஒருவன் தடுமாறி விழப்போனான்.

நண்பர்கள் அவனைக் கேலி பேசிச் சிரித்தனர்.


விழப்போனவனும் சேர்ந்து சிரிக்க

இப்போது

அங்கே தோன்றி விட்டது ஒரு விளையாட்டு.


பிறகு 

அவர்கள்

கைமாற்றிக் கைமாற்றி விளையாடத் துவங்கி விட்டார்கள்.


அந்த லாரியில் 

பாதிக்கு மேல் சிரிப்புப் பெட்டிகள்.


***

சிறிய, எளிய உண்மைதான். ஆனால் நாம் காணத்தவறிக்கொண்டே இருக்கிறோம். உலகை வண்ணங்களாலும், சரிகைகளாலும் ஆன பட்டுத்துணியொன்று போர்த்தியிருக்கிறது. அதன் மின்னலிலும், வண்ணத்திலும் கிறங்கி, ஆங்காங்குள்ள ஓட்டைகளில், அவ்வப்போது தலைகாட்டி இளித்து நம்மைத் துயருக்குள்ளாக்கும் பிரச்னைகளை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறோம். மாறாக, அந்தப் பட்டுத்துணியைத் தூக்கிப்பார்த்தால் தெரியும் சேதி! அந்தத் துணிவு ஒரு சிலருக்கே வாய்க்கிறது. அவர்களே இவ்வுலகின் சாரத்தை அறிந்தவர்கள். சாதாரண மனிதர் பட்டுத்துணியின் வண்ணங்களில் சிக்கிக் கொண்டவர்கள். துணிக்கு அடியில் மறைந்து கிடப்பதைப் பார்க்காமல் தவிர்த்து விடவே அவர்களுக்குப் பரிந்துரைக்கிறார் கவிஞர்.


பட்டு


திடீர் ஆய்வுகளின் போது 

ஒரு அரசு அலுவலகத்தைப் பார்த்திருக்கிறாயா?


எல்லாக் குப்பைகளின் மீதும்

எல்லா அழுக்குகளின் மீதும்

பளபளக்கும் விரிப்புகள் பல

அவசரவசரமாகப் போர்த்தப்படும்.


உலகைப் போர்த்தியிருக்கும் 

அந்தப் பளபளக்கும் பட்டை

தூக்கிப் பாராதே தம்பி!


***


ஒவ்வொரு பெண்ணுமே அன்னைதான். தத்தி நடக்கும் பேதையாயினும், துள்ளித் திரியும் பெதும்பையாயினும், கருப்பை கொண்ட ஒவ்வொரு பெண்ணும், பிரபஞ்சத்தையே தன்னில் சுமக்கும் திறனும், உள்ளமும் வாய்ந்த பேரன்னைதான். இவ்வுலகைச் சுமப்பதற்காகவே அவள் மீண்டும், மீண்டும் பிறக்கிறாள். தாயாகி அனைத்தையும் தாங்குகிறாள். அவள் முன் நின்று கையேந்தினால் உங்களுக்கும் ஒரு வாய் உருண்டைச் சோறு கிடைக்கும். 


அமுது 


அவளுக்கு மொத்தம் மூன்று வாய்கள்.


அணிலோடித் திரியும் முற்றத்தில்

நின்று கொண்டு

வேடிக்கை காட்டியபடியே

பிள்ளைகளுக்கு உணவூட்டுவாள்.


சேலைத்தலைப் பிடித்தபடி

கால்களைச் சுற்றிச்சுற்றிக் குழையும் ஒன்று.


இன்னொன்று 

இடுப்பில் அமர்ந்திருக்கும்.


இருவருக்கும் மாறிமாறி ஊட்டுவாள்.

யாரோ ஒருவர் 

முரண்டு பிடித்துச் சிணுங்குகையில்

“அணிலுக்கு ஊட்டி விடுவேன்”

என்று மிரட்டுவாள்.


நாளடைவில்

ஓட்டங்களிலிருந்து ஆசுவாசத்துக்குத் திரும்பியது அணில்.


மெல்லமெல்ல

அச்சத்திலிருந்தும் சந்தேகங்களிலிருந்தும் கீழிறங்கி வந்தது அது.


மெல்லமெல்ல 

மேலெழும்பி வந்தாள் அன்னை.


இன்று

கொஞ்சம் அமுதெடுத்து அணிலுக்கு ஊட்டினாள்

பேரன்னை.


அப்போது அவளுக்கு அளவிறந்த வாய்கள்.


***

நீ உண்ணும் ஒவ்வொரு அரிசியிலும் இறைவன் உன் பெயரை எழுதியிருக்கிறான் என்று சொல்வார்கள். இது நாம் அனுபவிக்கும் மகிழ்ச்சி, துன்பம் போன்ற எல்லா அனுபவங்களுக்குமே பொருந்தும். அந்த விழிப்புணர்வுடன் வாழ்வை நடத்துகிறவனுக்கு துக்கம் இல்லை. இக்கவிதையில், ‘இரண்டு துண்டுகளிடையே அதன் நெஞ்சம்’ தவித்தபோது என்னுள்ளமும் கிடந்து தவித்தது. வாசகனின் உள் உறையும் குற்ற உணர்ச்சிகளை வலியோடு நிமிண்டி எடுக்கும் முள்ளாக இக்கவிதை இருக்கிறது. கவிதையின் துவக்கப் பத்தியில் ‘எப்போதும்’, ‘என் நாய்க்கு’ என்ற சொற்கள், இந்த நிகழ்வு அன்றாடம் நிகழ்கிறது என்பதையும், அது நமக்கு அணுக்கமானவருக்கே நிகழ்கிறது என்பதையும் குறிக்கிறது. அனுதினமும் நடந்தாலும் மனதை அச்செயலின் குரூரம் தீண்டாமலேயே சென்று விடுகின்றது. அதைச் சுட்டிக்காட்ட ஒரு கவிதை வர வேண்டியிருக்கிறது.


பிஸ்கட்


எப்போதும் 

ஒரு பிஸ்கட்டை இரண்டாகப் பிட்டு

என் நாய்க்கு எறிவேன்.


அரை பிஸ்கட்டிற்கு

முழு உடலால் நன்றி செலுத்தும்

பிராணி அது.


இரண்டு முறைகள்

அந்த நன்றியைக் கண்டுகளிப்பேன்.


இருமுறையும் 

அது என்னைப் போற்றிப் பாடும்.


ஒவ்வொரு முறையும்

என் முகத்தை

அவ்வளவு ஏக்கத்தோடு 

பார்த்துக் குழையும்.


இரண்டாம் துண்டு என் இஷ்டம்.


இரண்டு துண்டுகளிடையே

அதன் நெஞ்சம்

அப்படிக் கிடந்து தவிக்கும்.


உச்சியில் இருக்கும் எதுவோ

இதைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.


அதுதான் 

என் பிஸ்கட்டை

ஆயிரம் துண்டுகள் ஆக்கிவைத்தது.


***






9 அக்டோபர், 2024

டெய்ரி மரத்துக் கனிகள் - மதார் கவிதைகள்

நன்றி: கவிதைகள் மின்னிதழ்


சில கவிதைகளைப் பற்றிப் பேசி விட்டாலேயே அவற்றின் தூய்மையைச் சற்றே களங்கப்படுத்தி விடுவோமோ என்ற அச்சம் மனதில் உருவாகி விடுகிறது. ஆனாலும் ஓர் அரிய கவிதை கண்ணில் படும்போது, அதை சஹிருதயர்களிடம் பகிர்ந்து கொள்ளும் இன்பத்துக்காகவே, அந்தக் கவிதைக்குள் நம் வியாக்கியானங்களூடே செல்லும் பயணம் தரும் உவகைக்காகவே அது பற்றிப் பேசலாம் என்றும் தோன்றுகிறது. கீழ்வரும் மதாரின் தலைப்பற்ற கவிதை அதற்கொரு உதாரணம்.

மதாரின் பெரும்பாலான கவிதைகளைப் போலவே இதுவும் மேலோட்டமாக எளிமையாகத் தெரியும், கவிதைக்குள் புதிதாக நுழைபவர்கூட எளிதில் அனுபவிக்க முடிகிற, புரிந்து கொள்ள முடிகிற கவிதைதான். ஆனாலும், கோடையில் என் வீட்டுக் கொல்லைப்புறத்தில் நிமிடங்களுக்கொரு முறை விடாது சிறகடித்தபடி நீரருந்த வரும் தேன்சிட்டு தன் பூஞ்சையான சிறு உடலுக்குள் பொதித்து வைத்துள்ள, நாமறிந்து கொள்ள முடியாத ரகசியங்களைப் போலவே, இக்கவிதையும் தன் எளிமையான வடிவத்தில், உயிரினங்களுக்கிடையில் இன்னதென்று விளக்கிவிட முடியாதபடி நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆழமானதொரு தொடர்பைச் சுட்டுறுத்துகிறது. பெற்றோரைச் சுற்றி வந்து பழம் பெற்றும் கொள்ளும் எளிய நுட்பம்தான் இக்கவிதையில் இன்னொரு வடிவம் எடுத்திருக்கிறது. கவிதைக்குள் எப்பொழுதேனும் அபூர்வமாகச் சந்தம் தென்படும்போதும், கவிதை தன் வடிவத்தை கதை சொல்லுவதற்குப் பயன்படுத்தும் போதும் என்னையறியாமல் ஒரு புன்முறுவல் தோன்றி விடுகிறது. இவ்விரண்டும் இக்கவிதையில் நிகழ்ந்திருக்கிறது.



