25 ஜூலை, 2022

ஊனுடல் - சிறுகதை - சொல்வனம் இதழில்

 என் புதிய சிறுகதை ஊனுடல் சொல்வனம் 275 வது இதழில் வெளியாகியுள்ளது.

ஆசிரியர்கள் மைத்ரேயன் மற்றும் பாஸ்டன் பாலா ஆகியோருக்கு நன்றி.


கடல் மீது எழுந்து நின்றிருந்த நிலவின் மென்னொளியும், அதன் கரையில் அமைந்த குடிலின் கால்களில் செருகப்பட்டிருந்த  தீப்பந்தங்களின் ஒளியும் உணவுமேஜை மீது விழ,  ஒரு கணம் கண்ணிமைக்காமல் அதையே பார்த்து நின்றான் சங்கமேஸ்வரன். கிரில் செய்யப்பட்ட லோப்ஸ்டர், சோறும் கருதியாவும், வறுத்த டூனா துண்டங்கள், ரொட்டியும் மசூனியும், டெவில் செய்யப்பட்ட கோழிக்கறி, தொட்டுக் கொள்ள ரிஹாக்குரு, அப்பளம். குடிப்பதற்கு வைக்கப்பட்டிருந்த மதுவகையின் பெயர் ப்ளாக்பெர்ரி சங்கிரியா என்று நினைவு வந்தபோது சங்கமேஸ்வரனுக்குத் தன்மேலேயே வியப்பாக இருந்தது. வந்து ஒரு வாரத்தில் நிறையத்தான் கற்றிருக்கிறோம். அது சரி, ஒரு மனிதனால் இத்தனையும் ஒருவேளையில் உண்டு முடித்து விட முடியுமா என்று அவன் சிந்திக்க முற்படுகையில் மேஜையின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த மனிதர் அவனை அழைத்து சுய நினைவுக்குக் கொண்டு வந்தார்.

“ஹே, பாய், பிரிங் மி எ ஹைனிக்கன்!”

கதையை மேலும் வாசிக்க - ஊனுடல்

24 ஜூலை, 2022

பிறப்பொக்கும் - சிறுகதை - பதாகை இதழில்

 



பிறப்பொக்கும்

சிறுகதை

ஜெகதீஷ் குமார்

பெருமாள் கோவில் வீதிக்குள் சாமி ஊர்வலம் நுழைந்ததும் அவரவர் வீட்டு வாயில்களில் நின்றிருந்த தெரு மக்கள் எல்லாரும் கைகூப்பி சாமியையே நோக்கிக் கொண்டிருந்தனர். செந்தில் மட்டும் ஏறிட்டு பாட்டியின் முகத்தைப் பார்த்தான். அவள் உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன. தொங்கிப் போயிருந்த கன்னச் சதைகள் நடுங்க,  சுருங்கி வரி விழுந்த கண்களில் நீர் பெருகியிருந்தது. அவள் சாமியை நோக்கிக் கைகூப்பியிருக்கவில்லை. செந்தில் குழப்பமடைந்து, அவள் சேலை நுனியைப் பிடித்து மெல்ல இழுத்தான். பாட்டி இவனைக் கவனிக்காமல் தலைகுனிந்து அழுகையைத் தொடர்ந்தபடி இருந்தாள்.  அருகில் நின்றிருந்த லல்லி அம்மா அவள் தோள்களில் ஆறுதலாய்க் கை வைத்தாள்.

“ஏனுங்கம்மா, எதாச்சும் நெனச்சுகிட்டீங்களா?”

மேலும் வாசிக்க


16 ஜூலை, 2022

சு. வெங்கட்டின் தன்னறம் சிறுகதை குறித்து

 

சொல்வனம் இதழில் வெளிவந்த 'தன்னறம்' சிறுகதையை ஒட்டி நண்பர் சு. வெங்கட்டுக்கு எழுதிய கடிதம்.




அன்புள்ள வெங்கட்,

தன்னறம் கதையை வாசித்து விட்டேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கதைக்குள் முதல் வரியிலிருந்தே எந்த சிரமமுமில்லாமல் நுழைய முடிந்தது. சம்பவங்கள் அழகாக விரியும் விதமும், பின் கதைகளைப் பொருத்தமான இடத்தில் நீங்கள் வைத்திருந்த லாவகமும் உங்கள் எழுத்துத் திறமைக்குச் சான்று. முதல் பாராவில் வரும் உதவி என்றெழுதி அட்டையைத் தூக்கிக் கொண்டு நிற்கும் பெண்ணும், அவளருகில் புத்தகம் வாசிக்கும் சிறு பெண்ணும் வரும் சித்திரத்தின் முக்கியத்துவம் கதையின் முக்கால் பாகம் தாண்டியவுடன் உணர முடிந்தது. கதையின் மையத்தை, வேரை முதலிலேயே கோடி காட்டியிருக்கிறீர்கள். 

இக்கதையின் கரு தமிழ்க்கதைகளுக்குப் புதியதென்றே நினைக்கிறேன். ஒருவேளை அ.முத்துலிங்கம் இது போன்ற கதைகளை எழுதியிருக்கலாம். ஆனால் களமும், சொல்முறையும் புதிதாக இருக்கின்றன. முறையான விசா இல்லாமல் அமெரிக்காவில் குடியேறிப் பணிபுரியும் பல லட்சம்பேரின் வாழ்க்கை குறித்து அறிய இது ஒரு சாம்பிள். அமெரிக்கா என்றாலே கனவுதேசம் என்று நினைக்கும் பல தமிழருக்கு இக்கதை இந்த நாட்டின் உண்மையான ஒரு பக்கத்தைக் காட்டுகிறது. ஊர்வி, சில்வியா போன்ற பெண்களை நானும் கண்டிருக்கிறேன். அவர்கள் நிலையைக் கலையாக்கியது பாராட்டுக்குரியது.

அமரிந்தர், தேஜ்பால் என்ற நேர் எதிர் மனநிலை கொண்ட இரு பாத்திரங்கள். ஒருவர் மூலம் ஷான் வேலையும், மதிப்பும் பெறுகிறான். இன்னொருவரால் வேலையைத் துறக்கிறான். தேஜ்பாலின் பாத்திர வடிவமைப்பை அவனது ஓரிரு செயல்கள் மூலம் அழகாகக் குறிப்புணர்த்தியிருக்கிறீர்கள். அவனுக்கும், ஷானுக்கும் இசையிலான அந்த சூட்சுமமான யுத்தம் அறத்துக்கும், அதர்மத்துக்கும் இடையிலான சமர் என்றே எண்ண வைத்தது. சில்வியா வருவதற்கு முன்பே, ஷான் தேர்ந்தெடுத்த ஒரு நபரை தேஜ்பால் நிராகரிக்கிறான். இது சில்வியாவின் கதி என்ன ஆகும் என்று வாசகர் மனதில் பதட்டத்தை ஏற்படுத்துகிறது. இது பல சாதுர்யமான உத்திகளை கால வழுவமைதியோடு கையாண்டிருக்கிறீர்கள். உங்கள் மீது எனக்குச் சற்று பொறாமையாகக் கூட இருக்கிறது. 

தனது அறம் என்ன என்று கேட்டுக் கொள்கிறான் ஷான். அதைச் செய்வதற்கு தன் வேலையைத் துறப்பதுதான் முடிவென்றால் அதையும் செய்யத் துணிகிறான். ஆனால் இறுதியில் அவன் தன்னறத்தை முழுமையாக உணர்ந்து கொண்டானா என்ற கேள்வியில் வந்து நிற்கிறான். இதுவே என் புரிதல். ஆமாம், ஷானின் உண்மையான பெயர் என்ன? (நீங்கள் சொல்லவேண்டாம். அதைச் சொல்லாமல் விட்டதும் சுவராசியமான உத்திதான்.)

மிக அழகான கூறுமுறை கொண்ட கதை. முன்பே சொன்னது போல ஒரு இடத்தில் கூட எனக்கு வாசிப்பில் இடறவில்லை. நல்ல ஒழுக்காற்றான நடை. நேரடியானக் கூறல்முறைமை. கவித்துமான படிமங்கள் என்று செறிவாக இருக்கிறது. வெப்பப் புகை ஏற்படுத்திய கானல் நீரில் இருவரும் நெளிந்து நீரின் ஆழத்துக்குள், அவனுள் மேலும் மேலும் ஆழத்துக்குள் செல்வது என்பது கதையின் மையத்தைக் கவித்துமான படிமத்தால் தொட்டுவிடுகிறது.

அற்புதமான கதை! வாழ்த்துக்கள் வெங்கட்.



தேன்கூடுகளின் வீடு மொழியாக்கம் - சொல்வனம் இதழில்

 இடாலோ கால்வினோவின் தேன்கூடுகளின் வீடு என்ற சிறுகதை என் மொழியாக்கத்தில் சொல்வனம் இதழில் வெளியாகியுள்ளது. நன்றி சொல்வனம்.

கதையை வாசிக்க

தேன்கூடுகளின் வீடு

Image Courtesy: Wikimedia Commons.


18 ஜூன், 2022

ஜெயகாந்தனின் சுயதரிசனம் வாசிப்பனுபவம்

நன்றி: ஹிந்து தமிழ், ஓவியர் ஜீவா

 

சிவராமனின் தந்தை கணபதி சாஸ்திரிகள் வீட்டை விட்டுச் சென்று விடுகிறார். சதா நேரமும் சிடுசிடுவென்று இருக்கும் அவன் மனைவி ராஜமும், செருப்புக்கடையில் வேலை பார்க்கும் அவன் தம்பியும், ஏன் அவனுமே கூட இது பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. கணபதி சாஸ்திரிகள் புரோகிதத்தைத் தொழிலாகக் கொண்டவர். கறுப்பாகவும், குள்ளமாகவும் உள்ளவர். பிராமணனுக்கு உரிய தோற்றத்தில் இருப்பவர். ஒன்றரை மாதம் கழித்து அவரிடம் இருந்து சிவராமனுக்கு ஒரு கடிதம் வருகிறது. அதோடு ஒரு கத்தை எழுதப்பட்ட நோட்டுத்தாள்களும். அதைத் தன் சுயதரிசனமாக எழுதியிருப்பதாகச் சொல்கிறார்.நேரமிருக்கும் போது படிக்கச் சொல்கிறார்.

தன் தந்தையின் பால்ய சினேகிதரான வெங்கிட்டுவையர் அவனிடம் சொல்கிறார். ஒரு நாள் நடுத்தெருவில் வைத்து அவன் தந்தையை அவரது குரு சுந்தர கனபாடிகள் அசிங்கமாகத் திட்டியதாகவும், அதற்கு இப்படிப் பேசுகிறீர்களே நீர் பிராமணரா என்று அவர் கேட்டதாகவும், அதற்கு குரு அவரிடம் காயத்ரி மந்திரத்துக்கு உனக்கு அர்த்தம் தெரியுமா, தெரியாமலேயே அதைச் சொல்லி, புரோகிதம் செய்து பிழைக்கிறாயே என்று சொல்லி, அர்த்தம் சொல்லவில்லையென்றால் நீ பூணூலைக் கழற்ற வேண்டும் என்று சினத்துடன் கூறுகிறார். திடீரென்று எல்லார் முன்னிலையிலும் தான் பிராமணன் இல்லையென்று கூறி, தன் பூணூலை அறுத்துவிட்டுச் சென்றுவிட்டதாகவும், அதன் பின் தான் அவர் திரும்பவில்லை என்றும் கூறுகிறார்.

வீட்டுக்கு வந்து தந்தையின் எழுத்துக்களை வாசிக்கிறான் சிவராமன். அதில் அவர் தன்னுடைய அவதானிப்புகளைப் பட்டியலிடுகிறார். இருநூறு வருடங்களுக்கு முன் இருந்த எவரும் இப்போது இல்லை. இப்போதுள்ள எவரும் இன்னும் இருநூறு வருடம் கழித்து துளிக்கூட மிச்சமிருக்கப் போவதில்லை. இதில் எவர் உயர்ந்தவர், எவர் தாழந்தவர். எந்த வகையிலான வாழ்க்கை மேன்மை வாய்ந்தது? எது தாழ்ந்தது என்ற கேள்விகளைக் கேட்டுக்கொள்கிறார்.

 என் பிள்ளைகள் என்னைப் போல குடுமி வச்சுண்டு, உடம்பிலே சட்டையும், கால்லே செருப்பும் போட உரிமை இல்லாம – இந்தக் காலம் பார்த்துப் பரிகசிக்கிற ஒரு ஒதுக்கப்பட்ட கூட்டமா வாழணும்னு நான் ஆசைப்படலே. அதனாலேதான் அவாளை இங்கிலீஷ் படிக்க வச்சேன். கிராப்பு வச்சுக்கச் சொன்னேன். இதுக்கு அர்த்தம் என்ன? நான் எப்படி இருக்கணும்னு ஆசைப்பட்டு என்னாலே இருக முடியலையோ அப்படி யெல்லாம் அவாளை ஆக்கித் திருப்தி பட்டுண்டேனா? ஆமாம்; ‘ஒதுங்கிப்போ ஒதுங்கிப்போ’ன்னு சொல்லிச் சொல்லி நானேதான் ஒதுங்கிப் போயிட்டேனே!… ஒரு ஜாதி தாழ்ந்தது எவ்வளவு பொய்யோ அவ்வளவு பொய் இன்னொரு ஜாதி உயர்ந்ததும். இது எப்போ தெரியறதுன்னா தாழ்த்தி ஒதுக்கப்பட்ட ஜாதியைப் போலவே உயர்ந்து ஒதுங்கிப்போன ஜாதியும் படற கஷ்டத்திலே எனக்குத் தெரியறது.

என்று எழுதுகிறார். 

ஒரு வக்கீல் வீட்டுக்குப் புரோகிதம் செய்யப்போகும் போது அவர் மகன் தட்சிணை குறைவாகக் கொடுக்கிறார். மந்திரமும் குறைந்திருந்ததே என்று சொல்கிறார். அர்த்தம் தெரியாமல் மந்திரம் சொல்லலாமா என்று கேட்கிறார்.

அறுபது வருடங்கள் பொய்யாக வாழ்ந்து விட்டதாக நினைக்கிறார். இப்போது தன் தோற்றத்திலும் மாறி, தன் மனசாட்சிக்கு துரோகம் செய்யாத நேர்மையான மனுஷனாக இப்போது இருப்பதாகச் சொல்கிறார்.

அவரது எழுத்துக்களைப் படிக்கப் படிக்க, அவரது மகன்களும், மருமகளும் அவற்றில் அவரை மட்டுமா பார்த்தார்கள் என்று கேட்டு முடிக்கிறார் ஜெயகாந்தன். 



மேலும் வாசிக்க