26 நவம்பர், 2025

நிர்மலின் “இறுதியே இயைவது ஆனால்”



“இறுதியே இயைவது ஆனால்”

அன்புள்ள குடாகேசனுக்கு, 

இறுதியே இயைவது ஆனால் சிறுகதையை ஒரு கருத்தியல் சிறுகதை என்று நான் வகைமை செய்கிறேன். அமெரிக்காவில் புலம் பெயர்ந்து வாழும் குடாகேசனுக்கு அங்கேயே பிறந்து வாழும் தன் குழந்தைக்கு பழந்தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு உண்டாகாதது ஏன் என்ற இருத்தலியல் சிக்கல் கேள்வி வருகிறது. இத்தனைக்கும் அவர் மகள் நவீன ஆங்கில இலக்கியத்தில் ஆழ்கிறவள். இதைத் தன் இல்லத்திற்க்கு வரும் தமிழ் எழுத்தாளர் சுபகையிடம் கேள்வியாக வைக்கிறான். இப்போது ஒரு தமிழ்ப்புலவர் உங்கள் இல்லம் வந்தால் நீங்கள் உங்கள் மகளிடம் உரையாட அனுமதிப்பீர்களா? என்று சுபகை கேட்கிறாள். சுபகையையே அவர் மகளிடம் பேச அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. “குட்” தன் மகளின் அன்றாட அட்டவணையைக் காரணம் காட்டி அது நடவாத காரியம் என்கிறான்.

> ஒரு நாகரீகத்தின் அக மதிப்பீடுகள், அதன் புற வெளிப்பாடுகள் பற்றி விரிவான புரிதல் இருந்தால் இளையவர்களுக்குத் தங்களை இணைத்துக் கொள்ள உதவும், நேரடியாக அனுபவம் கிடைக்காத அடையாளங்கள் வழியே கற்பனையைத் தொட்டு விரித்துக் கொள்வது கடினமல்லவா? என்பது சுபகையின் கேள்வி.

இதற்குப்பிறகு கதை வேறோரு முக்கியமான திசையில் திரும்புகிறது. பள்ளிக்கூடங்களை விடுங்கள், இதை சரிசெய்வதற்கு எழுத்தாளர்களின் பங்கு என்ன? என்பது “குட்”டின் கேள்வியாக இருக்கிறது. இது சுபகையைச் சீண்டுகிறது. 

“அழியும் காலம் வந்துவிட்டால், இடையிலே எது வந்தாலும் அந்த அழிவுக்குத் தடை உண்டாகுமோ? உண்டாகாது” என்று சூசகமாகக் குறிப்பிடுகிறாள் சுபகை. குடாகேசனுக்கு அவன் மன ஆடியில் தெரியும் பிம்பம் மாயமாகத் தெரிவது போன்றே எனக்கும் சுபகையின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் அந்த வரிசையின் ஆசிரியர் என்று அவள் குறிப்பிடுகிறாள். ஓரம்போகியார் போலவே உன் வீட்டுக்கு வருகை தந்த என்னை உன் பெண்ணிடம் பேச விடாமல் தடை செய்வது நீதானே என்றவள் கேட்பதாகவும் கொள்ளலாம்.

அவன் அலுவலகத்திலும் சமூக வட்டத்திலும் பயன்படுத்தப்படும் ‘குட்’ என்ற சுருக்கப் பெயர், அவனது பாரம்பரியமான ‘குடாகேசன்’ என்ற பெயரை விழுங்கியது போல, இலக்கியத்தின் மீதான அவனது ஈடுபாட்டையும் அமெரிக்க வாழ்வின் அன்றாட யதார்த்தம் விழுங்குகிறது.

சாதாரண உரையாடல்கள் வழியாகவும், கம்பராமாயண விவாதத்தின் மூலமாகவும் இந்தச் சிதைவு மிக அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது. கலைக்கும், வாழ்வின் தவிர்க்க முடியாத யதார்த்தத்திற்கும் இடையேயான போராட்டத்தை, சுவாரஸ்யமான நடை மற்றும் கூரிய அவதானிப்புடன் இக்கதை படைத்திருக்கிறது. குறிப்பாக, ‘குடாகேசன்’ என்ற பெயருக்கும், ‘குட்’ என்ற அழைப்பிற்கும் இடையேயான இடைவெளி, பண்பாட்டு விலகலின் குறியீடாக அமைந்தது சிறப்பு. ஒரு நல்ல கதைக்கான அனைத்து அம்சங்களையும் இச்சிறுகதை கொண்டுள்ளது.

கதை சட்டென்று கொள்ளும் திருப்பம் பிடித்திருந்தது. கதையின் நாயகன் பழந்தமிழ் வாசகன் என்பதாலேயே அதற்குரிய மொழியையும், உவமைகளையும் பயின்றிருக்கிறது. “குட்”டின் பதற்றம், குழப்பம், எதிர்ப்பார்ப்புகள், அழகாகப் படம் பிடிக்கப்பட்டிருக்கின்றன. டயலாக் டேக் இல்லாமல் உரையாடல்களைக் கையாண்டிருக்கிறீர்கள். அது ஒரு நல்ல உத்தி. நன்றாக வந்திருக்கிறது.

கதைக்குள் கட்டுரைத்தன்மை வருவதை தவிர்க்க முடியவில்லை. நிறையத் தகவல்கள் வரிசை கட்டி நிற்கின்றன. சில சொற்றொடர்க் குழப்பங்களை கவனித்தேன். ஏனோ கதையில் முதல் பாதி, இரண்டாவது பாதி என்று தனித்தனிக் கதைகளைப் போல் தோற்றமளிக்கின்றன.

தொடர்ந்து புனைவிலேயே இருக்கின்றீர்கள், நிர்மல். இது மிக நன்று. தொடர்ந்து எழுதிக் கொண்டே இருங்கள்.வாழ்த்துக்கள்.

அன்புடன் 

ஜெகதீஷ் குமார்

உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜெகதீஷ். என்னைப் பக்குவப்படுத்திக் கொள்ள உதவும். இது பெட்னாவில் கலந்துக் கொண்டு  ஸ்டாலின் ராஜாங்கமும், சு.வேணுகோபாலும்  வெர்ஜினியா வந்திருந்த பொழுது நிகழ்ந்த சம்பவம் ஒன்றின் மேலானது. அன்றைக்கு மனம் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருந்தது.

அன்புடன்

நிர்மல்


வானப்ரஸ்தம் குறித்து பாலாஜிராஜூ


 

வானப்ரஸ்தம்

வணக்கம் ஜெகதீஷ்,

சம்யுக்தா, அவளுடைய அம்மா என இரண்டு பாத்திரங்கள், ஒரு சாலைப் பயணம், சில நிகழ்வுகள் என கதை வாசிப்பதற்கு படு சுவாரசியமாக வந்திருக்கிறது. இருவரும் வாழ்வின் இருவேறு நிலைகளில் இருக்கிறார்கள். அம்மா, தனக்குரிய பாதையை அடைந்து, அல்லது அதை நோக்கிய பயணத்தில், தனக்குரிய தெளிவுடன் இருக்கிறாள்.

சம்யுக்தா, இன்றைய தலைமுறையினரின் பிம்பமாக இருக்கிறாள். சம்யுக்தாவை நான் ஒரு அமெரிக்க இந்தியப் பாத்திரமாக மட்டும் பார்க்கவில்லை, அவள் இந்தியாவின் இன்றைய நிலையையும் பிரதிபலிக்கிறாள் என்றே எண்ணுகிறேன். ஒரு வகையில் வளர்ந்துவரும் நாடுகளின் மத்திய வயதினர் எல்லோருக்குமான பிம்பமாகவும் சம்யுக்தாவைக் கருதலாம். எல்லாமிருக்கிறது, ஆனாலும் ஒரு நிலையின்மை. அவளுடைய பாத்திரம் கதைசொல்லியாக இருக்கிறது, பெரும்பாலும் அவளுடைய அம்மாவை நோக்கியே கதைக் கோணம் அமைந்திருக்கிறது. ஆனாலும், அவளுடைய நிலை கதை முழுக்க வாசகர்களுக்கு தெளிவாகவே விரிகிறது. ஜெ யின் சொற்களையே இங்கு குறிப்பிடுகிறேன், அவளுக்கு இருப்பது ‘ஒரு தத்துவ வெறுமை’. எல்லாமிருக்கிறது, விடுபட்டிருப்பதாக எண்ணுகிறாள், ஆனாலும் ஒரு அலைக்கழிப்பு.

சம்யுக்தாவின் அம்மா பாத்திரம் மிக அழகாக வெளிப்பட்டிருக்கிறது. அவளுடைய தெளிந்த மனம், மனதுக்கு நெருக்கமானதாக கதையினூடாக மாறுகிறது. அவள் கரடியைக் கண்டு அஞ்சுவதில்லை, அச்சம் சம்யுக்தாவுக்கே. அது கரடி எனும் அறியாமை மீதான அச்சம்தானே! அவள் சம்யுக்தாவைப் பற்றி அதிகம் கவலைப்படுவதுமில்லை, மகளுடைய நிலையை நன்றாகப் புரிந்துவைத்திருக்கிறாள். இது லட்சியப் பாத்திரம் என்றே எண்ணுகிறேன். ஆன்மீகத்தில், எல்லாவற்றையும் அதனியல்பில் ஏற்றுக்கொள்வதின் வாயிலாக மீட்சியை நோக்கிச் செல்லும் ஒரு பெண். சகோதரி அனுவின் அம்மாவை ஒற்றிய பாத்திரம் என்றும் ஊகிக்கிறேன்.

கதையில் சாலைப் பயணம் என்பதையும் ஒரு குறியீடாகவே வாசிக்கலாம், அதற்கும் இடமிருக்கிறது. கிரிகோரி ராபின்சன் கதையில் நன்றாகப் பொருந்துகிறார். அவர் தனக்குரிய பாதையில் இருப்பவர், ஒரு வகையில் அவருக்கே உரிய ஆன்மீகப் பாதை.

மிக நேர்த்தியான கதை ஜெகதீஷ். கதையில் வயல் வெளி மற்று மலைகள் குறித்த வர்ணனைகள் அபாரமான எழுச்சியைத் தந்தது. ஒரு இந்திய வாசகனுக்கு அது அளிக்கும் அனுபவம் இன்னும் ஆழமாக இருக்கும். ஜெ நாவல் நிகழ்வில் எவன் ஒருவன் சூழல் வர்ணனையை நன்றாக எழுதுகிறானோ, அவனை நல்ல எழுத்தாளனாகக் கருதலாம் என்றே சொன்னார். நீங்கள் உங்களுக்கு ஒரு ‘சபாஷ்’ போட்டுக்கொள்ளுங்கள். உங்களுடைய அடுத்த தொகுப்பில் சேர்க்க இன்னொரு அழகிய கதை வந்திருக்கிறது, வாழ்த்துக்கள்.

அன்புடன் 

பாலாஜி ராஜூ


வணக்கம் பாலாஜி, தினமணிக்குக் கதை கேட்டபோது அமெரிக்காவில் நடப்பது போலக் கதை வேண்டும் என்று கேட்டார்கள். மூன்று நாட்களில் எழுத வேண்டும். தினமணி வாசகர்களுக்கேற்றார்ப்போல எழுத வேண்டும். அவர்கள் கொஞ்சம் சீரியஸ் வாசகர்கள்தானென்றாலும் பெரிய பத்திகள் எழுத வாய்ப்பு குறைவுதான். இத்தனைப் பாராமீட்டர்களையும் வைத்துக் கொண்டுதான் எழுதினேன். நான் மனதில் வைத்திருந்தது இதை ஒரு சுவாரசியமான கதையாகச் சொல்ல வேண்டுமென்பது. அப்படியே வந்திருக்கிறது என்று நீங்களும், அனுவும், வெங்கட்டும் சொன்னதும் திருப்தியாக இருந்தது. தத்துவத்தை இதில் பேச வேண்டுமென்று முடிவெடுத்தபோது சற்று தயக்கமாக இருந்தது. பிரச்சாரத்தொனி அடித்து விடுமோ என்று. இன்னும் கொஞ்சம் அவகாசம் இருந்திருந்தால் தத்துவத்தைச் செம்மையாக எழுதியிருப்பேன் என்றே தோன்றுகிறது. ஆனால் வேதாந்தத்தின் அடிப்படை அறிந்த ஒருவருக்கு நான் கோடிட்டு காட்டியுள்ள இடங்கள் நன்கு பிடிபடும் என்றே நினைக்கிறேன். ஞானியும், பைத்தியக்காரனும் பார்க்க ஒன்று போலவேதான் இருப்பார்கள் என்று சொல்வார்கள். அம்மாவுக்கு மனநிலை பிறழ்ந்து விட்டது என்று சம்யுக்தா நினைக்கிறாள். தன்னுடனேயே ஒரு முழுதுணர்ந்த ஞானியை வைத்துக்கொண்டு, அந்த நிலையை அடையும் உபாயத்தையும் வைத்துக் கொண்டு அலைக்கழிதலில் இருக்கிறாள். சாலைப்பயணத்தில் நிகழும் அனுபவங்கள் அவளுக்கு அம்மாவை ஒரு புதிய ஒளியில் பார்க்கும் வாய்ப்பை அளிக்கின்றன. கிரிகோரியும் ஒரு ஞானிதான். தத்துவத்தை முறையாகக் கற்காமலேயே ஞான நிலையில் இருக்க முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டுதான் அவர். ஆஃப்டர் ஆல், அடையவேண்டியது எதுவோ அது நாமாகவே இருக்கும்பொழுது, அதை அடைய புறக்கருவிகளின் உதவிகள் ஒரு நிமித்தமே என்பதைத்தான் அவரது இருப்பு காட்டுகிறது. பொதுவாக கதையை விளக்க நானோ, நீங்களோ விரும்பமாட்டோம். ஆனால் இதில் உள்ள சில வேதாந்தக் கருத்துக்களை உங்களுக்குச் சொல்லலாம் என்று ஆசைப்படுகிறேன். நீங்கள் எனக்கு தத்துவ ஜூனியர். சொந்த நாயனத்தை ஊதுவதற்கு எனக்கும் ஒரு நல்ல சந்தர்ப்பம். அம்மா, “அசோச்யான் அன்வ சோசஷ்த்வம்” என்று கூறுகிறாள். இது கீதையில் கண்ணன் அர்ஜூனனுக்கு கூறுவது. இந்த ஸ்லோகத்தில்தான் உபதேசம் உண்மையில் துவங்குகிறது. இதற்கு உபக்ரம ஸ்லோகம் என்று பெயர். உபதேசத்தின் துவக்கம் என்று பொருள். இரண்டாவது அத்தியாயம், 11 வது ஸ்லோகம். சங்கரர் இந்த ஸ்லோகத்திலிருந்துதான் தன் உரையைத் துவங்குகிறார். முன்னுள்ள ஸ்லோகங்களை அவர் கண்டு கொள்வதேயில்லை. இதன் பொருள் ‘கவலைப்படத் தகாதவை குறித்து நீ கவலையுறுகிறாய்’ என்பதாகும். முழு ஸ்லோகத்தையும் தமிழில் சொன்னால் ‘கவலைப்படத் தகாதவை குறித்து நீ கவலையுறுகிறாய். ஆனால் ஞானியை போன்று பேசுகிறாய். இருப்பார்க்கோ, இல்லார்க்கோ துயருறார் ஞானியர்’ என்பதாகும். இந்த ஸ்லோகத்தை ஒரு சமன்பாடாகவே நம் ஆசிரியர் மரபு கொள்கிறது. இதன் முடிவுகள்: ஞானியர் துயருறுவதில்லை. ஏன்? அவர்களுக்கு ஞானம் உள்ள காரணத்தால். எனில் துயர் எதனால் வருகிறது? அஞ்ஞானத்தினால், அறியாமையினால். எனவே அறியாமையைப் போக்கினால் துயரம் நீங்கும். எதைப் பற்றிய அறியாமை? என்னுடைய உண்மையான தன்மை, இந்த உலகத்தின் (உற்றார், உறவினர் எல்லாம் சேர்த்து) உண்மையான தன்மை, மற்றும் இவ்வுலகைப் படைத்த இறைவனின் (அப்படி ஒருவன் இருந்தால்) தன்மை இவற்றைக் குறித்த அறியாமை. இவை நீங்கினால் ஒருவனுக்கு துயரம் என்பது அறவே நீங்கும் என்று ஆரம்பிக்கிறது கீதை. இது ஆரம்பம்தான். ஸ்ரவண, மனன, நிதித்யாசனங்களில் திளைத்திருக்கிறேன் என்கிறாள் அம்மா. இது வேதாந்தக் கல்வி அடிப்படை. ஒரு மாணவன் முதலில் கற்றறிந்த ஆசிரியரிடம் பாடம் கேட்க வேண்டும் - இது ஸ்ரவணம். பின் கற்றது குறித்த சந்தேகம் தெளிய வேண்டும் - மனனம். பின்னர் நிற்க அதற்குத் தக - நிதித்யாசனம். இதைத்தான் அம்மா குறிப்பிடுகிறாள். ஈஸாவாஸ்யம் இதம் சர்வம் - இங்கிருப்பதெல்லாம் இறையே. இது ஈஸாவாஸ்யோபனிஷத்தின் முதல் மந்திரம் (உபனிஷதங்கள் மற்றும் வேதங்கள் கேட்கப்பட்டதால் ஸ்ருதி எனப்படும். இவை அனைத்தும் மந்திரங்களாலானவை. கீதை மற்றும் பிற படைப்புகள் மனித எண்ணங்களில் உருவானதால் ஸ்ம்ருதி (நினைக்கப்பட்டது) எனப்படும். இவை ஸ்லோகங்களால் ஆனவை. ஈஸாவாஸ்யம் என்பதை இங்கிருப்பதனைத்தையும் இறைவனின் எண்ணத்தால் மூடப்பட வேண்டும் என்றும் புரிந்து கொள்ளலாம். முன்னர் சொன்னது பரம உண்மை. பின்னர் சொன்னது சாதகன் பின்பற்ற வேண்டிய பயிற்சி. ஸ்திதப்ரஞன் என்ற சொல்லுக்கு புத்தியில் நிலை பெற்றவன் என்று பொருள். ஞானிக்கு இன்னொரு பெயர். இரண்டாவது அத்தியாயத்தில் உபதேசம் முடிவடைகிறது. பின் அர்ஜூனன் கண்ணனிடம் ‘ஒரு ஸ்திதப்ரஞன் எவ்வாறு நடப்பான், பேசுவான், அமருவான்’ என்றெல்லாம் வினவுகிறான். நமக்கும் ஒரு ஞானி எப்படி இருப்பான் என்றறிந்து கொள்ள ஆவல் இருக்கும்தானே! அதற்குப் பதிலாக கண்ணன், ‘ஒரு ஸ்திதப்ரஞன் உண்டாலும், உறங்கினாலும், விழித்திருந்தாலும், எது செய்தாலும் புலன்கள் பொறிகளில் போகின்றன என்றறிந்து வாளாவிருப்பான் என்று சொல்கிறார். அப்படித்தான் கிரிகோரி இருக்கிறார். அம்மாவும். நீங்கள் தத்துவத்துக்கு எடுத்த குறிப்புகளில் கொஞ்சம் நானும் கொடுத்திருக்கிறேன் போல. எழுத ஆரம்பித்து நிறுத்த முடியாமல் எழுதி விட்டேன். பொறுத்தருள்க. இயற்கை குறித்த வர்ணனை எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. இன்னும் கொஞ்சம் கூட எழுதியிருக்கலாம், சொற்கட்டுப்பாடு இல்லையெனில். இக்கதையில் தத்துவம் கொஞ்சம் துரித கதியில் சொல்லப்பட்டு, ஒரு கட்டுரைத் தன்மையை உருவாக்கி விட்டதோ என்று எனக்குத் தோன்றிக் கொண்டே இருந்தது. சவுந்தர் அண்ணா அதையே சொன்னார். இது உங்கள் எண்ணத்தை அறிய விழைகிறேன். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு முழுக்க முழுக்க தத்துவத்தையே புனைவில் எழுதினாலும் எழுதுவேன் என்று தோன்றுகிறது. அப்போது நிறைய பேருக்கு அது உவப்பை அளிக்காது போகலாம். விரிவாக வாசிப்பனுவத்தைத் தந்ததற்கு நன்றி, பாலாஜி. என் படைப்புச் செயல்பாட்டுக்கு உங்கள் கூர்மையான பார்வை எப்போதும் மிக அணுக்கமாகவே இருந்து வந்துள்ளது. அன்புடன் ஜெகதீஷ் குமார்

இதில் பிரசாரத் தொனி இருக்கிறதா? தத்துவம் குறித்த வர்ணனைகள் கட்டுரைத்தன்மையுடன் உள்ளனவா? இதில் நிச்சயம் பிரச்சாரத் தொனி இல்லை. கதை நிகழும் சூழல், பயணம், இயற்கை, கிரிகோரியின் இயல்பு என இதிலுள்ள வேதாந்த கருத்துக்களை இயல்பாக மூடி வைக்கும் அம்சங்கள் நிறையவே உள்ளன. விருப்பமிருப்பவர்கள் அந்த சொற்களுக்கான அர்த்தங்களைத் தேடிக் கண்டடைவார்கள், நான் அதைச் செய்தேன். அது இல்லையெனினும், கதை அதிலுள்ள எளிய கூறல் வழியாக ஸ்திரமாக நிற்கிறது. இதில் கட்டுரைத்தன்மை உள்ளதா? எனக்கு அப்படித் தோன்றவில்லை, அன்னை அவளுடைய இயல்பு காரணமாக தன் பெண்ணின் நிலையைப் புரிந்துகொள்ள வேதாந்தம் குறித்த சில வார்த்தைகளை உதிர்க்கிறாள். இப்படி வைத்துக்கொள்ளலாம், நீங்கள் கூறிய பிறகுதான் இந்த அம்சங்களை எண்ணிப் பார்த்தேன், அதற்கு முன் எனக்கு அந்தக் கேள்விகளே எழவில்லை, அது நிச்சயம் நான் கூறுவதையே உணர்த்துகிறது அல்லவா? உங்களுடைய விரிவான விளக்கங்களை வாசித்தேன், இப்போதைக்கு இவற்றை மனதுக்குள் சேகரித்து வைத்துக்கொள்கிறேன். நான் தொடர்ச்சியாக கற்றலில் இருந்தால், இவை என்னுள் இன்னும் விரிவாக வளரும், அதற்கு நன்றி. அன்புடன் பாலாஜிராஜூ

மீண்டும் நன்றி பாலாஜி. ஆம், முதலில் வாசிக்கையில் உங்களுக்குத் தோன்றவில்லையெனில் அப்படி இல்லை என்றுதான் அர்த்தம். இருந்தாலும் நான் உங்களிடம் என் ஐயத்தை வெளிப்படுத்தி அறிந்து கொள்ள விரும்பினேன். நானும் கதையின் சூழலுக்குள்தான் தத்துவத்தைப் பொதித்து வைத்திருப்பதாக திடமாக நம்பினேன். என் கதைத் தொழில் நுட்பத்தில் எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனாலும் மனதோரம் ஒரு சிறு அரிப்பு. அது இப்போது தீர்ந்தது. இனி நான் நிம்மதியாக இருப்பேன்.

அன்புடன்
ஜெகதீஷ் குமார்


வெங்கட்டின் “தழலின் தீண்டல்”



“தழலின் தீண்டல்”

அன்புள்ள வெங்கட்,

இந்த ஆண்டு நான் வாசித்த கதைகளிலேயே மிகச்சிறந்த கதையாக “தழலின் தீண்டலை”த்தான் சொல்வேன். இப்படி ஒரு அற்புதமான கதையை நான் வாசிக்கக் கொடுத்ததற்காகவே நன்றி. எனக்கு உடனே என்ன சொல்வதென்று தெரியவில்லை. மாமா, கிரி, கதைசொல்லி, தாத்தா, பரஞ்சோதி, ஜப்பான் என்ற பாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு விருப்பம், தேடல். அவை கதை முழுக்கப் பின்னிப்பிணைந்து அந்தக் “கருப்பனை”ப் போலவே கதையெங்கும் நெளிந்து கொண்டிருக்கின்றன. கதையை நிறுத்தி நிதானமாக, ஆழமாகக் கொண்டு சென்றிருக்கிறீர்கள். உங்கள் மொழி கதை நிகழ்வுகளை அப்படியே காட்சிப் படம் போலக் காட்டிக் கொண்டே செல்கிறது. உங்கள் மொழி வாசிக்க வாசிக்கச் சுகமாக இருந்தது. ஒவ்வொரு இடத்திலும், நிகழ்விலும், அவை குறித்த உங்களது விஸ்தாரமான விவரணை கதையின் அடர்த்தியைக் கூட்டிக் கொண்டே செல்கிறது. இப்படித்தான் கதை எழுதப்பட வேண்டும் என் விருப்பமும். நான் சற்றே வேகமாக எழுதிக்கொண்டிருக்கிறேனோ என்று என்னை எண்ண வைத்து விட்டது உங்கள் கதை. கதையின் ஒவ்வொரு தருணமும் புனைவுப்பரப்பில் உயிர் கொண்டு எழுகிறது. கிட்டத்தட்ட உங்கள் புனைவுலகத்தில் உள்ள பொருட்களையெல்லாம் தொட்டு விட முடியும் என்பது போல, அந்த மனிதர்கள் வாசனையைக் கூட அறிந்து விட முடியும் என்பது போல.

உங்களது பல கதைகளில் கதை சொல்லல் என்ற தன்மை மிக நேர்த்தியாகவும், லாவகமாகப் பின்னப்பட்டும் அமைந்திருப்பதைக் கண்டிருக்கிறேன். அவை இப்போது நினைவில்லாத காரணத்தால், தழலில் தீண்டல்தான் உங்கள் கதை சொல்லும் திறனின் உச்சம் என்று சொல்லத் தோன்றுகிறது. உரையாடல்கள் மூலமாக கதையை நகர்த்திச் செல்வதையும், பாத்திரங்கள் குணாம்சங்களை வெளிக்கொணர்வதையும் நீங்கள் மிகத் திறமையாகச் செய்திருப்பதைக் கண்டபோது எனக்குள் உவகை பொங்கியது. அப்படி உரையாடல்களைக் கையாளுவதாலேயே, விவரணைகளை விரிவாகக் கையாளுவதற்குக் கதையில் நிறைய இடம் இருந்திருக்கிறது. அவ்விடங்களை நீங்கள் மிக அழகாகக் கையாண்டிருக்கிறீர்கள்.

இந்தக் கதை எனக்கு ஏன் இவ்வளவு பிடித்திருக்கிறது என்பதைத்தான் எதையெதையோ சொல்லி விளக்கிக் கொண்டிருக்கிறேன். மொத்தத்தில் கதை ஒரு உயிருள்ள ஜீவனாகத் துடித்துக் கொண்டிருக்கிறது. நுண்ணுணர்வுள்ள யாரும், நேரத்தையும், இதயத்தையும் கொடுத்து வாசித்தால் இந்தக் கதையின் அருமையை உணர்ந்து கொள்வார்கள்.

முதுமையின், பழமையின் புறக்கணிப்பு, அல்லது அது அகற்றப்பட வேண்டியது என்ற பொதுவான கண்ணோட்டம் கதைக்குள் வெளிப்படுகிறது. நூறு வருடம் பழைய மரத்தை மறுமுறை எண்ணாமல் அகற்றி விடுகிறார்கள். எண்பது வயதான கிழவியும், தாத்தாவும் ஓர் மூலையில் இருப்பு தெரியாமல் இருந்து கொண்டிருக்கிறார்கள். கேசவனுக்குள் எல்லாரையும்போல நீடித்து உயிர்வாழும் ஆசை இருக்கிறது. மரணத்தைக் கண்டு அச்சம். தோப்புத் தேங்காய்கள் தலை மீது விழும் அச்சம், கோயில் நாகம் தீண்டும் அச்சம். மரணபயம், அதே நேரம் உடல் மூப்பு கொண்டு நெடுநாள் வாழ நேரிட்டால் அந்த உளுத்துப்போன உடலுடன் எங்கனம் வாழ்வது என்ற அவனது குழப்பம் கலந்த அச்சம் எல்லாமே அழகாக வெளிப்பட்டிருக்கின்றன. கருப்பன் என்ற பாம்பை அவனது அச்சங்களின் குறியீடாகவே காண்கிறேன். 

கதையை வாசித்து விட்டு, அது தந்த அனுபவம் அழுத்த அமர்ந்திருந்தேன். நான் இன்னும் அடைய வேண்டிய தூரத்தை இக்கதை எனக்குக் காட்டியிருக்கிறது. மிகையாகச் சொல்லவில்லை - தமிழிலக்கியத்தில் எழுதப்பட்ட மிகச் சிறந்த கதைகளில் ஒன்று இது. என் பொறுப்பை எனக்கு உணர்த்திய கதை. கதை பல்வேறு வியாக்கியானங்களுக்கு இடமளிக்கிறது. அதே நேரம் ஓர் அனுபவமாக வாசகனுக்குள் ஊடுருவிச் செல்கிறது. இதற்காகத்தானே இலக்கியம் படைக்கப்படுகிறது? 

உங்கள் கதையளவுக்கே அதை விதந்தோத நிறைய இருக்கிறது. ஆனால் எனக்கு கதை விமர்சனம் அவ்வளவாக வருவதில்லை. ‘அனுபவிக்கனும், ஆராயக்கூடாது’ வகையைச் சேர்ந்தவன் நான்.

வாழ்த்துக்கள் வெங்கட். மேலும், நன்றி!


நிர்மலின் “மத்த யானையின் ஈருரி”


 

அன்புள்ள நிர்மல்,

மத்த யானையின் ஈருரி வாசித்தேன். ஒரு அனுபவமாக கதை மிக நன்றாக வந்திருக்கிறது. சம்பவங்கள் ஒன்றையொன்று தொடர்ந்து கதையின் உச்சத்துக்கு இயல்பாகக் கொண்டு செல்கின்றன. கதையின் மொழி எளிமையாக இருந்தது. லலிதா மற்றும் பரந்தபன் என்ற தம்பதியர் இடையே நடைபெறும் விவாகரத்து உரையாடல், ஒரு சாதாரண குடும்பக் கலகமாக அல்ல; அது இருவரின் வாழ்க்கைத் தத்துவங்களின் மோதலாகவும், காதலின் சிதைவு மற்றும் தனிமையின் வெளிப்பாடாகவும் உருவெடுக்கிறது. சின்னச் சின்ன உடல் மொழிகள், பார்வை மாற்றங்கள், உணவின் சுவை குறித்த உளவியல் விளக்கங்கள்—இவை அனைத்தும் கதையின் உணர்வுப் பரப்பை விரிவாக்குகின்றன. பரந்தபனின் குழப்பம், கோபம், தன்னிலை உணர்வு எல்லாம் மிக அழகாக விவரிக்கப்பட்டிருக்கின்றது. பாத்திரங்கள் - லலிதா, பரந்தபன், சேமி, மார்க், அனிமேஷ், படேல் என்று அனைவருமே மனதில் நிற்கின்றன. 

எனக்கு முடிவு சற்று குழப்பமாக இருந்தது. பரந்தபன் தனக்குத்தான் யானையின் மதம் பிடித்திருக்கிறது என்று உணர்ந்து கொள்கிறானா? சேமியின் டிரக்கை அடமானத்தில் இருந்து எடுத்ததனால் அந்த மாற்றம் அவனுள் வந்ததா? இதை நான் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறேனா என்று தெரியவில்லை. ஆனால் கதை வாசிக்க நன்றாக இருந்தது.

சில அவதானிப்புகள்: 

அலைபேசியா, தொலைபேசியா? அலைபேசி செல்ஃபோனுக்கும், தொலைபேசி டெலிஃபோனுக்கும் பொதுவாக குறிப்பிடப்படுகிறது. நான் செல்பேசி என்றே எழுதுவேன். செல்லுலரைத் தமிழ்ப்படுத்த வேண்டியதில்லை என்பது என் தரப்பு. 

மூவாயிரம் ரூபாய் கூலி. அமெரிக்காவில் ரூபாயில் பணம் வாங்குகிறானா?

எல்லாரையும் அழைக்கும் பரந்தபன், அனிமஷை மட்டும் அழைக்காமல் அவன் வீட்டுக்கே செல்கிறான்? அப்புறம் வெளியில் இருந்தபடியே ஏன் அழைக்கிறான்?

யானை குறித்த விபரங்கள் கதை நெடுக்க வருகிறது. இந்தக் கதை யாருடைய பார்வையில் சொல்லப்படுகிறது? பரந்தபன் பார்வையில் என்று யூகிக்கிறேன். அப்படி எனில் அவனுக்கு தமிழிலக்கிய ஆர்வம் உண்டா? தன் மனத்தின் கொந்தளிப்புகளை யானை குறித்த உவமைகள் மூலம் அவனாலேயே பார்க்க முடிந்தால் அவன் மனதில் மாற்றம் ஏன் முன்னமே நிகழ்ந்திருக்கக் கூடாது?

இதெல்லாம் ஒரு வாசகனாக எனக்குள் எழுந்த ஐயங்கள். இவற்றை இப்படி அமைத்ததற்கு உங்களுக்கேயான காரணங்கள் இருக்குமென்பதை மறுப்பதற்கில்லை. இருப்பினும் வெறும் புகழ்மொழிகளை மட்டும் நீங்கள் விரும்ப மாட்டீர்கள் என்றறிந்ததால் என் கண்ணில் பட்டதையும் சொன்னேன்.

வாழ்த்துக்கள் நிர்மல்.

திருஞானசம்பந்தர் தேவாரத்திலிருந்து தலைப்பு கதைக்கு அழகூட்டுகிறது.

1. மூவாயிரம் ரூபாய் கூலி. அமெரிக்காவில் ரூபாயில் பணம் வாங்குகிறானா?

> இன்றைக்கு வேலை முடிக்க வேண்டும். மூவாயிரம் ரூபாய் வரும். 

இந்த வரி பரந்தபன் சொல்வதாக வருகின்றது. இந்தியர்கள் டாலரை ரூபாய் என சொல்வார்கள். இந்தப் பழக்கத்தினை என்னிடத்திலும், என் நண்பர்களிடத்திலும், அலுவலகத்திலும் கண்டுள்ளேன்,.

2.அலைபேசியா, தொலைபேசியா? அலைபேசி செல்ஃபோனுக்கும், தொலைபேசி டெலிஃபோனுக்கும் பொதுவாக குறிப்பிடப்படுகிறது. நான் செல்பேசி என்றே எழுதுவேன். செல்லுலரைத் தமிழ்ப்படுத்த வேண்டியதில்லை என்பது என் தரப்பு. 

 மாற்றிக் கொள்கின்றேன். இனி அலைபேசி பயன்படுத்துகின்றேன். 

3.எல்லாரையும் அழைக்கும் பரந்தபன், அனிமஷை மட்டும் அழைக்காமல் அவன் வீட்டுக்கே செல்கிறான்? 

இதற்கான காரணம் கதையில் சொல்லப்பட்டுள்ளது.

> *“எங்கே போவது? யாராவது என்னைத் தேடுவார்களா?அம்மா இருந்தால் தேடுவாள். அவளும் இல்லை. லலிதா ஒரு காலத்தில் தேடுவாள். இப்போது….” வாகனம் நகர, அவன் எண்ணங்களும் நகர்ந்தன. கண்கள் கலங்கின.அழ விரும்பவில்லை; கட்டுப்படுத்தினான்.

> “லலிதாவை முதலில் எங்கே பார்த்தேன்? அனிமேஷ் வீட்டில்… அனிமேஷ்  என் நண்பன். அவன் என்னை ஏற்றான். எத்தனை வருடப் பழக்கம்! அவன் பழக்கத்தால்தான் லலிதாவை சென்னையில் அவன் வீட்டில்தான் பார்த்தேன். உஷா, லலிதாவின் தூரத்து சொந்தம். ஏதாவது சொல்லுவாளோ?”

> சாலையில் அத்தனை வாகனங்களுக்கு மத்தியில் தனிமையை உணர்ந்தான்.

> “அவள் ஏதாவது சொன்னாலும், அனிமேஷ் என்னுடன் வருவான். வந்தே தீர வேண்டும்; வராமல் இருக்கக் கூடாது. கடவுளே,அவனை வரச் சொல்… வராமல் இருக்கக் கூடாது.”

> மனதில் ஒரு கனம் எழுந்தது. அந்தக் கனம் உடலுக்கேறி, உடல் சோர்ந்தது. வாகனத்தை அனிமேஷ் வீடு நோக்கித் திருப்பினான்*

4.அப்புறம் வெளியில் இருந்தபடியே ஏன் அழைக்கிறான்?

இதற்கான காரணம் கதையில் சொல்லப்பட்டுள்ளது.

> “அனிமேஷ் வீட்டில்தான் இருக்கிறான். தொலைபேசியில் அழைத்து விட்டு வந்திருக்க வேண்டும். என்ன நம்பிக்கையில் அழைக்காமல் வந்தேன்? வெளியில் எங்குப் போகலாம்? அவனுக்கு வேலை இல்லாமல் இருக்குமா? பிளம்பிங் வேலைக்கு போகவேண்டுமெனச் சொல்வானோ?”

> முடிவு செய்ததும் அவனை அழைத்தான். அழைத்தவுடன் முதல் ரிங்கிலேயே அனிமேஷ் எடுத்தான்.

5. யானை குறித்த விபரங்கள் கதை நெடுக்க வருகிறது. இந்தக் கதை யாருடைய பார்வையில் சொல்லப்படுகிறது? பரந்தபன் பார்வையில் என்று யூகிக்கிறேன். அப்படி எனில் அவனுக்கு தமிழிலக்கிய ஆர்வம் உண்டா? தன் மனத்தின் கொந்தளிப்புகளை யானை குறித்த உவமைகள் மூலம் அவனாலேயே பார்க்க முடிந்தால் அவன் மனதில் மாற்றம் ஏன் முன்னமே நிகழ்ந்திருக்கக் கூடாது?

யானை வர்ணனை கதை எழுதுபவரின் குரலாக பரந்தபனின் உளநிலையை விளக்க சொல்லப்படுகின்றது. பரந்தபனின் அகக்குரல் இல்லை.

5.இருப்பினும் வெறும் புகழ்மொழிகளை மட்டும் நீங்கள் விரும்ப மாட்டீர்கள் என்றறிந்ததால் என் கண்ணில் பட்டதையும் சொன்னேன்.

அவசியம் சொல்லுங்கள். அது எனக்கு பேரூதவியாக இருக்கின்றது.

6.இந்தக் கதை யாருடைய பார்வையில் சொல்லப்படுகிறது?

கதை பரந்தபனின் தன்னிலையில் செல்லவில்லை. கதை சொல்லியின் பார்வையில் உள்ளது. பரந்தபனுக்கு அருகே இருந்து சொல்லப்படுகின்றது.

7.பரந்தபன் தனக்குத்தான் யானையின் மதம் பிடித்திருக்கிறது என்று உணர்ந்து கொள்கிறானா?

பரந்தபன் கீழ் கண்டவாறு உணர்கின்றான். அதை கதை ஆசிரியரின் குரலில்  “மதம் கொண்ட யானையின் கனத்த தோலென இருந்த இருள் அவனுள் இருந்து உரிந்துகொண்டிருந்தது.”  எனக் காட்சிப் படுத்துகின்றது.

> “இப்படி இருப்பது எனக்குப் பிடித்துள்ளது…ஏன் இப்படி இருக்கிறேன்?”


17 நவம்பர், 2025

வானப்ரஸ்தம் - சிறுகதை



காருக்குள் ஏறி அமர்ந்ததும் சம்யுக்தாவுக்கு முதலில் தோன்றிய விஷயம், அடுத்த பதினோரு மணி நேரத்துக்கு தன்னுடன் பயணிக்கப் போகும் அம்மா என்னவெல்லாம் பேசப்போகிறாள் என்பதுதான். வண்டியைத் துவக்கிவிட்டு, பக்கவாட்டில் திரும்பி அவளைப் பார்த்துப் புன்னகைத்தாள். அம்மா சம்பங்கி நிறச் சேலையும், நெற்றியில் விபூதியும், கூந்தலில் மல்லிகையும் அணிந்து பாந்தமாக அமர்ந்திருந்தாள். முகத்தில் எப்போதும் தவழும் புன்னகையில் பூரித்த கன்னங்கள் மின்னின. தலை நரையைக் கணக்கில் கொள்ளாவிடில் அக்கா என்று சொன்னால் நம்பிவிடுவார்கள்.

“என் பொண்ணு கார் ஓட்டறாள்ங்கறதை நினைத்தால் எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா?” என்றாள் அம்மா.

“தேவையான மருந்தெல்லாம் எடுத்துட்டியா? ஒரு வாரம் ஆசிரமத்துல இருக்கப்போறே. பக்கத்துல மருந்துக்கடையெல்லாம் இருக்கோ என்னமோ.”

“அதெல்லாம் எடுத்துட்டேன். அங்கிருந்து பத்து மைல்ல விண்ட்கேப்புன்னு ஒரு சின்ன ஊர். அங்க எல்லா கடையும் இருக்கு. நெட்ல பார்த்தேன். எதாவது வேணும்னா நீ போய் வாங்கிட்டு வர மாட்டியா என்ன?”

கார் அபார்ட்மெண்ட் வளாகத்தைத் தாண்டி, விட்ச்மென் தெருவுக்குள் நுழைந்து, மாகாணங்களை இணைக்கும் ஐ-95 சாலைக்குள் நுழையும் வரை அம்மா வேறு எதுவும் பேசவில்லை. சம்யுக்தா காரை தானியக்க மோடில் போட்டு விட்டு இருக்கையில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்தபோது அம்மா கேட்டாள். “சம்யு, நான் ஒன்னு சொல்லட்டுமா?”

“அம்மா, கல்யாணம் பத்தி தயவு செஞ்சு பேச வேண்டாம்.”

அம்மா சிரித்தாள். “நான் எதுக்குடி உங்கிட்ட அது பத்தி பேசப்போறேன்? உனக்கு என்ன விருப்பமோ அதுமாதிரி பண்ணிக்கோ.”

சம்யுக்தாவுக்கு வியப்பாக இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இப்படி அம்மா சொல்லியிருப்பாளா? ஒருவேளை அப்பா இல்லாமல் ரொம்பவும் விடுதலையாக உணர்கிறாளோ? அல்லது எல்லாரையும் விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டிருக்கிறாளா? தன்னுடைய யூகம் சரிதானா?

வெயிலேறி விண்ட்ஷீல்டின் வழியே நெஞ்சைச் சுட்டது. மூன்று வழிச்சாலையில் கார்களும், டிரக்குகளும் ஒரே திசை நோக்கி விரைந்து கொண்டிருந்தன. அவற்றின் இரைச்சல் காதுகளில் ரீங்கரித்தபடியே இருந்தது. அம்மாவின் பூவாசத்தையும் மீறி வெளியிலிருந்து மெலிதான டீசல் வாசம்.

“நீயும் இந்த உபநிஷத் வகுப்பில கலந்துக்கலாமில்லையா?” என்றாள் அம்மா.

“அம்மா, இந்தப் ப்ராஜக்ட் இன்னும் ஒரு மாதத்துல முடியுது. நான் வேலை செய்தே ஆகணும். அங்க வைஃபை கிடைக்கும்னு நீ சொன்னதாலதான் நான் உன் கூடவே தங்க ஒத்துகிட்டேன். ஏன், தனியா கலந்துக்கறதுக்கு கூச்சமா இருக்கா?”

அம்மா சிரித்தாள். “கூச்சமா? எனக்கா? அச்சம், தயக்கம் இவைகளிலிருந்து நான் எப்போதோ விடுதலை அடைந்து விட்டேன்,” என்றாள் ஆங்கிலத்தில். அம்மாவிடமிருந்து இன்னொரு ஆச்சரியம். கோயம்புத்தூரில் இருந்தவரை சம்யுக்தா அவள் ஆங்கிலம் பேசிக் கேட்டதேயில்லை. 

அம்மா தொடர்ந்தாள். “நான் அடைந்த விடுதலைக்கான வாய்ப்பு உனக்கும் உண்டு, சம்யுக்தா. அதை நீயும் பற்றிக்கொள்ள வேண்டுமென்றுதான் ஆசைப்படுகிறேன்.”

“என்ன சொல்லப் போகிறாய்? உன்னை மாதிரி கீதையும், உபநிஷத்தும் கற்க வேண்டுமென்றா?” என்றாள் அவளும், ஆங்கிலத்தில். சொன்னபிறகு துணுக்குற்றாள். ‘உனக்கு வயதாகிக் கொண்டே போகிறது. அப்பா இல்லாமல் தனிமையில் வாழ்கிறாய். உனக்கு வேண்டுமானால் இந்த சாஸ்திர படிப்பு சரியாக இருக்கலாம். நான் வாழ்வை துடிப்புடன் வாழ்பவள். எனக்கு எதற்கு இந்த வெற்று வேதாந்தம்?’ என்பதான தொனி அந்தக் கேள்வியில் இருந்ததை உணர்ந்தாள்.

“அதுக்கெல்லாம் நேரம் இல்லைம்மா. இந்த ப்ராஜக்ட் முடிந்ததும் அடுத்த கம்பெனி அமைவதற்காகப் போராட வேண்டும். அடுத்த வருடம் விசா புதுப்பிக்க வேண்டியிருக்கிறது. கிரீன்கார்டுக்கு விண்ணப்பிக்கலாமா, வேண்டாமா என்று இரட்டை மனதாக இருக்கிறது.” 

“அசோச்யான் அன்வ சோசஷ்த்வம்,” என்றாள் அம்மா.

“ம்?”

“ஒண்ணுமில்லை. கீதா வாக்யம்.”

 * * *

இரண்டு மாதங்களுக்கு முன் அலைபேசியின் மறுமுனையில் வேறு குரல் கேட்டபோதே சம்யுக்தாவுக்கு வியப்பாக இருந்தது. இந்தியாவில் அப்போது காலை ஏழு மணி. இந்த நேரத்தில் அம்மா என்ன செய்து கொண்டிருக்கிறாள்? “ஓ, சந்தான லட்சுமியா? அவ இப்ப கிளாஸ்ல இருக்காளே. இதோ இப்ப வரச் சொல்றேன்,” என்றது அந்தக் குரல். அம்மா அலைபேசி வைத்துக் கொள்வதில்லை. அப்பா இருந்தபோதிலிருந்து அப்படித்தான். இப்போது முதியோர் இல்லத் தொலைபேசிக்கு அழைத்துதான் அவளிடம் பேச வேண்டும். அப்பா போய் மூன்றே மாதங்களில் முதியோர் இல்லம் ஒன்றில் அவளை இணைத்து விடச் சொல்லி அம்மாவே கேட்டுக் கொண்டாள். அமெரிக்காவில் இருந்து தான் திரும்பி வந்து விடுவதாகச் சொன்னதை அவள் ஏற்கவில்லை.  சம்யுக்தா முதலில் தயங்கினாலும் பின்னர் அவளுக்கும் அந்த முடிவே சரியென்று பட்டது. அதற்குப் பிறகுதான் அம்மாவிடம் மாற்றங்களைக் காணத்துவங்கினாள். 

அலைபேசியில் அம்மாவின் உற்சாகமான குரலைக் கேட்டதும் சம்யுக்தாவின் மனதில் அந்த மெல்லிய கவலை மீண்டும் தொற்றிக் கொண்டது. “வாரம் ஒருமுறை கீதை வகுப்பு. சுவாமிஜி சொல்றத அப்படியே குறிப்பெடுக்கறது, அதைச் சரிபார்க்கறதுன்னு பொழுது போறதே தெரியலை. ஸ்ரவண, மனன, நிதித்யாசனத்துல வாழ்க்கை அழகா ஓடுது. என்னைப் பத்தி நீ ஏன் கவலைப்படறே?” என்பாள். சம்யுக்தா அமெரிக்கா போன புதிதில் அம்மா மிகுந்த பதற்றத்தோடேயிருந்தாள். “பார்த்து பத்திரமா இருந்துக்கடி. உங்க அப்பா பிடிவாதத்துனாலதான் உன்னை அங்க அனுப்ப சம்மதிச்சேன். உன்னை அங்க விட்டுட்டு எனக்கு மனசே ஓட மாட்டேங்குது,” என்பாள். ஆனால் இப்போது அவளது கவலைகள் அடியோடு பறந்து விட்டன போலிருந்தது. “ஆறு எங்க போகணுமோ அங்கதானே போயிட்டுருக்கு. நம்ம வேலை ஒழுங்கா படகை ஓட்டுறதுதான்,” என்பாள். ஒவ்வொரு அழைப்பிலும் அவளிடம் ஏற்பட்டிருந்த மாற்றங்களை கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்தபடியே இருந்தாள் சம்யுக்தா. பேச்சில் இரண்டு நிமிடத்துக்கொருமுறை, சுவாமிஜியோ, பகவானோ, பகவத்கீதையோ மேற்கோள்களாக வந்து விழும். ஆன்மிகவாதிகளுக்கு அடிமையாகும் கும்பலில் அம்மாவும் ஒருத்தியாகி விட்டாளோ என்று தோன்றியது அவளுக்கு. 

ஆரம்பத்தில், ஒருவேளை அப்பாவுடன் வாழ்ந்தபோது இருந்த குடும்ப பாரம் இறங்கி விட்டதால்தான் இவ்வளவு இலகுவாகி விட்டாள் என்று   நினைத்திருந்தாள். ஆனால் நாள் செல்லச் செல்ல உரையாடல்களில் அவள் காட்டிய உற்சாகம், அவள் நடவடிக்கைகளில் ஏற்பட்டிருந்த துள்ளலும், துடிப்பும் வழக்கத்துக்குச் சற்று அதீதமாக இருந்ததாகப் பட்டது. எதெற்கெடுத்தாலும் பெருத்த சப்தத்தோடு அவள் சிரித்தது வினோதமாக இருந்தது. முதியோர் இல்லக் காப்பாளரிடம் கேட்டபோது, உணவருந்துவதற்கும், கீதை வகுப்புகளில் கலந்து கொள்வதற்கும் தவிர அவள் அறையை விட்டுப் பெரும்பாலும் வெளியே வருவதில்லை என்று சொன்னார். ஒருமுறை முதியோர் இல்லத்தில் இருந்து அம்மாவின் சினேகிதி விஜயராணி அழைத்திருந்தாள். “ என்னடி, உங்கம்மா வேப்பமரத்தடியில் மணிக்கணக்கில உட்கார்ந்திருக்கா! ஒரு வார்த்தைப் பேச்சில்லை. நான் போய் பக்கத்துல உட்கார்ந்ததை கண்டுக்கவேயில்லை. அப்படியே வெற்றுப்பார்வைப் பார்த்துட்டு உட்கார்ந்திருக்கா. முகத்தில புன்னகை மட்டும் மாறாம அப்படியே இருக்கு.”

ஒரு வேளை தன் அம்மாவுக்கு மெல்ல மெல்ல மனநிலை பிறழ்ந்து கொண்டிருக்கிறதோ என்ற ஐயம் தோன்றியது சம்யுக்தாவுக்கு. “அம்மா உலகின் மீதான பிடிப்பை மெல்ல மெல்ல இழந்துகொண்டிருக்கிறாளோ என்று அச்சமாக இருக்கிறது, நித்யா,” என்றாள் தன் அறைத்தோழியிடம். “நீ ஏன் உன் அம்மாவை இங்கு அழைத்துக் கொண்டு வரக்கூடாது? உனக்கும் அவர்களோடு நேரம் செலவழிக்க முடியும். அவர்களுக்கும் இடமாற்றம் ஆறுதலையும், புத்துணர்ச்சியையும் தரலாம் அல்லவா!”  என்று ஆலோசனை சொன்னாள் நித்யா.

அம்மாவைக் கூட்டி வந்து சில மாதங்கள் தன்னுடன் வைத்துக் கொள்ளலாமா என்று யோசித்தாள் சம்யுக்தா. அவர்கள் தங்கியிருந்த அபார்ட்மெண்ட் குடியிருப்பின் வெளியில் திரியும் வீடற்றவர்களான சில ஆஃப்ரோ அமெரிக்கர்களை நினைவு கூர்ந்தாள். ஒரு நாள் வேலையிலிருந்து காரில் திரும்பும்போது குடியிருப்புக்கு அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலில் நின்றிருந்தாள். அப்போது அவர்களில் ஒருவன் அவள் காரை நோக்கி வேகமாக வந்து சன்னல் கண்ணாடியைத் தட்டி காசு கேட்டான். “கேன் யு ஸ்பேர் எ டாலர் ஃபார் யுவர் ப்ரதர்?” நெஞ்சில் அறையும் உரத்த குரல். அன்று அவள் இதயத்தில் ஏற்பட்ட அதிர்வு அவளுக்கு இன்னமும் நினைவிருக்கிறது. 

அவர்களது அபார்ட்மெண்ட் குடியிருப்பின் வெளிக்கதவு இயங்குவது நின்று வெகு நாளாயிற்று. அது இருபத்துநாலு மணி நேரமும்  திறந்தே கிடந்தது. ஒருமுறை ஒரு வீடற்ற கருப்பன் குடியிருப்புக்குள் நுழைந்து யாரோ ஒருவருடைய அபார்ட்மெண்ட் கதவைத் தடதடவென்று தட்டி விட்டு ஓடி விட்டான். தன் கதவு எப்போது தட்டப்படுமோ என்று பயந்தபடியே இருந்தாள் சம்யுக்தா. இந்த மாதிரி சூழ்நிலையில் இங்கு வந்து வாழ அம்மா விரும்புவாளா? மேலும் இங்கு அவள் பழகுவதற்காக இந்தியர்களும் யாரும் வசிக்கவில்லை. இந்தியர்களைக் காண வேண்டுமெனில் சார்ல்ஸ்டன் கோயிலுக்குச் சென்றால்தான் உண்டு. அம்மா இப்போதிருக்கும் நிலையில் வேறு வினையே வேண்டாம். 

அந்தக் கோடையில் அவளுக்கு இரு வார விடுமுறை வரும். அப்போது நண்பர்களுடன் மயாமி கடற்கரை செல்லலாம் என்று திட்டமிட்டிருந்தாள். அம்மாவையும் அமெரிக்கா வரவழைத்து ஃப்ளோரிடா கூட்டிச் சென்று டிஸ்னிவோர்ல்ட், நாசா போன்ற இடங்களை சுற்றிக் காட்டினால் என்ன என்று தோன்றியது அவளுக்கு.

அமெரிக்கா வந்திறங்கிய மறுநாளே அம்மா சொன்னாள். “பென்ஸில்வேனியாவில் அக்ஷரவித்யா குருகுலம் இருக்கிறது. அங்கு ஒரு வார உபநிஷத் வகுப்பு. அதற்கு என்னைக் கூட்டிப் போவாயா?”

“அமெரிக்கா வந்து உண்மையான அமெரிக்க வாழ்க்கையை சுத்திப் பாக்காம, இங்கேயும் அதே வேதாந்த புராணமா?” என்றாள் சம்யுக்தா.

“வெறும் கட்டிடங்களையும், பொழுதுபோக்கு நிகழ்வுகளையும் காண்பதில் எனக்கு ஆர்வமில்லை,” என்றாள் அம்மா.

நான் வீட்டிலேயே இருந்து கொள்கிறேன், நீ வேண்டுமானால் சுற்றுலா சென்று வா என்றாள் அம்மா. சம்யுக்தா சற்றே எரிச்சலடைந்தாள். ஆனாலும் வேறு வழியின்றி நித்யாவையும், நண்பர்களையும் ஃப்ளோரிடா போகச் சொல்லி விட்டு, அம்மா சொன்ன வகுப்புக்கு முன்பதிவு செய்தாள். எடுத்திருந்த விடுப்பை ரத்து செய்து வீட்டிலிருந்து பணிசெய்வதற்கு அனுமதி வாங்கிக் கொண்டாள். குருகுலம் பென்ஸில்வேனியாவின் பொகோனோ மலைத்தொடர்களில் அமைந்திருப்பதாக இணையம் சொன்னது. அவள் இதுவரை மலைப்பாதையில் கார் ஓட்டியதில்லை.

“எனக்கு இதிலெல்லாம் கொஞ்சம் கூட விருப்பமேயில்லை. உன் கூட கொஞ்சநாள் இருக்க முடியும்கறதுக்காகத்தான் வர்றேன்,” என்றாள்.

“ஏன் விருப்பமில்லை?”

“இவையெல்லாம் பழைய சாஸ்திரங்கள். மாணவர்களைத் தங்களுடைய ஆதிக்கத்துலயே வைச்சுக்கறதுக்காக ஆன்மிகத் தலைவர்கள் பயன்படுத்தும் கருவிகள்.”

“அப்படி எந்த புத்தகத்துல போட்டிருக்கு?”

“ம்மா! எனக்குன்னு சொந்த புத்தி இருக்கு.”

“அதைப் பயன்படுத்தினால் வீடுபேறு அடைய முடியும்னுதான் உபநிஷத் சொல்லுது.”

அதற்குமேல் அம்மாவிடம் அவள் வாதாட விரும்பவில்லை. வெற்று வாக்கியங்களோடு போராடிக் கொண்டிருப்பதால்தான் அவள் தன் அறைக்குள்ளேயே சிறைப்பட்டுக் கிடப்பதாகத் தோன்றியது சம்யுக்தாவுக்கு.

* * *

“என்னடி ரோடு நீளமா ஒரே மாதிரி போயிட்டிருக்கு? காரும், டிரக்குமா ஒரே இரைச்சல். இப்படியேதான் முழுப்பயணமும் இருக்குமா?”

சம்யுக்தா ஆர்வமானாள். “அம்மா, பேக் ரோடில் போலாமா? மலைப்பாதை வழியா இரண்டு பக்கமும் காடும், வயல்வெளிகளுமா இருக்கும்.”

அம்மா உற்சாகமாகத் தலையாட்டினாள். சம்யுக்தா அடுத்த எக்ஸிட்டில் காரை வெளியேற்றி பின்பக்கச் சாலைகளுக்குள் நுழைந்தாள்.

வண்டி ஒரு மலைக்கிராமத்தில் நுழைந்திருந்தது. நெடிதுயர்ந்த மரங்களுடன் கூடிய அடர்வனம் ஒருபுறம். கச்சிதமாக வெட்டப்பட்ட புல்வெளிகளும், சிறு முகடுகளின் சிகரத்தில் பதிக்கப்பட்ட சிறுசிறு மரவீடுகளும் மறுபுறம். வாகன இரைச்சல்கள் தேய்ந்து விட்டன. அதை ஒரு பறவையின் கூச்சல் பதிலீடு செய்திருந்தது. அது கூட ஒரு வினாடி கழித்து மலைக்காற்றில் கரைந்து விட்டது. பச்சைக்கம்பளத்தில் உருளும் கருப்பு ரத்தினங்கள் மாதிரி வயல்வெளியில் ஆங்காங்கே மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. பிரம்மாண்ட உருளைகளாய் அறுவடை செய்த வைக்கோற்புற்கள் சுருட்டி வைக்கப்பட்டிருந்தன. மலைப்பாதையில் ஜூலை மாதத்து சூரியனின் உக்கிரம் சற்று தணிந்திருந்ததாகப் பட்டது. சம்யுக்தா சாளரக் கண்ணாடியைக் கீழிறக்கினாள். சிலுசிலுவென்று மலைக்காற்று உள்ளே புகுந்தது. சம்யுக்தாவின் புறங்கைகளில் மயிர்க்கால்கள் எழுந்து நின்றன. இடதுபுறம் இருந்த பைன் மரச்செறிவிலிருந்து நாசியைத் துளைக்கும் இனிய மணம் எழுந்தது. சம்யுக்தாவின் இதழ்களில் அவளறியாமல் ஒரு புன்னகை பூத்தது.

ஒரு பதினைந்து நிமிட பயணத்துக்குப் பிறகு ஜிபிஎஸ்ஸின் சொல்படி ஒரு குறுகிய சாலையில் வண்டியைத் திருப்பினாள். சட்டென்று வயல்களும், வீடுகளும் மறைந்து இரு புறமும் மரங்கள் அடர்ந்த காட்டுப்பாதை குறுகலாகவும், வளைந்தும் நெளிந்தும் சென்று கொண்டிருந்தது. வந்த வழியே திரும்பலாமா என்று ஒரு கணம் யோசித்தாள். ஆனால் சுழற்சாலைகளில் காரை வளைத்துத் திருப்பிச் செல்லும் சாகசம் பிடித்திருந்தது. திரும்பி அம்மாவைப் பார்த்தாள். அவள் முகத்தில் எப்போதும் மாறாதிருந்த புன்னகை மேலும் மலர்ந்திருந்தது. காரைப் புதிய உற்சாகத்துடன் செலுத்தினாள்.

சில நிமிடங்கள் கழித்துதான் கவனித்தாள். அவளது அலைபேசியில் ஜிபிஎஸ் உறைந்திருந்தது. சிக்னல் சுத்தமாகக் கிடைக்கவில்லை. சம்யுக்தாவுக்கு சற்றே வயிறு கலங்கி எதுக்களித்துக் கொண்டு வந்தது. இப்போது மலைகளினூடே செல்லும் மண்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். இருபுறமும் அலையலையாக, மடிந்து கிடந்தன மலைகள். திறந்திருந்த சன்னலினூடாக ஒற்றைப் பறவையின் கேவலொன்று அவர்களை வந்தடைந்தது. அம்மாவின் முகத்தில் சின்ன இருள் படர்ந்திருப்பதைப் பார்த்தாள்.

“வாந்தி வர்ற மாதிரி இருக்குடி.”

காரை மலைப்பாதையின் ஓரமாக நிறுத்தினாள். அம்மா இறங்கி சாலையைக் கடந்து எதிர்ப்பக்கம் போனாள். அந்தப்புறம் புல்வெளி ஒரு மெல்லிய சரிவாகக் கீழறங்கியது. அங்கிருந்து இறங்கி நடந்து காட்டுக்குள் போய் விட முடியும் என்பது போல. அம்மா முந்தானையை இடுப்பில் இறுக்கிக் கொண்டு புல்வெளியில் அமர்ந்தாள். சம்யுக்தா காரைப் பூட்டி விட்டு அவளை நோக்கிச் சென்றாள். அலைபேசியை உயர்த்தி, உயர்த்திப் பிடித்து அலைவரிசை கிடைக்கிறதா என்று பார்த்தபடியே நடந்தாள். அம்மாவின் அருகில் அமர்ந்தாள். அங்கே இருந்த மனித ஜீவன்கள் அவர்கள் இரண்டு பேர்தான். அவர்களைத் தவிர அங்கிருந்த உயிர்கள் மரங்களும், காட்டுச்செடிகளும், கொடிகளும்தான் என்று அவளுக்குத் தோன்றியது.

அம்மா மூச்சை இழுத்து மலைக்காற்றால் நுரையீரலை நிரப்பினாள். “இப்ப பரவாயில்லடி,” என்றாள்.

சம்யுக்தாவுக்கும் நெஞ்சு எதுக்களித்தது சற்றே சமநிலைக்கு வந்த மாதிரி இருந்தது.

 “அங்கே பார். சட்டென்று பார்த்தால் இந்த மலைகள், இந்த வானம், மரம் செடி கொடிகள், என் இந்த உடல் எல்லாமே என்னால் நிறைந்திருப்பதாகவே தோன்றுகிறது. இதைத்தானே ஈஸாவாஸ்யம் இதம் சர்வம் என்று உபநிஷத் சொல்கிறது!”

“சரியான பாதையில்தான் போய்ட்டிருக்கமான்னு சந்தேகமா இருக்கும்மா,” என்றாள் சம்யுக்தா, அலைபேசியிலிருந்து கண்களை எடுக்காமலேயே.

சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்தார்கள். பக்கவாட்டில் திரும்பி அம்மாவின் தலைக்குப் பின்னால் மடிந்து கிடந்த மலைத்தொடர்களைப் பார்த்தாள். ஒவ்வொரு சுருளும், சலனமற்ற பச்சை அலைபோல, நிலத்தின் மீது மெதுவாக உருளும் பாம்பைப் போல தோன்றியது.  இருபுறமும் உயர்ந்து, பின்னால் மறைந்து, மீண்டும் தோன்றும் அந்த மடிப்புகள், இயற்கையின் ஒரு மௌன இசைக்கோவையைப் போல இருந்தன. அம்மா அந்த இசையில் கரைந்தவளைப் போல அமர்ந்திருந்தாள். மலைக்காற்று அவர்களைத் தழுவிக் கொண்டிருந்தது. ஈரமண்ணும், மட்கும் இலைகளும் கலந்த மெல்லிய வாசனை. வெயில் சற்றும் உறைக்கவில்லை. பக்கத்திலிருந்த மேப்பிள் மரத்தின் கிளைகளினூடே சூரிய ஒளி ஊடுருவி அதன் இலைகளைப் பொன்னிறத்தில் ஒளிரச் செய்து கொண்டிருந்தது. தொலைதூரத்தில் ஏதோ ஒரு மலையிலிருந்து பறவையின் கூக்குரல் எழுந்து எதிரொலித்தது. 

அம்மா அப்படியே இயற்கைக்குள் மூழ்கி விட்டது போலிருந்தது. 

சம்யுக்தாவுக்கு வழி தவறி வந்திருக்கிறோமோ என்ற பதற்றம் அடங்கவேயில்லை. அப்போது பின்னாலிருந்து ஏதோ அசையும் சப்தம் கேட்டது.

சம்யுக்தாவுக்கு நெஞ்சில் ஏதோ நிரடியது. மெல்லத் தலையைத் திருப்பினாள். பக்கவாட்டுப் பார்வையில் அவளுக்கு நான்கடி தள்ளி ஒரு கரிய உருவம் நின்றிருப்பது தெரிந்தது. அது ஒரு கரடி.

மெல்லக் கையை நீட்டி அம்மாவின் தொடையைத் தொட்டு கவனத்தை ஈர்த்தாள். அம்மா திரும்பிப் பார்த்த பார்வையில் எந்த அதிர்ச்சியும் தென்படவில்லை. ஒருவேளை அது கரடி இல்லையோ? இப்போது சம்யுக்தா நன்றாகத் திரும்பினாள். அது கரடியேதான். இரண்டடி உயரத்தில், மினுமினுக்கும் கருப்பு உடலுடன் நான்கு கால்களில் நின்று கொண்டிருந்தது. முகத்தில் வெள்ளைத் தீற்று. அதன் நாசியிலிருந்து நீர் கசிந்து கொண்டிருந்தது. கரடிக்கு நேர் எதிர்ப்புறத்தில் அவளது கார் நின்று கொண்டிருந்தது.

தயங்கித் தயங்கி எழுந்தாள். அம்மாவின் கையை இறுகப்பிடித்தாள். அம்மா உறைந்து போனதைப் போல அமர்ந்திருந்தாள். கையை இழுத்து அவளை எழச் செய்தாள். 

முணுமுணுப்பாகச் சொன்னாள். “அம்மா, நட.”

மெல்லத் திரும்பி பள்ளம் நோக்கி எதிர்த்திசையில் நடந்தார்கள். அம்மா விருப்பமில்லாது அவளோடு நடந்ததைப் போலிருந்தது. கரடி கொஞ்ச நேரம் அங்கேயே நின்று பார்த்து விட்டு வந்த திசையே சென்று விடும் என்று நம்பினாள் சம்யுக்தா. அதன் பின் அவர்கள் திரும்பிச் சென்று காரில் ஏறிக்கொள்ள முடியும். நடந்தபடியே மெல்லத் தலை திருப்பிப் பார்த்தபோது கரடியும் இவர்களை நோக்கி அசைந்து, அசைந்து வந்து கொண்டிருந்தது. சம்யுக்தாவுக்கு வயிற்றில் மெல்லிய நடுக்கம் உண்டாயிற்று. “அது நம்ம பக்கமா வருதும்மா,” என்றாள்.

அம்மாவின் முகத்தில் அவளால் எந்த உணர்ச்சியையும் படிக்க முடியவில்லை. அவளுடன் அப்போது பேச முடியும் என்று சம்யுக்தாவுக்குத் தோன்றவில்லை. அவளது நடையில் சிறு தள்ளாட்டம் புலப்பட்டது.  கண்களில் அயர்ச்சி. மூச்சு மெல்லிய ‘விர்’ ஒலியுடன் வந்து கொண்டிருந்தது. விரைவில் அவளுக்கு எதையாவது உண்ணக் கொடுக்க வேண்டும். இந்தக் காட்டுக்குள் எதாவது பழமரங்கள் தென்படுமா? அத்தனைக் களைப்பிலும் அவள் முகத்தில் எப்போதிருக்கும் அந்தத் தெளிவு மாறவே இல்லை. எங்கே செல்லப்போகிறோம் என்று அறிந்தவளைப் போல உறுதியான அடிகள் வைத்து நடந்தபடியே இருந்தாள். அவர்களைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த கரடியின் கால்தடங்களின் உணர்வு பின் கழுத்தில் குறுகுறுவென்று ஓடியபடியே இருந்தது. அம்மாவுக்கும் அந்தக் குறுகுறுப்பு இருக்குமா என்று ஐயமாக இருந்தது சம்யுக்தாவுக்கு.

புல்வெளி முடிந்து காட்டுப்பாதை துவங்கியிருந்தது. நீண்டு வளர்ந்திருந்த செடிகொடிகளைக் கைகளால் விலக்கியபடி, விழுந்து கிடந்த மரக்கிளைகளைத் தாண்டியபடி நடந்தார்கள். கரடிக்கும் அவர்களுக்குமிடையேயான தொலைவு குறைந்ததை அறிந்து வேகத்தை அதிகரித்தாள். மீண்டும் திரும்பிய போது, கரடியும் வேகத்தை அதிகரித்திருந்தது தெரிந்தது. எந்த நேரமும் கரடி அவர்கள் மீது பாய்ந்து விடக்கூடும் என்று எண்ணியபோது சம்யுக்தாவுக்குக் கால்கள் உதற ஆரம்பித்தன. “இப்ப என்னம்மா பண்றது?”

அம்மா தலைதிருப்பி அவளைப் பார்த்து களைப்பாகப் புன்னகைத்தாள். “அப்படியே கொஞ்ச நேரம் நிப்போம். அது என்ன பண்ணுதுன்னு பார்ப்போம்,” என்றாள்.

“இல்லை, எனக்குப் பயமா இருக்கு.”

“சரி, அப்ப நடப்போம்.” நடந்தபடியே இருந்தார்கள். அம்மா முகத்தில் வியர்வை பூத்திருப்பதைக் கவனித்தாள். அவள் முகத்தில் அச்சம் இல்லை, ஆனால் பிடித்திருந்த கையில் மெல்லிய நடுக்கத்தை உணர்ந்தாள். அவள் மருந்து உட்கொள்ளும் நேரம் தாண்டியிருந்தது. திடீரென்று அம்மா மயங்கி விழுந்து விடுவாளோ என்று பயந்தாள். 

அவள் பயந்தமாதிரியே அம்மாவின் நடை தளர்ந்து கொண்டே வந்தது. ஆனால் உறுதியோடு மகளோடு நடந்து கொண்டிருந்தாள்.

காட்டுப்பாதை ஒரு சிறிய தடாகத்தருகில் கொண்டு விட்டது. அருகில் மரங்கள் அற்ற வெற்று நிலம்.  தடாகத்தருகில் சிறுபாறை ஒன்றின் மீது ஆறடி உயரத்தில், கருத்த உடலும், விழுதுகள் போன்று தொங்கும் சடைமுடியுமாக ஒரு மனிதர் அமர்ந்திருந்தார். பழுப்பு நிறத்தில் முரட்டுத் துணியாலான சட்டையும் கால்சராயும், மலையேறும் பூட்ஸூகளும் அணிந்திருந்தார். அவருக்கு அருகில் ஓர் இரட்டைக் குழல் துப்பாக்கி பாறை மீது சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. இருவரும் அவரை நோக்கி விரைந்து போனார்கள். அவர் இவர்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த கரடியைக் கண்டு விட்டார். ஓர் ஓரமாகத் தள்ளி நிற்குமாறு இவர்களிடம் சைகை செய்தார்.

“தயவு செய்து சுட்டு விடாதீர்கள்,” என்றாள் அம்மா. 

அவர் துப்பாக்கியில் கைவைக்கவேயில்லை. மெல்ல எழுந்து தன் கால்சராயிலிருந்து ஓர் உலோகக் குப்பியை எடுத்து தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த கரடியின் மீது பீய்ச்சினார். 

மூன்றடி தூரத்திலிருந்தாலும் அவர் பீய்ச்சிய மருந்து கரடியில் முகத்தில் சரியாகத் தெளித்தது. உடனே கரடி அந்த இடத்திலேயே நின்று உடலைச் சிலிர்த்துக் கொண்டது. பெரும் ஒலியுடன் மூன்று முறை தும்மியது. மீண்டும் ஒரு முறை உடலைக் குலுக்கியபின் திரும்பி எதிர்த்திசையில் ஓடியது.

“ஹலோ, என் பெயர் கிரிகோரி ராபின்சன்,” என்றபடி இவர்களை நோக்கிக் கையை நீட்டினார். சம்யுக்தா அச்சத்துடன் மெல்லப் பின்வாங்கினாள். அம்மா பலவீனமாகப் புன்னகைத்தபடி கை நீட்டினாள். “சந்தான லட்சுமி. இது என் மகள் சம்யுக்தா,” என்றாள்.

“வழி தவறி விட்டீர்கள் என்று நினைக்கிறேன் எங்கிருந்து வருகிறீர்கள் என்று சொல்லுங்கள். நான் அழைத்துச் செல்கிறேன்,” என்றார்.

அம்மா தளர்ந்து பாறை மேல் கையூன்றி அமர்ந்தாள். “இல்லை. நாங்களே திரும்பிப் போய்க் கொள்கிறோம்,” என்றாள் சம்யுக்தா.

“உங்களிடம் சாப்பிட ஏதாவது கிடைக்குமா? மிகக் களைப்பாக இருக்கிறது,” என்றாள் அம்மா. சம்யுக்தா அம்மாவை முறைத்தாள்.

“என் வீடு இங்குதான் இருக்கிறது. வாருங்கள், நான் சமைத்த உணவை உங்களுக்கு அளிக்கிறேன்,” என்றார். 

அங்கிருந்து நூறடி நடந்தவுடனேயே மரச்செறிவின் நடுவில் அவர் வீடு இருந்தது. அது ஒரு டிரைலர் வீடு. ஒரு படுக்கையறை, ஒரு குளியலறை, ஒரு வரவேற்பறை என்று மிகக் குறுகலான இடமாக இருந்தது. அம்மா உள்ளே சென்றவுடன் உரிமையோடு அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டாள். சம்யுக்தா தயங்கியபடி சுவரோரம் நின்று கொண்டிருந்தாள். அங்கிருந்து உடனே கிளம்பி விட வேண்டும் என்று ஓர் எச்சரிக்கைக் குரல் தீனமாக அவளுக்குள் ஒலித்தபடியிருந்தது. 

கிரிகோரி இருவருக்கும் அவர் சமைத்த இறைச்சி கலந்த சோற்றை தட்டுக்களில் பரிமாறி அளித்தார். சம்யுக்தா வேண்டாமென்று மறுத்து விட்டாள். அம்மா இறைச்சி உண்பதில்லை. அவள் மறுப்பதற்காகக் காத்திருந்தாள். அவளோ ஆர்வத்துடன் தட்டை வாங்கி, இறைச்சித் துண்டங்களை நகர்த்தி வைத்துவிட்டு சோற்றை ஆர்வத்துடன் உண்ண ஆரம்பித்து விட்டாள்.

“கரடியைக் கண்டு பயந்து விட்டீர்களா?” என்றார் கிரிகோரி.

“அம்மா அப்படியே உறைந்து நின்று விட்டாள். நான்தான் சுதாரித்துக் கொண்டு அவளை அங்கிருந்து அழைத்துச் சென்றேன்,” என்றாள் சம்யுக்தா.

“சொல்லப்போனால் உங்கள் தாய் செய்ததுதான் சரி. காட்டில் கரடியைக் கண்டால் பதறாமல் சில நிமிடங்கள் அங்கேயே நின்றாலே போதும். கரடி தானாகவே விலகிப் போய்விட வாய்ப்பிருக்கிறது.”

“அப்படி விலகவில்லையென்றால்…”

கிரிகோரி சிரித்தார். “உண்மைதான். நீங்கள் அதனிடமிருந்து மெதுவாக விலகுவதும் ஒரு உத்திதான். ஆனால் பதற்றப்பட்டு ஓடினால் ஒருவேளை அது உங்கள் மீது பாய்ந்து விடக்கூடும்.” 

“கிரிகோரி, உங்கள் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லுங்கள். இங்கே எப்படி வாழ்கிறீர்கள்? உங்கள் குடும்பம் எங்கே?” என்றாள் அம்மா.

“நான் இங்கு வந்து பத்து ஆண்டுகளாகிறது. என் மனைவியின் இறப்புக்குப் பிறகு,” என்றார் கிரிகோரி. 

“வாழ்க்கை எப்படிச் செல்லுகிறது?”

“ம், எனக்கென்ன குறை? என் வீட்டின் பின்னால் உருளைக்கிழங்கும், முட்டைக்கோஸும் பயிரிடுகிறேன். இறைச்சி தேவையாயிருக்கும்போது காட்டுக்குள் சென்று மானையோ, பறவைகளையோ சுட்டு எடுத்து வருவேன். கண்ணை மூடினால் உறக்கம். கண்ணைத் திறந்தால் கானகம். என் மனதுக்கு நெருக்கமான உலகம். இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது. மூச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. எதுவும் என் கையில் இல்லை. எதையும் நான் செய்வதில்லை. அதனால் எந்தக் கவலையும் இல்லை,” என்றார் கிரிகோரி.

“நீர் ஒரு ஸ்திதப்ரஞன்,” என்றாள் அம்மா.

“அப்படியென்றால்?”

“புத்தியில் நிலைபெற்றவன். தத்துவம் அறிந்த யோகி நடந்தாலும், உண்டாலும், உறங்கினாலும், விழித்திருந்தாலும் தான் எதுவும் செய்வதில்லை, பொறிகள்தான் புலன்களில் போகின்றன என்றறிந்து வாழ்வைக் கடத்துவான் என்று கீதை சொல்கிறது.”

கிரிகோரி வாய்விட்டுச் சிரித்தார். “நான் யோகியா என்று தெரியவில்லை. ஆனால் நீங்கள் சொல்வது கேட்க நன்றாக இருக்கிறது.”

அம்மா உடனே வேதாந்த ஆசிரியையாக மாறி விளக்க ஆரம்பித்து விட்டாள். “கீதை என்பது ஒரு வேதாந்த நூல். மனித வாழ்வின் உச்சபட்ச சாத்தியம் தன்னை அறிதலே என்று வேதாந்தம் சொல்கிறது. தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை. தன்னை அறிந்தவனுக்கு கவலைகள் ஏதுமில்லை. அதற்கான பாதையைத்தான் கீதை காட்டுகிறது. செய்யும் செயல்களை பற்றற்றுச் செய்தல் கர்மயோகம் எனப்படுகிறது. கர்மயோகம் செய்தவனுக்கு மனத்தூய்மை வாய்க்கிறது. மனத்தூய்மை அடைந்தவன் தன்னை அறியும் தகுதி பெறுகிறான். தன்னை அறிந்தவனுக்கு அதற்கப்புறம் செய்வதற்கு வேறேதும் இல்லை. ஆனந்தமாக மீதமிருக்கும் வாழ்க்கையைக் கழிக்க வேண்டியதுதான், உங்களைப்போல,” என்றாள்.

“இல்லையில்லை, உங்களைப் போல,” என்று அம்மாவை நோக்கிக் கைகாட்டிச் சிரித்தார் கிரிகோரி.

அம்மாவும் கை தட்டிச் சிரித்தாள். “ஞானியும் இப்படித்தான் காரணமில்லாமல் சிரித்துக் கொண்டே இருப்பான். அவனுக்கும் பைத்தியக்காரனுக்கும் மேலோட்டமாகப் பார்த்தால் வேறுபாடு புரியாது,” என்றாள் அம்மா.

அம்மா ஆர்வத்துடன் பொழிந்து கொண்டேயிருந்தாள். கிரிகோரி பரவசத்துடன் கேட்டுக் கொண்டே இருந்தார்.

சம்யுக்தா அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தாள். தலைக்கு மேல் மெல்லிய மஞ்சள் ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்த சாண்டலியரின் வெளிச்சத்தில் தேவதையைப் போல் இருந்தாள் அம்மா.

“வாருங்கள், இருட்டுவதற்குள் உங்களைக் கொண்டு போய் விட்டு விடுகிறேன்,” என்றார் கிரிகோரி.

கிரிகோரி தன்னுடைய ஜீப்பில் அவர்களை கார் நிற்குமிடத்துக்குக் கொண்டு வந்து சேர்த்தார். அம்மா அவரிடம் கைகூப்பி விடைபெற்று காருக்குள் ஏறிக்கொண்டாள். கிரிகோரி சம்யுக்தாவிடம் மலைப்பாதையின் வரைபடம் ஒன்றை அளித்தார்.  சம்யுக்தா கண்களில் நன்றியோடு அவரைப் பார்த்தாள்.

“உன் தாய் சொன்ன நிறைய விஷயங்கள் எனக்குப் புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது. யுவர் மதர் இஸ் எ செயிண்ட்,” என்றார்.

அவர் சென்றதும் காருக்குள் ஏறி அம்மாவைப் பார்த்து புன்னகைத்தபடி சம்யுக்தா சொன்னாள். “அவர் வீட்டில வைஃபை கிடைச்சது. திரும்பவும் லீவு போட்டுட்டேன். நானும் உன்னோட வகுப்பில கலந்துக்கப் போறேன்.”

“பார்றா! அது இருக்கட்டும். நான் அமெரிக்க வாழ்க்கையைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டியே, இப்ப பார்த்தாச்சா?” என்று கேட்டாள் அம்மா.


​​​​​​​​முடிந்தது.

நன்றி: தினமணி தீபாவளி மலர் 2025


மேலும் வாசிக்க