4 ஆகஸ்ட், 2024

பொற்குகை ரகசியம் - அ. முத்துலிங்கம் முன்னுரை

 


வம்சி பதிப்பகம் வெளியீடாக வந்துள்ள என் முதல் நூல் பொற்குகை ரகசியம் சிறுகதைத் தொகுப்புக்கு எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அளித்துள்ள முன்னுரை.


 சில வருடங்களுக்கு  முன்னர் நியூ யோர்க்கர் பத்திரிகையில் ஒரு சிறுகதை வெளியானது. அதன் பெயர் Cat Person. அது வெளியாகி சில நாட்களில்  உலகப் பிரபலமாகிவிட்டது. இரண்டு வாரங்களில் பத்து லட்சம் வாசகர்கள் அந்தக் கதையை படித்தார்கள். அதிசிறந்த உலகப் பத்திரிகைகள்  கதையை விவாதித்தன. சமூக ஊடகங்கள்  மதிப்புரைகள் எழுதின. சிறுகதை வரலாற்றில்இத்தனை சிறிய காலத்தில் ஒரு சிறுகதை இத்தனை புகழ் அடைந்ததில்லை. சிறுகதை மன்னர்களான செக்கோவ், ஜேம்ஸ் ஜோய்ஸ் போன்றவர்களின் படைப்புகளைத் தாண்டி இந்தச் சிறுகதை உயர்ந்து நிற்குமா?  

ஜெகதீஷ்குமாரின் 18 சிறுகதைகளையும் தொகுப்பில் படித்த இந்த நேரத்தில் என் மனதில் திரும்பத் திரும்ப எழுந்த கேள்வி ஒன்றுதான். இவை உடனே புகழ் தேடும் கதைகளா அல்லது நீண்ட காலம் நிற்கும் தகுதி கொண்டவைகளா? ரோல்ஸ்ரோய் சொல்லுவார், உலகத்திலே இரண்டு விதமான புனைவுகள்தான் உள்ளன என்று. ஒரு மனிதன் பயணம் போவான்; மற்றது ஒரு நகரத்துக்கு புது மனிதன் வருவான். இந்த தொகுப்பில் உள்ள அத்தனை விதமான கதைகளிலும் இது நடக்கும். அமெரிக்காவில், தமிழ்நாட்டில், மாலத்தீவில் நடப்பதாக கதைக் களங்கள் மாறும். ஆனால் ஒவ்வொரு கதையிலும் ஒரு புதுமை நடக்கும். மனித வாழ்வியலின் ஒரு கூறு வெளிப்படும். சுவாரஸ்யம் மட்டும் குறைவதேயில்லை

எனக்கு ஜெகதீஷ்குமாரைத் தெரியாது. நேரில் கண்டதில்லை. இவர் ஈரோடு வாசவி கல்லூரியில் வேதியியலில் இளங்கலைப்பட்டம் பெற்றவர். தமிழ்நாடு ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் பி.எட் பட்டம் பெற்ற பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தற்போது அமெரிக்கா தென் கரோலினா மாகாணத்திலுள்ள கோலிட்டன் கெளண்டி (Colleton County) உயர்நிலைப்பள்ளியில் கணிதவியல் துறைத்தலைவராகப் பணியாற்றுகிறார்.


இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான் இவருடன் முதல் பரிச்சயம் தொலைபேசி மூலம் ஏற்பட்டது. இவருடைய அருமையான ஆங்கில  மொழிபெயர்ப்புகளைத்தான் முதலில் படித்தேன். பின்னர் ஆங்கிலத்திலும் தமிழிலும் இவர் எழுதிய புனைவுகள் படிக்கக் கிடைத்தன. இப்படி ஒருவர் எழுதுகிறாரே, என் கண்களுக்கு இது நாள்வரை படவில்லையே என்ற நினைப்பு வந்தது. பிரமிப்பாக இருந்தது. 


இவருடைய கதைகளில் என்னை முதலில் கவர்ந்தது காட்சி வர்ணனைகள். சில சமயம் அவற்றை இன்னொருமுறை படிக்கத் தூண்டும். ’கனவுகளின் உபாசகன்’ கதையில் வரும் வர்ணனை இப்படிப் போகிறது.




ஆழ்ந்த உறக்கத்தில் சட்டென்று பிரசன்னமாகி மிதக்கும் சிறு கனவென கடல் நடுவில் அந்தக் கப்பல் பயணித்துக் கொண்டிருந்தது. இருட்டுதான் அடர்ந்து திரவமாகி கப்பலை சுமந்துகொண்டிருக்கிறதோ என்று தோன்றியது சிவராமனுக்கு. கடல் இரவில் ஒரு வினோதத் தோற்றம் கொண்டுவிடுகிறது. அதன் பிரம்மாண்டத்தையும், அடியாழங்களில் புதைந்து கிடக்கும் ரகஸ்யங்களையும் ஒடுக்கிக் கொள்கிறது. ஏதோ கருவறைக்குள் மீண்டும் புகுந்து சுருண்டுகொண்ட மாதிரி ஆகிவிடுகிறது இரவில். மேல் தளத்தில் நின்றபடி வானம் பார்த்தால் யாரோ கழட்டி வீசின மோதிரங்கள்போல நட்சத்திரங்கள் தெரிகின்றன.’ 

இது தவிர, அவ்வப்போது இவர் கொடுக்கும் தகவல்களும் எனக்கு முக்கியமானவை. ‘அப்படியா?’ என்று சிந்திக்க வைப்பவை. அபூர்வமான  உயிர்கள் கடலில் உண்டாக்கும் ஒளிபற்றி ஒரு கதையில் வருகிறது. ஸ்கார்லட் மக்கோவ் என்னும் ஒரு வகை கிளிபற்றி இன்னொரு கதையில் சொல்கிறார். உலகத்திலேயே மிக அழகான இந்தக் கிளி தென் அமெரிக்க காடுகளில் வசிக்கிறது. சிலர் அதிக விலை கொடுத்து வாங்கி வீடுகளில் வளர்க்கிறார்கள். இந்தக் கிளி பேசவும் செய்யும். ஆனால் மனிதர்களின் கண்கள் இதன் பக்கம் திரும்பினால் இந்த இனம்  அழிந்துபோகும் வாய்ப்பு உண்டு.

வீடுகளில் வளர்க்கும் அலங்காரச் செடியான கிரேன்பெர்ரி பற்றியும் அறியலாம். அலங்காரம் மட்டுமல்ல, இது சுவையான பழங்களையும் தரும். இன்னொரு கதையில் இந்தியாவில் விற்பனையாகும் விதம்விதமான பரிசுச் சீட்டுகள் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன.  நாகலாந்து, பூட்டான், தமிழ்நாடு, கேரளா பம்பர் குலுக்கல் பரிசுகள் பற்றியும், அந்த முடிவுகளை பார்க்க முண்டியடிக்கும் மக்கள் கூட்டம் பற்றியுமான விவரங்கள் மலைக்க வைக்கின்றன.    

‘நீலத்தழல்’ என்ற கதை மாலத்தீவுகள் ஒன்றில் நடப்பதாக புனையப்பட்டிருக்கிறது. அங்கே படிப்பிக்கும் ஆசிரியர் ஒருவரும், நண்பரும், மீன்பிடித் தோழரும், மகனுமாக நால்வர் கடலில் மீன் பிடிக்கப் புறப்படுகிறார்கள். வலைபோட்டு மீன் பிடிப்பதல்ல, தூண்டில் வீசி ஒவ்வொரு மீனாகப் பிடிக்கிறார்கள். சிறிய மீன் கிடைத்தால் அதை கடலில் வீசிவிட்டு பெரிய மீன்களை மட்டும் படகில் சேகரிக்கிறார்கள். சில மணி நேரங்களில் படகு நிறைந்துவிடுகிறது. அப்போது ஓர் ஆச்சரியம் காத்திருக்கிறது.

உயிர் ஒளிர்வு (bioluminescence) என்னும் அற்புதமான வேதியியல் மாற்றம் கடலை ஒளிப்பிழம்பாகச் செய்கிறது. சில உயிரினங்களால் உற்பத்தியான அந்த ஒளி கடல் பரப்பை நீலத்தழலாக மாற்றி விடுகிறது. அந்த மயக்கத்தில் இருக்கும்போதே ராட்சச மீன் ஒன்று படகை கவிழ்த்து தள்ளுகிறது. படகில் பயணித்த நால்வரும் மிதவை ஆடைகள் அணிந்திருந்ததால் தண்ணீரில் மிதக்கிறார்கள், ஆனால் நிமிடத்துக்கு நிமிடம் அவர்களுக்குள்ளே இடைவெளி அதிகமாகிறது. அப்போது அந்த இரவின் இரண்டாவது அற்புதம் நிகழ்கிறது. 



’கர்மா’ என்று ஒரு கதை. ஒரு வரியில் சொல்வதானால் நன்மை செய்தால் நன்மை கிடைக்கும். தீமை செய்தால் தீமை கிடைக்கும். கதை அமெரிக்காவில் நடைபெறுகிறது. ஆனால் இந்தக் கதையின் வடிவமைப்பு, சொல்முறை, ஆரம்பம், முடிவு என எல்லாமே தலை சிறந்த ஒரு சிறுகதையை வாசித்த நிறைவைத் தருகிறது. 

Karl Iagnemma ஓர் இயந்திர பொறியாளர், பேராசிரியர். இவரை நான் இருபது வருடங்களுக்கு முன்னர் MIT ல் சந்தித்திருக்கிறேன். இவருடைய அறிவியல் சிறுகதைகள் தொகுப்பாக வந்திருந்த சமயம் அது. முதன்முதலாக பல்கலைக்கழகம் பற்றியும் அங்கு கற்பிக்கும் பேராசிரியர்கள், அவர்களிடம் பயிலும் ஆராய்ச்சி மாணவர்கள் பற்றியெல்லாம் சிறுகதைகள் எழுதியவர். ஒரு கதையில் கணிதப் பேராசிரியர் ஒருவர் காதல் உணர்வுக்கு தேற்றம் எழுத முயற்சிப்பார். இவருடைய கதைகள் பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றவை.

இந்த தொகுப்பில் ’பேராசிரியரின் கிளி’ என்ற சிறுகதையை படித்தபோது கார்ல் நினைவுக்கு வந்தார். ஒரு பேராசிரியருக்கும், அவரிடம் பயிலும் ஆராய்ச்சி மாணவருக்கும் இடையில் ஏற்படும் உறவையும், உணர்வையும் இத்தனை தத்ரூபமாக வர்ணித்த ஒரு சிறுகதை தமிழில் இல்லை என்றே சொல்லலாம். இந்தக் கதைதான் தொகுப்பில் ஆகச் சிறந்தது. இதுவே தொகுப்புக்கு தலைப்பாக இருப்பதும் மிகப் பொருத்தமானது. உலகத்துக் கதைகளுடன் பக்கத்துப் பக்கத்தில் நிற்கும் தகுதி கொண்டது இந்தக் கதை.

ஆரம்பத்தில் சொன்ன ’திடீர்ப் புகழ்’ கதை நீண்டகாலம் வாழுமா என்பது தெரியாது. ஆனால் புதுமைப்பித்தன் எழுதிய ’பொய்க்குதிரை’ சிறுகதை திடீர்ப்புகழ் அடையவில்லை; லட்சம் பேர் படிக்கவில்லை. ஆயிரம் பேர்கூட படித்திருக்க வாய்ப்பில்லை. நூறு பேர் படித்திருப்பார்களோ தெரியாது. ஆனால் இன்று, ஏறக்குறைய 100 வருடங்கள் கழிந்துவிட்ட நிலையில், அது இன்னும் வாழ்கிறது. இனிமேலும் வாழும். காலம்தான் தரத்தை தீர்மானிக்கிறது, வாசகர்களின் எண்ணிக்கையல்ல. 


அப்படிப் பார்க்கும்போது ஜெகதீஷ்குமார் எழுதியதுதிடீர்ப் புகழ்கதைகள்  அல்ல. அவை நீண்ட காலம் வாழும் தன்மை கொண்டவை. ந்த தொகுப்பை அவருடைய முதல் தொகுப்பு என்று சொல்லவே முடியாது. கதைகளின் முதிர்ச்சியும், நேர்த்தியும், கலைம்சமும் வாகர்களை வெகுவாகக் கவரும் என்பதில் சந்தேகம் கிடையாது. சிறுகதையை தொடங்கினால் முடிவு வரை சுவாரஸ்யம் குன்றாமல் படிக்க வைக்கிறது. முக்கியமாக சிந்திக்க வைக்கிறது. வேறு என்ன வேண்டும்? 



சமீபத்தில் ஒரு டேனிஷ் எழுத்தாளருடைய, ஆங்கிலத்தில் மொழியாக்கம் பெற்ற சிறுகதையை படிக்க நேர்ந்தது. அந்த எழுத்தாளருடன் தொடர்பு கொண்டு அதை தமிழில் மொழிபெயர்க்க அனுமதி கோரினேன். அவர் எந்தப் பத்திரிகையில் வெளியாகும், எத்தனை பிரதிகள் விற்கும், சன்மானம் எவ்வளவு என்றெல்லாம் கேட்டார். அவருக்கு தமிழ் மொழி பற்றி அறிவு கிடையாது. 90 மில்லியன் மக்கள் பேசும் மொழி என்று சொன்னபோதும் தெரியவில்லை. நாங்கள் நினைப்பது போல தமிழ் மொழி இன்றைக்கும் உலகத்தினரால் பரவலாக அறியப்படவில்லை. 

இந்தச் சந்தர்ப்பத்தில், ஜெகதீஷ்குமார் போன்ற ஒருவர் எங்களுக்கு மிகவும் முக்கியமானவர் ஆகிறார். அவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் புனைவு எழுதுகிறார். அவருடைய ஆங்கிலச் சிறுகதை தொகுப்பு அநேகமாக அடுத்த வருடத்துக்குள் வெளிவரும். அவருடைய ஆங்கில மொழிபெயர்ப்புகள் வெளிநாட்டு பத்திரிகைகளில் ஏற்கனவே பிரசுரமாகியிருக்கின்றன. மொழிபெயர்ப்பு விருதுகள் பெற்றிருக்கிறார். சமீபத்தில் இவர் ஜெயமோகனுடைய சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அது A Fine Thread and other stories என்ற தலைப்பில் வெளிவந்து அமெரிக்காவில் கொண்டாடப்பட்டிருக்கிறது. நல்ல மதிப்புரைகளும் வெளியாகியுள்ளன. 

ஆறு மில்லியன் மக்கள் பேசும் டேனிஷ் மொழியில் வெளியான ஒரு சிறுகதை மிகப் பிரபலமான ஆங்கில இதழ் ஒன்றில் மொழிபெயர்ப்பாக வெளிவருகிறது. ஒன்பது கோடி மக்கள் பேசும் தமிழில் எழுதிய சிறுகதை ஒன்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, மிகவும் மதிக்கப்படும் வெளிநாட்டு பத்திரிகை ஒன்றில் இதுவரை வெளிவரவில்லை. சிறந்த சிறுகதை தமிழில் இல்லை என்று அர்த்தம் அல்ல. நல்ல தரமான மொழிபெயர்ப்பாளர்கள் இன்னும் தேவை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. 

ஜெகதீஷ்குமாரிடம் நான் கேட்பது ஒன்றுதான். இவர் தமிழில் தொடர்ந்து எழுதட்டும்; ஆங்கிலத்திலும் எழுதட்டும். ஆனால் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பதை நிறுத்தக்கூடாது. தமிழ் வெளியுலகிலே அறிமுகமாவதற்கு தேவை இவரைப்போல பல திறமைகள் கைவந்த எழுத்தாளர்கள்தான். அத்துடன் இவர் ராபர்ட் நாய்ஸ் 'Learn to Lead scholarship' மூலம் தென் கரோலைனாவின் சிடாடெல் ராணுவக் கல்லூரியில் இலவசமாக முதுகலை பயில்வதற்காக வாய்ப்பும், ஐம்பதாயிரம் டாலர் பரிசுத்தொகையும் வென்றவர். அமெரிக்காவின் தென் கரோலினா மாநிலத்திலுள்ள 'Writer Who Write of Palmetto State Authors'-ன் உறுப்பினர். அமெரிக்காவின் 'The National Society of Leadership and Success'-ன் தலைமை உறுப்பினர். அத்துடன் முக்கியமாக, அமெரிக்காவின் 'American Literary Translators Association' (ALTA) இலக்கிய மொழிபெயர்ப்பாளர் அமைப்பின் அங்கத்தவர்.  தமிழ் இலக்கியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்கு இவரிலும் தகுதியான ஒருவர் எங்கே கிடைப்பார்? 

இவரைப் போன்றவர்களால் தமிழ் இலக்கியத்தை உலகத்துக்கு மேலும் எடுத்துச் செல்லமுடியும். அந்த வகையில் இவர் முக்கியம் வாய்ந்தவர். பாதுகாக்கப்பட வேண்டியவர். 


அ.முத்துலிங்கம்

கனடா, 26 மார்ச் 2024

22 ஜூலை, 2024

ஏற்புரையும், நன்றி நவிலலும்

 


பொற்குகை ரகசியம் நூல் வெளியீட்டு விழாவில் என் ஏற்புரையும், நன்றி நவிலலும்


இந்த மேடையில் அமர்ந்திருக்கும் என்னுடைய இலக்கிய ஆசிரியரும், இந்தியத் தத்துவம் குறித்த என் துவக்க கால ஐயங்களைக் களைந்த எனது ஞானாசிரியருமாகிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களை வணங்குகிறேன். மேடையிலிருக்கும் எழுத்தாளர் கே.வி. ஷைலஜா அவர்கள், இனிய இளவல் எழுத்தாளர் ஜி.எஸ்.எஸ்.வி நவின் அவர்களை வணங்குகிறேன். அரங்கத்தில் வீற்றிருக்கும் மகத்தான படைப்பாளி நாஞ்சில் நாடன் சார், மொழிபெயர்ப்பாளர் கே.வி. ஜெயஸ்ரீ, மற்றும் கோவையின் முக்கியமான படைப்பாளிகள், இலக்கிய நண்பர்கள், வாசகர்கள், என் பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், அனைவரையும் வணங்குகிறேன்.


தமிழ்ல இது என்னோட முதல் புத்தகம். இது நான் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. சில ஆண்டுகளாகவே மொழிபெயர்ப்பு, சிறுகதைகளை எழுதிப்பார்ப்பதுங்கற முயற்சியில் இருந்தாலும், ஆசை என்னவோ பெரு நாவல்களை எழுதி விடணும்ங்கறதுதான். பல ஆண்டுகளா எழுதணும்கற ஆசை இருந்தாலும், அப்பப்போ வலைப்பூக்கள் மாதிரி கொஞ்சம் எழுதிப்பார்த்திருந்தாலும், நாம ஏன் இலக்கியத்தில ஈடுபடணும்கறத்துக்கு வலிமையான காரணங்கள் எனக்கு இல்லாததனால ஒரு கன்விக்ஷன் இல்லாமத்தான் ரொம்ப நாள் இருந்தேன். கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி அத்வைத வேதாந்தத்தைக் கண்டுபிடிச்சேன். நானும், என் மனைவி அனுவும் சுவாமி குருபரானந்தரிடம் வேதாந்தம் கத்துக்க ஆரம்பித்தோம். அதோட துவக்கப்பாடத்தில ஒரு உபனிஷத் மாணவனுக்குத் தேவையான தகுதிகள்னு ஒரு பட்டியல் வருது. அதுல ஒரு தகுதியா ஷமாதி ஷட்க சம்பத்தி அப்படிங்கறது. இது ஆறு தகுதிகளோட தொகுப்பு. ஷமம் மனக்கட்டுப்பாடு, சமாதானம் - மனத்தைக் குவித்து ஒருமுகப்படுத்துதல் அப்படிங்கற இரண்டு தகுதிகளை வளர்த்துக்கறத்துக்கு ஒரு கருவியா வாசிப்பையும், எழுத்தையும் கையாள முடியும்னு தோணிச்சு. நான்கு ஆண்டுகளாகவே தொடர்ந்து வாசிப்பிலும், மொழிபெயர்ப்பிலும், புனைவெழுத்திலும் இருக்கிறேன். ஓரளவுக்கு மனம் குவிந்து செயலில் ஈடுபடமுடிகிறதுங்கற புரிஞ்சிகிட்டேன். அப்புறம் ஸ்வதர்மம்ங்கற ஒரு கோட்பாடு. தன்னறம். நான் ஈடுபட்டிருக்கிற ஆசிரியர் பணிதான் என் தன்னறம்ங்கற தெளிவு எனக்கு ரொம்ப முன்னாடியே வந்துடுச்சு. ஆனால் வாசிப்பும், எழுத்துல ஈடுபடறதும் என்னோட தன்னறம்தான்ங்கற தெளிவை என்னுடைய வேதாந்த ஆசிரியர்களும், எழுத்தாளர் ஜெயமோகன் போன்ற இலக்கிய ஆசிரியர்களும் கொடுத்தாங்க. 


இப்ப நான் எழுதறதுங்கறது அங்கீகாரத்தை எதிர்பார்த்தோ, புகழுக்காகவோ இல்ல. வாசிக்கும்போது, எழுதும்போது மனம் அதில இயல்பா ஈடுபடறதில இருக்கிற ஆனந்தம், ஒரு புனைவை எழுதி முடித்தபிறகு அடையக்கூடிய திருப்தி. ஒரு மொழியில் தீவிரமாக இயங்கறப்ப நமக்கு ஏற்படற விடுதலை உணர்வு இவையெல்லாம்தான் இப்ப நான் எழுத்துல ஈடுபடறதுக்குக் காரணம். அதுவுமில்லாம மொழி என்னும் கருவியைக் கொண்டு வாழ்வு குறித்த அடிப்படையான ஐயங்களுக்கும், வியப்புகளுக்கும் ஆதாரமான ஒன்றைத் தொட்டு விட முடியும்ங்கற ஒரு சாத்தியம் இருக்குதில்லையா. அது தரக்கூடிய தரும் கிளர்ச்சியும்,சிலிர்ப்பும் ஒரு காரணம். சொற்களாலாலேயே உலகங்களையும், மாந்தர்களையும் கட்டி எழுப்பிவிட முடியும்ங்கற நம்பிக்கை தர்ற உத்வேகம், உவகை இவையெல்லாம்தான் நான் இப்ப எழுத்தில இயங்குவதற்கான அடிப்படையான காரணங்கள். 

இலக்கியம் என்னும் கலை மற்ற கலைகள் மாதிரி இல்லாம அறிவுத்துறையோட நெருக்கமாக சம்பந்தப்பட்டிருக்கு. அதனாலயே இலக்கியப் படைப்புகள்ல தத்துவதேடல் தவிர்க்க முடியாதது. நான் அடிப்படையில தத்துவ மாணவனாவும் இருக்கறதுனால, என் படைப்புகளை அடிப்படையான தத்துவக்கேள்விகளை எக்ஸ்ப்ளோர் பண்ணமுடியுமான்னு பார்க்கறேன். நாவல் மாதிரி பெரிய கேன்வாஸ்ல வொர்க் பண்ணும்போது அதோட சாத்தியங்கள் இன்னும் அதிகமா இருக்கும்னு நெனக்கறென்.


ஆனால் சிறுகதைகளில் நான் எதைச் சாதிக்க விரும்புகிறேன்? ஒரு சிறுகதையை எழுதுவதற்கு முன்பு நான் தீர்மானித்துக் கொள்ளும் விஷயங்கள் சில உண்டு. ஒரு கதையின் மைய மாந்தர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட தேர்வுகளில் எதைத் தேர்ந்தெடுக்கிறார்கள்? அதற்கான ஆழமான காரணங்கள் யாவை? ஏன் தங்களை விதவிதமான சூழ் நிலைகளில் வலிந்து சிக்க வைத்துக் கொள்கிறார்கள்? ஒரு சிறு நிகழ்வை விவரிப்பதை நிமித்தமாகக் கொண்டு மானுட இயல்பின் சிக்கல்களை நோக்கிய வினாக்களை எழுப்பி விடமுடியுமா? சிறுகதை என்று மட்டுமல்ல, பொதுவாகவே புனைவை இயற்றும்போது, வாசகர் சிரமமின்றி அந்தப் புனைவுலகுக்குள் நுழைய அனுமதித்து, அப்புனைவை ஓர் அறாக்கனவென பொருட்படுத்தும் வண்ணம் இயற்ற வேண்டும் என்பதே என் பிரதானமான ஆவலாக இருக்கிறது. எழுத்தின் தொழில் நுட்பங்கள் பயின்று வருதல் ஒரு புறம் இருந்தாலும், எழுத்தில் போதனை செய்தல், மனம் போனபடி எழுதிவிட்டுப் பிறகு எழுதியதை நியாயப்படுத்தும் முயற்சியில் இறங்குதல் போன்ற சல்லித்தனமான முயற்சிகளில் ஈடுபடக்கூடாது என்று எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன். பல்வேறு வடிவங்களில் கதைகளை எழுதிப் பார்க்கும் விளையாட்டாகவும் நான் புனைவெழுத்தை - குறிப்பாகச் சிறுகதை என்ற வடிவத்தை - காண்கிறேன். இந்த தொகுப்பில இருக்கிற கதைகள்ல சில விஷயங்களை எக்ஸ்ப்ளோர் பண்ண முயற்சி பண்ணியிருக்கேன். அசைவும், பெருக்கும், கல்லளை போன்ற கதைகள்ல கதாபாத்திரங்களோட ஆன்மிகத் தவிப்புதான் மையம். ஊனுடல், பேராசிரியரின் கிளி போன்ற கதைகள்ல உடல் மீதான இச்சைக்கும், உயிரின் மீதான ஈர்ப்புக்குமுள்ள இயல்பான அந்த கான்ஃபிலிக்ட தொட முயற்சி பண்ணிருக்கேன்.  தாய்மை என்பது பெருங்கருணையா அல்லது பெரும் சுயநலமா என்ற கேள்விதான் பிறப்பொக்கும் கதையில இருக்குது. கில்ட் ஃபீலிங்க் என்பது இலக்கியத்துக்கான ஒரு யுனிவர்சல் ரா மெட்டீரியல். அதை அடிப்படையா வைச்சும் சில கதைகள் இந்தத் தொகுப்பில இருக்கு. இதுதான் என் படைப்புகளின் இயல்போட ஒரு சுருக்கமான வரைபடம். இந்தத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரைல இது குறித்து இன்னும் விரிவா எழுதியிருக்கேன்.

இப்போ நன்றி சொல்லும் தருணம்

ஜெயமோகன்

நான் ரொம்ப நாட்களாவே இலக்கியம், குறிப்பா புனைவுகள் வாசிச்சுட்டு இருக்கேன். எழுதணும்கற ஆசையும் ரொம்ப நாளாவே இருந்தது. ஆனா ஒவ்வொரு தடவ ஏதாவது எழுதும்போதும், நாம எழுதறது இலக்கியமாங்கற சந்தேகம் இருந்துட்டே இருக்கும். இருபது வருடங்கள் முன்னாடி எழுத்தாளர் ஜெயமோகனைக் கண்டடைந்தேன். எவ்வளவு வாசிச்சிருந்தாலும், இலக்கியத்தோட அடிப்படைகள் அவருடைய எழுத்துக்கள் மூலம்தான் எனக்குத் தெளிவாச்சு. நவீனகால இலக்கிய விமர்சனத்த நிறைய வாசிச்சிருந்த எனக்கு சாரோட ரசனை விமர்சனம் பல திறப்புகளை ஏற்படுத்துச்சு. தமிழ் இலக்கியம் மட்டுமல்ல, உலக இலக்கியத்தை எப்படி வாசிக்கணும்கறதையும், நாம எழுதறதோட இலக்கியத்தரத்தை நாமே எப்படி நிர்ணயிச்சிக்கலாம்கறது அவர்கிட்டதான் கத்துகிட்டேன். ஒரு இலக்கிய வாசகனா, எழுத ஆசைப்படுறவனா இன்னிக்கு வரைக்கும் அவர்கிட்ட இருந்து கத்துகிட்டேதான் இருக்கேன். அவருடைய கண்ணீரைப் பின்தொடர்தல் நூலிலிருந்துதான் இந்திய இலக்கியம் குறித்த உண்மையான பெருமிதமே எனக்கு உருவாச்சு.

அதேபோல நான் அத்வைத வேதாந்தத்தைக் கற்க ஆரம்பித்த புதிதில் எனக்கு நிறைய குழப்பங்கள், ஐயங்கள் இருந்துது. நான் கற்றுக் கொண்டிருப்பது மரபான வேதாந்தம். அதைக் கற்றுக் கொடுக்கற ஆசிரியர்கள் எல்லாமே ஆனந்தாதான். நம்ம நாட்டில ஆனந்தான்னு பேர் முடிஞ்சாலே நமக்குக் கொஞ்சம் அலர்ஜிதான். அவங்களோட நம்பகத்தன்மை குறித்து ஒரு சந்தேகம் இருந்துட்டே இருக்கும். எனக்கு ஜெ-யோட தத்துவக்கட்டுரைகள வாசிக்கும் போது, - அவர் குறிப்பிட்ட சில காலம் கீதைக்கு உரை எழுதிட்டிருந்தார் -நிறைய ஞானிகளைக் குறித்தும், இலக்கியவாதிகளுக்கும், ஞானிகளுக்கும் இருக்கற தொடர்பு பற்றியும், இலக்கியத்துக்கும், தத்துவத்துக்கும் இருக்கற தொடர்பு பற்றியும், எல்லாவற்றுக்கும் மேலாக அவர் குரு நித்யா பற்றியும் நிறைய எழுதுவார். அதையெல்லாம் வாசித்த போதுதான் எனக்கு நம் மரபான தத்துவத்தின் மீது நம்பிக்கை வந்து, அதோட மாணவனா மாறினேன். எனக்கு இலக்கியத்தின் அடிப்படைகளைக் கற்றுக் கொடுத்ததுக்கும், இந்திய தத்துவத்தைக் கற்பதிலுள்ள ஐயங்களைக் களைவதற்கும் உதவியாக இருந்த ஆசிரியர் ஜெயமோகனை நன்றியுடன் வணங்குகிறேன். இந்த மேடையில சில நிமிடங்கள்ல அவருக்கு நன்றி சொல்லி முடிச்சிட முடியாது. 

அவருடைய கதைகளை மொழிபெயர்ப்பதற்கு எனக்கு அனுமதி வழங்கினார். ஒரு படைப்போடு மிக நெருக்கமாக உறவாடறதுக்கு மொழிபெயர்ப்பு ஒரு சக்தி வாய்ந்த கருவி. அவர் கதைகளை மொழிபெயர்க்கும்போது, சிறுகதைகள் நுட்பங்கள் பலவற்றை நான் கண்டுகொண்டேன். ஒரு மாஸ்டர் எப்படி ஷார்ட் ஃபார்ம் ஆஃப் ஃபிக்ஷனை கையாளறாருன்னு பாக்கறதுக்கு வாய்ப்பா இருந்துது. நாம சிறுகதை எழுதும்போது, நம்ம ஸ்டைல்ல எப்படி அவர் கையாண்ட நுட்பங்களை கொண்டு வர்லாங்கறது ஒரு எகஸைடிங்க்கான ப்ராஸ்பெக்டா இருந்துச்சு. ஜெயமோகன் அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டவையும், பெற்றுக் கொண்டவையும் ஏராளம். அவருக்கல்ல. இந்தப் பிறப்பில் அவரை வாசிக்கவும், அவரிடமிருந்து கற்கவும் பணித்த அந்தப் பேரிருப்புக்கு நன்றி கூறுகிறேன்.

அ. முத்துலிங்கம்

நான் தீவிரமாக எழுத்தில் ஈடுபடுவதற்கு அ. முத்துலிங்கம் அவர்களின் பாராட்டும், ஊக்கமும் ஒரு காரணம். முதலில் என் ஆங்கில மொழியாக்கங்களை வாசித்து விட்டுத்தான் அவர் என்னை அழைத்தார். அவருடன் அலைபேசியில் பேச அமைந்த ஒவ்வொரு தருணமும் நான் ஆசிர்வதிக்கப்பட்டதாகவே உணர்கிறேன். ஒவ்வொருமுறை உரையாடும்போதும் அவருடைய உற்சாகத்தையும், செயல் ஊக்கத்தையும் எனக்கும் மடை மாற்றிவிட்டு விடுவார். தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படும் பெரும்பாலானவற்றை அவர் வாசித்து விடுவார். அவற்றில் என் மொழியாக்கம் தனித்துத் தெரிவதாகவும், அதற்குக் காரணம் ஆங்கிலத்தில் நான் மொழியாக்கம் செய்யும் புனைவுகள் செறிவான இலக்கிய மொழியில் அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டது என்னை மகிழ்ச்சியிலும், மேலும் எழுத்தில் ஈடுபட வேண்டும் என்ற செயலூக்கத்திலும் ஆழ்த்தியது. என் மொழியாக்கங்களை மட்டுமல்ல, என் சொந்தப் புனைவுகளையும் அவர் உடனுக்குடன் வாசித்துத் தன் கருத்துக்களைச் சொல்வார். சில கதைகளின் முடிவுகள் பலவீனமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். பல கதைகளில் என் மொழியையும், கற்பனையையும் மனம் திறந்து பாராட்டியிருக்கிறார். இந்தத் தொகுப்புக்கு முன்னுரை எழுதித் தருமாறு அவரிடம் வேண்டிக் கொண்டபோது மிகுந்த கருணையோடு ஓர் அழகிய முன்னுரையை எழுதிக் கொடுத்தார். அவரோடு தொடர்பு கொள்ளும் தருணங்களை எனக்கு வழங்கிய பேரிறையை நன்றியுடனும், உவகையுடனும் நினைத்துக் கொள்கிறேன்.



அகிலன் சார்


ஈரோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் நான் வேதியியல் இளங்கலை பயின்ற போது நவீனத் தமிழ் இலக்கியத்தில் என்னை ஆற்றுப்படுத்தியவர் அக்கல்லூரியின் ஆங்கில விரிவுரையாளர் அகிலன் எத்திராஜ். தற்போது காலச்சுவடுக்காக ஓர்ஹான் பாமுக் போன்றோரின் நூல்களை அற்புதமாக மொழிபெயர்த்து வருபவர். பாலகுமாரனையும், சுஜாதாவையும் வாசித்தபடி அவர்களின் கலவையான ஓர் எழுத்தாளனாக ஆகி விடவேண்டும் என்ற கனவிலிருந்த எனக்கு, எழுத்தின் பலவித சாத்தியங்களையும் அன்று இயங்கிக் கொண்டிருந்த நவீன எழுத்தாளர்கள் மூலம் அறிமுகப்படுத்தினார். கோமல் சுவாமிநாதனை ஆசிரியராகக் கொண்டு அன்று வந்து கொண்டிருந்த சுபமங்களாவின் இதழ்களைத் தொகுத்து பைண்ட் செய்து வைத்திருந்தார். அதைக் கொடுத்து என்னை வாசிக்கச் சொன்னார். ஒரு மாதம் எடுத்து அதை வாசித்த போதுதான் இலக்கியம் குறித்த என் பார்வை தெளிவுபட்டது. அசோகமித்திரன், வண்ணநிலவன், வண்ணதாசன், க.நா. சுப்ரமணியம்  போன்றோரின் எழுத்துக்கள் பரிச்சயமாகின. வாரமலர் கவிதைகளுக்கும், கணையாழி கவிதைகளுக்குமுள்ள  வேறுபாடு புலப்பட்டது. அப்போதிருந்து நான் வாசிக்கும் நூல்களை மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுக்கத் துவங்கினேன். சுஜாதாவின் “கணையாழியின் கடைசிப் பக்கங்கள்,” அதன் பின் அவர் தன் கட்டுரைகளில் அறிமுகப்படுத்தும் எழுத்தாளர்கள், என அவர் என் மீது செலுத்திய தாக்கம் என் வாசிப்பு மற்றும் எழுத்துப் பயணத்தில் ஒரு முக்கியமான வழி காட்டும் விளக்காக இருந்தது. 

கே.வி. ஷைலஜா


இந்தத் தொகுப்பை வம்சியில் வெளியிட இயலுமா என்று மிகுந்த தயக்கத்துடன் ஷைலஜா அம்மாவிடம் கேட்டேன். பவாவும், அவரும் அமெரிக்கா வந்திருந்தபோது, நண்பர் ராஜன் வீட்டில் இருவரையும் சந்தித்து, அவர்களோடு இரு நாட்கள் செலவழிக்கும் வாய்ப்பு கிடைத்தது. என் மொழியாக்கங்கள் குறித்து அவர்கள் ஏற்கனவே அறிந்திருந்தார்கள். அவர் என் கோரிக்கையை உடனே ஏற்றுக் கொண்டு வம்சியில் வெளியிடுவது எங்களுக்கு மகிழ்ச்சியே என்று தெரிவித்தார். வம்சி பதிப்பகம் தமிழகத்தின் மிக முக்கிய இலக்கியப் பதிப்பகங்களில் ஒன்று. அதிலிருந்து என் முதல் சிறுகதை தொகுப்பு வெளிவருவது எனக்குப் பெருமை. ஷைலஜா அம்மாவுக்கு என் எளிய நன்றி. 

இதழ்கள், நண்பர்கள்

இத்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் சொல்வனம் இதழிலும், பிற, பதாகை, வல்லினம், உயிரோசை, அரூ ஆகிய இதழ்களிலும் வெளிவந்தன. அவ்விதழ்களுக்கு என் நன்றி. சொல்வனத்தின் ஆசிரியர்கள் பாஸ்டன் பாலா மற்றும் மைத்ரேயன் இருவரும் அந்த இதழில் எனக்குத் தந்த இடம் எனக்களித்த ஊக்கமும், நம்பிக்கையும் மிகப்பெரியது. பல கதைகளை எழுதி முடித்தவுடனேயே நண்பர் பாலாஜி ராஜூவுக்கு அனுப்புவேன். அவர் வாசித்துச் சொல்லும் கருத்துக்கள் என் கதைகளை மேம்படுத்துவதற்கு உதவின. நான் எழுதும் எல்லா எழுத்துக்களையும், மொழியாக்கங்களையும் முதலில் என் மனைவி அனுதான் வாசிப்பார். வாசிக்கையில் அவரது முக பாவனைகளில் ஏற்படும் மாற்றத்தை வைத்து, கதையில் திருத்தங்கள் தேவைபடுகின்றது என்பதை உணர்ந்து கொள்வேன்.  கதையை ஒரு பெண்ணின் பார்வையில் வாசிக்கும்போது நாம் தவறவிட்ட இடங்களைக் கண்டு கொள்ள முடியும். அவரது திருத்தங்களை மிகுந்த உறுதியோடு முன் வைப்பார். என்னால் அவற்றை எப்போதும் மறுக்க முடிந்ததில்லை. என் இலக்கியத் தோழமைகள் ஜமீலா, ஸ்வர்ணா, ஆஸ்டின் சௌந்தர், முத்து காளிமுத்து, மதன், விஸ்வனாதன் மகாலிங்கம், ஷங்கர் பிரதாப், சு. வெங்கட், பாலசுப்ரமணியம் நாச்சிமுத்து, அருண்குமார் அருணாசலம், இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம், வெங்கட பிரசாத், ஜி.எஸ்.எஸ்.வி. நவீன் போன்றோர் என் கதைகளை வாசித்து அவ்வப்போது தங்கள் கருத்துக்களை என்னிடம் தெரிவிப்பார்கள். எல்லாருக்கும் நன்றி என்ற ஒற்றைச் சொல்லில் என் அன்பையும், பேருவகையையும் ஏற்றி வணங்குகிறேன்.

பெற்றோர்

நான் இளம் வயதிலேயே வாசிப்பிலும், எழுத்திலும் ஈடுபடுவதற்கு முக்கிய காரணம் என் அம்மா. நான் சிறுவயதில் படைப்பூக்கமாக எது செய்தாலும் எல்லாரிடமும் சொல்லி பெருமைப்படுபவர் என் அப்பா. இப்பவும் அப்படித்தான். அவர்கள் இருவரும் இந்த நிகழ்வில் இருப்பது எனக்குப் பெருமை. மகன் தந்தைக்காற்றும் உதவியாக இந்த நூல் வெளியீடே அவர்களுக்கு நான் செலுத்தும் ஒரு வகையான நன்றிதான்.

கோவை நண்பர்கள்

இந்த விழா நிகழ்வதெற்கென்று பல நண்பர்கள் உதவினார்கள். இருபது ஆண்டுகளாக இந்தியாவில் வசிக்காத எனக்கு அவர்கள் செய்த பேருதவியின் காரணமாகத்தான் இந்த விழாவை நிகழ்த்த சாத்தியமாகியிருக்கிறது. க்விஸ் செந்தில் எல்லா ஏற்பாடுகளையும் செய்து உதவினார். ஜி.எஸ்.எஸ்.வி. நவினும், விஜய் சூரியனும், நம்ம வெரி ஓன் யானை டாக்டர் பவித்ரா ஆகியோரை நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன். நிகழ்வுகளை ஸ்ருதி டிவி கபிலன் ஒளிப்பதிவு செய்வது எனக்குப் பெருமை. அவருக்கும் என் இதயபூர்வமான நன்றி.

நீங்கள்

இறுதியாக, இந்த அவையில் அமர்ந்திருக்கும் நீங்கள். முதலில் நான் ஓர் இலக்கிய வாசகன்; அப்புறம்தான் எழுத்தாளன். எனவே நீங்கள்தான் நான். ஓர் இலக்கிய வாசகன் ஆழ்ந்து பயணம் கொள்ளும் வகையில் இந்த நூல் அமைந்திருக்கிறது என்று உறுதியாக நம்புகிறேன். வாசிக்கையில் அவ்வெண்ணமே உங்களையும் ஆட்கொள்ளும் என்றும் எதிர்பார்க்கிறேன்.


19 ஜூலை, 2024

நன்றி ஜெ!


 

அன்புள்ள ஜெ,

ஆசிரியரின் கருணை என்பது தாயின் கருணையையும் மீறியது. நீங்கள் என் விழாவுக்கு வருகிறேன் என்று ஒப்புக் கொண்டது, விழாவுக்கு வந்திருந்து சிறப்புரையாற்றியது, நிறைய விஷ்ணுபுரம் நண்பர்கள் கலந்து கொண்டது, அவர்கள் இந்த விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்தது என்று அனைத்துமே உங்களது பெருங்கருணையால்தான் நடந்தது. அனைத்துக்கும் நன்றி என்ற சொல்லை சமர்ப்பிப்பதன் போதாமையை உணர்கிறேன். எப்போதுமே வழங்குகின்ற இடத்திலேயே இருக்கின்ற உங்களது மேன்மையின் மீது எனக்குள்ள பிரமிப்பு உங்கள் அருகாமையில் கழித்த தருணங்களில் பன்மடங்கு அதிகமாயிற்று. என் உள்ளத்தில் ஓடும் நன்றியுணர்வை எவ்வளவு சொன்னாலும் மாளாது. என்னைப் போன்று ஆயிரக்கணக்கானவர்களுக்கு நீங்கள் வழங்கிக் கொண்டிருக்கும் கொடையால்தான் அறிவுத்துறையில் தொடர்ந்து ஈடுபடும் உத்வேகம் கிடைக்கிறது. 

நீங்கள் ஆற்றிய உரை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதுகிறேன். உரை கேட்ட பல நண்பர்களும் அவ்வண்ணமே கருதினார்கள். அந்த உரையின் மீதான ஒரு சிறு விவாதமே விஷ்ணுபுரம் அமெரிக்க குழுவில் நடந்தது. இலக்கியத்தில் தனியனுபவத்தின் இடம் என்ற அந்த உரை என்னைப் போன்று எழுத விழைவோருக்கு ஒரு ஆவணமாக என்றும் இருக்கும். உங்களை விழாவுக்கு உரையாற்ற வேண்டும் என்று அழைத்தபோது, நீங்கள் பொதுவான ஒரு இலக்கிய உரையை ஆற்ற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமாக இருந்தது. நீங்கள் செய்ததும் அதுவே.  இந்த உரையிலிருந்து நான் பெற்றுக் கொண்டவை ஏராளம். ஏற்கனவே பல விஷயங்களை உங்களிடமிருந்து அறிந்தேன் என்றாலும், அவை ரீஇன்ஃபோர்ஸ் செய்யப்படும் போது மனதில் ஓர் உத்வேகம் எழுகிறது. அந்த உரையின் கால அளவுகூட உங்கள் கருணையின் வெளிப்பாடுதான் என்பதை அறிந்தபோது நெகிழ்ந்து விட்டோம். 



உங்களது உரையிலும் சரி, மறுநாள் உங்களை அறையில் சந்தித்தபோது இலக்கியம் தொழிற்படும் நுட்பங்கள் குறித்து நீங்கள் குறிப்பிட்டவை அனைத்தும் நான் தொடர்ந்து எழுதுகையில் துணை நிற்கும். சிறுகதை வடிவம் மிகச் சவாலானது. ஆனால் நீங்கள் கொடுத்த வழிமுறைகளைப் பின்பற்றினாலேயே ஒருவர் ஒரு நல்ல சிறுகதையை எழுதி விடமுடியும். சிறுகதையில் தத்துவம் அலசப்படலாமா, எனில் அது கதைக்குள் எவ்வாறு பயின்று வர வேண்டும் என்று ஒரு உதாரணம் கொடுத்தீர்கள். நேற்று நினைத்தாற்போல் உங்கள் தளத்துக்குச் சென்று ‘எண்ண எண்ணக் குறைவது’ வாசித்தேன். அப்படியே நீங்கள் சொன்ன இலக்கணத்தில் எழுதப்பட்ட கதை! உங்களோடு கழித்த அந்த அரைநாள் விலைமதிப்பற்றது. சிறுகதைத் தொழில் நுட்பம் குறித்தும், உங்கள் படைப்புகளின் மொழிபெயர்ப்பு எவ்வாறு அணுகப்படவேண்டுமென்பது குறித்தும் (வரும் சனியன்று நான் மொழிபெயர்த்த பவாவின் நூலை பத்தாயத்தில் வைத்து வெளியிடலாமென்று பவா இன்று என்னை அழைத்தார்), என் வேண்டுகோளுக்கிணங்க தாமஸ் மன்னின் மந்திர மலையை எவ்வாறு வாசிக்க வேண்டுமென்பது குறித்தும் உரையாடியது என்றும் என் மனதில் இருக்கும். 



இம்முறை க்விஸ் செந்தில் என்ற அற்புதமான மனிதரை நான் நண்பனாக அடைந்திருக்கிறேன். விழாவின் ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டுமென்று அவரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது சற்றும் தயங்காமல் எல்லா உதவிகளையும் செய்தார். அவரும் நிறைய ஆலோசனைகளைக் கொடுத்தார். விழா அன்று வாயிலிலேயே நின்று “ஜெகதீஷ், வர்ற நிறைய பேரை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நான் நின்று அவர்களை வரவேற்கிறேன். நீங்க உள்ள போய் ஆகவேண்டியதைப் பாருங்க,” என்று சொல்லி வாயிலிலேயே நின்று கொண்டார். சற்றே தயக்கத்துடனும், இறுக்கத்துடன் இருந்த என்னையும், அனுவையும் அவருடைய நட்பான கமெண்டுகளால் இலகுவாக்கினார். அவரை என்றென்றும் நினைவில் கொண்டிருப்பேன். அவர் முகம் நினைவுக்கு வரும்போதெல்லாம் அது ஒரு கௌபாய் தொப்பியை அணிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அவரும் நீங்களும், ஈரோடு கிருஷ்ணனும் ஸ்பகெடி வெஸ்டர்ன் கௌபாய் திரைப்படங்கள் குறித்து மேற்கொண்ட தீராத உரையாடல் எனக்கு எதுவுமே புரியாவிட்டாலும் கூட சுவாரசியமானது.  அவ்வப்போது ஜெய்சங்கர், மனோகர், ரவிச்சந்திரன் நடித்த கௌபாய் படங்களின் ரெஃபெரென்ஸ் வந்து போகும் போது கொஞ்சம் புரிந்தது. ஆனால் ஒன்று, கௌபாய் உடையோடு இரண்டு ஹோல்ஸ்டரிலும் செருகிய துப்பாக்கிகளோடு நியூயார்க்கில் ஆண்டுதோறும் நடைபெறும் சார்லஸ் ப்ரான்ஸனின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு நீங்கள் செல்வதாக இருந்தால் நான் உள்பட நம் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் பலர் அதில் இணைந்து கொள்வது உறுதி. க்விஸ் செந்தில் முன்னிலை வகிப்பார் என்று நினைக்கிறேன்.


ஜி.எஸ்.எஸ்.வி. நவினின் இலக்கியப்பார்வை மீதும், அவரது எழுத்துக்கள் மீதும் எனக்குப் பெருமதிப்புண்டு. இந்த விழாவுக்காக எனக்கு நிறைய விஷயங்களில் உதவினார். எப்போதும் அழைத்தாலும் முகம் சுளிக்காமல் பேசி, நான் கேட்ட காரியங்களை உதவினார். தொகுப்புரைக்கு பவித்ராவை அவர்தான் கேட்டுக்கொண்டார். விஜய் சூரியன் பதாகைகளுக்கு உதவினார். மீனாம்பிகை மறைமுகமாகப் பல உதவிகளைச் செய்திருக்கிறார். இன்னும் எத்தனை பேர் எனக்குத் தெரியாமல் உதவியிருக்கிறார்களோ! ஒன்று மட்டும் நிச்சயம். அவர்களை அனைவரையும் இணைத்த ஒற்றைக் கயிறு நீங்கள்தான். உங்களுக்கு நன்றி சொல்வதன் மூலம் அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

விழாவுக்கு கோவையின் முக்கிய படைப்பாளிகள் பலரை அழைத்திருந்தேன். நாஞ்சில் நாடன் சார் வந்திருந்து அரங்கத்தை இன்னும் பெரிதாக்கி விட்டார். செல்வேந்திரன், நரேன், விஜய் சம்மங்கரை, மொழிபெயர்ப்பாளர் கே.வி. ஜெயஸ்ரீ என்று பல படைப்பாளிகளும், நண்பர்கள் லக்ஷ்மண் தசரதன், ஓவியர் அருண்குமார் அருணாசலம் ஆகியோர் வந்திருந்தது என் மனதுக்கு நிறைவாக இருந்தது.


இம்முறை செய்ய நினைத்து இயலாமல் போன பல விஷயங்களில் ஒன்று நித்யவனத்துக்கு செல்லுதல். சில மருத்துவப்பரிசோதனைகளுக்காக நானும், அனுவும் தொடர்ந்து மருத்துவமனை செல்ல நேரிட்டு விட்டது. எனவேதான் திட்டமிட்ட நிறைய விஷயங்களைச் செய்ய இயலவில்லை. உங்கள் அமெரிக்க வருகையை ஆவலுடன் எதிர் நோக்கிக் காத்திருக்கிறேன்.

மீண்டும் நன்றி

அன்புடன்

ஜெகதீஷ் குமார்


6 ஜூலை, 2024

என் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு



இன்று (ஜூலை 6, 2024, சனிக்கிழமை) கோவையில் என் முதல் சிறுகதைத் தொகுப்பு பொற்குகை ரகசியம் வெளியிடப்படுகிறது. வம்சி பதிப்பகம் வெளியீடாக வரும் இந்த நூலை எழுத்தாளர் ஜெயமோகன் வெளியிடுகிறார். என் பெற்றோர் பெற்றுக் கொள்கின்றனர். விழா இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அரங்கில் மாலை 5.30 துவங்கி நிகழும். எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், பதிப்பாளருமான கே.வி. ஷைலஜாவும், எழுத்தாளரும், என் நண்பருமான ஜி.எஸ்.எஸ்.வி. நவினும் பேசுகிறார்கள். என் மனைவி அனுஷா முதன் முதலாக மேடையேறுகிறார், வரவேற்புரை நிகழ்த்துவதற்காக. நண்பர் பவித்ரா தொகுத்து வழங்குகிறார். 



இத்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் சொல்வனம் இதழிலும், பிற, பதாகை, வல்லினம், உயிரோசை, அரூ ஆகிய இதழ்களிலும் வெளிவந்தன. அவ்விதழ்களுக்கு என் நன்றி. சொல்வனத்தின் ஆசிரியர்கள் பாஸ்டன் பாலா மற்றும் மைத்ரேயன் இருவரும் அந்த இதழில் எனக்குத் தந்த இடம் எனக்களித்த ஊக்கமும், நம்பிக்கையும் மிகப்பெரியது. பல கதைகளை எழுதி முடித்தவுடனேயே நண்பர் பாலாஜி ராஜூவுக்கு அனுப்புவேன். அவர் வாசித்துச் சொல்லும் கருத்துக்கள் என் கதைகளை மேம்படுத்துவதற்கு உதவின. நான் எழுதும் எல்லா எழுத்துக்களையும், மொழியாக்கங்களையும் முதலில் என் மனைவி அனுதான் வாசிப்பார். வாசிக்கையில் அவரது முக பாவனைகளில் ஏற்படும் மாற்றத்தை வைத்து, கதையில் திருத்தங்கள் தேவைபடுகின்றது என்பதை உணர்ந்து கொள்வேன்.  கதையை ஒரு பெண்ணின் பார்வையில் வாசிக்கும்போது நாம் தவறவிட்ட இடங்களைக் கண்டு கொள்ள முடியும். அவரது திருத்தங்களை மிகுந்த உறுதியோடு முன் வைப்பார். என்னால் அவற்றை எப்போதும் மறுக்க முடிந்ததில்லை. என் இலக்கியத் தோழமைகள் ஜமீலா, ஸ்வர்ணா, ஆஸ்டின் சௌந்தர், முத்து காளிமுத்து, மதன், விஸ்வனாதன் மகாலிங்கம், ஷங்கர் பிரதாப், சு. வெங்கட், பாலசுப்ரமணியம் நாச்சிமுத்து, அருண்குமார் அருணாசலம், இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம், வெங்கட பிரசாத், ஜி.எஸ்.எஸ்.வி. நவீன் போன்றோர் என் கதைகளை வாசித்து அவ்வப்போது தங்கள் கருத்துக்களை என்னிடம் தெரிவிப்பார்கள். எல்லாருக்கும் நன்றி என்ற ஒற்றைச் சொல்லில் என் அன்பையும், பேருவகையையும் ஏற்றி வணங்குகிறேன்.



நான் தீவிரமாக எழுத்தில் ஈடுபடுவதற்கு அ. முத்துலிங்கம் அவர்களின் பாராட்டும், ஊக்கமும் ஒரு காரணம். முதலில் என் ஆங்கில மொழியாக்கங்களை வாசித்து விட்டுத்தான் அவர் என்னை அழைத்தார். அவருடன் அலைபேசியில் பேச அமைந்த ஒவ்வொரு தருணமும் நான் ஆசிர்வதிக்கப்பட்டதாகவே உணர்கிறேன். ஒவ்வொருமுறை உரையாடும்போதும் அவருடைய உற்சாகத்தையும், செயல் ஊக்கத்தையும் எனக்கும் மடை மாற்றிவிட்டு விடுவார். தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படும் பெரும்பாலானவற்றை அவர் வாசித்து விடுவார். அவற்றில் என் மொழியாக்கம் தனித்துத் தெரிவதாகவும், அதற்குக் காரணம் ஆங்கிலத்தில் நான் மொழியாக்கம் செய்யும் புனைவுகள் செறிவான இலக்கிய மொழியில் அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டது என்னை மகிழ்ச்சியிலும், மேலும் எழுத்தில் ஈடுபட வேண்டும் என்ற செயலூக்கத்திலும் ஆழ்த்தியது. என் மொழியாக்கங்களை மட்டுமல்ல, என் சொந்தப் புனைவுகளையும் அவர் உடனுக்குடன் வாசித்துத் தன் கருத்துக்களைச் சொல்வார். சில கதைகளின் முடிவுகள் பலவீனமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். பல கதைகளில் என் மொழியையும், கற்பனையையும் மனம் திறந்து பாராட்டியிருக்கிறார். இந்தத் தொகுப்புக்கு முன்னுரை எழுதித் தருமாறு அவரிடம் வேண்டிக் கொண்டபோது மிகுந்த கருணையோடு ஓர் அழகிய முன்னுரையை எழுதிக் கொடுத்தார். அவரோடு தொடர்பு கொள்ளும் தருணங்களை எனக்கு வழங்கிய பேரிறையை நன்றியுடனும், உவகையுடனும் நினைத்துக் கொள்கிறேன்.

இந்தத் தொகுப்பை வம்சியில் வெளியிட இயலுமா என்று மிகுந்த தயக்கத்துடன் ஷைலஜா அம்மாவிடம் கேட்டேன். பவாவும், அவரும் அமெரிக்கா வந்திருந்தபோது, நண்பர் ராஜன் வீட்டில் இருவரையும் சந்தித்து, அவர்களோடு இரு நாட்கள் செலவழிக்கும் வாய்ப்பு கிடைத்தது. என் மொழியாக்கங்கள் குறித்து அவர்கள் ஏற்கனவே அறிந்திருந்தார்கள். அவர் என் கோரிக்கையை உடனே ஏற்றுக் கொண்டு வம்சியில் வெளியிடுவது எங்களுக்கு மகிழ்ச்சியே என்று தெரிவித்தார். வம்சி பதிப்பகம் தமிழகத்தின் மிக முக்கிய இலக்கியப் பதிப்பகங்களில் ஒன்று. அதிலிருந்து என் முதல் சிறுகதை தொகுப்பு வெளிவருவது எனக்குப் பெருமை. ஷைலஜா அம்மாவுக்கு என் எளிய நன்றி. 

சிறுகதைத் தொகுப்பை வெளியிட இயலுமா என்று அவசர மின்னஞ்சலை எழுத்தாளர் ஜெயமோகனுக்கு அனுப்பினேன். வருகிறேன் என்று உடனே பதில் போட்டார். புதிய எழுத்தாளர்களை உற்சாகப்படுத்துவதில் அவருக்கு இணை யாருமில்லை. எதையும் எதிர்பாராது கொடுத்துக் கொண்டே இருக்கும் குணம் அவருடையது. இந்த நிகழ்விலும் அதுவே நிகழ்ந்திருக்கிறது.


இந்த விழா நிகழ்வதெற்கென்று பல நண்பர்கள் உதவினார்கள். இருபது ஆண்டுகளாக இந்தியாவில் வசிக்காத எனக்கு அவர்கள் செய்த பேருதவியின் காரணமாகத்தான் இந்த விழாவை நிகழ்த்த சாத்தியமாகியிருக்கிறது. க்விஸ் செந்தில் எல்லா ஏற்பாடுகளையும் செய்து உதவினார். ஜி.எஸ்.எஸ்.வி. நவினும், விஜய் சூரியனும், பவித்ரா ஆகியோர் செய்த உதவிகள் குறித்து விழா முடிந்ததும் எழுத வேண்டும். அவர்களை நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன். நிகழ்வுகளை ஸ்ருதி டிவி கபிலன் ஒளிப்பதிவு செய்வது எனக்குப் பெருமை. மகிழ்மலர் பாடலுடன் நிகழ்வு துவங்கும்.

அமெரிக்காவில் வாழும் என் இலக்கிய நண்பர்கள் சிலரிடம் என்னைக் குறித்தும், என் கதைகள் குறித்தும் காணொலி பதிவு செய்து அனுப்புமாறு கேட்டுக் கொண்டிருந்தேன். நண்பர்கள் ஆஸ்டின் சௌந்தர், ஜமீலா, விபி என்கிற வெங்கட பிரசாத் மூவரும் அவர்களது காணொலிகளை எனக்கு அனுப்பியிருக்கிறார்கள். அவையும் விழா மேடையில் காட்டப்படும்.  கோவையில் உள்ள படைப்பாளிகளையும், இலக்கிய நண்பர்களையும், சுற்றத்தையும், நட்பையும் அழைத்திருக்கிறேன். அழைக்க முடியாத நண்பர்கள் இதையே அழைப்பாகக் கருதி விழாவுக்கு வருமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.

 

மேலும் வாசிக்க