11 ஆகஸ்ட், 2010

ரோபோக்களின் இதயமும், கணினிக் கனவுகளும் 1

சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட எந்திரன் இசை வெளியீட்டில் படத்திலிருந்து சில காட்சிகளைக் காட்டினார்கள். அதில் ஐஸ்வர்யா ரோபோ ரஜினிக்கு முத்தம் கொடுப்பது போல ஒரு காட்சி. மனிதனால் உருவாக்கப்படும் ரோபோக்களை மனிதனே காதலிக்க ஆரம்பித்தால் எப்படி இருக்கும் என்று காட்டியதைப் போலிருந்தது. அதுபோலவே ஒரு ரோபோவும் மனுஷியைக் காதலிக்கும் சாத்தியம் உண்டென்றும் காட்டியது.
இதெல்லாம் உண்மையில் சாத்தியமா என்ற கேள்விகள் இன்றி வெறும் பொழுதுபோக்குக்காகவே இந்த சயன்ஸ் ஃபிக்ஷன் படங்களை நாம் பார்த்துக் கொண்டிருந்தாலும், இவற்றை சாத்தியமாக்கிக் காட்ட வேண்டும் என்ற முனைப்புடன் ஒரு கூட்டம் வேலை செய்து கொண்டிருக்கிறது என்று சமீபத்தில் தெரிய வந்தபோது ஆச்சரியமாக இருந்தது.
நான் வேலை பார்க்கும் இஸ்லாமியா பள்ளிக்கு அருகிலேயே முஹிபுத்தீன் என்றொரு மிகப்பெரிய பள்ளி உண்டு. மாலத்தீவுகளின் குறிப்பிடத்தகுந்த புகழ் பெற்ற பள்ளிகளில் ஒன்று. என் மனைவி அங்குதான் கணித ஆசிரியையாகப் பணிபுரிகிறார். அங்கிருந்து சென்ற வாரம் எங்கள் பள்ளிக்கு ஒரு அழைப்பு வந்திருந்தது. மாலத்தீவுகளில் இருந்து யு.கே சென்று பிராட்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ஊடகக் கணிணி இயக்குனராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் திரு. ஹசன் உகைல் ஒரு கருத்தரங்கு நடத்தப் போவதாகவும், கணித மற்றும் அறிவியல் ஆசிரியர்களும், மாணவர்களும் மட்டும் கலந்து கொள்ளும்படியும் அழைப்பு வந்திருந்தது. அன்று மாலையே முஹிபுத்தீன் சென்றோம்.
ஹசன் உகைல் பார்க்க மிகவும் எளியவராகத் தெரிந்தார். பேச்சில், உடல் மொழியில் இங்கிலாந்து வாசம் வீசியது. லீட்ஸ் பல்கலைக் கழகத்தில் கணிதத்தில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றிருக்கிறார். அங்கேயே சில ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணிபுரிந்த பின் பிராட்ஃபோர்ட் பல்கலையில் கடந்த ஏழு வருடங்களாகப் பணிபுரிகிறார். அறிவுப் பறிமாற்றம் என்ற தலைப்பில் அவர் செய்த ஆய்வுக்கு விருது கிடைத்திருக்கிறது.
அங்கு என்ன வேலை என்று கேட்டால், சும்மா உட்கார்ந்து கொண்டு ஐடியாக்களை உருவாக்கிக் கொடுப்பதுதான் என்கிறார். I get paid for my ideas. பொய் கண்டறியும் கருவி பற்றிய அவர்களது ஐடியாவைச் செயலாக்குவதற்கு ஒரு நிதி நிறுவனம் ஒரு மில்லியன் பவுண்டுகள் நிதியளித்திருக்கிறது. அவர் பணிபுரியும் துறையான ஊடகக் கணிணித்துறையில் (என் தமிழ் தவறென்று நினைக்கிறேன். ஆங்கிலத்தில் விஷூவல் கம்ப்யூட்டிங்) அவர்கள் முயற்சிகள் அனைத்தும் அசலுக்கும், நகலுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை குறைத்துக் கொண்டே வருவது பற்றியது. கருத்தரங்கின் துவக்கத்தில் இரண்டு விடியோக்களைக் காட்டி இதில் எது உண்மையான நபர், எது கணிணி பிம்பம் என்று கேட்டார். நாங்கள் பார்த்ததில் ஒரு பிம்பம் கணிணியுடையது என்று தெளிவாகத் தெரிந்ததால் நாங்கள் சரியாகப் பதில் சொல்லிவிட்டதாக நினைத்தோம். ஆனால் இரண்டுமே கணிணிப் பிம்பங்கள்தாம். நாங்கள் அசல் என்று நினைத்தது அவ்வளவு தத்ரூபமாக இருந்தது.
1. அப்புறம் புதிர்ப் பள்ளத்தாக்கு (the uncanny valley) என்று ஒன்று சொன்னார். ரோபோக்கள் ஏன் மனித ரூபத்திலேயே தயாரிக்கப்பட வேண்டுமென்பதற்குப் பின்னாலுள்ள உளவியல் உண்மையை இந்த புதிர்ப் பள்ளத்தாக்கு கருதுகோள் வெளிப்படுத்துகிறது. முதன் முதலில் ரோபோக்கள் மனித உருவம் கொண்டதாகத் தயாரிக்கப்பட்டபோது அது மக்களின் விருப்பத்துக்குரியதாக இருந்திருக்கிறது. அது எந்திரமாகவே இருந்தாலும் பார்க்க ஏறத்தாழ மனிதன் போல இருக்க வேண்டும். பூனை போலவோ, நாய் போலவோ இருப்பதைக் காட்டிலும் மனிதன் போல இருப்பதே நமக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் ரோபோக்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக மனிதத் தன்மையைக் கூட்டிக்கொண்டே சென்றால் அவற்றில் மேலுள்ள விருப்பம் குறைந்து வெறுப்பு வளர ஆரம்பிக்கிறது. தன்னைப் போலவே ஆனால் தன்னிலும் சக்தி மிகுந்தவனாகக் காட்டிக் கொள்ளும் உருவத்திலிருக்கிற ரோபோவின் இருப்பு நமக்குப் பிடிப்பதில்லை. அதன் மீது வெறுப்பை உமிழ்கிறோம். பிறகு மனிதனின் உருவத்தை நூறு சதவீதம் ஒத்த ரோபோ உருவாக்கப்படும்போது மீண்டும் அதன் மீதான விருப்பம் நமக்குக் கூடுகிறது. இரும்பிலே ஓர் இருதயம் முளைத்ததே என்று பாட ஆரம்பித்து விடுகிறோம். மிகு விருப்பத்திலிருந்து சட்டென்று விருப்பம் குறைந்து கீழிறங்கி மீண்டும் விருப்பம் மேலேறும் இந்த நிகழ்வினைத்தான் புதிர்ப்பள்ளத்தாக்கு என்கிறார் உகைல். இந்தத் தலைப்பின் கீழ்தான் கடந்த ஐந்தாண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறேன் என்று சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது. இப்போது உருவாக்கப்படும் ரோபோக்களின் உருவங்களும், கணிணி விளையாட்டுகளில் உருவாக்கப்படும் பிம்பங்களும் இந்தப் புதிர்ப் பள்ளத்தாக்கை அடைப்படையாகக் கொண்டே உருவாக்கப்படுகின்றன. ஒரு பிம்பம் உருவாக்கப்படும்போது அது புதிர்ப் பள்ளத்தாக்கின் சரிவுப்பகுதியிலோ, ஆழத்திலோ இல்லாதவறு பார்த்துக்கொள்ளப் படுகிறது. அப்போது அது நுகர்வோர்களால் விரும்பப்பட ஏதுவாகிறது. கணிணி விளையாட்டு என்ற ஒரு துறையில் மட்டும் எட்டு பில்லியன் டாலர்கள்கள் புழக்கத்திலிருக்கிறதாம்.
அசல் எது? நகல் எது?             
2. அவர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கும் இன்னொரு விஷயம் ஒரு கணிணி விளையாட்டை எந்த விதப் பின்புலத்திலும், தளத்திலும் விளையாட வைக்க முடியுமா என்பது பற்றியது. அதாவது ஒரே விளையாட்டை இணைய அலைபேசி, மடிக்கணிணி அல்லது தொலைக்காட்சி என்று எதில் வேண்டுமானாலும் விளையாட வைக்க முடியுமா என்பது பற்றியது.
3. நிழற்படங்களின் தரத்தை மேம்படுத்துதல். 1975 ல் 0.01 மெகா பிக்ஸல் புகைப்படக்கருவியை சாதனையாகக் கருதியிருக்கிறார்கள். 2008ல் 80 மெகா பிக்ஸல் கேமரா வந்தது. இப்போது 900 மெகாபிக்ஸலில் ஒரு கேமரா வரவிருக்கிறதாம். 

5 ஆகஸ்ட், 2010

சாயாவனம் - காலத்தின் அழியாத குறியீடு

சாயாவனம்
ஆசிரியர் : சா. கந்தசாமி
பதிப்பகம் : காலச்சுவடு
பரிந்துரை : ஜெகதீஷ் குமார்
 தக்கையின் மீது நான்கு கண்கள் என்கிற அபூர்வமான சிறுகதைதான் நான் வாசித்த சா. கந்தசாமியின் முதல் படைப்பு. தலைப்பு கொடுப்பதில் சில பேருக்குத்தான் இப்படி லாவகமான திறமை இருக்கும். அந்த வகையில் சுஜாதா கொஞ்சம் சுமார்தான். நில்லுங்கள் ராஜாவே என்பது மாதிரி ஈஸ்ட்மென் வண்ணத்திரைப்படங்கள் தலைப்பு போலெல்லாம் கொடுப்பார். ராஜேஷ் குமார் இந்த விஷயத்தில் கில்லாடி. அவரது தலைப்புகள் எப்போதுமே என்னைக் கவரும். ஐந்து கிராம் நிலவு என்று ஒரு மாத நாவலுக்குப் பெயர் வைத்திருந்தார். சமீபத்தில் வெளி வருகிற பல கவனிக்கத்தக்க படைப்புகள் கூட கவர்ச்சியற்ற தலைப்புகளையே கொண்டிருப்பது போலத்தான் தெரிகிறது. எனக்கும் பதிவுகளுக்குத் தலைப்பு போடும் நேரங்கள் மட்டும் கண் முன்னால் பூச்சி பறக்க ஆரம்பித்து விடுகிறது.
     தலைப்பு போலவே கதையும் தனித்தன்மை கொண்டிருந்தது. ஒரு தாத்தாவுக்கும், பேரனுக்கும் இடையில் ஓடையில் மீன் பிடிக்கையில் நடக்கும் போட்டியும், தாத்தாவுக்குப் பேரனின் மேலுள்ள ego clash கோபமாக வெளிப்படுவதும் மிக இயல்பாகவும் அழகாகவும் வெளிப்பட்டிருந்த கதை.
     சா. கந்தசாமி என்ற பெயர் இலக்கிய வட்டாரத்தில் தவிர்க்க முடியாத பெயராதலால் எனக்கு அவர் பற்றி நீண்டகாலமாகத் தெரியும். ஆனால் ஒரு கதை கூடப் படித்ததில்லை. சாயாவனம்தான் நான் படித்த அவரது முதல் நாவல். அதற்கு முன்பு அவரது சிறுகதை தக்கையின் மீது நான்கு கண்கள்.
     சாயாவனம் காலச்சுவடு கிலாசிக் வரிசையில் (ஏன் கிளாசிக் என்று எழுதுகிறோம்?) வெளியாகியுள்ளது. இப்பதிப்புக்கு பாவண்ணன் ஆழமான நீண்ட முன்னுரை ஒன்று எழுதியுள்ளார். நாவல் எழுதப்பட்ட காலகட்டம் மட்டுமின்றி, தற்காலச் சூழ்நிலையிலும் எப்படி சாயாவனம் ஒரு இன்றியமையாத படைப்பாகிறது என்பதை அழகாக விளக்குகிறது அம்முன்னுரை. நான் எழுதப் போவது நாவல் ஒரு வாசகனாக எனக்குக் கொடுத்த அனுபவங்களைப் பற்றி.
     தன்னுடைய இருபத்தைந்தாவது வயதில் சா. கந்தசாமி இந்த நாவலை எழுதினார் என்பதையும், நாற்பதாண்டுகளுக்கு முன் இந்நாவல் எழுதப்பட்டது என்பதையும் கவனத்தில் கொண்டு நாவலுக்குள் புகுதல் நலம்.
     தன் சுயநலத்துக்காக மனிதன் இயற்கையை எவ்வாறு சீரழிக்கிறான் என்பதற்கான உதாரணங்கள் ஒரு நாவலுக்கும் மீறிய சுவாரசியத்தோடு நம் கண் முன் தினந்தோறும் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. Clayrose கூட தன்னுடைய சமீபத்திய ஒரு பதிவில் மெக்சிகோ குடாப்பகுதியில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் செய்த அட்டூழியத்தைப் பற்றி எழுதியிருந்தார். விளைநிலங்கள் அழிக்கப்பட்டு பிளாட் போட்டு விற்கப்படுவது தினந்தோறும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. நாம் சேர்த்து வைத்த பணத்தில் ஒரு ஐந்து சென்டாவது அந்த நிலத்தை வாங்கிவிடவேண்டுமென்று எந்தக் குற்ற உணர்ச்சியுமின்றித் தயாராக இருக்கிறோம். ஈரோட்டில் காவேரிக்கு இரு கரைகளிலும் தொழிற்சாலைகள். ஒரு கரையில் ஆடை பதனிடும் தொழிற்சாலைகள். மற்றொரு கரையில் தோல். பகலில் கழிவு நீரைச் சுத்திகரிப்பதாக பாவ்லா காட்டிவிட்டு இரவு ஏழு மணிக்கு மேல் ஆயிரக்கணக்கான லிட்டர்கள் கழிவுநீரை நேரடியாகத் திறந்து விட்டு விடுவார்கள். தொழிற்சாலைகளுக்கு அருகாமையில் நதி பச்சை நிறத்திலிருக்கும். அந்நீரில் தொடர்ந்து குளித்தாலே புற்றுநோய் வந்துவிடும். அதிலிருந்துதான் குடிநீரும். தோல்கழிவின் வீச்சம் ஈரோட்டிலிருந்து சித்தோடு வழியாக பவானி செல்லும் வரை தொடரும். தன் மீதான எத்தனையோ அத்துமீறல்களை இயற்கை பொறுத்துக் கொண்டே இருப்பதைப் போலத்தான் தெரிகிறது.
     சாயாவனம் இயற்கை மனிதனின் கையில் ஒரு பண்டமாற்றுப் பொருளைப் போலவே எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான ஒரு பதிவுதான். செல்லும் பாதையிலிருந்து கொஞ்சம் நகர்ந்தாலும் பிரச்சாரநெடி அடித்துவிடும் அபாயமுள்ள கதைக்கரு. ஆனால் மிகவும் கவனமாகக் கையாண்டிருக்கிறார் சா. கந்தசாமி. கரும்பு ஆலை அமைப்பதற்காக சாயாவனம் என்ற தோப்பும், அதன் உயிரினங்களும், தோப்பை ஒட்டிய மேலும் பல மரங்களும் வயல்களும் அழிக்கப்படுவது நுணுக்கமாக விவரிக்கப்பட்டிருக்கிறது. சிறுவயதிலேயே தாயோடு இலங்கைக்குப் போய்விடுகிற சிதம்பரம் தாய் ‘அம்மை வாத்துக் குளுந்து’ போன பிறகு சொந்த கிராமத்துக்கே திரும்பி வருகிறான். கையில் அயல் நாட்டில் சம்பாதித்த காசு நிறைய இருக்க, தன் ஊரில் ஒரு கரும்பாலை அமைக்க ஆசைப்படுகிறான். அதற்காக சாயாவனம் என்ற தோப்பை விலைக்கு வாங்கிப் போடுகிறான். துவக்கத்தில் உதவிக்கு யாருமற்ற நிலையில் தானே களத்தில் இறங்கி சாயாவனத்தின் மரஞ்செடிகொடிகளைக் கொஞ்சம் கொஞ்சமாய் வெட்ட ஆரம்பிக்கிறான். வனத்தை அழித்து ஆலை அமைக்கும் இம்முயற்சியில் அவனுக்கு அவன் மாமா முறையாகும் சிவனாண்டித் தேவர் துணையாக இருக்கிறார். ஆரம்பத்தில் சாம்பமூர்த்தி ஐயர் சிதம்பரத்துக்கு சாயாவனத்தை விற்றது சிவனாண்டித் தேவருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் சிதம்பரம் தன் பணிவான நடத்தையாலும், கனிவான சொற்களாலும் அவரைக் கவர்ந்து விடுகிறான். மேலும் இருவர் சேர்ந்து கொள்ள வனம் அழிக்கும் பணி தொடர்கிறது.
