அத்வைதம்: அகவிடுதலைக்கான பயணம் என்ற தலைப்பில் நான் எழுதி வரும் வேதாந்தம் குறித்த தொடரின் மூன்றாவது பகுதி சொல்வனம் இதழில் வெளியாகியுள்ளது. எந்த ஒரு அறிவையும் ஓர் அறிவைக் கொடுக்கும் கருவியால் மட்டுமே அறிய இயலும். அறிபவனாகவே இருக்கும் என்னை எந்தக் கருவியால் அறிந்து கொள்ள இயலும்? இப்பகுதியில் அறிவைக் கொடுக்கும் கருவிகளான பிரமாணங்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. பிரமாணங்கள் ஆறுவகை. அத்தனைப் பிரமாணங்களையும் பகுதி மூன்று மற்றும் நான்கில் விளக்கப்படும்.
12 ஜனவரி, 2026
6 ஜனவரி, 2026
செயற்பாலது ஓரும் அறன்
அத்வைதம்: அகவிடுதலைக்கான பயணம் என்ற தலைப்பில் சொல்வனம் இதழில் நான் எழுதி வரும் வேதாந்தக் கட்டுரைத் தொடரின் இரண்டாம் பகுதி வெளியாகியுள்ளது. எதற்காக ஒருவர் அத்வைத தத்துவத்தைக் கற்க வேண்டும் என்ற கேள்விக்கான விடையாக இந்தப் பகுதி அமைந்துள்ளது.
26 டிசம்பர், 2025
“வானப்ரஸ்தம்” சொல்வனம்- புனைவு வனம் நிகழ்வில்
என்னுடைய சிறுகதை “வானப்ரஸ்தம்” குறித்து நண்பர்கள் பாலாஜி ராஜூவும், விவேக்கும் சொல்வனம்- புனைவு வனம் நிகழ்வில் கருத்துரையாடினார்கள். நானும் கலந்து கொண்டு என் கருத்துக்களையும், அவர்களது கேள்விகளுக்கான பதில்களையும் அளித்தேன். பாலாஜி ராஜூ நிறைய கவிதைகளையும், அண்மைக்காலமாக சிறுகதைகளையும் எழுதி வருகிறார். விவேக் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சிறுகதைகள் எழுதி வருகிறார். அமெரிக்க இதழ்களில் அவரது கதைகள் வெளியாகி இருக்கின்றன. மேலைத்தத்துவத்திலும், மேலை இசையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டு கற்று வருபவர். அது குறித்து அவர் எழுதும் கட்டுரைகள் ஆழமானவை. இருவரும் கலந்து கொண்டு என் கதை குறித்து அலசியது எனக்கு மகிழ்ச்சி. அவர்களுக்கு நன்றி. நிகழ்வை ஏற்பாடு செய்த பாஸ்டன் பாலா, நிர்மல் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.
20 டிசம்பர், 2025
பாலாஜிராஜூவின் “எழுகை”
அன்புள்ள பாலாஜி,
எழுகை கதை கொடுத்த அனுபவம் அலாதியானது. கிறிஸ்துமஸ் காலமும், பனியும் நம்மைச் சூழ்ந்து கொள்கின்றன. சாண்டாவை விற்கும் அந்த மர்ம மனிதரும், கதை சொல்லியும் சந்திக்கும் புள்ளி கவித்துவமானது மட்டுமல்ல, குறியீட்டுத் தன்மை கொண்டதும் கூட. முதலில் ஒரு சிறுகதையாக இது மிகுந்த அழகுணர்ச்சியுடனும், கவித்துவத்துடன், மாசு மருவின்றி எழுதப்பட்டிருக்கிறது என்பதைச் சொல்லி விடுகிறேன். கதை சொல்லியின் மனதில் இருக்கும் அந்தச் சிறிய பிரச்னை “எட்டு வயது லிவோனா இன்னமும் சாண்டாவை நம்புகிறாள்” என்பது. ஆனால் அவனது உண்மையான பிரச்னையாக நான் பார்ப்பது “சிறு வயதில் கிறிஸ்துமஸ் தினத்தையும் எனக்கு வரும் பரிசுகளையும் எதிர்பார்த்துக் காத்துக்கிடந்த நாட்கள், கடந்த கால நினைவுகளாகக் கூட என்னில் எழுவதில்லை” என்பதுதான். இதுதான் இந்தக் கதையின் அடி நாதம். பிரச்னை லிவோனாவுடையது அல்ல, கதை சொல்லியுடையது. வளர்ந்து முதிர்ந்தபின்னர் சிறு குழந்தையின் உற்சாகமான, சிலிர்ப்பூட்டும் இதயத்தை மீட்டெடுப்பது எவ்வாறு என்பதுதான் கதையின் கேள்வி. அந்தக் கேள்விக்கான விடையாக, சற்றே அந்தப்பக்கம் எட்டிப்பார்க்கும் வாய்ப்பு கதை சொல்லிக்குக் கிடைத்திருக்கிறது.
“இது நம்பிக்கை சார்ந்த சம்பிரதாயம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறாய். நாம் இருவரும் நம்முடைய பால்ய காலத்துக்கு திரும்புவதற்கான அழகிய வாய்ப்பு இது. இந்த மாபெரும் நாடகத்தில் நாம் பங்கெடுத்து நடிப்பதில் பெரும் உவகையிருக்கிறது, நம்மை மறந்து ஒன்றில் ஈடுபடுவதன் மாயம் இருக்கிறது. அது ஏன் உனக்குப் புரிவதில்லை?” என்ற எமிலியின் கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை
இதற்கான வாய்ப்புகள் நம்முன்னே எப்போதுமே இருந்து கொண்டுதான் இருக்கின்றன. நாம் அதைக் கண்டுகொள்ளும் அளவுக்கு விழிப்புடன் இருக்கிறோமா என்பதுதான் கேள்வி. இக்கதை எமிலி மூலமாக கேட்கும் கேள்விகள் மிக அழுத்தமானவை. நடுவயது தாண்டிய அனைவரும், குறிப்பாக தீவிர இலக்கியம் வாசித்து மண்டை சூடேறிப்போன அறிவுஜீவிகள் (என்று நினைத்துக் கொள்கிற) நாமெல்லாரும் நம்மையே கேட்டுக் கொள்கிற கேள்விகள். இதோ, சாளரத்துக்கு வெளியே அந்த மாயம் எப்போதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. எட்டிப்பார்க்கும் அளவுக்கு நமக்கு இதயமும் நேரமும் இருக்கிறதா என்பதுதான் கேள்வி.
சிறுகதையின் வடிவம் என்பது எப்போதுமே கவிதைக்கும், புனைவுக்கும் நடுவில் ஊசலாடிக் கொண்டிருப்பது. நான் எழுத முயற்சிக்கும் கதைகளில் புனைவு அதிகமாகவும், கவித்துவம் கிட்டத்தட்ட இல்லாமலும்தான் இருக்கிறது. உங்கள் கதைகளில் கவிதைகளே சிறுகதைகளாக மாறிவிடுகின்றன. இதைப் பாராட்டாகத்தான் சொல்கிறேன். குறிப்பாக இந்தக் கதை, கிட்டத்தட்ட ஒரு நீள்கவிதை என்றே சொல்லி விடலாம். இதை நீங்கள் முதலில் கவிதையாக எழுதிப் பார்த்திருக்க வாய்ப்பிருக்கிறது. கதை வடிவில் இது மிளிர்கிறது என்றே சொல்ல வேண்டும்.
