11 ஏப்ரல், 2026

துருவேறிய சிறகு

 

சு. வெங்கட்டின் நீல வியாபகம் சிறுகதை குறித்து

அன்புள்ள வெங்கட்,

நீலவியாபகம் கதை அகிலாண்டம் பிளாட்பாரத்தில் உருண்டு நிற்கும் ஒரு கொய்யாப்பழத்த்தை எடுத்து உண்ணலாமா என்று யோசிப்பதில் துவங்குகிறது. உணவு கதை நெடுக அவரைத் தொடர்ந்தபடியே இருக்கிறது. பாரதியும், நாஞ்சில் நாடனும், ஜெயமோகனும் தங்கள் கலையில் நிகழ்த்திக்காட்டிய ஒரு அறச்சீற்றம்: உணவுண்ணல் என்பது ஒவ்வொரு உயிரின் அடிப்படை உரிமை. அதை எவரும் மறுக்கலாகாது. அதை நீங்களும் உங்கள் கதையில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறீர்கள். மற்ற படைப்பாளிகளைப் போலன்று, மிக மவுனமான சொல்லல் மூலம், மிக நேர்த்தியான சித்திரங்களைத் தீட்டுவதன் மூலம் வாசகனிடம் அந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள். உணவு நிமித்தம் ஓர் உயிரை இழிவு செய்தல் தகுமா? இதைத்தான் நான் இந்தக் கதையிலிருந்து புரிந்து கொண்டேன். இந்தப் புரிதல் தவறாகக் கூட இருக்கலாம்.

மிகச் சிறந்த கதைகளை மட்டுமே எழுதுவேன் என்று கங்கணம் கட்டியிருக்கிறீர்கள் போல. உங்கள் வசீகரமான மொழி கதையின் ஓட்டத்தின் மீது ஒரு கனத்த போர்வையை போல வியாபித்து அதன் நடையை மென்மையாக்கி விடுகிறது. பெரும்பாலும் விவரணைகளாலும், சொல்லிச் செல்லுதலாலும் நகரும் கதை. பாத்திரங்கள் ஒன்றிரண்டு வரிகளே உரையாடிக் கொள்கின்றன. அதிலும் சில இந்திச் சொற்கள். கதை சொல்ல வரும் விஷயத்துக்கு இந்த மாதிரியான கூறுமுறை மிகப்பொருத்தம்.

அகிலாண்டத்தோடு அவனது வாழ்க்கையின் முன்னும், நிகழ்காலத்துக்கும் மாறிமாறிப் பயணிக்கிறோம். சராசரி வாழ்க்கைக்குச் சரிப்பட்டு வராதவர் அவர். அதே நேரம் இந்த உலகம் போஷித்துக் காக்க வேண்டிய மேதையும் அல்லர். சுருக்கமாகச் சொன்னால் சோம்பித் திரியும் சோம்பேறி. சோறு உண்டு விட்டு மனம் போனபோக்கில் திரிபவர். குடும்பத்தைக் கண்டுகொள்ளாதவர். அதனாலேயே மனைவி, மகனிடம் ஏச்சும் பேச்சும் வாங்குபவர். இவர் மாதிரியான மனிதரை உங்களது இலக்கியம் மையக் கதாபாத்திரமாக்கியிருக்கிறது. சொல்லப்போனால் சமுதாயத்தால் கைவிடப்பட்டவர்களின் கடைசிப்புகலிடம்தானே இலக்கியம்?

சில சொற்றொடர்கள் சட்டென்று வாசிப்பை நிறுத்தி யோசிக்க வைத்தன; மெல்லிய புன்னகையை வரவழைத்தன.

புதர்களுக்குப் பின்னால் முக்காடிட்டு வாய்மூடி நின்ற பெண்கள் வெறுப்பாய் ரயிலையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

என்பது ஒரு உதாரணம். இந்த வாக்கியத்தின் வலி கொஞ்சம் நிறுத்தி யோசித்தால்தான் உறைக்கும். ஒரு கலைஞனால் மட்டுமே எழுதக்கூடிய வரி.

எங்கிருந்தோ வந்து ரயிலுடன் சேர்ந்துகொண்ட சாலையில் பேருந்து ஒன்று சிறு துள்ளலுடன் சென்றுகொண்டிருந்தது. இரண்டிலும் பயணிப்பவர்களில் சிலர் இனி எப்பொழுதும் நிகழாத சந்திப்பை ஒருவருக்கொருவர் நிகழ்த்திக்கொண்டனர்.

என்று இன்னொரு கவித்துவமான இடம். திருச்செந்தாழையை நினைவுபடுத்தும் எழுத்து. அவரை வாழும் தமிழ் விழாவில் சந்தித்தேன். ஒரு அரைநாள் அவரோடு நியூயார்க் தெருக்களில் உரையாடிபடியே சுற்றினோம். எழுத்தாளனாக அறிந்திருந்த அவர் நண்பராகப் பரிச்சயமாகி பிரிகையில் ஒரு சகோதரனைப் போலாகி விட்டார். இத்தனைக்கும் நாங்கள் அவர் எழுதிய கதையைப் பற்றிக்கூடப் பேசவில்லை.

இவர்களை இனி தன்னால் கரை சேர்க்க முடியாதென்றெண்ணி அங்கம்மா பகடைகளைத் தூரப்போட்டாள்.

என்று இன்னொரு இடத்தில் எழுதுகிறீர்கள்

எழுத்தாளன் என்பவன் ஒரு பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக எழுதுபவனல்ல. அவன் ஒரு குறிப்பிட்ட பிரச்னையைச் சரியான சூழ்நிலையில் வைத்து சித்தரித்து அதன் மகத்துவத்தை உணரச் செய்வதுதான் அவன் வேலை என்று பொருள்படும்படி இந்த வாழும் தமிழ் விழாவில் பேசிக்கொண்டிருக்கும்போது விவேக் ஆங்கிலத்தில் ஒரு வாக்கியத்தைக் கூறினார். இந்தக் கதையின் பெரும்பாலான பகுதிகளில் நீங்கள் அந்தச் சித்திரத்தை துல்லியமாக வரைந்து காட்டியபடியே செல்கிறீர்கள். என் சிறுகதைத் தொகுப்புக்கு நான் எழுதிய முன்னுரைக்கு “புனைவெனும் அறாக்கனவு” என்று தலைப்பிட்டிருந்தேன். புனைவு என்பது ஒரு துல்லியமான, அறாத கனவுதான். அது துல்லியமாகவும், அறாத்தன்மையோடும் இருப்பதற்காக மெனக்கெட வேண்டியதுதான் கதைசொல்லியின் வேலை. அந்த வேலையை மிகத்திறம்படச் செய்திருக்கிறீர்கள். 

தான் கட்டியிருந்த வேட்டியின் நுனியில் அவர் பதித்துச் சென்ற செருப்பின் அடையாளத்தைத் தட்டிக் கொண்டே எழுந்து வெளியே எட்டிப் பார்த்தார்.

நிலவில் ஒளிரும் தார்ச் சாலையெனத் தூரத்திலிருந்த தொழுவத்தில் மினுக்கும் கரிய உடலுடன் எருமைகள் வரிசையாக அமர்ந்திருந்தன. எருமைகளின்  எண்ணிக்கையை அகிலாண்டம் அவ்விருட்டில் மனதுக்குள் கணிக்க முயன்றார். ஓரிடத்தில் திரள்வதும் சட்டெனக் கலைவதுமாய் இருள் அவரை குழப்பியதில் எண்ணிக்கை ஒன்றுபோல இல்லை.

குடிசைக்குள் மண் சுவர்கள் சிவந்து அனலில் நகர்வது போல இருந்தது.

எளிமையாகச் சொன்னால் உங்கள் கேமரா மிக ஷார்ப்பாக வேலை செய்திருக்கிறது.

இந்த அகிலாண்டத்தை எப்படிப் புரிந்து கொள்வது? அவர் ஏன் இப்படி இருக்கிறார்? 

“அங்க தான் அந்தோ கிழக்கு பக்கம் ரெண்டு நட்சத்திரம் பக்கத்து பக்கத்துல இருக்கு பாருங்க அது எங்கிருந்தோ வந்திருந்தது. அப்புறம் எங்க போனாலும் ஜோடியா தான் வருதுங்க”

“அப்படி இருக்கிறது கூட நல்லாத்தான் இருக்கு டா. எதுக்கும் கவலைப்படாம, யோசிக்காம அப்படியே போய்கிட்டே இருக்கிறது. எனக்கும் அப்படியெல்லாம் எல்லாரையும் ஒருநாள் பார்க்கணும்னு ஆசை இருக்குடா”, என்று சொல்லிப் பெரு மூச்சு விட்டுக்கொண்டே கீழே அமர்ந்திருந்த அந்தக் கைதியைப் பார்த்தார்.

அவர் ஓர் எளிய உயிர். ஒரு சிறுமியுடன் இணைந்து சட்டென்று குழந்தையாக மாறி, மரத்தின் கிளைகளில் பறவைகள் கட்டிய கூடுகளை ஆராய முடியும். அவர் வெறுமனே “இரு”க்கிறார். இது ஒரு ஞானியின் நிலை. ஆனால் அகிலாண்டத்துக்கு உதவாக்கரை பட்டம் மட்டும்தான். 

அப்புறம் கதையில் கொஞ்சம் டிடாக்டிக் தன்மை எட்டிப்பார்க்கிறது. இது குறையென்று இல்லை. இது இதுதான் என்ற போதம் இருந்தால் அதையும் கையாளலாம்; நான் அப்பகுதியையும் ரசித்தேன். 

ஒவ்வொரு வீட்டிலும் சிறிதும் பெரிதுமாகத் துருப்பிடித்த ஏதோ ஒன்று இருக்கிறது. ஒரு காரணத்திற்காகச் செய்யப்பட்டு உலகத்திற்கு வரும் அது, ஒளி இழந்து வேறொன்றாக மாறிவிடுகிறது. புதியதாக இருக்கும்போது அதற்குத் தான் எத்தனை மதிப்பு. மிகக் கவனமாக எடுப்பதும், கையாள்வதும் என அதன் மீது எத்தனை அக்கறை. ஏதோ ஒரு கட்டத்தில் உதாசீனப்படுத்தப்பட்டு வீட்டிற்குள் ஒரு மூலையில் நிறுத்திவிட, மெல்ல அதற்குள் வேறு ஒன்று குடிகொண்டு அரித்துவிடுகிறது. ஒரு சிலவற்றைத் துரு நீக்கிச் சரி செய்துவிடலாம். சிலவற்றை தீயிலிட்டே வேறொன்றாக்க முடியும். அது ஒரு சுழற்சி போல. அழிவே இல்லாமல் ஒன்று மற்றொன்றாக மாறிக்கொண்டேயிருக்கிறது என்று நினைத்துக்கொண்டான்.

திருப்புறம்பியம், திருப்பனந்தாள், திருவிடைமருதூர் என்று ஊர்பெயர்கள் ஒவ்வொன்றும் ஒரு மெல்லிய காலமயக்கத்தை அளிக்கின்றன. ஏதோ காலத்தின் பின்சென்று புராதன கிராமங்களின் பெயர்களைக் கேட்பதைப் போல. ஆனால் இவை இன்றும் இருக்கும், இயங்கும் ஊர்கள். அகிலாண்டத்தைப் போலவே அவையும் ஒரு எழுத்தாளன் கைபட்டுத்தான் தங்கள் இருப்பை நிரூபிக்க வேண்டியுள்ளது.

கதையின் இறுதிப்பகுதியை சற்றே வேகமாகச் சொல்லிச் சென்றதுபோலிருந்தது. துருப்பிடித்த சிறகு துருவேறிய இரும்பில் விழுந்து பறவையின் சிறகொடிந்த ஒலியை எழுப்புவது அபாரமான கற்பனை, படிமம்.

வாழ்த்துக்கள் வெங்கட்.








12 ஜனவரி, 2026

நுண்பொருள் காண்பது அறிவு


நுண்பொருள் காண்பது அறிவு

அத்வைதம்: அகவிடுதலைக்கான பயணம் என்ற தலைப்பில் நான் எழுதி வரும் வேதாந்தம் குறித்த தொடரின் மூன்றாவது பகுதி சொல்வனம் இதழில் வெளியாகியுள்ளது. எந்த ஒரு அறிவையும் ஓர் அறிவைக் கொடுக்கும் கருவியால் மட்டுமே அறிய இயலும். அறிபவனாகவே இருக்கும் என்னை எந்தக் கருவியால் அறிந்து கொள்ள இயலும்? இப்பகுதியில் அறிவைக் கொடுக்கும் கருவிகளான பிரமாணங்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. பிரமாணங்கள் ஆறுவகை. அத்தனைப் பிரமாணங்களையும் பகுதி மூன்று மற்றும் நான்கில் விளக்கப்படும்.

6 ஜனவரி, 2026

செயற்பாலது ஓரும் அறன்

 அத்வைதம்: அகவிடுதலைக்கான பயணம் என்ற தலைப்பில் சொல்வனம் இதழில் நான் எழுதி வரும் வேதாந்தக் கட்டுரைத் தொடரின் இரண்டாம் பகுதி வெளியாகியுள்ளது. எதற்காக ஒருவர் அத்வைத தத்துவத்தைக் கற்க வேண்டும் என்ற கேள்விக்கான விடையாக இந்தப் பகுதி அமைந்துள்ளது.




26 டிசம்பர், 2025

“வானப்ரஸ்தம்” சொல்வனம்- புனைவு வனம் நிகழ்வில்

 



என்னுடைய சிறுகதை “வானப்ரஸ்தம்” குறித்து நண்பர்கள் பாலாஜி ராஜூவும், விவேக்கும் சொல்வனம்- புனைவு வனம் நிகழ்வில் கருத்துரையாடினார்கள். நானும் கலந்து கொண்டு என் கருத்துக்களையும், அவர்களது கேள்விகளுக்கான பதில்களையும் அளித்தேன். பாலாஜி ராஜூ நிறைய கவிதைகளையும், அண்மைக்காலமாக சிறுகதைகளையும் எழுதி வருகிறார். விவேக் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சிறுகதைகள் எழுதி வருகிறார். அமெரிக்க இதழ்களில் அவரது கதைகள் வெளியாகி இருக்கின்றன. மேலைத்தத்துவத்திலும், மேலை இசையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டு கற்று வருபவர். அது குறித்து அவர் எழுதும் கட்டுரைகள் ஆழமானவை. இருவரும் கலந்து கொண்டு என் கதை குறித்து அலசியது எனக்கு மகிழ்ச்சி. அவர்களுக்கு நன்றி. நிகழ்வை ஏற்பாடு செய்த பாஸ்டன் பாலா, நிர்மல் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.


20 டிசம்பர், 2025

பாலாஜிராஜூவின் “எழுகை”

 பாலாஜிராஜூவின் “எழுகை”





அன்புள்ள பாலாஜி,

எழுகை கதை கொடுத்த அனுபவம் அலாதியானது. கிறிஸ்துமஸ் காலமும், பனியும் நம்மைச் சூழ்ந்து கொள்கின்றன. சாண்டாவை விற்கும் அந்த மர்ம மனிதரும், கதை சொல்லியும் சந்திக்கும் புள்ளி கவித்துவமானது மட்டுமல்ல, குறியீட்டுத் தன்மை கொண்டதும் கூட. முதலில் ஒரு சிறுகதையாக இது மிகுந்த அழகுணர்ச்சியுடனும், கவித்துவத்துடன், மாசு மருவின்றி எழுதப்பட்டிருக்கிறது என்பதைச் சொல்லி விடுகிறேன். கதை சொல்லியின் மனதில் இருக்கும் அந்தச் சிறிய பிரச்னை “எட்டு வயது லிவோனா இன்னமும் சாண்டாவை நம்புகிறாள்” என்பது. ஆனால் அவனது உண்மையான பிரச்னையாக நான் பார்ப்பது “சிறு வயதில் கிறிஸ்துமஸ் தினத்தையும் எனக்கு வரும் பரிசுகளையும் எதிர்பார்த்துக் காத்துக்கிடந்த நாட்கள், கடந்த கால நினைவுகளாகக் கூட என்னில் எழுவதில்லை” என்பதுதான். இதுதான் இந்தக் கதையின் அடி நாதம். பிரச்னை லிவோனாவுடையது அல்ல, கதை சொல்லியுடையது. வளர்ந்து முதிர்ந்தபின்னர் சிறு குழந்தையின் உற்சாகமான, சிலிர்ப்பூட்டும் இதயத்தை மீட்டெடுப்பது எவ்வாறு என்பதுதான் கதையின் கேள்வி. அந்தக் கேள்விக்கான விடையாக, சற்றே அந்தப்பக்கம் எட்டிப்பார்க்கும் வாய்ப்பு கதை சொல்லிக்குக் கிடைத்திருக்கிறது.

“இது நம்பிக்கை சார்ந்த சம்பிரதாயம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறாய். நாம் இருவரும் நம்முடைய பால்ய காலத்துக்கு திரும்புவதற்கான அழகிய வாய்ப்பு இது. இந்த மாபெரும் நாடகத்தில் நாம் பங்கெடுத்து நடிப்பதில் பெரும் உவகையிருக்கிறது, நம்மை மறந்து ஒன்றில் ஈடுபடுவதன் மாயம் இருக்கிறது. அது ஏன் உனக்குப் புரிவதில்லை?” என்ற எமிலியின் கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை 

இதற்கான வாய்ப்புகள் நம்முன்னே எப்போதுமே இருந்து கொண்டுதான் இருக்கின்றன. நாம் அதைக் கண்டுகொள்ளும் அளவுக்கு விழிப்புடன் இருக்கிறோமா என்பதுதான் கேள்வி. இக்கதை எமிலி மூலமாக கேட்கும் கேள்விகள் மிக அழுத்தமானவை. நடுவயது தாண்டிய அனைவரும், குறிப்பாக தீவிர இலக்கியம் வாசித்து மண்டை சூடேறிப்போன அறிவுஜீவிகள் (என்று நினைத்துக் கொள்கிற) நாமெல்லாரும் நம்மையே கேட்டுக் கொள்கிற கேள்விகள். இதோ, சாளரத்துக்கு வெளியே அந்த மாயம் எப்போதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. எட்டிப்பார்க்கும் அளவுக்கு நமக்கு இதயமும் நேரமும் இருக்கிறதா என்பதுதான் கேள்வி.

சிறுகதையின் வடிவம் என்பது எப்போதுமே கவிதைக்கும், புனைவுக்கும் நடுவில் ஊசலாடிக் கொண்டிருப்பது. நான் எழுத முயற்சிக்கும் கதைகளில் புனைவு அதிகமாகவும், கவித்துவம் கிட்டத்தட்ட இல்லாமலும்தான் இருக்கிறது. உங்கள் கதைகளில் கவிதைகளே சிறுகதைகளாக மாறிவிடுகின்றன. இதைப் பாராட்டாகத்தான் சொல்கிறேன். குறிப்பாக இந்தக் கதை, கிட்டத்தட்ட ஒரு நீள்கவிதை என்றே சொல்லி விடலாம். இதை நீங்கள் முதலில் கவிதையாக எழுதிப் பார்த்திருக்க வாய்ப்பிருக்கிறது. கதை வடிவில் இது மிளிர்கிறது என்றே சொல்ல வேண்டும்.

மிகுந்த கவனத்துடன் சொற்களைப் பொறுக்கியெடுத்து கதையை எழுதியிருக்கிறீர்கள். உங்களது தமிழ்ச் சொற்கள் வாசிக்க சுகமான அனுபவமாக இருந்தது. வரைமான்கள், உப்புப்பரல்கள், (அந்த பொதியுந்து) என்று அழகான சொற்கள் கதை நெடுக விரவி கதை மீது ஒரு விதமான அடர்ந்த அமைதியைப் போர்த்துகின்றன. துருவேறிய தகரத்தைக் கீறியது போன்ற குரல் என்ற உவமை நன்றாக இருந்தது.  பனியில் உறங்கும் நகரின் வர்ணனை, நிதானமாக நிகழ்வுகளை விவரித்துக் கொண்டே செல்லுதல் என்று புனைவெழுத்தில் உங்களுடைய வீச்சைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் எழுத்தில் உள்ள நிதானத்துக்குக் காரணம் “எனக்குச் சொல்ல ஒரு கதையிருக்கிறது” என்ற உங்கள் உறுதியும், உங்கள் கதை சொல்லும் திறன் மீது உங்களுக்குள்ள நம்பிக்கையும்தான் என்று தோன்றுகிறது. மிக அழகான ஒரு கதையைக் கொடுத்ததற்கு நன்றியும், வாழ்த்துக்களும், பாலாஜி.

இக்கதை வாசித்ததும் எனக்கு இரு கதைகள் நினைவுக்கு வந்தன. ஒன்று நான் மொழிபெயர்த்த கதை. “குழந்தைப் பருவத்தில் பனிப்பொழிவு” என்று. இன்னொன்று செல்மா லாகர் லெவ் எழுதி க.நா.சு மொழிபெயர்த்த தேவமலர் என்ற நீண்ட கதை. இரண்டையும் பகிர்கிறேன். நேரமிருக்கும்போது வாசிக்கவும். கட்டாயமில்லை.

வணக்கம் ஜெகதீஷ்,

கதையை இத்தனை தீவிரமாக நீங்கள் வாசித்தது எனக்கு மிகவும் நிறைவையும், கொஞ்சம் மலைப்பையும் அளிக்கிறது. பெரிய மனதோடு பாராட்டுகிறீர்கள், கொஞ்சம் சங்கடத்தோடு அதையும் ஏற்றுக்கொள்கிறேன்.

என்னிடம் இந்த கதைக் கரு சில மாதங்களாகவே இருந்தது. கிறிஸ்துமஸ் தினம் குறித்து ஒரு கதை எழுதவேண்டும் என்ற உந்துதலும் நீண்ட நாட்களாகவே எனக்குள் இருந்தது. முதலில் எனக்கு தோன்றியது, ‘எல்லோரும் கொண்டாடும் பனி, அதை வேலையாகச் செய்பவனுக்கு எப்படிப் பொருள்படுகிறது?’ என்பதுதான். லிவோனா அவளுடைய அப்பாவிடம், “உலகிலேயே மிகச் சிறந்த வேலை உன்னுடையது அப்பா” என்று சொல்வதாக மனதில் வைத்திருந்தேன். ஆனால், ஆந்தப் புள்ளியிலிருந்து கதை வளரவில்லை.

பிறகு அதே கேள்வியை அவனுக்கான இன்னொரு கோணமாக மாற்றிக்கொண்டேன். ஒரு நாள் அதிக உறக்கமில்லாத இரவைக் கழித்துவிட்டு, காலையில் எப்படியவது இந்தக் கதையுடன் மோதிப் பார்க்கவேண்டும் என்று எழுதத் தொடங்கினேன். அந்த மர்ம மனிதர் எனக்குள் வந்தவுடன் கதை தானாக வளர்ந்தது. ஒன்றரை மணிநேரத்தில் மொத்தக் கதையையும் முடித்துவிட்டுதான் கீழே இறங்கினேன். நான் இதுவரை எழுதிய கதைகளில் விரைவாக எழுதி முடித்த ஒன்று.

கதை கவித்துவமாக இருப்பது ஒன்று, அதற்கு நீங்கள் அளித்த வாசகக் கோணமும் மிகவும் கவித்துவமானதுதான். மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள், நாம் பல அற்புதங்களைத் தவற விடுகிறோம். கதை எழுப்பிய கேள்வி எமிலி அவனிடம் கேட்பதுதான், நீங்கள் சரியாக இதைத் தொட்டிருக்கிறீர்கள். இந்தக் கதை எழுதி முடித்த பிறகும் எனக்குள் இன்னும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. இதுபோன்ற ஒரு பேசுபொருளை நான் இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு கவிதையாகவும் எழுதியிருக்கிறேன். 

கதை வெளியில் வாசிக்கப்படுவது ஒன்று, எழுதும் நமக்குள்ளும் ஏதோ ஒன்றை நிகழ்த்துகிறது. இந்தக் கதை தத்துவார்த்தமாக என்னைத் தொந்தரவு செய்கிறது, கடைசிப் பத்தி எனக்கு நானே சொல்லிக்கொண்டதுதான். நான் இப்படி ஒன்று நிகழும் என்பதை இதுவரை உணர்ந்ததில்லை, நீங்கள் கடந்திருக்கலாம். அதனால்தான் சொல்கிறேன், ‘பொற்குகை இரகசியம்’ கதையை எழுதிய எழுத்தாளன் மீது எனக்கு ஒரு பிரேமையும், அபார மதிப்பும் இருக்கிறது. எல்லோருக்கும் அப்படி ஒரு கதை நிச்சயம் நிகழும் என்றே தோன்றுகிறது. ஜெ சொல்வது எத்தனை உண்மை. ஆம், ‘இலக்கியம் அருளும் தெய்வம்தான்’.

நான் கதைக்கு ‘லிவோனாவின் பரிசு’ என்று பெயர் வைக்கலாமா என்றும் யோசித்தேன். ஆனால், கதை எழுதிய பிறகு அவனுக்கானது என்று நன்றாகப் புரிந்தது. அதனால் ‘எழுகை’ என்று தலைப்பு வைத்தேன்.

இன்னொன்று, அமெரிக்காவில் இது எனக்கு பன்னிரண்டாவது குளிர்காலம். பித்துப் பிடிக்க வைக்கும் அளவுக்கு அழகும், வெண்மையும், கருணையே அற்ற தூய்மையும் கொண்டது பனிப்பொழிவு, இத்தனை ஆண்டுகளாக எனக்குள் அது என்ன நிகழ்த்துகிறது என்பதைப் புரிந்துகொள்ளாமல் தவித்துக்கொண்டிருந்தேன் (Angst). மிகையாக இதைச் சொல்லவில்லை, ஒவ்வொரு முறை பனிபொழிகையிலும் மனதுக்குள் ஒரு பதைப்பு என்னிடம் இருக்கிறது. இது மிகச் சிறிய கதை, இதில் சில பத்திகளில் அதை புனைவாக விவரித்ததும் எனக்குள் ஒரு ஆழ்ந்த அமைதி ஏற்பட்டது. எதையோ ஓரளவுக்கு கடந்த அமைதி. நீங்கள் இயற்கை குறித்து குழுவில் பகிர்ந்திருந்தது எத்தனை உண்மை.

நீங்கள் தத்துவம் அறிந்தவர், இந்த உணர்வை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்வீர்கள் என்று ஆழமாக நம்புகிறேன். மேலும், உங்களிடம் இதையெல்லாம் பகிர்வதற்கு இந்தக் கதை ஒரு வாய்ப்பை அளித்திருக்கிறது, அதற்கு இலக்கியத்துக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். 

நீங்கள் அனுப்பிய இரண்டு கதைகளையும் கண்டிப்பாக வாசிக்கிறேன். மிக்க நன்றி ஜெகதீஷ். 


அன்புள்ள பாலாஜி,

மாலத்தீவுகளிலிருந்து அமெரிக்கா வந்த சில நாட்களில் வேலையின் காரணமாக வாசிப்பை விட்டு விட்டேன். சில ஆண்டுகள் கழித்து மீண்டும் வாசிக்க முயல்கையில் என்னால் உள்ளே செல்லவே முடியவில்லை. இதை இன்னும் பின்னோக்கி நீட்டித்துப் பார்த்தால் மாலத்தீவுகளில் இருக்கையில் கூட தீவிர இலக்கியம்தான் வாசித்துக் கொண்டிருந்தேன். அதனால் அந்த வாசிப்பே கொஞ்சம் திருகலாகக் கூட இருந்தது. வாசிக்கையிலேயே இதற்கு எப்படி வாசிப்பனுபவம் எழுதலாம், இதிலிருந்து புத்திசாலித்தனமாக எதைக் கண்டுபிடிக்கலாம் என்று. சிந்தித்துப் பார்த்தால், நான் உண்மையிலேயே ஆழ்ந்து வாசித்தது என் பதின்ம வயதுகளில்தான் என்று தோன்றியது. உள்ளே இருந்த அந்தக் குழந்தை வாசித்துக் கொண்டிருந்தது. அந்தக் குழந்தைக்கு சாண்டாக்களில் நம்பிக்கை இருந்தது. அந்த மாதிரியான வாசிப்பை மீண்டும் கொண்டு வர நான் மிகவும் சிரமப்பட்டேன். பல விஷயங்களைத் துறக்க வேண்டியிருந்தது. விமர்சனம், அறிவுஜீவித்தனம், போன்றவை. முழுமையாகத் துறக்க முடியவில்லைதான். ஆனால் துறக்கத் துறக்க வாசிப்பதும், எழுதுவதும் எளிதாகிக் கொண்டே வருவதைக் காணமுடிகிறது.

உங்கள் கதையை இப்படி என்னுடைய அனுபவத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள முடிகிறது. மீண்டும் எழுத்தில் இறங்க நான் செய்ய வேண்டி இருந்ததெல்லாம் நான் தவற விட்ட குழந்தைமையை மீட்டெடுத்துக் கொள்வதை மட்டும்தான். அதைத்தான் இந்தக் கதை சுட்டுகிறது என்று நினைக்கிறேன்.

 பாலாஜிராஜூவின் “எழுகை”


15 டிசம்பர், 2025

“உருவாய் அருவாய் உளதாய் இலதாய்”



1.  “உருவாய் அருவாய் உளதாய் இலதாய்”

சொல்வனம் இணைய இதழில் என்னுடைய புதிய கட்டுரைத்தொடர் துவங்கியிருக்கிறது. அத்வைதம்: அகவிடுதலைக்கான பயணம் என்ற தலைப்பில். அதனது முதல் அத்தியாயம்  “உருவாய் அருவாய் உளதாய் இலதாய்” அத்வைத வேதாந்தம் பற்றிய சிறு விளக்கத்தையும், அதன் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்தும் பேசுகிறது. இருவாரங்களுக்கொரு முறை இத்தொடரின் ஒவ்வொரு பகுதியும் வெளியாகும். அத்வைத வேதாந்தம் குறித்து அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கும், ஏற்கனவே அத்தத்துவத்தைக் கற்றுக் கொண்டவர்களுக்கு வாசித்து அனுபவிப்பதற்காகவும் பயனுள்ள தொடராக இருக்கும் இது.

8 டிசம்பர், 2025

பாலாஜி ராஜூவின் நெடும்பாதைகள்

 



பாலாஜி ராஜூவின் நெடும்பாதைகள்

வணக்கம் ஜெகதீஷ்,

 உங்களுக்கும் தங்கைக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். 

கதையை முடித்துவிட்டேன், பலமுறை வாசித்து திருத்தங்கள் செய்து அயர்ந்துவிட்டேன். தயக்கத்துடன் உங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன், நேரமிருக்கையில் வாசித்துப் பாருங்கள். தயக்கத்திற்கு காரணம் கதை ஒருவேளை வெளியானால் உங்களிடமிருந்து வரும் எதிர்வினைக்கான எதிர்பார்ப்பு அம்சம் இப்போதே பகிர்வதால் இல்லாமல் போய்விடுமே என்பதால்தான். ஆனால் கதைக் கட்டுமானம் குறித்த உங்கள் பார்வையை அறிவதற்காக அனுப்புகிறேன். எனக்கு கீழ்கண்ட சந்தேங்கள் இருக்கின்றன,

1. கதையில் மையப்பாத்திரத்தின் நிலையை நம்பகமாகச் சொல்லவில்லை என்று தோன்றுகிறது. அதாவது வாசகனுக்கு அந்தப் பெண்மணியின் நிலை மீது empathy உருவாகுமா என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு. இதைத்தான் 'it lacks conviction' என்று குறிப்பிட்டேன். 

2. கதையின் முடிவு இயல்பாக இல்லையோ என்று தோன்றுகிறது. கவிதைகளைப் போல சிறு தருணங்களைப் பிடித்துக்கொண்டு கதையை முடிக்கிறேனோ என்ற சந்தேகமும் இருக்கிறது.

3. கதையின் நாடகத்தன்மை திணிக்கப்பட்டதைப் போல இருக்கிறதோ என்ற ஐயமும் ஏற்படுகிறது.

4. கதையின் தலைப்பு இப்போதைக்கு வைத்திருக்கிறேன், வேறு தோன்றவில்லை.

அன்புள்ள பாலாஜி, 

பாதை - சிறுகதை வாசித்தேன். நீங்கள் இதுவரை எழுதிய கதைகளில் இது ஆகச் சிறந்தது என்று சொல்வேன். இதற்குப் பிறகு உங்கள் கதைகள் இதைவிடச் சிறந்ததாக வரக்கூடும். எனக்குக் கதையை வாசித்து முடித்ததும் சட்டென்று தோன்றியது இதுதான்.

ஏன் சிறந்த கதை என்கிறேன்? காரணம் உங்கள் மொழி, அன்னம்மாளின் உலகத்தை உருவாக்குவதற்கு நீங்கள் எடுத்துக் கொண்ட சிரத்தை. கதையில் ஒன்றுமே நடப்பதில்லை. ஆனால் கதையில் ஒரு வலி மிகுந்த பிரிவு, வெளியேற்றம், ஒரு வீட்டின் சிதைவு அதன் அத்தனை ரணங்களோடும் சொல்லப்பட்டிருக்கிறது. நாம் ஒரு முறை பேசியது போல கலையும், கைத்திறனும் ஒன்றொடொன்று முயங்கி இயங்குபவை. நீங்கள் கதைத் தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்தியிருக்கிறீர்கள். கலையும், கதையும் தன்னாலேயே உருவாகி விட்டன.

பாலாஜி ராஜூவின் புனைவுலகம் இக்கதையிலும் உருவாகி வருகிறது. அதற்கு நீங்கள் கையாளும் பிரத்யேக சொற்களும், மொழியும்தான் காரணம். ஊரணைகையில் இருளைத் துளாவி ஊரைக் கடக்கும் டவுன் வண்டி; அரிசி வற்றல், நார்த்தங்காய் ஊறுகாய், பொரிவிளங்காய் உருண்டை, ஒரு விள்ளை கருப்பெட்டியோ, வெல்லமோ சேர்த்த தேங்காய் பத்தை; நெய்யும் வெல்லமும் சேர்த்த வேக வைத்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு; சிவன் கோயில் தேர்முட்டி; அதங்கிய ஈயக்குவளை; பங்களா வீட்டை வர்ணிக்க நீங்கள் பயன்படுத்திய சொற்கள் என்று உங்கள் சொற்களஞ்சியம் ஒரு புனைவுலகை அனாயசமாக உருவாக்கி விடுகிறது. தயவு செய்து இதை உபயோகிப்பதைக் குறைத்து மதிப்பிட வேண்டாம். இவைதான் ஒரு தனித்தன்மை கொண்ட புனைவுலகை உருவாக்குகின்றன. மேலும் என்னைக் கவர்ந்த ஒரு சில சொற்றொடர்களைக் குறிப்பிடுகிறேன். “ஓட்டுக்குள் குறுகும் நத்தை தை போல” “தர்க்கம் இயங்குமிடத்தில் எப்போதும் கள்ளத்தின் கை கை த்தடமும் இருக்கும்.” இது போல கதை முழுக்க பல அவதானங்கள். ஒரு வேளை வெண்முரசு பாதிப்போ என்ற ஐயம் எனக்கு வந்தது. இருப்பினும் அவை கதையுடன் இயைந்து நிற்கின்றன.

1. கதையில் மையப்பாத்திரத்தின் நிலையை நம்பகமாகச் சொல்லவில்லை என்று தோன்றுகிறது. அதாவது வாசகனுக்கு அந்தப் பெண்மணியின் நிலை மீது empathy உருவாகுமா என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு. இதைத்தான் 'it lacks conviction' என்று குறிப்பிட்டேன். 

நீங்கள் நம்பகமாகச் சொல்லியிருப்பதாகத்தான் பட்டது. கதையின் முடிவில் அவள் எழுந்து, “அஞ்சு மணியாயிருச்சு, செந்தில் வேலன் வந்திருப்பான்,” என்கிறாள். அவள் எங்கிருந்து எழுகிறாள் என்பது வாசகனாக என்னுடைய கேள்வி. ஊர் விட்டுப் போகும் வண்டியிலிருந்து எழுகிறாளா, அல்லது வீட்டுக்குள்ளேயே இன்னும் உறங்கியபடி ஊர்விட்டுப் போவதைப் போல கண்ட கனவிலிருந்து எழுகிறாளா? செந்தில் வேலனின் வருகையில் அவள் வாழ்க்கை தினமும் துவங்கியபடியிருந்தது. அவள் அந்த தினப்படி செயல்பாடுகள் முடியவே கூடாது என்று உள்ளூர விரும்புகிறாள். எப்படியோ இந்த உலகை ஏமாற்றி அவள் ஒரு லூப்-ல் தன் வாழ்க்கையை விழ வைத்து விட்டாள். இனி மீண்டும், மீண்டும் எழுந்தபடியே இருப்பாள். இந்த இரவை இப்படியே நீட்டித்துக் கொள்ள முடியாதா? அவளது ஏக்கத்துக்கு அவளது உள்மனமே ஒரு தீர்வைக் கண்டு விடுகிறது. அவளால் முற்றத்து செம்பருத்திச் செடிகளோடும், சுவரில் நகரும் மரப் பல்லியோடும், தண்ணீர் தொட்டியின் அதங்கிய ஈயக் குவளையோடும், எண்ணெய்ப் பிசுக்கு விரவிய விளக்கேற்றும் மாடக் குழியோடும் எப்போதும் போல வாஞ்சையுடன் இருக்க முடியும்.

ஒரு தாயாக, பொம்னாபாடியாரின் (என்ன அழகான பெயர்!) இரண்டாம்தாரமாக, குச்சாயியோடு எதுவும் பேசாமலும் அமர்ந்திருக்க வல்ல தோழியாகவும், வீட்டின் அத்தனை ஜடப்பொருட்களின் மீது அன்பு செலுத்துபவளாகவும் அவளோடு என்னால் தொடர்பு கொள்ள முடிந்தது. கதையின் கடைசி வரி அந்த எம்பதியை மேலும் வலுவாக்குகிறது.

2. கதையின் முடிவு இயல்பாக இல்லையோ என்று தோன்றுகிறது. கவிதைகளைப் போல சிறு தருணங்களைப் பிடித்துக்கொண்டு கதையை முடிக்கிறேனோ என்ற சந்தேகமும் இருக்கிறது.

முடிவு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் முடிவுக்கு முன் வரும் அன்னம்மாளின் தன்னுரையாடல் சற்றே விலகலைக் கொடுத்தது. அதன் மொழி செந்தமிழில் இருந்ததுதான் அதன் காரணம். அவள் தனக்குள் தன் மொழியிலே பேசிக்கொள்வது போல இருந்திருந்தால் நன்றாக இருக்குமோ என்று தோன்றியது. 

ஆம். இக்கதையே கவிதை போன்ற ஒரு தருணம்தான். ஆனால் அப்படிப்பட்ட தருணங்களைக் கதையாக்குவது எளிதல்ல. அதில் நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். கதையின் செவ்வியல் வடிவை இதில் போட்டுப் பார்க்க முயல்கிறேன். அன்னம்மாளுக்கு அந்த வீட்டின் ஆன்மாவோடு நெருங்கிய உறவு. ஆனால் அங்கேயே இருக்க இயலாமல் அவள் வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம், சிக்கல். அந்தச் சிக்கலைத் தீர்க்க அவளது எளிய மனம் ஒரு வழி கண்டுபிடிக்கிறது. அவள் மீண்டும் மீண்டும் உறக்கத்திலிருந்து எழுந்து கொண்டே இருக்கப் போகிறாள். 

இக்கதையில் காலம் ஒரு மிக முக்கியமான பாத்திரம். அவளுக்கு முன் தடையாக நிற்பது காலம்தான். காலத்தின் சுழலில் அவள் விழுந்து மீண்டும், மீண்டும் எழுகிறாள். எனவே பொம்னாபாடியாரின் வேஷ்டிக்குள் சுற்றி வைக்கப்பட்டிருந்த கடிகாரத்தின் ஒலி குறித்து நீங்கள் எழுதியிருந்தது பொருத்தமானது. மகேஸ்வரன் கடிகாரத்தின் முள்ளில் தொங்குகிறான்.

3. கதையின் நாடகத்தன்மை திணிக்கப்பட்டதைப் போல இருக்கிறதோ என்ற ஐயமும் ஏற்படுகிறது.

இல்லை. அந்தக் குறிப்பிட்ட ஒரு பாராவை நீங்கள் மீண்டும் பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

4. கதையின் தலைப்பு இப்போதைக்கு வைத்திருக்கிறேன், வேறு தோன்றவில்லை.

பாதை என்ற தலைப்பு நன்றாகவே இருக்கிறது. தலைப்பு வைப்பதில் நான் ரொம்ப சுமார். ஆனால் வெளியேற்றம், அல்லது காலம் குறித்த சொற்கள் ஏதேனும் தலைப்பாக இருந்தாலும் நன்றாக இருக்கும்.

மேலும்… கமாக்களில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை போலிருக்கிறது. நிறைய இடங்கள் கமா வேண்டி நிற்கின்றன. சில எழுத்துப் பிழைகள். குறித்திருக்கிறேன்.

நான் கதையை டபுள்ஸ்பேஸ் விட்டுதான் எழுதுவேன். அப்படித்தான் கேட்கிறார்கள். வாசிக்கவும் எளிது.


வணக்கம் ஜெகதீஷ்,

கதையை வாசித்து சிரத்தையோடு கருத்துக்களைப் பகிர்ந்திருக்கிறீர்கள். எழுத்துப் பிழைகளையும் சுட்டியதற்கு மேலும் நன்றிகள், எப்படியும் வந்துவிடுகிறது.

உங்கள் வார்த்தைகள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தன, அதற்கும் மேல் வந்த உணர்வு ‘அப்பாடா கதை மோசமில்லை போல’ என்ற ஆசுவாசம். நம் படைப்புகளின் மேல் நம்பிக்கை வைத்து வாசிக்கும் நண்பர்களின் பங்கை குறைத்துமதிப்பிடவே முடியாது. (ஜெ இதைத்தான் குறிப்பிடுகிறார், நீங்களும் வாசித்திருப்பீர்கள்).

நீங்கள் குறிப்பிட்ட அவதானங்கள் - கதையில் வெளிப்படும் ஆசிரியரின் குரல் மீது எனக்கு எப்போதுமே சந்தேகக் கண் உண்டு (உங்கள் கதைகளில் இவை அதிகம் இருப்பதில்லை என்பதையும் எண்ணிப்பார்க்கிறேன்). கதையின் போக்கிற்கு அவை என்றுமே சற்று இடஞ்சல்தான். குறிப்பாக தொடக்ககாலத்தில் எழுதிக்கொண்டிருக்கும் என்போன்றவர்களின் குரல் வாசகனுக்குத் தெரியாத எதைச் சொல்லிவிடமுடியும் என்ற கேள்வி எனக்கு உண்டு. ஆனால் அவை நம் கருத்துக்கள் என்பதாலேயே நீக்குவதும் சிரமமாக இருக்கிறது. நிச்சயம் வெண்முரசின் பாதிப்பு என் கதைகளில் உள்ளது என்பதை வெளிவந்த பிறகு வாசிக்கையில் கவனித்திருக்கிறேன். ‘இருபது ரூபாய்’ கதையில் கூட அது உள்ளது. உங்கள் பார்வை மிகச் சரியானதுதான், நீங்கள்தான் இதை முதலில் என்னிடம் வெளிப்படையாகச் சொன்னவர்.

இந்தக் கதையில் இரண்டு உவமைகளைப் பயன்படுத்தியிருக்கிறேன், அதை ஒன்றாக மாற்றிவிடலாமா என்ற எண்ணமும் உண்டு. அதீத உவமைகள் கதையை மீறித் தெரிபவை. முதலில் இதே கதையில் ‘மௌனப் பெருவெளி’ போன்ற வார்த்தைகள் இருந்தன, நீக்கிவிட்டேன். கதையின் போக்கை மீறித் தெரிபவை என்று எண்ணினேன் (ஆதீதக் கவித்துவம்). நீங்கள் இயைந்துதான் இருக்கிறது என்று சொல்வதால் இப்போதைக்கு அங்கு நான் கத்தி வைக்கவில்லை.

கதையில் நீங்கள் குறிப்பிட்ட முடிவு - நான் எண்ணியது அவள் வெளியேறுவது தவிர்க்கமுடியாதது. பொருட்களோடு நினைவுகளையும் சுமந்துகொண்டுதான் செல்கிறாள் என்பதுதான். அது ஒன்றும் புதிய பார்வை அல்ல, ஆனால் அவள் அதை வெளிப்படுத்தும் தருணம் என்னளவில் புதியது, கதை உருவாக்கிய சூழலுக்குள் வருவது. நீங்கள் குறிப்பிட்ட லூப் சுவாரசியமாக இருக்கிறது. ஆனால் அதுபோன்ற ஒரு பகுதியை எழுத இன்னும் எனக்கு தன்னம்பிக்கை இல்லை. கவிதைகளில் இதுபோன்ற தருணங்களை எழுதியிருக்கிறேன், அங்கு எப்போதுமே கட்டுப்பாடில்லாத சுதந்திரமும் உள்ளது. (கவிதைகளில் அதற்கே உரிய தத்துவம் உருவாக இடம் இருக்கிறது என்ற உங்கள் பார்வை அழகானது).

நீங்கள் குறிப்பிட்ட அன்னம்மாளின் தன்னுரையாடல் மீது எனக்கும் ஐயம் இருந்தது. அதை மாற்றி எழுத முயல்கிறேன். இதைத்தான் கதையின் அதீத நாடகத்தன்மை என்று சொல்லியிருந்தேன்.

கதையின் ஊசல் கடிகாரம் காலத்தின் பிம்பம்தான். அது ஒன்றும் தனித்துவமான படிமம் அல்ல என்பதையும் புரிந்துகொள்கிறேன். கதைக்குள் அதற்கு இடம் இருந்ததால் பயன்படுத்த முயன்றேன். 

தலைப்பு வைப்பதில் நீங்கள் சுமார் என்ற கூற்றில் எனக்கு உடன்பாடில்லை. உங்கள் கதைகளின் தலைப்புகள் மீது எனக்கு எப்போதுமே வியப்பு உண்டு. ஆனால் ஒற்றை வார்த்தைகளில் நான் வைக்கும் தலைப்புகள் கொஞ்சம் உழைப்புக் குறைவையும் சொல்பவை, நீங்கள் சொன்னவற்றின் அடிப்படையில் யோசித்துப் பார்க்கிறேன். இன்னொன்று இப்படி ஒரு இயல்புவாதக் கதைக்கு அதீதக் கவித்துவத் தலைப்புகள் துருத்தித் தெரிபவை என்பதால் சற்று கவனமாகவும் இருக்கிறேன். ‘இருபது ரூபாய்’ என்ற எளிய தலைப்பை அறிந்தே வைத்தேன். ‘அதிகம் ஜல்லி அடிக்காதே’ என்று அடக்கிவாசிக்கச் சொல்லும் உள்குரல்தான் காரணம், வேறொன்றுமில்லை.

கமாக்களை நான் அவசியம் திருத்துகிறேன் ஜெகதீஷ், அவை வைக்கலாமா இல்லையா என்ற குழப்பத்தின் விளைவுகள். நிர்மலிடம் பேசும்போது உங்கள் கதைகள் பிழைகள் இல்லாமல் இருப்பதை எடுத்துக்காட்டாக ஒவ்வொருமுறையும் குறிப்பிட்டிருக்கிறேன். இன்னொன்றையும் சொல்கிறேன், ஆச்சர்யக் குறியை நீங்கள் எங்கு பயன்படுத்துகிறீர்கள் என்று பார்ப்பதற்காக ‘ஸ்பைடர்’ கதையை மீண்டும் நேற்று முந்தைய தினம் வாசித்துப்பார்த்தேன். எப்படி வாக்கியங்களை நீங்கள் பிரிக்கிறீர்கள் அமைக்கிறீர்கள் என்றும் புரிந்துகொள்ள, I am not kidding.

டபுள்ஸ்பேஸ் ஏன்று நீங்கள் குறிப்பிடுவது பத்திகளுக்கு இடையில்தானே, வேறொன்றா?

மீண்டும் மனம் நிறைந்த நன்றிகள். இதுவரை நீங்கள் என் படைப்புகள் குறித்துச் சொன்ன பார்வைகளை நான் சிதறவிட்டதில்லை, அவை என்னுடன் எப்போதும் இருப்பவை, அவற்றின் முக்கியத்துவத்தை நான் உணர்ந்திருக்கிறேன்.

கடைசியாக இந்த கதை எழுதும் செயலை ஒரு உருவகமாக எண்ணிப் பார்த்தேன். புதிதாக கார் ஓட்டக் கற்றுக்கொள்பவன் எப்படி அதன் ஒவ்வொரு அடிப்படைகளையும் எண்ணி எண்ணிச் செய்வானோ அப்படித்தான் என்னுடைய கதைகளும் எழுத்தும். நீங்கள் ஒற்றைக் கையால் அநாயாசமாக வாகனத்தைச் செலுத்துபவர் என்று தோன்றியது. இதில் என்னோடு நிர்மல், விவேக், மதன் எல்லோரும் உண்டு. சங்கர் முதல் கதையில் அதீத முதிர்வோடு இருந்தார் என்று தோன்றியது, அவர் தடுமாறிய இடங்களும் இருந்தன. என்றாவது இயல்பாக நானும் கார் ஓட்டுவேன் என்று நம்புகிறேன்.


அன்புள்ள பாலாஜி,

மீண்டும் சொல்கிறேன், “கதை அவ்வளவு மோசமில்லை” கதை அல்ல; மிகச் சிறந்த கதை. இதை உங்களால் மட்டுமே எழுதியிருக்க முடியும். உங்கள் அனுபவங்களின் துணையால். கதையில் உங்கள் “அவதானங்களாக” வருவனவற்றை நான் இப்படிப் பார்க்கிறேன். அவை அன்னம்மாளின் எண்ணங்கள், ஆனால் தூய மொழியில் சொல்லப்படுகின்றன. எனவேதான் அவை கதையோடு இயைந்திருக்கின்றன. கதையின் கவித்துவத்துக்கு அவை வலு சேர்க்கின்றன. கதையின் கவித்துவம் என்று அன்னம்மாளின் கனவும், அவள் அஃறிணைகளோடு உரையாடுவதையும் குறிப்பிடுகிறேன். அந்தக் கடிகாரம் அழகான குறியீடாக வந்திருக்கிறது. செயற்கையாக இல்லை. 

(“மேற்கின் சிவந்த வானுடன் சூரியனும் தாழத் தொடங்கியிருந்தது.” என்ற வரி குறித்து யோசிக்கவும். கொஞ்சம் சாண்டியல் சாயல். மாற்றி எழுத முயலலாம்.)

கதை தலைப்பு வைப்பதில் உண்மையில் நான் சுமார்தான். அனு இருப்பதால் தப்பிக்கிறேன். பாதை நல்ல கதைதான். என்ன பிரச்னை என்றால் யாரோ இதே தலைப்பில் ஏற்கனவே எழுதி இருப்பார்கள். அதற்காக நீங்கள் வேறு தலைப்பு யோசிக்கலாம். அல்லது இதுவே நன்று.

கதையில் அந்த லூப் வந்திருக்கிறது என்றே நினைக்கிறேன். அன்னம்மாள் முன்பே கனவு காண்கிறாள். இப்போதும் உறக்கத்திலிருந்து எழுகிறாள். அதனால் அந்தச் சிறு மாயம் அங்கு உங்களையறியாது நிகழ்ந்திருக்கிறது என்றே நினைக்கிறேன்.கதைகளில் அப்படி நாமே அறிந்து அமைத்தல் கடினம் (மாய யதார்த்தக் கதைகளில் சாத்தியம்.)  மற்றபடி முடிவு நீங்கள் குறிப்பிட்டபடியே அமைந்திருக்கிறது.

தமிழ் உரைநடைக்குக் கமாக் குழப்பம் எப்போதுமே உண்டு (ஆங்கிலம் கமாக்களில் திளைக்கிறது.) குறைந்த பட்சம் லிஸ்ட் போடும் போது ஒவ்வொரு பொருளுக்கும் அடுத்து கமா போடலாம். டபுள்ஸ்பேஸ் நான் ஒவ்வொரு வரிக்கும் விடுவதைச் சொன்னேன். மேலும் பத்திக்கும்.

நீங்கள் என்னை ரொம்ப பாராட்டுகிறீர்கள், பாலாஜி. நன்றி. ஆனால் என் தமிழ் உரைநடையின் வலிமையை கதை எழுதுதலின் வலிமையாக எண்ணி மயங்கலாகாது. கதை அமைப்பையும், சொல்முறையையும் இன்னும் கற்றுகொண்டேதான் இருக்கிறேன். இரண்டாவது கியரில் இருக்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

மீண்டும் உங்கள் மொழி பற்றிக் குறிப்பிடத் தோன்றியது. இரண்டு மொழிகள் இக்கதையில். ஒன்று யதார்த்த நடை. அது உங்களுக்கே உரித்தானது. இன்னொன்று வெண்முரசின் நடை. அதுவும் நன்றே. அது எல்லை மீறும்போது உங்களுக்கே தெரிந்து விடும். “திகழ்கிறது, ஆம், அவ்வாறே ஆகுக, என்றெல்லாம் கிரிஞ்சாக எழுதாதவரை” உங்களது அந்த மொழியையும் நான் ரசிப்பேன். (நான் எழுதும் போது வெண்முரசின் தாக்கம் வந்துவிடுகிறது. இத்தனைக்கும் நான் வாசித்து நாளாயிற்று).


ஜெகதீஷ்,

உங்களுடைய குறிப்பை ஒரு புன்னகையோடுதான் வாசித்தேன். ‘மேற்கின் வானம்’ எழுதுகையில் எவ்வளவு க்ளிஷே என்று எனக்கு தோன்றிக்கொண்டே இருந்தது, அதை நீங்கள் குறிப்பிட்டது அதை அவசியம் மாற்றவேண்டிய அவசியத்தைச் சொல்கிறது, மாற்றுகிறேன்.

உங்கள் வார்த்தைகள் மீண்டும் நம்பிக்கை அளிக்கின்றன. அது இந்தக் கதைக்கு அல்ல, இனி வரப்போகும் கதைகளுக்கானவை. ஒருவகையில் இந்தக் கதையிலிருந்து உணர்வுரீதியாக நான் நீங்கிவிட்டேன். இதுவரை நான் எழுதிய கதைகளை இத்தனை முறை வாசித்ததில்லை, திருத்தியதில்லை. 

இங்கும் ஜெ வை எடுத்துக்காட்டாகக் கொள்கிறேன். அவர் ஆசிரியர் குரலை எப்போதுமே தூய தமிழில் அமைக்கிறார் என்பது என் (பிழை?) புரிதல். உங்கள் ‘ஸ்பைடரை’ மீண்டும் வாசிக்கும் முன் ஜெயின் சில கதைகளையும் வாசித்தேன், ஆனால் குழப்பமே எஞ்சியது. மீண்டும் இந்த அம்சத்தை நான் எண்ணிப் பார்க்கிறேன். நீங்கள் இந்த நடை அம்சத்தை பாராட்டாகவே சொல்லியிருக்கிறீர்கள் (But I have something to think about). இதை அவரிடம் ஒரு கேள்வியாக வைக்க இயலுமா?.

‘பாதை’ குறித்து நீங்கள் குறிப்பிட்ட அதே எண்ணங்கள் எனக்கும் இருந்தன. 

நான் உங்களைப் பாராடுகிறேனா? இருக்கலாம், உங்கள் கதைகளை அத்தனை கூர்மையாக நான் வாசிக்கிறேன் என்று தோன்றுகிறது. அதன் விளைவு இது. ‘பொற்குகை இரகசியம்’ கதை இன்னும் என்னளவில் ஒரு cult தான், ஏன் என்று தெரியவில்லை.

உனகள் வீட்டுக்கு வரும் ‘இராட்சசன்’ நம்மை இப்படி ஆட்கொண்டிருக்கிறார், வேறென்ன சொல்வது!. உங்கள் கதைகளில் ‘கல்லளை’ யில் (நினைவு சரிதானே!) அவருடைய தாக்கம் இருந்தது என்று தோன்றுகிறது. அதற்கு அடுத்த கதைகளில் நீங்கள் வெகுவாக நகர்ந்துவிட்டீர்கள். 

நாற்பதுகளின் சரிபாதிக்கு வந்துகொண்டிருக்கிறேன் ஜெகதீஷ். இனியும் புகழோ வசையோ அதை நேராகச் சொல்லவேண்டும் என்ற துடிப்பு என்னில் உள்ளது. உங்கள் கதைகள் குறித்து நான் வைக்கும் பார்வைகளை நீங்கள் அப்படியே கொள்ளவும். அடுத்த கதை எனக்கு உவப்பில்லை என்றால் அதையும் வெளிப்படையாகவே குறிப்பிடுவேன், இழக்க என்ன இருக்கிறது!. 

மீண்டும் சொல்கிறேன், நம்மை உந்தித் தள்ளுபவர்கள் நம்முடன் இருப்பதலேயே அவர்களை பாராட்டாமல் இருக்கமுடியாது. You inspire me in a lot of ways, I will leave it at that.

சரி, without being corny, I wrote a poem about ourselves, which I will share. Just take it, don’t respond back. Looking forward for your story in Dinamani.

என் கவிதைகள் - உயரம் - இந்தக் கவிதையில் கூட சொற்பிரயோகங்களை மாற்றும் தேவை இருக்கிறது. எழுதும்போது இது தன்னெழுச்சியாக வந்த கவிதை, ஆனால் வாசித்த பிறகு உங்களையும் என்னையும் எண்ணிக்கொண்டேன்.


நன்றி பாலாஜி.

பட்டம் விடுவதற்குத் துணையாக ஒரு நட்பு இருக்கையில் அந்த விளையாட்டு தரும் மகிழ்வே அதன் ஊதியம். உங்கள் கவிதை அழகாக இருந்தது. அதில் பட்டம் விடுபவனாக இடம் பெற்றது எனக்குப் பெருமை. இதே போல முடியும் ஒரு கவிதையை நான் என் பதின்ம வயதில் எழுதினேன். அது தொலைந்து விட்டது. “வாழ்நாள் முழுக்க அன்னாந்திராதவன் எப்படித்தான் படைப்பான் வானத்தை!” என்று கடைசி வரிகள் மட்டும் நினைவிலிருக்கின்றன.

என் தனிப்பட்ட கருத்து “ஆசிரியர் குரல்” இல்லாமலே எழுத முயற்சிக்க வேண்டும் என்பதுதான். பாயிண்ட் ஆஃப் வியூ கதாபாத்திரம்தான் நாம் அடுத்த வரி என்ன எழுதப்போகிறோம் என்று தீர்மானிக்கிறது. “மருதாணிச் செடி வெள்ளந்தியாக நுழைவது” அன்னம்மாளின் பார்வைக் கோணம்தான். பாலாஜியுடையது அல்ல. எனவே “ஆசிரியர் குரல்” என்பதை தவிர்ப்பதற்கே பெரும்பாலும் முயலவேண்டும். மீறி எழும்போது அதை பாத்திரத்தின் பார்வைக்கோணத்துக்கேற்ற மாதிரி மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

பாலசந்தர் ஒரு டிராகுலா மாதிரி என்று நடிகர் விவேக் ஒருமுறை சொன்னார். அவர் கடித்தவர்கள் அவர் மாதிரியே ஆகிவிடுவார்கள் என்று. என் வீட்டுக்கு வரும் ராட்சசன் என்னைக் கடித்து, நானும் அவர் மாதிரி ஆகி விட முடியுமா என்ற பேராசை மனதில் ரகசியமாக இருக்கிறது.

நீங்கள் தாரளமாகப் பாராட்டலாம், பாலாஜி. எனக்கும் குளிர்ச்சியாகத்தான் இருக்கிறது. திட்டும்போது எதையாவது இண்டெலெக்சுவலாகச் சொல்லி சமாளித்து விட்டால் ஆயிற்று.😃

என் கதை தீபாவளி மலர் அச்சுப்பதிப்பில்தான் வந்திருக்கும் போல. வீட்டில் வாங்கச் சொல்லியிருக்கிறேன். இணையத்தில் வெளிவரவில்லை எனில் தனியாகப் பகிர்கிறேன்.

தமிழ் உரைநடையில் நிறுத்தற்குறிகள் எங்கனம் பயன்படுத்த வேண்டும் என்று அசோகமித்திரனிடம் கற்றுக் கொள்ளலாம். அவர் கிட்டத்தட்ட ஆங்கிலத்தின் வழியைப் பின்பற்றுகிறார். ஜெ பெரும்பாலும் கமாவைத் தவிர்த்து விடுகிறார். 

நீங்கள் பலர் எழுதும் கதை குறித்து அவர்களிடம் விவாதிக்கிறீர்கள். எனக்கு அப்படிச் செய்ய பயம். எனக்கு இந்த நவம்பர் வந்தால் ஐம்பது துவங்குகிறது. இருப்பினும் தயக்கம் இருக்கிறது. உங்கள் ஒருவரிடம் முட்டி மோதினால் போதும் என்றிருக்கிறது. என்னுடைய இன்னொரு பலவீனம் தமிழில் எழுதப்படும் கதைகளை நான் போதிய கவனம் கொடுத்து வாசிப்பதில்லை. உங்கள் கதையையே மூன்று முறை வாசித்தபின்தான் என் கருத்துக்களைத் தொகுத்துக் கொள்ள முடிந்தது.



7 டிசம்பர், 2025

வானப்ரஸ்தம் குறித்து பிரசாத் வெங்கட்


 

வானப்ரஸ்தம்

வானப்பிரஸ்தம் explores the contrast between a spiritually-inclined mother and her anxious daughter caught in a rat race. While the premise has potential, the main reason this story didn't work for me is the mother who's painted as nearly saintly after a late-life (brief?) exposure to Upanishads, which strains credibility. She delivers spiritual wisdom directly, making scenes feel like lectures rather than organic conversations. A couple of examples:

> அம்மா சிரித்தாள். “கூச்சமா? எனக்கா? அச்சம், தயக்கம் இவைகளிலிருந்து நான் எப்போதோ விடுதலை அடைந்து விட்டேன்,” என்றாள் ஆங்கிலத்தில்.

> “கீதை என்பது ஒரு வேதாந்த நூல். மனித வாழ்வின் உச்சபட்ச சாத்தியம் தன்னை அறிதலே என்று வேதாந்தம் சொல்கிறது. தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை. தன்னை அறிந்தவனுக்கு கவலைகள் ஏதுமில்லை. அதற்கான பாதையைத்தான் கீதை காட்டுகிறது. செய்யும் செயல்களை பற்றற்றுச் செய்தல் கர்மயோகம் எனப்படுகிறது. கர்மயோகம் செய்தவனுக்கு மனத்தூய்மை வாய்க்கிறது. மனத்தூய்மை அடைந்தவன் தன்னை அறியும் தகுதி பெறுகிறான். தன்னை அறிந்தவனுக்கு அதற்கப்புறம் செய்வதற்கு வேறேதும் இல்லை. ஆனந்தமாக மீதமிருக்கும் வாழ்க்கையைக் கழிக்க வேண்டியதுதான், உங்களைப்போல,” என்றாள்.

Nirmal wrote:

> முழுமை கூடியவர்கள் பிழை அற்ற வாழ்வை நெருங்கியவர்கள், அதில் கான்பிளிக்ட் உருவாக்க இயலாது. ஒரு காட்சியில் வருகையில் கையாள்வது எளிது, கதையெங்கும் நெடுக வருகையில் அதை கையாள்வது கடினம். ஜெகதீஷ் அதை பரிட்சித்து பார்த்துள்ளார்.

The mother is so even-keeled that an unmarried daughter or a bear encounter in the woods will not tip her off balance. So where's the dramatic tension? If the drama is about the daughter's transformation -  that Samyukta is not in the presence of her old mother, but this newly sainted woman - then I'd have liked to spend more time in the gradual evolution of how Samyukta changes. There are hints, but that doesn't seem like the locus of the narration.

Vivek wrote:

> The contrast between Samyukta's rational, career-driven, immigration-anxious mindset and Amma's slow, interior turning toward Vedanta is drawn with great subtlety. 

Subtlety is what I didn't notice in this story. With only so many words, the author is forced to convey ideas - grand or small - within a page count. But this story reads more like an illustrated parable than a fully realized short story. Jegadeesh clearly cares about Vedanta, but I'd have appreciated more showing and less telling, more dramatic tension and less convenience, more discovery and less preaching, all of which Jegadeesh has done in his past stories. (In his most recent story, he portrayed a fractured person's complicated decision with beautiful nuance - a struggling alcoholic and a loving father, deciding to move away from his son for the sake of his son, was heartbreaking). My emotions were unfortunately unmoved throughout the reading of வானப்பிரஸ்தம்.

I think the story contains the seeds of a resonant experience, which Jegadeesh has expertly handled many times in the past to grow something wonderful. This time, with this story, they remain just seeds.

மேலும் வாசிக்க