ஒவ்வொரு துளியும் அமுதம்

 நன்றி கவிதைகள் இணைய இதழ்



இயற்கையைப் பாடாத கவிஞர் இல்லை. அதன் இடைவெளியற்ற களி நடனம், கணந்தோறும் அது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் உன்னதமான பேரிசை ஆகியன அவர்களை உவகைக்குள்ளாக்கிக் கொண்டே இருக்கின்றன. அவ்வுவகையிலிருந்து பெருகுகின்றன கவிதைகள். ஆனால் தூய உயிராக இயற்கையை அணுகி அறிதல் என்பது, இப்பேரிருப்பின் ஓர் அங்கமெனவே தன்னை உணர்ந்த, அல்லது தன்னுள்ளேயே இவ்விருப்பின் துடிப்பை உணர்ந்த ஓர் உள்ளத்தால் மட்டுமே சாத்தியமானதாகும். சில வேளைகளில் பேரிருப்பின் நடனத்தை மட்டும் காண வாய்க்கும் சிலருக்கு, எந்த மகத்தான இசைக்கு இந்த ஒத்திசைவின் நடனம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை அறிய இயலாமல் போய்விடுகிறது. அவ்விசையை அனுபவிக்க முடியாதபடி புலன்களுக்கெட்டாத ஒரு கண்ணாடிச் சுவர் தடுத்துக் கொண்டு இருக்கிறது. எந்தச் செவிகளையும் எட்டாமலேயே இந்த உன்னத இசை வியர்த்தமாகிக் கொண்டிருக்கிறதே என்ற ஆதங்கத்தில் புலம்புகிறான் கவிஞன். ஆனால் அவ்விசையைச் செவி வழி நுகரும் வழி அவன் அறிவான். புலன்களின் விழிப்பும், உள்ளத்தின் அமைதியுமே இயற்கையை அதன் முழுமையில் தரிசிக்கத் தேவையான தகுதிகள். பிறர் முட்டி மோதியும் தகர்க்க முடியாத அந்தக் கண்ணாடிச் சுவர், உள்ளத்தின் பேரமைதியில் புலன்கள் விழித்துக் கொண்ட ஒருவனின் தொடுகைக்கு நொறுங்கி விடுகிறது. பிறகென்ன? இசை வெள்ளம் பெருகி எல்லாவற்றையும் மூழ்கடித்து விடுகிறது. சுவர் உடையும் அந்த மாயத்தருணத்தை தன் எளிய கவிமொழியில் சிறைபிடித்து, பிரபஞ்சத்தின் ரகசியத்தை நமக்கு இக்கவிதையில் அளித்திருக்கிறார் கவிஞர்.



ஒற்றை மரம்


ஒரு மேற்கத்திய இசை நடத்துநனைப் போல்

உணர்ச்சியுடன் கைகளை அசைத்து அசைத்து

உருகிக்கொண்டிருந்தது தனித்த வேப்பமரம் ஒன்று


வாத்ய கோஷ்டி ஏதும் எதிரே இல்லை!


வியர்த்தம் வியர்த்தம் எனக் கரைந்தது

அதன் கிளைகளூடே ஒரு காகம்


ஆச்சர்யத்துடன் அந்த மரத்தை நெருங்கினேன்

அது எழுப்ப விரும்பும் இசையைக்

கேட்க விரும்பியவன் போல் –


தன்னுள்ளே ஏராளமான வாத்யங்களுடன்

தானே இசைத்துக்கொண்டுமிருந்தது அது!


அந்த இசையைத்தான்

இன்னும் என் செவிகள் எட்டவில்லை

காரணம்?

புலன்களுக்கெட்டாத ஒரு கண்ணாடிச் சுவர்!

ஆயினும் என் மனம் குதூகலித்தது

நான் கேளாத அந்த இசைக்கு

அந்த மரத்தின் உறுப்புக்கள் அனைத்தும்

நடனமாடிக் கொண்டிருந்ததைக் கண்டு


திடீரென்று ஓர் அமைதி,

அந்தக் கண்ணாடிச் சுவரின் தொடுகை

அதை உடைத்துக்கொண்டு ஒரு வெள்ளம்

என் செவியையே மூழ்கடித்து

அடித்துச் சென்றுவிட்ட இசைவெள்ளம்


* * *

கவிஞர் தேவதேவனின் கவிதைகள் கவிமனம் கொண்ட வாசகரிடத்து நேரடியாகவே உரையாடுபவை. எளிமையான உருவம் என்ற சட்டகத்தை அணிந்தபடி, ஆனால் நுணுகிப்பார்க்கும் வாசகனுக்கு ஒரு கலைடாஸ்கோப் போல பலவிதங்களில் பொருள்களை அளித்துக் கொண்டே இருப்பவை. ஒவ்வொருவரும் அவரவர் மனத்தின் சூட்சுமத்தன்மைக்கேற்ப தேவதேவன் கவிதைகளின் பல்வேறு தளங்களுக்குள் நுழைந்து அனுபவிக்க முடியும். பின்வரும் கவிதை அவ்வகையைச் சார்ந்தது. இக்கவிதை எனக்கென அளித்த பிரத்யேக அனுபவத்தையே நான் இங்கு பகிர விழைகிறேன். வேறொரு வாசகர் இக்கவிதையை வேறொரு வகையிலும் அனுபவிக்க இடமிருக்கிறது.

  ஞானியர் கூற்றுப்படி இப்பிரபஞ்சம் ஒரு தோற்றமே. மாயை என்று அதை  அழைப்பர். இந்தப் பிரபஞ்சத்தின் இருப்புக்கு (அல்லது இருப்பதுபோல அது காட்டும் தோற்றத்துக்கு) மூலம், இருப்பெனவும், உணர்வெனவும் சதா உள் நின்று அறிந்து கொண்டிருக்கும் ‘நான்’ எனும் அந்த நிலையே. நானே இங்கிருப்பவை அனைத்துக்கும் மூலகாரணம் என்று அறிந்து எல்லாத் தளைகளிருந்தும் விடுபட்டவனே ஞானி. நான் எனும் அந்த இருப்பின் ஒவ்வொரு துளியிலும் ஊறும் ஆனந்தத்தைப் பருகியபடி திளைப்பவன் அவன். அந்த நிலையை அடைய கவி நமக்கு விடுக்கும் அறைகூவலே இக்கவிதை.

முழுக்க முழுக்க படிமங்களால், உருவகங்களால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது கவிதை. உள்ளங்கைகளின் பாதுகாப்பில் வரும் சுடர் என, ஒரு குடம் தண்ணீரை ஏந்தி அலைகளில் அசைந்து வரும் படகு என்பது மிகுந்த மனவெழுச்சி தரும் படிமம். குடத்தின் ஒவ்வொரு துளி நீரும் அமுதம். அது மிதந்து வருவதோ பாலை நடுவில் உள்ள கடலின் மீது.  கடல் என்பது ஒரு தோற்றம் மட்டுமே. நான், எனது என்ற பற்று காரணமாகவே, பதற்றம் மிகுந்து,  உண்மைப் பொருளாய் ஒளிர்விடும் குடத்து நீர்,  மாயத்தோற்றமென எங்கும் நிறைந்திருக்கும் கடல் நீருடன் கலந்து விடுகிறது. மாயையுடன் நான் எனும் உண்மைப்பொருளைக் கலந்து விடுவதே எல்லாவற்றையும் இழந்து விடுவதற்குச் சமம். அதுவே சகல துயரங்களுக்கும் காரணம். அவற்றிலிருந்து விடுபடுதல் எங்கனம்?  தன்னையே ஒரு சூரிய அடுப்பாக மாற்றிக்கொள்வதன் இழந்தவற்றை மீட்டுவிட முடியுமா? அல்லது அந்த தண்ணீர்க் குடமாகவே தன்னை உணர்வதன் மூலம் துயரங்களிலிருந்து விடுபட முடியுமா? இதன் விடை அறிந்தவர்களுக்கு வினாக்களே அற்றுப் போய்விடுகின்றன. பின் குடத்தின் நீரே கடலையும் சமைத்திருக்கிறது என்று அறிந்து, அன்பின் இடையறாத முத்தங்களை அனுபவிக்க முடிகிறது.


அன்பின் முத்தம்

பார்த்திருக்கிறாயா?

பாலை நடுவே ஒரு கடலை?

அங்கே

உள்ளங் கைகளின் பாதுகாப்பில் வரும்

சுடராக, ஒரு குடம் தண்ணீரை, ஏந்தியபடி

அலைகளிலே அசைந்து வரும் படகை?


பருகியிருக்கிறாயா,

பருகும் ஒவ்வொரு துளி நீரிலும்

உள்ளதாம் அன்பின் முத்தம்?


கலங்கியிருக்கிறாயா என்றாவது,

எனக்கு எனக்கு எனப் பதறும் கைகளால்

குடம் நீர் கவிழ்ந்து

கடல் நீரோடு கலந்துவிட்டதைக் கண்டு?


பருகு நீர், பறவைகள், பூ, மரம், காடு

பொங்கும் குழந்தைமை – எங்கே? எங்கே?

தவிதவித்திருக்கிறாயா,

சூர்ய அடுப்பாக மாறி

இழந்ததையெல்லாம் மீட்பதற்கு?


இறுதியாக,

உன் துயரங்களினின்றும்

உயிர்த்தெழுந்திருக்கிறாயா,

தன்னந்தனியாய் அப்படகில் வரும்

அந்தத் தண்ணீர்க் குடமாக?


* * *


Comments

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை