எரி நட்சத்திரம் - சிறுகதை, பாலாஜி ராஜூ - என் பார்வை

 


எரி நட்சத்திரம் - சிறுகதை, பாலாஜி ராஜூ

அன்புள்ள பாலாஜி,

கதை எனக்குப் பிடித்திருந்தது. உங்கள் மொழி தீவிரமாகவும், தத்துவார்த்தமாகவும் ஒழுகிச் செல்கிறது. அழகாகக் கதையைக் காட்சிப் படுத்தியிருக்கிறீர்கள். உரையாடல்கள் தேர்ந்த முறையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இயற்கை வருணனை மிகத் துல்லியமாக வந்திருக்கிறது. நீங்கள் கதையில் சாதிக்க நினைத்ததைச் சாதித்து விட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.

மலைகளின் மீது அவருக்கிருக்கும் பிரேமை நன்றாக வெளிப்பட்டிருந்தது. இயற்கை இக்கதையில் ஒரு பாத்திரமாகவே வெளிப்பட்டது. அந்தத் தம்பதிகளின் பயணம் குறித்த குறிப்புகளும் அழகானவை.

கதையின் முடிவும் எனக்குப் பிடித்திருந்தது. ஒரு சிறுகதைக்குத் தேவையான சின்ன வெளிப்பாடு. “ஆம்” என்று மட்டும் சொன்னேன் - என்ற வரி மிகக் கனமானது.

இவ்வளவு சிறிய கதையில் உங்களால் கனமான விஷயத்தைக் கூற முடிகிறது. எனக்குச் சற்றுப் பொறாமை.

எரி நட்சத்திரத்தில் துவங்கி அதிலேயே முடிவது கதையை அழகாக்குகிறது. அவர் எரி நட்சத்திரம் பார்த்த அதே வீட்டில், அதே சாளரம் வழியே, கதை சொல்லியும் பார்ப்பது கவித்துவமான தருணம்.

ஒரு புனைவெழுத்தாளனுக்குரிய மொழி உங்களுக்குக் கைவந்து விட்டது. எந்த எழுத்தாளரையும் நினைவூட்டவில்லை. நீங்கள் நிறைய புனைவு எழுதுங்கள். பல ஆங்கிலப் பதங்களை மிக அழகாகத் தமிழ்ப்படுத்தியிருந்தீர்கள். 

அமெரிக்க வாழ்க்கையை எழுதும் தமிழர்கள் மிகச்சிலரே. அவ்வகையில் நீங்கள் தனித்துவம் மிக்கக் கதைகளை எழுதக்கூடும்.

தயவு செய்து விமர்சனங்களுக்காகவோ, உயர் பீடத்திலிருப்பவர்களின் அங்கீகாரம் இன்னும் வரவில்லை என்பதற்காகவோ, உங்கள் எழுத்து இன்னும் தகுதி பெறவில்லை என்ற முடிவுக்கு வரவேண்டாம். எழுத்தில் இயங்கும் போது எழுத்தாளனுக்கென்றே ஒரு சிறு ஆணவம்தான் அவனை படைப்பில் ஈடுபடுத்துகிறது. தனி வாழ்க்கையில் அந்த ஆணவத்தோடு இருக்கத் தேவையில்லை. ஆனால் எழுதும்போது அது தேவை. (எனக்குச் சொல்லிக் கொள்பவை). தொடர்ந்து எழுதுங்கள்.

என் கண்ணில் பட்ட சிறு, சிறு விஷயங்களைச் சொல்கிறேன். வாகனம் என்று முதலில் சொல்கிறீர்கள். என்ன வாகனம் என்று சொல்லவில்லை. பின்னர் அவரே ஆர்.வி என்று சொல்கிறார். எனவே என்ன வாகனம் என்று சொல்லத் தேவையில்லை. சிறு குருவிகள் என்ன வகை என்று எழுதினால் நன்றாக இருக்கும். “பொருட்களால் நிறைந்திருந்த வாகனம்” என்னென்ன பொருட்கள் என்று பட்டியலிட்டால் வாசகன் கற்பனையிலேயே அவை பயணத்துக்கான பொருட்கள் என்பதைக் கண்டுவிட முடியும். கதையில் பொதுவான தகவல்களைத் தருவதற்கு பதில் குறிப்பான தகவல்களைத் தரலாம்.

“நான் இதே வீட்டை வாங்கியிருப்பதையும் இங்கு குடிபெயரப்போவதையும் அவரிடம் சொல்லவில்லை.” - இந்த வரி தேவையா என்று யோசிக்கவும். நீங்கள் அந்த மனிதர் சொன்ன அதே எண்ணுள்ள வீட்டுக்குள்தான் நுழைகிறீர்கள். அவ்வீடு எவ்வகையாயினும் உங்களுக்குத் தொடர்புள்ளதாக இருக்குமென்பதை வாசகன் ஊகித்து விடுவான்.

கதையின் உள்ளடகத்தில் எனக்கிருக்கும் ஐயங்கள் சில:

கதை சொல்லி ஒரு விதமான குற்ற உணர்வுடன் அக்கதையைக் கேட்பதாகப் படுகிறது. அது ஏன்? அப்படி ஏதேனும் காரணம் இருந்தால் அதைக் கதையில் கோடி காட்டலாம்.

எரி நட்சத்திரம் கணத்தில் தோன்றி மறையும் ஒன்று, அது போல்தான் மனித வாழ்க்கையும் உறவுகளும் என்பதாக நான் புரிந்து கொள்கிறேன். அது அபூர்வமாகத் தோன்றக் கூடியது. மனித வாழ்வும் அங்கனமே. இதை இன்னும் எக்ஸ்ப்ளோர் செய்யக் கதையில் இடம் இருக்கிறதா?

கதை சொல்லி இக்கதையில் அவருடைய கதையைக் கேட்பதன் மூலம் அடையும் மாற்றம் என்ன?

இது மாதிரி பலவிஷயங்களை வாசகன் ஊகத்துக்கு விட்டிருப்பதைப் புரிந்து கொள்கிறேன். இருப்பினும் இன்னும் சில முறை வாசித்து, நிரப்ப வேண்டிய இடைவெளிகள் உள்ளனவா என்று பார்க்கலாம்.

அவர் காலி செய்து விட்டுச் சென்ற அதே வீட்டை கதை சொல்லி வாங்கியிருக்கிறான். அவ்வீட்டில் அவரது நினைவுகள் உள்ளன. இதற்கும் மேலதிகமாக இக்கதை சொல்ல வருவதென்ன? (இக்கதைசொல்லி போலவே, எனக்கும், வீட்டை வாங்குகையில் என் வீட்டு முன்னாள் சொந்தக்காரர் குறித்து எதுவும் தெரியாது. அமெரிக்க வாழ்வின் இந்த குரூர யதார்த்தத்தை இக்கதை நன்றாகப் பதிவு செய்திருக்கிறது) சிறுகதை வாழ்வின் ஒரு துணுக்கை விவரிப்பதோடு நின்று விடாமல், ஆதாரமான ஒரு கேள்வியை எழுப்பக்கூடியதாகவும் அமைந்தால் சிறப்பாக இருக்கும். உதாரணத்துக்கு, கதைசொல்லி உள்ளத்தில் அந்த வேளையில் உழன்று கொண்டிருக்கும் சொந்தப் பிரச்னையை எதிரொலிப்பதாக அந்தக் கதை அமைந்திருந்தால்?

எழுத்துப் பிழை, நிறுத்தற்குறிப்பிழைகள் சில உள்ளன. நூறாண்டுகள் கழித்தும் ஏதோ ஒரு வாசகன் இக்கதையை வாசிக்க வாய்ப்புள்ளதால், இப்போதே திருத்தி விடுவது நல்லது. (எனக்கும் சொல்லிக் கொள்கிறேன்).

இந்தக் கதை ஓர் இலக்கிய இதழில் வெளியாவதற்கான முழுத்தகுதியும் கொண்டது. நீங்கள் இதை சொல்வனத்துக்கு அனுப்பலாம். தொடர்ந்து நீங்கள் படைப்புகளை இதழ்களுக்கு அனுப்ப வேண்டும் என்பதே என் கோரிக்கை. சொல்வனம், பதாகை போன்ற இதழ்கள் பாதுகாப்பானவை என்றே நினைக்கிறேன். அவற்றுக்கு நீங்கள் அனுப்பலாம்.


Comments

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை