ஸ்வாமி குருபரானந்த லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்வாமி குருபரானந்த லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15 பிப்ரவரி, 2021

இந்து ஞானம்


அன்புள்ள ஜெ,
சிந்திப்பவர்களுக்கான சிறப்பு வாசல் வாசித்தேன். நவீன மனம் கொண்டவர்களுக்கான, ‘ இந்து ஞானம் ஓர் எளிய அறிமுகம்’ என்ற நூல் இந்தத் தலைமுறையினரில் பெரும்பாலானவர்களுக்கு ஓர் அரிய பரிசாகவே இருக்கும். இந்து ஞானம் பற்றிய அறிமுகம் என்னும் மகத்தான பணியை நீங்களும் அயராது ஆற்றி வருகிறீர்கள், அந்தச் செயல்கள் மூலம் உங்கள் மீது குத்தப்படும் அபத்தமான மதவாத முத்திரைகளைப் பொருட்படுத்தாது. நான் தங்கள் எழுத்துக்களிலிருந்து இந்து ஞானம் குறித்த, குறிப்பாக வேதாந்தம் பற்றிய தெளிவை அடைந்திருக்கிறேன். தாங்கள் கீதை தொடரை எழுதிய போது அதைப் பரவசத்துடன் தொடர்ந்தவர்களில் நானும் ஒருவன். அதன் குறிப்பிடத்தக்க அம்சம் வாசகனுக்கான எவ்வித சமரசமுமின்றி கீதையை சாத்தியமுள்ள பல்வேறு கோணங்களிலிருந்து அலசியிருந்ததுதான். துவக்க நிலையிலுள்ள ஒரு சாதகனுக்கு அந்தக் கீதைத் தொடர் ஒருவேளை உவப்பை அளிக்காமல் போயிருக்கலாம்.
        உங்களுக்கு எழுத வேண்டுமென்று தோன்றியது. எழுத ஆரம்பித்து எனக்கே எழுதிக் கொண்டிருக்கிறேன். நான் என் இருபதுகளில் யோகா குருமார்களிடம்தான் ஞானோதயம் என்ற சரக்கு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது என்று நம்பி வருடக் கணக்கில் அலைந்து கொண்டிருந்தேன். என் நண்பனொருவன்தான் எனக்கு வேதாந்தத்தை அறிமுகப்படுத்தினான். எத்தனையோ கோடி ஜென்மங்களுக்கு முன் அவனுக்கு ஏதோ நல்லது செய்திருப்பேன் போல. அவன் எனக்கு வாசிக்க அளித்த நூல் ஸ்வாமி தயானந்த சரஸ்வதியின் விவேகசூடாமணி. தன்னுடையை கோழிப்பண்ணையில் ஒரு பின் மதிய வேளையில் இந்நூலை வாசித்துக் கொண்டிருக்கையில் ஒரு கணத்தில் தனக்கு தேடல்கள் அற்றுப் போனதாகக் கூறினான். அது ஓர் ஆங்கில நூல். நானும் அதை வாசித்தேன். எனக்கு மிகுந்த உவப்பைக் கொடுத்த நூல் அது. நீங்கள் உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தபடியே நவீன மனத்தின் லாஜிக்குக்கு ஏற்றபடி விவாதங்களை உருவாக்கி அவற்றுக்குத் திருப்தியளிக்கும் வகையில் விளக்கம் அளித்திருக்கிறார் ஸ்வாமிஜி. மேலும் தமிழில் வானதி வெளியிட்ட மூன்று நூல்கள் உள்ளன. 1. தர்மத்தின் மதிப்புதான் என்ன? 2. சாதனமும் சாத்தியமும். 3. பகவத் கீதையின் சாரம். இம்மூன்று சிறிய நூல்களும் வேதாந்தம் குறித்த அழகான எளிய விளக்கத்தை அளிக்கின்றன. இவை பற்றி நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்க வாய்ப்புண்டு. எனினும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். மேலும் சில வேதாந்த வகுப்புகளை ஒலி வடிவமாக என் நண்பன் என்னிடம் அளித்தான். தொடர்ந்து ஓர் ஆண்டு அவ்வகுப்புகளைக் கேட்டேன். பல வகுப்புகளை குறிப்பெடுத்தபடி ஒரு எளிய மாணவனாகக் கற்றுக் கொண்டேன். ஸ்வாமி குருபரானந்தர் என்ற எளிய மகானின் வகுப்புகள் அவை. பிறகு அவரது இணையதளத்தில் அவரது வகுப்புகள் இலவசமாக வழங்கப்படுவதை அறிந்து நிறைய வகுப்புகளைத் தரவிறக்கம் செய்து கொண்டேன். அந்தத் தளம் www.poornalayam.org. வேதாந்தத்தில் விருப்பம் கொண்டோருக்கு இது மிகுந்த பயனுள்ள தளம்.
        வேதாந்தத்தை எனக்கு அறிமுகம் செய்த என் நண்பன் போலவே தத்துவத்தையும், இலக்கியத்தையும் அறிமுகம் செய்து, நெறிப்படுத்தும் நண்பனாக இருக்கிறீர்கள் ஜெ. அதற்கு என் நன்றி.

இந்தியஞானம்

20 ஆகஸ்ட், 2011

நான்கு கேள்விகள்


 சாதன சதுஷ்டய சம்பத்திகளை அடைந்த பின்னர் ஞானயோகத்துக்குள் பிரவேசிக்க வேண்டும். ஞானயோகம் என்பது விசார ரூபமாக இருக்கிறது. சாதன சதுஷ்டய பண்புகள் பக்க விளைவுகளாக மன அமைதியையும், மகிழ்ச்சியையும் உருவாக்கும். அத்தோடு திருப்தி அடைந்து விடாமல் மேற்கொண்டு நம் பயணத்தைத் தொடர்ந்தால்தான் இறுதி இலக்கான ஆன்ம விடுதலையை அடைய முடியும். ஆன்ம விடுதலை ஆத்ம ஞானத்தினால் மட்டுமே அடையப்படுகிறது. ஞானத்தை அடைவதற்கான ஒரே சாதனம் விசாரம் மட்டுமே. எப்படி ஒரு பொருளின் இருப்பு ஒளியின் துணையின்றி நமக்கு விளங்குவதில்லையோ அதேபோல் விசாரம் தவிர்த்த பிற சாதனைகள் மூலம் ஞானம் உற்பத்தி ஆகாது. மேற்குறிப்பிட்ட பண்புகள் அனைத்தும் கர்மங்களின் மூலமே அடையப்படும். கர்மத்தின் மூலம் அடையப்படும் எதுவும் காரக வியாபாரம் எனப்படும். கர்மயோகம், தியானம் முதலியன இதில் அடங்கும். ஆனால் விசாரமானது பிரமாண வியாபாரம் எனப்படுகிறது. அறிவைக் கொடுக்கும் கருவியான பிரமாணத்தைப் பயன்படுத்தி விசாரம் செய்வதின் மூலம் ஞானத்தை அடைகிறோம். ஆத்ம ஞானத்துக்கான ஒரே கருவி உபநிஷத் அல்லது வேதாந்தம் ஆகும். மேலும் உபநிஷத் என்பது ஒரு ஷப்தப் பிரமாணம். உபநிஷத்தின் உட்பொருள் அறிந்த ஞானி ஒருவர் அதன் மந்திரங்களைச் சொல்லக் காதால் கேட்டு, அதன் பொருள் விளங்கும் வரை சிந்தித்துத் தெளிதலே விசாரம் எனப்படுகிறது. எனவே குரு என்பவர் இந்தப் பிரமாண வியாபாரத்தில் ஒரு முக்கிய அங்கமாகிறார். அதாவது வேதாந்த விசாரம் என்பது எப்போதும் குருமுகமாகவே செய்யப்பட வேண்டும்.
          விசாரம் என்பது எந்த முறையில் செய்யப்பட வேண்டும் என்பதைக் காணலாம். இதற்கு விசாரப் பிரகாரம் அல்லது விசார சொரூபம் என்று பெயர். தகுதிகளை அடைந்த மாணவன் குருவை அடைந்து கேட்க வேண்டிய கேள்விகளாக நான்கு விஷயங்கள் கூறப்படுகின்றன. அவை;
1.    கஹ அஹம் - நான் யார்?       இது ஜீவ விஷயமான கேள்வி ( ஜீவ விஷய ப்ரஸ்ன: )
2.    கதம் இதம் ஜாதம் – இவ்வுலகம் எவ்வாறு தோன்றியது?      இது உலக சம்பந்தமான கேள்வி ( ஜகத் விஷய ப்ரஸ்ன: )
3.    கோவை கர்த்தா அஸ்ய வித்யதே – இவ்வுலகம் இப்படி இருப்பதற்கு யார் காரணம்? யார் இவ்வுலகைத் தோற்றுவித்தார்கள்?      இது ஈஸ்வர சம்பந்தமான கேள்வி ( ஈஸ்வர விஷய ப்ரஸ்ன: )
4.    உபாதானம் கிம் அஸ்தி இஹ – மேற்சொன்ன மூன்றுக்கும் ஆதாரமாக, அதிஷ்டானமாக இருப்பது எது?
விசாரம் என்பது இத்தகைய தன்மை வாய்ந்ததுதான். இதுவே உபநிஷதங்களின் பேசுபொருள் ஆகும். வேதாந்தத்தின் நான்கு முக்கியமான விஷயங்கள்; 1. ஜீவன். 2. ஜகத். 3. ஈஸ்வரன் 4. பிரம்மம்.
முதலில் நான் யார் என்னும் கேள்விக்கு இவ்வாறு விசாரம் செய்ய வேண்டும். பார்க்கப்படும் பஞ்சபூதங்களால் ஆன இந்த ஸ்தூல உடல் நான் அல்ல. புலன்களின் கூட்டமும் நான் அல்ல. பார்ப்பவன் நான் அல்ல. பார்ப்பவனைப் பார்க்கிறவனும் நான் அல்ல. இதற்கெல்லாம் வேறானவன் நான் என்று அறியவேண்டும். இதற்கான கருவி த்ருக் – த்ருஷ்ய விவேகம். பார்ப்பவன் பார்க்கப்படும் பொருளாக இருக்கமுடியாது என்பதே இந்த விவேகத்தின் மூலம் நாம் அடையும் தெளிவு. ஷங்கரர் எந்த முறைப்படி நாம் சிந்திக்க வேண்டும் என்று இங்கு காட்டுகிறார்.
இரண்டாவது உலகம் எதிலிருந்து வந்தது என்ற விசாரம். இந்தக் கேள்விக்குப் பலவித பதில்கள் நிலவுகின்றன. தர்க்க மதம் உலகம் அணுவிலிருந்து தோன்றியது என்று சொல்கிறது. சாங்கிய மதத்தைச் சார்ந்தவர்கள் உலகம் பிரக்ருதியிலிருந்து வந்ததாகக் கூறுகிறார்கள். சிலர் உலகம் இயற்கையிலிருந்து தோன்றியதாகக் கூறுகிறார்கள். ஆனால் வேதாந்தமோ உலகம் அஞ்ஞானத்திலிருந்து தோன்றியதாகக் கூறுகிறது. நாம் பார்க்கும் அனைத்துமே அஞ்ஞானத்திலிருந்து தோன்றியுள்ளது. இவ்வுலகம் சமஷ்டி (தொகுப்பு) அஞ்ஞானத்திலிருந்து தோன்றியுள்ளது. அஞ்ஞானத்தின் பிறிதொரு பெயர் மாயை. மாயை என்பது அநிர்வசனீயம் எனப்படுகிறது. அதாவது அதை விளக்க முடியாது. ஆனால் ஞானத்தினால் மாயையை ஒடுக்கி விட முடியும். இவ்வுலகம் இவ்வாறு இருக்கக் காரணம் என்ன என்று மற்றொரு கேள்வி கேட்கப்படுகிறது. நம் மனதில் தொடர்ந்து வரும் எண்ணமான விதவிதமான சங்கல்பங்களே இவ்வுலகம் இவ்வாறு இருக்கக் காரணமாகும். எனவே இவ்வுலகம் இவ்வாறிருக்க மாயை சாதாரண காரணமாகவும், சங்கல்பம் விசேஷ காரணமாகவும் இருக்கின்றன.
இந்த உலகத்துக்கும், அஞ்ஞானத்துக்கும் ஒன்றே ஆதாரமாக இருக்கின்றது. அதை நாம் காண இயலாது. அதன் சொரூபம் இருத்தல். அது அவ்யயம், அதாவது மாறாமல் இருக்கிறது. எல்லாப் பானைகளுக்குள்ளும் களிமண்ணின் இருப்பு மாறாமல் இருப்பதைப் போல் எல்லாவற்றுக்குள் அது மாறாமல் தொடர்ந்து இருக்கிறது.
அந்த ஆதாரமான தத்துவமே எனக்கும் ஆதாரமாக இருக்கிறது. அந்த ஆதாரம் ஒன்றுதான். அவனை நான் பார்க்க முடியாது. அவன் அறிவு சொரூபமாக இருக்கிறான். அவனே நான். நான் அனைத்தையும் வேடிக்கை பார்ப்பவன். இப்படிப்பட்ட நான் அழியாத சத் பிரம்மமாகவே  இருக்கிறேன். இந்தப் பகுதியில் அபரோக்ஷ அனுபூதி கூறும் இக்கருத்து ஒரு ஜீவ பிரம்ம ஐக்கியம் ஆகும். இது இந்நூலில் உள்ள ஒரு மஹா வாக்கியம்.
மேற்கூறப்பட்ட கருத்து நம் அனுபவத்துக்கு விரோதமாகவே உள்ளது. ஆனால் இந்த வாக்கியத்தில் சிரத்தை வைத்து மீண்டும் மீண்டும் விசாரத்தை மேற்கொள்ள வேண்டும்.

3 ஆகஸ்ட், 2011

விடுதலையின் இச்சை


ஆத்ம ஞானம் தேடும் ஒரு சாதகனின் தகுதிகளில் முதலில் வைராக்யம், விவேகம், சமம், தமம் இவற்றைப் பார்த்தோம். அடுத்ததாக உபரமம் அல்லது உபரதி என்ற பண்பு விளக்கப்படுகிறது.  இது கர்மத்தியாகம். சங்கல்ப பூர்வமான கர்மங்களையும், சில பொறுப்புகளையும் விட்டு விடுதலையாவதை இப்பண்பு வலியுறுத்துகிறது. இதன் மூலம் ஞான யோகப் பயிற்சிக்கான, சிரவணத்துக்கான காலத்தை நாம் சம்பாதிக்கிறோம். உபரதி என்ற பண்பு, சமம் மற்றும் தமம் ஆகிய பண்புகளைத் தொடர்ந்து பாதுகாத்து வருதலையும் குறிக்கும். உள், வெளி விஷயங்களிலிருந்து திரும்பி அப்படியே இருத்தல் மேலான உபரதி: என்று அபரோக்ஷ அனுபூதி குறிப்பிடுகின்றது.

நமக்கு நேரும் எல்லா துக்கங்களையும் வெறுப்பின்றி சகித்துக் கொள்ளுகிற சகிப்புத்தன்மை அல்லது பொறுமை என்ற தன்மையை திதிக்ஷா என்ற பண்பு வலியுறுத்துகிறது. நாம் விரும்பாத ஒன்று நடக்கும் போது அதை மாற்றுவதற்கு முழு முயற்சி எடுக்க வேண்டும். அப்படியும் அந்த நிலையை மாற்ற முடியவில்லையென்றால், வரும் விளைவுகளை குறை சொல்லாது ஏற்றுக் கொள்ளவேண்டும். நமக்கு விருப்பமான ஒன்றை அடையும் முயற்சியில் எந்தத் துன்பம் வரினும் இயல்பாகவே பொறுத்துக் கொள்வோம். எனவே திதிக்ஷா என்ற சகிப்புத்தன்மையை அதிகரிக்க வேண்டும் எனில் மோக்ஷத்தை அடையும் இச்சையான முமுக்ஷுத்துவத்தை அதிகரிக்க வேண்டும். நமக்கு வரும் துன்பங்கள், துயரங்கள் இவற்றைக் கண்டுகொள்ளாதிருக்க வேண்டும். எதை நாம் பொருட்படுத்துவதில்லையோ அதற்கு மெய்த்தன்மை குறைகிறது. துன்பங்கள் வரும் போது அவற்றைப் பொறுமையுடன் பழகப் பழக அவற்றின் பாதிப்பு குறையும். வாழ்க்கையில் மிகப்பெரிய துன்பமே துன்பம் வந்து விடுமோ என்ற பதற்றம் கலந்த எதிர்பார்ப்புதான். திதிக்ஷா உடையவருக்கு இந்த பதற்றம் இருக்காது. உலக வாழ்க்கையின் வெற்றிக்கே திதிக்ஷா மிக அவசியம். நாம் இந்த மனித சரீரம் எடுத்திருப்பதே முற்பிறவிகளில் நாம் செய்த புண்ணியம் பாதி, பாவம் பாதி இவற்றின் சேர்க்கையின் விளைவாகத்தான். எனவே புண்ணியத்தின் பலனான சுகமும், பாவத்தின் பலனான துக்கமும் எப்படியும் வந்தே தீரும் என்ற தெளிவு இருந்தால் திதிகக்ஷையை எளிதில் பின்பற்ற முடியும்.
          ஸ்ரத்தா என்ற அடுத்த பண்பு குரு, வேதம் இவற்றின் மீதுள்ள பக்தியே ஆகும். வேதாந்தம் என்பது ஒரு பிரமாணம் ஆகும். அதாவது வேதாந்தம் என்ற கருவியின் உதவி கொண்டுதான் நாம் உண்மையை அறியவிருக்கிறோம். அக்கருவியை உபயோகப்படுத்தும் ஆசிரியரே குரு. வேதாந்தத்தையும், ஆசிரியரையும் பிரிக்க இயலாது. பிரித்தால் உண்மையை அறிய இயலாது. ஸ்ரத்தை எதனால் தேவை? அனுபவத்துக்கு முன்னால் இருக்கும் ஒரு படியே நம்பிக்கை. அனுபவத்துக்கு முற்றிலும் எதிராக இருக்கும் ஒரு கருத்தைக் கேட்டு, நம் அனுபவத்தைச் சரி செய்து, வேதம் சொல்லும் வாக்கியம்தான் உண்மை என்று உணரும் வரைப் பயணம் செய்ய, ஸ்ரத்தையே துணை புரியும். மனதில் சரியான அறிவு இருந்தும் அந்த அறிவில் நம்பிக்கை இல்லையென்றால் அது உண்மையில் ஞானமே அல்ல. எனவே ஸ்ரத்தையே இறுதியில் ஞானமாக மாறுகிறது.
          உபநிஷத் ஈஸ்வரனிடமிருந்தே வந்தது என்ற புத்தியை வளர்த்தலும், வேதத்தின் மேலும், ஆச்சாரியார் மேலும் உள்ள சந்தேக புத்தியை நீக்குதலும் ஸ்ரத்தையை வளர்க்க உதவி செய்யும். ஸ்ரத்தை நாம் செய்த புண்ணியத்தின் பலன். ஸ்ரத்தையை வளர்க்க தர்மப்படி வாழ வேண்டும்.
          அடுத்த பண்பு சமாதானம். மனதை முழு முயற்சியுடன் சத் காரியத்தில் குவித்திருத்தல் சமாதானம் ஆகும். இது மன உறுதியைக் குறிக்கிறது.
          தியானமும், மீண்டும், மீண்டும் மனதை ஒரே விஷயத்தில் பொருத்திப் பழகுதலும் சமாதானம் என்ற பண்பை வளர்க்க உதவும். முதலில் சமாதானம் சிரவணத்திலும், பிறகு நிதித்யாசனத்திலும் இருக்க வேண்டும்.
          இறுதியாக முமுக்ஷுத்துவம். நான் பந்தத்திலிருந்து விடுதலை அடைய வேண்டும் என்ற தீவிர இச்சை பிரதானமாக இருத்தலே முமுக்ஷுத்துவம் எனப்படுகிறது. அதுதான் நமது பிரதான லட்சியம் என்று முடிவு செய்த பிறகு அதற்காக சகல விஷயங்களையும் தியாகம் செய்வதற்காகத் தயாராக இருக்க வேண்டும். சம்சாரம் என்றழைக்கப்படுகிற மனதின் நிறைவின்மையிலிருந்து நான் எப்போது விடுதலையடைவேன் என்ற எண்ணம் உறுதியாக இருக்கும் நிலையே முமுஷுத்துவம் எனப்படுகிறது.
          இத்துடன் சாதகனின் தகுதிகளான சாதன சதுஷ்டய சம்பத்தி நிறைவடைகிறது. இப்பண்புகளை அடைந்தவுடன் மனத்திருப்தி அடைந்து விடாமல் மேலும் தொடர்ந்து விசாரம் செய்ய வேண்டும். ஞானயோக விசாரம் பற்றி மேலும் விரிவாகக் காண்போம்.

6 ஜூலை, 2011

சாதகனின் தகுதிகள்


    அபரோக்ஷ அனுபூதி என்ற நூலின் துவக்கத்தில் ஷங்கரர் தான் நோக்கத்தையும், யாருக்காக இந்த நூல் இயற்றப்படுகிறது என்பது பற்றியும், இந்த நூலை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும் குறிப்பிடுகிறார்.
அபரோக்ஷ அனுபூதி என்ற இந்த நூலைக் கற்பதன் தலையாய நோக்கம் மோக்ஷம் என்ற பலனுக்காகவே. மோக்ஷம் என்பது குறித்து நம்மிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. ஆனால் சாஸ்திரத்தின் அடிப்படையில் மோக்ஷம் என்பதன் உண்மையான பொருள் முழுமையான மனநிறைவு என்பதாகும். இந்த முழு மனநிறைவு எந்தச் செயலாலும் அடையப்படுவதில்லை. தன்னைப் பற்றிய உண்மையான ஞானத்தால் மட்டுமே அடையப்படுகிறது. மோக்ஷம் என்பது ஜீவன் முக்தி என்றும் அழைக்கப்படுகிறது. ஜீவன் முக்தி என்றால் இந்த உடலில் வாழும்போது நிறைவுடன் வாழ்தல் என்று பொருள். ஆத்ம ஞானத்தை அடையும் ஒருவன் தனது பிராரப்தம் முடியும் வரை ஜீவன்முக்தனாக வாழ்ந்து இறக்கிறான். அவ்வாறு இறத்தல் அவனது கடைசி மரணம் ஆகும். அதற்குப் பிறகு அவனுக்கு மரணம் இல்லை. அதாவது அவனுக்கு மறுபிறப்பில்லை. ஒரு ஜீவன்முக்தன் இறுதியாக உடலை விடும் நிகழ்வு விதேஹ முக்தி எனப்படுகிறது.
மனதை முழுமையாக நிறைக்கும் ஆவல் கொண்ட, மோக்ஷம் தவிர வேறெதுவும் லட்சியமில்லை என்ற தீர்மானம் கொண்ட, அந்த லட்சியத்தை அடையும் பயணத்தைத் துவக்குவதற்கான தகுதிகளையும் கொண்ட சத்புருஷர்களுக்காகவே இந்நூல் இயற்றப்படுகிறது. முழுமையாகத் தகுதிகளை அடையாதவர்கள் சாஸ்திரத்தைக் கற்க விழையலாமா என்ற ஐயம் எழக்கூடும். தகுதிகள் அற்ற ஒருவர் சாஸ்திரத்தைக் கற்கத் துவங்கும் போது, முதலில் சாஸ்திரம் அவருக்குத் தகுதிகளைக் கொடுத்து, பிறகு தொடர்ந்த சாஸ்திரக் கல்வி அதன் இறுதிப் பலனான ஆத்ம ஞானத்தையும், மோக்ஷத்தையும் கொடுக்கிறது.
இந்நூலைக் கற்கவிருப்பவர்கள், முழுமுயற்சியுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும், மீண்டும், மீண்டும் நன்கு விசாரம் செய்ய வேண்டும். சாஸ்திரத்தைப் பலமுறை படிக்கும்போதுதான் மனதிலிருக்கும் தோஷம் ஒவ்வொன்றாக நீங்கி ஞானமும், ஞானநிஷ்டையும் வாய்க்கும்.
அடுத்ததாக ஷங்கரர் சாஸ்திரத்தைக் கற்பதற்கான, அதாவது ஞானயோகப் பயிற்சியில் ஈடுபடுவதற்கான தகுதிகள் பற்றியும், அவற்றை எவ்வாறு அடைவது என்பது பற்றியும் விளக்குகிறார். இதற்கு அதிகாரித்துவ லாப உபாயம் என்று பெயர். ஒருவன் தனக்கு விதிக்கப்பட்டிருக்கிற கடமைகளை ஒழுங்காகச் செய்தல் என்ற ஸ்வதர்ம அனுஷ்டானத்தை கடைபிடித்து இறைவனைத் திருப்திப்படுத்துவதன் மூலம் வைராக்யம் முதலிய நான்கு பண்புகள் உற்பத்தியாகின்றன. ஸ்வ என்றால் அவரவர்களுக்குரிய என்று பொருள். ஒருவன் எந்த ஆஸ்ரமத்தில் இருக்கிறான் என்பதைப் பொறுத்து அவனது கடமைகள் மாறுபடும். ஆஸ்ரம் என்றழக்கப்படுகிற வாழ்க்கை நிலை, நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆஸ்ரமத்திலும் இருக்கிறவர்களுக்கென்று உரிய கடமைகளைச் செவ்வனே ஆற்றுவதன் மூலம் நம் மனம் செம்மையடைந்து, ஞானயோகப் பயிற்சிக்கான தகுதிகளைப் பெறுகிறது. ஸ்வதர்மத்தை மட்டும் கடைபிடித்து தகுதிகள் அடைவதற்குத் தாமதமாகுமெனில் யாத்திரை, உபவாசம் போன்ற தவங்களைச் செய்வதன் மூலம் தகுதியை அடையலாம்.
இனி தகுதிகளைப் பற்றிப் பார்க்கலாம். ஷங்கரர் இங்கு முதலில் வைராக்யம் என்ற தகுதியைப் பற்றிப் பேசுகிறார். வைராக்யம் என்பது அதிகபட்ச இன்பம் பயக்கக் கூடிய பிரம்மலோகம் தொடங்கி, பூலோகம் வரையிலான அனைத்து உலகங்களிலும், அந்த உலகப் பொருட்களிலும் உள்ள பற்றின்மையேயாகும். த்ருஷ்ட ஸ்ருத விஷயே வைராக்யம். பார்த்த, கேள்விப்பட்ட பொருட்களின் மீதுள்ள பற்றின்மையே வைராக்யம். இரண்டு விதமான வைராக்யங்கள் உள்ளன. ஒன்று, ஜிகாஸா வைராக்யம், அதாவது ஒரு பொருள் மீது கொண்ட வெறுப்பினாலோ, அல்லது பலவீனத்தாலோ வரும் பற்றின்மை அல்லது வெறுப்பு. மற்றொன்று, ஜிக்ஞாஸா வைராக்யம், அதாவது பொருட்கள் நிலையற்றவை என்ற அறிவினால் வரும் பற்றின்மை. உண்மையான வைராக்யம் என்பது பற்றின்மையே தவிர வெறுப்பு அல்ல. It is indifference; not hatred. வைராக்யம் கொண்ட ஒருவர் அன்பு, பாசம் கருணை போன்ற பண்புகளைக் கொண்டிருக்க மாட்டார் என்பது பொருளல்ல. காக்கையின் எச்சத்தைக் கண்டால் நமக்கு என்ன பாவனை ஏற்படுமோ அதே பாவனைதான் மோகத்தைக் கொடுக்கும் உலகப் பொருட்களிடத்தும் ஏற்பட வேண்டும். இப்படிப்பட்ட பாவனை கொண்ட வைராக்யம்தான் முழுமையானது.
வைராக்யம் என்ற இந்தப் பண்பு ஷமம், தமம் முதலிய பண்புகள் உற்பத்தியாகக் காரணமாகிறது. குரு சேவை, தவம், ஸ்ரத்தை முதலிய பண்புகளுக்கும் காரணமாகிறது.
அடுத்ததாகப் பேசப்படும் பண்பு விவேகம். விவேகம் என்ற சொல்லுக்கு விவேசனம், பிரித்தல் என்று பொருள். நிலையான, உண்மையான பொருளும், நிலையற்ற பொருளும் கலந்துள்ளது. அதை அறிவளவில் பிரித்தலே விவேகம் எனப்படுகிறது. அறிவினால் பிரித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்து, இது நித்யம், இது அனித்யம் என்ற நிஸ்சய அறிவுடன் புத்தி இருந்தால் அந்த அறிவே விவேகம் எனப்படுகிறது. தன் சொந்த அனுபவத்தையும், உலகோர் அனுபவத்தையும் சுயமாக ஆராய்ந்தும், காரணம் காரியத்தைக் காட்டிலும் மேலானது என்ற அனுமானத்தின் அடிப்படையிலும், ஸ்ருதியின் மேலுள்ள ஸ்ரத்தையால் ஏற்பட்ட, நித்யத்தைப் பற்றிய ஆபாச (அரைகுறை) ஞானத்தினாலும் என்னுடைய உண்மையான தன்மை சாஸ்வதமானது; நான் பார்த்து அனுபவிக்கும் இந்த உலகம் என் உண்மையான தன்மையான ஆத்ம ஸ்வரூபத்துக்கு மாறானது என்ற அறிவை ஒருவன் அடைகிறான். இந்த அறிவை அடைவதற்கு சாத்விகமான மனதால் மட்டுமே முடியும். சாத்விகமான மனம் மட்டுமே பிரித்துப் பார்க்கும் ஆற்றலுடையது. கீதையில் பகவான் சாத்விகப் பண்புகள், சாத்விக உணவு போன்றவை பற்றி விரிவாகக் கூறுகிறார்.
விவேகத்தின் பலன் வைராக்யம் ஆகும். விவேகம் விதை என்றால் வைராக்யம் மரம். விவேகமும், வைராக்யமும் ஒன்றுக்கொன்று உதவிக் கொள்ளும் பரஸ்பர உபகாரிகள். எண்ணெய் தொன்னையையும், தொன்னை எண்ணெயையும் தாங்கிப் பிடிப்பதைப் போல.
மூன்றாவது பண்பு ஷமம் எனப்படும் மன அடக்கம் அல்லது மன அமைதி ஆகும். முதலில் சாஸ்திரத்தில் சிந்திக்காதே என்று சொல்லப்பட்ட விஷயங்களின் எண்ண ஓட்டங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.நிஷித்த சிந்தா திரஸ்கார: இவ்விதமான எண்ணங்கள் ரகசியமானவையாதலால் நாம்தான் முயற்சி செய்து செயல் வடிவம் எடுக்கும் முன் இவற்றை நிறுத்த வேண்டும். இரண்டாவது அனர்த்த சிந்தா திரஸ்கார: பயனற்ற விஷயங்களைச் சிந்திப்பதை நிறுத்துதல். இதனால் நமக்கு ஏற்படும் பெரும் இழப்பு காலம் ஆகும். நமக்கு உள்ளேயிருக்கும் சம்ஸ்காரங்களிலிருந்து தோன்றும் பதிவுகள் விடாது தியாகம் செய்யப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இதுவே ஷமம் ஆகும்.
ஷமம் என்ற பண்பை அடைவதற்கான உபாயங்கள்: வைராக்யம் ஷமத்தை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது. அடுத்து நற்பண்புகளை வளர்த்திக் கொள்ளுதல். கீதையில் பகவான் தெய்வாசுர சம்பத் என்ற தலைப்பில் சொன்ன தெய்வீகப் பண்புகளை பயிலுதல்; பிறகு தியானம்; இது மனதுக்குக் கொடுக்கும் பயிற்சி ஆகும். ரமண மகரிஷி உன் எண்ணங்களைக் கவனித்துக் கொண்டேயிருந்தால் மனம் தானாகவே அடங்கி விடும் என்று கூறியிருக்கிறார். எந்தவித எண்ணங்கள் எழுந்தாலும் அவை பாதிக்காமல் மனதைப் பாதுகாத்தலே ஷமம் எனப்படும்.
நான்காவது பண்பு தமம் ஆகும். இது இந்திரியக் கட்டுப்பாடு அல்லது புலன் அடக்கம் ஆகும். இதுவும் இருவகையில் மேற்கொள்ளப் படுகிறது. சாஸ்திரத்தில் தடை செய்யப்பட்ட செயல்களை நிறுத்துதல். நிஷித்தப் பிரவிருத்தி திரஸ்கார: பயனற்ற செயல்களை நிறுத்துதல். அனர்த்தப் பிரவிருத்தி திரஸ்கார: புலன்களைத் தண்டித்தலே தமம் (தண்டனம் தம:) என்றும், வெளிப்புலன்களை ஒழுங்கு படுத்துதலே தமம் என்றும் ( நிக்ரஹ பாஹ்ய வ்ருத்தினாம் தம: இதி அபிதீயதே) கூறப்படுகிறது.
இனி தமத்துக்கான உபாயங்களைப் பார்க்கலாம். புலன்களை மயக்கும் சூழ்நிலையிலிருந்து விலகிவிடுதல் தமத்துக்குப் பேருதவியாக இருக்கும். தனிமையைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நமக்கு பலஹீனம் உள்ள விஷயத்தில் விரதம் எடுத்துக் கொள்ள வேண்டும். விரதம் எடுத்துக் கொள்ளுதல் நமக்கு ஒரு கட்டுப்பாட்டைக் கொடுக்கும். 

2 ஜூன், 2011

இல்லறம்




ஸ்வாமி குருபரானந்தர் இல்லறம் என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையைக் கேட்டேன். உரை கேட்கும்போது எடுத்து வைத்துக்கொண்ட குறிப்புகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இது உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
        அப்பைய தீக்ஷிதர் தான் எழுதிய நூலின் முன்னுரையில் சிவபெருமானையும், பார்வதியையும் வணங்கித் துதிக்கும்போது, அவர்கள் இருவரும் இணைந்து வாழ்வது அவரவரது தவத்தின் பயனாகவே என்று கூறுகிறார். நம் வாழ்வில் நாம் யாருடன் சேர்ந்து வாழ்ந்தாலும் அது நாமும் அவர்களும் செய்த தவத்தின் பயனாகவே என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
        மனித இனம் தனித்து வாழும் குணம் கொண்ட இனம் அல்ல. அதெற்கென்று இருக்கிற சமுதாய அமைப்பில் இணைந்து வாழ்வதற்குரிய வகையில்தான் அவர்களது இயல்பு படைக்கப்பட்டிருக்கிறது. நமது தேவைகளுக்காக பிறமனிதர்களுடன் நாம் இணைந்து வாழ்வது நமக்கு அவசியமாகிறது. தனிமையில் மகிழ்ச்சி அடைவதென்பது ஆதியில் ஹிரண்யகர்பனாலும் கூட முடியாத காரியமாக இருந்தது, எனவேதான் இருமை படைக்கப்பட்டது என்று ஓர் உபநிஷத் கூறுகிறது. மேலும் ஒரு மனிதன் பிறருடன் பழகும்போதுதான் அவன் மனம் வளர்ச்சி அடைகிறது. இரண்டு பேர் நெருங்கிப் பழகும்போது ஒருவரிடமிருந்து மற்றவர் அன்பையும், தியாகத்தையும் பெற்றுப் பிறருக்கு வழங்குகிறார். எனவே ஒருவரது மனம் எப்படிப் பட்டதென்பது அவர் யாருடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார் என்பதைப் பொறுத்து உள்ளது.
        நமது கலாசாரத்தில் ஒரு மனிதனது வாழ்வை நான்கு நிலைகளாகப் பிரித்துள்ளனர் நமது முன்னோர். அதில் முதல் நிலை பிரம்மசரிய ஆஸ்ரமம் எனப்படும். ஆஸ்ரமம் என்பதற்கு வாழ்க்கை நிலை என்று பொருள். இந்த ஆஸ்ரமத்தில் ஒருவனது உறவு தாயிடமும், பிறகு தந்தையிடமும் ஆரம்பிக்கிறது. பிறகு ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் பிற உறவினர்களிடமும் உறவு தொடர்கிறது.
        அடுத்து கிருஹஸ்த ஆஸ்ரமம். இதில் ஒரு மனிதனுக்குப் பெரும்பாலான தொடர்பு மனைவியிடம் இருக்கிறது (ஒரு பெண்ணுக்கு கணவனிடம்.). பிறகு வரும் வானப்பிரஸ்த ஆஸ்ரமத்தில் அவன் அதிக காலத்தை இறைபக்தியிலேயே செலவிடுவதால் அவனது பெரும்பான்மையான தொடர்பு அவனது இஷ்ட தெய்வத்திடமே இருக்கிறது. கடைசி ஆஸ்ரமமான சன்யாச ஆஸ்ரமத்தில் அவன் குருவிடம் தொடர்பு கொண்டு மனதைப் பக்குவப்படுத்தி ஞானத்தை அடைந்து அசங்கமான நிலையை, அதாவது தன் இருப்புக்கும், மனநிறைவுக்கும் பிறரைச் சார்ந்திராத நிலையை அடைகிறான். நம்மிடமே நாம் மகிழ்ந்திருக்கும் இந்நிலையே நம் வாழ்வின் லட்சியம். அதுவரை நமக்கு உறவுகள் தேவையாக இருக்கிறது. ஆனால் அதே உறவுகளை எவ்வாறு கையாள்வது என்று அறியாமல் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
        உறவுகளைக் கையாள்வது எங்ஙனம்? உறவுகளை நாம் சாதனையாக மாற்றிக்கொள்ள வேண்டும். உறவுகள் பணத்தின் அடிப்படையிலோ, அதிகாரத்தின் அடிப்படையிலோ இருக்கக் கூடாது. உறவுகளுக்கு ஆதாரமாக அன்பும், தியாகமுமே இருக்க வேண்டும்.
        பொதுவாக ஒருவருடன் நெருங்கிப் பழகும்போது அவரது பலவீனங்கள் நமக்குத் தெரிய ஆரம்பிக்கும். ஆனால் அவற்றைப் பிறர் முன் சுட்டிக் காட்டக் கூடாது. அவற்றைத் தனிமையில்தான் சுட்டிக்காட்ட வேண்டும். அதையும் உடனே சுட்டிக்காட்டாது, பிறகுதான் சுட்டிக்காட்ட வேண்டும். நமது வாக்கை நாம் சொல்லிக் கொடுக்கத்தான் பயன்படுத்தவேண்டுமே அல்லாது திட்டுவதற்குப் பயன்படுத்தக் கூடாது. அதே போல் ஒருவர் கோபமாக இருக்கும்போது அந்தக் கோபத்தைத் தூண்டும் வகையில்  செயல்புரியக் கூடாது.  நம் விருப்பு வெறுப்புகளைப் பிறர் மீது திணிக்கக் கூடாது.
        அதேபோல் கருத்து வேறுபாடுகள் தோன்றும் போது விட்டுக் கொடுத்துப் பழக வேண்டும். நம் ஒரு மனதிலேயே இவ்வளவு போராட்டங்கள் வரும்போது, இரு மனங்களில் எவ்வளவு போராட்டங்கள் வரும்? எனவே இருவருக்குமிடையில் கருத்து வேறுபாடுகள் வரும்போது அமர்ந்து பேச வேண்டும். அல்லது நடுநிலையில் உள்ளவர்களை நாட வேண்டும்.
        இல்லறவாதிகளுக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் மூன்று முக்கியக் கடமைகளைத் தருகிறார். அவை, யக்ஞம், தானம், மற்றும் தவம் ஆகியன. யக்ஞம் என்பது இறைவழிபாட்டையும், வீட்டை ஒரு கோயில் போல வைத்துக் கொள்வதையும், விருந்தோம்பலையும் குறிக்கிறது.
தானம் நாம் ஈட்டிய செல்வத்தைப் பிறரிடம் பகிர்ந்து கொள்வதைக் குறிக்கிறது. பொருள் ஈட்டுவது தவறென்று நம் வேதம் சொல்லவில்லை. பூத்யைன ப்ரமதி பவ்யம், உன் வாழ்க்கை நிலையை உயர்த்திக் கொள் என்றுதான் சொல்கிறது. நாம் ஈட்டிய பொருளைக் கொண்டு நம் உறவினர்களுக்கும், நம்மைச் சார்ந்த ஏழைகளைக்கும் உதவி செய்யவேண்டும்.
 தவம் என்பது கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்தையும் குறிக்கிறது. இல்லறத்தில் இருப்பவர்கள் எல்லா போகங்களையும் அனுபவித்துக் கொள்ளலாம் என்று வேதம் சொல்கிறது. ஆனால் ஒரு காலத்தில் இந்திரியங்கள் சக்தி இழக்கும். அதற்கு நம்மைத் தயார் செய்து கொள்ளவேண்டும். கோயில்களுக்கு யாத்திரை செல்வது போன்றவையும் தவம் என்ற சாதனையின் கீழ் அடங்கும்.
இந்தச் சாதனைகளைப் பின்பற்றி நாம் அடையும் மனமுதிர்ச்சியின் உதவியால், இந்த உலகம் நமக்கு ரிடையர்மென்ட் கொடுப்பதற்கு முன்பு நாமே ரிடையர்மென்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்து உறவுகளையும் விட்டு நட்புடனும், மகிழ்ச்சியுடனும் விலக வேண்டும்.

மேலும் வாசிக்க