மிகுந்த கவனத்துடன் சொற்களைப் பொறுக்கியெடுத்து கதையை எழுதியிருக்கிறீர்கள். உங்களது தமிழ்ச் சொற்கள் வாசிக்க சுகமான அனுபவமாக இருந்தது. வரைமான்கள், உப்புப்பரல்கள், (அந்த பொதியுந்து) என்று அழகான சொற்கள் கதை நெடுக விரவி கதை மீது ஒரு விதமான அடர்ந்த அமைதியைப் போர்த்துகின்றன. துருவேறிய தகரத்தைக் கீறியது போன்ற குரல் என்ற உவமை நன்றாக இருந்தது. பனியில் உறங்கும் நகரின் வர்ணனை, நிதானமாக நிகழ்வுகளை விவரித்துக் கொண்டே செல்லுதல் என்று புனைவெழுத்தில் உங்களுடைய வீச்சைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் எழுத்தில் உள்ள நிதானத்துக்குக் காரணம் “எனக்குச் சொல்ல ஒரு கதையிருக்கிறது” என்ற உங்கள் உறுதியும், உங்கள் கதை சொல்லும் திறன் மீது உங்களுக்குள்ள நம்பிக்கையும்தான் என்று தோன்றுகிறது. மிக அழகான ஒரு கதையைக் கொடுத்ததற்கு நன்றியும், வாழ்த்துக்களும், பாலாஜி.
இக்கதை வாசித்ததும் எனக்கு இரு கதைகள் நினைவுக்கு வந்தன. ஒன்று நான் மொழிபெயர்த்த கதை. “குழந்தைப் பருவத்தில் பனிப்பொழிவு” என்று. இன்னொன்று செல்மா லாகர் லெவ் எழுதி க.நா.சு மொழிபெயர்த்த தேவமலர் என்ற நீண்ட கதை. இரண்டையும் பகிர்கிறேன். நேரமிருக்கும்போது வாசிக்கவும். கட்டாயமில்லை.
வணக்கம் ஜெகதீஷ்,
கதையை இத்தனை தீவிரமாக நீங்கள் வாசித்தது எனக்கு மிகவும் நிறைவையும், கொஞ்சம் மலைப்பையும் அளிக்கிறது. பெரிய மனதோடு பாராட்டுகிறீர்கள், கொஞ்சம் சங்கடத்தோடு அதையும் ஏற்றுக்கொள்கிறேன்.
என்னிடம் இந்த கதைக் கரு சில மாதங்களாகவே இருந்தது. கிறிஸ்துமஸ் தினம் குறித்து ஒரு கதை எழுதவேண்டும் என்ற உந்துதலும் நீண்ட நாட்களாகவே எனக்குள் இருந்தது. முதலில் எனக்கு தோன்றியது, ‘எல்லோரும் கொண்டாடும் பனி, அதை வேலையாகச் செய்பவனுக்கு எப்படிப் பொருள்படுகிறது?’ என்பதுதான். லிவோனா அவளுடைய அப்பாவிடம், “உலகிலேயே மிகச் சிறந்த வேலை உன்னுடையது அப்பா” என்று சொல்வதாக மனதில் வைத்திருந்தேன். ஆனால், ஆந்தப் புள்ளியிலிருந்து கதை வளரவில்லை.
பிறகு அதே கேள்வியை அவனுக்கான இன்னொரு கோணமாக மாற்றிக்கொண்டேன். ஒரு நாள் அதிக உறக்கமில்லாத இரவைக் கழித்துவிட்டு, காலையில் எப்படியவது இந்தக் கதையுடன் மோதிப் பார்க்கவேண்டும் என்று எழுதத் தொடங்கினேன். அந்த மர்ம மனிதர் எனக்குள் வந்தவுடன் கதை தானாக வளர்ந்தது. ஒன்றரை மணிநேரத்தில் மொத்தக் கதையையும் முடித்துவிட்டுதான் கீழே இறங்கினேன். நான் இதுவரை எழுதிய கதைகளில் விரைவாக எழுதி முடித்த ஒன்று.
கதை கவித்துவமாக இருப்பது ஒன்று, அதற்கு நீங்கள் அளித்த வாசகக் கோணமும் மிகவும் கவித்துவமானதுதான். மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள், நாம் பல அற்புதங்களைத் தவற விடுகிறோம். கதை எழுப்பிய கேள்வி எமிலி அவனிடம் கேட்பதுதான், நீங்கள் சரியாக இதைத் தொட்டிருக்கிறீர்கள். இந்தக் கதை எழுதி முடித்த பிறகும் எனக்குள் இன்னும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. இதுபோன்ற ஒரு பேசுபொருளை நான் இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு கவிதையாகவும் எழுதியிருக்கிறேன்.
கதை வெளியில் வாசிக்கப்படுவது ஒன்று, எழுதும் நமக்குள்ளும் ஏதோ ஒன்றை நிகழ்த்துகிறது. இந்தக் கதை தத்துவார்த்தமாக என்னைத் தொந்தரவு செய்கிறது, கடைசிப் பத்தி எனக்கு நானே சொல்லிக்கொண்டதுதான். நான் இப்படி ஒன்று நிகழும் என்பதை இதுவரை உணர்ந்ததில்லை, நீங்கள் கடந்திருக்கலாம். அதனால்தான் சொல்கிறேன், ‘பொற்குகை இரகசியம்’ கதையை எழுதிய எழுத்தாளன் மீது எனக்கு ஒரு பிரேமையும், அபார மதிப்பும் இருக்கிறது. எல்லோருக்கும் அப்படி ஒரு கதை நிச்சயம் நிகழும் என்றே தோன்றுகிறது. ஜெ சொல்வது எத்தனை உண்மை. ஆம், ‘இலக்கியம் அருளும் தெய்வம்தான்’.
நான் கதைக்கு ‘லிவோனாவின் பரிசு’ என்று பெயர் வைக்கலாமா என்றும் யோசித்தேன். ஆனால், கதை எழுதிய பிறகு அவனுக்கானது என்று நன்றாகப் புரிந்தது. அதனால் ‘எழுகை’ என்று தலைப்பு வைத்தேன்.
இன்னொன்று, அமெரிக்காவில் இது எனக்கு பன்னிரண்டாவது குளிர்காலம். பித்துப் பிடிக்க வைக்கும் அளவுக்கு அழகும், வெண்மையும், கருணையே அற்ற தூய்மையும் கொண்டது பனிப்பொழிவு, இத்தனை ஆண்டுகளாக எனக்குள் அது என்ன நிகழ்த்துகிறது என்பதைப் புரிந்துகொள்ளாமல் தவித்துக்கொண்டிருந்தேன் (Angst). மிகையாக இதைச் சொல்லவில்லை, ஒவ்வொரு முறை பனிபொழிகையிலும் மனதுக்குள் ஒரு பதைப்பு என்னிடம் இருக்கிறது. இது மிகச் சிறிய கதை, இதில் சில பத்திகளில் அதை புனைவாக விவரித்ததும் எனக்குள் ஒரு ஆழ்ந்த அமைதி ஏற்பட்டது. எதையோ ஓரளவுக்கு கடந்த அமைதி. நீங்கள் இயற்கை குறித்து குழுவில் பகிர்ந்திருந்தது எத்தனை உண்மை.
நீங்கள் தத்துவம் அறிந்தவர், இந்த உணர்வை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்வீர்கள் என்று ஆழமாக நம்புகிறேன். மேலும், உங்களிடம் இதையெல்லாம் பகிர்வதற்கு இந்தக் கதை ஒரு வாய்ப்பை அளித்திருக்கிறது, அதற்கு இலக்கியத்துக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.
நீங்கள் அனுப்பிய இரண்டு கதைகளையும் கண்டிப்பாக வாசிக்கிறேன். மிக்க நன்றி ஜெகதீஷ்.
அன்புள்ள பாலாஜி,
மாலத்தீவுகளிலிருந்து அமெரிக்கா வந்த சில நாட்களில் வேலையின் காரணமாக வாசிப்பை விட்டு விட்டேன். சில ஆண்டுகள் கழித்து மீண்டும் வாசிக்க முயல்கையில் என்னால் உள்ளே செல்லவே முடியவில்லை. இதை இன்னும் பின்னோக்கி நீட்டித்துப் பார்த்தால் மாலத்தீவுகளில் இருக்கையில் கூட தீவிர இலக்கியம்தான் வாசித்துக் கொண்டிருந்தேன். அதனால் அந்த வாசிப்பே கொஞ்சம் திருகலாகக் கூட இருந்தது. வாசிக்கையிலேயே இதற்கு எப்படி வாசிப்பனுபவம் எழுதலாம், இதிலிருந்து புத்திசாலித்தனமாக எதைக் கண்டுபிடிக்கலாம் என்று. சிந்தித்துப் பார்த்தால், நான் உண்மையிலேயே ஆழ்ந்து வாசித்தது என் பதின்ம வயதுகளில்தான் என்று தோன்றியது. உள்ளே இருந்த அந்தக் குழந்தை வாசித்துக் கொண்டிருந்தது. அந்தக் குழந்தைக்கு சாண்டாக்களில் நம்பிக்கை இருந்தது. அந்த மாதிரியான வாசிப்பை மீண்டும் கொண்டு வர நான் மிகவும் சிரமப்பட்டேன். பல விஷயங்களைத் துறக்க வேண்டியிருந்தது. விமர்சனம், அறிவுஜீவித்தனம், போன்றவை. முழுமையாகத் துறக்க முடியவில்லைதான். ஆனால் துறக்கத் துறக்க வாசிப்பதும், எழுதுவதும் எளிதாகிக் கொண்டே வருவதைக் காணமுடிகிறது.
உங்கள் கதையை இப்படி என்னுடைய அனுபவத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள முடிகிறது. மீண்டும் எழுத்தில் இறங்க நான் செய்ய வேண்டி இருந்ததெல்லாம் நான் தவற விட்ட குழந்தைமையை மீட்டெடுத்துக் கொள்வதை மட்டும்தான். அதைத்தான் இந்தக் கதை சுட்டுகிறது என்று நினைக்கிறேன்.
15 டிசம்பர், 2025
“உருவாய் அருவாய் உளதாய் இலதாய்”
1. “உருவாய் அருவாய் உளதாய் இலதாய்”
சொல்வனம் இணைய இதழில் என்னுடைய புதிய கட்டுரைத்தொடர் துவங்கியிருக்கிறது. அத்வைதம்: அகவிடுதலைக்கான பயணம் என்ற தலைப்பில். அதனது முதல் அத்தியாயம் “உருவாய் அருவாய் உளதாய் இலதாய்” அத்வைத வேதாந்தம் பற்றிய சிறு விளக்கத்தையும், அதன் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்தும் பேசுகிறது. இருவாரங்களுக்கொரு முறை இத்தொடரின் ஒவ்வொரு பகுதியும் வெளியாகும். அத்வைத வேதாந்தம் குறித்து அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கும், ஏற்கனவே அத்தத்துவத்தைக் கற்றுக் கொண்டவர்களுக்கு வாசித்து அனுபவிப்பதற்காகவும் பயனுள்ள தொடராக இருக்கும் இது.
மேலும் வாசிக்க
-
நன்றி : ஜெயமோகன் இணையதளம். அனுமதியுடன் வெளியிடப்படுகிறது. 1. ஆரோக்கிய நிகேதனம் . [ஆரோக்கிய நிகேதனம்] வங்காளி . தாராசங்கர் பானர்ஜி. தமிழாக்க...
-
எனக்கு முதன் முதலில் எதனால் ஆன்மீகத்தின்பால் ஈர்ப்பு ஏற்பட்டதென்று யோசித்துப் பார்க்கையில் ஓஷோதான் ஞாபகத்துக்கு வருகிறார். இந்தியனாய் இருக்க...
-
அசோகமித்திரன் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் . அவரது படைப்புகள் பலவற்றை நான் படித்ததில்லை . சிறு வயதில் பள்ளிப் பருவத்தில் ...
-
கைவல்ய நவநீதம் கைவல்ய நவநீதம் என்பது வேதாந்தத் தத்துவங்களைக் கூறும் ஒரு தமிழ் நூல் . அதற்குப் பொன்னம்பல ஸ்வாமிகள் எழுதிய உரை ...
-
சாதன சதுஷ்டயம் 1 ஓம் ஸஹனா அவது ஸஹனௌ புனக்து ஸஹவீர்யம் கரவாவஹை தேஜஸ்வினா வதீதமஸ்து மாவித் விஷாவஹைஹி ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி சதுஷ்டயம் என்றால...