     ஒரு ஆசிரியராகவோ, அல்லது ஏதேனும் ஒரு கதாமந்தரின் மூலமாகவேனுமோ தலையிட்டு இயற்கையை இந்த மனிதர்கள் இப்படி இரக்கமின்றிச் சிதைக்கிறார்களே என்று தன் ஆதங்கத்தை வெளிப்படையாகச் சொல்வதேயில்லை சா. கந்தசாமி. காட்டை அழிப்பதில் சிதம்பரம் மேற்கொள்ளும் தொழில்நுட்ப நேர்த்தியையும், தனக்குச் சாதகமான விஷயங்களைப் பிறரிடமிருந்து சாதித்துக் கொள்ளும் அவனது திறமையையும் சிலாகிப்பதைப் போலவே விவரித்துக் கொண்டு செல்கிறார். சிதம்பரத்தின் மனதில் கணந்தோறும் காட்டை அழிப்பது பற்றிய திட்டமே ஓடிக்கொண்டிருக்கிறது. இயற்கையோடு அவன் நிகழ்த்தும் போராட்டமாகவே அதை எடுத்துக்கொள்கிறான். முதலில் பணிய மறுக்கும் இயற்கை அவன் கொடுக்கும் தொடர்ந்த அடிகளால் பலவீனப்பட்டுத் தலை தாழ்ந்து விடுகிறது.
சிதம்பரத்தின் மனதில் கரும்பாலை தவிர வேறேதுமில்லை. கிராமத்தவர் கூட தங்கள் ஊருக்கு வரவிருக்கும் ஆலை பற்றிய எதிர்பார்ப்பிலிருக்கிறார்களே தவிர யாரும் ஒரு வனம் இப்படி அழிக்கப்படுகிறதே என்று வருத்தப்படுவதில்லை. மரங்கள் வெட்டப்பட்டுச் சாயும்போதும், வழியேற்படுத்துவதற்காக கொடிகள் அறுக்கப்படுவதும், தேனடைகள் உடைக்கப்படுவதும், மூங்கில் கூட்டம் எரிக்கப்படுவதும் வாசகனுக்குத்தான் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. வனத்துள் உறையும் பறவைகளும், சிறுவிலங்குகளும், வனத்துக்குள் யாரும் அறியாது இருந்த சமவெளியில் மேய்ந்து கிடந்த மாடுகளும் கூட நெருப்புக்கு இரையாகி தீய்ந்து கிடப்பதும் மனிதனின் பொறுப்பற்ற செயலின் உணராத தீவிரத்தை காட்டுகிறது.
     சாயாவனத்தை ஒட்டிய பகுதியில் நிறைய புளிய மரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு முறை மரங்கள் காய்த்த பிறகும் சிவனாண்டித் தேவர் மரங்களைக் குலுக்கி புளி எடுப்பார். ஒவ்வொரு மரப் புளியும் ஒரு வீட்டுக்குச் செல்லும். ஒரு மரப்புளிதான் சுவையாக இருக்கும். கடையில் கிடைப்பதெல்லாம் எல்லா மரப் புளியும் கலந்தது. கிராமத்தாருக்கு அதெல்லாம் உவப்பாக இருப்பதில்லை. சாயாவனத்துக்கு வைக்கப்பட்ட தீ புளியமரங்களையும் அழித்து விடுகிறது. ‘அதான் எல்லாத்தையும் கருக்கிட்டியே? அப்புறம் எங்கிருந்து சுவையான புளி வரும்? என்று கேட்கும் கிழவிக்கு பதில் சொல்ல முடியாது சிதம்பரம் திகைத்து நிற்பதோடு நாவல் முடிகிறது. நம்மையும் பார்த்து இது போன்ற கேள்விகள் வீசப்பட்டுக் கொண்டுதானிருக்கின்றன. அதற்கு நாமும் திகைத்து நிற்கலாம் அல்லது கேள்விகளை உதாசீனப் படுத்தி விட்டு நம் சகஜ வாழ்வைத் தொடரலாம்.
     சா. கந்தசாமி பாத்திரங்களின் உரையாடல் மூலமே கதையைப் பெரும்பாலும் நகர்த்திச் செல்கிறார். கதை சாயாவனத்தின் அழிவு என்ற ஒற்றைக் கோட்டிலேயே செல்வது சற்று அயர்ச்சியைத் தருகிறது. ஆனால் இந்த நாவலை பிரம்மாண்டமான நாவலாக மாற்றி விடும் சாத்தியக்கூறுகள் உள்ளே நிறையவே இருக்கின்றன. எண்ணற்ற கதை மாந்தர்கள் நாவலில் பிரசன்னமாகி உடனே மறைந்து விடுகிறார்கள். சொல்லப்பட்ட ஒரு சிலரின் கதைகளும் மையக்கதையின் போக்கிலிருந்து விலகிவிடக்கூடாதென்ற விழிப்புணர்வுடனேயே சிறுகதைக்குரிய கச்சிதத்துடன் கொடுக்கப்படுகின்றன. சிதம்பரத்தின் அயல் நாட்டு வாழ்க்கையும், அவனது போராட்டங்களும் விவரிக்கப்படுவதற்கான சாத்தியங்களும் புறக்கணிக்கப் பட்டிருக்கின்றன. சிவனாண்டித் தேவரின் மருமகள் குஞ்சம்மாவின் மகள் திருமணம் விஸ்தாரமாகச் சொல்லப்படுகிறது. கடைசிச் சில பக்கங்களில் இரண்டு நாவல்களுக்குண்டான கதையைப் படபடவென்று சொல்கிறார். எல்லாம் புதிதாக அறிமுகமாபவர்களின் கதைகள்.
மனிதர்களினூடே நிகழும் எந்தப் பெரிய சம்பவங்களுமின்றி, திருப்பங்கள் ஏதுமின்றி, பாத்திரங்களின் குணத்திரிபுகள் கதையின் போக்கை பாதிப்பது போன்ற எந்த நிகழ்வுமின்றி ஒரு நாவலைப் படிப்பது சாதாரண வாசகனுக்கு ஆச்சரியத்தையும், திகைப்பையும் அளிக்கும். ஆனால் பாவண்ணன் தன் முன்னுரையில் சொல்வதைப் போல ‘ஒன்றையழித்து ஒன்றாக, புதுயுகமென மாறிமாறி முகம் காட்டி முன்னகர்ந்தபடி இருக்கும் காலத்தை சுட்டிக்காட்டியபடி அழியாத குறியீடாக நிற்கிறது சாயாவனம்.’
     

23 ஜூலை, 2010

தியானப்பாதை

எனக்கு முதன் முதலில் எதனால் ஆன்மீகத்தின்பால் ஈர்ப்பு ஏற்பட்டதென்று யோசித்துப் பார்க்கையில் ஓஷோதான் ஞாபகத்துக்கு வருகிறார். இந்தியனாய் இருக்கும் எல்லாருக்குமே ஏதோ ஒரு தருணத்தில் ஆன்மீக ஈடுபாடு ஏற்படத்தான் செய்கிறது. கல்லூரிப் பருவத்தில் ஓஷோவைப் படித்த போது அவரது புரட்சிகரமான கருத்துக்கள் என்னைக் கவர்ந்தன. இப்போதிருக்கும் வணிகத் துறவிகளுக்கெல்லாம் அவர்தான் முன்னோடி என்று சொல்வார்கள். சிலர் மஹரிஷி மஹேஷ் யோகியைச் சொல்வார்கள். பீட்டில்ஸ் பாடகர்களை அவர் ஈர்த்ததிலிருந்து அவர் மேற்கத்திய நாடுகளில் பிரபலமானார். ஆனால் இந்தியாவில் அவர் அவ்வளவு பிரசித்தம் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். முதலில் செக்ஸ் சாமியார் என்று ஒதுக்கப்பட்ட ஓஷோ பிரபலப்படுத்திய  ஜென் தியானமுறைகள், நமது கலாசாரம் மற்றும் பண்பாட்டின் மீது அவர் வீசிய கலகக்கேள்விகள், இளைஞர்களைத் திரட்டி அவர்களுக்கு அவரால் மட்டுமே கொடுக்கப்பட முடியுமென்று அவர் உறுதியளித்த ஞானோதயம் மற்றும் இன்னபிற அனைத்துத் தொழில்நுட்பங்களும் சில பல மாற்றங்களோடு அப்படியே இன்றுள்ள வணிகத் துறவிகளால் பின்பற்றப்படுகின்றன.
     தியானம், யோகா என்று நான் முதலில் இறங்கியது ஈஷா யோகா மையத்தின் அறிமுகத்திற்குப் பிறகுதான். எட்டு ஆண்டுகளுக்கு முன் எங்கள் ஊரில் ஈஷா யோகாவின் வகுப்புகள் நடந்தபோது அவற்றில் கலந்து கொண்டேன். ஆசிரியை வெள்ளை உடையில் பெண் புத்தர் போல இருந்தார். அதிராமல் பேசினார்; நடந்தார். அவர் செய்கைகள் அனைத்தும் ஸ்லோமோஷனில் இருந்தன. பதிமூன்று நாட்கள் வகுப்பு நடந்தது. சஹஜ ஸ்திதி யோகா என்று அப்போது பெயர். தினம் மூன்று மணி நேரம் வகுப்பு. முதல் ஒரு மணி நேரம் பிராணாயாமம். பிறகு இரண்டுமணி நேரம் வாழ்க்கை குறித்தும் அதை இயல்பாக வாழ்வதெப்படி என்பது குறித்தும் அலசல்கள். ஒரு வாரம் கழித்து சூன்ய தியானம் என்று ஒன்று சொல்லிக் கொடுத்தார்கள். பதினைந்து நிமிடம் கண்மூடி அமர்ந்திருக்க வேண்டும். எண்ணங்கள் வந்தால் தடுக்கக்கூடாது. எண்ணங்கள் பின்னாலேயே போய்விடக் கூடாது. எண்ணங்களுக்கு ஒரு சாட்சியாக இருந்து பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்று அசாத்தியமான நிபந்தனைகளையெல்லாம் விதித்தார்கள். ஒரு நாளைக்கு இருமுறை தியானம், பிராணயாமம் செய்ய வேண்டும். எனக்கு மதிய நேரம் தியானம் செய்யும் போதெல்லாம் தூக்கம் தள்ளும். மாலையில் தியானம் நன்றாக சித்திக்கும் சில வேளைகளில் முதுகுக்குப் பின்னாலிருந்து குறுகுறுவென்று ஒரு உணர்வு புறப்பட்டோடி உச்சந்தலையில் உறைந்து நிற்கும். மூலாதாரத்திலிருந்து குண்டலினிதான் புறப்பட்டு உச்சி மண்டையில் நிற்கிறது என்று என்னை ஏமாற்றிக் கொள்ள நான் தயாராக இல்லை. ஆனால் அவர்கள் சொல்லிக் கொடுத்த பிராணாயாமத்தை நான் விடாது செய்யவேண்டுமென்று  உறுதி பூண்டு கொண்டேன். ( இரண்டு ஆண்டுகள் விட்டு விட்டு பயிற்சி செய்தேன். காரணம் எனக்கு சிறுவயதிலிருந்து தொல்லை செய்யும் மூக்கடைப்புப் பிரச்னை.) ஏழு எட்டு பிராணாயாமங்கள் சொல்லிக் கொடுத்தார்கள். அதில் கபால பாத்தி என்று ஒன்றிருக்கிறது. முதலில் இருபதிலிருந்து ஆரம்பித்து படிப்படியாக எண்ணிக்கையைக் கூட்டிக் கொண்டே செல்லலாம். ஒரு யோகி ஒரு நாளில் அமர்ந்து ஒரு லட்சம் கபால பாத்தி செய்தால் அன்றே அவனுக்கு ஞானோதயம் கிட்டும் என்று வேறு சொன்னார்கள். கூடவே சிவலோகப் ப்ராப்தியும் கிட்டும் என்று நான் சந்தேகப் பட்டதாலும், விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலிருந்ததாலும் அதை நான் முயற்சித்துப் பார்க்கவில்லை.
     தினமும் வகுப்பு முடிய அரைமணி நேரத்துக்கு முன் நம் அனுபவங்களை எல்லாருடனும் பகிர்ந்து கொள்ளலாம். இந்த  யோகப் பயிற்சி மூலம் நாம் அடைந்து வரும் மாற்றங்கள் பற்றி, வாழ்வை அணுகுவதில் நமக்கு ஏற்பட்டுள்ள தெளிவு பற்றியெல்லாம் அதில் பகிர்ந்து கொள்ளலாம். ஒரு நாள் வகுப்பில் நம் வாழ்வில் நமக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளச் சொன்னார்கள். என் முறை வந்து போது நான் சின்ன வயதில் காந்தத்துக்கு ஆசைப் பட்டு என் கால்சராயை இழந்த கதையைச் சொன்னதில் வகுப்பு முழுக்கப் பிரபலமாகி விட்டேன். (ஏற்கனவே இந்தக் கட்டுரை இழுத்துக் கொண்டிருப்பதால் அதை இப்போதைக்கு சொல்வதாக உத்தேசம் இல்லை.) கடைசி நாளில் ஈஷா அனுபவம் பற்றி நான் எழுதி வாசித்த கவிதைக்குக் கைதட்டு கிடைத்தபோது சந்தோஷமாக இருந்தது. (கவலைப்பட வேண்டாம். அந்தக் கவிதை எங்கே என்று தெரியாததால் இப்போது அதைத் தரப்போவதில்லை)
     வகுப்பின் மூலம் நான் நிறைய நண்பர்களை சம்பாதித்துக் கொள்ள முடிந்தது. அந்த நட்பு இன்றும் சிலரிடம் தொடர்கிறது. வகுப்பு முடித்த அனைவரும் அடுத்தடுத்த வகுப்புகளுக்கான தன்னார்வத் தொண்டு புரிய அனுமதி உண்டு. அப்போது வகுப்புக்கு வரும் புதிய அன்பர்களுக்கு யோகா செய்வதில் உதவி செய்வதும், (கூடவே யோகா பற்றி எல்லாம் தெரிந்த மாதிரி காட்டிக் கொள்ளலாம்), தியானம் கற்றுக் கொடுக்கும் அந்தச் சிறப்பு நாளில் வகுப்பு நடக்கும் மண்டபத்தை எல்லாரும் ஒன்று கூடி அலங்கரிப்பதும் சுகமான அனுபவங்கள். யோகாவை ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும்போது ஏற்கனவே கற்ற ஒருவர் பிறருக்கு அதைச் செய்து காட்ட வேண்டும். ஒரு வருடம் நடந்த வகுப்பில் தன்னார்வத் தொண்டர்களின் கூட்டம் நடக்கையில் மேற்சொன்ன வேலையை யார் செய்யப் போகிறார்கள் என்று ஆசிரியர் கேட்டார். சற்று நேரம் அமைதி நிலவவே அப்பாவித்தனமும், புதிதாக வகுப்பு முடிந்திருந்த ஆர்வமும் கலந்து தெரிந்த என் முகத்தைப் பார்த்து நீங்க பண்ணிடுங்க என்றார். நான் தவிர்க்க நினைத்து எனக்கு ஷிஃப்ட் வேலை என்பதால் தொடர்ந்து வர முடியாதென்றேன். காலை, மாலை இரு வகுப்புகளில் ஏதாவதொன்றில் கலந்து கொண்டால் போதும் என்று சொன்னார்.
இரவுப்பணி முடித்துவிட்டு கண்கள் எரிய காலை ஐந்தரை மணிக்கெல்லாம் கிளம்பி வகுப்புக்குப் போவேன். இரும்பு டேபிளில் மண்டி போட்டு பிராணாயாமம் செய்து காட்டும் போது முட்டி வலிக்க, காலை நகர்த்துகையில் எழுந்த க்ரீச் சப்தத்திற்கு ஆசிரியர் எரிச்சலடைந்து என் காதில் முணுமுணுத்தது இன்னும் நினைவிருக்கிறது.
     வகுப்பு முடியும் தருவாயில் ஈஷா யோக மையத்தையும், அதன் நிறுவனர் ஜகி வாசுதேவ் அவர்களையும் அறிமுகப் படுத்தினார்கள். வகுப்பில் கலந்து கொள்வதற்கு முன்பே என் தம்பியோடு நான் ஈஷாவுக்கு சென்றிருக்கிறேன். வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் காடுகள் சூழ்ந்த ரம்மியான இடத்தில் அமைதியில் உறைந்து நிற்கிறது ஈஷா. தியான லிங்க திருக்கோயில்தான் அதன் பிரதானமான ஈர்ப்பு. கோயிலுக்குள் நுழையும் முன்பு நான் கழட்டிக் கொடுத்த செருப்பை பவ்யமாக வாங்கி வைத்த ஒரு தியான அன்பரின் விலையுயர்ந்த கார் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இருந்தது. எனக்குத் திகைப்பாக இருந்தது. ஈஷா யோகாவின் ஒவ்வொரு சிறு பணியும் எங்களைப் போல் தியானம் பழகச் செல்லும் அன்பர்களால்தான் மனமுவந்து செய்யப்படுகிறது என்று பின்னால் தெரிந்து கொண்டேன். கோயிலைப் பராமரித்தல், தரை பெருக்குதல், பாத்திரம் கழுவுவதிலிருந்து புத்தகங்கள் பதிப்பிடுவது, இணைய தளத்தை மேய்ப்பது வரை எல்லாமே மனமுவந்து செய்யப்படும் சேவைகள்தாம். மேற்கத்திய நாடுகளில் வேலைபார்த்துக் கொண்டிருந்த நிறைய இளைஞர்கள் வேலையை விட்டு விட்டு முழுக்க தங்களை ஆன்மீகத் தேடலுக்கு ஒப்புக் கொடுத்திருந்தார்கள். கூடவே நிறைய வெளிநாட்டவரும்.



தியானலிங்கக் கோயில் ஒரு தனி மதிப்பு கொண்ட கோயில். அங்கு செல்லும் யாவரையும் ஈர்ப்பது உள்ளே நிலவும் அமைதி. எவ்வளவு மணிநேரம் உள்ளே இருப்பினும் ஒரு சொல், ஒரு சத்தம் வெளியே வராது. அரைக்கோள வடிவக் கருவறைக்குள் மையத்தில் குண்டலினியை உணர்த்தும் பாம்பு சுற்றியபடி பிரம்மாண்டமான லிங்கம். அதன் உச்சியில் விடாது ஒற்றை ஒற்றையாய் விழுந்து கொண்டிருக்கும் நீர்த்துளியின் ஒலி மட்டுமே தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும். லிங்கத்தை சுற்றிலும் சுவர்கள் குடையப்பட்டு தவக்குகைகள் எனப்படும் தியானம் செய்வதற்கான இருப்பிடங்கள் உள்ளன.
உள்ளே செல்பவர்கள் நேரே அதனுள் சென்று அமர்ந்து கண் திறந்து, உள்ளங்கைகள் மடிமேல் வானம் பார்த்தபடி வைத்துக் கொண்டு அவ்விடத்தின் அமைதியைப் பருகினால், தியானம் பற்றிய அறிமுகம் ஏதுமற்ற ஒருவர் கூட தியான நிலைக்கு எளிதில் செல்ல முடியும் என்று சொல்கிறார்கள். எனக்கு நிச்சயம் சாந்தமான ஒரு நிலை வாய்த்தது.
பிற இந்துக் கோயில்கள் போன்று இங்கு பூஜை முறைகள் பின்பற்றப் படுவதில்லை எனினும் அவர்களுக்கேயுரிய சிற்சில நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. கோயிலில் செய்யப்படும் சடங்குகளிலேயே என்னை மிகவும் கவர்ந்தது நாத ஆராதனா. தினமும் காலை பதினோரு மணியளவில் தியானலிங்கத்துக்கு வெறும் ஒலிகளைக் கொண்டே செய்யப்படும் பூஜை. நான் எப்போது அங்கு சென்றாலும் நாத ஆராதனாவைத் தவற விட்டு விடக்கூடாது என்று நினைப்பேன்.  மென்மையாகக் குழலிசையில் ஆரம்பித்துச் சற்று நேரம் அரைக்கோள வடிவக் கருவறையின் வடிவமைப்பின் அற்புதத்தினால் விநோத ஒலிகள் பிறந்து ஒரே லயத்தில் பத்து நிமிடங்கள் பயணித்து ஒரு சிறிய சிகரத்தைத் தொட்டபின் அங்கிருந்து தோல் கருவிகளின் முழக்கம் துவங்கும். சிவதாண்டவம் தொடங்கி விட்டதைப் போலவேயிருக்கும். சடசடத்து ஓயும் மழையைப் போல் தோல் ஒலி ஓய்ந்தபின் ஒரு நிதானமான ஆலாபனையைத் தொடர்ந்து மெல்லிய குரலில் ஈஷா மகளிர் பாடுவதோடு ஆராதனை நிறைவடையும். சரியாக இருபது நிமிடங்கள் மட்டுமே நடக்கும் இந்த நிகழ்வில் பார்வையாளனாக இருப்பதென்பது ஒரு தியான அனுபவம்.
ஈஷாவை முதலில் பார்த்தபோது எனக்கு ஏதோ ஒரு ஜைனக் கோயிலைப் பார்ப்பது போலவே இருந்தது. நான் பார்த்த ஈஷா இப்போது பெருமளவு மாறிவிட்டதென்று கேள்விப்படுகிறேன். அப்போது வாயிலுக்கு வெளியே இருந்த சிறிய நந்தி போய் இப்போது பெரியது வந்து விட்டதாம். உள்ளே நுழைந்ததும் முகப்பில் சர்வதர்ம ஸ்தம்பா என்று ஒரு தூண் நிற்கிறது. அனைத்து முக்கிய மதங்களின் சாரங்கள் அந்த தூணில் பொறிக்கப் பட்டிருக்கின்றன. பக்கவாட்டில் ஜகி வாசுதேவ் தன் குருவின் கனவு நனவானது பற்றி எழுதிய கவிதை ஒன்று ஒரு பெரிய சாக்குத் துணியில் பொறிக்கப்பட்டுத் தொங்கவிடப்பட்டுள்ளது. வெளிப்பிரகாரத்தில் உள்ளே நுழைந்ததும் இடது புறம் பாம்பு உடல் கொண்ட ரிஷி பதஞ்சலியின் உருவச்சிலை. வலது புறம் சுவரில் பொறித்த ஒரு ஆலமரத்தின் உருவம். அதை வனஸ்ரீ என்கிறார்கள். தியானலிங்கத்தின் ஆண்தன்மை மிகுந்த வீர்யத்துடன் இருப்பதால் அதைச் சமன் செய்வதற்கான பெண் தெய்வமாக வனஸ்ரீ பிரதிஷ்டை பண்ணப்பட்டிருப்பதாய் சொல்கிறார்கள்.
கோயிலுக்குப் பின்புறம் ஆஸ்ரம வாசிகளின் தங்குமிடங்களும், பரந்த புல்வெளியும், யோகா, தியான வகுப்புகள் நடத்துவதற்கென்றே ப்ரத்யேகமாகக் கட்டப்பட்ட ஸ்பந்தா ஹாலும் (ஒரே நேரத்தில் ஐயாயிரம் பேர் கலந்து கொள்ளலாம்), ஹடயோகா சொல்லிக்கொடுக்கப்படும் தியான அறையும், ஜகி வாசுதேவின் மனைவியின் கல்லறையும் இருந்தன. இப்போது பிரமாண்டமான தீர்த்த குண்டம் வந்து விட்டதாம். அங்கு செல்கிறவர்கள் குளத்தில் நீராடிவிட்டு பிறகு கோயிலுக்குள் செல்லலாம்.
வகுப்பில் கலந்து கொள்வதற்கு முன்பே நான் ஜக்கி வாசுதேவ் அவர்களின் பேச்சைக் கேட்டிருக்கிறேன். ஈரோட்டில் பொதுமக்கள் கலந்து கொண்ட சத்சங்கம் ஒன்றிற்கு வந்திருந்த போது பார்த்தேன். அந்த நிகழ்ச்சியிலேயே ஈஷாக்காரர்களது நேர்த்தியான செயல்திறன் வெளிப்பட்டது. சுமார் இருபதாயிரம் பேர் வந்திருந்த அந்த நிகழ்ச்சியில் எல்லாரும் எந்தச் சிரமும் இன்றி அமைதியாக அழைத்துச் செல்லப்பட்டு தனித்தனி இருக்கைகளில் அமர வைக்கப்பட்டோம். மிகச்சரியாக மாலை ஆறு மணிக்குக் நிகழ்ச்சி ஆரம்பித்து  அற்புதமாக அலங்கரிக்கப்பட்ட மேடையில் ஜகி தோன்றினார். ஒரு மணிநேரம் பேசிவிட்டு, ஒரு மணிநேரம் கேள்விகளுக்குப் பதிலளித்தார். கன்னட ஜாடை தோயும் அவரது கொஞ்சு தமிழ் காந்தம் போல் அனைவரையும் இழுத்து விடுகிறது. தமிழை வேறு மாநிலத்தவர் பேசினால் உடனே அவர்களை உடனே தமிழர்களுக்குப் பிடித்து விடுகிறது. ஆங்கில மொழியை அவர் லாவகமாகக் கையாளுவது, அவரது உச்சரிப்பு அழகும் அவரை நிறையப் பேருக்கு பார்த்ததும் பிடித்து விடுவதற்கு ஒரு காரணம். மற்றொரு காரணம் அவரது வாழ்க்கை முறை. ஒரு துறவியின் வாழ்க்கையில் கடைபிடிக்கப்பட வேண்டுமென்று நம்பப்படுகிற எந்த நியமங்களையும் அவர் கைக்கொள்வதில்லை. தியான வுகுப்புகளின் போதும், பொது நிகழ்ச்சிகளின் போதும் மட்டுமே ஒரு துறவியின் அடையாளாங்களோடு காணப்படுவார். பிற வேளைகளில் ஜீன்ஸ், ஜிப்பா அணிந்து, போனி டெயில், கருப்புக் கண்ணாடியுடன் சுற்றிக் கொண்டிருப்பார்.
ஒருமுறை ஈஷா ஃபெஸ்ட் என்ற ஈஷா திருவிழாவின் போது அப்படித்தான் சுற்றிக் கொண்டிருந்தார். ஈஷா யோகமையத்தில் ஜகி வாசுதேவ் ஞானோதயமடைந்த நாளை வருடா வருடம் ஈஷா திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். ஒரு நாள் முழுக்கக் கூத்தும், பாட்டும், கொண்டாட்டமுமாக இருக்கும். ஈஷாவில் யோகம் பயின்றவர்களே பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டுவார்கள். ஜகி முன் வரிசையில் அமர்ந்து எல்லா நிகழ்ச்சிகளையும் பார்வையிடுவார். குஷி வந்துவிட்டால் எழுந்து நடனம் கூட ஆடுவார். நான் கூட மேடையில் பாடினேன். எங்கள் ஊர்க்காரர்கள் தேவாங்க செட்டியார்களின் இனக்குழு நடனமான கத்தி போடுதல் என்ற நடனத்தை விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் பாடலுக்கு ஆடிக் காட்டினார்கள். நான் பங்கு பெற்ற ஈஷா திருவிழாவில் மாலை உன்னிகிருஷ்ணன் கச்சேரி இருந்தது. மிகவும் ஆர்வத்தோடு சென்றிருந்தேன். ஒலிபெருக்கியின் ஒலி அமைப்பு, சுதி அளவு எல்லாவற்றையும் நுணுக்கமாகச் சரி செய்வதற்கு முக்கால் மணி நேரம் எடுத்துக்கொண்டு ஆலாபனை பத்து நிமிடம் செய்த பின்னர் ‘கருணை செய்வாய் கஜராஜமுக’ என்று அவர் ஆரம்பிக்கையில் நாங்கள் கடைசிப் பேருந்தைத் தவற விட்டு விடுவோம் என்ற பயத்தில் கிளம்பி விட்டோம். முன்னதாக உணவு இடைவேளையின் போதுதான் ஜகியைச் சந்தித்தோம். என் மாணவன் ஒருவன் நான் ஈஷா செல்வதை அறிந்து ஜகியின் உருவப்படம் ஒன்று வரைந்து கொடுத்திருந்ததை ஃப்ரேம் செய்து கொண்டு சென்றிருந்தோம். அதை ஓவியக் கண்காட்சிக்கு நன்கொடையாகக் கொடுத்து விடலாம் என்று உள்ளே சென்றபோது அங்கு சிறிய பரபரப்பு காணப்பட்டது.

சற்று நேரத்தில் ஜீன்ஸ் அணிந்த ஜகி உள்ளே வந்தார். கூட்டம் உள்ளே குறைவாகவே இருந்ததால் அவரை நாங்கள் எளிதில் அணுக முடிந்தது. தயக்கத்தோடு அவரிடம் ஓவியத்தை நீட்டினோம். அவர் அதை பார்த்து விட்டு ‘அப்படியே என்னை மாதிரியே கோரமாக இருக்கிறது” என்று ஆங்கிலத்தில் சொன்னார். ஒலிபெருக்கி மூலம் கேட்டதற்கு அவர் குரல் மென்மையாகவும், பெண்மை கலந்தும் இருந்தது. ஆசிர்வதிப்பது போல் கையை நீட்டி விட்டு எடுத்துக்கொண்டார். ஓவியத்தை வாங்குவார் என்று எதிர்பார்த்தோம். பிறகு ஓவியத்தை அங்கேயே கொடுத்து விட்டு அவர் பின்னாலேயே தொடர்ந்தோம். தன்னைப் பார்த்துவிட்டு தாயின் பின்னால் மறைந்த ஒரு குழந்தையைப் பார்த்துப் புன்னகைத்து, ‘ஹலோ, ஹவ் ஆர் யு?’ என்றார். உள்ளே இருந்த ஐஸ்க்ரீம் பார்லரில் அவரிடம் ஐஸ்க்ரீம் கொடுத்தபோது, ஏதேனும் உலோகப் பாத்திரத்தில் தருமாறு கேட்டார். தந்த போது அண்ணாந்து வாயில் விட்டுக் கொண்டார். தாடியில் ஆகிவிடக்கூடாது என்ற எச்சரிக்கையாக இருக்கலாம்.

ஒரு வழியாக வகுப்பு முடிந்து எல்லாரும் வீடு திரும்பினோம். வகுப்பு எனக்குள் ஏற்படுத்தியிருந்த மிக நல்ல மாற்றம் கர்னாடக இசை மீது எனக்கு ஏற்பட்ட ஆர்வம். வகுப்புக்குப் பிறகு நிறைய செமி கிளாசிக்கல் பாடல்களைக் கற்றுக் கொண்டேன். எங்கள் ஊர் ராமர் கோயிலில் வாராவாரம் சனிக்கிழமை மாலை நான் அந்தப் பாடல்களைப் பாடியபோது நான் கர்னாடக சங்கீதம் முறைப்படிக் கற்கவில்லை என்று சொன்னதை யாரும் நம்பவில்லை.
ஜகியின் ஞானியின் சன்னதியில் என்ற புத்தகம் அவரது வழிமுறைகள் பற்றி அறிந்து கொள்வதற்கு மிக உதவியாக இருந்தது. அவரது சீடர்கள் கேட்ட கேள்விகளுக்கு சத் சங்கத்தில் அவர் அளித்த பதில்களின் தொகுப்பு அது. மதம் பற்றியும், சடங்குகள் பற்றியும், வாழ்வின் நோக்கம் குறித்தும் அவரது பார்வைகள் அந்நூலில் நன்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. ஞானத்தின் பிரம்மாண்டம் என்கிற மற்றொரு பெரிய புத்தகம் இருக்கிறது. அதைப் படித்தபின் எனக்கு அவர் மேலிருந்த அபிப்ராயம் மாறியது. ஆவிகள், மறுபிறவி என்று பலவிஷயங்களை அவர் பேசுவது நம்பும்படி இல்லை. எல்லா வணிக குருமார்களுமே தன்னால் அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்று மக்களை நம்ப வைப்பதற்காகவே மிகுந்த பிரயத்தனப் படுவதைப் போலத் தோன்றுகிறது. ஜகியின் மீது எனக்குள்ள இன்னொரு குறை அவர் கீதை, உபநிஷதம் போன்ற நமது வேதாந்த சாஸ்திரங்களைப் புறந்தள்ளுவது போன்ற கருத்துக்களை வெளியிடுவதுதான். வெறும் ஏட்டுப் படிப்பினால் உபயோகம் இல்லை என்று அவர் சொல்வதில் உண்மை இருப்பினும் முழுக்க முழுக்க சுய அனுபவத்தின் அடிப்படையிலேயே ஒருவர் ஞானோதயம் அடைந்து விட முடியும் என்பதும், தியானம், யோகா போன்ற செயல்களின் மூலம் ஞானமடைந்து விடலாம் என்று சொல்வது எனது இப்போதிருக்கிற மனமுதிர்ச்சிக்கு ஏற்புடையதாக இல்லை. அது செயல்களால் அடையப்படுவதில்லை என்ற உண்மையை உணர்ந்தே இருக்கிறேன். இருப்பினும் யோகா, தியானம் போன்றவற்றின் பயனை, அவை முறையாக மேற்கொள்ளப்படும்போது, மறுப்பதற்கில்லை.
ஆனால் ஈஷா யோகாவின் சமூகசேவை மிகுந்த பாராட்டுக்குரியது. நிச்சயமாக ஜகியின் வழிகாட்டுதலின்றி அது சாத்தியமில்லை. அவர்கள் மாநிலந்தோறும் நட்ட லட்சக்கணக்கான மரக்கன்றுகளும், நடத்தும் ஈஷா வித்யா பள்ளிக்கூடங்களும், மருத்துவ உதவியும், இன்னபிற உதவிகளும் செய்துவருகின்ற கிராமங்களுமே அவர்களது சமூக சேவைக்குச் சாட்சி.
நித்யானந்தா பிரச்னைக்குப் பிறகு இப்போது இந்த வணிக குருமார்கள் மீது ஒரு அருவெருப்புப் பார்வை விழுந்திருக்கிறது. ஆனாலும் நம்முள் எழும் வாழ்வின் ஆதாரத்தைப் பற்றிய தேடலுக்கு, சரியான வழிகாட்டி வேண்டுமென்ற நமது தாகத்தைத் தணிப்பதற்காகத்தான் இந்த மாதிரி குருமார்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள். அவற்றில் நல்லதும் கெட்டதும் கலந்திருக்கும். ஒவ்வொருவரும் ஒரு வழிமுறையைப் பின்பற்றுகிறார்கள். ஒரு எளிய சாதகனுக்கு எது சரி, எது தவறு என்ற குழப்பம் ஏற்பட்டு விடுகிறது. ஹிந்து மதத்தின் மூடநம்பிக்கைகளும், குழப்பமான ஆசார அனுஷ்டானங்களும் தானாகவே அவனை மதத்தைப் பின்பற்றுவதிலிருந்து தடை செய்கிறது. உண்மையை அறிந்த ஒருவரின் துணை தேவைப்படுகிறது. ஞானி என்றும், யோகி என்றும் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டும், அமைப்பு ஒன்றை நிறுவியும் செயல்படுபவர்கள் ஊடகங்கள் மூலமாக எளிதில் ஆன்மிகத் தாகம் கொண்ட எளிய சாதகர்களை அடைந்து விடுகிறார்கள். உண்மையான ஞானிகள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை என்பதும், உண்மையான சீடனுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள் என்பதும் நமக்கு உறைப்பதில்லை. இருப்பினும் இது போன்ற வணிக குருமார்களின் தொடர்பு, அவர்களிடமிருக்கும் நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு விலகிவிடுபவர்களுக்கு அவர்களது ஆன்மிகப் பாதையில் உதவியாகவே இருந்திருக்கிறது. எனக்கு அப்படித்தான். நான் இப்போது சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவே நம்புகிறேன் ஆனால் அதன் துவக்கம், செயல் ரீதியாக, ஈஷாவில்தான்.

                                                           

19 ஜூலை, 2010

யாமம் – கூடிக் கதை பேசும் மிகு சுடர்கள்


பதிப்பகம்: உயிர்மை
ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்
பரிந்துரை: ஜெகதீஷ் குமார்.






உயிர்மை வெளியீடாக வந்திருக்கும் எஸ். ராமகிருஷ்ணனின் நாவலான யாமம் சமீபத்தில் வாங்கி வந்து வாசித்தேன்.  ஏற்கனவே கதாவிலாசம், அயல் சினிமா போன்ற நூல்களை வாசித்திருப்பினும் அவரது புனைகதை ஒன்றைப் படிப்பது, (சில சிறுகதைகள் தவிர்த்து ) இதுவே முதல். அறிமுகமே தேவையில்லாத எழுத்தாளர் எஸ்.ரா. கீழைத்தேய மரபையும், மேற்கத்திய கலாசாரம் அதில் ஊடுருவுவதையும் வைத்து அவர் எழுதியுள்ள நாவலான யாமம் ஒரு புதுமையான வாசிப்பனுபவத்தைத் தருகிறது.
கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மக்கள் உறங்கச் சென்றபின் அவ்வீட்டின் விளக்குகளின் சுடர்கள் அனைத்தும் ஒன்று கூடி அம்மனிதர்களின் குண இயல்புகளையும், ஆசைகளையும், ஏக்கங்களையும் பற்றி உரையாடி விட்டுத் திரும்புகின்றன என்று  நாவலின் முன்னுரையில் எஸ். ரா குறிப்பிடுகின்றார்அந்தச் சுடர்களைப் போலவே சற்று நேரம் பரிமளத்தோடு இருந்து மறைந்து போன மனிதர்களின் கதைகளின் தொகுப்பாகத்தான் யாமம் இருக்கிறதுயாமம் என்பது ஒருவகை அத்தரின் பெயர். எந்நேரத்திலும் இருளைக் கவிய வைக்கும்,   காமத்தை தூண்டும் வல்லமை   கொண்டது யாமம். நாவலின் பெயர்தான் யாமமே தவிர இது யாமம் என்கிற அத்தர் பற்றின கதை அல்ல

நாவல் நான்கு பெருங்கதைகளின் தொகுப்பாக இருப்பினும் அவற்றின் கதைமாந்தர்களில் பெரும்பாலானவர்களை  இணைக்கும் மெல்லிய சரடாக யாமம் என்கிற அத்தர்  இருக்கிறதுவெளிப்படையாகப் பார்க்கும் போது நான்கு தனிக் கதைகளைப் படிப்பது போலவே இருப்பினும் ஆழ்ந்த வாசிப்பில் கதை மாந்தர்களுக்கிடையே ஊடாடும் ரகசியங்களின், குணஇயல்புகளின்மனத்திரிபுகளின் ஒற்றுமைகளை  ஒப்பிட்டுப் பார்ப்பது சுவாரசியமாக இருக்கிறது.

 பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் நம் நாட்டுக்குள் வணிகம் செய்வதற்காக நுழைந்ததும், அதன் பின்னர் அவர்கள் சிறிது சிறிதாக நில ஆக்கிரமிப்புகளைச் செய்து குடியேற ஆரம்பித்ததும் நாவலின் துவக்கத்தில் சொல்லப்படுகின்றன. இந்தியாவிலிருந்து மிளகு இறக்குமதி செய்வதற்காய் மகாராணியிடம் அனுமதி கேட்டு இந்தியா வருகின்றனர் வெள்ளையர்கள். அனுமதி கேட்பவர்களிடம் மகாராணி இந்தியாவில் உள்ள நீலக்கிளிகள் அனைத்தும் தனக்கு வேண்டுமென்றும் அவற்றின் இறகுகளைத் துண்டித்து மேலாடை செய்துகொள்ளவேண்டுமென்றும் சொல்கிறாள். அப்படியே இறக்கை முளைத்த வெள்ளை நிற யானைகளையும் கொண்டுவரச் சொல்கிறாள்.

வெள்ளையர்கள் வரும் இடத்தில் ஷாஜஹானின் மகளுக்குத் தீ விபத்தில் முகத்தில் ஏற்பட்ட காயத்தை ஒரு ஆங்கிலேயன் குணப்படுத்த, மகிழ்ந்து போன ஷாஜஹான், அவர்களுக்கு இந்தியாவில் வணிகம் செய்யும் உரிமையை அளிக்கிறான். ஆங்கிலேயர்கள் கடலோரம் குடியிருந்த மீனவ இன மக்களை வன்முறையாக வெளியற்றி அங்கு குடியேறுகிறார்கள். ஒரு பரத்தையைப் போல் எல்லாரையும் மகிழ்வித்துக் கொண்டும் ஆனால் தன் துக்கத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமலும் மெல்ல மெல்ல மதராப் பட்டினம் உருவாகிறது.

யாமம் ஒரு புனைகதையை வாசிப்பது போன்ற அனுபவத்தைத் தரவேயில்லைபட்டணத்து வாசிகளின் சரிதம் என்கிற தலைப்பில் மதராப் பட்டணத்தைச்  சுற்றி வாழ்ந்த மனிதர்களின் வாழ்வும், வீழ்ச்சியும், ஏக்கங்களும், ஆசைகளும், உறவுப் பிறழ்வுகளும்,  நம்பகமான வரலாற்றுக் குறிப்புகளைப் போல அப்படியே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அக்குறிப்புகளின் வாயிலாகவும், தனது எளிமையானதும்நேரடியானதும், குறியீட்டுத் தன்மை கொண்டதுமான மொழிநடையின் உதவியோடும் எஸ்.ரா தன் பார்த்த உலகத்தை நமக்கு அறிமுகப் படுத்துகிறார்.  நம்மீது ஆதிக்கம் செலுத்தியவர்கள் என்ற நிலையைத் தாண்டி நமக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இருந்த உறவு விவரிக்கப் படுகிறது

அப்துல் கரீம் என்ற வணிகர்தான் நகரத்துப் பிரமுகர்கள் பலரும் உபயோகிக்கும் யாமம் என்ற அத்தரைத் தயாரிக்கிறார்.  அதைத் தயாரிக்கும் ரகசியம் அவருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. அவரது குடும்பத்துக்குப்  பதினாலு தலைமுறைகளாக அல் அசர் முசாபர்  என்ற பக்கீர்தான் வழிகாட்டி வருகிறார். அவர்  யார் முன்பும் தோன்றியதில்லை. அக்குடும்பத்தின் மூத்த ஆண்மகனின் கனவில் தோன்றி வழி நடத்துவார். பல தலைமுறைகளுக்கு முன்பாக கரீமின் முன்னோரான மீர்காசிமின் கனவில் முதன்முறையாகத் தோன்றி மர்மமானதும் புதிரானதுமான பல கேள்விகளைக் கேட்கிறார் பக்கீர். அக்கேள்விகள் பல்வேறு தத்துவ அடுக்குகளைக் கொண்டதாக இருக்கின்றன. பதில்களுக்கான தேடல் மீர்காசிமுக்குப் பல்வேறு புரிதல்களை உண்டாக்குகிறது. வாசனையை அதன் ஊற்றுக் கண்ணிலேயே கண்டுபிடித்து விடும் திறமை படைத்த காசிமுக்கு யாமம் தயாரிக்கும் ரகசியத்தைச் சொல்கிறார் பக்கீர். அதன்பின் தலைமுறை தலைமுறையாக யாமம் தயாரிக்கும் ரகசியம் அந்தக் குடும்பத்து ஆண்களிடம் மட்டுமே இருந்து வருகிறது.

ஆண் வாரிசு இல்லாத கரீம் மூன்றாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்தும் பயனில்லை. யாமம் தயாரித்தல் தன்னோடே முடிந்து விடுமோ என்று அஞ்சுகிறார். விரக்தியடைந்த அவர் மனம் அவரை சூதாட்டத்தில் ஈடுபட வைக்கிறது. சொத்தெல்லாம் இழக்கிறார். மூன்று மனைவியரையும் பிரிந்து எங்கோ சென்றுவிடுகிறார். மனைவியர் மூவரும் அவர் இல்லாது பட்டணத்தில் அல்லாடுகிறார்கள்.

மற்றொரு கதை ஆங்கிலேயரின் நிலவரைபட ஆய்வுப் பணியிலிருக்கும் பத்ரகிரியினுடையது. சிறுவயதில் தாயை இழந்த அவன் தன் தம்பியைப் பாசமாய் வளர்க்கிறான். மேற்படிப்புக்காக லண்டன் அனுப்புகிறான். அவன் தம்பியின் மனைவி அவன் வீட்டில் இருக்கிறாள். பத்ரகிரியின் மனைவிக்குத் தெரியாமல் அவனுக்கும் தம்பி மனைவிக்கும் உறவு ஏற்படுகிறது. அவள் பத்ரகிரிக்கு ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். பத்ரகிரியின் மனைவி அவனைப் பிரிகிறாள். இது எதுவுமே அறியாமல் லண்டனில் படிக்கும்போதே கணிதத்துறையில் புகழ் பெற்று நாடு திரும்பும் அவன் தம்பி திருச்சிற்றம்பலத்துக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.

திருச்சிற்றம்பலத்தின் லண்டன் வாசம் மூலமாக நமக்கு பத்தொன்பதாம் நூற்றாண்டின் இங்கிலாந்து ஒரு அழகான ஓவியத்தைப் போலக் காணக் கிடைக்கிறது. லண்டன் மாநகரின் விஸ்தாரமான பழமை கொஞ்சும் பிரம்மாண்டமான தெருக்கள் மட்டுமல்லாது, அவற்றின் அழுக்கு படிந்த வீதிகள், அந்நகரின் உழைக்கும் கருப்பின மக்களின் வலிகள், ஒடுக்கப்படுதலுக்கெதிராய் அவர்களது போராட்டங்கள் ஆகியன நம்முன் விரிகின்றன. திருச்சிற்றம்பலத்துடன் உடன் பயணம் செய்த சற்குணம் உழைக்கும் மக்களுக்கான போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை செல்கிறான். அவனுக்கு மரண தண்டனை கூடக் கிடைக்கலாம் என்று பேசிக் கொள்கிறார்கள். திருச்சிற்றம்பலம் தன் கணிதத் திறமையை லண்டனில் நிலைநாட்டி மிகுந்த புகழ் பெறுகிறான். அவனது பாத்திரப் படைப்பு எனக்கு கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜத்தை நினைவூட்டியது.

இன்னொரு கதை சதாசிவப் பண்டாரத்தினுடையது. வாழ்வின்மீது பற்றற்ற பண்டாரம் வீட்டைத் துறந்து கோயில் வாசலில் போய் உட்கார்ந்து கொள்ளுகிறது. அம்மா வந்து அரற்றியும் மனம் இரங்குவதில்லை. நாய் ஒன்று பண்டாரத்தையே பார்த்துக் கொண்டு நிற்கிறது. நீ சோறு தின்று சோம்பிக் கிடக்கத்தான் சன்யாசியானாயோ? என்று அந்த நாய் கேட்பதைப் போலிருக்கவே, எழுந்து உறுதியுடன் நாயையே பின் தொடர்கிறது பண்டாரம். நாய் பண்டாரத்தை கிராமம் கிராமமாகக் கூட்டிச் செல்கிறது. ஒரு கிராமத்தில் பெண்ணொருத்தியுடன் அவருக்குத் தொடர்பு ஏற்படுகிறது. அவள் கர்ப்பமுறுகிறாள். நாய் அங்கிருந்து நகராததால், பண்டாரமும் அங்கேயே வீட்டு வேலைகளை செய்து கொண்டு தங்கிவிடுகிறது. அவள் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கும் வேளையில் நாய் அங்கிருந்து ஓடுகிறது. பண்டாரமும் அதன்பின்னேயே புறப்பட்டு விடுகிறது. நாய் அவரைப் பட்டினத்தார் சமாதியான இடத்துக்குக் கொண்டு வந்து சேர்த்து விடுகிறது. ஒருநாள் பண்டாரம் களிப்போடு, குதித்துக் கொண்டாடியபடியே அருகிலிருக்கும் மடம் ஒன்றில் புகுந்து தாழிட்டுக் கொள்கிறது. அதற்கப்புறம் அடைத்த கதவு திறப்பதே இல்லை.

அடுத்த கதை குடும்பச் சொத்தைக் காப்பாற்றுவதற்காய் பங்காளியிடம் போராடிக் கொண்டிருக்கும் கிருஷ்ணப்பக் கரையாளருடையது. ஆங்கிலோ இந்தியப் பெண்ணான எலிசபெத்தை அழைத்துக் கொண்டு போய் மேல்மலையில் தங்கி இருக்கிறார். மலைவாசம் அவர் மனதை மெல்ல கனியச் செய்கிறது. வழக்கு முடிந்தால் சொத்து முழுவதையும் இழந்து விடுவோம் என்று அவருக்குத் தெரிந்தே இருக்கிறது. இந்த மேல் மலையையாவது காப்பாற்றி விட வேண்டுமென்று உறுதியோடிருக்கிறார். பங்காளியிடம் சமாதானம் பேசி மேல்மலை தவிர அனைத்தையும் அவனுக்கே கொடுத்து விடுகிறார். மேல்மலையை எலிசபெத்துக்கு எழுதி வைத்து விடுகிறார். ஆங்கிலேயர் தேயிலை பயிரிடுவதற்கு அது ஒரு துவக்கமாக அமைந்து விடுகிறது.

மலையின் வசீகரங்களும்,காட்டின் ரகசியங்களும் எஸ். ராவின் வருணனையில் உயிர் பெறுகின்றன. இரவை மட்டுமல்ல, வெயிலையும் பல்வேறு கோணங்களிலிருந்து உற்றுநோக்கித் தன் வருணனைகளால் அடர்ந்த குறியீடுகளாக மாற்றி விடுகிறார் எஸ். ரா. ஆனாலும் திரும்பத் திரும்ப படிமங்களை உள்ளடக்கிய வருணனைகள் வருவது ஒரு சாதாரண வாசகனான எனக்குச் சலிப்பையூட்டியது. நாவலில் ஆங்காங்கே நிறைய எழுத்துப் பிழைகள் தென்படுகின்றன. பாத்திரங்களின் பெயர்களில் கூட வரும் எழுத்துப் பிழைகள் பாத்திரத்தின்  உண்மையான பெயர் எது என்பதை நாமேதான் ஊகித்துக் கொள்ளவேண்டும் என்ற அளவிற்கு இருந்தது சற்று எரிச்சல்தான். அடுத்த பதிப்பில் தவிர்த்து விட வேண்டும்
நாவலின் தொடர்ந்த வாசிப்பில் சுதந்திரத்துக்கு முந்தைய மதராப் பட்டிணம் கண்முன் உருக்கொள்கிறது. பட்டிணத்தை ஒயிட் டவுன், பிளாக் டவுன் என்று இரண்டாகப் பிரித்திருக்கிறார்கள். இந்தியர்கள் பிளாக் டவுனில் உள்ள ஏழுகிணற்றிலிருந்து வெள்ளையர்களுக்கு நீர் எடுக்கப் போவதை எதிர்த்துப் போராடும் இந்தியர்கள் மீது நடக்கும் தாக்குதல் ஜாலியன் வாலாபாக்கை நினைவூட்டியது. போதையூட்டும் நீலாவரணச் செடிகளும், ஒளிரும் ஸ்வேதாமிணிச் செடிகளும், கிளர்ச்சியூட்டும் தி கிராண்ட் விர்த் சர்க்கஸ் போன்ற ஸ்வாரசியமான விஷயங்களும் நாவல் நெடுக சிதறிக் கிடக்கின்றன. சதாசிவப் பண்டாரத்தின் கதை தவிர எல்லாக் கதைகளிலும் வரும் யாரோ ஒருவருக்கு யாமம் பிடித்தமான அத்தராக இருக்கிறது. பண்டாரத்துக்கும் இந்த நாவலுக்கும் என்ன தொடர்பு என்று யோசித்துக் கொண்டே இருக்கிறேன். மனைவி துரோகம் செய்த உண்மை அறிந்து விரக்தியில் அமர்ந்திருக்கும் திருச்சிற்றம்பலம் ஒரு நாய்க்கூட்டத்தைப் பார்த்து அதன் பின்னேயே போய்விடலாமா என்று நினைக்கிறான். இது பண்டாரத்தை நினைவுபடுத்தியது. வேறு ஏதேனும் தத்துவ ரீதியிலான கயிறு எல்லாக் கதாபாத்திரங்களையும் இணைக்கிறதா என்று தெரியவில்லை.

மேலும் வாசிக்க