முதற்கனல் - அத்தியாயக் குறிப்புகள்

 

  1. நாகர் குலத்தலைவி மானசா தேவி தன் மகன் ஆஸ்திகனுக்கு, தன் குலக்கதையும், அவன் ஜரத்காரு முனிவருக்கு எப்படிப் பிறந்தான் என்பதையும் சொல்கிறாள்.

  2. ஆஸ்திகன் தன் அன்னையை விட்டு அஸ்தினாபுரம் செல்கிறான். அஸ்தினாபுர வர்ணணை- மன்னன் ஜனமேஜயனின் யாகத்தின் இறுதி நாள் - யாக ஏற்பாடுகள். மன்னர் வருகை.


  1. சர்ப்பசத்ர வேள்விக்கான காரணம் - ஜனமேஜயன் பகடையாட்டத்தில் ஈடுபட்டு கட்டுண்டு கிடந்தான் - ரிஷி உத்தங்கர் வருகையைக் கவனியாது இருந்தான் - அவர் சினங்கொண்டு திரும்பினார்- நாகங்களால்தான் உன் குலத்துக்கே அழிவு என்றார் - அவரை நள்ளிரவில் அவர் குடிலில் சென்று சந்தித்து தன் குலக் கதையை சொல்லுமாறு வேண்டினான். குருக்ஷேத்ரப் போரில் அபிமன்யு மாண்டான் - அவன் மனைவி உத்தரை பரீட்சித்தைப் பெற்றெடுத்து மாண்டாள்-அவர் அவன் தந்தை பரீட்சித்தின் கதையைச் சொன்னார்-  புதல்வர்கள் பிறந்தபின்னும் அரசப் பொறுப்பு ஏற்காமலே இருந்தான்.வேட்டையாடி அலைந்தான்-சமீக முனிவரை வனத்தில் கண்டு அவர் பேசாதது குறித்துக் கோபம் கொண்டு ஒரு பாம்பை அடித்து அவர் கழுத்தில் போட்டான் - அவர் மகன் கவிஜாதன் குரங்குருவில் அவனிடம் வந்து நாகங்களின் சாபத்தை அவனிடம் சொன்னான். குருக்ஷேத்ர மண்ணிற்கு அவனை அழைத்துச் சென்று காட்டினான். அங்கு இருளே நாகங்களாகி அலைந்தது. குலகுரு வைசம்பாயனர் காமம், அகங்காரம் அடக்க வேள்வி செய்யச் சொன்னார். ஏழாம் நாள் நான் இரண்டையும் வென்றேன் என்ற பரீட்சித்தின் அகங்காரத்தால் தட்சன் என்ற நாகம் மாதுளம்பழத்தில் புழுவாய் நுழைந்து அவன் உதடுகளில் தீண்ட பரீட்சித்தும் இறந்தான். இச்சாபத்தை நீக்க ஜனமேஜயன் வைசம்பாயனரின் அறிவுரைப்படி சர்ப்பசத்ர வேள்வியைத் தொடக்கி நடத்தினான். 40 நாட்கள்.அதன் இறுதி நாள் இது.


  1. வேள்விச்சாலைக்குள் நுழைந்த ஜனமேஜயனுக்கு இளமைக்கால நினைவொன்று வருகிறது. தன் சகோதரர்களுடன் காட்டில் வேள்வி செய்து விளையாடுகிறான். யாகக்குதிரைக்கு பதில் அப்போது பிறந்த நாய்க்குட்டியை வைக்கிறான்- அது மாமிசத்தை நக்க அதை அடித்து அதன் கண்ணை குருடாக்குகிறான் - நாய்த்தெய்வம் அதனுள் குடி கொண்டு நீயும் இப்படி நல்லது கெட்டது தெரியாமல் அலைவாய் என்று சொன்னது நினைவில் வருகிறது - வேள்வி துவங்குகிறது - ஆகுதிகள் சொறியப்படுகிறது - பின் மனிதகுலத்தீமையனைத்தும் நாகங்கள் உருவில் யாகக்குழியில் இறங்கிக் கருகுகின்றன. எங்கும் ஒளி - வைசம்பாயனர் யாகம் முடிந்ததென மகிழ்கிறார் - ஜனமேயன் இன்னும் தட்சனும், தட்சகியும் வரவில்லையே என்கிறான்.- குறி மூலம் அவன் இந்திரனைத் தஞ்சம் அடைந்திருப்பது தெரிகிறது. ஜனமேஜயன் ஆணைப்படி வைசம்பாயனர் இந்திரனை ஓர் அத்தி மரத்தில் கட்டி நிறுத்துகிறார் - இப்போது வரச்சொல்லுங்கள் இருவரையும் என்கிறான் ஜனமேஜயன். ஆஸ்திகன் இடையிட்டு, தனக்கு இன்னும் காணிக்கை தரவில்லை. தான் ஜரத்காரு மகனென்பதால் பிராமணன் என்றும், மானசாதேவியின் மகனென்பதால் தட்சகன் தன் மூதாதை என்றும் சொல்கிறான்- தட்சகனின் உயிரை காணிக்கையாகக் கேட்கிறான்.- ஜனமேஜயன் சினந்தாலும் வேறு வழியின்றித் தருகிறான். ஆனால் மரபுப்படி அவரை வழியனுப்பமாட்டேன் என்றான்.- ஜனமேஜயன் முனிவனை அவமதித்தான் என்றால் என்ற சொல் வரட்டும். - ஆஸ்திகனோ மனித குல நன்மைக்காகவே இதைச் செய்தேன் என்றான்.  நீ காமத்தையும் அகங்காரத்தையும் அழித்து சத்வத்தை நிலைநிறுத்த முயன்றாய். ஆனால் பிரகிருதி ஆகிய இந்த உலகம் முக்குணங்களினாலும் ஆனது. ஒரு குணத்தை மட்டுமே நிலை நிறுத்த முயன்றால் அது அழிவுக்கு மட்டுமே வழி வகுக்கும். இதைச் சொல்வது  என் அறம் என்றான். ஜனமே அறம் பற்றி உமக்குத் தெரியாது என்றான்- அறத்தை முழுதறிய ஏழுதலைமுறையாய் முனி வியாசன் தவம் புரிகிறார். அவரை அழைப்போம் - அவர் சொல்லட்டும் இது அறமா, இல்லையா என்று, என்றான் ஆஸ்திகன்.

  2. குருக்ஷேத்ரத்தின் அருகில் வியாசவனத்தில் இருந்தார் வியாசர். போர்முடிந்து அனைவர்க்கும் நீர்க்கடன் செய்தபின் பாரதவர்ஷமெங்கும் அலைந்தார். குமரிமுனைப் பாறையில் மா என்ற ஒற்றைச் சொல்லை அடைந்தார். பின் தண்டகாரணியம் சென்று தவமியற்றினார் - நூறாண்டு மா என்ற சொல்லோடே இருந்தார் - தான் பிறந்த காளிந்தி நதிக்கரை சென்றார். அவர் உடலில் கொண்ட மீன்வாசனையை அவர் குலத்தவர் அறிந்தனர் - யமுனா நதிக்குள்ளிருந்து சித்தி என்ற மீன் வெளிவந்ததும் வியாசரின் அகம் சொற்களால் நிறைந்தது. - பின் குருக்ஷேத்ரம் வந்து தன் காவியத்தை முடித்தார் - அவர் முடித்த அதே தினம் தான் ஆஸ்திகன் அவரை அழைத்து வரச்சொன்னது - வியாசருக்கு வயது இருநூறு - உடல் தளர்ந்து குழந்தை போலிருக்கிறார் - வைசம்பாயனர் அவரை அழைத்துச் செல்கிறார் - வியாசர் அங்கு சென்று ஆஸ்திகன் சொன்னது உண்மையே என்றார் - தன் காவியத்தைப் பாடுமாறு வைசம்பாயனைப் பணிக்கிறார்.

  3. அதிகாலை - அஸ்தினாபுரியின் கோட்டைக்கு வெளியே சூதர்கள் சந்திர வம்சத்துக்குலப் பெருமையைப் பாடுகிறார்கள் -  சுருதகர்ணமும் , காஞ்சனமும் ஒலிக்க விடிகிறது. அமைச்சர் பலபத்ரர் இருண்ட முகத்தோடு தேரில் உள்ளே நுழைகிறார் - சந்தனு நோய்வாய்ப்பட்டு இறந்த அன்றே மனம் பிறழ்ந்த நிமித்தினொருவன் இது சந்த்ர வம்சத்தை அழிக்கும் எரிவிண்மீன் உதித்து விட்டது என்று சொல்லி உயிர்விடுகிறான். அவனது மகன் சித்ராங்கதனுக்கு யோனி கட்டம் இல்லை. விசித்திர வீர்யன் நிரந்தர நோயாளி. இருந்தும் சித்ராங்கதனுக்கு மணம் முடித்து அரியணை ஏற்றுகிறார்கள் - மக்கள் மனதில் இது குறித்துப் பெரிய உற்சாகம் இல்லை.- அவனும் மனைவியை விட ஆடவரையே அதிகம் விரும்புகிறான் - ஒரு நாள் கானகம் சென்று நீர் அருந்துகையயில் தடாகம் ஒன்றிலிருந்து சித்ராங்கதன் என்ற கந்தர்வனால் கவரப்பட்டு மறைகிறான். தாய் சத்யவதி நிமித்திகர் மூலம் அவன் இறந்ததை அறிகிறாள்.- விசித்திரவீரியன் மன்னனாக இயலாததால் அவளே அரசு பதவி ஏற்கிறாள் - இந்நிலையில் அமைச்சர் பலபத்ரர் ஓலையொன்றைக் கொண்டு வருகிறார் - அதில் பிற நாடுகள் போர் தொடுக்கும் திட்டம் தெரிகிறது. - பீஷ்மர் உள்ளவரை கவலை இல்லை என்கிறார்கள். ஆனாலும் அதற்குள் விசித்திர வீரியனுக்கு பட்டமளிக்க முடிவு செய்கிறார்கள்.

  4. சத்யவதியின் கதை - யமுனை நதிக்கரையில் மச்சபுரியின் மீனவர் தலைவன் சத்யவானின் மகள் - அவன் இளைஞனாக இருந்தபோது கனவில் கண்ட மீனுருவம் கொண்ட பெண்ணை அடைய யமுனை செல்கிறான் - யமுனையில் மீனன்னையின் பெண்களில் ஒருத்தியான அத்ரிகையைக் கண்டு கந்தர்வ மணம் முடிக்கிறான் - அவளுக்குப் பிறந்தவள் கரிய அழகி சத்யவதி (மச்சகந்தி) - அத்ரிகை மறைகிறாள் - சத்யவான் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்கிறான் - சத்யவதியின் அழகும், உடலின் நறுமணமும், யமுனையிலிருந்து அவள் கொணரும் முத்துக்களும் சூதர் பாடல் வழியே மக்களை அடைகிறது.  சந்த்ர வம்ச சந்தனு ஒருநாள் அவளைக் கண்டு மையலுறுகிறான். அவளை மணம் முடிக்கிறான். அவள் மீதே பித்தாக இருக்கிறான். அவள் கொணர்ந்த 220 முத்துக்களின் வாசனையில் பித்தாயிருக்கிறான். - கடைசி முத்தும் தீர்ந்தபின் சுயநிலை அடைகிறான். நோய்வாய்ப்பட்டு இறக்கிறான். சத்யவதி அரசுப்பொறுப்பு ஏற்கிறாள்- ஆயிரம் கண்களாலும், ஆயிரம் கைகளாலும் ஆட்சி செய்கிறாள்.

  5. சந்தனுவின் மகனான பீஷ்மர் வில்வித்தையையே யோகமெனக் கொள்பவர். அவர் பயிற்சியிலிருந்தபோது அரசி அழைக்கும் செய்தியைச் சொல்கிறான் சேவகன். அரசியைச் சந்திக்கிறார் பீஷ்மர். சத்யவதி போர்செய்தி குறித்த ஓலை பற்றிச் சொல்கிறாள். அழிவைத் தவிர்க்க மகன் விசித்திரவீர்யனுக்கு முடி சூட்ட வேண்டும், அதற்கு அவனுக்கு மணம் முடிக்க வேண்டும் என்கிறாள். ஆனால் அவன் உடல் நிலையைக் காரணம் காட்டி 55 தேசங்களில் யாரும் பெண் கொடுக்கத் தயாராயில்லை. காசி மன்னன் பீமதேவன் விசித்திரவீரியனின் மருத்துவரைக் கேட்டபின் சொல்கிறேன் என்றானாம். அவன் மகள்கள் அம்பை, அம்பிகை, அம்பாலிகைக்கு சுயம்வரம்.அஸ்தினாபுரிக்கு மட்டும் அழைப்பில்லை.அவர்கள் பேரழகிகள். சத்யவதி இந்த அவமானத்தைத் துடைக்க பீஷ்மர் அவர்களைக் கவர்ந்து வந்து விசித்திர வீரியனுக்கு மணம் முடிக்க வேண்டும் என்கிறாள். பீஷ்மர் அது தர்மமல்ல என்கிறார். மேலும் அவர் நைஷ்டிக பிரம்மசாரி. அவர்களை மணம் செய்ய விரும்பினால் மட்டுமே அவர்களைக் கவர முடியும் என்கிறார். சத்யவதி இது அரசியின் ஆணை. மீறுவது க்ஷத்ரிய தர்மமல்ல என்கிறாள். பீஷ்மர் சொல்வதறியாது வெளிவருகிறார். முது சூதர் தீர்க்கசியாமரை அழைத்து ஆலோசனை கேட்கிறார். குருடரான அவர் பாடலில் பதிலிறுக்கிறார். முதலில் யமுனையைப் புகழ்ந்து பாடுகிறார். அவர் பாடலில் யமுனை நதிக்கரையில் பராசர முனிவர் வந்து நிற்கும் சித்திரம் தெரிகிறது. ஆதிவசிட்டரின் அத்தனைப் பிள்ளைகளையும் சக்தி ஒருவனைத் தவிர கிங்கரன் என்னும் அரக்கன் தின்று விடுகிறான். துயருற்ற வசிட்டர் அனைத்தையும் துறந்து உயிர் விட நினைக்கிறார். அவரது நாவிலிருந்து வெளியேறும் வேதங்கள் வெளியில் ஒலிப்பதைக் காண்கிறார். அது தன் மகன் சக்தியின்மனைவியின் வயிற்றில் இருக்கும் கருவே என உணர்கிறார்.  நிமித்திகர் இக்குழந்தையும் கிங்கரனால் கொல்லப்படும் என்கிறாள். அக்கருவைக்காக்க கிங்கரனை கொல்லத்துணியும் அவர் தன்னையும் அறியாமல் அவனது பாவங்களை மன்னிக்கிறார். அவன் கந்தர்வனாக மாறி அவரை வாழ்த்தி, அவருக்குப் பிறக்கும் மகன் நிறைஞானத்துடன் பிறப்பான் என்று சொல்லி மறைகிறான். அக்குழந்தையே பராசரர். அவர் பூர்ணசம்ஹிதையை இயற்றுகிறார். அனைத்து முனிவர்களும் அதை நிறைஞான நூல் என்று போற்றுகிறார்கள். ஒரு இடையனின் குழலோசையில் மயங்கி வனவேங்கை தன் மலர்களை உதிர்ப்பது கண்டு, தன் நூலை நெருப்பிலிடத் துணிகிறார். நாரதர் அங்கு வந்து மதகரியைப் படைத்த நியதியே பறவையைப் படைத்தது என்றுணர்க என்றார். தன்னை மதகரியாகவே உணர்ந்த பராசரர் யமுனை நதிக்கரை சென்று அக்கரை செல்ல சத்யவானைக் கேட்கிறார். நிலவெழுந்தபின் படகெடுக்க இயலாது என்றுவிடுகிறான். பிறகு அங்கு படுத்திருந்தபோது ஒரு செம்படவப்பெண் வருவது கண்டு தன்னை அக்கரையில் விடச்சொல்கிறார். அவள் மணத்தில் மயங்கி படகிலேயே அவளை கந்தர்வ மணம் புரிந்து அவளுடன் கூடுகிறாள். பின் சென்றுவிடுகிறார். அவள் ஒரு மணற்தீவில் வசித்து ஒரு குழந்தையை பெற்றெடுத்து தந்தையிடம் ஒப்படைக்கிறாள். அவன் கருப்பாக இருந்ததால் கிருஷ்ணன் என்றும், தீவில் பிறந்ததால் துவைபாயணன் என்று அழைக்கப்பட்டான். மீனவக்குடிலில் வளர்ந்த மகாவியாசனுக்கு குருதியிலேயே வேதங்கள் இருந்தன. தன் ஏழுவயதில் கிளம்பி பராசரமுனிவரிடம் சென்று சேர்ந்து முதல்மாணவனாக ஆகி கற்கவேண்டியவை அனைத்தையும் கற்றார். தன் இருபத்தைந்தாவது வயதில் வேதங்களை கிருஷ்ண சுக்லசாகைகளுடனும் வேதாங்கங்களுடனும் இணைத்துத் தொகுத்து மகாவியாசனென்று அறியப்படலானார்.இக்கதையை சூதன் சொல்ல பீஷ்மருக்குத் தான் என்ன செய்யவேண்டுமென்று புரிந்தது.

  6. வேதவனத்தில் இருபது ஆண்டுகளாக வேதங்களைத் தொகுக்கும் முயற்சியில் உள்ளார் வியாசர். அவரைப் பார்க்க பீஷ்மர் வருகிறார். அவரை பின் தொடர்ந்து பசித்த சிம்மமான சித்ரகர்ணி வருகிறது. வியாசர் வகுப்பு முடிந்ததும் காண்கிறேன் என்றார். கங்கையில் பீஷ்மர் நீராடுகையில் சித்ரகர்ணி மறைந்திருந்து நோக்குகிறது. நான் உன்னைப் பிறவிகளாய் அறிவேன் என்றது. இவ்விளையாட்டு என்றும் தொடரும் என்றது. உண்டு முடித்து வியாசரைக் காணச் செல்கிறார் பீஷ்மர். வாயிலில் வெண்பசு ஒன்று அவரைக் கண்டு கத்துகிறது. உள்ளே சென்று வியாசரை வணங்கித் தன் பிரச்னையைச் சொல்கிறார். க்ஷத்ரியப் பெண்களைத் தூக்கினால் க்ஷத்ரியனுக்குப் பாவமில்லை என்று நூல்கள் சொல்வதாக வியாசர் சொல்கிறார். ஆனால் பெண்களின் உள்ளமும் அவர்கள் விடும் கண்ணீரும் தன்னைத் தடுப்பதாகச் சொல்கிறார் பீஷ்மர். வியாசர் அவருக்கு அவரது முன்னோர் சிபியின் கதையைச் சொல்கிறார். புறா ஒன்று அவரை அடைக்கலமடைகிறது. அதைத் தொடர்ந்த கழுகு அதை வேட்டையாடுவது தன் தர்மம் என்கிறது. தன்னைத் தஞ்சமடைந்தவர்களைக் காப்பது க்ஷத்ரிய தர்மம் என்கிறான் சிபி. க்ஷத்ரியனுக்கு உடலே ஆயுதம். எனவே தன் தசையை அரிந்து துலாக்கோலில் வைக்கிறான். ஆனாலும் புறாவின் எடை கூடியே இருக்கிறது. நான் பெண். என் சந்ததிகளின் எடையும் என்னில் இருக்கிறது என்றது புறா. மன்னன் தலை தாழ்த்தி தன்னையே தருகிறான். தன்னை அடைக்கலமடைந்தவனைக் கொல்லாது சென்றது கழுகு. புறாவையும் பறக்கவிடுகிறான் சிபி. பீஷ்மர் வியாசர் என்ன சொல்ல வருகிறார் என்பதை உணர்ந்தார். அப்போது சித்ரகர்ணி வாயிற்பசுவை இழுத்துச் சென்றது. இந்த விளையாட்டை நீயும் நானும் காலம் காலமாக விளையாடுகிறோம். இப்போதும் விளையாடலாம் வா என்றது. நானிப்போதும் அடைக்கலம் கேட்டேன் அது அவனுக்குக் கேட்கவில்லை என்றது பசு. வெளிவந்து பார்த்த வியாசர் அது சிம்மத்தின் தர்மம் என்றார். பீஷ்மர் புரிந்து வெளியேறினார். சித்ரகர்ணி பசுவைப்பிளந்து தின்றது. மண்ணை அறைந்து கர்ஜித்தது. அதைப்பார்த்து பிரமித்து நின்ற சூதனின் பாடலில் நுழைந்து அழிவின்மையை அடைந்தது.

  7. காசியில் நதிகள் சங்கமிக்கும் கரையில் சூதர்கள் இளவரசியர் மூவருக்கும் கதை சொல்கின்றனர். நாகர்களின் அரசன் தட்சனுக்கும், பிரசூதிக்கும் அவர்கள் காதலில் பிறந்த நாகக்குழந்தைகள் இருபத்து மூன்று. இருபத்து நான்காக அழகே உருவாகப் பிறந்ததவள் சதி. தன் மகள்களை முனிவருக்கும் தேவருக்கும் மணம் முடித்த தட்சன், தாட்சாயிணியான சதிக்கு மட்டும் தன் விஷத்தை வெல்லும் தன்மை கொண்ட விஷமுள்ளவன் மட்டுமே மணமகனாக வரவேண்டுமென்று பிரம்மனிடம் வரம் பெற்றான். நாரதர் சதியின் அவ்விஷம் கொண்டவன் சிவனே என்றார். சதி சிவனை நாடி தவமியற்றினாள். சிவன் வந்து அவளை மணந்து கொண்டு சென்றான். பொறாமையில் துடித்த தட்சன் தான் நடத்திய யாகத்தில் சிவனுக்கு மட்டும் அவியளிக்காது போனான். அங்கு நாகமாக வந்த சதியையும் திருப்பி அனுப்பினான். மீண்டும் வந்த சிவனும் சதியைத் திருப்பி அனுப்பினான். தந்தையின் வாயிலில் ஆயிரம் ஆண்டு தவம் செய்தாள் சதி. பின் தன் தந்தையின் வேள்வித்தீயில் தன்னையே ஆகுதியாக்கி சிவனை அடைந்தாள் சதி என்றனர் சூதர். மன்னன் பீமதேவனுக்கு சுயம்வரத்தில் தொல்லை வந்து நேருமோ என்று சஞ்சலம்.  சிற்பி வாமதேவர் இந்த சுயம்வரத்தில் அவன் மகள்களுக்கு மணம் நிகழும் ஆனால் அவன் விரும்பும்  மணம் நிகழாது என்றான். ஏனோ சூதர்கள் அன்று சொன்ன தாட்சாயிணி கதை அவன் மனதில் வந்து போனது.

  8. காசி அரசி புராவதி சாளரம் வழியே படகுகளைப் பார்த்துக் கொண்டு இருக்கிறாள். சேடி வந்து சுயம்வரப்பந்தலில் நடந்ததைக் கூறுகிறாள். சுயம்வரம் நடக்காதென்று நிமித்திகர் மூலம் அவளுக்கு முன்பே தெரிந்திருந்தது. அரசியும், இளவரசியர் மூவரும் சேடிகளுடன் காசி விஸ்வனாதர் கோயிலுக்குச் செல்கின்றனர். அகல்விழியன்னையின் முன்னிலையில் தங்கள் கன்னித்தவத்தை முடிக்கின்றனர். பின் நாகதேவியின் கோயிலில் அம்பைக்கு மட்டும் மலர் தரப்படுவது எதையோ குறிப்புணர்த்துகிறது. அனைவரும் அணிசெய்து ஆடையணிந்து சுயம்வரம் செல்கின்றனர். காசிமன்னனின் குலவரிசை. மூன்று இளவரசியரின் அறிமுகம். புராவதியின் உள்ளம் நிலையற்று அலைகிறது. சபையோர் விலகி வழிவிட, சலசலப்பை ஏற்படுத்தியபடி பீஷ்மர் உள்ளே நுழைகிறார். 

  9. பீஷ்மர் சுயம்வரத்தில் நுழைந்து தனக்கும் ஓர் இருக்கை போடசொல்லுகிறார். அங்கிருந்த மன்னர்கள் வயோதிகத்திலும் இவருக்கு ஆசை விடவில்லை என்றபடி பார்க்கிறார்கள். அரசியர் மூவரும் மாலையுடன் உள்ளே வரும்போது, பீஷ்மர் எழுந்து அம்மூவரையும் கவர்ந்து செல்லப்போவதாக அறிவிக்கிறார். தன் சீடர்களை இளவரசியர் மூவரையும் ரதங்களில் ஏற்றுமாறு பணிக்கிறார். வாள் வீசி எதிர்த்த அம்பையை மயங்கச் செய்கிறார். மன்னனையும் அம்பு வீசி மயக்குகிறார். சால்வனும், பிற மன்னர்களும் பின்தொடர்ந்து செல்கிறார்கள். ரதங்கள் தொடர்தலும், விற்போர்காட்சியும் காசியின் தெருக்களில். கங்கைக்கரையில் காத்திருந்த படகுகளில் ஏறிப் பயணிக்கிறார்கள். மயக்கம் தெளிந்து மூன்று இளவரசியரும் எழுகிறார்கள். அம்பை தான் சால்வனையே மணத்தில் வரித்திருப்பதாகவும், அவனது குழந்தைகளை மட்டுமே பெற்றெடுப்பேனென்றும், வேறு எவர் குழந்தை எனினும் இக்கங்கையில் மூழ்கடிப்பேன் என்றும் கங்கை மீது ஆணையாகச் சொல்கிறாள். அதிர்ந்த பீஷ்மர் அவளை திருப்பி அனுப்பும்படிச் சொல்கிறார். அவளுக்கென்று அளிக்கப்பட்ட படகில் ஏறும் போது இவர் யார் என்று வினவுகிறாள். இவர் கங்கையின் மைந்தன் என்றனர். அவரது பின்புறத்தைப் பார்த்தபடியே படகில் நீங்குகிறாள் அம்பை.

  10. அஸ்தினபுரியின் சோலைக்குள் 12 ஆண்டுகளாக விசித்திரவீரியன் மருத்துவம் பெற்று வந்தான். மெலிந்தும், மூட்டுகள் வீங்கியும் இருந்தன. அன்று நாக விஷ மருத்துவம் செய்யப்பட்டது. நாகசூதன் நாகலோகத்தின் புகழைப் பாடி, வாசுகியின் கதையைச் சொன்னான். வாசுகியின் விஷம் பெருகி அசையமுடியாமலாகிவிட்டான். நாகங்கள் சிவனைத் துதிக்க அவர் துர்வாசர் மூலம் முடிவு கட்ட நினைத்தார். இந்திர களிற்றுக்கு அவர் அளித்த மாலையில் நாகம் புகுந்ததனால் அது மாலையைத் தரையில் வீசிற்று. சினமடைந்த துர்வாசர் தேவலோகம் அழியும்படித் தீச்சொல்லிட்டார். தேவர் மூப்புறத் துவங்கினர். பாற்கடலைக் கடைந்தால் வரும் அமுதமே இறவாமையை அளிக்கும் என்ற சிவன், விஷ்ணு ஆமையுருவில் உட்செல்ல, மந்தரமலையை மத்தாகக் கொண்டு, வாசுகியைக் கயிறாகக் கொண்டு பாலாழி கடையப்பட்டது. அதிலிருந்து அமுதத்தின் முகங்களாக காமதேனு முதல், அமுதகலசம் ஈறாக ஐந்து வெளிவந்தன. லக்ஷ்மியின் கைகளில் அவை அணியாயின. வாசுகி அயர்ந்து ஆலகாலத்தை கக்கினான். சிவன் அதை அள்ளிப்பருகினார். வாசுகியை வாழ்த்தி இனியும் பல்லாயிரம் வருடங்கள் உன்னுள் அந்த ஆலகாலம் பெருகும் என்று சொல்லி அனுப்பினார். பாதாள லோகத்தில் நாகங்கள் நடனமாடிக் கொண்டாடின. நாகங்களின் மதநீர் பெருகி, பூமியெங்கும் செழிப்புற்றது. ஆண்கள் காமத்திலும், பெண்கள் நாணத்திலும் ஆழ்ந்தனர். இவ்வாறு நாகசூதன் பாடினான்.விசித்திர வீரியன் மனக்கண்ணில் நாகங்களின் பிணைவை பெண்ணின் யோனியெனக் கண்டு அதிர்ந்தான்.  அப்போது சேவகன் வந்து பீஷ்மர் இரு இளவரசிகளோடும் வந்திருப்பதாகச் சொன்னான். அம்பையின் வேண்டுதலில் அவளைத் திருப்பி அவர் அனுப்பிவிட்டதாக இன்னொரு சேவகன் சொன்னான். அவள் எப்படி இருப்பாள் என்றான். ஏழுமுறை தீட்டப்பட்ட வாள் போல. ஆவணிமாதம் ஆயில்யநட்சத்திரத்தில் அதிகாலையில் படமெடுக்கும் ராஜநாகம்போல…” என்றான். அவனுள் ஆலகாலம் பற்றிய எண்ணம் தோன்றி மறைந்தது.

  11.  அம்பை சால்வனைக் காண சௌபநகர் நோக்கி கங்கை மீது படகில் செல்கிறாள். படகோட்டும் நிருதன் தாங்கள் பரதன் வழி வந்தவர்கள் என்றான். ராமனுக்கும் தசரதனுக்கும் இன்றும் நீர்க்கடன் செய்வதாகச் சொன்னான். அம்பையால் உறங்க இயலவில்லை. நிருதன் பாடுகிறான். அம்பை கண்ணயர தன் முன் நதி நாகமாகப் படமெடுப்பதை கனவு காண்கிறாள். விழித்த போது சௌபதேசம் வந்து விட்டது. சௌபதேச கங்கைக் கரையின் காட்சி. யானைகளும், குதிரைகளும், மாடுகளும் , மனிதர்களும் பணியில் ஈடுபடும் காட்சி. அம்பை அரண்மனை நோக்கி நடக்கிறாள். இலச்சினை காட்டி உள்ளே செல்கிறாள். சால்வன் இவளைக் கண்டு, இவளை பீஷ்மர் கவர்ந்து சென்றதால், இவள் அவர் மனைவியே என்றும், அவரைக் கொன்றால் மட்டுமே அவள் இங்கு வரமுடியும் என்றான். அவரே அனுப்பியதாகச் சொன்னபோது, அவர் தானமளித்து ஏற்ற அவப்பெயர் தனக்கும் வேண்டுமா என்றான். அவன் அமைச்சர், சால்வன் அவளை ஏற்றால், அஸ்தினபுரியின் பகையை எதிர்கொள்ள நேரிடும் என்றார். அம்பை நீ என்னை காதலித்தது இவ்வளவுதானா என்னும்போது, அதுவும் ஒரு அரசியல் திட்டமே என்றான். அவளை அஸ்தினபுரிக்கேத் திருப்பி அனுப்புவதாகச் சொல்கிறான். அம்பை சினந்து, அந்தச்சினத்தாலேயே தன் அனைத்தையும் மீட்டுக்கொண்டவளாக மிடுக்குடன் எழுந்து “நான் தொண்டுமகள் அல்ல.. இளவரசி” என்றாள். இது பெண்களின் நியதி என்று அமைச்சர் சொல்ல, அப்போது நான் பேயாகிறேன் என்றாள். வெளிச்செல்லும் அவளை சால்வன் பின்தொடர்ந்து, தன் அந்தபுரத்தில் இருக்கலாம் என்றான். அம்பை கொதித்து உன் குருதிகுடிப்பதற்குள் சென்று விடு என்றாள். சால்வன் ஓடுகிறான். கங்கைக்கரையில் அவளை மீண்டும் கண்ட நிருதன், யார் உம்மை அவமதித்தது? இப்போதே கோட்டை வாசலில் சாபமிட்டு கழுத்தறுத்து இறக்கிறேன் என்றான். அம்பை படகில் ஏறி அமர படகு நகர்கிறது.

  12. அம்பை காசியில் இறங்கி அரண்மனை நோக்கிச் செல்கிறாள். பீமதேவன் அஸ்தினபுரி இளவரசி சரியான தகவல் இன்றி வரக்கூடாது என்றான். தான் காசியின் மகளாக வந்திருப்பதாகச் சொல்கிறாள். சால்வன் எதுபற்றி அவளை நிராகரித்தானோ அதே காரணத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் ஃபால்குனர் சொல்கிறார். அம்பை அங்கு ஒரு சிறுமியாக மாறி, தன் அன்னையின் மடி மட்டுமே வேண்டும் என்று இறைஞ்சுகிறாள். அரசியலின் நோக்கங்ககள் புதிரானவை என்று சொல்லி அவளை உள்ளே அனுமதிக்க மறுத்து விடுகிறார். அம்பை வெளியேறி கங்கையில் பாய்ந்து தன்னை மாய்த்துக் கொள்ள இருந்த வேளையில் சுவர்ணை, சோபை, விருஷ்டி என்ற மூன்று தேவியர் அவளைத் தடுத்தனர். சுவர்ணை அவள் சிறுமியாக இருந்தபோது அவளுடன் வந்த தேவதை என்றும், சோபை அவள் பூப்பெய்திய பிறகு உடனிருந்து கனவுகளை அளித்த தேவதை என்றும், கூறினர். படகில் பீஷ்மனைப் பார்த்தகணம் சோபை விலகிவிட்டாளென்றும், விருஷ்டி அவளை அடைந்தாள் என்றும் கூறினர். அம்பை அதிர்ந்து நான் என்ன பரத்தையா என்று கேட்டாள். சால்வனை அவள் காதலித்தது, தான் கோயில் கண்ட கருவறையில் அவளை ஆராதிக்கும் ஒரு பூசகனையே என்றும், பீஷ்மரின் பிள்ளைகளைப் பெறவே அவள் விரும்புவதாகவும் விருஷ்டி சொன்னாள். தன் வீரம், கல்வி, ஞானத்தைவிட கருப்பை பெரிதா என்றாள் அம்பை. “இதயத்தின் சாறுகளான வேட்கை, விவேகம், ஞானம் என்னும் அற்பகுணங்களால் அலைக்கழிய விதிக்கப்பட்டவர்கள் ஆண்கள். கருப்பை என்னும் நங்கூரத்தால் ஆழக்கட்டப்பட்டவர்கள் பெண்கள் என்றாள் விருஷ்டி. அம்பை தான் பீஷ்மனை விரும்புதை உணர்ந்தாள்.

  13. அஸ்தினபுரி சென்று பீஷ்மரைச் சந்திக்கிறாள். தன்னை ஏற்றுக் கொள்ளும் படி வாதிடுகிறாள். பீஷ்மருக்கு தேவை அவளே என்றாள். அவர் நலம் பேண ஒரு பெண் தேவை என்றாள். பீஷ்மர் அவளை புறக்கணித்தாலும், அவர் கொண்ட உறுதி மெல்ல அசைகிறது. அதை வெல்ல எண்ணி தன் குற்றச்சாட்டுகளால் அவளை வீழ்த்த எண்ணுகிறார். அம்பை கெஞ்சி வேண்டுகிறாள். பீஷ்மர் அவளை அள்ளி அணைக்க விரும்பும் காமத்தை அடக்கி மீண்டும் தவிர்க்கிறார். அவருக்குச் சாத்தியமான பெரும் எதிரி அவளே. அவளை வென்ற களிப்பு. தன் அனைத்தையும் வேள்வித்தீயில் ஆகுதியாக்கிய  மகிழ்ச்சி. உடைந்து நிற்கும் அவளைக் கண்டு அவரறியாமல் ஓர் ஏளனச்சிரிப்பு அவர் இதழ்களில். அது கண்ட அம்பை நீயே மனிதரில் கீழ்மகன், உன்னை இறைஞ்சிய நானே கீழ்மகள் என்று சொல்லி வெளியே பாய்ந்தாள்.

  14. வெறிபிடித்து வெளியேறிய அம்பையின் சினம் கொண்ட பயணம் சூதர் பாடலாக விரிகிறது. மக்கள் அனைவரும் அஞ்சி நடுங்க அவள் வனம் புகுந்தாள். வராஹி தேவியைக் கண்டாள். உடல் கருத்து, மெலிந்து பன்றி முகமே வடிவெடுத்தாள். மலைமீதேறி நின்று அஸ்தினபுரி நோக்கி சிம்மம் போல் கர்ஜித்தாள். பரசுராமரைக் கண்டு பீஷ்மரைக் கொல்லவேண்டும் என்றாள். அவர் இப்போதே என்று எழுந்தார். பாரதப்போரில் அவர்களது யுத்தம் தேவரும் காண நடந்தது. அவரை வெல்லமுடியவில்லை. அவரை அவரேதான் கொல்லமுடியும் என்ற வரம் வாங்கி வந்தவர் அவர். பின் காட்டை எரித்துக் கடும் தவம் புரிந்தாள். சிவன் தோன்றி அவள் வரத்தைச் செவிமடுத்து, உன் கனலைப் பெறுபவன் எவனோ அவன் பீஷ்மனைக் கொல்வான் என்றார். அம்பை கானகம் விட்டுச் சென்று ஒவ்வொரு கோட்டைக் கதவாகத் தட்டி உங்களில் பீஷ்மனின் உயிர் எடுப்பவன் எவன் என்று கேட்டாள். எல்லா மன்னரும் அஞ்சி ஓடினர். சோமகசேனன் மட்டும் வாளெடுத்து வருகிறான். தம் குலமே பீஷ்மரால் அழிக்கப்படும் என்று அமைச்சர் தடுக்கிறார். இருந்தும் வெளிவருகிறான். அம்பையின் பாதம் பணிகிறான். அவள் அவனை ஆசி செய்து விலகுகிறாள். அம்பை நகர் நீங்கிய சேதி கேட்டு விசித்திர வீரியன் அவளைத்தேடிக் கானகம் புகுந்து அங்கேயே வசிக்கிறான். ஒருமுறை குகைக்குள் சிம்மங்களின் உறுமல் கேட்டு படை அங்கு செல்கிறது. ஒரு சிம்மத்தைக் கொன்று அம்பை உண்டு கொண்டிருப்பதைக் கண்டு படை விலகி ஓடுகிறது. விசித்திரவீரியன் மட்டும் அவள் பாதம் பணிகிறான். என் குலம் செய்த பிழைக்கு என்னைப் பலி கொள்ளுங்கள்; என் குலத்தைக் காத்தருளுங்கள் என்று வேண்டுகிறான். அம்பை அவனை ஆசி செய்து மறைகிறாள். சூதன் சொல்கிறான். அவள் கால்பட்ட இடமெங்கும் கோயில்கள் எழுந்தன.கோட்டை வாசலெங்கும் வராஹிதேவிக்கு மேல் அவளே காவல் தெய்வமாய் நின்றிருந்தாள். பெண்கள் அவளுக்குக் குருதி கொடுத்து ஆயுதத்தைக் கையிலெடுத்தனர். அவளை வணங்கி இடையில் காப்பு அணிந்தனர்.

  15. உருவிய வாளுடன் பீஷ்மரைக் கொல்லப் புகுந்தான் விசித்திர வீர்யன். பீஷ்மர் உன் கையால் வீழ்வது நலம். என்னைக் கொல்பவனை நானே தீர்மானிக்க முடியும். நீயே என்னைக் கொல். உன்னில் நான் சிறுகாயம் மட்டுமே ஏற்படுத்துவேன் என்றார். விவீ வாளை வீசி விட்டு, இந்த உடலில் ஓடும்  உயிரின் அர்த்தம் தான் என்ன? என்று வினவியபடி வெளியேறி மயங்கி வீழ்ந்தான். மூர்ச்சை தெளிந்த போது மருத்துவர் அவன் எடுத்த நாக மருத்துவம் வீர்யம் தீர்ந்ததென்றார். அவருக்கு பொருள் அளித்து அனுப்பியபின் அமைச்சர் பலபத்ரர் சத்யவதி திருமணம் எப்போது என்று கேட்பதாகச் சொன்னார். விவீ நான் இப்போது என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். அமைச்சர் பதிலிறுக்கவில்லை. குருட்டு சூதன் தீர்க்கசியாமரை வரச் சொன்னான். அவன் வந்து நதிகளைப் பாட ஆரம்பித்தான். விண்ணில் சிறகு கொண்டு பறக்கும் நதிகளில் மண்ணிலிறங்கியவள் கங்கை. அவள் கரையில் மனிதக் குலம் செழித்து வளர்ந்தது. அதில் முதற்குலம் கங்கர்கள். எல்லா மன்னரும் அவர்களை அஞ்சினர். அஞ்சாதவர் குருகுல மன்னர் பிரதீபர். அவர் கங்கை மலைச்செறிவுகளில் வேட்டை சென்றார். ஒருமுறை ஒரு பெண்குழந்தை அவரது வலது தொடையில் வந்தமர்ந்தது. அது அவர்கள் அரண்மனைக்கு அரசியாக வருவதைக் குறித்தது. நிமித்திகரும் அதையே உறுதிப்படுத்தினர். அவர் பெண்கேட்டு தூதனுப்பிய ஏழு தூதரையும் கொன்று திருப்பி அனுப்பினர் கங்கர்கள். தன் காலம் முடிந்து வனம் புகுகையில் தன் மகன் சந்தனுவிடம் பிரதீபன் சொன்னார். பிற தேசங்கள் வளர்கின்றன. அவற்றை வெல்ல நமக்கு கங்கர்களின் துணை அவசியம். அதற்கு அம்மகளை மணப்பதே அவசியம். கங்காதேவி கங்கர்களின் காவல் தெய்வமென அறியப்பட்டாள். சந்தனு தனிமையில் சென்று கங்காதேவியைக் கண்டான். அவனை ஒரு பாம்பு விழுங்கவந்தபோது அவள் அவனைக் காப்பாற்றினாள். பின் அவன் காதலை ஏற்று கங்கர்களிடம் அழைத்துச் சென்றாள். காட்டிலேயே வாழவேண்டும் என்ற நியதியுடன் அவன் மணம் புரிந்தாள். சந்தனு நீரின் சுழிக்குள் போல் அவனிடம் மயங்கிக் கிடந்தாள்.

  16. சூதன் மேலும் பாடினான். முன்பொரு காலத்தில் கனகை என்னும் பாம்பு இட்ட நூறு முட்டைகள் குஞ்சு பொறித்து, பாம்புகள் தாழைமடலுக்குள் குடியேறின. உசகன் என்ற குஞ்சு தாழை என நினைத்து அக்கினியில் ஏறி இறந்தது.சந்தனு தன்னை அந்த உசகன் போலவே கருதினான். பிரதீப மன்னருக்கு நீண்டநாள் குழந்தையின்றி அரசி சுனந்தை தன் அறுபதாம் வயதில் தேவாபியைப் பெற்றெடுத்தாள். அவன் சூரிய ஒளி பட்டால் நோயுறும் தன்மை கொண்டிருந்தான். பின் சந்தனு பிறந்தான். பெருத்த உருவத்துடன் பால்ஹிகன் பிறக்கையில் அவள் இறந்தாள். பால்ஹிகன் நோயுற்ற தன் அண்ணன் மீது பாசம் கொண்டிருந்தான். அவனை எங்கும் தன் தோளில் தூக்கித் திரிந்தான். சந்தனு தன் அண்ணனிடம் பாசம் கொண்டு தானும் அதே போல் தூக்கித் திரிய ஆசை கொண்டான். பின் அவனும் நோயுற்றான். பால்ஹிகன் தன்னை அவ்வாறு தூக்கிச்செல்ல மாட்டானா என்று ஏங்கினான். தேவாபி மீது சினமடைந்தான். தேவாபிக்கு இளவரசு பட்டம் சூட்டும்  வேளை வந்தபோது, அமைச்சர் எதிர்ப்பையும் மீறி நெறி மீற இயலாது என்று சொல்லி ஏற்பாடு செய்தான். அவை திரைச்சீலைகள் தொங்க நிழலில் இருந்தது. பட்டம் சூட்டுமுன் ஒரு திரைச்சீலை கிழிய, தேவாபி உடல் சிவந்து கண் கூசியது. பால்ஹிகன் அவனை தூக்கிச் சென்று தன் பின் ஒளித்துக் கொண்டான். குல மூத்தோர் சொல்படி சந்தனு இளவரசனானான். தேவாபி சன்யாசம் ஏற்று கானகம் சென்றான். பால்ஹிகன் அவனைப் பின்தொடர அனுமதிக்கவில்லை. 41 ம் நாள் தேவாபிக்கு நீர்க்கடன் செலுத்தும் நாளன்று, பால்ஹிகன் சந்தனுவுக்கு சாபமிட்டான். தேவாபியின் நோய் உன் குலத்தைத் தொடரும் என்றான். பின் சென்று மறைந்தான். அவன் சென்ற பின் சந்தனுவின் நோய்கள் மறைந்தாலும், தன் பிள்ளைகள் அந்நோயுடன் பிறக்குமோ என்றஞ்சித் தீக்கனவுகள் கண்டு எழுந்தான். இதனாலேயே அவன் கங்கர் குலத்தில் மணக்கத் தீர்மானித்தான். கங்கர் குலத்தவர் பாறை போன்ற உறுதியுடைய உடலுடையவர்.

  17. சூதர் தொடர்ந்தார். உசகனைப் போலவே காதல் நெருப்பில் வீழ்ந்தார் சந்தனு. அவருக்கு எட்டு குழந்தைகள் பிறந்தன. ஏழாவது குழந்தையை அவள் கங்கையில் பெற்றெடுத்து, தொப்புள் கொடி அறுத்து கரைக்கு நீந்தி வந்ததைக் கண்டார். கரையில் கங்க மக்கள் அது கரைக்கு நீந்திவரக் கூவினர். அது வரவில்லை. எட்டாவது குழந்தையின் நிறை மாதத்தில் என் குழந்தையை என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டார். நீங்கள் கேள்வி கேட்டதனால் இனி உங்களைப் பிரிவேன் என்று சொல்லி அவள் மறைந்தாள். குழந்தை என்ன ஆனது என்றும் அறியாமல் மனம் வெதும்பி அஸ்தினாபுரியை அடைந்தார் சந்தனு. இரவில் துயில இயலாமல், கங்கை கரையில்தான் அவரால் துயில இயன்றது. பின் கங்கைக் காடுகளில் சுற்றித் திரிந்தபோது, நாணல்களால் அம்பு தொடுத்து அணை கட்டும் ஒரு சிறுவனைக் கண்டார். தன்னைவிட உயரமான அவன் தன் மகன் என்று முத்திரைகள் கொண்டு கண்டு கொண்டார். அரண்மனை  அழைத்து வந்தார். தனயன் தந்தையைத் தாய் போல் காத்தான். சந்தனு தன் தேவவிரதன் மகன் என்ற சொல்லிலேயே எல்லாவற்றையும் அடைந்தார். இந்த மகிழ்வான நாட்களில் யமுனைக்கரையில் சத்யவதியைக் கண்டு மையலுற்றார். அவளது தந்தை கங்கர் குல மைந்தன் நாடாளக்கூடாது. சம்மதமெனில் மணம் புரிக என்றான். மனம் நொந்த மன்னன் படுக்கையில் வீழ்ந்தான். சேதி கேட்ட பீஷ்மன்(தேவவிரதன், காங்கேயன்) சத்யவானைக் கண்டு நான் நாடாள மாட்டேன் எனச்சொல்லி நிச்சயம் செய்து வருகிறான். தந்தையிடம் நான் மணம் செய்ய மாட்டேன். வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சரிய விரதம் பூணுவேன் என்று உறுதிகூறுகிறான்.

  18. அரசி புராவதி துறவேற்று ரிஷிகேச வனத்தில் இருந்தாள். அவள் தன் முடிவை அரசனிடம் அறிவித்து படகில் கங்கையில் செல்லும்போது படகோட்டும் குகன் அன்னையின் கதையைச் சொன்னார். ரம்பன், கரம்பன் என்ற அசுரர்கள் மகவு வேண்டித் தவமிருந்தனர். ரம்பனை முதலை விழுங்கியபோதும் ஒருமை குலையாததைக் கண்ட அக்கினி அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்றாள். தமோ குணமே தனக்குப் பிள்ளையாக வரவேண்டும் என்று சொன்னான். மகிஷன் பிறந்து உலகெங்கும் இருள் பரவியது. தேவர்கள் விஷ்ணுவை வேண்டினர். விஷ்ணு சிவனிடம் சென்றார். தூய வெண்ணியல்பே மகிஷனை வெல்ல முடியும் என்றார். அன்னையை எண்ணித் தவம் செய்க என்றார். தவத்தின் விளைவாகப் பாற்கடல் பெருகியது. கார்த்தியாயின முனிவரின் யாகத்தில் அமுதமாக எழுந்தது. அவளே கார்த்தியாயினி தேவி. அவளழகில் மயங்கிய மகிஷன் தன்னைத் திருமணம் செய்து கொள்ளச் சொன்னான். தன்னை வெல்பவனே தன்னை மணப்பவன் என்றாள். மகிஷன் இருளெனும் படை திரட்டி வந்தான். தேவி சிவனை நாடினாள். சிவன் இமயத்தைக்கேள் என்றார். இமயத்தின் ஒளிக்கீற்று ஒன்று சிம்ம வடிவம் எடுத்து தேவியின் வாகனமானது. யுகம் யுகமாகப் போர் நடந்தது.மகிஷன் வீழ, சிம்மம் அவனைத் தின்றது. அவன் தேவியின் கால்களில் கழல்களானான். அவன் வாழ்க என்றான் குகன். புராவதி கண்ணீர் உகுத்தாள். ஆசிரமத்திலும் அவள் உள் எரிந்த நெருப்பு அணையவில்லை. தன் மூன்று பெண்களை நினைத்துப் பார்த்தாள். கனவில் ஒரு நாள் அம்பை குழந்தையாகித் தவழ்ந்து சென்று நெருப்பள்ளித் தின்பதை கண்டாள். அவள் வாய் கனன்று கொண்டிருந்தது. அதன் பொருள் என்ன என்று பார்க்கவமுனிவர் சொன்னார். அவள் பெரும்பசியிலிருக்கிறாள். ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்து அவள் பசி நீக்கு என்றார். புராவதி மன்னனுக்கு செய்தி அனுப்பினாள். அங்கு மன்னனைச் சந்தித்த அவள் தன் குழந்தை அரண்மனை வாயிலில் நின்றது என் நெஞ்சில் நீங்கவில்லை என்றாள். அரசன் தான் செய்தது தர்மத்தின்படி சரியே என்றார். நாட்டின் நலம் காக்க என்றார். என் நெஞ்சிலெரியும் கனல் அதைவிட வலிமை வாய்ந்தது என்றாள். தட்சனின் மரத்தடிக் கோயிலில் வணங்கும்போது தீயில் விழுந்து அவள் கண்ணும், கன்னமும் கருகின. சிறிது நேரத்திலேயே அவள் இறந்தாள்.

  19. அம்பிகையும், அம்பாலிகையும் தேரில் அஸ்தினாபுரி நுழைகிறார்கள். சிறியவள் அம்பாலிகை கோட்டையைப் பார்த்து வியக்கிறாள். அம்பிகை சினத்துடன் இருக்கிறாள். நாடே அவர்களை கோலாகலமாக வரவேற்கிறது. அம்பாலிகை அங்கு வாழ்வதை விரும்புகிறாள். அம்பிகை இங்கு வாழ்வதைவிட உண்ணாதிருந்து உயிர் துறப்போம் என்றாள். பீஷ்மர் வயோதிகர் எனினும் அழகர், அவரையா மணக்கவிருக்கிறோம் என்றாள் அம்பாலிகை. அரண்மனையில் நோயுற்ற விசித்திர வீர்யனுக்கு மணம் முடிக்கப்படுவது தெரிய வருகிறது. சினம்கொண்ட அம்பிகை சத்யவதியிடம் நீதி கோருகிறாள். அங்கே இறப்பேன் என்றாள். நீ இறந்தால் பீஷ்மர் தான் உனக்கும் நீர்க்கடன் செய்யவேண்டும். அவர் செய்யாதொழிந்தால் உனக்கு அவப்பெயர் நேரும் என்றாள் சத்யவதி. அதற்கு ஒரே வழி எங்களுக்கு குலமகவுகளைப் பெற்றுக் கொடு என்றாள். நான் கருப்பையைப் வெறுப்பெனும் பாறைகளால் மூடிக்கொள்வேன் என்றாள் அம்பிகை. இரு சகோதரியரும் உண்ண மறுத்தனர். அம்பாலிகை ரக்சியமாக உண்கிறாள். அம்பிகை நலிகிறாள். பீஷ்மர் வந்து இறைஞ்சுகிறார். அம்பிகை சம்மதிக்கிறாள். மணிமுடி சூட்டுவிழா நிகழ்வு. மாமன்னர்கள் அணிந்த மணிமுடி, கதைகளில் மட்டுமே கேட்ட மணிமுடியையும், வாளையும் பார்த்து அவற்றுக்கு மாலையிடும்போது அவள் கண்ணில் நீர் பெருகுகிறது.

  20. கருநிலவு மணிமஞ்சம் ஒருக்கப்படும் என்ற செய்தி விசித்திர வீரியனுக்கு வருகிறது. அவன் தன் வாழ்க்கை குறித்துப் பேசுகிறான். இது மிருகங்களுக்கு குறிக்கப்படும் நாள்தானே என்று கேட்கிறான். திருவிட நாட்டு சித்தர் அவன் உடலைப் பரிசோதிக்க வருவதாகச் சொல்கிறான் ஸ்தானகன். வரட்டும் அவரும் என் உடல் கொண்டு மருத்துவம் கற்கட்டும் என்கிறான் வி வீ. தான் இறப்பது குறித்து கவலைப்படவில்லை என்றான். இதுவரை வாழ்ந்ததே ஒவ்வொரு நொடியிலும் முழுமையாகத்தான் என்றான். சூதர் பாடலில் இளிவரலாக எஞ்சுவதில்கூட அச்சமில்லை என்றான். சித்தர் அகத்தியர் வருகிறார். குள்ளமான உருவம். விளையாட்டு புத்தி. தத்துவரீதியிலான பேச்சு. ஒவ்வொரு சக்கரமாக சோதித்து அநாகதத்தில் அனல் இல்லை என்றார். அது பிறந்தபொழுதே தந்தையிடமிருந்து வருவது. ஆனால் வரவில்லை. தான் மரணிக்கத் தயார் என்றான் வி வீ. அதுவே நலம். துளி வீழ்தலும் கடல் எழுச்சியும் ஒன்றே என்றறிக என்றார் சித்தர். தன் கமண்டலத்துத் துளியை அவனுக்கு அளித்து ஆசி கூறுகிறார். வி வீ குளித்து தயாராகி உண்ண அமர்கிறார். அருகிருந்தவன் நாகன். அவனைப் பாடச் சொல்கிறான். இமைக்காத கண்கள் கொண்ட அவன் பாடத்தொடங்குகிறான். இருண்டபெருங்குழியைப்பற்றிப் பாடுகிறான். விண்ணுலகம் போகத்தகுதி இல்லாதவர் அங்கே செல்வர். தன் கணவன் மேல் வன்மம் கொண்ட பெண் இறந்தபின் அங்கு புதைக்கப்படுகிறாள். அவள் வயிற்றில் குழந்தை உள்ளது. அது பிறந்து 3ஆண்டு காலம் இருளில் இருந்தது. பின் மின்னல் வெட்டில் வானத்தைப் பார்த்தது. ஒரு பாம்பின் வாலைபிடித்து ஏற முயன்று சறுக்கியது. எட்டாண்டு கழித்து, பாம்பிடம் வேண்டி, அதன் வாயில் புகுந்து, பல நகரங்கள் கடந்து வெளிவந்தது. இது கதை. என்ன அர்த்தம் என்றால் சூதர்கதைக்குத்தான் பொருளிருக்கும். நாகர் கதை கடல் போல. எல்லாசூதர் பாடலும் எங்களைத்தான் வந்தடையும் என்றான். பின் மகுடி எடுத்து ஊதினான். பாம்பைப்போல் ஆடினான்.விசித்திர வீரியனுக்கு சுற்றி இருந்த அனைத்தும் நாகங்களாக மாறிற்று.

  21. அம்பிகையும் அம்பாலிகையும் நகைகளைப் பார்த்து அமர்ந்திருக்கின்றனர். அன்று மஞ்சத்துக்குச் செல்கிறாள் அம்பிகை. நகை அணிய மாட்டேன் என்றுவிட்டாள். மிகுந்த சினத்துடன் அறைபுகுந்தாள். வி வீ வருகிறான். தள்ளாடி அவள் காலில் விழுந்து தீச்சொல்லிடும்படி அவளைக் கேட்கிறான். அவள் அவனை அள்ளி அணைத்துக்கொள்கிறாள். இருவரும் மனம் விட்டுப்பேசி நெருங்குகிறார்கள். தன் சிதை அறிய வேண்டிய சொற்களை இன்று பேசி விட்டேன் என்றாள். நான் உன் சிதை என்றான். உங்கள் கண்கள் என் அன்னையுடையதப் போன்றவை. ஆண்களுடையதல்ல என்றாள். ஆண்கள் கண்களில் வேட்கையும் ஏளனமும்தான். அல்லது திரையிட்டு மறைத்து வைத்திருப்பர். பீஷ்மரைப்போல என்றாள்.

  22. மறுநாள் காலை அரசி விவீயைப் பார்க்க வெளியில் காத்திருப்பதாக ஸ்தானகர் சொல்கிறார். சத்யவதி நேற்றிரவு ஏன் ஒன்றும் நடக்கவில்லை என்றாள். நடந்தால் நான் இறப்பேன் என்றான் விவீ. இளவரசியரை அமங்கலிகளாக விட்டுச் செல்வது அறமல்ல என்றான். வமசத்தைக் கொண்டு செல்லும் வாகனம் மட்டும்தானா நான் என்றான். உன்னால் போரிட இயலாது. நீ ஒரு விந்துப் பெருக்கம் மட்டுமே என்றாள் அரசி. நாளையும் மஞ்சம் தயார் செய்வேன் வந்து விடு என்றாள். தங்கள் ஆணை என்றான் விவீ. அவள் சென்றபின் மருத்துவர்களை அழைத்து நீங்கள் இனித் தேவையில்லை என்றான். ஸ்தானகரை அழைத்துக் கொண்டு கங்கைச்சாலையில் காட்டுக்குள் சென்றான். அவருக்கு அவன் இறந்து விடுவான் என்று தெரிந்திருந்தது. அவன் சென்றபின் அவர் வனம் புகுவதாகச் சொன்னார். சித்ராங்கதன் மறைந்த சுனைக்குச் சென்றான். அது வானைப் பிரதிபலித்தபடி அசைவற்றுக் கிடந்தது. அமர்ந்து அதை நோக்கியபோது, அதனுள் சித்ராங்கதன் தெரிந்தான். நீயா என்றபோது ஆம் என்றான். இது நீயும்தான் என்றான். உன்னை நீவி நீவி சரி செய்து இப்படி ஆக்கியிருக்கிறேன் என்றான். உங்கள் வாழ்க்கையை நான் பாழ்படுத்திவிட்டேன் என்று கேட்டான் விவீ. “பிரியமான முறையில் பாழ்படுத்திக் கொள்வதற்காகத்தானே வாழ்க்கை அளிக்கப்பட்டிருக்கிறது சிறியவனே?” என்றான் சித்ராங்கதன்.

  23. முன்னிரவு விவீயுடன் பேசியதையும், சொற்கள் அளவற்றுப் பெருகியதையும் நினைவு கூர்ந்தாள் அம்பிகை. மறுநாளிரவு வந்தவன் புதுப்பொலிவொடு இருந்தான். உடையில் புழுதிகண்டு பயணம் சென்றீரா என்றாள். பின் தன் காதலைச் சொன்னாள். அவனைப் பற்றி எந்தப் பெண்ணிடமும் சொல்லத்தயக்கம் என்றாள். சொன்னால் அவர்கள் காதல் கொண்டு விடுவர். பின் சூதப்பெண் சொன்ன சௌபதேசத்து சாவித்ரி கதையைச் சொன்னாள். மத்ர தேசத்து அரசன் அஸ்வதிக்கும், மாலதிக்கும் 60 வயதாகியும் குழந்தைகளில்லை. அவர்கள் காடு சென்று மாடு மேய்த்து வாழ்ந்தனர். சூரியனின் மகளான, ஒளிக்கிரணமான சாவித்ரி பட்டு, மறுநாள் கருவுற்றாள் மாலதி. பொன்னிறத்தில் பெண் குழந்தை பிறந்தது. சாவித்ரி எனப்பெயரிட்டாள். பேரழகியான அவள் ஒரு நாள் மெலிந்து துயருற்றிருந்த சத்யவானை கண்டாள். அவன் சௌபநாட்டரசன் தியமசேனன் மகன். முதுமையில் விழியிழந்த அவரை தம்பியர் காட்டுக்குத் துரத்தினர். அங்கு பிறந்த சத்யவானை கலைகளும், அரசநெறியும் கற்பித்து வளர்த்தார். சாவித்ரி அவனை மணக்க விரும்பியபோது, அவன் இன்னும் ஓராண்டில் இறந்து விடுவான். வேண்டாம் என்றார். சத்யவானும் நான் உன்னை விதவையாக்கி விடுவேன் என்று அஞ்சினான். அதற்கு முன் நீங்கள் என்னை மாமங்கலையாக்குவீர்கள் என்றாள். இதைச் சொல்கையில் அம்பிகை கண்ணீர் விட்டாள். பின் இருவரும் மணந்து ஓராண்டாகியது. ஒருநாள் மரத்தடியில் படுத்திருந்த சத்யவான் ஒரு எருமை மேலேறி ஓடினான். சாவித்ரி வாலைப் பிடித்துப் பின்தொடந்தாள். அது காலனின் முன் சென்றது. என் கணவன் எனக்கு வேண்டும் என்றாள். அதற்காக, தன் உற்றார், உறவினர், தன்னுயிர், தன் மகவுகள் அனைத்தையும் துறந்து, காலவதி, சிந்தாவதி, பிரக்ஞாவதி ஆகிய மூன்று நதிகளைத் தாண்டிச் சென்றாள்.ஒரு நீலநிற பெருநகரத்தில் அவள் தர்மனைக் கண்டாள். நசிகேதனும் முன்பொரு நாள் ஞானம் உரைத்தேன். இப்போது நீ கேட்டதைத் தருவேன் என்றான். அவள் கணவனோடு, அவள் தந்தையும், சந்ததியும் திருப்பி அளித்தான். இன்றும் பெண்கள் சாவித்ரி நோன்பிருந்து கணவனுக்கு வேண்டுகின்றனர் என்று முடித்தாள் அம்பிகை. பெண்களால் எதை விட முடியாது தெரியுமா? தன் குழந்தைகளை. விடவும் கூடாது. என்றார். இருவரும் முயங்குகையில், நெஞ்சு அடைக்க தண்ணீர் கேட்கிறான். அங்கேயே இறக்கிறான். அம்பிகைக்கு முதலில் வரும் எண்ணம் உடையணிந்து கொள்ளவேண்டும் என்பதுதான்.

  24. தாராவாஹினி நதிக்கரையில் பீஷ்மர் குடில் கட்டிக் குடியிருந்தார். அன்று சீடன் ஹரிசேனன் அவர் அருகில் இருந்தான். சூதர்கள் வந்திருந்தனர். ஒருவன் சௌபதேசத்தவன். ஹரிசேனன் தயங்க, பீஷ்மர் அவனிடம் சௌபதேசம் பற்றிக்கேட்டார். சால்வன் அம்பைக்கு அஞ்சி கோட்டைக் கதவுகளை மூடி உள்ளிருந்தான். அவள் வனம் புகுந்தவுடன், வெளியே வந்தான். பெண்சாபம் நாட்டை வாட்டுவதாகப் பேச்சு வந்தது. அதைச் சரி செய்ய சூதர்கள் பரிசில் கொடுக்க நினைத்தான். சூதர்கள் பரிசில் வாங்காது, பன்னிரண்டு தலைமுறைக்கு சூதர் இந்நாட்டைப் பாடோம் என்று கூறிச் சென்றனர். ஓரு முது உழத்தி எழுந்து உன் குலம் அழியட்டும் என்று சாபமிட்டாள். மக்கள் மெல்ல நீங்கி பாஞ்சாலம் செல்ல ஆரம்பித்தனர். பரத்தையரும், வீணரும் வந்து குடியேறினர். பாரமிறக்கிய இரு யானைகளில் ஒன்று மதம் பிடித்து ஊருக்குள் வந்து வேல் பட்டு இறந்தது. அதன் பின் சௌபதேசம் வேகமாகக் காலியானது. பீஷ்மர், இங்கு மட்டும் ஏன் பரிசில் பெற வந்துள்ளீர்கள் என்றார். சூதர் அம்பை விவீயை தீச்சொல்லிடவில்லை. அவன் புகழை சூதர் பாடுவர் என்றான். ஆம் அவன் படைக்கலமறியாப் பெருவீரன் என்றார் பீஷ்மர். பின் சன்னதம் வந்ததைப் போல் பாடி சூதன் விவீயின் மரணத்தை அறிவித்தார். பீஷ்மர் நடந்து சென்று கோட்டை மேல் மென்மழையும், விண்வில்லும் சூதன் சொன்னது போலவே  இருப்பது கண்டு அவன் இறப்பை உறுதிப்படுத்திக் கொண்டார். ஆனால் காஞ்சனமும், பெருமுரசமும் ஒலிக்கவில்லை.

  25. பீஷ்மர் நதிக்கரையில் சிலையாக நின்றிருந்தார். தூதன் வந்து அவரை அரண்மனைக்கு அழைத்துச் செல்கிறார். அஸ்தினாபுரி வழக்கம்போலவே விடிகிறது. உள்ளே சென்று சத்யவதியைக் காணக் காத்திருக்கிறார். பத்து நாட்கள் முன்பு சத்யவதி அவரை அழைத்து இருந்தாள். அம்பையின் சாபம் நாட்டுக்கு இருப்பதாக சூதர் பாடுவதாகச் சொன்னாள். அவள் சொல்வதின் குறிப்பறிந்து பீஷ்மர் கோட்டையை விட்டு வெளியேறி நதிக்கரையில் குடில் கட்டி வாழ்ந்தார். இப்போது சத்யவதி உள்ளே வந்தாள். விவீ இறந்ததை உறுதிப்படுத்தினாள். ஆனால் விடகாரிகள் அவனை வைத்திருப்பதாகச் சொன்னாள். நாட்டின் அரசியல் நிலைமையைப் பேசுகிறாள். எல்லா இனங்களும் அரசாள முயல்வதைச் சொன்னாள். என் குருதி இந்நாட்டை ஆள வேண்டும் அதற்காகத்தான் அந்த ஆணையை சந்தனுவிடம் நானே பிறப்பிக்கச் சொன்னேன் என்றாள். பீஷ்மனும் மச்சக்குருதிதான். அவன் நினைத்தால் இளவரசியர் கருத்தரிக்க முடியும். அதற்குக் கழுத்தறுத்துச் சாகிறேன் என்றார் பீஷ்மர். அப்படி எனில் பெண்டிரை கவர அனுமதித்த தமயனே இதைச் செய்ய வேண்டும். அவனைக் கொண்டு வருவதாக வாக்களி என்றாள். வேறு வழியின்றி பீஷ்மர் வாக்களித்தார். பின் இதை அவள் ஏற்கனவே திட்டமிட்டு விட்டாள் என்றறிந்து புன்னகைத்தார்.

  26. வியாசவனத்தில் சித்ரகர்ணி இறந்து கொண்டிருந்தது. இரண்டு சிறுத்தைகளுடன் போராடித் தோற்றிருந்தது. வீழ்ந்து கிடந்த சிம்மத்தைக் கழுதைபுலிகள் கடித்துக் குதறின. குஹ்யஜாதை என்ற கழுதைப்புலி தன் நான்கு குட்டிகளுடன் வந்திருந்தது. தன் மகன் குஹ்யசிரேவஸிடம் நீ அதன் இதயத்தை உண்டு வளர்வாயாக. ஒரு தாயாக என் கடமை என் குலத்தைப் பெருக்குவதே என்றது. அரவம் கேட்டு வந்த வியாசரிடம் அன்னையை அறியும் கணம் வாய்க்காத எவரும் மண்ணிலில்லை என்றது. வியாசரும் ஆமோதித்து தன் அன்னையைக் கண்ட கதையைச் சொல்கிறார். தன் தந்தையிடம் வேதம் கற்றார் வியாசர். அவன் மீனவனென்பதால் பிற மாணவர் அவனை வெறுத்தனர். கங்கையை நீந்திக்கடப்பதால் அவனை மீங்குஞ்சு என்று இழித்தனர். கங்கைகரையில் அஸ்தின இளவரசியை கண்டான். நூறு முறை நான் நீர்கடந்தான் என்று அறிந்ததும் அவள் அவனைத் தழுவி முகர்ந்து நீயே என் மகன் என்றாள். தொடாதே! நான் பிரம்மச்சாரி என்றான் வியாசன். நான் உன் தாய் என்றாள். உன் வாசனை அதைச் சொல்லியது. அவள் என்னை விட்டுச் சென்றதற்காகவும், அவள் காமவாசனையை அளித்து ஞானத்தில் நிலைகொள்ள விடாமல் செய்ததற்காகவும் அவள் மீது தீச்சொல்லிட்டான். அது பலிக்கவில்லை. ஒரு தாயாக என் பணி என் நிலத்தில் விதைகளை முளைக்கவைப்பதே என்றாள். வியாசன் தந்தையின் காலடி வீழ்ந்து அழுதான். அவர் பிறப்பு ஒரு தொடக்கம்தான். முனிவர் பலர் வெவ்வேறு குலத்தில் பிறந்தவர். மண்ணுலகில் அனைத்தும் ஞானத்தையே உண்டு வாழ்கின்றன என்றறிக என்றார். உன் பிறப்புக்குக் காரணத்தை நீ அறிவாய். அன்று உன் அன்னையுள் உறையும் பெரு நிலையை வனங்குவாய் என்றார். பின் அவர்கள் சத சிருங்கம் சென்று பாரதவர்ஷத்தின் முனிவர்களுடன் வேதவேதாங்ககங்களைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டனர். அங்கு ஒரு ரிக் வேதமந்திரத்துக்கு வியாசர் சரியான விளக்கம் சொன்னார். முனிவர் அவனை வாழ்த்தி வேதங்களைத் தொகுக்கும் பணியை அவரிடம் அளித்தது. அதைத் தொடங்குமுன் வீட்டுக்கு விலக்காகியிருந்த என் அன்னையின் பாதங்களை வணங்கி ஆசிபெற்றேன். இப்போதும் இளையோன் அன்னையின் ஆணையை வந்து விளக்கினான். அவன் ஆணை என்று சொல்லியிருந்தால் போதும் என்றார் வியாசர்.

  27. அரசி வியாசர் வருகை குறித்து பதற்றமாக இருக்கிறாள்.மது அருந்தி தன் தோழி சியாமையிடம் கதை கேட்கிறாள். அவள் ஜமதக்னி முனிவர் கதையைச் சொல்கிறாள். ரேணுகாதேவிக்கும் முனிவருக்கும் ஐந்து பிள்ளைகள். ஐந்தாவது பரசுராமன். ரேணுகாதேவி தினமும் தன் கற்பின் சக்தியால் மண்பாண்டம் உருவாக்கி அதில் நீரெடுத்து முனிவர் பூஜைக்குத் தருவாள். ஒரு நான் வான் சென்ற கந்தர்வனின் நிழலை நீரில் கண்டாள். அவள் கற்பின் சக்தி பொய்த்தது. நீரெங்கே என்று முனிவர் கேட்டார். அவள் அத்தனையும் சொல்லி அழுதாள். அவர் தன் மகன்களை வைத்து கொல்லப்பணித்தார். பிறர் தயங்க பரசுராமன் மட்டுமே அவன் தலையை வெட்டி வீழ்த்தினான். சித்ராங்கதன் கந்தர்வனைப் பார்த்திருப்பானா என்றாள் சத்யவதி. அவர் தன் ஆடியில் அனுதினம் பார்த்தது அவனைத்தான் என்றாள் சியாமை. வியாசனும் பார்த்திருப்பான். கவிக்குக் காவியமே ஒரு ஆடி என்றாள் சியாமை.ஆம் அவன் அனைத்தையும் காண்பவன் என்றாள் அரசி. நீங்கள் ஒரு கருப்புக் குழந்தையை விட்டு வந்த போது அக்கண்கள் உங்களையும் பார்த்திருக்கும் என்றாள். வாயை மூடு என்றவள். என் குலத்தில் இனி என்றும் வாழப்போவது அவனது அழகின்மைதான் என்றாள்.

  28. சியாம நாகினி வரவழைக்கப்பட்டிருந்தாள். வியாசர் எங்கே என்று சத்யவதி கேட்டாள். அவர் பீஷ்மரைக் கேட்டுக்கொண்டிருந்தார் என்றார்கள். வியாசரைக் கண்டு, சுகன் நலமா என்றாள். சரியான கேள்வியை எப்படிக் கேட்டோம் என்று வியந்து கொண்டாள். ஹ்ருஜாவத் என்ற கிளி மீது வியாசன் காதல் கொண்டு பிறந்த குழந்தையே சுகன். அவன் வியாசரிடம் வேதம் கற்றான். குழந்தைகள் உலகைப் பொன்னுலகு ஆக்குகின்றன என்றாள் சத்யவதி. பின் சியாமனாகினியின் பூஜை. தைலப் பாத்திரத்தில் அம்பிகை விவீயைப் பார்க்கிறாள். வியாசர் அப்பெண்கள் மனமுவந்து தன்னை ஏற்றால் தடையில்லை என்றார். சியாம நாகினியிடம் என்ன நடக்கிறது என்று கேட்டாள். அவள் தீர்க்கதமஸின் கதை சொன்னாள். 16 பிரஜாபதிகளில் பத்தாவது அங்கிரஸ் அவரது பிள்ளைகள் செந்நிறச்சுவாலை பிருஜஸ்பதி, நீலச்சுவாலை உதத்யன். உதத்யனின் பேரவா பெண்ணுருவில் மமதா என்று பிறந்தது. பிருஹஸ்பதி மமதா மேல் மையல் கொண்டு கூடினார். கரு விந்துவை எட்டி உதைத்தது. சினங்கொண்ட பிருஹஸ்பதி நீ வானில் இருளாகவும், மண்ணில் கண்ணிழந்த முனியாகவும் பிறப்பாய் என்று தீச்சொல்லிட்டாள். அதுவே தீர்க்கதமஸ். அவரிலிருந்து ஐந்து குலங்கள் பிறந்தன.

