ராவணன் - ஆதாரமாய் சில சந்தேகங்கள்:



ராமாயணக் கதையை மணிரத்னம் எடுத்து சொதப்பி விட்டார் என்ற குற்றச்சாட்டை நிறுத்திவைத்து விட்டு, உருப்படியாகப் படத்தில் என்ன சொல்ல வருகிறார் என்று பார்க்கலாம். மணிரத்னத்துக்கென்று ஒரு உலகம் இருக்கிறதாம். ஹாசினி பேசும் படம் விமர்சனத்தில் யூகிசேது சொன்னார். அந்த உலகில் வரும் பாத்திரங்கள் அவரது விருப்பத்திற்கேற்பவே இயங்கமுடியும். அதை நிரூபிப்பது போலவே ராவணனில் வரும் பாத்திரங்கள் இயல்புக்கு மாறுபட்டு நடந்துகொள்ளுகின்றன. தங்கை சாவுக்குக் காரணமானவனின் மனைவியைக் கடத்தி வந்து அவள் சாவுக்கு அஞ்சாதவள் என்று தெரிந்ததும் அவள் மீது காதல் பிறந்து விடுகிறது வீராவுக்கு. அவளும் அவனைப் பார்த்துக் கிறங்கி நிற்பது மாதிரிதான் தெரிகிறது.
        நகரப் பின்னணியில், அரிவாள் கலாசாரத்திலும் வேர்கொண்டு நின்ற பல திரைப்படங்களைப் பார்த்துப் பழகியிருக்கிற நமக்கு, ஒரு காட்டைப் பின்புலமாகக் கொண்டு, அதன் மலைகளும், மரங்களும், நதியும், ஓடையும், சேறும், சகதியும் படம் நெடுக விரிந்து கிடப்பது புத்துணர்ச்சியூட்டும் காண்பனுபவமாகத்தான் இருக்கிறது. ஆனால் காட்டின் மனிதர்கள் எதிர்கொள்ளும் வாழ்வுச் சிக்கல்களும், போராட்டங்களும் பதிவு செய்யப்படுவதற்கான வாய்ப்பை மணி நழுவ விட்டுவிட்டார் என்றே தோன்றுகிறது.
        படத்தில் யாருமே ஒட்டவில்லை. காரணம் பாத்திரங்களை உருவாக்கிய மணியேதான். பள்ளிக்கூடத்தில் ஆதிவாசி வேடம் போட்டு நடிக்கும் மாணவர்களைப் போலத்தான் எல்லரும் நடந்து கொள்ளுகிறார்கள். தமிழ் ராவணன் மிகப்பெரிய அபத்தக் களஞ்சியமாக இருப்பதற்கு மணியின் மனைவி ஒரு காரணம். கடத்திவந்த வீராவைப் பார்த்து, ‘ஜெயமுண்டு பயமில்லை’ என்று கவிதை பேசுகிறார் ராகினி (ஐஸ்). விக்ரம் குச்சியை நீட்டி அந்தக் கவிதை வரிகளைத் தொடர்ந்து முடித்து வைக்கிறார். இந்தியில் சுஹாசினி வசனம் எழுத இயலாததால் இந்தக் கூத்துக்களெல்லாம் நிகழவில்லை. படம் முழுக்க வசனம் சொத்தைப் பல்லைப்போல உறுத்திக்கொண்டே இருந்தது. இந்தப் படம் முடித்த கையொடு அங்காடித் தெரு பார்த்தேன், ஜெயமோகனின் இயல்பான வசனங்கள் படத்தில் உறுத்தாமல் இடம்பெற்றிருந்ததைப் பார்த்தபோது, தன் படத்தில் இந்தியாவின் சிறந்த தொழில்நுட்பவல்லுனர்கள் இடம்பெற வேண்டுமென்று நினைக்கும் மணிக்கு இவர் ஞாபகம் ஏன் வரவில்லை என்று தொன்றியது.
        இந்தி, தமிழ் இரண்டு வடிவங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது ராமாயணக் கதை என்ற நெருடலையும் மீறி இந்தி வடிவம் நன்றாக வந்திருப்பதாய்ப் பட்டது. இந்தியில் முதல் பலம் அபிஷேக். இரு வடிவங்களையும் பார்ப்பதற்கு  முன்னால் அபிஷேக்கைவிட விக்ரம் நன்றாகச் செய்திருப்பார் என்று என் மனைவியிடம் சவால் விட்டேன். அதைப் பொய்யாக்கிவிட்டார் அபி. (விக்ரமும்தான்). இந்தியில் காவியத்தனமான வசனங்கள் ஏதும் இல்லை. பெரும்பாலும் இயல்பான வெளிப்பாடுகளே இருந்தன. ஒரு காட்டான், முரட்டு மனிதன், மலைவாழ் மக்களின் தலைவன் என்ற பிம்பத்தை அபிஷேக் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருந்தார். அவரது வெறிச்சிரிப்பும், விரிந்த கண்களும், வாத்துச் சத்தமும் படம் முழுக்க அவரின் குணஇயல்பைத் தீவிரமாய்ப் பதிவு செய்திருந்தன. ஐஸ்வர்யா அவரிடம் திரும்பி வந்தவுடன், து வாபஸ் ஆகயா’ என்று மகிழ்ச்சியை வெடித்து வெளிப்படுத்துவதும், அவள் எதற்காக வந்தாள் என்று தெரிந்ததும் அதிர்ச்சியில் முகம் மாறுவதும் இயல்பாக நிகழ்கின்றன. கானகத் தலைவனின் ஆர்ப்பாட்டமும், வன்மமும் படம் முழுக்க வெளிப்படுகின்றன அவரிடம்.
விக்ரம் மணியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதாலோ என்னவோ தன் பாத்திரத்தை எப்படி வழிநடத்திச் செல்வது என்று திணறியதைப் போலவே இருந்தது. சில சமயம் மனநிலை பாதிக்கப்பட்டவன் போலவும், சிலநேரங்களில் காதலில் விழுந்த முதல் ஆண்டு கல்லூரி மாணவன் போலவும் நடந்து கொள்கிறார். உணர்ச்சிக் கொந்தளிப்பை வெளிப்படுத்தும் போதெல்லாம் இருவருமே பக்,பக்,பக் என்று வாத்துச் சத்தம் கொடுக்கிறார்கள். விக்ரம் கூடுதலாக டண்டனக்கா, டனக்குனக்கா என்று முழங்குகிறார். அது வெறியை வெளிப்படுத்தின மாதிரித் தெரியவில்லை. விக்ரமை வைத்துக் காமெடி பண்ணிவிட்டார்கள்.
        ஐஸ்வர்யாவின் சொந்தக் குரல் இந்திக்கு பலம். தமிழில் ஐஸூக்கு பதில் கண்ணாம்பா நடித்திருந்தாலும் வித்தியாசம் தெரிந்திருக்காது. அவர் வீராவைப் பற்றி என்ன நினைக்கிறார் என்றே தெரியவில்லை. அவர் முகத்தில் தெரிவது காதலா, குழப்பமா, ஏக்கமா ஒரு எழவும் புரியவில்லை. திடீரென்று கடைசியில் வீராவைப் பார்த்து, ‘நான் உங்களோடவே இருந்துட்டா அவரை உயிரோட விட்ருவீங்களா’ என்று கேட்கிறார். (இதையே இந்தியில் அபிஷேக் ஐஸிடம் கேட்கிற மாதிரி தெரிகிறது)). பின் கணவன் வந்தவுடன் வா, வீட்டுக்குப் போய்விடலாம் என்கிறார். கணவன் தன் மீது சந்தேகப் பட்டவுடன் ரயிலை நிறுத்தி கீழே இறங்கி காட்டுக்குள் போய் வீராவைச் சந்திக்கிறார். எதற்கு? அவன் தன்னைப் பற்றி அவதூறாகக் கணவனிடம் பேசியது உண்மையா என்று தெரிந்துகொள்ள.
        கார்த்திக்கின் குரங்கு நடிப்பைப் பார்த்துவிட்டு கோவிந்தாவின் இயல்பான நடிப்பைப் பார்த்தால் தமிழிலும் அவரே செய்திருக்கலாமோ என்று தோன்றியது.
        அமுல்பேபி மாதிரி முகத்தைவைத்துக் கொண்டு கொலைவெறியோடு அலைகிறார் ப்ருத்விராஜ். இந்தியில் அதே வேடத்தை விக்ரம் கம்பீரமாய்ச் செய்திருக்கிறார். அபிஷேக்குக்கு சமானமாய் உயர்ந்து நிற்கிறது அவரது பாத்திரப் படைப்பு.
        இரண்டு ஆஸ்கார் வாங்கிய தமிழன் என்பதால் ரஹ்மானின் பாடல்கள் சுமாராக இருக்கின்றன என்று சொல்ல தயக்கமாக இருக்கிறது. இரண்டு பாடல்கள் தமிழுக்கும், இரண்டு இந்திக்கும் பொருத்தமாக இருக்கின்றன. வைரமுத்துவின் வரிகள் டப்பிங் படத்துக்கு எழுதியதைப் போல ஒட்டாமல் இருக்கின்றன. பின்னணி இசை அற்புதமாய் இருக்கிறது.
ஆதாரமாய் சில சந்தேகங்கள்:
படம் எந்த மாநிலத்தில் நடக்கிறதென்றே தெரியவில்லை. விக்ரம் நெல்லைத் தமிழ் பேசுகிறார். ப்ரியாமணியின் திருமணம் ராஜஸ்தான் கோட்டைகள் சூழ்ந்த ஒரு கிராமத்தில் நடக்கிறது.
போலீஸ் அதிகாரி மனைவியைக் கடத்தியபின் சரி, அதற்கு முன்னிருந்தே வீராவை (இந்தியில் பீரா) போலீஸ் ஏன் அப்படிக் கொலைவெறியொடு தேடுகிறது என்று தெரியவில்லை. ஒருவேளை அவர் சந்தனம் கடத்துகிறவர் என்று எல்லாருக்கும் தெரிந்திருக்குமென்று சொல்லாமல் விட்டுவிட்டாரோ?
நட்ட நடுக்காட்டில் ஓடைக்கு நடுவில் முப்பதடி நீளத்திற்கு மஹாவிஷ்ணுவின் உடைந்த சிலை ஒன்று கிடக்கிறது. அது தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினர் கண்களில் படவே இல்லையா? அந்தச் சிலையும் நூறடி நீளத் தொங்குபாலமும் அவைகளுக்குத் தேவையான காட்சிகளுக்கு முன்னால் திடீரென்று பிரசன்னமாவது மேடை நாடகங்களில் செட் மாற்றப்படுவதை நினைவூட்டியது.
தம்பியைக் கொன்ன போலீஸ் அதிகாரியை விட்டுவிட்டு கூட இருக்கிற போலீஸ்காரர்களை மூட்டைகட்டி குண்டு செருகி வெடிக்க வைக்கிறான் வீரா. அதற்கு என்ன காரணம் என்று இருவரும் தொங்கு பாலத்தில் தொங்கிக் கொண்டிருக்கும்போது சொல்கிறான். ‘ என் கை கறை படிந்த கை, உன் மனைவி சொக்கத் தங்கம். அவளுக்காகவே உன்னைக் கொல்லலாம்; அவளுக்காகவே உன்னை உயிரோட விடலாம்’
        ஆக, வீராவின் தங்கையைக் கற்பழியுங்கள்; அவன் தம்பியைக் கொல்லுங்கள்; அவன் வாழிடத்தைச் சூறையாடுங்கள். அவன் மன்னித்து விட்டுவிடுவான். ஏன்னா, அவன் ரொம்ப நல்லவன்.

Comments

  1. /***ஆக, வீராவின் தங்கையைக் கற்பழியுங்கள்; அவன் தம்பியைக் கொல்லுங்கள்; அவன் வாழிடத்தைச் சூறையாடுங்கள். அவன் மன்னித்து விட்டுவிடுவான். ஏன்னா, அவன் ரொம்ப நல்லவன்.****/

    நச்.........

    மணிரத்னத்தால், "அலைபாயுதே" "தளபதி" "நாயகன்" போன்ற படங்களை இனி தரவே முடியாது என்று நினைக்கிறேன்.

    பாலசந்தர், பாரதிராஜா பட்டியலில் இவரும் சேர்ந்துவிட்டாரா?? என்று பயமாக இருக்கிறது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை