கதைப் பார்வை


  யாரும் சிரிக்க மாட்டார்கள் - மிலன் குந்தேரா
தன் நலனுக்காகவும், தன் பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் பிறர் வாழ்க்கையில் எப்படி வேண்டுமானாலும் விளையாட தனக்கு அனுமதி உண்டு என்றெண்ணும் ஒரு பேராசிரியர் தன் செயல்களால் தானே அழிகிறார். தான் குப்பை என்று கருதும் கட்டுரை ஒன்றுக்கு முன்னுரை எழுதித் தருமாறு வேண்டிக் கொள்ளப் படுகிறார். எழுதித் தர விருப்பம் இல்லாமல்அதை தவிர்ப்பதற்காக அவர் செய்யும் தகிடுதத்தங்கள் அவருக்கே குழி பறிக்கின்றன.  குந்தேரா பரபரப்பாக நிறையக் காட்சிகளை அடுக்குகிறார். வாசிக்க சுவாரசியமாக இருக்கிறது.
ஓணான் கோடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள் - பவா.செல்லத்துரை.
கதையின் தலைப்பு சொல்வதைப் போல் இக்கதை நினைவுகளின் தொகுப்புதான். பாட்டியோடு மல்லாட்டை உரிக்கப் போகும் பேரனுக்கு, மல்லாட்டையிலிருந்து வெளிவரும் இளஞ்சிவப்பு நிற விதைகள் அவனது சிநேகிதியோடு மரத்தில் ஓணான் கோடி சுற்றி ஊஞ்சலாடிய நினைவுகளை மேல் கொணர்கின்றன. பாவாவின் நிதானமான, துல்லியமான, விவரணைகளுடன் கூடிய கதை சொல்லும் பாணியில், அவரது பால்ய கால நினைவுகள் ஒரு சித்திரமாகவே விரிகின்றன. வாழ்க்கை என்கிற பிரம்மாண்டமான திரைச்சீலை ஓவியத்தின் ஒரு தீற்றலை மட்டும் தரிசித்தது போன்றதொரு கதை.

விருந்தாளி - ஆல்பெர் காம்யு
       
பாலைவனமொன்றை ஒட்டிய மலைச் சிகரத்தில் தனித்து வாழும்  ஓர் ஆசிரியர் உதவி செய்யும் உள்ளம் படைத்தவராயிருக்கிறார். பஞ்ச காலத்தில் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள கோதுமை தானியத்தைத் தன் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். அவரிடம் கொலைக் குற்றம் செய்த ஒரு அரேபியன் ஒப்படைக்கப்படுகிறான். மறுநாள் அவனை மலைக்குக் கீழே உள்ள நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். அரேபியன் அவருடன் ஓரிரவு தங்குகிறான். அவனை கொண்டு செல்ல மனமில்லாத ஆசிரியர் மறுநாள் காலை அவனை வெளியில் நிறுத்தி ஒரு பக்கம் நீதி மன்றம் மறு பக்கம் அவனது சக மனிதர்களான அரேபியர்கள்; எந்த பக்கம் என்று அவனையே தீர்மானித்துக் கொள்ள விட்டு விடுகிறார். கொலைகாரன் நீதிமன்றத்தையே தேர்ந்தெடுக்கிறான். ஆசிரியரது அறையில் உள்ள கரும்பலகையில் தன் சகாவை நீதிமன்றத்தில் ஒப்படைத்த அவரைக் கொல்வோம் என்று எழுதியிருக்கிறது.
                
முதல் பார்வைக்கு சாதாரண கதை போல் தோன்றினாலும் கதை பல அடுக்குகளைக் கொண்டிருக்கிறது. ஒரு கொலைகாரனுடன் தனியே இரவைக் கழிக்கும் ஆசிரியரின் மனநிலை; இவன் தப்பித்துப் போய் விட மாட்டானா என்ற எதிர்பார்ப்பு; அதிகம் பேசாத, ஆசிரியரையும்  தன்னோடு வருமாறு அழைக்கிற அரேபியன் ஆசிரியர் தனக்குச் செய்த உதவிக்கு காட்டும் நன்றியுணர்வு எல்லாம் நுட்பமாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. கதை நிகழும் களமும், சூழ்நிலையும், காலநிலையும் காம்யூவின் எழுத்தில் நமக்குள் நிகழ்கின்றன. மிகவும் பிரசித்தி பெற்ற கதை.

இந்தக் கதை எழுதப்பட்ட காலத்தில் மிகுந்த கவனம் பெற்றது என்று ஜெயமோகனின் குறிப்பு சொல்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணவன் உடல் நலம் திரும்பி விட்டது என்ற நம்பிக்கையில் ஊர் திரும்பிய மனைவிக்கு அவர் உடல் நலம் மீண்டும் மோசமாகிவிட்டது என்று தந்தி வருகிறது. உடனே அவரைப் பார்க்க ரயிலில் கிளம்புகிறாள். ரயில் பயணத்தில் இரவில் அவளும், கூடவே பயணிக்கும் கதையின் நாயகனும் கொள்ளும் பதட்டமும், மன உளைச்சலுமே கதை. அவர் நலமாகத்தான் இருக்கிறார் என்று எண்ணி மனதைத் தேற்றிக் கொள்ளப் பார்க்கிறார்கள். மனம் அவர்கள் சொல் கேட்பதில்லை. பதட்டமுற்றபடியே இருக்கிறது. ரயில் ஊர் சென்று சேரவும் விடியவும் சரியாக இருக்கிறது. கணவன் நிலைமை என்ன என்று தெரிய வருகிறது. மனமும் அமைதி அடைகிறது.
      முடிவு சற்று மிகைப்படுத்தப்பட்டதைப் போல் தோன்றினாலும் ஜெயமோகன் சொன்னதைப் போல் மனித உளவியல் அங்ஙனம்தான் செயல் படுகிறது. ஒரு விஷயம் நிஜத்தில் நடந்து அதை எதிர்கொள்ளும் வலியை விட அது நடந்து விடுமோ என்று எதிர்பார்த்து துடிக்கும் anxiety  கொடுமையானது.

Comments

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை