கல்லளை - சிறுகதை
கல்லளை சிறுகதை நன்றி: சொல்வனம் - செப்டம்பர் 25, 2022 1 “என் ஒத்தப்புள்ள இனி எஞ்சி நிக்குமா? அது வளந்து நிக்கறத எங்கண்கொண்டு பாப்பனா?” மடியில் படுத்து முலைப்பாலுறிஞ்சிக் கொண்டிருந்த மகனின் தலையைத் தடவிக் கொடுத்தபடி பொம்மி கேட்டாள். அவள் கணவன் தன் சிக்குப் பிடித்த தாடியைச் சொறிந்தபடி, போர்த்திக் கொண்டிருந்த ஜமக்காளத் துணியை இறுக்கி, குளிரை அடக்கிக் கொண்டான். அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அவனிடத்தும் அதே கேள்வியே தொக்கி நின்றது. கங்காமூலாவெங்கும் மலைக்காடுகளில் பரவி வாழ்ந்த ஒவ்வொரு மலைச்சாதிக் குடியானவனுக்கும், குடியானத்திக்கும் கடந்த ஆறுமாதங்களாக இதே கேள்விதான். இதே கவலைதான். ஐந்துகுடிப் பெரியவர்களும் குலமுன்னோர் வழிபாட்டு நினைவிடமான ஹிரயிரிக்குச் சென்று தொழுது வணங்கிவிட்டு, அருகிலிருந்த தோதகத்தி மரத்தடியில் அமர்ந்திருந்தனர். இருட்டு சாரைப்பாம்புக் கூட்டத்தைப் போல சரசரவென்று எங்கும் பரவிக் கொண்டிருந்தது. விரைந்து இறங்கும் கடுங்குளிரை விரட்ட எதிரில் சவுக்குக்கட்டைகளைக் கும்பாரமாகக் குவித்து நெருப்பு மூட்டப்பட்டிருந்தது. குடிக்கு எட்டுப் பேராக நாற்பது பேர் பெரியவர்கள் முன்ன