  29. மஞ்சத்தில் இருந்த அம்பிகையை அம்பாலிகை வந்து பார்த்தாள். அவளிடம் தாலத்தில் என்ன பார்த்தாய் என்று கேட்டாள். அம்பிகை நான் என்னைத்தான் பார்த்தேன். பார்ப்பதெல்லாம் நம்மையே. உறவுகளெல்லாம் மாயத்தோற்றமே என்றாள். எனக்கு பயமாயிருக்கிறது. குழந்தை பிறக்குமென்றால் வயிறு பெரிதாகுமே என்றாள். நீ என்ன தாலத்தில் பார்த்தாய் என்றாள் அம்பிகை. நான் அவரிடம் விளையாடினேன். நாணற்புல்லில் அம்பு செய்து விளையாடினோம் என்றாள். அம்பிகை அவர் யானையாக இருந்தோம். கண் தெரியாத யானையாக என்றாள். சியாமை வந்து அம்பாலிகையை அழைத்துச் செல்கிறாள். அவளிடம் எனக்குக் குழந்தை பிறக்குமா என்றாள். ஆம் என்றாள். அதை வைத்துக் கொஞ்சமுடியுமா என்றாள். அதை என் வெண்பளிங்கு பொம்மையைப் போல் வைத்து விளையாடுவேன் என்றாள். பின் அவள் அறையில் இருந்தபோது சியாமை 3 கதைகள் சொன்னாள். சந்திரன் பிறந்த கதை. மகாபிரஜாபதியான அதிரியின் பிரம்மத் தியானத்தில் வழிந்த கண்ணீர் முத்துக்கள் திரண்டு உருவானவன் சந்திரன். சந்திரன் ஒளி பெற்ற கதை. பிருதுவின் மகள் பிருத்வி (பூமி) எல்லாவற்றையும் தன்னுள் இழுத்துக் கொள்ள, பிருது அவளைச் சாபமிடப் போனார். பின் அவள் தான் அனைத்தையும் உருவாக்க பசு வடிவம் எடுத்தாள். அவளிலிருந்து பொழிந்த பால் அனைத்தையும் நிறைத்து உயிர் கொடுத்தது. சந்திரன் அப்பாலை அருந்தி ஒளி பெற்றான். சந்திரன் சாபம் பெற்ற கதை. தட்சப்பிரஜாபதியின் 27 மகள்களை சந்திரன் மணம் புரிந்தான். ஆனால் ரோஹினியிடம் மட்டும் மையலுற்றிருந்தான்.பிரஜாபதி அவனை சபிக்கவே அவன் 15 நாள் தேய்ந்து 15 நாள் வளர்ந்தான். சியாமை சொன்னாள். அதுபோல்தான் விவீயும் வாழ்நாள் முழுதும் தேய்ந்தவன். அவன் வீரியம் அனைத்தும் இப்போது அம்பிகையிலிருக்கிறது. மிஞ்சியிருப்பது அவனது நோயும் வெண்ணிறமும்தான் என்றாள். அதை நான் பெற்றுக்கொள்கிறேன். என் வெண்பளிங்குச் சிலைபோல விளையாடுவேன் என்றாள் அம்பாலிகை. சிறுமிகள், பெண்ணாகி, தாயாகும் தருணம் அபாரமானது.

  30. சிவை சூதப்பெண் அதிகாலை எழுகிறாள். அவள் தலைவி மாதங்கி அவளைக் கொடுமைப்படுத்துகிறாள். அவளை அம்பாலிகை கூட்டிவரச் சொல்கிறாள். சிவையும் தோழி கிருபையும் நீந்திக் குளிக்கிறார்கள். இருவர் பார்வையிலும் அரசகுலத்தவரின் போலிப்பெருமிதமும், நிமித்திக நம்பிக்கையும் விமர்சிக்கப்படுகின்றன. முனிவர்களைக் கொண்டு குழந்தை பெறுதல் விமர்சிக்கப்படுகிறது. அரசகுலப் பெண்கள் அனைவரும் தவமிருந்துதான் பிள்ளை பெறுகிறார்கள். சூதப்பெண்களுக்கு முனிவர் கல்லெறிந்தாலே பிள்ளை பிறந்து விடுகிறது. அம்பாலிகையை அழைத்து வரும்போது அவள் சூதப்பெண்கள் திருமணம் பற்றிக் கேட்கிறாள். பின் சிவை வியாசரை அழைக்கச் செல்கிறாள். அங்கு அவள் முனிவர் குலம் வந்தவள் என அறிகிறார். அவள் காவியம் படித்தவள். இருவரும் தத்துவார்த்தமாக உரையாடிக் கொள்கிறார்கள். பின் சிவை அரசியின் இடத்துக்கு செல்கிறாள். அவர்கள் சீர் மொழியில் பேசிக்கொள்கின்றனர். அது சிவைக்குத் தெரியும் என்பது அவர்களுக்குத் தெரியாது. ஒருத்தி கண்ணை மூடிவிட்டாள், இன்னொருத்திக்கு நோய்தான் கொடுக்கப்பட்டது. குழந்தைகள் இருவரும் அறிவின்றி ஒன்றும், ஆரோக்கியமின்றி ஒன்றும் பிறக்கும் என்று அரசி சியாமையிடம் சொல்கிறாள். அரசுகள் நல்ல அமைச்சர்களாலேயே ஆளப்படுகின்றன. நம் அரசர்களுக்கு நல்ல அமைச்சன் இருந்தால் அவனைக் கொண்டு நாடாளலாம். வியாசனிடம் தனக்கு ஞானக்குழந்தை வேண்டும் என்று ஒரு சூதப்பெண்ணை வேண்டச் சொல்லி அதை அமைச்சனாக்கி விடலாம் என்றாள். அப்போது சிவையைக் கண்ட அரசி அவளுக்கு சீர் மொழிதெரியும் என்று ஏன் சொல்லவில்லை, நீ எந்த நாட்டுக்கு ஒற்று என்ற் கேட்டு தண்டிக்கச் சொல்கிறாள். அப்போது அவள் தன் குலம் சொல்லி அழுகிறாள். வியாசனிடம் குழந்தை பெற இவளை விட தகுதியான பெண் இல்லை என்று சியாமை சொல்கிறாள். இவள் மூன்றாவது இளவரசியைப் போல் கவனிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறாள் அரசி.

  31. வியாசர் விந்திய மலைக்கு அப்பாலிருந்த சுகசாரிக்குச் செல்கிறார். காடுகளிலும், மலைகளிலும் பயணப்படுகிறார். இடையில் ஒரு சத்திரத்தில் தங்குகிறார். அங்கு தமிழ்புலவர் சாத்தனாரைப் பார்க்கிறார். அவரிடம் தன் உள்ளக்குமுறலை வெளிப்படுத்துகிறார். இருவரும் தத்துவார்த்தமாகப் பேசிக் கொள்கிறார்கள். சாத்தன் நீர் உம் மஹாகாவியத்தின் முதற்சொல் தேடி தட்சிணம் செல்லுவீர் என்றார். அவர் வியாசர் மகன் சுகனைப் பார்த்திருந்தார். வியாசர் சுகனைப் பற்றிச் சொல்கிறார். ஜனகரை அவன் குருவாகக் கொள்கிறான். அறம், பொருள், இன்பம் மூன்றும் அனுபவித்துதான் வீடுபேறு அடைய இயலும் என்றார் அவர். சுகன் அது தேவையில்லை என்றான். அதற்கு அவர் உத்தாலகர் ஸ்வேதகேது கதையைசொல்லி அதற்கு விடை கேட்டார். உத்தாலகரைக் கண்ட ஒரு முதிய பிராமணர் தனக்குக் கொள்ளி போட பிள்ளை வேண்டும், அதனால் அவர் மனைவியை அனுப்ப வேண்டும் என்று சொல்லி அவளை இழுத்துச் செல்கிறார். உத்தாலகர் அமைதியாக இருக்கிறார். ஸ்வேதகேது பிராமணரைத் தடுக்கிறான். அவன் செய்தது சரியா என்று பிராமணர் கேட்கிறார். உத்தாலகர் பதில் சொல்லாமல் சென்று விடுகிறார். அவர் ஏன் அமைதியாகச் சென்றார் என்பதற்கு பதில் சொல்ல வேண்டும். ஸ்வேதகேதுவின் பதிலில் ஜனகர் மகிழ்ந்து நீ நூறாண்டுகள் வாழ்வாய். உனக்கு முதல் மூன்றும் தேவையில்லை.என்று வாழ்த்தினார். அந்த சுகரைத் தேடி சுகவாரிக்குச் செல்கிறார். எல்லாக் கிளிகளும் வேதமோதும் வனம் அது. எனக்குத் தோன்றியது, எல்லாக் கிளிகளும் வேதம் ஓதினாலும் இருப்பது ஒரு சுகன் தானே! அங்கு அவன் காலில் வீழ்ந்து என் மனக்குறைக்கு நீதான் பதில் சொல்லவேண்டும் என்றார் வியாசர். தான் செய்தது சரியா, கன்னியரை கர்ப்பமுற வைத்தது சரியா என்றார். சுகன் நீ இன்னும் நூறாண்டு வாழ்ந்து உன் குலக்கதையைப் பாடுவாய் என்றான். இது வரமா, சாபமா என்றார் வியாசர். 

  32. பித்தி பெற்ற குழந்தை ஒன்று தாய் இறந்த பின், ஒரு பன்றியில் முலையில் பாலருந்தியது. குட்டி நீங்கியும் பன்றி குழந்தைக்குப் பால் கொடுத்தது. பன்றியின் முலை வற்றியதும், அது இன்னொரு பித்தியின் முலையருந்தியது. அவள் முதலில் அவளை தூக்கி வீசி, பின் சேர்த்துக் கொண்டாள்.இருவரும் சேர்ந்து அலைந்தனர். கிடைத்ததை உண்டனர். குழந்தை பெரும்பசி கொண்டிருந்தாள். சடைச்சியான அவளை சிகண்டினி என்றழைத்தனர். அவள் அன்னை காசி, கங்காத்வாரம், காசி என மீண்டும் மீண்டும் அலைந்து கொண்டிருந்தாள் அன்னை. காசியில் ஒருமுறை 15 நாட்களுக்குக் கொண்டாட்டம் என அறிவித்தனர். காசி அரசி இறந்தவுடன் மன்னன் வங்க இளவரசியைத் திருமணம் செய்ததால் கொண்டாட்டம் என்றனர். அவளது மூன்று இளவரசியரையும் பற்றி பெரிதாக யாரும் பேசவில்லை. அன்னை கங்கையில் குதித்து அஸ்தினாபுரி நோக்கி நீந்தினாள். சிகண்டினி பின்தொடர்ந்தாள். அங்கு சென்று நேராக கங்கைக் கரையில் பித்தாகி அமர்ந்திருந்த நிருதன் என்னும் தோணிக்காரனிடம் சென்றாள். அவன் வந்து அவளை வணங்கினான். அவள் காட்டுக்குள் செல்ல சிகண்டினி அவனும் அவர்களைப் பின்தொடர்ந்து வருவதைப் பார்த்தாள்.

  33. காட்டுக்குள் சென்ற பின் பித்தியும், நிருதனும் பேசவில்லை. அவள் நிருதனைப் பார்த்து சைகை காட்டினாள். அவன் புரிந்து கொண்டு மரக்கிளைகளை ஒடித்துத் தயார் செய்தான். சிகண்டினிக்குப் புரிந்து விட்டது. தான் எரிய அவள் சிதை செய்கிறாள் என்று. பின் அவளருகில் சென்று மகனே சிகண்டி! என்றாள். அவள் குரல் கடூரமாக அல்ல, இனிமையாக ஒலித்தது. நான் பெண் என்றாள். இல்லை நீ என் மகன் என்றாள் பித்தி. ஒரு கணம் இமைத்து ஆம் என்றான் சிகண்டி. நான் அம்பை. என் கதையை நீ வில் படிக்கும் இடத்தில் கேள். பீஷ்மர் என் ஆன்மாவைக் கொன்று விட்டார். நீ அவரைக் களத்தில் கொல்ல வேண்டும். அவர் அறிந்த, நீ அறியாத வித்தை ஏதும் இருக்கலாகாது, என்றாள். ஆம் என்றான் சிகண்டி. பின் நிருதனை வணங்கி இந்தத் தங்கைக்கு நீர்கடன் செய்யுங்கள் என்று சொல்லி சிதை புகுந்தாள். சிகண்டி காட்டில் ஸ்தூனகர்ணன் ஆலயம் சென்று கடுந்தவம் இருந்தான். அவனுக்கு ஆணுடல் கிடைத்தது.

  34. சிகண்டி காட்டுப்பன்றி மதமெழுந்தது போல காட்டுக்குள்ளிருந்து நகர் புகுந்தான். வராஹி ஆலயத்தில் அமர்ந்து பேய் போல் உண்டான். செல்லும் வழியெங்கும் மக்கள் அவனை அஞ்சி வணங்கினர். பாஞ்சால தேசம் சென்று மன்னனைப் பார்க்க விரும்பினான். தட்சிண்பாஞ்சாலம் பிருஷதனாலும், உத்தர பாஞ்சாலம் சோமகசேனனாலும் ஆளப்பட்டு வந்தது. சோமகசேனனுக்கு பிள்ளை இல்லாததால் நாட்டை அபகரித்து தன் மகனை ஆளவைக்க பிருஷதன் திட்டம் தீட்டினான். சிகண்டி வந்தபோது சோமகசேனன் உடல் நலமின்றி இருந்தான், இன்னும் சில நாட்களில் அவன் இறந்து விடுவான் என்று நிமித்திகர் கணிக்க மருத்திவர் ஆமோதித்தனர். அவன் இறந்தால் நாடு அடிமைப்படும். அவனைக் கண்ட சிகண்டி நீங்கள் என் தந்தை என்று என் அன்னை சொன்னாள் என்றான். அவரும் ஆம் நீ இந்நாட்டின் இளவரசன் என்றார். நான் பீஷ்மரைக் கொல்ல வந்திருக்கிறேன் என்றான். அவர் பீஷ்மர் மீது எனக்குப் பொறாமையாக இருக்கிறது என்றார். அமைச்சரிடம் இவன் சொல் மீறி ஒரு சொல் எழக்கூடாது என்றார். சிகண்டி ஆயுதசாலையிலேயே தங்கினான். எந்நேரமும் பயிற்சியிலேயே கழித்தான், உண்ணும் நேரம் தவிர. ஒரே வாரத்தில் அத்தனை வில்வித்தைகளையும் பயின்றான். இனி என்ன என்றான். ஒரு தனுர்வேத ரிஷியை குருவாக அடைய வேண்டும். கங்கைக்கரையில் உள்ள அக்னிவேசரிடம் செல்லுங்கள். அவரிடம்தான் பிருஷதரின் மைந்தர் யக்ஞசேனர் வில்வித்தை கற்கிறார் என்றார் அமைச்சர். சரி என்றான். அவர் உங்களை ஏற்றுக் கொள்ளமாட்டார் என்றார். சிகண்டி பன்றி போல் உருமி ஏற்றுக் கொள்வார் என்றான்.

  35. அக்னிபதம் என்னும் தன் தவச்சாலையில் அக்னிவேசர் மாணவர்களுக்குத் தனுர்வேதத்தின் கதையைச் சொன்னார். பின் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு சரியான பதிலைச் சொன்னவர் துரோணர். பின் ரதத்தில் சிகண்டினி வந்தான். தனக்கு தனுர்வேதம் பயில்விக்கும்படிக் கேட்டான். ஆணும், பெண்ணுமல்லாத உனக்கு வித்தை கற்பிக்க இயலாது. மேலும் க்ஷத்ரிய தர்மம் உன்னிடம் இல்லை என்று ஒரு கதை சொன்னார். வழிப்போக்கனிடம் அகப்பட்ட தாயையும் குழந்தையையும் காப்பாற்றாமல் சூத்ரன், வைசியன், க்ஷத்ரியன், பிராமணன் நால்வரும் சென்று விடுகிறன்றனர். அவர்களுக்கு மன்னன் அளிக்கவேண்டிய தண்டனை; சூத்ரன் - ஒரு நாள் கடின வேலை; வைசியன் - பொருளைப் பிடுங்குதல்; பிராமணன் - வேள்வியிலிருந்து விலக்கி வைத்தல். ஆனால் க்ஷத்ரியன் ? அவனையும் அவன் குலம் முழுவதையும் அழித்து விடல். ஏனெனில் க்ஷத்ரியனுக்கு காத்தல் தர்மமாகக் கொள்ளப்பட்டிருக்கிறது. உனக்கு எந்த தர்மமுமில்லை அதனால் ஏற்கமுடியாது என்றார். சிகண்டி என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் இல்லை கொல்லுங்கள் என்று சொல்லி சண்டைக்கு அழைத்தான். சண்டை நடந்தது. சிகண்டி திணறினாலும் பின்வாங்கவில்லை. பின் ஒரு கணத்தில் அக்னிவேசர் புரிந்து போரை நிறுத்தி அவனை ஏற்றுக் கொண்டார். மூன்று வாக்குறுதிகள் கேட்டார். அவன் தன் தாய் தவிர யாருக்கும் வாக்குறுதியளிக்க மாட்டேன் என்றான். உன்னை என்னால் வாழ்த்த முடியாது. பழியை மட்டுமே பெறுபவனாக வந்து நிற்கிறாய். ஆனால் கர்ம யோக ஞானியைத் தெய்வங்கள் அறியும். எளிய ஆசிரியன் வாழ்த்துகிறேன் மகனே என்றார்.

  36. பீஷ்மர் அபாகா நதியின் சிற்றாறான பிரியதரிஷினியின் கரையில் இருந்தார். வந்து பதினேழு ஆண்டுகள் ஆகி விட்டன. துவக்கத்தில் அஸ்தினபுரியிலிருந்து செய்திகளும், இவரிடமிருந்து அஸ்தினபுரிக்கு ஆணைகளும் அடிக்கடி சென்றன. இப்போது மெல்லக்குறைந்து, அவர் இருப்பதையே அவர்கள் மறந்தது போலாகி விட்டது. இதற்கு முன் அஸ்தினபுரியிலிருந்து கிளம்பிய போது அவர் நேராக கங்கா நாட்டுக்குத்தான் சென்றார். அதற்கு முன் அவர் 19 வயதில் படைநடத்திச் சென்றிருந்தார். கங்கர்கள் தேவவிரதனை ஏற்க முடியாதென்று சொன்னதால் போர் மூண்டது. தேவவிரதன் சாதுரியமாக கங்கை வழியே படை நடத்தி அவர்களை வென்றான். பின் அவன் கங்கையில் நீந்துவது கண்டு மக்கள் அவனை ஏற்றனர். அங்கு தன் தாயைப்பற்றிக் கேட்டான். அவள் தேவவிரதன் பிறந்ததுமே பித்தியாகி, இறந்த தன் ஏழு குழந்தைகளையும் ஆற்று மண்ணைத் தோண்டித் தோண்டித் தேடிக் கொண்டிருந்தாள். பின் அப்படியே உயிர் விட்டாள் என்றனர். அதன் பின் நீண்டகாலம் கழித்து சென்றபோது கங்காபுரி மாறிவிட்டிருந்தது. அவரது கங்காபுரி நினைவுகளில் மட்டுமே வாழ்ந்தது. அங்கிருந்து காட்டுக்குள் சென்று அவள் பிரியதர்ஷினி ஆற்றை அடைந்தார். அங்கு வந்த முனிவர் அது பிரியமானதைக் காட்டும் நதி. தனக்கு பிரம்மத்தைக் காட்டுகிறது என்றார்.எனக்கு என்ன காட்டுவாய் என்று நதியைப் பார்த்துக் கேட்டார். அப்போது அவருக்கு முன் பிறந்த ஏழுகுழந்தைகளும் நீரில் தோன்றி அவருடன் பேசின. அன்றிலிருந்து அவர் விட்ட மூச்சில் எட்டு உயிர்கள் வாழ்ந்தன.

  37. அரசிகள் கருவுற்ற செய்தி பீஷ்மருக்கு பிரியதர்ஷினியின் கரையில்தான் தெரிய வந்தது. அரச மருத்துவச்சி ரோகிதை கரினி கர்ப்பமும், அம்பாலிகை மிருக கர்ப்பமும், சிவை அகிகர்ப்பமும் கொண்டிருக்கிறாள் என்று சொல்லி அவர்களது உடற்குறிகலை விவரித்தாள்.பின் நிமித்திகரை அழைத்து ஒவ்வொரு கருவுக்கும் நிமித்தம் பார்க்கச்சொன்னார். கவபாலன் ஒவ்வொரு கருவுக்கும் ஒரு பறவையை நிமித்தமாகப் பார்த்து ஒரு கதை சொல்ல ஆரம்பித்தான். கந்தர்வ உலகின் திருதராஷ்டிரன் தன் மனைவி திருதியுடன் தடாகத்தில் குளிக்கும் போது நூற்குஞ்சுகளுடன் பறந்த அன்னப்பறவையை, அவற்றின் நிழல் பார்த்து அன்னையின் கண்ணை அம்பெய்திக் குருடாக்கினான். ஆனால் நீரில் பார்த்ததுதான் அசல். அது ஓர் கின்னரப்பெண்கள். அவை நீருள் சென்று மறைய அவற்றின் நிழல்கள் மட்டும் தவித்தன. அன்று அவனோடு அவன் நிழல் வாராதது கண்ட திருதராஷ்டிரன் தடாகத்தைச் சென்று பார்க்க அங்கு அவனது கருநிழல் அலைந்து கொண்டிருப்பதைக் காண்கிறான். சுக்ரரிடம் சென்று கேட்கிறான். அவர் நீ மண்ணில் பிறந்து பாவத்தைக் கழிக்க வேண்டும் என்றார். இரண்டாவது கருவின் நிமித்தத்தின் கதை.இந்திராவதிக் கரையில் தன் துணையுடன் வாழ்ந்தது கௌரன் என்ற சாதகப்பறவை. தாய் சுப்ரை முட்டையிட, தந்தை இரை தேடியது. ஒரு நாள் வேடனை கௌரன் வீழ்த்த, குஞ்சுகள் உணவின்றித் தவித்தது. அன்னை நீங்கள் என்னை மிச்சமின்றி உண்ணுங்கள் என்றது. குஞ்சுகள் அன்னையை உண்டு பறந்ததும் ஒரு குஞ்சு மட்டும் அவளது வாசனை மட்டும் அங்கிருப்பதை அறிந்தது. சுப்ரை வானுலகில் கௌரனைச் சந்தித்தது. என் சிறகுகள் ஏன் ஒளியுறவில்லை என்றது கௌரன். நான் அன்னையாய் நிறைவடைந்தேன். நீ மண்ணுலகம் சென்று நிறைவடைந்து வருக என்றது சுப்ரை. சிவையின் கருநிமித்தம். பேசாநோன்பு கொண்ட மாண்டவ்ய முனியை கொள்ளையர்களோடு சேர்த்துக் கழுவேற்றினான் அரசன். அவர் கழுவில் உயிர்விட மனமின்றி 100 நாட்கள் இருந்தார். பின் முனி என்று அறிந்து அவரை இறக்கியதும் இறந்தார். இறப்புலகில் யமனிடம் கழுவிலேற நான் செய்த தவறென்ன என்றார். அவர் சிறு வயதில செய்த தவறு என்றான் தர்மன். அவர் சிவனைத் தவம் புரிந்து வருவித்து நியாயம் கேட்டார். சிவன் அவன் செய்தது சரியே என்றார். மாண்டவ்யர் விதியை மாற்றினார். யமனிடம் செய்யாப்பிழைக்கு என்னைத் தண்டித்தாய். நீ மண்ணில் பிறந்து இக்கடனைக் கழிப்பாய் என்றார். பின் மூன்று குழந்தைகள் பிறந்த விதம் வர்ணிக்கப்படுகிறது. பீஷ்மர் சொற்படி அவர்களுக்கு திருதராஷ்டிரன், பாண்டு, விதுரன் என்ற பெயர்களிடப்படுகிறது.

  38. குழந்தைகள் பிறந்த 12ம் நாள் சடங்கு. பீஷ்மர் இருந்தால் வேதியர் வரமாட்டோம், அவருக்கு அம்பையின் தீச்சொல் இருக்கிறது என்றனர். சத்ய்வதி பீஷ்மரை வெளியேறச் சொன்னார். பீஷ்மர் விரக்தியுடன் வெளியேறி, மக்கள் தன்னை அணுகும் முறையில் மாற்றத்தைக் கண்டு கொண்டார். பின் வழியில் ஒரு சத்திரத்தில் தங்கினார். அங்கு சூதர்கள் பீஷ்மரின் பிறப்பையும், செயல்களையும் இழித்துப் பாடினர். அதைக் கேட்டு ரசித்த பீஷ்மர் சிரித்தபடியே வெளியேறினார்.

  39. சப்த சிந்துவில் உள்ள ஒரு வேளிர் கிராமத்தில் தங்குகிறார் பீஷ்மர். அத்யாயம் முழுவதிலும் அக்கிராம வர்ணனை, நிலக்காட்சி, மக்கள், இயற்கை ஜெ தல்ஸ்தோய்க்கு நிகரான எழுத்தாளர். அங்கு தங்குகையில் ஒரு பெண் அவரை மணக்க விரும்புகிறாள்.அவர் தான் நைஷ்டிக பிரம்மச்சாரி என்று சொல்லி விலக, அவள் தன் கனவில் ஒரு விராகம் (பன்றி) அவரைக் கொல்வதாகப் பார்த்ததும், அவள் அருகில் இருந்தால் அவரைக் காப்பாற்றி விடுவாள் என்றும் சொல்கிறாள். ஆம் பெண்துணையறியாதவன் பிரம்மத்தில்தான் நிறைவடைய முடியும். எனக்கு இரண்டுக்கும் கொடுப்பினையில்லை. என்றபடி நகர்ந்தார்.

  40. அக்னிவேசர் தன் சீடர்களுக்கு ஆயுதக்கலை பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். உள்ளிருக்கும் கொதிப்பை வெல்வதே கலையில் உயர் நிலையடைவது. பின் அவர்களை வனத்துள் அழைத்துச் சென்றார். அங்கு ஒரு தடாகத்தில் ஒவ்வொரு வீரனும் அம்பை வைக்க நீர் அதிர்ந்தது. யக்ஞசேனன் வைக்கையிலும் அதிர்ந்தது, பிறருக்கு ஆசையும், அவனுக்கு அச்சமும் தடையாக இருப்பதாக சொன்னார். துரோணர் வைக்கையில் அதிரவில்லை.ஆனால் குறிபார்க்கையில் அதிர்ந்தது. அவருக்கு அவர் வித்தையை வெல்ல வேண்டுமென்ற எண்ணமே தடையாக உள்ளதாகச் சொன்னார். பின் சிகண்டி வைத்தபோது குளம் கொதித்தது. உனக்குள் குரோதம் உள்ளது. அதை வெல்லாமல் நீ தனுர்வேதத்தை அறிய இயலாது என்றார். பின் அவன் கண்ட கனவு பற்றிக் கேட்டார். கனவில் அவன் ஒரு பன்றியாக பீஷ்மரைக் கொன்று அவர் இதயத்தைத் தின்றதைப் பற்றிச் சொன்னான்.அதை ஒரு பெண் பார்த்ததாகவும்.என்ன வன்மம்? இதை கொண்டு அவரை வெல்ல முடியாது என்றார். அவரை முழுதும் அறி. பின் அவர் கால் பணியக்கூட வாய்ப்புண்டு. அவர் உன் தந்தை என்றார். சிகண்டி உறுமினான். ஆம் நீ அம்பையின் சினத்தால் பிறந்தவன். அவர்தான் அச்சினத்துக்கே காரணம். உடலால்தான் கருவுறவேண்டுமா? மனதால் கருவுறலாகாதா என்றார். பின் உத்தாலகர் ஸ்வேதகேது கதையைச் சொன்னார். ஆருணி என்னும் உத்தாலகரின் மகன் எங்கும் சென்று வேதம் கற்றுத் தேர்ந்தான். பின் தந்தையிடம் வந்து உங்களுக்கு ஏதேனும் கேள்வி இருந்தால் கேளும் என்றான். அவன் ஆணவத்தை உணர்ந்த தந்தை அறியமுடியாததை அறிந்தாயா என்றார். மகன் உணர்ந்து பணிந்தான். அவர் சொன்னார் நீயே அது. சாந்தோக்கிய உபநிடத மந்திரமான அதை அவன் குழந்தையாக இருந்தபோதும் கூறியிருப்பாரல்லவா? அவன் தன்னைப் பார்த்து நீ யார் என்று கேட்கும்போது. ஒவ்வொரு மகனும் தந்தையாகவே ஆகிறான். பின் மறுநாள் காலை சிகண்டி வெளியேறும்போது கேட்கிறார். நீ கனவில் பார்த்த பெண் யார்போலிருந்தாள் என்றார். அன்னைபோல் என்றான்.

  41. சிகண்டி ஐம்பது நாட்கள் பயணித்து ஹம்சபுரம் வந்து சேர்ந்தான். அதன் காட்சி, வணிக நகரம் வர்ணனை. அங்குள்ள சூரிய கோயில் செல்கிறான். அதன் வர்ணனை. சூரியனின் வாகனமான பன்றியையே பார்க்கிறான். பின் வெளிவரும்போது வீதியில் ஒருவன் அம்பு விட்டு வித்தை காட்டுகிறான். அவனிடம் ஒரே அம்பில் காகிதக்கிளியை வீழ்த்தி இருபது வெள்ளிகளை வெல்லுகிறான். அவனைப் பின்தொடர்ந்து சூக்திகன் என்ற பிராமணன் இறைஞ்சி வருகிறான். அவனுடன் சென்று மதுவருந்துகிறான். யாரைப் பார்க்கச்செல்கிறான் என்று கேட்கிறார்கள். நான் பாரதவர்ஷத்தின் ஒப்பற்ற வீரரை வீழ்த்த வேண்டும். அவரை வீழ்த்திய ஒரே ஒருவர் இருக்கிறார். அவரைப் பார்க்கச் செல்கிறேன். அவர் சிபி தேசத்துப் பால்ஹிகர் என்றான்.