ஜன்னலில் இருந்து பார்த்தால் 

பச்சை மரங்கள் நிறைந்த

தெரு தெரியும்

நித்தம் அதிலொரு காகம்

வருவதும் போவதுமாய் திரியும்


தெருவில் இருந்து பார்த்தால்

அண்டை வீதிகளை

சென்றடையும் சாலை விரியும்

சத்தம் எப்போதும்

சம்பிரதாயச் சடங்காய் இரையும்


சாலையில் இருந்து பார்த்தால்

மாநகர் முழுதும் பயணப்பட தேவையான சாத்திய வழிகள் நீளும்


தெருவில்

சாலையில்

மாநகரில்

முன்னெப்போதோ

நடந்த விபத்தில்

இழந்த கால்களோடு

ஜன்னலண்டை அமர்ந்திருக்கிறேன்


இக்கணம் நான்

மாநகரைப் பார்க்க பிரயாசைப் படுகிறேன்

எங்ஙனம் பார்க்க?

ஜன்னலில் இருந்து பார்த்தால்

பச்சை மரங்கள் நிறைந்த

தெருதான் தெரிகிறது


நித்தம் வரும் காகம்

இப்போது வருகிறது


மரத்தின் உச்சிக்கொம்பில் 

அமரும் அது

தனது ஒற்றைப் பார்வை

ஒன்றின் வாயிலாகவே

மாநகர் முழுவதையும் 

கூர்மையாகப் பார்க்கிறது


நான் வெறுமனே

காகத்தின் கண்களை

கூர்மையாகப் பார்க்கிறேன்


* * *

இன்னொரு தலைப்பற்ற கவிதை. தொடர் வண்டி நிலையத்தில் படுத்திருக்கும் சோம்பேறி நாய் கேட்கும் சங்கீதம். எதனாலும் எழுப்பப்பட முடியாத அதனால் பூமியின் இதயம் துடிப்பதையும் கேட்டு விட முடிகிறது. முழுக்கவிதையும் அந்த நாய் கேட்கும் இசைத்துணுக்கைப் போலவே நம் மனதில் அதிர்கிறது. ஒலிக்குறிப்புகளுக்கென்று கவிஞர் தேர்ந்தெடுத்துள்ள சொற்கள் வியப்பூட்டுபவை. மறக்க இயலாதவை.


காலை, வாலை மிதிப்பது தவிர

வேறெதெற்கு உசும்பாமல் 

படுத்திருக்கிறதந்த கருப்பு வெள்ளை நாய்

தொடர் வண்டி பிடிக்க ஓடும்

எந்தச் செருப்பும்

எழுப்பவில்லை

ரயில் வருகிறதென

ஒலி எழுப்பும் 

எந்திரக்காரியாலும் முடியவில்லை

ஒரு காதை பூமிக்கும்

இன்னொரு காதை வானுக்கும் கொடுத்து

ஒருக்களித்து துயிலும் இது

பூமியின் இதயம் வேகமாகத் 

துடிப்பதைக் கேட்கிறது

தசக் தசக் தடக் ததக் தபக் தரக்

செப்பல் அணிந்து குழந்தையொன்று

நடந்து வந்தால் கேட்கிறது

தஙக் தஞக் தணக் தநக் தமக் தனக்


* * *

மிகச் சாதாரணமான ஓர் உருவகத்தில் துவங்கி, வாளி வகுப்பறை என்ற அசாதாரணமான மற்றொரு படிமத்துக்குள் இறங்கும் மற்றொரு கவிதை. மிகத்தூய்மையானதும், வாசகர் மனக்கண்ணிலேயே நிகழ்த்தி விட இயலக்கூடியதுமான இது போன்ற சிறிய கவிதைகள் என்றுமே உவப்பானவை.


வாசல் தெளிப்பவள்

மழையாக்குகிறாள்

நீரை

வாளி வகுப்பறைக்குள்

இறுக்கமாக அமர்ந்திருந்தவை

இப்போது தனித்தனியாக

விளையாடச் செல்லுகின்றன.


மேலும் வாசிக்க