கவிஞர் தேவதேவனுக்கு ஒரு கடிதம்
அன்புள்ள கவிஞருக்கு, இன்றைக்குப் பூராவும் உங்கள் கவிதைளையே வாசித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் எங்கோ உச்சத்தில் இருக்கிறீர்கள். உங்களைத் தொட உங்கள் கவிதைகளின் வாயிலாகவே முயற்சிக்கிறேன். சில கவிதைகள் சட்டென்று நேரடியான அனுபவத்தைத் தந்து உவகை கொள்ள வைக்கின்றன. சில கவிதைகளில் உங்களோடு பயணிக்கத் துவங்கி நீங்கள் உச்சத்தை அடையும் போது என்னால் அங்கு வர இயலாது போய் விடுகிறது. இதன் காரணம் என் மொழியின் பற்றாக்குறையோ, கவிமனதைப் புரியாதிருப்பதோ அன்று. உங்களது ஆன்மீகத் தளத்தை நான் இன்னும் தொட இயலாதிருப்பதே காரணம் என்று புரிந்து கொள்கிறேன். ஒவ்வொரு கவிதையையும் இருமுறை வாசித்தேன். வாய் விட்டு சொல் சொல்லாக இன்னொரு முறை. ஒவ்வொரு முறை கவிதையை வாசித்து முடிக்கும் போதும் மனம் அமைதியான புன்முறுவலுடன் உவகை கொள்கிறது. கவிதை தரும் சித்திரங்கள் மனதில் நிலைத்து அதை ஒரு படி மேலுயர்த்துகின்றன. ரயில் பெட்டியில் ஒரு கன்னிகாஸ்திரி என்ற கவிதையை நினைத்துக் கொள்கிறேன். வண்டி புறப்படவும் தனியே விட்டுவிட்டு மகிழ்ச்சியுடனே விடைபெற்றுச் சென்றனர் தோழிகள் என்ற துவக்க வரிகள் ரயில் பெட்டியில் நிகழும் அந்தத் த