சு. வெங்கட்டின் தன்னறம் சிறுகதை குறித்து

 

சொல்வனம் இதழில் வெளிவந்த 'தன்னறம்' சிறுகதையை ஒட்டி நண்பர் சு. வெங்கட்டுக்கு எழுதிய கடிதம்.




அன்புள்ள வெங்கட்,

தன்னறம் கதையை வாசித்து விட்டேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கதைக்குள் முதல் வரியிலிருந்தே எந்த சிரமமுமில்லாமல் நுழைய முடிந்தது. சம்பவங்கள் அழகாக விரியும் விதமும், பின் கதைகளைப் பொருத்தமான இடத்தில் நீங்கள் வைத்திருந்த லாவகமும் உங்கள் எழுத்துத் திறமைக்குச் சான்று. முதல் பாராவில் வரும் உதவி என்றெழுதி அட்டையைத் தூக்கிக் கொண்டு நிற்கும் பெண்ணும், அவளருகில் புத்தகம் வாசிக்கும் சிறு பெண்ணும் வரும் சித்திரத்தின் முக்கியத்துவம் கதையின் முக்கால் பாகம் தாண்டியவுடன் உணர முடிந்தது. கதையின் மையத்தை, வேரை முதலிலேயே கோடி காட்டியிருக்கிறீர்கள். 

இக்கதையின் கரு தமிழ்க்கதைகளுக்குப் புதியதென்றே நினைக்கிறேன். ஒருவேளை அ.முத்துலிங்கம் இது போன்ற கதைகளை எழுதியிருக்கலாம். ஆனால் களமும், சொல்முறையும் புதிதாக இருக்கின்றன. முறையான விசா இல்லாமல் அமெரிக்காவில் குடியேறிப் பணிபுரியும் பல லட்சம்பேரின் வாழ்க்கை குறித்து அறிய இது ஒரு சாம்பிள். அமெரிக்கா என்றாலே கனவுதேசம் என்று நினைக்கும் பல தமிழருக்கு இக்கதை இந்த நாட்டின் உண்மையான ஒரு பக்கத்தைக் காட்டுகிறது. ஊர்வி, சில்வியா போன்ற பெண்களை நானும் கண்டிருக்கிறேன். அவர்கள் நிலையைக் கலையாக்கியது பாராட்டுக்குரியது.

அமரிந்தர், தேஜ்பால் என்ற நேர் எதிர் மனநிலை கொண்ட இரு பாத்திரங்கள். ஒருவர் மூலம் ஷான் வேலையும், மதிப்பும் பெறுகிறான். இன்னொருவரால் வேலையைத் துறக்கிறான். தேஜ்பாலின் பாத்திர வடிவமைப்பை அவனது ஓரிரு செயல்கள் மூலம் அழகாகக் குறிப்புணர்த்தியிருக்கிறீர்கள். அவனுக்கும், ஷானுக்கும் இசையிலான அந்த சூட்சுமமான யுத்தம் அறத்துக்கும், அதர்மத்துக்கும் இடையிலான சமர் என்றே எண்ண வைத்தது. சில்வியா வருவதற்கு முன்பே, ஷான் தேர்ந்தெடுத்த ஒரு நபரை தேஜ்பால் நிராகரிக்கிறான். இது சில்வியாவின் கதி என்ன ஆகும் என்று வாசகர் மனதில் பதட்டத்தை ஏற்படுத்துகிறது. இது பல சாதுர்யமான உத்திகளை கால வழுவமைதியோடு கையாண்டிருக்கிறீர்கள். உங்கள் மீது எனக்குச் சற்று பொறாமையாகக் கூட இருக்கிறது. 

தனது அறம் என்ன என்று கேட்டுக் கொள்கிறான் ஷான். அதைச் செய்வதற்கு தன் வேலையைத் துறப்பதுதான் முடிவென்றால் அதையும் செய்யத் துணிகிறான். ஆனால் இறுதியில் அவன் தன்னறத்தை முழுமையாக உணர்ந்து கொண்டானா என்ற கேள்வியில் வந்து நிற்கிறான். இதுவே என் புரிதல். ஆமாம், ஷானின் உண்மையான பெயர் என்ன? (நீங்கள் சொல்லவேண்டாம். அதைச் சொல்லாமல் விட்டதும் சுவராசியமான உத்திதான்.)

மிக அழகான கூறுமுறை கொண்ட கதை. முன்பே சொன்னது போல ஒரு இடத்தில் கூட எனக்கு வாசிப்பில் இடறவில்லை. நல்ல ஒழுக்காற்றான நடை. நேரடியானக் கூறல்முறைமை. கவித்துமான படிமங்கள் என்று செறிவாக இருக்கிறது. வெப்பப் புகை ஏற்படுத்திய கானல் நீரில் இருவரும் நெளிந்து நீரின் ஆழத்துக்குள், அவனுள் மேலும் மேலும் ஆழத்துக்குள் செல்வது என்பது கதையின் மையத்தைக் கவித்துமான படிமத்தால் தொட்டுவிடுகிறது.

அற்புதமான கதை! வாழ்த்துக்கள் வெங்கட்.



Comments

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை