சாதகனின் தகுதிகள்


    அபரோக்ஷ அனுபூதி என்ற நூலின் துவக்கத்தில் ஷங்கரர் தான் நோக்கத்தையும், யாருக்காக இந்த நூல் இயற்றப்படுகிறது என்பது பற்றியும், இந்த நூலை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும் குறிப்பிடுகிறார்.
அபரோக்ஷ அனுபூதி என்ற இந்த நூலைக் கற்பதன் தலையாய நோக்கம் மோக்ஷம் என்ற பலனுக்காகவே. மோக்ஷம் என்பது குறித்து நம்மிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. ஆனால் சாஸ்திரத்தின் அடிப்படையில் மோக்ஷம் என்பதன் உண்மையான பொருள் முழுமையான மனநிறைவு என்பதாகும். இந்த முழு மனநிறைவு எந்தச் செயலாலும் அடையப்படுவதில்லை. தன்னைப் பற்றிய உண்மையான ஞானத்தால் மட்டுமே அடையப்படுகிறது. மோக்ஷம் என்பது ஜீவன் முக்தி என்றும் அழைக்கப்படுகிறது. ஜீவன் முக்தி என்றால் இந்த உடலில் வாழும்போது நிறைவுடன் வாழ்தல் என்று பொருள். ஆத்ம ஞானத்தை அடையும் ஒருவன் தனது பிராரப்தம் முடியும் வரை ஜீவன்முக்தனாக வாழ்ந்து இறக்கிறான். அவ்வாறு இறத்தல் அவனது கடைசி மரணம் ஆகும். அதற்குப் பிறகு அவனுக்கு மரணம் இல்லை. அதாவது அவனுக்கு மறுபிறப்பில்லை. ஒரு ஜீவன்முக்தன் இறுதியாக உடலை விடும் நிகழ்வு விதேஹ முக்தி எனப்படுகிறது.
மனதை முழுமையாக நிறைக்கும் ஆவல் கொண்ட, மோக்ஷம் தவிர வேறெதுவும் லட்சியமில்லை என்ற தீர்மானம் கொண்ட, அந்த லட்சியத்தை அடையும் பயணத்தைத் துவக்குவதற்கான தகுதிகளையும் கொண்ட சத்புருஷர்களுக்காகவே இந்நூல் இயற்றப்படுகிறது. முழுமையாகத் தகுதிகளை அடையாதவர்கள் சாஸ்திரத்தைக் கற்க விழையலாமா என்ற ஐயம் எழக்கூடும். தகுதிகள் அற்ற ஒருவர் சாஸ்திரத்தைக் கற்கத் துவங்கும் போது, முதலில் சாஸ்திரம் அவருக்குத் தகுதிகளைக் கொடுத்து, பிறகு தொடர்ந்த சாஸ்திரக் கல்வி அதன் இறுதிப் பலனான ஆத்ம ஞானத்தையும், மோக்ஷத்தையும் கொடுக்கிறது.
இந்நூலைக் கற்கவிருப்பவர்கள், முழுமுயற்சியுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும், மீண்டும், மீண்டும் நன்கு விசாரம் செய்ய வேண்டும். சாஸ்திரத்தைப் பலமுறை படிக்கும்போதுதான் மனதிலிருக்கும் தோஷம் ஒவ்வொன்றாக நீங்கி ஞானமும், ஞானநிஷ்டையும் வாய்க்கும்.
அடுத்ததாக ஷங்கரர் சாஸ்திரத்தைக் கற்பதற்கான, அதாவது ஞானயோகப் பயிற்சியில் ஈடுபடுவதற்கான தகுதிகள் பற்றியும், அவற்றை எவ்வாறு அடைவது என்பது பற்றியும் விளக்குகிறார். இதற்கு அதிகாரித்துவ லாப உபாயம் என்று பெயர். ஒருவன் தனக்கு விதிக்கப்பட்டிருக்கிற கடமைகளை ஒழுங்காகச் செய்தல் என்ற ஸ்வதர்ம அனுஷ்டானத்தை கடைபிடித்து இறைவனைத் திருப்திப்படுத்துவதன் மூலம் வைராக்யம் முதலிய நான்கு பண்புகள் உற்பத்தியாகின்றன. ஸ்வ என்றால் அவரவர்களுக்குரிய என்று பொருள். ஒருவன் எந்த ஆஸ்ரமத்தில் இருக்கிறான் என்பதைப் பொறுத்து அவனது கடமைகள் மாறுபடும். ஆஸ்ரம் என்றழக்கப்படுகிற வாழ்க்கை நிலை, நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆஸ்ரமத்திலும் இருக்கிறவர்களுக்கென்று உரிய கடமைகளைச் செவ்வனே ஆற்றுவதன் மூலம் நம் மனம் செம்மையடைந்து, ஞானயோகப் பயிற்சிக்கான தகுதிகளைப் பெறுகிறது. ஸ்வதர்மத்தை மட்டும் கடைபிடித்து தகுதிகள் அடைவதற்குத் தாமதமாகுமெனில் யாத்திரை, உபவாசம் போன்ற தவங்களைச் செய்வதன் மூலம் தகுதியை அடையலாம்.
இனி தகுதிகளைப் பற்றிப் பார்க்கலாம். ஷங்கரர் இங்கு முதலில் வைராக்யம் என்ற தகுதியைப் பற்றிப் பேசுகிறார். வைராக்யம் என்பது அதிகபட்ச இன்பம் பயக்கக் கூடிய பிரம்மலோகம் தொடங்கி, பூலோகம் வரையிலான அனைத்து உலகங்களிலும், அந்த உலகப் பொருட்களிலும் உள்ள பற்றின்மையேயாகும். த்ருஷ்ட ஸ்ருத விஷயே வைராக்யம். பார்த்த, கேள்விப்பட்ட பொருட்களின் மீதுள்ள பற்றின்மையே வைராக்யம். இரண்டு விதமான வைராக்யங்கள் உள்ளன. ஒன்று, ஜிகாஸா வைராக்யம், அதாவது ஒரு பொருள் மீது கொண்ட வெறுப்பினாலோ, அல்லது பலவீனத்தாலோ வரும் பற்றின்மை அல்லது வெறுப்பு. மற்றொன்று, ஜிக்ஞாஸா வைராக்யம், அதாவது பொருட்கள் நிலையற்றவை என்ற அறிவினால் வரும் பற்றின்மை. உண்மையான வைராக்யம் என்பது பற்றின்மையே தவிர வெறுப்பு அல்ல. It is indifference; not hatred. வைராக்யம் கொண்ட ஒருவர் அன்பு, பாசம் கருணை போன்ற பண்புகளைக் கொண்டிருக்க மாட்டார் என்பது பொருளல்ல. காக்கையின் எச்சத்தைக் கண்டால் நமக்கு என்ன பாவனை ஏற்படுமோ அதே பாவனைதான் மோகத்தைக் கொடுக்கும் உலகப் பொருட்களிடத்தும் ஏற்பட வேண்டும். இப்படிப்பட்ட பாவனை கொண்ட வைராக்யம்தான் முழுமையானது.
வைராக்யம் என்ற இந்தப் பண்பு ஷமம், தமம் முதலிய பண்புகள் உற்பத்தியாகக் காரணமாகிறது. குரு சேவை, தவம், ஸ்ரத்தை முதலிய பண்புகளுக்கும் காரணமாகிறது.
அடுத்ததாகப் பேசப்படும் பண்பு விவேகம். விவேகம் என்ற சொல்லுக்கு விவேசனம், பிரித்தல் என்று பொருள். நிலையான, உண்மையான பொருளும், நிலையற்ற பொருளும் கலந்துள்ளது. அதை அறிவளவில் பிரித்தலே விவேகம் எனப்படுகிறது. அறிவினால் பிரித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்து, இது நித்யம், இது அனித்யம் என்ற நிஸ்சய அறிவுடன் புத்தி இருந்தால் அந்த அறிவே விவேகம் எனப்படுகிறது. தன் சொந்த அனுபவத்தையும், உலகோர் அனுபவத்தையும் சுயமாக ஆராய்ந்தும், காரணம் காரியத்தைக் காட்டிலும் மேலானது என்ற அனுமானத்தின் அடிப்படையிலும், ஸ்ருதியின் மேலுள்ள ஸ்ரத்தையால் ஏற்பட்ட, நித்யத்தைப் பற்றிய ஆபாச (அரைகுறை) ஞானத்தினாலும் என்னுடைய உண்மையான தன்மை சாஸ்வதமானது; நான் பார்த்து அனுபவிக்கும் இந்த உலகம் என் உண்மையான தன்மையான ஆத்ம ஸ்வரூபத்துக்கு மாறானது என்ற அறிவை ஒருவன் அடைகிறான். இந்த அறிவை அடைவதற்கு சாத்விகமான மனதால் மட்டுமே முடியும். சாத்விகமான மனம் மட்டுமே பிரித்துப் பார்க்கும் ஆற்றலுடையது. கீதையில் பகவான் சாத்விகப் பண்புகள், சாத்விக உணவு போன்றவை பற்றி விரிவாகக் கூறுகிறார்.
விவேகத்தின் பலன் வைராக்யம் ஆகும். விவேகம் விதை என்றால் வைராக்யம் மரம். விவேகமும், வைராக்யமும் ஒன்றுக்கொன்று உதவிக் கொள்ளும் பரஸ்பர உபகாரிகள். எண்ணெய் தொன்னையையும், தொன்னை எண்ணெயையும் தாங்கிப் பிடிப்பதைப் போல.
மூன்றாவது பண்பு ஷமம் எனப்படும் மன அடக்கம் அல்லது மன அமைதி ஆகும். முதலில் சாஸ்திரத்தில் சிந்திக்காதே என்று சொல்லப்பட்ட விஷயங்களின் எண்ண ஓட்டங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.நிஷித்த சிந்தா திரஸ்கார: இவ்விதமான எண்ணங்கள் ரகசியமானவையாதலால் நாம்தான் முயற்சி செய்து செயல் வடிவம் எடுக்கும் முன் இவற்றை நிறுத்த வேண்டும். இரண்டாவது அனர்த்த சிந்தா திரஸ்கார: பயனற்ற விஷயங்களைச் சிந்திப்பதை நிறுத்துதல். இதனால் நமக்கு ஏற்படும் பெரும் இழப்பு காலம் ஆகும். நமக்கு உள்ளேயிருக்கும் சம்ஸ்காரங்களிலிருந்து தோன்றும் பதிவுகள் விடாது தியாகம் செய்யப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இதுவே ஷமம் ஆகும்.
ஷமம் என்ற பண்பை அடைவதற்கான உபாயங்கள்: வைராக்யம் ஷமத்தை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது. அடுத்து நற்பண்புகளை வளர்த்திக் கொள்ளுதல். கீதையில் பகவான் தெய்வாசுர சம்பத் என்ற தலைப்பில் சொன்ன தெய்வீகப் பண்புகளை பயிலுதல்; பிறகு தியானம்; இது மனதுக்குக் கொடுக்கும் பயிற்சி ஆகும். ரமண மகரிஷி உன் எண்ணங்களைக் கவனித்துக் கொண்டேயிருந்தால் மனம் தானாகவே அடங்கி விடும் என்று கூறியிருக்கிறார். எந்தவித எண்ணங்கள் எழுந்தாலும் அவை பாதிக்காமல் மனதைப் பாதுகாத்தலே ஷமம் எனப்படும்.
நான்காவது பண்பு தமம் ஆகும். இது இந்திரியக் கட்டுப்பாடு அல்லது புலன் அடக்கம் ஆகும். இதுவும் இருவகையில் மேற்கொள்ளப் படுகிறது. சாஸ்திரத்தில் தடை செய்யப்பட்ட செயல்களை நிறுத்துதல். நிஷித்தப் பிரவிருத்தி திரஸ்கார: பயனற்ற செயல்களை நிறுத்துதல். அனர்த்தப் பிரவிருத்தி திரஸ்கார: புலன்களைத் தண்டித்தலே தமம் (தண்டனம் தம:) என்றும், வெளிப்புலன்களை ஒழுங்கு படுத்துதலே தமம் என்றும் ( நிக்ரஹ பாஹ்ய வ்ருத்தினாம் தம: இதி அபிதீயதே) கூறப்படுகிறது.
இனி தமத்துக்கான உபாயங்களைப் பார்க்கலாம். புலன்களை மயக்கும் சூழ்நிலையிலிருந்து விலகிவிடுதல் தமத்துக்குப் பேருதவியாக இருக்கும். தனிமையைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நமக்கு பலஹீனம் உள்ள விஷயத்தில் விரதம் எடுத்துக் கொள்ள வேண்டும். விரதம் எடுத்துக் கொள்ளுதல் நமக்கு ஒரு கட்டுப்பாட்டைக் கொடுக்கும். 

Comments

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை