13 மார்ச், 2025

பொற்குகை ரகசியம் - விமர்சனம்



 

என்னுடைய பொற்குகை ரகசியம் தொகுப்பு குறித்து ஆஸ்டின் சௌந்தர் எழுதியுள்ள விமர்சனம்.

ஆஸ்டின் சௌந்தர்

நேற்றைய (12/30/2024) மாலை , எனக்கு இனிதான மாலை. இரு மலைகளுக்கு நடுவே ஆதவன் சென்று மறையும் அந்தியைக் காணும்பொழுது வரும் அதே உவகை , ஜெகதீஸின் , “நிமித்தம்” சிறுகதையை அகழ் இதழில் வாசித்தபொழுது அடைந்தேன். அசோகமித்திரன் ஒரு முன்னுரையில் சொல்லியிருப்பார், “நான் இந்தக் கதைகளை எழுதும்பொழுது மகிழ்ச்சியாக இருந்தேன், வாசிக்கும் நீங்களும் அதே மகிழ்வை அடைவீர்கள் “ என. அந்த மகிழ்வை “நிமித்தம்” எள்ளளவும் குறையாமல் கொடுத்தது. கதையின்  வெற்றி reading pleasure கொடுப்பதில் எல்லோரையும் சென்றடையும் என்பதில் உள்ளது. கதைநாயகனின் செயல், வாழ்க்கையின் துண்டு ஒன்று பறந்துவந்து இரத்தத்துளிகள் படர வாசகனின் அகத்தை தொட, இது இலக்கியம் என்றும் சொல்கிறது. 

ஜெகதீஸின் “பேராசிரியர் கிளி” கதையை சொல்வனத்தில் வாசித்துவிட்டு, “இலக்கியத்தில் கொட்டுப் பட்டாலும் அவர் கையால் கொட்டுப்படவேண்டும்” என்று நான் நினைக்கும் நண்பருக்கு அனுப்பி அவர் என்ன நினைக்கிறார் என்று கேட்டேன். அவரும் நான் நினைத்ததையே சொன்னார். ஜா. தீபா-வின், “குரு பீடம்” கதையில் தொட்ட பேசுபொருள் எனினும், இவரது உத்தி வேறுபடும் இடமும், வாழ்வியல் சூழலும், “பேராசிரியர் கிளியை” ஜெகதீஸ் பயன்படுத்திய விதமும் இலக்கியம் என ஆகிறது என்றார். ஒவ்வொரு எழுத்தாளரும் , அவர்களைத் தொடர்ந்து வாசிக்கலாம் என்று நான் குறித்து வைத்திருப்பேன். ஜெகதீஸ் அந்த இடத்தை இந்தக் கதையின் மூலம் அடைந்துவிட்டார். ஆனால், தொடர்வாரா என்ற test மிச்சமிருந்தது. 

ராலே ராஜன் வீட்டிற்கு, நாங்கள் செப்டம்பரில் சென்றபொழுது ஜெகதீஸும் அனுவும் தம்பதி சகிதமாக வந்து பார்த்து, “பொற்குகை ரகசியம்” நூலை “எங்கள் அண்ணா” என்று ஜெகதீஸ் கையெழுத்துப் போட அன்பளிப்பாகக் கொடுத்தனர். மரியாதையின் நிமித்தம் தொகுப்பில் உள்ள, “சொல்லப்படாத கதை” -யை ராஜனும் சசியும் எங்களுக்கென ஒதுக்கியிருந்த அறையில் தூங்கி எழுந்த ஒரு காலையில் வாசித்தேன். எதுவுமே இல்லாத ஒன்றை எடுத்துக்கொண்டு எதோ பெரிதாக இருப்பதுபோல் தனது எழுத்துச் சித்திரத்தால் மட்டும் சாதிப்பது என்பது முற்றிலும் ஒரு கலைஞனாலேயே முடியும். அவனை நான் அந்தக் கதையில் கண்டுகொண்டேன். அந்தக் காலை, ஜெயமோகன், அருண்மொழி போன்ற தளபதிகள் சூழ ஒரு பட்டாளமாக, Jaipur Literature Festival -போக தயாராகிக்கொண்டிருந்தோம்! அனுவின் காதலன் கோட்டெல்லாம் போட்டு அழகனாக தயாராக  வாசலில் வந்து நின்றிருந்தார். “தம்பி , நீ கலைஞன் “ என்று கட்டிப்பிடித்துக்கொண்டேன். அருகில் நின்ற அனு கண்கள் மின்னப் பார்த்துக்கொண்டிருந்தார். நான் கட்டிப்பிடித்ததைப் பார்த்துப் பொறாமையெல்லாம் கொள்ளவில்லை. 

இதற்கு முன்னர் மழையும் இல்லாத வெய்யிலும் இல்லாத ஒரு நாளில்,  “பேராசிரியர் கிளி” “கர்மா” “ஊனுடல்”, “நீலத்தழல் “ எல்லாம் வாசித்த ஒரு வாசகனாக  , நான் அவரை அழைத்திருந்தேன். “கர்மா” நல்ல கதைதான் தம்பி, ஆனா இவ்வளவு Straight Forward-ஆக எல்லாம் தலைப்பு வைக்கக்கூடாது என்றேன். அன்றுதான், “அண்ணா எப்படிண்ணா இப்படி வலிக்காம அடிக்கிறீங்க” என்றார். அனு கண்கள் மின்னப் பார்த்திருக்க , ஜெகதீஸின் கண்களில் அந்த அண்ணனா இந்த அண்ணன் என்ற சந்தேகம்! 

“நிமித்தம்” வாசித்துவிட்டு அந்த அகமகிழ்வு நிலை குலையாமல் நிற்கிறதா எனப் பார்க்க, Virginia Woolf-ந் Unwritten Novel மற்றும் Kew Gardens வாசித்தேன். கந்தர்வனின், “தலைவர்” சிறுகதையை வேறு ஓர் காரணமாக மீள்வாசிப்பு செய்ய நினைத்திருந்தேன். எனது ஆசிட் டெஸ்டிற்கு அதை வாசிதத்து மேலும் உதவியது. ஜெகதீஸ் , எனும் கதைசொல்லி, கந்தர்வன் எனும் கதைசொல்லி பத்தி பத்தியாக பாத்திரங்களை படைப்பதிலும், காட்சியமைப்பிலும் இணையாக சென்றார்கள். கந்தவர்னின் கதையில் வரும் ஒரு அம்மா , அப்பா, மருத்தவப் படிப்புக்கு தங்கள் மகனை தயாராக்கும் சித்திரம். “நிமித்தம்” கதையில் மாநில அரசு அலுவலக சித்திரம். அந்த அம்மாவும் அப்பாவும் கோடான கோடி மக்களின் பிரதி நிதிகள். ஜெகதீஸின் கதை நாயகனும், தாசில்தாரும், காக்கிச்சட்டை போட்டவரும் , புரைகண்ணுடையானும், தமிழக மக்களின் அச்சு அசல் வார்ப்புகள். இரண்டு கதைகளிலும்  வாழ்வு வைக்கும் சூடு, நிதர்சனம். என் மனதில் படித்த , இதுவரை வாசித்த அனைத்து நல்ல கதைகளின் நிரையில் “நிமித்தமும்” நிற்கிறது.

“பொற்குகை ரகசியம்” நூலை எடுத்து, குறுங்கதைகள் என வகைப்படுத்துப்பட்டுள்ள, “பேசும் மலர்”, “தேங்காய்ச் சில்லு”   கதைகளை வாசித்தேன். “பேசும் மலர்” வாழ்வை ரசிப்பவனின் காதுகளும் கண்களும் எந்த அளவுக் கூர்மையடையும் என அழகிய மொழியில் சொல்கிறது. அழகியல் கூறுகளில் மனம்கவர் கதைகளில் இதை வைத்துக்கொள்வேன். “தேங்காய்ச் சில்லு” கதைகளை வாசித்தேன். “பேசும் மலர்” வாழ்வை ரசிப்பவனின் காதுகளும் கண்களும் எந்த அளவுக் கூர்மையடையும் என அழகிய மொழியில் சொல்கிறது. அழகியல் கூறுகளில் மனம்கவர் கதைகளில் இதை வைத்துக்கொள்வேன். “தேங்காய்ச் சில்லு” , யோசனையில் இருப்பவனை, தொட்டுக்கூப்பிட்டால் ஒரு சிலிர்ப்பு வருமே, இந்தக் கதையை வாசித்ததும் அப்படி ஒரு சிலிர்ப்பு. ஆனால், இந்த சிலிர்ப்பு அடங்காதது. ஜெகதீஸின் பெயரை ஒரு பத்திரிகையில் பார்த்ததும், அந்த படைப்பை வாசிக்க வைக்கும். புத்தகக் கடையில் ஜெகதீஸ் என்ற பெயர் கொண்ட நூல் எங்கே எனத்தேட வைக்கும். ஜெகதீஸ் கதை சொல்ல எடுத்துக்கொள்ளும் மெனக்கெடல் பிடித்துள்ளது. “ஒப்பனை” கதையில் உரையாடல்கள் செறிவாக வந்துள்ளன. மாணவி விஜயலட்சுமி-யை, ஆசிரியர் லாவண்யா, “விஜயலட்சுமி” என்று முழுமையான பெயர் சொல்லி அழைக்க, இந்தக்காலத்தில் யார் பெயரை முழுசாக சொல்கிறார்கள் என்று யோசித்தேன். சக மாணவர்களோ, “விஜே” என்று அழைக்கிறார்கள். அப்படியே நவீனமாக உரையாடலை நகர்த்திவிடுகிறார். “பொற்குகை ரகசியம்” , சைக்கிளில் சிட்டாகப் பறக்கும் பாலுவிற்கு அந்தப் படக்கதை வாசிக்கவேண்டும் என்பதைத்தாண்டி வேறு ஒரு ரகசியம் இருக்கிறது. “பிறப்பொக்கும்” கதை சங்கிலியை யார் எடுத்தார்கள் என்பது வாசகனுக்கு கண்ணாமூச்சி விளையாட்டு. எல்லாம் இணைந்து வாசகனுக்கு சுவாரஸ்யத்தை அள்ளி வழங்குகிறது. இன்றைய சூழ்நிலையில் ஒருவன் பல நாடுகளில், பலவிதமான பண்பாட்டுச் சூழலில் வாழும் நிமித்தமாகிவிடுகிறது. ஜெகதீஸ் குமார் அவர்களின் பிரதிநிதி. “பொற்குகை ரகசியம்” நூலில், அவர் வாழ்ந்த வசித்த நாடுகளில், கண்களையும் காதுகளையும் திறந்து வைத்து சுற்றிலும் நடப்பதை கவனித்திருக்கிறார் எனத் தெரிகிறது. விருந்தாளியாக வந்து பார்ப்பவர்களுக்கு அமெரிக்க வீட்டின் முன்னுள்ள சீராக வெட்டப்பட்ட பசும்புற்கள் தோட்டங்கள் மகிழ்வளிக்கும். புல்லைவெட்டத் திணறும் புல்வெட்டியின் சக்கரத்தீன் கீழ் மாட்டிக்கொள்ளும் க்ரேன்பெர்ரி கிளையோ, இருந்து வாழும் கதைசொல்லியின் கண்களில் மட்டுமே படும். வருடக்கணக்காக தனது ஹோண்டா அக்கார்டை மாற்றாத பேராசிரியரும் அவனது கண்ணில் படுவார். எந்த நாடாக இருந்தால் என்ன கணக்கு வாத்தியார் போர்டில் எழுதுவதை கவனிக்காத மாணவர்கள் இருக்கிறார்கள். கடலில் மீன் பிடிக்கப்போலாமா என்று கேட்டால், திமிங்கலத்தின் விட்டையைப் பார்க்கவா என கிண்டலடிப்பவர்கள் இருக்கிறார்கள். நிலம் மாறினாலும் குதர்க்கம் மாறாத மானிடர்களையும், லாட்டரிச் சீட்டு விற்கும் தமிழ் நாட்டுச் சிறுவன் , நீல ஒளியை உமிழும் ஜெல்லி மீன்கள் என “பொற்குகை ரகசியம்” பன்னாட்டுக்காரனின் கதைகள் அடங்கிய தொகுப்பு.


ஆஸ்டின் சௌந்தர்


மேலும் வாசிக்க