சந்திரபாபுவின் வாழ்வு


கண்ணீரும் புன்னகையும் – சந்திரபாபுவின் வாழ்வு
கிழக்கு பதிப்பகம் வெளியீடு
ஆசிரியர் முகில்
சந்திரபாபு என்கிற மகா ஆளுமையின் தாக்கம் முப்பது வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஏற்பட்டிருப்பதென்பது இன்றியமையாததொரு நிகழ்வாகும். என் பதின்பருவத்தில் சந்திரபாபுவின் தத்துவப் பாடல்களை எனக்கு முந்தைய தலைமுறையினர் கொண்டாடிக் கொண்டிருந்ததைக் கண்டிருக்கிறேன். நகைச்சுவை நடிகர் என்ற பிம்பத்தையும் தாண்டி ஒரு தலைமுறைத் தமிழர்களின் பிரியத்துக்குரியவராகவும், பலரின் ஆற்றாமைகளையும், சோகங்களையும் பிரதிநிதித்துவப் படுத்துபவராகவும் இருந்திருக்கிறார் பாபு.
கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘கண்ணீரும் புன்னகையும்’ என்ற புத்தகத்தை சமீபத்தில் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எதற்காகவும், யாருக்காகவும் தன் தனித்துவத்தை விட்டுக் கொடுக்காது வாழ்ந்த ஒரு கலைஞனின் வாழ்வில் அவனைத் தொடர்ந்த சோதனைகளும், துயரங்களும் எளிமையான மொழியில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு நேர்மையான கலைஞனை எப்படித் தேவை தீர்ந்ததும் வீசி எரியப்பட்டுவிடுகிற எச்சில் இலையைப் போல, திரையுலகம் அவரை பயன்படுத்திவிட்டுத் தூக்கி எரிந்துவிட்டது என்பதற்குச் சான்றான நிகழ்வுகள் அதன் பக்கங்களில் விரிகின்றன. கோடிக்கணக்கான ரசிகர்களை வசியப்படுத்தி வைத்திருக்கும், அவர்களது வாழ்வின் போக்கை நிர்ணயம் செய்யும் வல்லமை கொண்ட கதாநாயகர்களின் முகப்பூச்சுக்குப் பின்னே மறைந்திருக்கும் கோரமுகங்கள், அவர்கள் கடைவாயில் வழியும் ரத்தம் காணப்படுமாறு உரித்துக் காட்டப்பட்டுள்ளன. காமிரா முன் தவிர வேறெங்கும் நடிக்கத் தெரியாத, பிறருக்குத் தொந்தரவில்லாமல் தன் இச்சைப்படி வாழ நினைக்கும் ஒரு நேர்மையான மனிதனைச் சமூகம் எவ்வாறு புறந்தள்ளி விடுகிறது என்பதற்கு பாபுவின் வாழ்க்கை ஒரு உதாரணம்.
மிகுந்த வறுமையில்தான் துவங்கியிருக்கிறது அவரது வாழ்க்கை. கொலைப் பட்டினியிலும் தன் தனித்துவத்தை இழக்காத மனிதர் அவர். தான் நடித்த காலத்தில் கதாநாயகனுக்கு ஈடாக ஊதியம் பெற்ற ஒரே நகைச்சுவை நடிகர் அவர். செல்லுமிடமெங்கும் ரசிகர் கூட்டம் அவர் பாடல்களைக் கேட்டு ஆரவாரித்திருக்கிறது. முதன்முதலாக ஒரு நகைச்சுவை நடிகரின் பாடல்கள் தொகுப்பாக வெளியிடப்பட்டது சந்திரபாபுவுக்குத்தான். திரைத்துறையில் குறுகிய காலத்தில் புகழின் உச்சியை அடைந்த போதிலும் அவரது சொந்த வாழ்க்கையில் துரோகங்களும், ஏமாற்றங்களும், சோகங்களுமே சூழ்ந்துகொண்டிருந்தன. கட்டிய மனைவி ஏற்கனவே ஒருவனைக் காதலித்திருந்தது தெரியவந்ததும் அவளை அவனிடமே அனுப்பி வைக்கிற ஆண்மை மிகுந்தவராக இருந்திருக்கிறார். பாபுவின் வாழ்வின் நிகழ்ந்த இந்த சோகத்தைத்தான் பின்னாளில் பாக்யராஜ் அந்த ஏழு நாட்கள் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்திருக்கிறார். மனைவியைப் பிரிந்தபிறகே அவரது குடிப்பழக்கம் அதிகமாகி, அதற்கு அவர் அடிமையாகி அவரது முடிவுக்கே வழிவகுக்கிறது.
ஒரு திரைப்படத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் சந்திரபாபுவின் முகத்தில் எலிகள் ஏறிவிளையாடும்போது அவர் படும் பாட்டை கண்டு விழுந்து விழுந்து சிரித்ததும், இப்படியும் நடிக்க முடியுமா என்று பிரமித்துப் போய் நின்றதும் இன்னும் நினைவிருக்கிறது. Slapstic வகைக் காமெடிக்கு முதலும் கடைசியுமான ஒரே தமிழ் நடிகர் சந்திரபாபு என்றே சொல்லலாம். அடுத்ததாக நாகேஷ் கொஞ்சம் கிட்டத்தில் வருகிறார். பாபுவின் உரையாடல் வெளிப்பாடு ரசிக்கத்தக்கது. அவரது எல்லாப் படங்களையும் நான் பார்த்ததில்லையென்றாலும் அவரது ஆளுமையின் தாக்கத்திற்குள்ளாவதற்கு அவர் வந்துபோகும் சில காட்சிகளும், மெய்யாலுமே காலத்தால் அழியாத அவரது பாடல்களுமே போதும்.
சந்திரபாபு மது அருந்துகிற அழகை இந்தப் புத்தகத்தில் வர்ணித்திருப்பதைப் படித்தாலே நமக்கும் ஆசை வந்துவிடும். சுத்தமாகக் குளித்து முடித்துவிட்டு, தூய்மையான பூப்போட்ட லுங்கி அணிந்துகொண்டு, வெள்ளை முழுக்கை சட்டையை அணிந்து பட்டன்களைத் திறந்துவிட்டபடி கைகளைச் சுருட்டிவிட்டுக்கொண்டு, ஒரு கையில் சிகரெட்டும், இன்னொரு கையில் மதுகோப்பையையும் வைத்துக் கொண்டு, சோஃபாவில் சம்மணமிட்டு அமர்ந்தபடி நிதானமாக அனுபவித்து மது அருந்துவாராம். பின்னாளில் போதைக்கு அடிமையாகிவிட்ட நடிகை சாவித்திரியும், எழுத்தாளர் ஜெயகாந்தனும் இவருக்கு ‘தண்ணி பார்ட்னர்’களாக இருந்திருக்கிறார்கள். (சந்திரபாபுவுடனான தனது நட்பு பற்றி ஓர் இலக்கியவாதியின் சினிமா அனுபவங்களில் ஜெயகாந்தன் எழுதியிருக்கிறார்). எல்லாரையும் மிஸ்டர் போட்டு அழைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது சந்திரபாபுவுக்கு. மிஸ்டர் எம்.ஜி.ஆர், மிஸ்டர் சிவாஜி என்றுதான் கூப்பிடுவாராம். மனதில் தோன்றுவதை வெளிப்படையாகப் பேசுவதோ, செய்துவிடுவதோ சந்திரபாபுவின் பண்புகளில் ஒன்று. ஒருமுறை அவரது கலைநிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அந்நாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் ரசிக்கும் திறமையைக் கண்டு, துள்ளிக் குதித்து அவர் மடியிலமர்ந்து அவர் தாடையைப் பிடித்துக் கொஞ்சி ‘ரசிகன்டா நீ!’ என்று பாராட்டினாராம்.
எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி ஆகிய மூன்று திரை ஆளுமைகளையும் தனது பேட்டி ஒன்றின் வழியாக பகைத்துக் கொண்டதன் மூலம் திரையுலகில் அவர்களால் ஒதுக்கப்படுகிறார். எம்ஜிஆர் மருத்துவமனை கட்டுவது பற்றிய கேள்விக்கு அவர் பேசாமல் நடிப்பதை நிறுத்திவிட்டு மருத்துவமனைக்குக் கம்பவுண்டராகப் போகலாம் என்கிறார். அந்தப் பேட்டி கீழே,
என்னை முற்றிலும் புரிந்து கொண்டவர்கள் யாருமில்லை. என் பெற்றோர்கள் கூட என்னைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஆகவே மற்றவர்கள் யாராவது என்னைப் புரிந்து கொண்டதாகச் சொன்னால் என்னால் நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கிறது. சிரிப்பை அடக்குவதற்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

ஜெமினி கணேசன் பத்தி என்ன நினைக்கறீங்க?
அவன் என்னோட ஆதி கால நண்பன். திருவல்லிக்கேணியில குப்பு முத்து முதலி தெருவில ஒரு மாடியில நான் குடியிருந்தேன். அப்ப அவன் 'தாய் உள்ளம்' படத்துல நடிச்சிக்கிட்டிருந்தான். அப்ப அவனுக்கு நான் காமெடி எப்படி பண்ணனும், பேத்தாஸ்னா எப்படி பண்ணணும், லவ் சீன் எப்படி பண்ணனும்னு நடிச்சுக் காட்டுனேன். அடே அம்பி, இத்தனை வருஷம் ஆச்சேடா! இன்னும் நடிப்புல எந்த முன்னேற்றத்தையும் காணுமேடா! நீ போன ஜென்மத்துல வட்டிக் கடை வைச்சிருந்தப்படா, படுபாவி!

சிவாஜி கணேசன் பத்தி உங்க அபிப்ராயம் என்ன?
அவன் நல்ல ஆக்டர்! பட், அவனைச் சுத்தி காக்காக் கூட்டம் ஜாஸ்தி இருக்குது. அந்த ஜால்ரா கூட்டம் போயிடுச்சின்னா அவன் தேறுவான்.

எம்.ஜி.ஆர். பத்தி உங்க அபிப்ராயம் என்ன?
அவர் கோடம்பாக்கத்துல ஒரு ஆஸ்பத்திரி கட்டுறதா கேள்விப்பட்டேன். பேசாம கம்பவுண்டராப் போகலாம்.

மனத்தில் பட்டதை மறைத்துப் பேசத் தெரியாத காரணத்தாலேயே தமிழ் சினிமா உலகம் புறக்கணித்த மிகப்பெரிய கலைஞர் ஜே.பி. சந்திரபாபு. நடிப்பு, இசை, நடனம், இயக்கம், எழுத்து என்று சினிமாவில் அவருக்குப் பரிச்சயமில்லாத துறைகளே இல்லை.

மிகப்பெரிய கனவுகளுடன், மிகப்பெரிய போராட்டத்துக்குப் பின் திரையுலகுக்கு வந்த சந்திரபாபு, மிகக் குறுகிய காலத்தில் அளப்பரிய சாதனைகள் செய்துவிட்டு இறந்துபோனவர். தமது சொந்த வாழ்க்கையின் ஆறாத சோகங்களை மறைத்துக்கொண்டு மக்களைச் சிரிக்கவைத்த மகத்தான கலைஞர். சற்றும் நம்பமுடியாத அதிரடிக் கருத்துகளை அடிக்கடி வெளியிட்டு, திரைத்துறையினரை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கியவர்.

ஆனால் சந்திரபாபு பேசியதெல்லாம் சத்தியம். அந்தக் காலத்து முன்னணிக் கலைஞர்கள் பலருடனான தமது கசப்பான அனுபவங்களை சந்திரபாபுவே பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். அவர்களெல்லாம் அவரது கண்ணீரை அதிகமாக்கியவர்கள்.

பதிலுக்கு சந்திரபாபு வெளிப்படுத்தியது புன்னகை, புன்னகை மட்டுமே.'
சொந்தமாகத் திரைப்படம் தயாரிக்கும் உந்துதலேற்பட்டு அதற்கு எம்ஜிஆரின் கால்ஷீட்டும் வாங்கியபின் தன்னை மதிக்காத சந்திரபாபுவைப் பழிவாங்குவதற்காக எம்ஜிஆர் படப்பிடிப்புக்கு வராமல் தவிர்த்து, படமே நின்று போகிறது. பொருளாதார ரீதியில் மரணஅடி விழுந்து அதற்கப்புறம் எழுந்திருக்கவே முடிவதில்லை சந்திரபாவுக்கு.
அவரது குரலுக்கும், ஆளுமைக்கும் மயங்கியவர்களும், என்போன்று அவர் பற்றிய கேள்வி ஞானத்தால் அவர் மீது பிரமை கொண்டவர்களும், இப்படி ஒரு நபர் உண்மையில் வாழ்ந்து மறைந்திருக்கிறாரா என்று அறிய நினைக்கிறவர்களும் கண்டிப்பாக வாங்கி வாசிக்க வேண்டிய புத்தகம் இது.


Comments

  1. அன்பு நண்பர் முகிலின் இப்புத்தகத்திற்கு, என் நண்பர் நரேந்திரன் எழுதியதை இச்சமயத்தில் பகிர விரும்புகிறேன்....
    Time May 30, 2010 at 7:03 pm

    அன்பு முகிலுக்கு,

    வணக்கம். வாழ்த்தையும், வணக்கத்தையும் சொல்வதில் முதலாவதாக இருக்க ஆசை.
    இந்த மாதிரி கடிதங்களில் அது சாத்தியமே. உங்களது புத்தகம் “கண்ணீரும் புன்னகையும்” முழுமையாகப் படித்தேன்.

    உடனே பதில் எழுதத் தோன்றியது இதுவன்றி வேறு ஏதும் காரணமில்லை. இக்கடிதத்திற்கு. ..

    யதார்த்தமாக வளர்ந்து பூத்திருக்கும் ரோஜாவின் பனித்துளி இதழ் பார்த்து இரசித்து வரும் அக்கணத்தின் மனநிறைவு இந்நூலைப் படித்ததும் நிகழ்ந்தது.

    மூவருக்கும் தூத்துக்குடி பொதுவான இணைப்புக் களமாக இருந்ததும் ஒரு நெருக்கத்திற்கு காரணமாக இருந்திருக்கலாம். கதை நாயகன் இங்கு பிறந்து சில காலம் வாழ்ந்திருக்கிறார். நூலாசிரியர் இங்கு கல்வி பயின்றிருக்கிறார். நானோ பணி நிமித்தம் முப்பது ஆண்டுகளாக இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

    உங்கள் எழுத்தின் நடை என்னை கைகோர்த்து இந்த அற்புதக் கலைஞனின் வாழ்வின் தடங்களை, தடைகளை, இறக்க ஏற்றங்களை முற்றிலுமாக அறிந்து கொள்ள வைத்தது.

    மற்றவர்கள் புரிந்து கொள்ள முடியாத, தன்னை முழுமையாகப் புரிந்து கொண்ட மாபெரும் கலைஞன் இந்த பனிமய மாதாவின் மைந்தன்.

    உண்மையான கலை நேயர்களுக்கு உன்னதமான ஒரு படைப்பின் மூலம் உலகின் சிறந்த கலைஞனைப் பற்றிய சரியான பதிவுகளை செய்தமைக்கு வருங்கால சந்ததியினர் சார்பாக எனது வாழ்த்துக்கள்.
    நன்றி.
    M.S. நரேந்திரன்,
    தூத்துக்குடி.

    ReplyDelete
  2. திரு.ராம்மோகன், பகிர்விற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. நண்பரே, தங்களது நேர்த்தியான விமரிசனத்துக்கு நன்றி.

    ReplyDelete
  4. புத்தகத்தையே மேலோட்டமாகப் படித்தது போன்றும்,முழுமையாகப் படிக்க உந்துதல் ஏற்ப்படுத்திய உங்கள் விமர்சனத்திற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை