ஜி.எஸ்.எஸ்.வி. நவீனின் நித்தியம் சிறுகதையை முன்வைத்து.



 

பொதுவாக வரலாறு என்பது ஆண்டவர்களின் வாழ்க்கை குறிப்புகள், அவர்களின் போர் வெற்றிகள், தோல்விகள், அவர்கள் செய்த சீர்திருத்தங்கள் இவைகளின் தொகுப்புகளாகத்தான் நம்மை வந்தடைகின்றது. வரலாற்றுக்காலங்களில் வாழ்ந்த எளிய மக்களின் அன்றாடப் போராட்டம் குறித்தோ, அரசர்களைச் சுற்றி வாழ்ந்து அவருக்குப் பணியாற்றி, அவர் பொருட்டு வாழ்ந்து, சுவடின்றி மறையும் எளிய ஆத்மாக்களைப் பற்றி அறியவோ கலையே நமக்கு உதவுகிறது. வரலாற்றைக் களமாகக் கொண்ட நாவல்களும், சிறுகதைகளும் எனக்கு எப்போதுமே உவப்பானவை. கல்கி, சாண்டில்யன் போல, வீர சாகசங்களை, கேளிக்கை அம்சங்களையும் விவரித்து நம் புலன்களைச் சாமரம் வீசுகிற படைப்புகளன்று. குர் அதுல் ஹைதரின் அக்னி நதி போன்று வரலாற்றினூடாகத் தத்துவ விசாரம் மேற்கொள்ளும் படைப்புகள், சிக்கவீர ராஜேந்திரன் போன்று அலகிலா அதிகாரம் கொண்ட அரசபதவியின் அபத்தங்களை விவரித்து அகங்காரத்தின் அர்த்தமற்ற தன்மையை நிறுவும் படைப்புகள் போன்றவையே என் வாசிப்பு மனதுக்கு அணுக்கமானவை. அண்மையில் ஜெயமோகன் தந்த படைப்புகளான யட்சன், கந்தர்வன் மற்றும் குமரித்துறைவி போன்ற படைப்புகள் வரலாற்றின் பக்கங்களிலிருந்து ஒரு சிறு நிகழ்வை உருவி அதைக் கலையாக உருமாற்றம் செய்து காட்டின. அவ்வரிசையிலேயே ஜி.எஸ்.எஸ்.வி. நவீனின் நித்தியம் கதையை வைக்கத் தோன்றுகிறது.நான் வாசிக்கும் நவீனின் இரண்டாவது கதை இது. அவரது மோட்சம் கதையை வாசித்து மிகவும் வியந்தேன். ஒரு திரைப்படைப்பாளியின் நுணுக்கத்தோடும், லாவகத்தோடும் அக்கதையைப் படைத்திருந்தார். அதனால் அவரது நித்தியம் கதையை, தகவல் தெரிந்த உடனேயே மிகுந்த ஆவலோடு வாசிக்க ஆரம்பித்தேன். மீண்டும் ஓர் அழகான, நேர்த்தியான, கலையமைதி குலையாத படைப்பு நவீனிடமிருந்து.

“காதல் எத்தனை அபத்தமான சொல்!” என்ற ஃபாதர் மார்ட்டின் ஆற்றாமையே கதையின் அடிநாதம். (உடனே எனக்கு, “மனிதன் எத்தனை மகத்தான சல்லிப்பயல்” நினைவுக்கு வந்தது. யார் சொன்னது இது? ஜி. நாகராஜனா?) அவரது பார்வையில் கதை விரிகிறது. ராம்நாட்டின் விஜயரகுநாதரின் காலம். அவருக்குப் பதவியளித்த கிழவர் சேதுபதி மரணமுற, அவரது நாற்பத்தியேழு மனைவியரும் (உண்மை! வெறும் புகழ்ச்சியில்லை.) அவரோடு உடன்கட்டை ஏறவேண்டும். எண் நாற்பத்து ஏழு சுப்புலட்சுமி சிறுபிராயத்தவள். அவளுக்குச் சாக விருப்பமில்லை. ஃபாதர் மார்ட்டினின் மெய்க்காவலன் இயான் பிரிட்டோவைக் கூட்டிக் கொண்டு ஓடிவிடுகிறாள். இறுதியில் அதிகாரமே வெல்கிறது. 

எவ்வளவு எளிய கதை! ஒரு திரைப்படத்தின் துணுக்குக் காட்சி என்று கூடச் சொல்லிவிடலாம். ஆனால் நவீன் நுண்தகவல்களால் கதையை நம்பகத்தன்மையுடையதாகவும், சுவாரசியமாகவும் மாற்றி விடுகிறார். தன் எழுத்தின் மீது அவர் கொண்டுள்ள நம்பிக்கை அளப்பறியது என்பது இரண்டாம் முறையாக எனக்கு நிரூபணமாகிறது. தகவல்களின் குவியலாகக் கதையை மாற்றி விடாமல், கதைக்குத் தேவையான தகவல்களை மட்டுமே அளிக்கிறார். சிதையை நோக்கி சுப்பு லட்சுமி பதைப்புடன் பார்த்தபடி நிற்கும் காட்சி அற்புதம். விழிநீரும் உமிழ்நீரும் கலந்து வடிகின்றன. எந்த எழுத்தாளனும் அச்சிறு பெண்ணின் அழகைக் குறிப்பிடுவதற்குச் சபலப்பட்டிருப்பான். நவீன் அவளது பதைப்பை மட்டுமே பதிவு செய்கிறார். பிரிட்டோவின் பதற்றம் நிறைந்த, கண் மூடிய பிரார்த்தனைகள், விஜய ரகுநாதரின் இரக்கமற்ற நெஞ்சு, ஃபாதர் மார்ட்டினின் துடிப்பு அத்தனையும் அழகாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

நவீனின் பாதையை ஒருவாறு அணுமானிக்க முடிகிறது. அவர் தமிழ் வரலாற்றின் பக்கங்களைக் கலையாக்கும் ஆர்வம் கொண்டுள்ளார் என்று எண்ணுகிறேன். அதைச் செய்து காட்டும் திறனும், வல்லமையும் கொண்ட எழுத்தாளர்தான் அவர். அவர் படைப்புகளைத் தொடர்ந்து வாசிக்க ஆர்வம் கொண்டுள்ளேன்.

நவீன் கதைகளின் தலைப்புகள் (மோட்சம், நித்தியம், - பிற கதைகளை நான் இன்னும் வாசிக்கவில்லை.) ஆர்வமூட்டுவன. சமஸ்கிருதத் தலைப்புகள், ஆனால் தமிழ்ப்படுத்தப்பட்டவை. அதனாலேயே அவற்றுக்கு ஒரு கிராமத்து எளிமை வாய்த்து விடுகிறது. தலைப்பு தேர்ந்தெடுப்பதிலும் எவ்வளவு கவனமாக இருக்கிறார் என்று தெரிகிறது.

இது ஒரு வாசகக்குறிப்பு மட்டுமே. நான் விமர்சகன் அல்லன். நீளமாக எழுதியிருப்பதால் எந்த விதத்திலும், எழுத்தாளனுக்கு மேல் நின்றுகொண்டு, எதிர்பார்ப்புகளை அவன் மேல் சுமத்தும் இடத்தில் என்னை வைக்க விரும்பவில்லை. ஆனாலும் என் வாசிப்பு அனுபவத்தை எழுதும்போது, எனக்குத் தோன்றும் அனைத்தையும் பதிவு செய்து விடுவது (எனக்கு) உதவியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

குறைகள்? உண்டு. என் பார்வையில் பட்ட குறைகளைச் சொல்கிறேன். முதலாவது சாதாரணமானது. எழுத்து மற்றும் இலக்கணப் பிழைகள். ஒரு நாலைந்து இடத்திலாவது என் கண்ணில் பட்டன. ஆங்கிலத்தில் இப்படி நாம் எழுதி விட முடியாது. இது ஒரு சிறு குறைதான். இருந்தாலும் சொல்ல வேண்டியிருக்கிறது. அடுத்து நடை. எனக்குச் சற்றே, ரொம்பவும் சற்றே ஜெ நடை தெரிந்தது. இது என் பிரமையாகக் கூட இருக்கலாம். துவக்க எழுத்தாளர்கள் இன்னொரு எழுத்தாளர் நடையில் எழுதுவது பிழையில்லை. ஆனால் நவீனை நான் துவக்க எழுத்தாளராக நினைக்கவில்லை. அடுத்து நான் சொல்ல நினைப்பது, நிறைய எழுத்தாளரிடம் நான் காண்பது. நான் கதை எழுதும் போது எனக்கும் வருவது. தவிர்க்க நினைத்தும் இயலாதது. Didactic என்பார்கள். கதை நிகழ்வுகளினூடாக, அந்நிகழ்வை முன்னிறுத்தி ஏதேனும் ஒரு தத்துவத்தை முன்வைப்பது. இதை ஆசிரியர் நேரடியாகவோ, அல்லது ஒரு கதை மாந்தரின் வாயிலாகவோ செய்து விடுவது. வி.சி.காண்டேகரின் நாவல்களை நினைவு கொள்ளுங்கள். அடிக்கோடிட்ட வரிகளால் நிரம்பியவை அவரது நாவல்கள். ஹெமிங்க்வே, கார்வர் போன்றவர்கள் நிகழ்வுகள் குறித்து எந்த விமர்சனமும் செய்வதில்லை. வெறுமனே நிகழ்வுகளை விவரித்தபடியே செல்கின்றனர். தல்ஸ்தோய், தஸ்தாவெஸ்கி போன்றோரிடத்து இந்த தத்துவமாக்கல் அம்சத்தைக் காணமுடியுமெனினும், அவர்களது நாவல்களே பெரும் தத்துவ விசாரணைக் களங்கள். அப்படிப்பட்ட படைப்புகள் தத்துவமாக்குதலை நிகழ்த்தும் போது எந்த விலகலும் வருவதில்லை. காட்சிபூர்வமாகக் கடத்தப்படும் தேவை கொண்ட கதைகளில் தத்துவமாக்கல் சற்று உறுத்தலாகத் தெரிகின்றது. நவீன் ஒரே ஒரு இடத்தில் மட்டும்தான் அதைச் செய்திருக்கிறார். அது உறுத்தலாகக் கூட இல்லை. ஆனால், நான் முன்னரே குறிப்பிட்ட என் சித்தாந்தத்தின் படி, இதையும் குறிப்பிட விரும்பினேன்.

இக்கதையை வாசித்ததும்,  நவீனுக்கு இந்தப் பின்புலத்தில் ஒரு நாவல் எழுதும் திட்டம் உண்டா என்று நினைக்கத் தோன்றியது. எழுதினால் நன்றாக இருக்கும். நவீனின் அடுத்தடுத்த படைப்புகளை வாசிக்க மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளேன். அவருக்கு என் வாழ்த்துக்கள்.

நித்தியம் சிறுகதையை வாசிக்க

 


Comments

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை