ஆத்ம ஞானம் தேடும் ஒரு சாதகனின் தகுதிகளில் முதலில் வைராக்யம், விவேகம், சமம், தமம் இவற்றைப் பார்த்தோம். அடுத்ததாக உபரமம் அல்லது உபரதி என்ற பண்பு விளக்கப்படுகிறது. இது கர்மத்தியாகம். சங்கல்ப பூர்வமான கர்மங்களையும், சில பொறுப்புகளையும் விட்டு விடுதலையாவதை இப்பண்பு வலியுறுத்துகிறது. இதன் மூலம் ஞான யோகப் பயிற்சிக்கான, சிரவணத்துக்கான காலத்தை நாம் சம்பாதிக்கிறோம். உபரதி என்ற பண்பு, சமம் மற்றும் தமம் ஆகிய பண்புகளைத் தொடர்ந்து பாதுகாத்து வருதலையும் குறிக்கும். உள், வெளி விஷயங்களிலிருந்து திரும்பி அப்படியே இருத்தல் மேலான உபரதி: என்று அபரோக்ஷ அனுபூதி குறிப்பிடுகின்றது. நமக்கு நேரும் எல்லா துக்கங்களையும் வெறுப்பின்றி சகித்துக் கொள்ளுகிற சகிப்புத்தன்மை அல்லது பொறுமை என்ற தன்மையை திதிக்ஷா என்ற பண்பு வலியுறுத்துகிறது. நாம் விரும்பாத ஒன்று நடக்கும் போது அதை மாற்றுவதற்கு முழு முயற்சி எடுக்க வேண்டும். அப்படியும் அந்த நிலையை மாற்ற முடியவில்லையென்றால், வரும் விளைவுகளை குறை சொல்லாது ஏற்றுக் கொள்ளவேண்டும். நமக்கு விருப்பமான ஒன்றை அடையும் முயற்சியில் எந்தத் துன்பம் வரினும் இயல்பாகவே பொறுத்துக் கொள்வோம்.