திரைப்படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரைப்படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23 அக்டோபர், 2011

சற்குணம் என்ற அசல் கலைஞன்

             சமீபத்தில் மூன்று  தமிழ் திரைப்படங்கள் பார்த்தேன். எங்கேயும் எப்போதும், தெய்வத் திருமகள் மற்றும் வாகை சூட வா. ஆச்சரியமூட்டும் வகையில் அதில் இரண்டு படங்கள் நல்ல கருத்துக்களைச் சொல்லும் லேசான பிரசார தொனி கொண்ட கதைகளைச் சொல்பவை. எங்கேயும் எப்போதும் பேருந்து விபத்து ஒன்றை பின்புலமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. பேருந்தில் பயணம் செய்பவர்களையும் அவர்களது பின்புலத்தையும் அறிமுகப்படுத்தி அவர்களோடு நமக்கு உணர்வு பூர்வமானதொரு உறவை ஏற்படுத்தி விடுகிறார் இயக்குனர். பிரதான கதை மாந்தர்கள் மட்டுமின்றி விபத்துக்குள்ளாகும் இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்யும் அனைத்துப் பயணிகளுமே மனதில் நன்கு பதிந்து விடுகின்றனர். ஜெய் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். எந்த போலித் தோரணைகளுமின்றி இயல்பாக நடிக்கக் கூடியவர். ஒரு சராசரி குறு நகரத்து இளைஞனை நினைவு படுத்தும் தோற்றம் கொண்டவர். அவரது உரையாடல் வெளிப்பாடு தனித்துவமும், எளிமையும் கொண்டது. அஞ்சலியும் அப்படியே. தமிழ்த் திரைக்கதாநாயகிகளில் நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர். எனக்கு மிகவும் பிடித்த கதாநாயகி. இன்னொரு ஜோடியாக வரும் ஆனந்யாவும், ஸ்ரவனும் (தெலுங்கு)  அருமையாக நடித்துள்ளனர். படம் முடியும் போது இதயம் கனமாகிறது. படம் குறித்தும், சாலைப் பாதுகாப்பில் நம் பொறுப்பற்ற தன்மை குறித்தும் நீண்ட நேரம் சிந்திக்க வைக்கிறது. லோன்லி பிளானெட் என்கிற பயண வழிகாட்டி நூலில் இந்தியா செல்லும் போது பேருந்துப் பயணங்களைத் தவிர்த்து ரயில் பயணங்களையே மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது
                     வாகை சூட வாவின் இயக்குனர் சற்குணம் முதல் படத்திலயே என் இதயத்துக்கு மிகவும் நெருக்கமான இயக்குநராகி விட்டார். களவாணியையை இன்ச் இஞ்சாக ரசித்துப் பார்த்தேன்.விமலும் அவரது சகாக்களும் அடிக்கும் கூத்துக்கள் எனக்கு என் பிளஸ் டூ நாட்களை நினைவு படுத்தியது. புதுக்கோட்டை தஞ்சாவூர் அரியலூர் மாவட்டங்களின் மக்கள் வாழ்க்கையையும், மொழியையும் அற்புதமாகப் பதிவு செய்கிறவராக இருக்கிறார் சற்குணம். களவாணி திரைப்படம் வெறும் பொழுதுபோக்குப் படமாக  மட்டுமே வகைப்படுத்தப் பட்டதிலும், அந்தப் படம் அதிக கவனிக்கப்படாமல் போனதிலும் எனக்குக் கொஞ்சம் வருத்தம்தான்

                 வாகை சூடாவாவிலும் தன அழுததமான முத்திரையைப் பதித்துள்ளார்.  ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில் நிகழும் கதை. செங்கல் சூளையில்  கல்லறுக்கும் சிறுவர்களுக்கு கல்வி புகட்ட வரும் ஓர் ஆசிரியரைப் பற்றிய கதை. கல்வி விழிப்புணர்வுப் பிரச்சார திரைப்படமாகவே இந்த திரைப்படத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது என் கருத்து.

                     வாகை சூடாவாவிலும்  தன் அழுத்தமான முத்திரையைப் பதித்துள்ளார். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில் புதுக்கோட்டையில் நிகழும் கதை. செங்கல் சூளையில் கல்லறுக்கும் சிறுவர்களுக்கு கல்வி புகட்ட வரும் ஓர் ஆசிரியரைப் பற்றிய கதை. விமல் இந்தப் படத்திலும் இயல்பாக நடித்திருக்கிறார்கதாநாயகி கேரளத்து அழகி. ஆனால் தமிழ் முகம். கிராமத்துக் களை. டூ நாலெட்டு, நொண்டி மணி, வைத்தியர், குருவி சாமியார் என்று கதா பாத்திரங்கள் உண்மையின் பிரதிகளாக வடிவமைக்கப் பட்டிருக்கின்றன

         டூ நாலெட்டு போடும் எளிய புதிர்க் கணக்குக்கு விடை தெரியாமல் விழிக்கிறார் விமல். இந்தக் கணக்கையையே அவுக்கத் தெரியல நீ எங்க புள்ளைங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கப் போற என்று கிண்டலடிகிறார்கள் கிராமத்தார்அந்தக் கிராமத்தில் மூன்று மாதம் வேலை செய்தால் கிடைக்கும் சான்றிதழின் மூலம் தனக்கு அரசு வேலை கிடைத்து விடும் என்ற எதிர்பார்ப்பில்,கிராமத்தார் புறக்கணிப்பையும் , சிறுவர்களின் சதிவேலைகளையும் , தினமும் சமைத்துத் தருகிறேன் என்று சொல்லி காசு வாங்கிக் கொண்டு ஏமாற்றும் நாயகியின் காதல் பார்வையையும் சமாளித்துக் கொண்டு காத்திருக்கிறான் நாயகன். ஆண்டையால் அவ்வூர் மக்கள் சுரண்டப்படுவது அறிய வரும் போது தன் உண்மையான பணி என்ன என்பதை அறிகிறான்.

                செங்க மண்ணு தின்னும் பசங்கள், முட்ட வரும் ஆட்டை மறித்து நீ என்ன புலியா என்று கேட்டு புளி கொடுத்து ஆட்டை மடக்கும் சிறுவர்கள், குருவி சத்தம் கேட்குது என்று சொல்லித் திரியும், அவ்வூர் மக்களுக்குத் தெய்வமெனத் திகழும் அழுக்கு சாமியார், நான் பேச நினைப்பதெல்லாம் பாடல்  வானொலியில் ஒலிக்கும் போதெல்லாம் அதனருகே மயங்கி நிற்கும் நாயகி எல்லாமே மனதின் அழியாத சித்திரங்கள்.
அறுபதுகளைக் கண் முன் காட்ட மிகுந்த முயற்சி எடுத்திருக்கிறார் சற்குணம். காபி கோட்டை அரைக்கும் எந்திரம், சைக்கிளின் முகப்பில் மாட்ட விடும் மண்ணெண்ணெய் விளக்கு, அதிகாரமும் பிலுக்களுமாய்ப் பேசும் போஸ்ட் உமன், முழங்கால் வரை தொங்கும் சிலிட் வைத்த முழுக்கை சட்டை, செங்கல் ஆர்டர் தருபவர் அணிந்திருக்கும் பாரதியார் பாணி உடை எல்லாமே இதற்கு ஆதாரங்கள். செங்கல் சூளை கிராமம் மட்டும் செட்  போட்டதைப் போல தெரிகிறது. ஆனால் நான் இதற்கு முன் இப்படிப் பட்ட இடங்களைப் பார்த்ததில்லை என்பதால் பெனபிட் ஆப் டவுட்டை சற்குணத்துக்கு வழங்குகிறேன்

                 இந்தப் படம் சரியாகப் போகவில்லை என்று கேள்விப்பட்டேன்.நல்ல திரைப்படங்கள் ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்டு, தெய்வதிருமகள் போன்ற போலிகள் ஊதிப் பெரிதாக்கப்பட்டு மக்களால் கவனிக்கப்படும் நிலை தொடரும் வரை சற்குணம் போன்ற அசலான கலைஞர்கள் இருட்டடிப்பு செய்யப்படுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். ஹாலிவுட் படங்களின் கதைகளைத் திருடி, அதைத் தமிழ் சினிமாவுக்கேற்ற வகையில் சொதப்பலாக மாற்றி, தானே கதையை எழுதியதாக பெருமையடித்துக் கொள்ளும் விஜய் போன்ற அரைவேக்காட்டு மொக்கை இயக்குனர்கள் வன்மையாக நிராகரிக்கப் படவேண்டும்.

           தெய்வத் திருமகள் ஒரு ஆங்கிலப் படத்தின் பிரதி என்கிறார்கள். எனக்கு படம் பார்த்து முடித்தபின் எரிச்சலாக இருந்தது. விக்ரம் கமல்ஹாசன் போலாகி விட்டார். ராவணன் படத்தின் ஓவர் ஆக்டிங் இந்தப் படத்திலும் தொடர்ந்திருக்கிறது.
  

9 அக்டோபர், 2010

கிம் கி டுக் தரும் ஜென் அனுபவம்

தென் கொரிய இயக்குனரான கிம் கி டுக்கின் spring, summer,fall,winter ….and spring படம் முற்றிலும் புதிய காண்பனுபவத்தை வழங்கிய ஒரு திரைப்படம். சுற்றிலும் மலைகள் சூழ்ந்து, அவற்றின் நடுவே உள்ள ஏரி ஒன்றில் மிதந்தபடி நிற்கிற ஓர் பௌத்த ஆசிரமத்தில் பிறந்து வளரும் ஓர் இளம் துறவியும் அவனை வளர்க்கும் குருவும்தான் கதையின் பிரதான பாத்திரங்கள். குழந்தைப் பருவத்திலேயே அந்த இளம் துறவிக்குள் முகிழ்த்து வளரும் அகங்காரம், தன்னையே முன்னிலைப் படுத்தி, தன்னைத் திருப்திப்படுத்திக் கொள்வதற்காக அவன் செய்யும் செயல்கள் மூலம் அறியப்படுகிறது.
ஏரியில் உலவும் தவளை, பாம்பு, மீன் போன்ற சின்ன உயிர்களின் உடலில் கயிற்றைக் கட்டி அவற்றை நீரில் விடுகிறான். அவை துடிப்பதைப் பார்த்து கைகொட்டிச் சிரித்து மகிழ்கிறான்.(சிறுவனாயிருக்கும் போதுதான்). குரு இவன் செய்கைகளை அமைதியாகப் பார்த்துக் கொண்டே இருக்கிறார். இரவில் உறங்கும் போது அவன் முதுகில் பெரிய கல் ஒன்றைக் கட்டி விடுகிறார். காலையில் கல்லை அவிழ்க்கச் சொல்லிக் கேட்கும் அவனிடம், நீ போய் அந்த உயிரினங்களை விடுவித்து விட்டு வா. அதுவரை நீ கல்லைச் சுமந்து கொண்டுதானிருக்க வேண்டும். அவற்றில் ஏதாவதொன்று இறந்தாலோ, அந்தச் சுமை நீ இறக்கும் வரை உன் மனதில் தங்கி விடும் என்கிறார். (பால் மணம் மாறாத பச்சிளம்) சிறுவன் கல்லைச் சிரமத்தோடு சுமந்தபடி ஏரிக்குச் சென்று தவளையை விடுவிக்கிறான். மீனும் பாம்பும் இறந்து விடுகின்றன. குழந்தை குமுறிக் குமுறி அழுகிறான்.
இந்த முழு நிகழ்வுமே ஒரு அழகான ஸென் கதை சொல்லப்படுவதைப் போல கவித்துவத்தோடு சொல்லப்பட்டிருக்கிறது. சொல்முறையில் இவ்வளவு எளிமையைக் கைக்கொண்டு ஓர் அடர்ந்த விஷயத்தை நிகழ்த்திக் காட்டமுடியும் என்று படத்தின் ஒவ்வொரு காட்சியுமே நிரூபிக்கிறது.  
கிம் காட்சிகளை மிகவும் நிதானமாகக் காட்டுகிறார். ஆஸ்ரமத்திலிருந்து ஏரிக்கரைக்கு யாரோ ஒருவரைச் சுமந்து கொண்டு போவதும், வருவதுமாக  இருக்கிறது படகு. ஏரி நடுவில் மிதக்கும் ஆஸ்ரமம் பல கோணங்களில் காட்டப்படுவதும், மாறும் காலநிலைகளில் ஏரியும், மலைகளும், ஆஸ்ரமமும் பல்வேறு ரூபங்கள் எடுத்து அழகு காட்டுவதும் மனதை வருடிக் கொண்டே இருக்கின்றன. பல காட்சிகளில் அருவியில் நீர் விழும் சப்தமும், துடுப்பு வலிக்கப்படும் ஓசையும், காற்றில் சருகுகள் புரளும் ஓசையுமே நிறைந்து படம் முழுக்க நிலவும் அமைதியை அடர்த்தியாக்குகின்றன. துறவிகளுக்கோ, அவர்களைச் சந்திக்க வரும் மனிதர்களுக்கோ உரையாடல் ஒரு அவசியமற்ற ஆடம்பரமாகவே படுகிறது போலும். பெரும்பாலும் எல்லாமே மவுனமாகவே நிகழ்கின்றன.
வசந்தம், இலையுதிர் காலம், குளிர்காலம் மூன்றும் தொடர்ந்து வருகின்றன. இளம் துறவியின் வாழ்விலும் எதிர்பாராத மாற்றங்கள். காமத்தின் வேட்கை அவனை வீழ்த்தி விடுகிறது. ஆசிரமத்துக்கு மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வரும் ஒரு இளம்பெண்ணால் ஈர்க்கப்பட்டு அவள் மீது மோகம் கொள்கிறான். இருவரும் குரு அறியாமல் சந்தித்துக் கொள்கிறார்கள். இயற்கை தன் வேலையைக் காட்டி விடுகிறது. இருவரும் ரகசியத் தொடர்பும் குருவுக்குத் தெரிய வருகிறது. அவர் முன் விழுந்து மன்னிப்புக் கேட்கிறான் இளந்துறவி. பொருட்கள் மீது கொள்ளும் காமம் அவற்றைக் கைப்பற்றத் தூண்டும்; பிறகு அதுவே கொலையும் செய்யத் தூண்டும் என்று அவனை எச்சரிக்கிறார் குரு. அந்தப் பெண்ணைப் பார்த்து உடல் குணமாகி விட்டதா என்று கேட்கிறார். அவள் ஆமாம் என்று சொல்ல, அப்போ இதுதான் உனக்குத் தேவையான மருந்து என்று கூறி அவளைத் திருப்பி அனுப்பி விடுகிறார் குரு. இளந்துறவியால் அவள் பிரிவைத் தாங்க முடியவில்லை. குரு உறங்கும் நேரம் ஆசிரமத்தை விட்டுக் கிளம்பி விடுகிறான். (அங்குள்ள புத்தர் சிலையையும் எடுத்துக்கொண்டு).
அவன் உயிர்களைத் துன்புறுத்தியபோதோ, அவனது கள்ள உறவு பற்றி அறிந்தபோதோ எந்தச் சலனமுமின்றி நிகழ்வுகளை ஒரு சாட்சியாகவே பார்த்துக் கொண்டிருக்கும் குரு, தான் வளர்த்த துறவி தன்னை விட்டுப் பிரிந்த போதும் அப்படியே இருக்கிறார். புத்தர் சிலை இருந்த இடத்துக்குப் பின்னாலுள்ள புத்தரின் ஓவியத்துக்குத் தன் தினசரி வழிபாடுகளைத் தொடர்ந்து நடத்திக் கொண்டு, ஆசிரமத்தைப் பெருக்கித் தூய்மை செய்து கொண்டும், படகில் ஏரிக்கரை சென்று மூலிகைளைச் சேகரித்துக் கொண்டுமிருக்கிறார். பருவம் மாறி இலையுதிர்காலம் வருகிறது. செய்தித்தாள் துண்டொன்றில் தன்னை விட்டுச் சென்றவன் மனைவியைக் கொலை செய்து விட்டுத் தலைமறைவாகி விட்ட செய்தியைப் படிக்கிறார். உடனே அவன் வருகையை எதிர்பார்த்து ஆயத்தங்களைச் செய்கிறான். அவனும் வந்து சேருகிறான். கோபமும், வெறியும் கொண்ட இளைஞனாக. புத்தர் சிலையும் திரும்பி வந்து விடுகிறது. நீ தேடிச் சென்ற வாழ்வு உனக்கு விருப்பப்பட்ட மாதிரி இருந்ததா என்று கேட்கிறார் குரு. இளைஞன் கொதிக்கிறான். ஆசிரமத்துக்குள் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறான். குரு அவனை கட்டையால் மரண அடி அடித்து கட்டித் தொங்க விட்டு விடுகிறார். தொங்க விட்ட கயிற்றை தீபம் சுட்டு கீழே விழும் வரை தொங்குகிறான். குரு ஆசிரமத்துக்கு வெளியில் மரத்தரை முழுக்க புத்தரின் சூத்திரம் ஒன்றை தீட்டிக் கொண்டிருக்கிறார். இளைஞனின் வெறி இன்னமும் தீராததால் அவனைப் பார்த்து இந்தச் சூத்திரத்தின் எழுத்துக்கள் அனைத்தையும் கத்தியால் கீறி எடு என்கிறார். இளைஞன் அடிபணிகிறான். அதற்குள் காவல் துறை தேடி வருகிறது. இளைஞன் அவன் மீது பாயப்போக, என்ன செய்கிறாய்? பேசாமல் எழுத்துக்களைக் கீறு என்கிறார் குரு. அவனும் தன் வேலையைத் தொடர, காவலர்கள் விடியும் வரை காத்திருந்து அழைத்துச் செல்கிறார்கள். அவர்கள் சென்றவுடன் குரு தன்னை மாய்த்துக் கொள்கிறார். அவனை வளர்த்த விதத்தில் தோல்வியடைந்து விட்டோம் என்பதால் தற்கொலை செய்து கொள்கிறாரா அல்லது இனியும் தன் வாழ்வை நீட்டிப்பதற்கு எந்த அர்த்தமும் இல்லை என்பதால் அப்படிச் செய்தாரா என்று தெரியவில்லை.
குளிர்காலம் துவங்குகிறது. இளைஞன் இப்போது மத்திம வயதினனாகத் திரும்பி வருகிறான். மனமும் கனிந்திருக்கிறது. குரு வாழ்ந்த வாழ்க்கை முறையைத் தானும் தொடர்கிறான். முகத்தை மூடியபடி ஒரு பெண் குழந்தை ஒன்றைத் தூக்கிக் கொண்டு அங்கு வருகிறாள். அவள் யாரென்று முகத்திரை விலக்கி அறிய முற்படும்போது, அவள் தடுத்து விடுகிறாள். அவன் கையை மென்மையாகப் பற்றும்போது அவள் அவனிடம் ஏதோ சொல்ல நினைப்பதைப் போலவே இருக்கிறது. குழந்தையை அங்கேயே விட்டு விட்டுச் செல்கிறாள். செல்லும் வழியில் இறக்கிறாள். துறவி அவள் திரையை விலக்கி முகம் பார்க்கிறான். யார் அது? மன்னிக்கவும், எனக்குத் தெரியவில்லை. குழந்தை அவனிடமே வளர்கிறது.
குளிர்காலம் முடிந்து வசந்தம் மீண்டும் வருகிறது. குழந்தை வளர்ந்து கொண்டிருக்கிறது. அந்தப் பிஞ்சு மனசுக்குள்ளும்  வன்மம் தலையெடுக்க ஆரம்பிக்கிறது. சிக்கல் நிறைந்த நிகழ்வுகள் கொண்ட ஒரு கதையை கிம் கி டுக் எளிமையாகவும், அழகாகவும், ஒரே நேர்கோட்டிலும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். வழக்கமான முறையில் எடுக்கப்படும் படம் பார்த்துப் பழகியவர்களுக்கு இப்படம் முதல் பார்வையில் ஒரு இனிமையான அதிர்ச்சி தரும். மீண்டும் ஒருமுறை பார்க்கத் தூண்டும். மீண்டும் பார்க்கையில் பல நுட்பமான அம்சங்கள் புரியவரும்.

30 செப்டம்பர், 2010

அகிராவின் ராஷோமோன்

லேகா அவர்கள் யாழிசை ஓர் இலக்கியப்பயணத்தில் பரிந்துரை செய்த அகிரா குரோசாவாவின் ராஷோமோன் திரைப்படம் பார்த்தேன். நான் உலக சினிமா பார்க்க ஆரம்பித்திருப்பதே இந்தச் சிலமாதங்களில் வலைத்தளங்களின் தொடர்பு ஏற்பட்ட பின்புதான். ஐம்பதுகளில் வெளிவந்திருக்கும் இந்தத் திரைப்படம் ஒரு கொலையை மையமாக வைத்துக் கொண்டு, நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போது மனித மனம் கொள்ளும் திரிபுகளை விவரிக்கிறது.
படத்தின் துவக்கக் காட்சியில் ஒரு புத்தபிட்சுவும், இன்னொருவனும் ஒரு பாழடைந்த மண்டபத்தில் உறைந்துபோன முகங்களோடு அமர்ந்திருக்கிறார்கள். வெளியே அடை மழை பெய்துகொண்டிருக்கிறது. மழையின் தீவிரம் அவர்கள் இருவர் மனதிலும் தாக்கிக் கொண்டிருக்கும் எண்ணங்களின் தாக்கத்தைக் குறிப்பதாகப் படுகிறது. அங்கு அவர்களைச் சந்திக்கும் ஒரு வழிப்போக்கனிடம் இருவரும் தாங்கள் சாட்சியமளித்த ஓர் விசித்திரக் கொலை வழக்கைப் பற்றிச் சொல்கிறார்கள்.
கதை முழுவதும் சொல்ல ஆயாசமாக இருக்கிறது. ஒரு கொள்ளைக்காரன் காட்டுக்குள் வரும் ஒரு தம்பதியரை வழிமறித்து, மனைவியைக் கற்பழித்து விடுகிறான். கணவன் இறக்கிறான். அவன் யாரால் கொல்லப்பட்டான் என்று, பிடிபட்ட கொள்ளைக்காரன், தப்பிய மனைவி ஒவ்வொருவர் தரப்பு சாட்சியமும் காட்சிகளாக விரிகின்றது. இறந்த கணவனின் ஆவி கூட ஒரு மீடியத்தின் உதவியுடன் சாட்சி சொல்கிறது. இந்தக் கதைகளை வழிப்போக்கனிடம் பகிர்ந்து கொள்ளும், கொலையுண்ட உடலை முதலில் பார்த்தவன் அவை அனைத்தும் பொய் என்று சொல்லி தன் தரப்புக் கதையே உண்மை என்று இறுதியில் சொல்கிறான்.
அகிரா கதையில் பலவிஷயங்களை ஆராய்ந்திருக்கிறார். பெண் என்ற ஒரு பலவீனமான உயிரினம் ஆண்களின் பார்வைக்கு ஒரு போகப் பொருளாகவும், மோகம் தீர்ந்ததும் வீசி எரியப்படுகிற குப்பை இலையாகவுமே பார்க்கப்படுவதை நன்கு பதிவு செய்துள்ளார். இரண்டு ஆண்கள் உன்னை அனுபவித்திருக்கிறோமே, நீ ஏன் உன்னைக் கொன்று கொள்ளக் கூடாது என்கிறான் கணவன். கற்பழிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் உணர்வுகள் இரண்டு பேருக்கும் நடுவில் அல்லாடுகின்றன. நான்கு கோணங்களில் சொல்லப்பட்ட கதைகளிலும் பெண் சுகிக்கப்படுக்கிறாள்; வீசி எறியப்படுகிறாள்; புறக்கணிக்கப்படுகிறாள். தன் குதிரையை இழப்பதை விட அவளை இழப்பதே மேல் என்கிறான் கணவன். தன் உயிரைக் காத்துக்கொள்ள அவளை இழக்கத் தயாராகிறான்.
பெண்ணின் நிலையற்ற மனதும் கோடி காட்டப்பட்டுள்ளது. கொள்ளைக்காரனோடு செல்லத் தயாராகி விடுகிறாள் அவள். அதற்கு அவன் தன் கணவனைக் கொல்ல வேண்டும் என்கிறாள். இருவரும் பொருதிக்கொள்ளும் காட்சியில், மகாவீரன் என்று மார்தட்டிக்கொள்ளும் கொள்ளைக்காரனின் கரங்கள் உயிர்ப்பயத்தால் நடுங்குகின்றன. இருவருமே தங்கள் உயிர் போய்விடுமோ என்ற நடுக்கத்துடனேயே சண்டையிடுவது வித்தியாசமான காட்சி.
முதல் மூன்று கதைகளிலுமேயே பொய்கள் இருக்கின்றன. தங்களை உத்தமராகக் காட்டிக் கொள்ளத் தங்களைக் கொலைகாரர் என்று சொல்லிக்கொள்ளவும் தயாராக இருக்கிறார்கள். பொய்மை மனிதர்களின் இயல்பான குணமாகி விட்டது. மனிதன் தனக்குத்தானே பொய் சொல்லவும் பழகி விட்டான். சமயங்களில் அவன் சொல்வது உண்மையா, பொய்யா என்று அவனாலேயே பிரித்துச் சொல்ல முடியவில்லை என்பன போன்ற கருத்துக்கள் விவாதிக்கப்படுகின்றன. நாமும் இப்படித்தானே எங்கோ நடந்த துர்ச்சம்பவங்களைப் பற்றி உரையாடும் போது தத்துவ விவாதத்தில் இறங்கி விடுகிறோம். எந்த ஒரு மோசமான நிகழ்வும் மனிதனின் அடிப்படையான தன்மைகளின், ஒழுக்க நெறிகளின் அலசலுக்கு வழி வகுத்து விடுகிறது. நேர்மையையும், ஒழுக்கத்தையும் நம்மைத் தவிர்த்து எல்லாரிடமும் எதிர்பார்க்கிறோம். மனிதனின் மேலுள்ள நம்பிக்கை தகர்ந்து கொண்டே வருகிறது. உலகம் நரகம் போலவே மாறி வருகிறது. கதையின் நான்காவது கோணத்தைச் சொல்லுபவன் தான் சொல்லும் கோணமே உண்மை என்கிறான். தான் காவல் துறையிடம் சிக்கிக் கொள்ளக் கூடாதென்பதற்காகவே அதை நீதிமன்றத்தில் சொல்லவில்லை என்கிறான். அவன் சொல்வது உண்மைக்கதையா, இல்லையா என்று நாம்தான் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.
எல்லாக் கதைகளும் சொல்லப்பட்டபின் மண்டபத்தின் உள்ளிருந்து கைவிடப்பட்ட குழந்தையொன்றின் அழுகுரல் கேட்கிறது. அந்தக் குழந்தையோடு வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த கிமோனோவை வழிப்போக்கன் எடுத்துக்கொள்கிறான். மற்றவன் அவனைத் தடுக்க மனிதாபிமானத்தோடு நடந்து கொள், இது அந்தக் குழந்தையைக் கண்டெடுப்பவர்களுக்கு உதவும் விதத்தில் வைக்கப்பட்டுள்ளது எனும்போது, குழந்தையைக் கைவிட்ட அந்தப் பெற்றோர் மனிதாபிமானத்தொடு நடந்து கொண்டார்களா? கொலை நடந்த இடத்திலிருந்து அந்தப் பெண்ணின் விலையுயர்ந்த குறுவாளைத் திருடினாயே நீ மனிதாபிமானத்தோடு நடந்துகொண்டாயா என்று கேட்டுவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறான் வழிப்போக்கன். இவன் மௌனமாக நிற்கிறான். மனிதத்தில் நம்பிக்கை இழக்க மறுக்கும் புத்த பிட்சு குழந்தையை எடுத்துக்கொண்டு நடக்க இவன் கை நீட்டுகிறான். போய்விடு, பிடுங்குவதற்கு இன்னும் ஏதாவது இருக்குமா என்று பார்க்கிறாயா? என்கிறான் புத்தபிட்சு வெறுப்போடு. இவன் கண்ணீருடன் எனக்கு ஆறு குழந்தைகள், இது சேர்வதால் எனக்கு ஒரு பெரிய வேறுபாடும் ஏற்படப்போவதில்லை என்று குழந்தையைக் கேட்கிறான். மனிதம் இன்னும் சாகவில்லை என்று மகிழும் பிட்சு கண்ணீரோடு அவனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு குழந்தையைத் தருகிறான். எத்தனையோ புதிர்கள் நிறைந்த மனித உள்ளத்தில் தவறுகள் புரிவதால் ஏற்படும் குற்ற உணர்ச்சிகள் உறுத்தி அவர்களை நல்வழிப்படுத்துகிறது என்றெண்ணலாம் போலத் தோன்றுகிறது.

மேலும் வாசிக்க