நாணயத்தின் மூன்றாம் பக்கம் - மைக்ரோ நாவல் (1)



காற்றில் மல்லிகை மணம் தவழ்ந்தபடி இருந்தது. பெண்கள் பரபரப்பாக இருப்பதாகக் காட்டிக் கொள்ள பட்டுப்புடவை சரசரக்க அங்குமிங்கும் நடந்தனர். டம்ளர் நிறைய சூடான காஃபியுடன் பொறுமையின்றி அமர்ந்திருந்தேன். ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கிற குழந்தைகளில் ஒன்றின் பாதையில் காஃபியை வைத்து விடலாமா என்று யோசித்தேன். தண்ணீர் போன்ற இந்தக் காஃபியைக் குடித்து முடிக்கிற வலி அகலும். விருந்தினர் வீட்டில் தரப்படுகிற காஃபியை முடிக்காமல் வைத்து விடக்கூடாது; குறிப்பாக அந்த விருந்தினர் உங்கள் மாமனாராக இருக்கும்போது. அது மரியாதையில்லை. விருந்தினர் தரும் எதையும் மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளவே மரபு வலியுறுத்துகிறது. குப்பைத் தொட்டிக்குள் குப்பையை வீசுகிற மாதிரி உங்கள் திசையில் வருகிற எல்லாவற்றையும் தொண்டைக்குள் வீசி விட வேண்டியதுதான்.
        இந்த ஒரு மணி நேரத்தில் நான்காவது முறையாக பாண்ட் பாக்கெட்டில் என் அலைபேசி அதிர்ந்தது. ஒரே விழுங்கில் காஃபி குடிப்பதற்குண்டான சூடு உள்ளதென்பதை உறுதி செய்துகொண்டு தொண்டையில் சரித்துக் கொண்டு அவசரமாக அலைபேசியை எடுத்தேன். என் முன்னாள் மேலாளர் ராமகிருஷ்ணன் அழைத்துக் கொண்டிருந்தார்.
        அலைபேசியின் அதிர்வைக் கொன்றுவிட்டு, நான் இப்போது வேலையாக இருப்பதாகவும், இன்னும் இருபது நிமிடங்களில் அவரைச் சந்திப்பதாகவும் குறுஞ்செய்தி அனுப்பினேன். அலைபேசியை உள்ளே வைத்துவிட்டு காயத்ரி எங்கிருக்கிறாள் என்று தேடினேன். ஒரு குண்டுப் பெண்மணியுடன் தீவிரமான உரையாடலில் ஈடுபட்டிருந்தாள். திடீரென்று உள்ளுணர்வால் தூண்டப்பட்டதைப் போல என் பக்கம்  திரும்பி அவளது முத்திரைப் புன்னகையொன்றை வீசினாள். அவள் எனக்கு வேண்டும் என்பதைக் கண்களின் வாயிலாகத் தெரிவித்தேன். செய்தி சென்று சேர்ந்திருக்க வேண்டும். குண்டுபெண்மணியுடனான உரையாடலை உடனே முடித்துக் கொண்டு என் பக்கம் நொக்கி நடந்தாள். பட்டுபுடவையில், சில ஆண்டுகளுக்கு முன் நான் காதலில் விழுந்த போதிருந்த அதே பள்ளிச் சிறுமியைப் போலிருந்தாள்.
        ‘காஃபி குடிச்சிட்டீங்களா, இல்லை நான் கொண்டு வரவா? என்றாள் இடுப்பில் கைகளை வைத்து என் முன் நின்றபடி.
        ‘ இப்பதான் குடிச்சேன். காயூ, நான் மேனேஜர் ராமகிருஷ்ணனை இப்பவே பாக்கப் போகணும் என்றேன்.
        ‘மஹேஷ், இது கொஞ்சம் கூட நல்லால்ல. சடங்கு இன்னும் முடியல. விருந்தாளிங்க எல்லாம் இங்கதான் இருக்காங்க. நீங்க இப்படி திடீர்னு வெளிய போனா மரியாதையா இருக்காது. உங்க கூட யாராவது பேசணும்னு நினைச்சா என்ன பண்றது?
        ‘ புரிஞ்சுக்கோ காயூ, அவர் இன்னிக்கி மட்டும்தான் ஊர்ல இருப்பாரு. ராத்திரி அவங்க ஊருக்கு போறாரு. நான் அவரைப் பார்த்துப் பல வருஷமாச்சு. என்னோட வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் அவர்னு உனக்குத் தெரியும். என்ன சொல்லி அவரை நான் தவிர்க்கறது?
        ‘உண்மையச் சொல்லுங்க. வீட்டில முக்கியமான ஃபங்க்ஷன் நடந்துட்டிருக்கு, விருந்தாளிங்கல்லாம் இருக்காங்க; இப்ப வீட்டை விட்டு வந்தா அவங்களுக்கு மரியாதையா இருக்காதுன்னு சொல்லுங்க. அவரும் ஒரு குடும்பஸ்தர்தானே. புரிஞ்சுக்குவார்.வருத்தப்பட மாட்டார்.
        ‘ வருத்தம் இருந்தாலும் அவர் காமிச்சுக்க மாட்டார். பாயிண்ட் என்னன்னா நான்தான் அவரைப் பாக்கணும்னு நெனைக்கறேன். அவர் எனக்குச் செஞ்சதுக்கு நன்றிக்கடனாவாவது
        காயத்ரி என்னைக் கோபபார்வை பார்த்தாள். உடனே அந்தப் பார்வை மாறி இவன் ஒரு திருத்தமுடியாத முட்டாள் என்று சொல்வதைப் போலிருந்தது. ‘ சரி, போயிட்டு வாங்க. என்றாள் வேறு திசையில் பார்த்துக் கொண்டு.
        ‘வண்டி எடுத்துட்டுப் போகட்டுமா? பஸ்ல போனா ரொம்ப நேரமாகும்.
        ‘உங்களைத் திருத்த முடியாது. பெரியவங்க பஸ் ஸ்டாண்ட் போகணும்னா கொண்டு போய் விடறதுக்கு வண்டி வேண்டாமா? வண்டியெல்லாம் ஒண்ணும் கெடையாது. கெளம்புங்க
        அதுவே இறுதித் தீர்ப்பு என்பதை அறிந்தேன். வீட்டை விட்டு மெதுவாக நழுவி வெளியே வந்தேன். வாயிலில் சில முகங்கள் என்னைப் பார்த்துச் சில முகங்கள் நட்பாகப் புன்முறுவல் புரிந்தன. அவர்கள் யாரென்று எனக்குச் சுத்தமாகத் தெரியவில்லை. இருப்பினும் நானும் புன்னகை புரிந்து வைத்தேன். யாராவது முன் வந்து நான் வெளியே போவதைத் தடுத்திருந்தால் கூட ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன். அது போன்ற எதுவும் நிகழ்ந்து விட வாய்ப்பளித்து விடா வண்ணம் அங்கிருந்து உடனே நடக்க ஆரம்பித்தேன்.
மேலும் . . .
        

Comments

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை