நாணயத்தின் மூன்றாம் பக்கம் 6

‘நான் ஒரு நிமிடம் அவரையே ஆழ்ந்து நோக்கியபடி இருந்தேன். அவர் என்னிடம் அப்போது சொன்னவற்றைப் பற்றிச் சிந்தித்தபடியிருந்தேன். அவர் குரல் நாடோடியைப் போல் ஒலித்தாலும், அதிலிருந்த மெல்லிய நடுக்கம் அவரது பணி வாழ்க்கையின் மாலைப் பொழுதின் எதிர்பாராது நிகழ்ந்து விட்ட திருப்பங்களால் அவர் பட்டிருந்த காயங்களைப் பறை சாற்றுவதாக இருந்தது. அவருக்கு கிடைத்துக் கொண்டிருந்த கொழுத்த சம்பளத்தோடு மட்டுமின்றி, நல்ல தரத்தோடு குறித்த நேரத்தில் துணியை உற்பத்தி செய்து தருவதற்காக வாடிக்கையாளர்களிடம் பெற்றுக் கொண்டிருந்த கமிஷனையும் நிர்வாக இயக்குனரிடம் நிகழ்த்திய சில நிமிட உரையாடலிலேயே இழந்து விட்டார். இப்போது தன் அவலத்தை நியாயப்படுத்திக் கொண்டிருப்பதாகத்தான் பட்டது. வாழ்க்கையில் அவருக்கென்று தேர்வுகள் இல்லையென்பது எனக்குத் தெரியும். அரிசி மண்டியில் மொத்த வியாபாரம் செய்யும் விற்பனையாளர் ஒருவரிடம் வாங்கிய 86 ஆம் வருடத்திய பஜாஜ் ஸ்கூட்டரைத்தான் இன்னும் ஓட்டிக் கொண்டிருந்தார். அவர் அணிகிற ஆடைகள் பதினைந்து வருடங்களுக்கு முன்பு வாங்கியவை. ஒரு எளிய உணவில் அவரால் திருப்தி அடைந்து விட முடியும். ஆனால் அவர் குடும்பத்துக்குச் செய்கிற எல்லாவற்றையும் குறை செய்கிற ஒரு கல்வியறிவற்ற மனைவியும், அவர் பணத்தை அழகு சாதனங்களில் ஊதாரித்தனமாகச் செலவழிக்கிற இரு பதின்பருவ மகள்களும் இருந்தனர். ஆடை பதனிடும் தொழிற்சாலையில் உள்ள என் நண்பர்கள் மூலமாக அவர் கையில் ஒன்றும் அவ்வளவு பெரிய இருப்பு இல்லை என்றும் தெரிந்து கொண்டேன். சிறிய ஆலைகளிலிருந்து சில ஆர்டர்களை எடுத்திருந்தார். அவற்றைப் பல்வேறு பதனிடும் நிலைகளினூடாகத் தொடர்வதன் மூலம் வரும் வருமானம் அவரது அன்றாடச் சொந்தச் செலவுகளுக்கே போதாது. இதில் குடும்பச் செலவுகளுக்கு எங்கே காணும்?
நான் சிந்தனையில் ஆழ்ந்திருப்பதைப் பார்த்து, ‘ எனக்குப் பொருளாதார ரீதியா கொஞ்சம் சிரமம்தான். நான் உன்னைத் தொடர்பு கொள்ளனும்னு நினைச்சேன்; உனக்கு மெயில் அனுப்பினேன்; உன் நம்பருக்குப் ப்ல தடவை கூப்பிட்டுப் பார்த்தேன். நீ அசையல. உன் காரீயர்ல நீ கவனம் செலுத்திட்டு இருந்திருப்பேன்னு நினைக்கிறேன்.
நான் வேலை மும்முரத்தில்தான் இருந்தேன். ஒரு தரக்கட்டுப்பாட்டு அலுவனாக இருந்ததில் இருந்து பங்களூருவில் உள்ள புகழ் பெற்ற ஒரு கல்வி நிலையத்தின் விரிவுரையாளனாக என் தொழிலை மாற்றிக் கொண்டேன். அந்த வேலை போதுமானது என்று சொல்வதற்கும் மேலான பணம் கொடுத்தது. ஐந்து வருடத்தில் நான் முற்றிலும் மாறிய மனிதனாகி விட்டேன். என் சொந்த ஊரில் வீடு கட்டிவிட்டேன். என்னிடம் செவர்லே காரும், வங்கியின் நிரந்தர சேமிப்புத் திட்டத்தில் கொழுத்த பணமும் இருந்தன. ராமகிருஷ்ணன் என்னைத் தொடர்பு கொள்ள முயன்றது என்னிடம் பொருளாதார உதவி எதிர்பார்த்துதான் என்று எனக்குத் தெரியும்; அந்தக் காரணம் பற்றியே நான் அவருடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க முயற்சித்தேன். துணி ஆலையிலிருந்து ஒரு நண்பர் என்னைத் தொடர்பு கொண்டு, ராமகிருஷ்ணன் தனியாக ஒரு சந்தைப்படுத்தும் நிறுவனம் துவங்க எண்ணம் கொண்டுள்ளதாகவும், அதற்கென தேவைப்படும் பெரிய தொகையை என்னிடம் கேட்க வாய்ப்புண்டு என்றும் தகவல் கொடுத்தார். வீடு கட்டும் சுமை மட்டும் இல்லாதிருந்திருந்தால் நான் அவருக்கு உதவியிருக்க முடியும். ஆனால் நம் நிலையை நாம் எப்போதுமே நியாயப்படுத்திக் கொண்டிருக்க முடியாது, குறிப்பாக ராமகிருஷ்ணனிடம்.
‘உங்க கை கொஞ்சம் நடுங்கற மாதிரி இருக்கு! என்றேன், அவர் உடல் முழுக்க அவஸ்தையான பலவீனத்தில் இருப்பதை உணர்ந்தபடி.
‘ஓ, யெஸ். என்றார் தன் உள்ளங்கைகளைப் பார்த்தபடி. ‘ என் கனவுக் கடலில் குதிக்கறதுக்கான நேரம் வந்துடுச்சு.
‘எனக்குப் புரியல
‘இப்பல்லாம் நான் அடைக்கலம் தேடிக்கறது மதுவிடம்தான். அது எனக்கு நல்லா உதவி பண்ணுது. இந்த வீணாப் போன உலகத்தை மறக்கடிச்சு இன்னொரு பரிமாணத்துக்கு என்னை அழைச்சுட்டுப் போயிடுது. நீ குடிப்பியா மஹேஷ்?
‘ எப்பயாவது. யாருக்காவது ஃபேர்வெல் பார்ட்டி வந்ததுன்னா ஒண்ணோ, ரெண்டோ பெக் அடிப்பேன்.
‘நான் குடிக்க ஆரம்பிச்சி நாலு வருஷமாச்சு மஹேஷ். ஒண்ணு தெரியுமா? குடிக்கறதுல நான் ரொம்ப ஒழுக்கமானவன். ஒரு நாளைக்கு ஒரு குவார்ட்டர். அவ்வளவுதான்.
நான் குலுங்கி விட்டேன். ராமகிருஷ்ணன் அவரது சுத்தமான நடத்தைக்குப் பெயர் போனவர். அவர் எந்த வேண்டாத பழக்கங்களும் இருந்ததில்லை. வெற்றிலை, பாக்கு போடுதல் கூட. மிகவும் மரியாதையானவர் என்று எல்லோராலும் மதிக்கப்பட்டவர் அவர்.
‘இத்தனை வருஷமா என்ன பண்ணிட்டிருந்தீங்க சார். என்றேன்.
‘முதல்ல என் ஆஃபிஸ் திறக்கறதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டேன். இன்னும் கஷ்டப்பட்டுட்டுத்தான் இருக்கேன். இப்ப அதுல வித்தியாசம் என்னன்னா நான் என் கஷ்டங்களைக் கண்டுக்கறதில்லை. ஒரு ஏழு லட்ச ரூபய் இந்தத் தொழில்ல தொலைச்சிருப்பேன். இத்தன வருஷத்தில சம்பாதிச்சத கணக்கு பண்ணினா பன்னிரண்டு லட்ச ரூபாய் வரும். அத விடு! இடம் பார்த்து அடிச்சேன்னா இந்த வருஷம் பத்து லட்சத்துக்குக் குறையாம பார்த்துடுவேன். ஒரு ஆஃப்ரிக்கன் பையரோடு தொடர்பு வச்சிட்டுருக்கேன். பேரம் ஆரம்பமாயிடுச்சு. ஒரு கண்டெய்னர் பிரிண்டிங்க் ஆர்டர் தரேன்னு சொல்லியிருக்கான். ரெண்டு பர்செண்ட் கமிஷன் கிடைக்கலாம். எனக்கு நம்பிக்கையிருக்கு.
அவரது நம்பிக்கை முரட்டுத்தனமானதென்று நான் அறிந்திருந்தேன். ஆனால் இம்முறை அவரது நிறைவேற்ற முடியாதது மட்டுமல்ல, கற்பனையானது என்பதையும் அறிந்தே இருந்தேன். தென் ஆஃப்ரிக்காவின் கண்டெய்னர் ஆர்டர்கள் சீனாவுக்குச் சென்று விட்டன என்பது எனக்கு உறுதியாகத் தெரியும். சீனத்தொழிலாளர்களின் குறைந்த ஊதியம் காரணமாக சீனர்கள் அந்த ஆர்டர்களைக் குறைந்த மதிப்புக்கு எடுக்க முடிந்தது. இந்தியப் பதனீட்டாளர்களுடன் இந்தப் பரிமாற்றம் எப்போதும் பிரச்சனையாகவே இருந்து வந்திருக்கிறது. உச்சபட்ச தரமும் நேரத்துக்கு ஆர்டரை முடித்துக் கொடுத்தலும் ஒரு வாடிக்கையாளரை திருப்திப் படுத்த இன்றியமையாதவை. இந்தப் பரப்புகளில் இந்தியர்கள் சொதப்புவது வாடிக்கையாளர் மத்தியில் பிரசித்தம். குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கமர்த்துதல், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தர நிர்ணயங்களை நிறைவேற்றத் தவறுதல், மத்திய சுங்க இலாகாவை ஏமாற்ற முயற்சித்தல் ஆகியன வாடிக்கையாளரை சீற்றம் கொள்ளச் செய்யும் இதர காரணிகள். இவ்வெல்லாக் காரணிகளும் நீண்ட காலமாகக் குவிந்து இந்திய மண்ணிலிருந்து கண்டெய்னர் பிரிண்டிங்க் ஆர்டர்களை நிரந்தரமாக அழித்து விட்டன.
‘நீ அமைதியாக இருக்கறதப் பார்த்தா என்னைப் பார்த்துப் பரிதாபப்படற மாதிரி இருக்கு. என்றார் ராமகிருஷ்ணன், என்னைப் பார்க்காமலேயே. ‘ அதுக்கு அவசியமில்லை. . . திடீரென்று அவரது பேச்சு நின்றது. லட்சுமி நரசிம்மன் பிரகாரத்துக்கு எதிரில் இருந்த சாப்பாட்டு மண்டபத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் எதைப்பார்க்கிறார் என்று நானும் திரும்பிப் பார்த்தேன். கருப்பு வேட்டி அணிந்த சபரிமலை பக்தர்கள் குழு ஒன்று எங்களைக் கடந்து போயிற்று. சரணம் ஐயப்பா என்ற கோஷம் எழுந்து காதைப் பிளந்தது. அந்த நாளின் இறுதிப் பூஜை துவங்குவதன்  காரணமாக காட்சிகள் பரபரப்பாக இருந்தன. எனக்குக் கிளம்புவதற்கான நேரம் வந்து விட்டதெனத் தோன்றியது. அலைபேசியை வெளியில் எடுத்து உயிர் கொடுத்தேன் ராமகிருஷ்ணனைத் திரும்பிப் பார்த்தேன். அவர் கூட்டத்தின் பரபரப்பைப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. சாப்பாட்டுக் கூடத்தின் ஓரத்தில் இருந்த குடிநீர்க்குழாயின் மீதுதான் அவரது பார்வை விழுந்திருந்தது. அங்கே நின்றிருந்தது என் சித்திரவதைக்காரன். குழாயிலிருந்து தண்ணீர் குடித்தபடி, சுற்றி நிகழ்வனவற்றோடு தொடர்பற்று நின்றிருந்தான். இதற்கு முன்பு உணர்ந்த அதே சங்கடத்தை மீண்டும் உணர்ந்தேன்.
என் அலைபேசி அதிர்ந்தது. காயத்ரி; அலட்சியம் செய்தேன். இன்னொரு பதினைந்து நிமிடங்கள் அவள் காத்திருப்பதில் தவறில்லை.
‘அந்தப் பிச்சைக்காரனைப் பர்ர்த்தியா? என்றார் ராமகிருஷ்ணன். நான் ஆமென்று பதிலிறுத்தேன். அவன் ஆந்திராவிலிருந்து வந்திருப்பதாக ராமகிருஷ்ணன் சொன்னார். மூன்று வருடங்களுக்கு முன்பு வந்திருக்கிறான். அவனது மாநிலத்தில் நகைத்தொழில் செய்து வந்திருக்கிறான். சந்தேகமின்றி ஒரு கோடீஸ்வரன்தான் அவன். ‘தொழில்ல கொஞ்சம் அகலக்கால் வைச்சுட்டான். வர்த்தகச் சிக்கல்களினால எல்லாச் சொத்தையும் இழந்தான்; அவன் பொண்டாட்டி தற்கொலை பண்ணிக்கிட்டா; அவனுக்குப் பித்து பிடிச்சுட்டுது. இங்க வந்து சேர்ந்த நாள்ல இருந்து தான் இழந்த சொத்தை அடுத்தவங்க பாக்கெட்டில தேடிட்டு இருக்கான். ராமகிருஷ்ணன் சிரித்தார்.
கோயில் வாயிற்காவலன் ஒரு குச்சியை வைத்துக் கொண்டு பிச்சைக்காரனை வெளியே தள்ள முயன்று கொண்டிருந்தான். அது அவ்வளவு சுலபமான காரியமாக இருக்கவில்லை. அவர் பிச்சைக்காரனை மறந்து விட்ட மாதிரித் தோன்றியது. அவரது திட்டங்கள் குறித்து விறுவிறுப்பாகப் பேசிக்கொண்டு போனார். ஐக்கிய அமெரிக்க நாடுகளில் பணிபுரியும் ஒரு மென்பொருள் பொறியியலாளருக்கு அவரது முதல் மகளைத் திருமணம் செய்து தருவாராம். அடுத்த ஆண்டு இந்நேரம் அவரது சொந்த ஊரான திருச்சியில் சொந்த வீடு கட்டி முடிக்கப்பட்டிருக்கும். அவரது தற்போதைய தேவையைச் சமாளிக்க ஒரு முப்பதாயிரம் தேவைப்படுகிறது. அவர் அந்தப் பணத்தை என்னிடம் கேட்கவில்லை. எப்படியோ அவரே அதை ஏற்பாடு பண்ணி விடுவார். என் வாழ்க்கையில் மிக வேகமாக முன்னேறியதற்கு தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.
அவரது உரையைக் கேட்டுக் கொண்டிருக்கையிலேயே, அவர் இந்த நிலைக்கு வந்ததில் என் பங்கு எவ்வளவு இருக்கிறது என்பதை வியப்போடு யோசித்துக் கொண்டிருந்தேன். பேச்சின்போது காயத்ரியை இருமுறை அலட்சியம் செய்தேன்.
ஆனால் காயத்ரி நான்காவது முறையாக அழைத்தபோது, அவரது அனுமதி கேட்டு பேச்சை நிறுத்த வேண்டியதாயிற்று.
‘ஏன் செல்ஃபோனை ஆஃப் பண்ணி வச்சிருந்தீங்க? என்றாள் எடுத்தவுடன். அவள் குரலில் எரிச்சலை இனங்கண்டு கொள்ள முடிந்தது.
‘அவரோட நிம்மதியா பேசனும்னு நினைச்சேன், அதனாலதான். என்ன ஆச்சு? இதுக்கு முன்னாலயும் என்னைக் கூப்பிட்டயா?
‘விடாமக் கூப்பிட்டுகிட்டு இருக்கேன். வண்டி சாவி எங்க? உங்ககிட்டயா இருக்கு? நான் இங்க சல்லடை போட்டுத் தேடிட்டேன்.

நான் கால்சராய் பாக்கெட்டுகளில் துழாவி வலது பாக்கெட்டில் மோட்டார் சைக்கிள் சாவியைக் கண்டுபிடித்தேன்.
முடிந்தது.

Comments

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை