வீடு மல்லிகைப்பூ
என் நாணயத்தின் மூன்றாம் பக்கம் என்ற சிறுகதையை ( மைக்ரோ நாவல் என்று நான் அதை அழைக்க விரும்பினேன். நானும் நாவல் எழுதினேன் என்றாகி விடுமல்லவா?) இப்படித்தான் ஆரம்பித்தேன். பிறகு ரொம்ப நாட்கள் அப்படியே கிடப்பில் போட்ட பிறகு, இக்கதையை ஆங்கிலத்தில் எழுதினால் என்ன என்று யோசித்து எழுதி முடித்தேன். (the coin) . பிறகு அதைத் தமிழிலும் மொழிபெயர்த்தேன். ஆனால் அதன் முதல் வடிவமான இதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. வீடு மல்லிகைப்பூ மணமும் , பட்டுப்புடவை சரசரப்புமாக இருந்தது. ரகு ஒரு மூலையில் அமர்ந்து நான்கு மணி தேநீரை அருந்திக் கொண்டிருந்தான். ஓமத்ரா குடிப்பவன் போல மாறியிருந்த முகத்தை மறைக்கச் சிரமப்பட்டான். முழுசாய்க் குடிக்காமல் கீழே வைக்கக்கூடாது என்று மைதிலி சொல்லியிருக்கிறாள். மாப்பிள்ளைக்கு மாமனார் வீட்டு உபசரிப்பு பிடிக்கவில்லையென்று நினைத்துக் கொள்வார்களாம். மைதிலியின் அக்கா பெண் தன் பட்டுப் பாவாடையைக் கையில் தூக்கிக் கொண்டு அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தது. முன்னரே அது ஓடுகிற பாதையில் டம்ளரை வைத்திருந்தால் குடிக்கிற சிரமம் இருந்திருக்காது.