23 அக்டோபர், 2011

சற்குணம் என்ற அசல் கலைஞன்

             சமீபத்தில் மூன்று  தமிழ் திரைப்படங்கள் பார்த்தேன். எங்கேயும் எப்போதும், தெய்வத் திருமகள் மற்றும் வாகை சூட வா. ஆச்சரியமூட்டும் வகையில் அதில் இரண்டு படங்கள் நல்ல கருத்துக்களைச் சொல்லும் லேசான பிரசார தொனி கொண்ட கதைகளைச் சொல்பவை. எங்கேயும் எப்போதும் பேருந்து விபத்து ஒன்றை பின்புலமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. பேருந்தில் பயணம் செய்பவர்களையும் அவர்களது பின்புலத்தையும் அறிமுகப்படுத்தி அவர்களோடு நமக்கு உணர்வு பூர்வமானதொரு உறவை ஏற்படுத்தி விடுகிறார் இயக்குனர். பிரதான கதை மாந்தர்கள் மட்டுமின்றி விபத்துக்குள்ளாகும் இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்யும் அனைத்துப் பயணிகளுமே மனதில் நன்கு பதிந்து விடுகின்றனர். ஜெய் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். எந்த போலித் தோரணைகளுமின்றி இயல்பாக நடிக்கக் கூடியவர். ஒரு சராசரி குறு நகரத்து இளைஞனை நினைவு படுத்தும் தோற்றம் கொண்டவர். அவரது உரையாடல் வெளிப்பாடு தனித்துவமும், எளிமையும் கொண்டது. அஞ்சலியும் அப்படியே. தமிழ்த் திரைக்கதாநாயகிகளில் நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர். எனக்கு மிகவும் பிடித்த கதாநாயகி. இன்னொரு ஜோடியாக வரும் ஆனந்யாவும், ஸ்ரவனும் (தெலுங்கு)  அருமையாக நடித்துள்ளனர். படம் முடியும் போது இதயம் கனமாகிறது. படம் குறித்தும், சாலைப் பாதுகாப்பில் நம் பொறுப்பற்ற தன்மை குறித்தும் நீண்ட நேரம் சிந்திக்க வைக்கிறது. லோன்லி பிளானெட் என்கிற பயண வழிகாட்டி நூலில் இந்தியா செல்லும் போது பேருந்துப் பயணங்களைத் தவிர்த்து ரயில் பயணங்களையே மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது
                     வாகை சூட வாவின் இயக்குனர் சற்குணம் முதல் படத்திலயே என் இதயத்துக்கு மிகவும் நெருக்கமான இயக்குநராகி விட்டார். களவாணியையை இன்ச் இஞ்சாக ரசித்துப் பார்த்தேன்.விமலும் அவரது சகாக்களும் அடிக்கும் கூத்துக்கள் எனக்கு என் பிளஸ் டூ நாட்களை நினைவு படுத்தியது. புதுக்கோட்டை தஞ்சாவூர் அரியலூர் மாவட்டங்களின் மக்கள் வாழ்க்கையையும், மொழியையும் அற்புதமாகப் பதிவு செய்கிறவராக இருக்கிறார் சற்குணம். களவாணி திரைப்படம் வெறும் பொழுதுபோக்குப் படமாக  மட்டுமே வகைப்படுத்தப் பட்டதிலும், அந்தப் படம் அதிக கவனிக்கப்படாமல் போனதிலும் எனக்குக் கொஞ்சம் வருத்தம்தான்

                 வாகை சூடாவாவிலும் தன அழுததமான முத்திரையைப் பதித்துள்ளார்.  ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில் நிகழும் கதை. செங்கல் சூளையில்  கல்லறுக்கும் சிறுவர்களுக்கு கல்வி புகட்ட வரும் ஓர் ஆசிரியரைப் பற்றிய கதை. கல்வி விழிப்புணர்வுப் பிரச்சார திரைப்படமாகவே இந்த திரைப்படத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது என் கருத்து.

                     வாகை சூடாவாவிலும்  தன் அழுத்தமான முத்திரையைப் பதித்துள்ளார். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில் புதுக்கோட்டையில் நிகழும் கதை. செங்கல் சூளையில் கல்லறுக்கும் சிறுவர்களுக்கு கல்வி புகட்ட வரும் ஓர் ஆசிரியரைப் பற்றிய கதை. விமல் இந்தப் படத்திலும் இயல்பாக நடித்திருக்கிறார்கதாநாயகி கேரளத்து அழகி. ஆனால் தமிழ் முகம். கிராமத்துக் களை. டூ நாலெட்டு, நொண்டி மணி, வைத்தியர், குருவி சாமியார் என்று கதா பாத்திரங்கள் உண்மையின் பிரதிகளாக வடிவமைக்கப் பட்டிருக்கின்றன

         டூ நாலெட்டு போடும் எளிய புதிர்க் கணக்குக்கு விடை தெரியாமல் விழிக்கிறார் விமல். இந்தக் கணக்கையையே அவுக்கத் தெரியல நீ எங்க புள்ளைங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கப் போற என்று கிண்டலடிகிறார்கள் கிராமத்தார்அந்தக் கிராமத்தில் மூன்று மாதம் வேலை செய்தால் கிடைக்கும் சான்றிதழின் மூலம் தனக்கு அரசு வேலை கிடைத்து விடும் என்ற எதிர்பார்ப்பில்,கிராமத்தார் புறக்கணிப்பையும் , சிறுவர்களின் சதிவேலைகளையும் , தினமும் சமைத்துத் தருகிறேன் என்று சொல்லி காசு வாங்கிக் கொண்டு ஏமாற்றும் நாயகியின் காதல் பார்வையையும் சமாளித்துக் கொண்டு காத்திருக்கிறான் நாயகன். ஆண்டையால் அவ்வூர் மக்கள் சுரண்டப்படுவது அறிய வரும் போது தன் உண்மையான பணி என்ன என்பதை அறிகிறான்.

                செங்க மண்ணு தின்னும் பசங்கள், முட்ட வரும் ஆட்டை மறித்து நீ என்ன புலியா என்று கேட்டு புளி கொடுத்து ஆட்டை மடக்கும் சிறுவர்கள், குருவி சத்தம் கேட்குது என்று சொல்லித் திரியும், அவ்வூர் மக்களுக்குத் தெய்வமெனத் திகழும் அழுக்கு சாமியார், நான் பேச நினைப்பதெல்லாம் பாடல்  வானொலியில் ஒலிக்கும் போதெல்லாம் அதனருகே மயங்கி நிற்கும் நாயகி எல்லாமே மனதின் அழியாத சித்திரங்கள்.
அறுபதுகளைக் கண் முன் காட்ட மிகுந்த முயற்சி எடுத்திருக்கிறார் சற்குணம். காபி கோட்டை அரைக்கும் எந்திரம், சைக்கிளின் முகப்பில் மாட்ட விடும் மண்ணெண்ணெய் விளக்கு, அதிகாரமும் பிலுக்களுமாய்ப் பேசும் போஸ்ட் உமன், முழங்கால் வரை தொங்கும் சிலிட் வைத்த முழுக்கை சட்டை, செங்கல் ஆர்டர் தருபவர் அணிந்திருக்கும் பாரதியார் பாணி உடை எல்லாமே இதற்கு ஆதாரங்கள். செங்கல் சூளை கிராமம் மட்டும் செட்  போட்டதைப் போல தெரிகிறது. ஆனால் நான் இதற்கு முன் இப்படிப் பட்ட இடங்களைப் பார்த்ததில்லை என்பதால் பெனபிட் ஆப் டவுட்டை சற்குணத்துக்கு வழங்குகிறேன்

                 இந்தப் படம் சரியாகப் போகவில்லை என்று கேள்விப்பட்டேன்.நல்ல திரைப்படங்கள் ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்டு, தெய்வதிருமகள் போன்ற போலிகள் ஊதிப் பெரிதாக்கப்பட்டு மக்களால் கவனிக்கப்படும் நிலை தொடரும் வரை சற்குணம் போன்ற அசலான கலைஞர்கள் இருட்டடிப்பு செய்யப்படுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். ஹாலிவுட் படங்களின் கதைகளைத் திருடி, அதைத் தமிழ் சினிமாவுக்கேற்ற வகையில் சொதப்பலாக மாற்றி, தானே கதையை எழுதியதாக பெருமையடித்துக் கொள்ளும் விஜய் போன்ற அரைவேக்காட்டு மொக்கை இயக்குனர்கள் வன்மையாக நிராகரிக்கப் படவேண்டும்.

           தெய்வத் திருமகள் ஒரு ஆங்கிலப் படத்தின் பிரதி என்கிறார்கள். எனக்கு படம் பார்த்து முடித்தபின் எரிச்சலாக இருந்தது. விக்ரம் கமல்ஹாசன் போலாகி விட்டார். ராவணன் படத்தின் ஓவர் ஆக்டிங் இந்தப் படத்திலும் தொடர்ந்திருக்கிறது.
  

9 அக்டோபர், 2011

இருத்தல்



கடல் மீது நெளியும் வெயில்
வளைக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் மணல் நிற நண்டுகள்
அலைகள் சமப்படுத்திச் சென்ற மணற்பரப்பை
இலக்கற்றுக் கோடுகள் கிழித்துச்
சிதைக்கும் விரல்கள்.
தாழ்வாய்ப் பறந்து மீன் தேடும் கடற்பறவைகள்.
படகுகள் எழுப்பிச் சென்ற அதிர்வுகளுக்கு
அஞ்சிக் கரையொதுங்கும் குற்றலைகள்.
எதிரில் விரிந்த பிரம்மாண்டத்தின்
முன்னிலையில்
ஒரு துளியென நான்
கரைந்தபடி.

27 செப்டம்பர், 2011

முள்


பத்து வயதில் என் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. பள்ளிப்பருவத்தில் கோடை விடுமுறைக்கு எங்கள் தாத்தா வீட்டுக்குச் செல்வது வழக்கம். எங்கள் தாத்தா திரையரங்கு ஒன்றின் மேலாளராக இருந்தார். திரையரங்கை ஒட்டி ஒரு பெரிய கோடவுன் இருந்தது. வெள்ளாவி வைத்து வேக வைத்த நெல்லை கோடவுனில் பரப்பிக் காயப் போடுவார்கள். கோடவுனிலேயே தங்கி நெல் காய வைத்தது ஒரு குடும்பம்.நெல் காயப் போடாத சமயங்களில் காலியாகக் கிடக்கும் கோடவுன் எங்களது விளையாட்டு மைதானமாக மாறிவிடும். கிரிக்கெட், ஹாக்கி, கிட்டிப்புள் என்று மனதுக்குத் தோதான விளையாட்டுகளை ஆடுவோம்.என் வாழ்க்கையில் நான் ஹாக்கி மட்டையைத் தொட்டிருக்கிறேன் என்பதை நினைத்து எனக்கு இன்னும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. முதல் முறை ஹாக்கி விளையாடியபோது பந்தை அடிப்பதற்கு பதிலாக பக்கத்து வீட்டு நந்தகோபாலின் பல்லை உடைத்து விட்டேன். அவன் வாயெல்லாம் ரத்தம். நல்லவேளை. பல் மீண்டும் வளர்ந்து விட்டது.
ஒருமுறை நானும் என் தம்பியும் காலியாக இருந்த கோடவுனில் ஹாக்கி விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது நான் அடித்த பந்து கோடவுன் காவலாளியின் வீட்டுக்குள் சென்று விட்டது. காவலாளியின் மனைவி கோபத்தோடு வெளியே வந்து எங்களைப் பார்த்துக் கத்தினாள். பந்தை எடுத்துக் கொண்டு தரமுடியாதென்று சொல்லி விட்டாள்.கோடவுனை விட்டு உடனே வெளியேறும் படிக்  கூறினாள். நாங்கள் எவ்வளவோ கெஞ்சியும் அவளிடமிருந்து பந்தைப் பெற முடியவில்லை. கோபத்தோடும், வருத்தத்தோடும் அங்கிருந்து வெளியேறினோம். வெளியில் என் தம்பி தன் பையிலிருந்து ஒரு சாவிக்கொத்தை எடுத்துக் காட்டினான். வெளியே வரும்போது அங்கிருந்து லவட்டிக் கொண்டு வந்து விட்டான் போலிருக்கிறது. எங்களுக்கு அவள் மீதிருந்த கோபத்தில் இந்த சாவிக் கொத்தை வைத்து அவளை என்ன என்னவெல்லாம் செய்யலாம் என்று திட்டம் போட ஆரம்பித்தோம். அந்த சாவிக்கொத்து முக்கியமானதென்று அதன் அமைப்பிலிருந்தே புரிந்து விட்டது. கோடவுன் சாவி, காவலாளியின் வீட்டுச்சாவி, தியேட்டரிலிருந்து கோடவுனுக்கு வர இயலும் அவசர வழியின் கதவைத் திறக்கும் சாவி எல்லாம் அதில்தான் இருந்தன. எனவே அந்த சாவிக்கொத்து தொலைந்தால் அவள் பெரிய பிரச்னையில் சிக்கிக் கொள்வாள் என்று அனுமானித்தோம். நாலு தெரு தாண்டிச் சென்று அங்கிருந்த ஒரு பெரிய சாக்கடையில் அந்தச் சாவிக்கொத்தைப் போட்டுவிட்டோம்.
சாவிக்கொத்து காணவில்லை என்பதைக் கொஞ்ச நேரத்திலேயே கண்டுபிடித்து விட்ட காவலாளியின் மனைவிக்கு உடனேயே எங்கள் மீது சந்தேகம் வந்து விட்டது. எங்கள் வீடு முன் வந்து சாவியைத் தரச் சொல்லி காட்டாடம் ஆடினாள். சாவி எங்களிடம் இல்லவே இல்லையென்று சத்தியம் செய்தோம். அவள் நம்பவே இல்லை. முனியப்பன் கோயிலில் திருடினவன் உண்மையைச் சொல்லும் வரை ரத்த வாந்தி எடுத்து, வயித்தால போகுமாறு வேண்டிக் கொள்ளப் போவதாகச் சொன்னாள்.
அவள் சொல்வது நம்பக்கூடியதாகவும் இருந்தது; நம்ப இயலாததாகவும் இருந்தது. வயிற்றை எக்கி எக்கி ரத்த வாந்தி எடுக்கும் என் சித்திரம் என் முன் தோன்றியபோது எனக்குத் திகிலாக இருந்தது. என் தம்பி என்னைப் பார்த்த பார்வை என் எண்ணத்தை ஆமோதிப்பதைப் போலிருந்தது. இருவரும் அவசர  அவசரமாகக் கிளம்பி மேற்படி சாக்கடைக்குச் சென்று பெரிய குச்சி விட்டு கிளறினோம். நெடுநேரம் கிளறியும் சாவிக்கொத்து சிக்கவில்லை. எனக்குக் கிலி பிடித்து விட்டது. இருந்தும் என்ன செய்யபேசாமல் இருவரும் வீடு திரும்பினோம். ரத்த வாந்தி எடுக்கப் போகும் நாளுக்காகக் காத்திருந்தோம். அந்த நாள் இன்று வரை வரவே இல்லை. சாவிக்கொத்தைத் தொலைத்ததால் அந்தப் பெண்மணி என்ன பாடுபட்டாள், முதலாளியிடம் எப்படியெல்லாம் திட்டு வாங்கினாள் என்பதெல்லாம் புரிந்து கொள்ள முடியாத வயது. ஆனால் அந்தக் குற்ற உணர்ச்சி இன்று வரை என்னில் இருக்கிறது. குற்றமும் தண்டனையும் நாவலில் தோஸ்தோவஸ்கி தண்டனையாக இந்தக் குற்ற உணர்ச்சியைத்தான் குறிப்பிடுகிறார். சமீபத்தில் என் வகுப்பில் அவர்கள் வாழ்நாளில் தெரிந்தே செய்த தவறைப் பகிர்ந்து கொள்ளும்படிச் சொன்னேன். அப்போது இந்தச் சம்பவத்தை  அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். கொஞ்சம் மனம் லேசானதைப் போல் இருந்தது.

மேலும் வாசிக்க