  42. பால்ஹிகன் வணிகர்களோடு சிபிநாடு செல்கிறான். பாலைநிலக்காட்சி. அங்குள்ள உயிர்கள். அங்கு ஒருவன் உடும்பைக் கொன்று குருதி குடிக்கிறான். அதன் உடலைப் பகிர்ந்து கொள்கிறான். பின் ஒரு சோலையில் நீரருந்தி ஓய்வெடுக்கிறார்கள். அங்கிருந்து மலைகளைக் கடந்து சிபிநாடு அடைகிறார்கள். கடைவீதிகளில் எங்கும் பெண்களே பொருள் வாங்குகிறார்கள். ஆயுதக்கடைகளில் மட்டும் ஆண்கள். பின் அரண்மனை செல்கிறான். இலச்சினையைக் காட்டி பால்ஹிகனைப் பார்க்கவேண்டுமென்கிறான். அவர் யாரையும் பார்ப்பதில்லை என்றார்கள். பின் கோட்டைக்குள் மூன்று அடுக்குகள் கீழிறங்கி ஒரு இருட்டறையில் அவனைக் கொண்டு விடுகிறார்கள். இங்கா இருக்கிறார்? என்றான். ஆம் இருபதாண்டுகளாக. சூரிய ஒளி அவருக்கு உகப்பதில்லை என்றான் காவலன். பால்ஹிகன் முதியவராக வந்து நின்றார். நீண்டகைகள். சுருங்கிய தோல். மயிரற்ற இமைகள். உன்னை எங்கோ பார்த்திருக்கிறேன் என்றார். வாய்ப்பில்லை என்றான் சிகண்டி. இல்லை, உன்னை இருபதாண்டுகளுக்கு முன் பார்த்திருக்கிறேன். நீ பீஷ்மரைக் கொல்லபோகிறவன் என்றார்.

  43. பால்ஹிகனிடம் அவர் எவ்வாறு பீஷ்மரை வென்றார் என்று கேட்டான் சிகண்டி. அவர் தன் கதை சொன்னார். தன் தாய் சுனந்தையை தந்தை பிரதீபர் கடத்திச் சென்று மணம் செய்தார். சிபி நாடு ஒரு பாலைவன நாடு. இதன் மக்கள் பச்சை உடும்பு உண்ணுபவர்கள். ஆனால் அஸ்தினபுரியின் ஆட்சிபீடத்தில் இதன் ரத்தம்தான் இருக்கிறது. தேவாபி துறவு சென்ற பிறகு இங்கு வந்தேன். இங்கு காட்டில் திரிந்து குடித்து மகிழ்ந்தேன். நாற்பதாண்டுகள். பின் ஒருநாள் சூதன் ஒருவன் தேவவிரதனின் வீரத்தைப் பாட, அவனை வெல்லவேண்டுமென்று மீண்டும் அஸ்தினாபுரி சென்றேன். அவனை சமருக்கு அழைத்தேன். இருவரும் கதையுத்தம் நடத்தினோம். அவன் என் சக்தியை எனக்கெதிராகவே சாதுர்யமாகத் திருப்பினான். பின் ஒரு கணத்தில் அவன் வீழ்ந்தான். என்னால் அவனைக் கொல்லமுடியாது திரும்பினேன் என்றார். ஏன் என்றான் சிகண்டி. ஏனெனில் அவன் என் ஆடி. அவனில் நான் என்னைத்தான் பார்த்தேன். அவனும் தன் சகோதரர்களைத் தோளில் சுமந்து கொண்டிருந்தான். ஆடிகளுக்கு சுதந்திரம் இல்லை. நானும் ஆடிதான். ஆனால் உன்னால் அவனைக் கொல்ல முடியும். ஏனெனில் நீ அவன் நிழல் என்றார்.

47. தண்டகர் என்னும் நாகசூதர் பீஷ்மனிடம் சொன்னார். இந்த யானத்து நீர் முடிவின்மையைக் காட்டும். மக்கள் முடிவினையைத் தங்கள் வசதிக்கேற்ப வெட்டிக் கொண்டு வாழ்கின்றனர். ஆனால் அது கூழாங்கற்களில் ஏன் உள்ளங்கையில் கூட வெளிப்படும் என்றார். பீஷ்மர் நீரில் பார்த்தது அவர் அறியாத மனிதர். தண்டகர் அது அவரது குல மூதாதை யயாதி என்றார். என்னைப் போலவே இருக்கிறாரே என்றார். பின் அவரது கதையைக் கேட்டார். நகுஷனுக்கும், அசோகசுந்தரிக்கும் பிறந்த அறுவரில் தர்மனை அழைத்து வந்த யயாதியே மன்னனானான். அறச்செல்வன் என்று பேரெடுத்து 49 ஆண்டுகள் ஆண்டான். அவன் பிறழா நெறி இந்திர பதவியை ஆட்டுவித்தது. இந்திரனின் சாரதி மாதலி அவனுக்கு ஆசை காட்டி ஆட்சியை முடிக்கச் சொல்ல அவன் அறமே எனக்கு இன்பம் என்றான். இந்திரனின் ஆணைப்படி கந்தர்வர்களும், கந்தர்வ கன்னியரும் சூதராகவும், விறலியராகவும் சென்று அவன் அவையில் விஷ்ணுவின் வராகாவதாரத்தை நடித்தனர். அதில் ஆழ்ந்த யயாதிக்குக் காமம் தூண்டப்பட்டது. பின் காமத்தில் விழுந்தான். மூப்பு தரும் ஜரையும், காமம் தரும் மதனனும் அவனுள் புகுந்தனர். யயாதி கிழப்பருமெய்தினான். மரணத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். ரதியின் மகள் அஸ்ருபிந்துமதியைக் கண்டு காமம் கொண்டான். ரதி விட்ட கண்ணீர்த் துளியில் இருந்து பிறந்தவள். அவரை அவள் ஏற்க மன்றாடினார். அவள் அவரை இளமையுடன் வரச்சொன்னார். அவர் தன் நான்கு மகன்களிடம் தன் முதுமையை ஏற்று, இளமையைத் தரச் சொன்னார். மறுத்த மூவரை சபித்தார். ஏற்றுக்கொண்ட புருவிடம் இளமையை வாங்கி முதுமையைக் கொடுத்து, அஸ்ருபிந்துமதியை அடைந்தார். ஐம்பதாண்டுக்குப் பிறகு திரும்பி வந்து இளமையைத் திருப்பித் தந்தார். இப்போது நீ காமத்தை அறி என்றார். புரு நான் முதுமைக்குள்ளேயே நான் காமத்தை அறிந்தேன். இனி இந்த இளமையை வெற்றிக்கும், புகழுக்கும், அகவிடுதலைக்கும் பயன்படுத்துவேன் என்றான். யயாதியை மீண்டும் காமம் தாக்கியது. அவர் உடல் நீங்கி விண்ணுலகம் சென்றாலும் விடவில்லை. அங்கு அகந்தையோடு இருந்ததால் பிரம்மன் பழித்துத் தள்ளினார். நாலு மன்னர்கள் செய்த யாக நெருப்பில் விழுந்த அவருக்கு அவர்கள் அவிபாகம் தருவதாகச் சொன்னார்கள். நான் தேவனல்ல என்றார். பின் அஸ்ருபிந்துமதியில் தனக்குப் பிறந்த மாதவியை கண்டு மனம் நிறைந்து ஆன்மா நிறைந்தார். பீஷ்மர் நான் புருவின் முகமாக என் முகமிருக்கும் என்று நினைத்தேன். நான் யயாதி என்றால் புரு யார் என்றார். பின் உணர்ந்து கொண்டவராக வருகிறேன் என்றார்.

48.              பீஷ்மர் பாலையில் ஐம்பது நாட்களாக இருக்கிறார். பாலை பழகிவிட்டது. சூதர் சொன்னதை நினைத்துக் கொள்கிறார். இதுவரை தம்பியரைத் தோளில் தூக்கிச் சுமந்தீர். இனி விழியற்றவனையும், நிறமற்றவனையும் தூக்குவீர் என்றார் சூதர். பீஷ்மர் சினங்கொண்டு எழ, என்னைக் கொல்வீராக்ஷத்ரியர் எத்தனை காலமாக நாகங்களைக் கொல்ல முயல்கின்றனர். ஆனால் நாகங்கள் உங்கள் இனத்தையே சுருட்டிக்கவ்வும். மீண்டும் நாம் சந்திப்போம் என்றான். எங்கு என்றார். படுகளத்தில் என்றான். திடீரென்று யாரோ வருவது கண்டு முட்செடி ஒன்றை உடைத்துத் தயாரானார் பீஷ்மர். வந்தது சிகண்டி. தண்டகன் என்னும் சூதனை பார்க்க செல்வதாகச் சொன்னான். பீஷ்மர் தன்னை திருவிட நாட்டு வாகுகன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். சிகண்டி தன் கதை முழுக்கச் சொன்னான். தன் அன்னையின் அனல் அவிக்க பீஷ்மரைப் பழிதீர்ப்பேன் என்றான். அவர் முள்ளொடித்து நின்றது கண்டு அவருக்கு தனுர்வேதம் தெரியும் என்று உணர்ந்ததாகச் சொன்னான். வல்கிதாஸ்திர வித்தையை கற்கவேண்டுமெனக் கூறினான். நான் ஏன் உன்னை மாணவனாக ஏற்க வேண்டும் என்றார். என் அன்னையின் அழலுக்கு நீதி வேண்டுமென நீங்கள் நினைத்தால் என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றான். பீஷ்மர் அவனை வாழ்த்தி மாணவனாக ஏற்கிறார்.


49.              சர்ப்பசத்ர வேள்வி முடிந்து ஒரு வருடம் கழித்து ஆஸ்திகன் வேசரநாட்டு புஷ்கரவனத்தில் உள்ள தன் கிராமத்துக்கு வந்தான். ஊர்கூடி அவனை முனிவன் என்று வரவேற்றது. அவன் தாய் மானசாதேவி அவன் விஷம் நீங்கவில்லை என்று உறுதிசெய்ய நாகவிஷம் தோய்ந்த மூன்று அப்பங்களை உண்ணச்செய்து வீட்டுக்குள் அனுமதித்தாள். அன்று மாலை நாகர் கூடினர். கொண்டாடினர். முதுநாகர் சொன்னார். இந்நாள் நாகபஞ்சமி என்றழைக்கப்படும். மானசாதேவி நாகபூஷணனிடம் தவம் செய்து வரம் பெற்றவள். ஜரத்காரு முனிவரிடம் அவள் ஆஸ்திகனைப் பெற்றாள். அவள் கைலாசம் சென்று மீண்டவள். பாதாள் நாகம் வாசுகி அவளை சகோதரியாக ஏற்றுக் கொண்டான். அவன் தான் ஜனமேஜயன் வேள்வி குறித்துச் சொல்லி மகனை அங்கு அனுப்பும்படி ஆணையிட்டார். ஒரு நாகர் எழுந்து எளிய மன்னனாகிய ஜனமேஜயன் எப்படி நாகங்களை அழிக்க முடிந்தது என்றார். நாகர் சொன்னார். தட்சகரின் மகளும், கஸ்யபரின் மனைவியுமான கத்ருவின் தீச்சொல் நாகங்கள் மேலுள்ளது. அதனால்தான் என்றார். அவள் விண்ணிலும் மண்ணிலும் சுருண்டு கிடக்கும் பெருநாகம். அவள் ஆயிரம் முட்டைகளையிட்டாள். அவை குஞ்சு பொறித்து விண்ணிலும் மண்ணிலும் நாகங்களாய் நிறைந்தன. அவள் சகோதரி வினதையும் அவளும் விண்ணில் சென்ற உச்சைசிரவஸ் என்ற இந்திரனின் புரவியைப் பார்த்து அதன் வால் கருப்பென்று கத்ருவும், வெண்ணிற ஒளியென்று வினதையும் போட்டியிட்டனர். அவர்கள் கண்கள் அங்ஙனம் இருந்தன. அது உண்மயில் வெண்ணிறம். வினதையை ஏமாற்ற எண்ணி, தன் நாகங்களைப் பார்த்து நீங்கள் சென்று அப்புரவிக்கு வாலாகுங்கள் என்றாள் கத்ரு. விண் நாகங்கள் தவிர பிற பொய் சொல்ல மறுத்து விட்டன. கார்கோடகன் தலைமையில் நாகங்கள் புரவியின் வாலென நீண்டு கிடந்தன. வினதை தோற்று ஆயிரம் ஆண்டு தமக்கைக்கு அடிமையாக இருப்பதாக உறுதி அளித்தாள். கத்ரு தன் மைந்தர்களான பிற நாகங்களை சினந்து தீச்சொல்லிட்டாள். காமக்ரோதங்களை வெல்பவன் வளர்க்கும் நெருப்பில் வெந்து அழிவீர்கள் என்றாள். தீச்சொல் கேட்டு நடுங்கிய நாகர்களிடம் காஸ்யபர் சொன்னார் எந்தப் பேரழிவிலும் எஞ்சிய துளியிலிருந்து நீங்கள் எழுவீர்கள் என்று.அவ்வாறே ஜனமேஜயன் யாகத்தில் நாகங்கள் அழிந்தாலும், கஸ்யபர் சொல்லால் தட்சன் மீட்கப்பட்டார் என்றார். நாகபூசனை தொடங்கியது. மானசாதேவியின் விழிகள் இமையாததாகி, மூச்சு சர்ப்பச்சீறலாயிற்று.


50.              பாதாளலோகம் சென்ற தட்சனும், தட்சகியும் அங்கு தாங்கள் மட்டுமே இருக்கக் கண்டனர். நான் என்று எண்ணிக்கொண்ட தட்சனுக்கு ஆயிரம் தலைகள் முளைத்தன. அவ்வண்ணமே தட்சகிக்கும் ஆயிற்று. இருத்தல் என்ற தட்சனும், பிறப்பு என்ற பிரசூதியான தட்சகியும் இணைந்தபோது இருட்டு கருக்கொண்டது. திருஷ்டம், சுவாசம், சும்பனம், தம்சம், ஸ்பர்சம், ஆலிங்கனம், மந்திரனம், போகம்லயம் என்ற ஒன்பது யோகங்களாக அவர்கள் ஒன்றாயினர். கண்விழித்தபோது தம்மைச் சுற்றி பாதாலம் முளைத்திருப்பதைக் கண்டனர். வாசுகி குலத்திலும், ஐராதவதம், திருதராஷ்டிர, குலங்களில் பிறந்த நாகங்கள் பிறந்து பெருகி முடிவிலியைத் துழாவும் விரல்கள் என வானில் நிறைந்தன. பாதாளத்திலிருந்து இருள் பெருநதியாகக் கிளம்பி, நிழல்களாக உயிர்களைத் தொடர்ந்து, இச்சையாக எண்ணத்தில் நிறைந்தது. சிருஷ்டியாக எங்கும் பரவியது.


முதற்கனல் நிறைவு.


Comments

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை