14 பிப்ரவரி, 2021

ஒப்பனை




சிறுகதை     ஜெகதீஷ் குமார்.
விஜயலட்சுமி தலைக்குக் குளித்து விட்டு, முடி உலர்த்தியைக் கொண்டு கூந்தலைக் காய வைத்தபின் அள்ளி முடிந்து குதிரைவால் போடாமல் அப்படியே விட்டு விட்டாள். பெரிய அளவு தொங்கட்டான்கள் மாட்டிக் கொள்ளும்போது காதுகளைக் கூந்தல் பாதி மறைத்திருந்தால்தான் பாந்தமாக இருக்கும். தன் கூந்தல் மிருதுவாகவும், மினுமினுப்பாகவும், சீவி விட்டபடியே கலைந்தும் கலையாமலும் புரள்வதைக் கண்டு விஜயலட்சுமி கண்ணாடியில் பெருமைப்பட்டுக் கொண்டாள். யாத்ராவுக்கு சுருட்டை முடி. அதை அவள் எவ்வளவு வெறுத்தாள் என்பது கல்லூரியில் அவர்கள் குழுவினரிடையே பிரசித்தம். அழகு நிலையத்துக்குச் சென்று முடியை நேராக்கிக் கொண்டு வந்த பிறகும் சிறிது நாட்களுக்குப் பிறகு சுருண்டு விடுகிறது. கூந்தலைக் குட்டையாக வெட்டிக் கொண்டால் அவள் முகத்துக்குக் கச்சிதமாகவும், நவீனத்துவத்தின் அடையாளமாகவும் இருக்கும் என்று கிளாரா சொன்னதை இன்றுவரை யாத்ரா ஏற்றுக் கொள்ளவில்லை.
        கூந்தல் அமைந்ததில் மட்டும் தான் அதிர்ஷ்டசாலியல்ல என்பதை கண்ணாடியில் தன் முழு உருவத்தையும் பார்த்து அனுமானித்துக் கொண்டாள் விஜயலட்சுமி. உயரம் குறைவாக இருப்பதை ஒரு குறையாகச் சொல்லிவிட முடியாது. கல்லூரியில் ஐந்தேமுக்காலடி உயரத்துக்கு மேல் இருக்கிற ஆண்களை ஒருவர் மேலொருவர் இடிக்காமல் குளியலறை அளவு கொண்ட இடத்தில் நிற்க வைத்து விட முடியும். பிற அம்சங்கள் எல்லாம் பையன்களுடைய மொழியில் சொல்லப்போனால், ‘அம்சமாத்தான் இருக்கு என்று நினைத்துக் கொண்டாள்.
        விஜயலட்சுமியின் முகம் ஒரு பெரிய வசீகரம். பருக்களற்ற மென்மையான கன்னங்கள். பருக்களோடு போராடுவதற்கு அவளுடைய தோழிகள் என்னென்ன பிரயத்தனங்களை மேற்கொண்டிருக்கிறார்கள் என்று என்று சிந்தித்துப் பார்த்தாள். எண்ணெய் அற்ற உணவுக் கட்டுப்பாட்டிலிருந்து, பற்பல பசைகளும், திரவங்களும் உபயோகப்படுத்தப்படுவது வரை அவர்கள் முகம் சந்தித்த சித்திரவதைகள் இன்றுவரை விஜயலட்சுமிக்கு இல்லை. பதிமூன்று வயதிலிருந்தே வீட்டிற்கு அண்மையிலும், பேருந்து நிறுத்தங்களிலும், பள்ளியிலும் கண்கள் பால்வேறுபாடற்றுத் தன் வனப்பை ஆராதிப்பதை அறிந்தபடியே வளர்ந்து வந்திருந்தாள் விஜயலட்சுமி.
        சென்ற ஆண்டு வரையிலிருந்த ஒரே ஒரு குறை, மிகப்பெரிய குறை, இவ்வளவு அழகையும் ஒரு சுமையாகவே சுமக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததுதான். பள்ளிச்சீருடையும், எண்ணெய் சொதப்பிப் படிய வாரிய தலையும் விதிக்கப்பட்டிருந்த வருடங்களவை. அம்மா அப்பி விடுகிற பவுடரும், தீட்டிவிடுகிற மையும் பேருந்திலிருந்து இறங்குவதற்குள்ளாகவே வியர்வையில் கரைந்து விடும். வெள்ளைச்சட்டையின்  அக்குள் பகுதி நனைந்து அரைவட்டங்களைக் காட்டி நிற்கும். பேருந்துக் கூட்டத்திலிருந்து பிதுங்கி வெளிவரும்போது – எத்தனை பேர் வேண்டுமென்றே நெருக்குகிறார்கள் என்று உணர்ந்தபடியே – மீண்டும் ஒருமுறை குளித்து அலங்கரிந்துக் கொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கும்.
        விஜயலட்சுமி பருத்தியாலான நீலநிற ஜீன்ஸ் அணிந்தாள். பின்புறங்களையும், தொடைகளையும் இறுக்கமாகப் பிடிக்கும் அந்த ஆடை ஆரம்பத்தில் கொடுத்த சிரமத்தை இப்போது தருவதில்லை. வெளிர்மஞ்சள் நிறத்தில் குட்டைக்கை வைத்த சட்டை அணிந்தாள். சட்டையின் நீளம், ஜீன்ஸின் பின்புறப் பாக்கெட்டுகளை காட்டுவதற்கு ஏற்றவண்ணம் குறைவாக இருந்தது. அதே நிறத்தில் மணிகள் கோர்த்த கழுத்தை இறுக்கும் மாலை. இதற்கு choker என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்தவர்களின் சாதுரியத்தை நினைத்து வியந்து கொண்டாள். முகத்தில் அடித்தளமிட்டபின் பாண்ட்ஸ் பசை; கண் இமைகளுக்கு மஸ்காரா; மெல்லிய பவுடர் பூச்சுக்குப் பின் உதட்டின் இயல்பான நிறத்திலேயே சாயம். உதடுகளைக் குவித்து அழுத்தம் கொடுத்து சாயத்தின் பரவலைச் சமனப்படுத்திக் கொண்டாள். மஞ்சள் நிறத்திலேயே கைப்பை. மூன்றே நோட்டுகள். அவை ஸ்கூட்டியின் முன்புறத்தில் செருகப்பட்டு விடும்.
        ‘அம்மா, நேரமாயிடுச்சு, நான் கிளம்பறேம்மா என்றாள் உரத்த குரலில்.
        அடுக்களையிலிருந்து தூக்கிச் செருகிய சேலையும், புகை படிந்த வியர்வை முகமுமாய் அவள் அம்மா வந்து, ‘ அப்ப இன்னிக்கும் சாப்பிட்டுட்டு போகப்போறதில்ல? என்றாள் கண்டிக்கும் குரலில். பிறகு தொடர்ந்து, என்னடி இது? இவ்வளவு குட்டையான சட்டையைப் போட்டுக்கிட்டு. குனியும் போது இடுப்பு தெரியுமேடி! என்றாள்.
        ‘ போம்மா! எப்பப் பார்த்தாலும் இதையே சொல்லிகிட்டு என்றாள் விஜயலட்சுமி.
        பீரோவில் நான் எடுத்துக் கொடுத்த பனிரெண்டு சுடிதாரும் தூங்கிகிட்டிருக்கு. நீ இப்படியே பண்ணிட்டிரு. எல்லாத்தையும் எடுத்து கண் பார்வையற்றோர் சங்கத்துக்குக் கொடுத்துடப் போறேன் என்றாள் அம்மா.
        ‘ மாம், உனக்கு ஒன்னு தெரியுமா? சுடிதார் போடறதெல்லாம் டூ தவுசண்லயே வழக்கொழிஞ்சாச்சு. நீ அங்கதான் கொடுக்கணும்.[ என்றபடி புன்னகையுடன் கிளம்பி வெளிவந்து ஸ்கூட்டியைக் கிளப்பினாள் விஜயலட்சுமி.
        கல்லூரி வளாகத்தில் நுழைந்து ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு மூன்றாவது தளம் நோக்கி நடக்கையில் மணி ஒலித்து விட்டது. வேகமாக நடக்க ஆரம்பித்தாள். ஹீல்ஸ் பாதையில் இடறி, நிலைதடுமாறி கையில் இருந்த கிளட்சைத் தவறவிட்டாள். குனிந்து எடுத்துக் கொண்டு நிமிர்ந்த போது எதிரில் லாவண்யா நின்றிருந்தாள். விஜயலட்சுமியைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
        ‘ காலை வணக்கம் விஜயலட்சுமி. தாமதமாகி விட்டதே?
        ‘ காலை வணக்கம் மேடம். ஆமாம்.
                சில விநாடிகள் இடைவெளி கொடுத்து மௌனமாய் நின்று பிறகு, ‘ விஜயலட்சுமி, இடைவேளையின்போது என்னை என் அறையில் சந்திக்க இயலுமா? என்றாள்.
        ‘ நிச்சயமாக, மேடம்.
                ‘ நல்லது. என்றபடி பருத்திப்புடவை சரசரக்கச் சென்று விட்டாள். கனிம வேதியியல் வருவதற்குள் வகுப்பிற்குள் நுழைந்து விடுவதற்கு அவள் ஓட வேண்டியதாயிருந்தது.
        இடைவேளையின்போது உளவியல் துறையின் ஆசிரியர் அறை நோக்கி நடந்த போது விஜயலட்சுமிக்குச் சற்று குழப்பமாக இருந்தது. தனக்குச் சம்பந்தமில்லாத துறையில் இருக்கும் லாவண்யா எதற்காகத் தன்னைச் சந்திக்க விரும்ப வேண்டும் என்பதற்கான சாத்தியக் கூறுகளை வரிசைப்படுத்திப் பார்த்தாள். கல்லூரி கலாசார விழா ஏதாவதில் பங்கேற்பதற்காக இருக்குமோ? ஆனால் அது மொழித்துறைத் தொடர்புடையதாயிற்றே? இல்லை, உளவியல் தொடர்பான ஆய்வுக்கட்டுரை சம்ர்ப்பித்தலாக இருக்குமோ? உளவியலில் விருப்பம் கொண்டவள் என்பதற்கான அறிகுறிகள் ஏதும் தன்னிடம் தென்படவில்லையே? லாவண்யாவின் பத்தாம் வகுப்பு பயில்கிற தங்கைக்கு வேதியியல் பாடத்தில் உள்ள ஐயங்களை நிவர்த்தி செய்யத் தன் உதவி தேவைப்படுமோ?
        வாயிலருகே நின்று அனுமதி கேட்டு, உள்ளே நுழைந்து லாவண்யாவின் புன்னகை முகத்தைப் பார்த்தவுடன் விஜயலட்சுமியின் சிந்தனைத்தொடர் அறுபட்டு விட்டது.
        ‘ நவீன வழக்கப்படி ஆடைகள் அணிவதை நீ பெரிதும் விரும்புகிறாய், இல்லையா? என்றாள் லாவண்யா எவ்வித முன்னுரையுமின்றி.
        விஜயலட்சுமிக்கு உடனே என்ன பதில் சொல்ல வேண்டுமென்று தெரியவில்லை. சற்று சுதாரித்துக் கொண்டு, இப்போது எல்லோரும் இவ்வாறு ஆடை உடுத்துவதைத்தானே விரும்புகிறார்கள் மேடம். என்றாள்.
        ‘ இன்று நீ குனிந்து கைப்பையை எடுத்தபோது உன் மார்பகப்பிளவு தெரிந்தது. பின்பக்கம் உன் இடுப்புச்சதை தெரிந்திருக்கும் என்பதையும் அனுமானிப்பது கடினமில்லை. என்றாள்
        விஜயலட்சுமி கண்களை நிலைநிறுத்தி, பின் சுருக்கி, புருவங்களை மேலுயர்த்தி, தோள்களைக் குலுக்கினாள். இந்த உடல்மொழிக்கு அதனாலென்ன என்று அர்த்தம்.
        லாவண்யாவின் முகத்தில் புன்னகை மாறவில்லை. தான் அணிந்து வருகிற ஆபரணங்களைப் போல அவளும் புன்னகையை அணிந்து வருவாள் போலும். லாவண்யா ஆழமாக மூச்சை உள்ளிழுத்து நீண்டதொரு பெருமூச்சை விட்டாள். ஒரு நீண்ட பிரசங்கம் துவங்கப் போவதற்கான குறிப்பு அது.
        ‘ விஜயலட்சுமி, உன் வயதொத்த பெண்கள் நவீன ஆடைகளையும் அணிகலங்களையும் விரும்பி அணிகிறீர்கள். உங்கள் தோழமைக் கூட்டத்தின் அழுத்தம் காரணமாகவே இவ்வாறு தோற்றங்கொள்வது உங்கள் மீது திணிக்கப்பட்டு விடுகிறது. மேலும் இந்தப் பதின்பருவத்தில் உங்கள் ஆளுமையில் நிலை குறித்த நிச்சயமின்மை, உங்களுக்கென ஒரு பிம்பத்தை உருவாக்கி அதில் பொருத்திக் கொள்ளுமாறு உங்களைத் தூண்டுகிறது. இதன் விளைவே உங்கள் தோற்றத்தைத் துருத்திக் காட்டுதல் நிகழ்கிறது. இது பிறர் கவனத்தை விரும்புதலன்றி வேறில்லை.
        விஜயலட்சுமிக்கு இந்தச் சொற்பொழிவு எந்த திசை நோக்கிப் பயணிக்கிறது என்று புரிந்து விட்டது. அம்மா மாதிரிப் பழமையில் ஊறியவர்களின் கருத்தைத்தான் இவளும் தூய ஆங்கிலச் சொற்றொடர்களில் கருத்துச் செறிந்த விவாதமாக முன்வைக்கிறாள்.
        ‘ மேடம், மன்னிக்கவும். உங்கள் வாதத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். எங்களது நவீனத் தோற்றத்துக்கு நீங்கள் சொன்ன கருத்துக்கள் காரணங்களாய் இருப்பதில் என்ன தவறு? எங்கள் ஆளுமையை நாங்கள் முன்னிறுத்த விரும்புவது இயல்புதானே? என்றாள் விஜயலட்சுமி.
        வெயிலடித்து வியர்வை வழிகையில் கலைந்து போகிற ஒப்பனை மாதிரி விஜயலட்சுமியின் கேள்வி கேட்டவுடன் லாவண்யாவின் புன்னகை மறைந்தது. அவளது பெரிய கண்கள் இறுகியதைக் கொண்டு, அவள் எரிச்சலடைந்திருக்கிறாள் என்று அறிந்து கொள்ள முடிந்தது.
        ‘ நீங்கள் முன்னிறுத்துவது உங்கள் சொந்த ஆளுமையைத்தானா? யாரோ ஒரு நடிகையிடமிருந்தோ, விளையாட்டு வீரரிடமிருந்தோ விளம்பரங்களின் வாயிலாகக் கடன்பெற்ற பிம்பங்களைத்தானே நீங்கள் தூக்கிக்கொண்டு அலைகிறீர்கள்? ஆக்கபூர்வமான வழிகளில் ஆளுமையை அமைத்துக் கொள்ள முடியாதா? பதின்பருவத்தவர்களின் முட்டாள்தனத்தைப் பயன்படுத்தி எத்தனை மில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டப்படுகிறது தெரியுமா? புறப்பொருட்களில் இல்லை ஆளுமைத்திறன்; அது அகம் சார்ந்த விஷயம். என்றாள் லாவண்யா. பருத்திப் புடவையின் சலவை மொரமொரப்புக்குப் பின்னே நெஞ்சு வேகமாக ஏறித் தாழ்ந்து கொண்டிருந்தது.
        எதிர்விவாதத்திற்கான குறிப்புகளை விஜயலட்சுமி மனதில் தேடினாள். நவீன ஆடைகளும், அணிகலன்களும் அணிந்து தோற்றத்தை அழகுபடுத்தியிருப்பினும், அவள் தலைக்குள் இருப்பதொன்றும் காலிஃபிளவர் அல்ல. அறிவுசார் விஷயங்களில் அவளுக்குள்ள ஈடுபாடு மொழித்துறை ஆசியர்களிடத்தும், அவளோடு கல்லூரிப் பண்பாட்டு விழாக்களில் பங்கேற்கிற மாணவர்களிடத்தும் பிரபலம். மேலும் தற்போது அனைத்து இளைஞர்களின் பிரதிநிதியாகவும் தான் செயல்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தாள் விஜயலட்சுமி.
        விஜயலட்சுமி கடிகாரத்தைப் பார்ப்பதை லாவண்யா கவனித்து, ‘ பரவாயில்லை. நான் உன் ஆசியரிடம் சொல்லிக்கொள்கிறேன். முதல் வகுப்பு யாருடையது? என்றாள்.
        சொன்னாள். அவள் அலைபேசியில் பாலிமர் வேதியியலை அழைத்துக்கொண்டிருந்தபோது சற்று நேரம் கிடைத்த மாதிரி இருந்தது. இடைவேளை முடியும் நேரம் நெருங்கி விட்டது. வெளியில் சில பையன்கள் உரத்த குரலில் சிரிப்பது கேட்டது. ஜன்னலுக்கு வெளியே வெயில் எல்லாரையும் சமமாக எரித்துக் கொண்டிருந்தது. தலைக்கு மேல் மின்விசிறி, ‘டொர்ரக், டொர்ரக் என்று ஓடிக்கொண்டு காற்றை விட ஒலியை அதிகம் உற்பத்தி செய்ததை லாவண்யாவோ, பக்கத்து மேஜையில் கை வைத்துப் படுத்திருந்த ராமானுஜமோ பொருட்படுத்திய மாதிரி தெரியவில்லை.
        அலைபேசியை மேஜை மேல் வைத்துவிட்டு இவளைப் பார்த்து, ‘ம்? என்றாள். மீண்டும் போருக்கு ஆயத்தமாகி விட்ட தளபதியைப் போலிருந்தாள். மேற்சொன்ன கருத்துக்கு எதிர்தரப்பு விவாதத்தை எதிர்நோக்குகிறாள் என்பது புரிந்தது.
        ‘ மேடம். எங்கள் கோணத்தில் இந்தப் பிரச்சினையை நோக்க வேண்டுகிறேன். எத்தனைக் காலமாகப் பெண்ணினம் அடுக்களைக்குள்ளேயே சிறைப்பட்டு வந்திருக்கிறது. இந்த நவீனத் தோற்றம் எங்கள் விடுதலையின் குறியீடு. எங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவதில் மட்டுமல்ல, எம் வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்வதிலும் எமக்குப் பரிபூரண சுதந்திரம் உண்டு என்பதற்கான அடையாளமே இது.
        லாவண்யாவின் அலைபேசியில் குறுஞ்செய்தி ஒலித்தது. எடுத்துப் படித்து விட்டு முகத்தில் புன்னகையுடன், ‘ விஜயலட்சுமி, இந்த விவாதம் சுவாரசியமாகவே இருக்கிறது. நாளை சனிக்கிழமைதானே? நீ என் வீட்டுக்கு வாயேன்! இது பற்றி இன்னும் ஆழமாக உரையாடலாம். இப்போது என் துறைத் தலைவர் என்னை அழைக்கிறார். என்றாள்.
        விஜயலட்சுமி விவாதபாவம் கலைய எழுந்தாள். ‘ இப்படி ஒரு விவாதத்தை திடீரென்று துவக்கியதன் காரணம்? அதற்கு என்னைத் தேர்ந்தெடுத்ததன் காரணம் என்னவென்று நான் அறியலாமா? என்றாள்.
        ‘ காரணம் உனக்கே தெரியும். உன்னைத்தவிர வேறு யாரிடம் நான் இப்படித் தீவிரமாக வாதாட முடியும்? இளைஞர்களிடம் புதுமை காணும் ஆவல் இருக்குமளவு, அதை ஏற்றுக் கொள்ளும் முதிர்ச்சி இருப்பதாகத் தெரியவில்லை. அது உன்னிடம் இருப்பதாக நம்புகிறேன். என்றாள் லாவண்யா.
*       *       *
செய்முறைக் கூடத்துக்குள் நுழைந்தபோது புகையும் நைற்றிக் அமிலத்தின் நெடி விஜயலட்சுமியை வரவேற்றது. மூன்றாவது மேஜைக்கருகில் வகுப்பின் பதினைந்து மாணவர்களும் குழுமியிருந்தனர். வேகமாக அவர்களருகில் சென்றாள். வெளி வட்டத்தில் நின்றிருந்த மஞ்சு திரும்பி இவளைப் பார்த்து, விஜே, யாத்ரா தலையில் நைட்ரிக் ஆசிட்டைக் கொட்டிக்கிட்டா. என்றாள். விஜே என்பது நண்பர்கள் விஜயலட்சுமிக்குக் கொடுத்த பெயர். அவளது முகநூல் முகவரியின் பெயரும் அதுதான்.
        மாணவர்கள் விலகி அவளை உள்ளே அனுமதித்தனர். விஜயலட்சுமி வகுப்புப் பிரதிநிதி. நிகழ்ந்த விபத்து குறித்துப் பதிவு செய்யவேண்டியது அவள்தான். யாத்ரா இடது கையால் தலையைத் தாங்கியபடி அமர்ந்திருந்தாள். கூந்தலிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருந்தது. முன் நெற்றியில் உள்ளங்கையளவு கூந்தல் பொசுங்கி, நெற்றியில் வெள்ளைத்தோல் தெரிந்தது. யாத்ராவின் முகத்தில் அமிலத்தின் எரிச்சலால் உண்டான வேதனை தெரிந்தது.
        பாலிமர் வேதியியல் துறை விரிவுரையாளர் ராஜாராம் அவளருகில் நின்றிருந்தார். ‘ ஆசிட் பாயில் ஆயிடுச்சான்னு டெஸ்ட் ட்யூபைத் திருப்பிப் பார்த்திருக்கா. நல்லவேளை, கண்ணுல படல. விஜயலட்சுமி, நீ யாத்ராவோட ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்துரு. ஆஃபீஸ்ல இருந்து சிவசாமி கூட வருவார். பிரின்சிபால் கார் எடுத்துக்கச் சொல்லியிருக்கார். என்றார்.
        யாத்ராவைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று காருக்குள் அமர வைக்கும்போது கல்லூரி வளாகத்துக்குள் மற்றொரு கார்  நுழைந்தது.
        சிவப்பு நிறத்தில் கொழுத்த பெண்மனி ஒருத்தி காருக்குள்ளிருந்து இறங்கி யாத்ராவை நோக்கி மூச்சிரைக்க நடந்து வந்தாள். அவள் தலை மருதாணி பூசப்பட்டு  சிவப்பாக்கப்பட்டிருந்ததை விஜயலட்சுமி கவனித்தாள்.
        ‘ யாத்ரா! என்ன ஆயிற்று என் செல்லமே?
        வந்தவள் யாத்ராவின் தாய். யாத்ராவின் விபத்து குறித்த விசாரணைக்குப் பின்னர் சினந்த முகத்துடன் அவளே யாத்ராவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டாள்.
        ராஜாராம் வகுப்பை ரத்து செய்துவிட்டார். எல்லாரும் கல்லூரியின் உணவகத்துக்குச் சென்றார்கள். பொசுங்கிப்போன முடியை யாத்ரா எங்ஙனம் சரி செய்யப்போகிறாள் என்று கவலையுடன் ஆலோசனை செய்தார்கள்.
        ‘ கவலையை விடும்மா! ஹேர் ட்ரான்ஸ்ப்ளான்டேஷன் டெக்னிக்கெல்லாம் இப்ப ரொம்ப வளர்ந்துடுச்சு. முழு வழுக்கையிலெல்லாம் கருகருன்னு முடி வளர்ற மாதிரிப் பண்ணிடறாங்க. சத்யராஜ் பாத்தீங்கல்ல? நம்ம ஹர்ஷா போக்ளே? என்றான் வருண்.
        சிறிது நேர உரையாடலுக்குப் பின் முடி பொசுங்கியது பெரிய இழப்பில்லை என்ற முடிவுக்கு வந்தார்கள். முன்நெற்றியில் ஏற்பட்ட காயத்தின் வடுவும் மறைந்துவிட பெரும்பாலும் வாய்ப்புள்ளது. காயம் எந்த அளவுக்கு ஆழமானது என்பதைப் பொறுத்தது அது.
        பேச்சு இயல்பாக வேறுபக்கம் திரும்பியது. கிரிக்கெட்டும், இசைநிகழ்ச்சிகளும், திரைப்படமும், சந்தையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொருட்களும் அவர்களை ஆக்கிரமித்துக் கொண்டன. விஜயலட்சுமி தன் நண்பர்களைக் கண்களால் அளைந்தாள். எல்லாருமே நவீனத்துவத்தின் பிரதிநிகளாகத்தான் தோற்றம் கொண்டிருந்தனர். இவர்கள் யாருக்கும் சொந்த பிம்பம் ஒன்று இல்லையா? நான் உள்பட? நான் என்பது எது? என் உருவமும், இளமையும் மாறிவிடும் என்பதால் மட்டும் அவை நான் இல்லையென்றாகி விடுமா? அப்படிப் பார்த்தால் என்னை வடிவமைக்கும் கருத்துக்களும் காலப்போக்கில் மாறுபவைதானே? அதை மட்டும் நானென்று எப்படிச் சொந்தம் கொண்டாட முடியும்?
        ‘ ஹே கைஸ், கால்ஸ். என்றபடி சட்டையைக் கழற்றினான் கௌரவ். அவனது புஜத்தில் ஒன்றொடொன்று பிணைந்திருக்கிற டிராகன்கள் படம் பச்சை குத்தப்பட்டிருந்தது. எல்லாப் பையன்களும், சில பெண்களும் ‘ வாவ்!" என்றார்கள்.
கௌரவ் பெருமையாக, ‘ ப்ர்மெனெண்ட். ஷார்ட் ஸ்லீவ் போடும்போது பாதி வெளியில தெரியும். லுக்கா இருக்கும்ல?என்றான்.
பொறாமையோடு ஆமோதித்தார்கள். அவர்கள் ஊரில் யார் இந்த மாதிரி பச்சை குத்துகிறார்கள் என்று நினைத்து வியந்தார்கள். சுமந்தா தன் பின்புறத்தில் ஜீன்ஸுக்கும், மேற்சட்டைக்கும் இடைப்பட்ட பகுதியில் பச்சை குத்த எண்ணி, ‘ டேய், எங்க பண்ணினேன்னு சொல்லுடா? கர்ல்ஸுக்குப் பண்ணி விடுவாங்களா? என்றாள்.
        கௌரவ் சென்னை சென்றிருந்தபோது பச்சை குத்தியிருக்கிறான். ஒரு வாரமாயிற்று.  இன்னும் பெற்றோர்களுக்குக் கூட காட்டாமல் மறைத்து வைத்திருக்கிறார்கள். தெரிந்தால் வீட்டுக்குள் சுனாமிதான் என்றான்.
        எல்லாரும் தங்கள் அணிகலன்களைப் புகழ்ந்து உரைக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆண்கள் உடலில் குத்திக்கொள்கிற விதவிதமான பச்சைகள், காலணிகள், வெயில்கண்ணாடி, கடுக்கன்கள் என்ற ரீதியிலும், பெண்கள் ஒப்பனைப் பொருட்கள், தோடுகள், தொங்கட்டான்கள், ஏன் உள்ளாடைகள் வரை சமீபத்தில் வெளியான விஷயங்கள் பற்றி விவாதித்தனர். இளமையையும், ஒப்பனையையும் பிரிக்கவே இயலாது என்ற முடிவுக்கு வந்தாள் விஜயலட்சுமி என்கிற விஜே.
        *       *       *
        தோளுயரம் வளர்ந்து நிற்கிற பூச்செடிகளுக்கு அக்கறையோடு தண்ணீர் வார்த்துக் கொண்டிருந்த கணவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் லாவண்யா. பூக்களைப் பறிக்க அவர் அனுமதிப்பதில்லை. அவை செடிகளிலேயே வாழ்ந்து கருகுவதே அவர் விருப்பம். காய்ந்த பூக்களையும், இலைகளையும் கிள்ளிப் போட்டுவிட்டு, அந்தக் குட்டித் தோட்டத்தைத் துப்புரவாக வைத்திருப்பதில் அவருக்கு எப்போதுமே ஈடுபாடு. சமயத்தில் பூத்து நிற்கிற மலர்களைக் கையில் ஏந்தியபடி உற்றுப்பார்ப்பது, அவர் அவைகளோடு உரையாடிக் கொண்டிருப்பது போலவே தோன்றும்.
        துண்டால் கைகளைத் துடைத்தபடியே இவளை நோக்கி வந்தார். ‘ என்ன? அந்தப் பொண்ணு எப்ப வர்றா? என்றார்.
        ‘ பத்து மணிக்கு வருவான்னு நினைக்கிறேன். என்றாள் லாவண்யா.
        ‘சரி, அவளை ரொம்பப் போட்டுப் படுத்தாதே! இந்த வயசில பொண்ணுங்க தங்களை அழகா காட்டிக்கறதுல என்ன தப்பு?
        ‘ திரும்பவும் ஆரம்பிக்காதீங்க! என்றாள் லாவண்யா. இதுபற்றி ஏற்கனவே கணவனுடனும் ஒரு விவாதத்தை நிகழ்த்தியிருந்தாள்.
        ‘ சரி, நான் மேலே படிச்சிட்டுருக்கேன். என்னைத் தொந்தரவு செய்யாதே. என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டாள்.
        விஜயலட்சுமி வந்தபோது லாவண்யா தயாராக இருந்தாள். இம்முறை தமிழிலேயே உரையாடினாள்.
        ‘ விஜயலட்சுமி. உனக்கு ஒரு பிராஜக்ட் தரப்போறேன். உன் இலக்கிய ஆர்வத்தைப் பத்தித் தமிழய்யா சொன்னாங்க. இதை நீ பண்ணினா பொருத்தமா இருக்கும்னு அவர்தான் சொன்னார்.
        விஜயலட்சுமி அவள் கொடுத்த கோப்பை வாங்கிப் புரட்டிப் பார்த்தாள். கல்வி உளவியல் தொடர்பான ஆய்வு அது. தமிழிலக்கியத்தில் கல்வி குறித்த மேற்கோள்களைக் காட்டுவதற்கு ஊக்கமூட்டியிருந்தது ஆய்வு பற்றிய குறிப்பு.
        ‘ இது பற்றிப் பேசத்தான் உன்னை வீட்டுக்கு வரச் சொன்னேன். அப்படியே நாம பேசுன விஷயத்தையும் தொடரலாம். என்றாள் லாவண்யா.
        விஜயலட்சுமி கோப்பை மேஜை மேல் வைத்து விட்டு அவள் தொடங்குவதற்காகக் காத்திருந்தாள்.
        ‘ என்னிக்காவது நான் வளையலோ, செயினோ அணிஞ்சு நீ பார்த்திருக்கியா? இல்ல வேற மேக்கப் சாதனங்களை உபயோகிச்சு நீ பார்த்திருக்கியா?
        விஜயலட்சுமி இல்லையென்று தலையாட்டினாள்.
        ‘ எனக்குச் சின்ன வயசிலேர்ந்தே இதுல ஆர்வம் கெடையாது. இவையெல்லாம் அடிமைத்தனத்தின் சின்னங்கள்னு நினைச்சேன். பின்னாடி நான் பெரியாரை வாசிச்சபோது நான் நினைச்சது சரின்னு உறுதியாச்சு_
                ‘ இந்த ஒப்பனைகளை அணிஞ்சுக்கிறது மூலமா நீங்கல்லாம் எதை முன் வைக்கறீங்க தெரியுமா? ஆண்களை ஒரு படி மேலே நிறுத்தி, அவங்களுக்கு செக்ஸுவலா பணி செய்யற அடிமைகள் நீங்கள்ங்கறதை நிரூபிக்கிறீங்க. ஆண்களை பாலியல் ரீதியா வசீகரிக்கறதுக்குத்தானே விதவிதமான பொருட்களால் உங்களை அலங்கரிச்சுக்கிறீங்க? உங்களை நீங்களே ஒரு செக்ஸுவல் ஆப்ஜெக்டா புரஜக்ட் பண்ணிக்கிறீங்க என்பதுதான் என் வாதம். உங்கள் தனித்தன்மையை ஆக்கபூர்வமான சிந்தனைகளில்தான் காட்டவேண்டுமே தவிர இதுபோன்ற சீப்பான முறைகளை இளைய சமுதாயம் கையாளக் கூடாதுங்கறதுதான் என் விருப்பம். ஜப்பானில கெய்ஷாக்கள் என்று ஓர் இனம் இருந்தது. தினம் தன்னை விதம் விதமா அலங்கரிச்சுக்கிட்டு ஊர்ல இருக்குற பெரிய மனுஷங்களைக் குஷிப்படுத்தறதுதான் அவங்க வேலை. அவங்களுக்கும், உங்களுக்கும் எந்த வேறுபாடும் இருக்கற மாதிரித் தோணல.
        விஜயலட்சுமிக்கு ஓங்கி அறை வாங்கிய மாதிரி இருந்தது. இப்படி ஒரு குற்றச்சாட்டை அவள் எதிர்பார்க்கவில்லை. பெண்ணியம் பேசும் லாவண்யாவிடம் ஒப்பனைகள் பெண்விடுதலையின் அடையாளமே என்பதை ஒப்புக்கொள்ள வைக்க முடியும் என்று நம்பியிருந்தாள். இந்தக் குற்றச்சாட்டுக்கும், பழைமையில் ஊறியவர்கள் பெண்களைக் கட்டுப்படுத்தும் முறைகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. தன் வயதுப் பெண்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்பதை நிரூபித்து விட விரும்பினாள்.
        அப்போது பழஞ்சேலையொன்றைக் கட்டிக்கொண்டு ஒரு பெண்மணி வந்து நின்றாள். லாவண்யா நிமிர்ந்து ‘ முத்து, ஒரு நிமிஷம் இரு. வந்துடறேன். என்றபடி பக்கத்து அறைக்குச் சென்றாள். ஒரு நிமிடம் கழித்துத் திரும்பி வந்து அவள் கையில் கத்தையாகப் பணத்தைத் திணித்தாள்.
        ‘ சரிம்மா. பதினோரு மணிக்கு பஸ்ஸூ. நான் கோமுவைக் கூட்டிகிட்டுக் கெளம்பறேன். என்றாள் அந்தப்பெண். ‘ போறதுக்கு முன்னால அவளைக் கூட்டிட்டு வந்து உங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கணும்மா. என்றாள்.
        லாவண்யா மென்மையாகச் சிரித்தபடி, ‘ சரி, சரி. என்றாள். அந்த அம்மாள் போனபின், ‘ எங்க வீட்டு வேலைக்காரி. பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணப்போறா. அதான் உதவியா இருக்குமேன்னு கொஞ்சம் பணம் கொடுத்தேன். என்றாள்.
        விஜயலட்சுமி விவாதத்தைச் சற்று மறந்து, ‘ அவங்க பொண்ணும் இங்கியேதான் தங்கியிருக்குதா? என்றாள்.
        ‘ பின்பக்கம் வீடு கட்டிக் கொடுத்திருக்கோம். பொண்ணு இங்கேயே பிளஸ்டூ வரை படிச்சுது. கிராமத்துல அவங்க முறை மாமன் வெயிட் பண்றானாம். அஞ்சு வருஷம் முன்னாடியே நிச்சயம் ஆயிடுச்சாம். இப்ப கல்யாணம். மேல படிக்க வையின்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன் . முடியலை. இவங்கல்லாம் மேல வர்றதுக்கு படிப்புதான் ஒரே வழின்னு நினைச்சேன். ஆனா உங்க மாதிரிப் படிச்சவங்களும் வேற கோணத்துல பார்க்கும்போது ஒரே மாதிரி சிந்தனையிலதான் இருக்கீங்க. படிப்பு காசு சம்பாதிக்க மட்டும்தான் உங்களுக்கு உதவுது. அடிப்படைச் சிந்தனைகளை மாற்ற அல்ல.
        விஜயலட்சுமி ஆரம்பித்தாள். ‘ மேடம், திரும்பவும் கேட்கிறேன். அப்படி செக்ஸுவல் ஆப்ஜெக்டா எங்களைப் ப்ரொஜக்ட் பண்ணிக்கிறதுல என்ன தப்பு? இதனாலேயே நாங்க அடிமையாயிடுவோன்னு நீங்க எப்படி நினைக்கலாம். சொல்லப்போனா இப்படி ஒரு வசீகரம் எங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதை நான் ஒரு வெகுமதியாகவே நினைக்கிறேன். ஆணும், பெண்ணும் ஒருவரையொருவர் வசீகரித்துக் கொள்வதிலோ, செக்ஸுக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலோ என்ன தவறு? செக்ஸ் எல்லாருக்கும் பிடித்த விஷயம்தானே? படிப்பு அடிப்படைச் சிந்தனைகளை மாற்றலன்னு சொல்றீங்க. ஆனா உங்க வாதம் அடிமைத்தனத்தை வேறு வடிவத்துல எங்களை ஏத்துக்கச் சொல்லி வற்புறுத்துது. ஆனா எழுத்துக்களை அடிப்படையா வைச்சு எங்க வாழ்க்கையை அமைச்சுக்க விரும்பல. வாழ்க்கையை ஒரு பரிசோதனையாக எடுத்துக்கறோம். அதில் தப்பு நடக்கும். அடிபட்டு திருந்திக்கறோம். ஆனா இம்முறையில் நாங்க கத்துக்கற கல்வி திணிக்கப்பட்டதா இருக்காது.
        லாவண்யா உறைந்த முகத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். இவளைத் திருத்தமுடியாது என்று சொல்வதைப் போலிருந்தது அவள் பார்வை.
        இப்போது அந்த அம்மாள் மகளுடன் வந்து விட்டாள். அந்தப் பெண்ணுக்குப் பதினேழு வயதிருக்கும். அவள் கட்டிக் கொண்டிருந்த தாவணி அந்த அம்மாளின் புடவையாகத்தான் இருக்க வேண்டும். முகம் வியர்வையில் பளபளப்பாக இருந்தது. காதில் தோடுகள் இல்லை. கழுத்தில் கவரிங் செயின். இத்தனைக் குறைகளையும் மீறி அவளது இளமை திமிறிக் கொண்டிருந்தது. விஜயலட்சுமி சில விநாடிகள் அந்தப் பெண்ணின் அழகையே பார்வையால் விழுங்கிக் கொண்டிருந்தாள்.
        லாவண்யா, ‘ ரமேஷ்!, ரமேஷ்! என்றாள் மாடியைப் பார்த்து. இறங்கி வந்தபோது அவர் முகத்தில் சலிப்பு தெரிந்தது. ‘ முத்து ஊருக்குப் போறா. சொல்லிட்டுப் போக வந்திருக்காங்க. என்றாள் லாவண்யா.
        அந்தப் பெண் லாவண்யாவின் காலில் விழுந்து ஆசி வாங்கிக் கொண்டாள். லாவண்யாவின் கணவர் அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தார். இருவரும் சொல்லிக்கொண்டு கிளம்பினார்கள். லாவண்யாவின் கணவர் மீண்டும் தோட்டம் நோக்கிச் சென்று அங்கிருந்த பூக்களை ஆராய ஆரம்பித்தார். வெளிக்கதவை மூடிவிட்டு அவர்கள் செல்லும்வரை அவர்களையும் அவ்வப்போது ஏறிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
        விஜயலட்சுமி லாவண்யாவைப் பார்த்தாள். ‘ நல்ல அழகான பெண், இல்லையாடா மேடம். எந்த மேக்கப்பும் இல்லாமலேயே ராவிஷிங்கா இருக்கறா.என்றாள்.
        லாவண்யா விஜயலட்சுமியின் பார்வையைத் தவிர்த்தாள். பின் தோட்டத்தில் பூக்களைக் கொஞ்சிக் கொண்டு நிற்கிற தன் கணவனைப் பார்த்தாள்.

12 பிப்ரவரி, 2021

நல்ல சிவம் சிறுகதை


நல்ல சிவம்   சிறுகதை

தேர்வு முடிந்து மதியம் வீட்டுக்கு வந்தபோது சைன்டிஸ்ட் மாதேஸ் வீட்டுக்கு வரச்சொன்னதாக அம்மா சொன்னாள். பரீட்சை அட்டையை வைத்து விட்டு சீருடையை மாற்றாமல் அவன் வீட்டிற்கு ஓடினேன். மாதேஸ் அன்று தேர்வுக்கு வரவில்லை. ஏதாவது சுவாரசியமான விஷயம் வைத்திருப்பான்.

     அவன் வீட்டை அடைந்தபோது உள்ளே யாரும் இல்லை. குடிசை வீடு. பின்னாலிருந்து ‘இங்கேயிருக்கேன் வாடா’ என்று குரல் கேட்டது. நான் வந்த அரவம் கேட்டிருக்க வேண்டும். கொல்லையில் மாதேஸ் குத்த வைத்து உட்கார்ந்திருந்தான். அவனுக்கு முன்னால் மணல் குவித்து ஒரு காலி பாட்டில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தது. அருகில் நாலைந்து எலுமிச்சம்பழங்களும், இரண்டு எவரடி பேட்டரிகளும், சில தாமிரக் கம்பிகளும் கிடந்தன. யாருக்காவது பில்லி சூன்யம் வைக்கப் போகிறானா? அவனது சித்தப்பா சின்ன வயதில் அவனது ஞாபக மறதிக்காக அவனை அடித்துக் கொடுமைப்படுத்தியதாகச் சொல்லியிருக்கிறான். வளர்ந்து பெரிய ஆளானதும் அந்த ஆளைக் கட்டிவைத்து உடம்பு பூரா ஊசியால் குத்த வேண்டுமென்று நாங்கள் தனியாகச் சந்திக்கும்போதெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பான். ஏழாவது வகுப்பிலேயே பழிவாங்கல் முயற்சியில் ஈடுபடுவதற்கு சாத்தியங்கள் குறைவுதான்.

‘என்னடா விஷயம்?’ என்றேன்.

     ‘இப்போ இந்த எலுமிச்சம்பழத்திலிருந்து மின்சாரத்தை எடுத்து இந்த பேட்டரிகள்ல சேமிச்சு வைச்சா எப்படி இருக்கும்?’ என்றான் தன் ஆராய்ச்சிக் கூட அமைப்பை வியந்துகொண்டே.

     ‘இதைக் காண்பிக்கத்தான் என்னைக் கூப்பிட்டயா? அய்யா இதுக்குத்தான் லீவு போட்டிங்களோ?’ என்றேன்.

     ‘இல்லடா, இன்னிக்கு மார்கெட்ல நல்லசிவத்தைப் பார்த்தேன். அவனைப் பத்திப் பேசத்தான் கூப்பிட்டேன்.’

     ஏண்டா, நீயே ஒரு வெட்டி, நீ அந்த வெட்டிப் பயலோட என்ன உலக விஷயம் பேசுன?’ என்றேன். நல்ல சிவம் பத்து நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. என்னவாக இருக்கும் என்று நாங்கள் இருவரும் தினம் பேசிக்கொள்வோம்.’என்னவாம், ஏன் பள்ளிக்கூடத்துக்கு வர்லியாம்?’

     அவன் வீட்ல பெரிய பிரச்னையாண்டா, ஸ்கூலுக்கெல்லாம் போவேண்டாம், காட்டு வேலையப்பாருன்னு அவங்க அண்ணன் சொல்லிட்டாராம். நம்மகிட்ட நிறையப் பேசணும்னான். இன்னிக்கு சாயங்காலம் உரம் வாங்க வரும்போது வீட்டுக்கு வரேன்னிருக்கான். இங்கேயே இரு. இப்ப வந்துருவான்.’ என்றான் மாதேஸ். எலுமிச்சம்பழங்களில் ஊசி குத்தி அவற்றிலிருந்து ஒயர் இழுத்து பேட்டரிகளில் சொருகியிருந்தான். அந்த ஹார்லிக்ஸ் பாட்டிலை வைத்து என்ன செய்யப்போகிறான் என்று தெரியவில்லை.

     ‘அவன் வரதுக்குள்ள முடிச்சுருவேன்னு நினைக்கிறேன். பாட்டில இறுக்க மூடி சூடுபடுத்தினா உள்ளே வாக்குவம் ஏற்பட்டு ஒரு காந்தவிசை உண்டாகும்’ என்றான். அவன் என்னிடம் பேசிய மாதிரித் தெரியவில்லை. தனக்குள்ளேயே பேசிக்கொண்டிருந்த மாதிரி இருந்தது. எனக்கு சற்று பதட்டம் ஏற்பட்டது. அவன் வீடு பற்றி எரியும் போது அங்கிருக்க வேண்டுமா என்று தோன்றியது. ‘சீக்கிரம் வந்துருவானாடா?’ என்றேன்.

     பாட்டிலை வைத்து அடியில் சுள்ளிக்குச்சிகளைப் போட்டு பற்றவைத்து விட்டான். ‘இருடா, உள்ளே போய் கொஞ்சம் சீமெண்ணெய் எடுத்துட்டு வந்துடர்றேன். இதைப் பார்த்துக்கோ’ என்றபடி உள்ளே போனான். அவர்கள் வீட்டின் குட்டி நாய் உள்ளே இருந்து துள்ளி வெளியே ஓடியது. எனக்கு அதன் சப்பை முகத்தைப் பார்த்துப் பரிதாபமாக இருந்தது. ஒரு நாள் இந்த நாயைப் பறக்க வைக்கிறேனென்று சொல்லி பெட்ரோலைக் குடிக்க வைத்து வாயை பற்ற வைக்கப் போகிறான்.

     பாட்டில் சூடேறி உள்ளேயிருந்து வினோதமாய் சத்தம் வர ஆரம்பித்தது. நான் ஒரு ஐந்தடி தள்ளி நின்று கொண்டு உள்ளே எட்டிப்பார்த்தேன். மாதேஸின் அண்ணன் கண்ணாடி முன் நின்று கோபால் பல்பொடியால் உதட்டுக்கு லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டிருந்தான். மெலிதான சிகரெட் வாசனை வீசிக்கொண்டிருந்தது.

     மாதேஸ் சீமெண்ணெய் பாட்டிலோடு வந்ததும் அவசரமாக, ‘டேய், அம்மா கோதுமை அரைச்சுட்டு வரச்சொல்லிருக்காங்கடா. நான் போகணும். நீ அவன் வந்ததும் எங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வாயேன்’ என்றேன்.

     ‘ஒரு பத்து நிமிஷம் இருடா. என் ஆராய்ச்சி முடிவைப் பாக்க வேணாமா’ என்றான். பாட்டில் டர்க்கென்று லேசாக விரிசல் விட்டது.

     ‘இல்ல, இல்ல வீட்ல அடி வுழும்’  என்றபடி வீட்டை விட்டு வேகமாக வெளியேறி கிட்டத்தட்ட ஓடினேன். ஒரு பத்து செகண்டு கழித்து ‘டப்’ என்று லட்சுமி வெடி சத்தம் போலக் கேட்டது.

     ஏழு மணிக்கு நன்கு இருண்டவுடன் மாதேஸ் நல்லசிவத்துடன் எங்கள் வீட்டுக்கு வந்தான். நான் குனிந்து அவன் முகத்தை ஆராய்ந்தேன். இருட்டில் சரியாகத் தெரியவில்லை. தெய்வமகன் சிவாஜி போல இருப்பானோ என்று பயமாக இருந்தது.

     ‘டேய், தனியா எங்கியாவது போய் பேசலாம்டா’ என்றான்.

     தெரு முனையிலிருக்கும் தண்ணீர்த் தொட்டியின் மேல் ஏறி மூன்று பேரும் அமரும் போது நல்ல சிவத்தின் கன்னத்தில் உள்ளங்கையளவு தீக்காயத்தைப் பார்த்தேன். வேகமாகத் திரும்பி மாதேஸைப் பார்த்தேன். ‘இவன் எப்ப உங்க வீட்டுக்கு வந்தான்?’

     ‘அவன் முகத்தைப் பார்த்தியா, அவங்க அண்ணன் தள்ளி விட்டு அடுப்பில போய் விழுந்துருக்காண்டா. அவங்க அண்ணன் அவனைத் தினம் அடி பின்னி எடுக்கறானாம். அவங்க அண்ணி சோறு போட மாட்டேங்குறாளாம்’ என்றான் மாதேஸ்.

     ‘ஆமாண்டா’ என்றான் நல்லசிவம். அவன் கண்களில் முட்டி நின்ற கண்ணீர் தெருவின் சோடியம் விளக்கில் பளபளத்தது. ‘ எங்க அண்ணனுக்கு நான் எப்படியாவது ஒழியணும்டா. காடு, தோட்டமெல்லாம் அவனே எடுத்துக்கணும்னு ஆசை. அண்ணி சோறு சமைச்சு எடுத்து பீரோல வைச்சுப் பூட்டிருறா. எனக்குப் பழைய சோறுதான் தினம்.’ என்றான்.

     ‘எங்க வீட்ல எல்லாருக்குமே பழைய சோறுதான் தினம்.’ என்றேன்.

     ‘நாலு நாள் சோறுடா. நாத்தத்தை சகிச்சிகிட்டு அதத்தான் சாப்புடணும்’

     நல்ல சிவத்துக்கு அப்பா, அம்மா இரண்டு பேருமே கிடையாது. செந்துறையில் நாலு ஏக்கர் நிலமும், சொந்தமாய் வீடும், பத்துப் பதினைந்து கறவை மாடுகளும் உண்டு. அவனுக்கு மூன்று வயதாக இருக்கும் போது அவன் அப்பா வயலுக்கு தண்ணீர் விட மோட்டார் போடுகையில் மின்சாரம் தாக்கிச் செத்துப் போனார். இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை அவன் அம்மாதான் நல்லசிவத்தை நல்ல பாம்பிடமிருந்து கோழிக்குஞ்சைக் காப்பதுபோல அவன் அண்ணனிடமிருந்து காப்பாற்றி வந்திருக்கிறாள். அம்மா காமாலை வந்து போனதிலிருந்து வீட்டில் அண்ணன் போக்கு மாறிவிட்டது. வேலைக்காரர்கள் கூட அவ்வளவு துன்புறுத்தப் பட்டதில்லை. சொத்து பாதியாகப் பிரிந்தால் தனக்கு நஷ்டம் என்பது அவன் அண்ணனின் கணக்கு. பக்கத்தில் புதிதாக உருவாகவிருந்த சிமெண்டு ஃபேக்டரிக்கு நிலத்தை விற்றால் இருபது லட்சம் தேறும் என்று மணியக்காரர் வந்து அண்ணனிடம் பேசி விட்டுப் போனதை நல்லசிவம் கேட்டிருக்கிறான். அன்றிலிருந்து கவனிப்பு இரட்டிப்பு ஆகியிருக்கிறது. தினம் குடித்து விட்டு வந்து மூலையிலே போட்டு ‘செத்து ஒழிடா’ என்று மிதிக்கிறான். பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாமல் நாளெல்லாம் காட்டு வேலை செய்யச் சொல்லி, இரவில் வீட்டுக்குள் படுக்க விடாமல் மீண்டும் தோட்டத்தைக் காவல் காக்க அனுப்புகிறான். எடுத்ததுகெல்லாம் அடி. நிமிர்ந்து பார்த்தால் மிதி‘ என் அம்மா இருந்திருந்தால் இப்படி ஆகியிருக்குமாடா? என்னால தாங்க முடியலடா. சோத்துல விஷம் வைச்சு என்னக் கொன்னுடுவாங்க போலருக்கு’ என்றான்.

     ‘உனக்கு சொந்தக்காரங்க யாரும் இல்லியா? மாமா, சித்தப்பா இந்த மாதிரி.’

     ‘இருக்காங்க. பிரயோஜனமில்ல. சொன்னா நம்ப மாட்டாங்க. எல்லாருக்கும் அண்ணனக் கண்டா பயம். அவன் ஊருக்குள்ள பெரிய ஆளுடா.’

     எங்கள் வீட்டின் வறுமைதான் உலகிலேயே மிகக் கொடுமையான விஷயம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். வசதி எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நல்ல சிவத்தைப் பார்த்துக் கஷ்டமாக இருந்தது.

     மாதேஸ் ‘போலீஸ்ல சொல்லிரலமா?’ என்றான்.

     இரண்டு பேரும் அமைதியாய் இருந்தோம். எங்கள் வரலாறு ஆசிரியரிடம் பேசுவதற்கே எங்களுக்கு டிரவுசருக்குள் தொடை நடுங்கும். போலீஸ் ஸ்டேஷன் இருக்கிற முக்கு திரும்பினாலே மாதேஸ் ஒண்ணுக்குப் போய் விடுவான். நல்ல வேளை, நான் தயாரிச்ச பாம் ஒண்ண உங்கண்ணன் வண்டியில வச்சிரலாமா என்று கேட்காமல் விட்டான்.

     ‘நான் இனி எங்க வீட்டுக்குப் போமாட்டேண்டா. சொத்தெல்லாம் அவனே அனுபவிக்கட்டும். நான் எங்கியாவது ஓடிப்போயிடரேண்டா’

     ‘அதுதாண்டா சரி. நீ மெட்ராசுக்கு ஓடிப்போயிரு’ என்றான் மாதேஸ்.


நல்ல சிவத்தின் பரந்த உடம்பையும், கரகரத்த குரலையும், புறங்கையில் தேன் நிறத்தில் படர்ந்திருக்கிற பூனை ரோமத்தையும் முதலில் காண்பவர்கள் அவன் அருகாமையில் இருப்பதற்குச் சற்று யோசிப்பார்கள். அப்படியும் மீறி அவனோடு பழக முயற்சித்தவர்களில் பலபேருக்கு கசப்பான அனுபவமே ஏற்பட்டிருக்கிறது. இரண்டு, மூன்று நாள் ஒன்றாக சுற்றித் திரிவார்கள். அப்புறம் திடீரென்று மதியச் சாப்பாட்டு இடைவேளையில் பள்ளி மைதானத்தில் அவனோடு கட்டிப் புரண்டு உருண்டு கொண்டிருப்பார்கள். நல்ல சிவம், மாதேஸ், நான் மூவரும்தான் ஆறாவதிலிருந்தே நண்பர்கள். அதற்காக கட்டிப் புரண்டு சண்டை போட்டதில்லை என்று பொருளல்ல.

என்னதான் முரடனென்றாலும் நல்ல சிவம் மனசு அவன் வீட்டிலிருந்து கொண்டு வருகிற எருமைத் தயிர் மாதிரி அத்தனை வெள்ளை.  எங்கள் பள்ளிக்கூடத்தின் பின் சுவரில் ஒரு ஆள் குனிந்து நுழையுமளவுக்கு ஒரு ஓட்டை உண்டு. ஆசிரியர்கள் விடுமுறையிலிருக்கும் நாட்களில் வகுப்பிலிருந்து நழுவி அந்த ஓட்டை வழியே நல்லசிவம் எங்களை வழி நடத்திச் செல்வான். அந்த ஓட்டை ஏற்படுத்தியதில் நல்லசிவத்துக்குப் பெரும்பங்கு உண்டு என்று பள்ளியில் ஒரு பேச்சு உண்டு.

மூன்று பேரும் வயல், தோட்டம் என்று ஆட்களில்லாத இடமாய்ப் பார்த்துத் திரிவோம். புளிய மரம், கொடுக்காப் புளி மரம், பனை மரம் எதுவாக இருந்தாலும், அரணாக் கயிற்றில் ட்ரவுசரை சுருட்டிவிட்டுக் கொண்டு விருவிருவென்று மேலேறி விடுவான். எங்கள் இருவருக்கும் நல்ல வேட்டைதான். வீட்டிலிருந்தும் பொரிமாவு உருண்டை, இலந்தை வடை, தூக்கிப்போசியில் இறுக மூடின கம்மங்கூழ் என்று வரிசையாக பைக்குள்ளிருந்து எடுத்துக் கொடுத்துக்கொண்டே இருப்பான். ஒருமுறை பைக்குள் எத்தனை நோட்டு வைத்திருக்கிறான் என்று பார்த்ததில் இரண்டுதான் இருந்தது. ஆனாலும் வாத்தியார்களிடமிருந்து எப்படியும் தப்பி விடுவான். அவன் பைக்குள்ளிருந்து அவர்களுக்கும் ஏதாவது கொடுக்கிறானா என்று எனக்குச் சந்தேகம் இருந்தது. எங்களுக்கு ஏதாவது கொடுத்துவிட்டு அவன் முகத்தில் தெரிகிற வெளிச்சத்தைப் பார்க்கவேண்டுமென்பதற்காகவே அவனிடமிருந்து ஏதாவது வாங்கிக் கொண்டே இருக்கலாமென்று இருக்கும். எங்களது டவுன் கூச்சத்தையும், தயக்கத்தையும் ஒப்பிடும் போது அவனது கிராமத்துச் சுறுசுறுப்பும், எதையும் அநாயசமாக எதிர் கொள்ளும் துணிச்சலும் புத்துணர்ச்சியூட்டுவதாக இருந்தது. ஒருமுறை வீட்டுப்பாடம் முடிக்காததற்காக தமிழய்யா என்னைப் பின்னி எடுத்துவிட்டார். நல்லசிவம் அவர் டிவிஎஸ் புகைக்குழாயில் மண்ணைப் போட்டுவிட்டான். நட்புதான் முதல் அவனுக்கு. படிப்பு இத்யாதி எல்லாம் அப்புறம்தான்.

நீண்ட நேரம் ஆலோசனைக்குப் பின் நாங்கள் இருவரும் சேர்ந்து நல்லசிவத்தை சென்னைக்கு அனுப்பி அவன் அண்ணனிடமிருந்து அவனது உயிரைக் காப்பாற்றுவது என்று முடிவு செய்தோம். அவனைச் சென்னைக்கு அனுப்ப ரயில் டிக்கெட்டுக்கு, ஏதாவது வேலை கிடைக்கும் வரை அங்கு செலவுக்கு என்று எவ்வளவு பணம் தேவைப்படும் என்று கணக்குப் போட்டோம். போன உடனே ஏதாவது டீக்கடையிலாவது சேர்ந்து விடுவேன் என்றான்.

‘எங்கடா தங்குவே?’ என்றேன்.

‘பிளாட்பாரத்துல படுத்துக்க வேண்டியதுதான். இங்க மட்டும் என்ன, தினம் காட்டுக்குள்ளதான் படுத்துக்கறேன்.

குறைஞ்சது அடி இல்லாமயாவது வாழ்க்கை ஓடுமில்ல’

போட்டிருக்கிற துணி தவிர மாற்றுத்துணி ஏதும் கிடையாது. நானும், மாதேஸும் எப்படியாவது எங்கள் பழைய துணிகளில் ஒன்றிரண்டை எடுத்து ஒரு மஞ்சள் பையில் போட்டுத் தந்துவிடலாம் என்று முடிவு செய்தோம். அடுத்த நாள் மதியம் மூன்று மணிக்கு ரயில் ஏறும் வரை அவனை என் வீட்டில் தங்க வைப்பதற்கு முடிவாயிற்று. அதுவரை நல்லசிவத்தின் அண்ணன் தேடாமல் இருப்பானா?

‘அவன் பம்பு வாங்க கோயம்புத்தூர் போயிருக்கான். விவரம் தெரிஞ்சு வரதுகுள்ள நான் கிளம்பிடறேன்’

திட்டம் ஒரு வடிவத்துக்கு வந்து செயல்படுத்துவதென்று முடிவாவதற்கு பத்தே முக்காலாகி விட்டது. எது நடந்தாலும் இந்த விஷயம் பற்றி வாய் திறப்பதில்லை என்று மூன்று பேரும் கை மேல் கையடித்துச் சத்தியம் செய்து கொண்டோம். மனசுக்குள் நட்புக்காகச் செய்யப்போகும் சாகசம் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. ‘நாளைக்குப் பரீட்சைக்குப் படிக்காம இவ்வளவு நேரம் என்னடா பேச்சு?’ என்றாள் அம்மா. அவளிடம் நல்லசிவம் கதையையும் எங்கள் திட்டத்தையும் அப்படியே சொன்னேன். ‘ஏதாவது வினையாயிடப் போயிடறதுடா’ என்றாள். ‘அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா.  நீ மட்டும் ஏதும் வாய் திறக்காதே’ என்றேன். அம்மா நான் சொன்னால் கேட்பாள். நான் காரணமில்லாமல் ஒரு காரியத்தில் இறங்க மாட்டேன் என்று அவளுக்குத் தெரியும். அப்பாவுக்கு நைட் ஷிஃப்ட். காலையில் வந்தாரென்றால் மதியம் சாப்பிடக்கூட எழுந்திருக்காமல் தூங்கிக் கொண்டிருப்பார்.

நல்ல சிவம் எங்கள் வீட்டில் படுத்துக்கொண்டான். மறுநாள் காலையும், மதியமும் எங்கள் வீட்டிலேயே சாப்பிட்டான். என் அம்மா சமையலையே ஒருவனால் இப்படி ருசித்துச் சாப்பிட முடியும் என்று அப்போதுதான் கண்டேன். இரண்டு மணிக்கெல்லாம் மாதேஸ் வந்து விட்டான். அவன் வீட்டில் இருந்து சுருட்டிக்கொண்டு வந்தது, வரலாறு புவியியல் கைடு வாங்குவதற்காக நான் வைத்திருந்த பணம் எல்லாம் சேர்த்து நூற்றியிருபது ரூபாய் வந்தது. மஞ்சள் பையோடு ரயில் நிலையத்தில் நல்லசிவம் நின்றிருந்தபோது அவன் கண்ணில் தேங்கி நின்றது ஆனந்தக் கண்ணீரா, பிரிவுத் துயரில் பொங்கிய கண்ணீரா என்று தெரியவில்லை.

‘கொஞ்ச நாளைக்கு இவுங்க அண்ணன் கண்ணில படாம இருக்கணும்’ என்றான் மாதேஸ்.

‘நான் ஒழிஞ்சேன்னு நிம்மதியா இருப்பான் அவன். என்னையெல்லாம் தேடி வர மாட்டான். கவலைப்படாதீங்கடா’

நல்லசிவம் போய் மூன்று நாள் கழித்து அவன் அண்ணன் அவனைத் தேடி வந்தே விட்டான். கடைக்குப் போய்விட்டுத் திரும்பி வருகிற வழியில் என்ஃபீல்டு மோட்டார் பைக்கில் தாட்டியாக ஒருத்தன் வந்தான். கிட்ட வந்து நின்று அவன் மூக்கைப் பார்த்ததும் இது நல்லசிவம் அண்ணன் என்று தெரிந்து விட்டது.

‘தம்பி, நீ நல்லா சினேகிதன்தானே, நல்லா இங்கே வந்தானா?’

‘இல்லீங்களே, நான் அவனப் பார்த்தே பதினைஞ்சு நாளைக்கு மேல் இருக்குமே. ஸ்கூலுக்குக் கூட அவன் வரதில்ல’

‘ஒரு வாரமா ஆளக்காணம். நாலு நாள் முன்னாடி இங்க வந்தான்னு உரக்கடைக்காரர் சொல்றார். அதான் இங்க வந்தேன். நீ அவன்லாம் ஒன்னாத்தானே சுத்திட்டு இருப்பீங்க. அவன் இங்க வரவே இல்லியா?

‘இல்லீங்க. நான் பரீட்சைக்குப் படிச்சுகிட்டு இருந்தேன். எனக்கு ஒன்னும் தெரியாது’ என்றேன். அவன் முறுக்கின மீசையும், சுருட்டி விடப்பட்ட சட்டைக்குப் பின்னால் புடைத்துத் தெரிந்த புஜங்களும் பார்த்தபோது கால்கள் மெலிதாக நடுங்க ஆரம்பித்தன.

‘உங்க குரூப்புல இன்னொருத்தன் இருப்பானே, அவன் வீடு எங்க சொல்லு’

சொல்லலாமா வேண்டாமா என்ற சந்தேகத்துடன் தான் சொன்னேன். மாதேஸ் எப்படியும் சமாளித்து விடுவான் என்ற நம்பிக்கை இருந்தது.

ஒரு வாரம் கழித்து ராஜ் மாஸ்டர் வகுப்பில் இருக்கும் போது பியூன் சண்முகம் வந்து தலைமையாசிரியர் என்னை அழைத்து வரச் சொன்னதாகச் சொன்னான். ராஜ் மாஸ்டர் கேட்ட கேள்விகளுக்கு பதில் தெரியாதவர்கள் வரிசையில் நானும் நின்று கொண்டிருந்தேன். ராஜ் மாஸ்டருக்கு ஏரோப்ளேன் மாஸ்டர் என்றொரு பெயர் உண்டு. பதில் தெரியாதவர்களை டேபிள் மேல் குப்புறப்படுக்க வைத்து ட்ரவுசரை முழங்கால் வரை இழுத்துவிட்டு விடுவார். எங்கள் பள்ளியில் எல்லாரும் பசங்கள் என்பதால் அது பற்றிக் கவலையில்லை. ஆனால் அவர் கொடுக்கிற அடிகளுக்கு பிருஷ்ட பாகம் சிவந்து பழுத்து கன்னிப் போய்விடும். மூன்று நாட்களுக்கு கால்களை அகட்டி, அகட்டிதான் நடக்க வேண்டும். அதிலிருந்து என்னைக் காப்பாற்றிய சண்முகத்தைப் பார்த்து நட்பாய்ப் புன்னகைத்தேன். சென்ற மாதம் லால்குடி தமிழ்சங்கம் நடத்திய பேச்சுப் போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது. இன்னும் கைக்கு வரவில்லை. அதைக் கொடுக்கத்தான் இப்போது ஹெட்மாஸ்டர் கூப்பிடுகிறாரோ? பிரேயரில் வைத்துக் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ராஜ் மாஸ்டர் என்னைப் பார்த்து விரோதமாய்ப் புன்னகைத்து, ‘போய்ட்டு வாங்க மாப்பிள்ளை, உங்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் காத்திட்டு இருக்கு’ என்றார்.

தலைமையாசிரியர் அறை ரொம்பச் சின்னது. வெளியிலிருந்து பார்த்தபோது அவருக்கு முதுகுகாட்டி நின்றிருந்தவனைப் பார்த்துத் திடுக்கிட்டேன். மாதேஸ். நான் எதற்கு அழைக்கப்பட்டேன் என்று புரிந்துவிட்டது. அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தேன். உள்ளே நுழைந்ததும் முன்னேறாமல் அப்படியே நின்று விட்டேன். ஓரத்தில் உட்கார்ந்திருந்தது நல்லசிவத்தின் அண்ணன். அவனுக்குப் பக்கத்தில் அழுக்குப் படிந்து போய், பரட்டைத் தலையுடன் நின்று கொண்டிருந்தது நல்லசிவம்.

‘ஆக ரெண்டு பெரிய மனுஷங்களும் ஒத்தாசை பண்ணி சாரை மெட்ராஸ் அனுப்பிச்சி வச்சிட்டீங்க. எதுக்கு? ஐயா பெரிய சினிமா நடிகன் ஆகணும்னு சொன்னாரா?’

‘சார், சத்தியமா நாங்க எதும் பண்ணல சார். நாங்க அவனப் பாத்தே ரொம்ப நாளாச்சு சார். இல்ல மாதேஸ்?’ என்றேன்.

‘நீங்க ஒண்ணும் விளக்கம் சொல்ல வேண்டாம். எல்லாம் நல்லசிவம் சொல்லிட்டான். பரதேசிப்பசங்களா, ரெண்டுபேருக்கும் டீசி கிழிக்கறேன் இரு’ என்றார் தலைமையாசிரியர். நல்ல சிவம் பக்கம் திரும்பி, ‘சொல்லுடா, இவனுங்கதான உனக்கு ஓடிப்போற ஐடியா கொடுத்து அனுப்பிச்சு வச்சது?’

நல்ல சிவம் தலையாட்டியதைப் பார்த்தபோது ஆமாம் என்கிற அர்த்தம் கொடுக்கிற மாதிரிதான் இருந்தது.

‘சார், சார், சார், வேணாம் சார், ஒன்னும் பண்ணிடாதீங்க சார்’ என்று இரண்டு பேரும் ஒரே நேரத்தில் குமுறிக்கொண்டு அழ ஆரம்பித்தோம்.

     ‘உங்களைப் போலீசுல புடிச்சுக் குடுக்காம உட்டேனேன்னு சந்தோஷப்படுங்க, ஏங்க முத்து, நீங்க உங்க தம்பியக் கூட்டிட்டுப் போய் புத்தி சொல்லுங்க. நான் இவனுங்களப் பாத்துக்கறேன்’ என்றார்.

     நல்லசிவத்தின் அண்ணன் எங்களைப் பார்த்து, ‘ஃப்ரண்ட்ஸுன்னா நல்லவிஷயங்கள்ல கூடிக்கணும். அவன் வாழ்க்கையையே கெடுக்கப்பார்த்தீங்களேடா.’ என்று விட்டு ‘மெட்ராசுல சட்டையில்லாம ஓட்டை டவுசரோட ஓட்டல்ல டேபிள் துடச்சிட்டிருக்கிறான் சார் என் தம்பி’ என்றான் அவர் பக்கம் திரும்பி. ‘இனி இவனுங்களோட உன்னைப் பார்த்தேன் வெட்டிப் புதைச்சுடுவேன்’ என்றான் தம்பியைப் பார்த்து.

     நல்லசிவம் எங்களைப் பார்த்தான். அவன் முகத்தில் தெரிந்த உணர்ச்சியை என்னவென்று கணிக்க முடியவில்லை. அவன் அண்ணன் நல்லசிவத்தின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு விறுவிறுவென்று வெளியேறி விட்டான்.

டீசி கொடுக்கவில்லை. ஆனால் இரண்டு பேர் வீட்டிலும் கூப்பிட்டுக் கடுமையாக எச்சரித்தார்கள். ஏரோப்ளேன் மாஸ்டரிடம் ரெண்டுபேரையும் கொண்டு விட்டார்கள். மூன்று மாதம் கழித்து நல்லசிவம் மீண்டும் பள்ளிக்கு வர ஆரம்பித்து விட்டான். நானும் மாதேஸும் அவனை விரோதமாய்ப் பார்த்துக் கொண்டு விலகி இருந்தோம். மதிய உணவு இடைவேளைகளில் மைதானத்தில் பார்க்கும்போது நட்பைப் புதுப்பித்துக் கொள்ளும் முயற்சியில் எங்களைப் பார்த்துப் புன்னகைப்பான். கடைசி வரை அவனை மன்னிக்கவே முடியவில்லை என்னால். பத்தாவது முடித்ததும் மேல்நிலைப் படிப்புக்கு ஆளாளுக்கு ஒரு பக்கம் போய்விட்டோம். நல்லசிவம் பத்தாவதுக்கு மேல் படித்தானா என்று தெரியவில்லை. இப்போது அவனை நினைத்துப் பார்க்கும்போது உயிரோடு இருக்கிறானா என்றுகூட சந்தேகமாக இருக்கிறது.

நன்றி உயிரோசை இணைய வார இதழ்


19 ஜனவரி, 2018

அதுதான் நீ

என்னைத் தவிர யாரால் இயலும்?
இவ்வாழியில் நீந்திக் களிக்க
கற்பனைகளால் என்னைப் புனைந்து கொள்ள
எல்லாவற்றிற்கும் மேலெழும்ப முயன்றபடி இருக்க
அறியா நிலங்களைத் தொடும் துணிச்சல் கொண்டிருக்க
இம்முயற்சியில் என்னையே கிழித்துக் கொள்ள
யாரால் இயலும் என்னைத் தவிர?

நானே ஆழியென்று அறிவார்ந்த அலையொன்று 
இயம்பும் வரைக்கும்.

5 ஏப்ரல், 2015

கவிஞர் தேவதேவனுக்கு ஒரு கடிதம்

அன்புள்ள கவிஞருக்கு,
இன்றைக்குப் பூராவும் உங்கள் கவிதைளையே வாசித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் எங்கோ உச்சத்தில் இருக்கிறீர்கள். உங்களைத் தொட உங்கள் கவிதைகளின் வாயிலாகவே முயற்சிக்கிறேன்.
சில கவிதைகள் சட்டென்று நேரடியான அனுபவத்தைத் தந்து உவகை கொள்ள வைக்கின்றன. சில கவிதைகளில் உங்களோடு பயணிக்கத் துவங்கி நீங்கள் உச்சத்தை அடையும் போது என்னால் அங்கு வர இயலாது போய் விடுகிறது. இதன் காரணம் என் மொழியின் பற்றாக்குறையோ, கவிமனதைப் புரியாதிருப்பதோ அன்று. உங்களது ஆன்மீகத் தளத்தை நான் இன்னும் தொட இயலாதிருப்பதே காரணம் என்று புரிந்து கொள்கிறேன்.
ஒவ்வொரு கவிதையையும் இருமுறை வாசித்தேன். வாய் விட்டு சொல் சொல்லாக இன்னொரு முறை. ஒவ்வொரு முறை கவிதையை வாசித்து முடிக்கும் போதும் மனம் அமைதியான புன்முறுவலுடன் உவகை கொள்கிறது. கவிதை தரும் சித்திரங்கள் மனதில் நிலைத்து அதை ஒரு படி மேலுயர்த்துகின்றன.
ரயில் பெட்டியில் ஒரு கன்னிகாஸ்திரி என்ற கவிதையை நினைத்துக் கொள்கிறேன்.
வண்டி புறப்படவும்
தனியே விட்டுவிட்டு
மகிழ்ச்சியுடனே
விடைபெற்றுச் சென்றனர் தோழிகள்
என்ற துவக்க வரிகள் ரயில் பெட்டியில் நிகழும் அந்தத் தற்காலிகத் தனிமையையும் மௌனத்தையும் குறிக்கிறது. இந்த மௌனத்தை இட்டு நிரப்ப ஆயிரம் கவிதைகள் எழுதப்படலாம். கன்னிகாஸ்திரீயின் உள்ளக்குமுறல்களை வார்த்தைகளில் வடிக்கலாம். அவள் வரித்துக் கொண்ட வாழ்க்கை அவளுக்கு அளிக்க மறுத்த காமம் குறித்துப் பேசலாம். அவளது வறண்ட வாழ்க்கை குறித்து விவாதிக்கலாம்.
ஆனால் நீங்கள் ஒளியைக் குறித்துப் பேசுகிறீர்கள். அவள் உள்ளத்தில் உறையும் இறையைப் பாடுகிறீர்கள். ஆயிரம் ஆண்டுகாலத் தமிழ்க்கவிதை மரபின் தொடர்ச்சியாக நின்று அவளது ஆன்மாவின் ராகத்தை இசைக்கிறீர்கள்.
மேனியெங்கும்                          
மணப்பெண் போலொரு நாணத்தின் நறுமணம்
என்ற வரிகளில் கட்டுண்டு கிடந்தேன்.
சிலுவை மிளிரும் வெள்ளுடையையும்
தொண்டிதயம் ஒளிரும் என் கன்னிமையையும்
நேசருடன் ஒப்படைத்தேன் என்கிறாள்.
புகைவண்டி ஓடத்துவங்கிய பின் பாடும் இரும்பு ராகத்திலும். இயற்கைக் காட்சிகளிலும், சகபயணிகளின் மத்தியிலும் அவள் நேசருடன் கலந்திருப்பதாக எண்ணுகையில் பாடரும் பொருளில் அன்பைப்போல் மற்றொன்று பெண்மையன்றி வேறென்ன? என்று நீங்கள் விடுத்த வினா நினைவுக்கு வந்தது.
இக்கவிதையை என் மனைவிக்கு வாசித்துக் காட்டியபோது வியந்து முகத்தில் குறி காட்டினாள். அவள் இலக்கிய வாசகி அல்லள். ஆனாலும் அவள் இதயத்தை நேரடியாய் தொட்டது இக்கவிதை.
இன்னார் என்ற கவிதை எதனோடும் தன்னை தொடர்புபடுத்திக் கொள்ளாதவனிடத்து மட்டுமே அன்பு சுரக்கும் என்கிறது. ஞானியின் பெருமையைப் பாடுகிறது. ஆண் பெண் கவிதை முலைதாங்கி பெண் என நாமம் ஏற்றுச் செல்லும் ஒரு முனையும்,தனித்துத் தவம் புரியும் மற்றொரு முனை குறித்தும் பேசுகிறது. சீட்டாட்டம் என்பது ஆடுபவர்களை ஆறு இதழ்கள் கொண்ட மலராகச் உருவகிக்கும் ஒரு சித்திரம். நக்ஷத்ர மீனும் ஒரு சித்திரத்தை அளித்து அதிர்வை ஏற்படுத்தும் கவிதையே. இன்னும் தொடுதல், மரத்தின் வீடு, குடும்பம், சந்திப்பு, உள்ளும் புறமுமாய்ச் சில படிமங்கள், தவவெளி மணமாயிற்று, வேலிப்பூக்கள், அசைவமும், சைவப்பெருமைகளும், தீ, உதயம், கவனிப்பாரற்றவை என்று உங்கள் வலைத்தளத்தின் ஒரு பக்கத்திலிருந்த கவிதைகளே என்னை ஆட்கொண்டன இன்று. ஒவ்வொரு கவிதையும் தரும் அனுபவம் புதுமையானதாகவும், உற்சாகமானதாகவும், அன்பின் வழியது உயிர்நிலை என்பதை வலியுறுத்தும் வண்ணமும் உள்ளது. இதோ எனக்கான கவியை அடைந்து விட்டேன் என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறேன்.
ஓர் ஆத்ம குருவின் பாதம் பணியும் சீடனைப்போல் உணர்கிறேன். இத்தனை அன்பைப்பொழியும் பெருங்கருணையால் நிரம்பி இருக்கும் மகாகவிக்கு என் வணக்கங்கள்.
உங்களுக்காக விஷ்ணுபுரம் எடுத்த விழாவில் உங்களைச் சந்தித்தேன். உங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். உம் கவிதைத் தொகுதிகளில் கையெழுத்து வாங்கினேன். அவற்றில் சில கவிதைகளை வாசிக்க முயன்று தோற்றேன். ஜெ உம் கவிதைளுக்கு எழுதிய விமர்சனக் கட்டுரைகள் பேருதவியாய் இருந்தன. உமது சில கவிதைகளை வாசித்த பின்னர் உங்களோடு நெருக்கமாய் உணர்கிறேன். அருகாமையில், தங்கள் அடி நிழலில்தான்.ஆட்சி பீடத்தில் அல்ல.
பேரன்பின் பிரவாகம் உங்கள் வலைத்தளமெங்கும் வழிந்து கிடக்கிறது. இனி அதில் திளைத்து ஈடேறுவேன். மேன்மையுறுவேன்.

மேலும் வாசிக்க