மார்க்வெஸ்ஸின் மூன்று கதைகள்.


கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்ஸின் மூன்று கதைகள்.
மார்க்வெஸ் மாய யதார்த்தக் கதைகளின் முன்னோடி என்று கருதப்படுகிறவர். அவரது ஒரு நூற்றாண்டுத் தனிமை என்கிற நாவல் பிரசித்தி பெற்றது. (ஆங்கிலத்தில் மின் புத்தகமாக வைத்திருக்கிறேன். இன்னும் படிக்கவில்லை). தமிழில் மாய யதார்த்தத்தின் அடிப்படையில் அமைந்த, யுவன் சந்திரசேகரின் குள்ளச் சித்தன் சரித்திரம் என்ற நாவலைப் படித்திருக்கிறேன். அது பற்றி ஏற்கனவே என் எண்ணங்களைப் பதிவு செய்திருக்கிறேன்.
இவ்வகைக் கதைகளில் நமது யதார்த்த உலகுக்குள் அதீதமான மாயச் சம்பவங்கள் பின்னிப் பிணைந்து கிடக்கும். எந்த நிகழ்வும்  எப்படியும் நடக்கும். யாரும் எங்கும் பிரசன்னமாவர்கள். இக்கதைகள் தரும் அனுபவம் அபூர்வமானது. இதைத்தான் இக்கதை சொல்ல வருகிறது என்று அறுதியிட்டுக் கூற இயலாது. இக்கதைகள்  வினோதமானதும், புதிரானதுமான சூழ்நிலைகளுக்குள் நம்மை ஆழ்த்தி, நமது ஆதாரமான குணங்களையும், உணர்வெழுச்சிகளையும், தார்மீக சிந்தனைகளையும் கேள்விக்குள்ளாக்குகின்றன.
ஏதோ ஒரு நாளில் என்ற கதையில் பட்டம் பெறாத பல் டாக்டர் ஒருவரை  பல் மருத்துவத்துக்காகப் பார்க்க வருகிறார் நகர மேயர். அவரைப் பார்க்கப் பிடிக்கவில்லை மருத்துவருக்கு. பார்க்கவில்லைஎன்றால் சுட்டு விடுவேன் என்று மிரட்டுகிறார். அவரை அனுமதித்ததும், ஈறில் சீழ் கட்டியிருப்பதால் இதற்கு வலிநீக்க மருந்து உபயோகிக்க முடியாது. அப்படியேதான் பல்லைப் பிடுங்க வேண்டும் என்கிறார். தன் சக மனிதர்கள் இருபது பேர் துன்புறுத்தப் பட்டதற்கு மேயரிடம் பழி தீர்த்துக் கொள்கிறார் மருத்துவர். சாதாரண ஜனங்கள் தங்களை ஆதிக்கம் செலுத்தும் சக்திகளை வாய்ப்பு கிடைக்கும் போது பழி வாங்குவதற்குத் தயாராக இருப்பார்கள் என்பதை உணர்த்தும் கதை.
மேற்குறிப்பிட்ட கதை போலல்லாமல் மாய யதார்த்தம் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்வதற்கான அருமையான கதை மிகப்பெரும் சிறகுகளுடன் ஒரு வயோதிகன். தங்கள் வீட்டின் முற்றத்தில் சிறகுகள் கொண்ட ஒரு வயோதிகன் விழுந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ந்து போகின்றனர் ஒரு தம்பதியர். அண்டை வீட்டுக்காரி அவன் ஒரு சபிக்கப்பட்ட தேவதூதன் என்கிறாள். இருப்பினும் அவளைக் கொள்ள மனம் வரவில்லை அவ்வீட்டின் தலைவனுக்கு. மறுநாள் வீட்டில் அந்த தேவதூதனைப் பார்க்க கூட்டம் கூடி விடுகிறது. அவனைப் பார்க்கக் கட்டணம் வசூலிக்கப் படுகிறது. நகரத்தின் பங்குத்தந்தை வந்து அவனைப் பார்த்துவிட்டு இது சாத்தானின் செயலாக இருக்கக் கூடும் என்றும் இவனை அடித்து விரட்ட வேண்டுமென்றும் சொல்கிறார். . அவர் அவனை விரட்டுவதற்காக பிஷப்புக்குக் கடிதம் எழுதுகிறார்.
இருப்பினும் தேவதூதனின் புகழ்  கூடிக் கொண்டே போகிறது. உலகிலேயே துயரமிக்க நோயாளிகள் ஆரோக்கியம் நாடி அவனைப் பார்க்க வருகிறார்கள்  குழந்தைப் பருவத்திலிருந்தே இதயத்துடிப்புகளை எண்ணிக்கொண்டு வந்து தற்போது எண்களே இல்லாமல் போய்விட்ட ஏழைப்பெண், நட்சத்திரங்களின் சப்தம் தொல்லைப்படுத்துவதால் தூங்க முடியாமல் போய்விட்ட போர்த்துக்கீசியன், விழித்திருந்தபோது செய்தவற்றை மாற்றிச்செய்ய இரவில் தூக்கத்தில் நடக்கும் ஒருவன் எல்லாம் அவர்களில் அடக்கம். அவனும் ஏதோ அதிசயங்கள் நிகழ்த்துகிற மாதிரிதான் தெரிகிறது. பங்குத்தந்தை இந்த தேவதூதன் எப்போது ஒழிவான் என்று காத்திருக்கிறார்.
ஆனால் பிஷப் அவனை வைத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்ற கேள்விக்கு ஒரு முடிவெடுத்த மாதிரித் தெரியவில்லை. இந்த நேரத்தில் சிலந்தியாக மாற்றப்பட்ட ஒரு பெண் அங்கு கொண்டு வரப்படுகிறாள். அவளைப் பார்க்கக் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. தேவதூதன் நிகழ்த்தும் அதிசயங்களும் அவனுக்கு சாதகமாக இல்லை.  பார்வை திரும்பப் பெறாத குருடனுக்கு மூன்று புதிய பற்கள் முளைத்தது. பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டவன் நடப்பதற்கு பதிலாக லாட்டரியில் ஜெயித்தது, தொழுநோயாளியின் புண்களிலிருந்து சூரியகாந்திப் பூக்கள் முளைவிட்டது போன்றவை. எனவே மக்கள் கூட்டம் சிலந்திப் பெண்ணைப் பார்க்க முட்டுகிறது. அருட் தந்தை நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார். ஆனால் தேவதூதன் வந்து சேர்ந்த வீட்டுக்காரனான பெலயோவோ இதுநாள் வரை அவனை வைத்துச் சம்பாதித்த பணத்தில் சுகமாக வாழ ஆரம்பிக்கிறான். நோய் பீடிக்கப்பட்ட முதியவன் அவர்களுக்கு ஒரு சுமையாகி விடுகிறான். கடைசியில் அவன் சிறகுகள் உயிர் பெற்று அங்கிருந்து பறந்து வெளியேறும் பொது அவனுக்கும், அந்த வீட்டுக்காரர்களுக்கும் விடுதலை கிடைத்தது போலாகிறது.
ஆர். சிவகுமார் இக்கதையை மிக அழகாக மொழிபெயர்த்திருக்கிறார். அவருக்கு மிக்க நன்றி.

              
கர்லூப் பறவைகள் என்ற கதை கர்லூப் பறவைகளால் கண்கள் கொத்தப்பட்டுப்  பார்வை இழந்த மூன்று இளைஞர்களைப் பற்றியது. இந்தக் கதையைப் படித்தவுடன் ஒரு வினோதமான கதையைப் படித்த உணர்வு ஏற்பட்டாலும் ஆசரியர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிய வில்லை. இரண்டாவது முறை வாசித்துப் பார்த்தேன். அப்போதும் புரியவில்லை. கண் பார்வை இழந்த மூன்று பேரும் கைகள் கோர்த்தபடி நடக்கிறார்கள். தடவித் தடவித் தங்கள் இருப்பிடத்திற்கு வழி தேடுகிறார்கள். பிணங்களின் மீது நடப்பதாக பாவனை செய்து கொள்கிறார்கள். அவர்கள் கண்ணை இழந்த கதை செய்தித்தாள்களில் வந்திருந்த போதிலும் யாரும் நம்பவில்லை. இவை ஊடகங்களால் மிகைப்படுத்தப் பட்ட செய்தி என்றே நம்புகிறார்கள். தயவு செய்து யாராவது இதை வாசித்து விட்டு எனக்குப் புரிய வைத்தால் மகிழ்வேன்.

Comments

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை