அகிராவின் ராஷோமோன்

லேகா அவர்கள் யாழிசை ஓர் இலக்கியப்பயணத்தில் பரிந்துரை செய்த அகிரா குரோசாவாவின் ராஷோமோன் திரைப்படம் பார்த்தேன். நான் உலக சினிமா பார்க்க ஆரம்பித்திருப்பதே இந்தச் சிலமாதங்களில் வலைத்தளங்களின் தொடர்பு ஏற்பட்ட பின்புதான். ஐம்பதுகளில் வெளிவந்திருக்கும் இந்தத் திரைப்படம் ஒரு கொலையை மையமாக வைத்துக் கொண்டு, நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போது மனித மனம் கொள்ளும் திரிபுகளை விவரிக்கிறது.
படத்தின் துவக்கக் காட்சியில் ஒரு புத்தபிட்சுவும், இன்னொருவனும் ஒரு பாழடைந்த மண்டபத்தில் உறைந்துபோன முகங்களோடு அமர்ந்திருக்கிறார்கள். வெளியே அடை மழை பெய்துகொண்டிருக்கிறது. மழையின் தீவிரம் அவர்கள் இருவர் மனதிலும் தாக்கிக் கொண்டிருக்கும் எண்ணங்களின் தாக்கத்தைக் குறிப்பதாகப் படுகிறது. அங்கு அவர்களைச் சந்திக்கும் ஒரு வழிப்போக்கனிடம் இருவரும் தாங்கள் சாட்சியமளித்த ஓர் விசித்திரக் கொலை வழக்கைப் பற்றிச் சொல்கிறார்கள்.
கதை முழுவதும் சொல்ல ஆயாசமாக இருக்கிறது. ஒரு கொள்ளைக்காரன் காட்டுக்குள் வரும் ஒரு தம்பதியரை வழிமறித்து, மனைவியைக் கற்பழித்து விடுகிறான். கணவன் இறக்கிறான். அவன் யாரால் கொல்லப்பட்டான் என்று, பிடிபட்ட கொள்ளைக்காரன், தப்பிய மனைவி ஒவ்வொருவர் தரப்பு சாட்சியமும் காட்சிகளாக விரிகின்றது. இறந்த கணவனின் ஆவி கூட ஒரு மீடியத்தின் உதவியுடன் சாட்சி சொல்கிறது. இந்தக் கதைகளை வழிப்போக்கனிடம் பகிர்ந்து கொள்ளும், கொலையுண்ட உடலை முதலில் பார்த்தவன் அவை அனைத்தும் பொய் என்று சொல்லி தன் தரப்புக் கதையே உண்மை என்று இறுதியில் சொல்கிறான்.
அகிரா கதையில் பலவிஷயங்களை ஆராய்ந்திருக்கிறார். பெண் என்ற ஒரு பலவீனமான உயிரினம் ஆண்களின் பார்வைக்கு ஒரு போகப் பொருளாகவும், மோகம் தீர்ந்ததும் வீசி எரியப்படுகிற குப்பை இலையாகவுமே பார்க்கப்படுவதை நன்கு பதிவு செய்துள்ளார். இரண்டு ஆண்கள் உன்னை அனுபவித்திருக்கிறோமே, நீ ஏன் உன்னைக் கொன்று கொள்ளக் கூடாது என்கிறான் கணவன். கற்பழிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் உணர்வுகள் இரண்டு பேருக்கும் நடுவில் அல்லாடுகின்றன. நான்கு கோணங்களில் சொல்லப்பட்ட கதைகளிலும் பெண் சுகிக்கப்படுக்கிறாள்; வீசி எறியப்படுகிறாள்; புறக்கணிக்கப்படுகிறாள். தன் குதிரையை இழப்பதை விட அவளை இழப்பதே மேல் என்கிறான் கணவன். தன் உயிரைக் காத்துக்கொள்ள அவளை இழக்கத் தயாராகிறான்.
பெண்ணின் நிலையற்ற மனதும் கோடி காட்டப்பட்டுள்ளது. கொள்ளைக்காரனோடு செல்லத் தயாராகி விடுகிறாள் அவள். அதற்கு அவன் தன் கணவனைக் கொல்ல வேண்டும் என்கிறாள். இருவரும் பொருதிக்கொள்ளும் காட்சியில், மகாவீரன் என்று மார்தட்டிக்கொள்ளும் கொள்ளைக்காரனின் கரங்கள் உயிர்ப்பயத்தால் நடுங்குகின்றன. இருவருமே தங்கள் உயிர் போய்விடுமோ என்ற நடுக்கத்துடனேயே சண்டையிடுவது வித்தியாசமான காட்சி.
முதல் மூன்று கதைகளிலுமேயே பொய்கள் இருக்கின்றன. தங்களை உத்தமராகக் காட்டிக் கொள்ளத் தங்களைக் கொலைகாரர் என்று சொல்லிக்கொள்ளவும் தயாராக இருக்கிறார்கள். பொய்மை மனிதர்களின் இயல்பான குணமாகி விட்டது. மனிதன் தனக்குத்தானே பொய் சொல்லவும் பழகி விட்டான். சமயங்களில் அவன் சொல்வது உண்மையா, பொய்யா என்று அவனாலேயே பிரித்துச் சொல்ல முடியவில்லை என்பன போன்ற கருத்துக்கள் விவாதிக்கப்படுகின்றன. நாமும் இப்படித்தானே எங்கோ நடந்த துர்ச்சம்பவங்களைப் பற்றி உரையாடும் போது தத்துவ விவாதத்தில் இறங்கி விடுகிறோம். எந்த ஒரு மோசமான நிகழ்வும் மனிதனின் அடிப்படையான தன்மைகளின், ஒழுக்க நெறிகளின் அலசலுக்கு வழி வகுத்து விடுகிறது. நேர்மையையும், ஒழுக்கத்தையும் நம்மைத் தவிர்த்து எல்லாரிடமும் எதிர்பார்க்கிறோம். மனிதனின் மேலுள்ள நம்பிக்கை தகர்ந்து கொண்டே வருகிறது. உலகம் நரகம் போலவே மாறி வருகிறது. கதையின் நான்காவது கோணத்தைச் சொல்லுபவன் தான் சொல்லும் கோணமே உண்மை என்கிறான். தான் காவல் துறையிடம் சிக்கிக் கொள்ளக் கூடாதென்பதற்காகவே அதை நீதிமன்றத்தில் சொல்லவில்லை என்கிறான். அவன் சொல்வது உண்மைக்கதையா, இல்லையா என்று நாம்தான் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.
எல்லாக் கதைகளும் சொல்லப்பட்டபின் மண்டபத்தின் உள்ளிருந்து கைவிடப்பட்ட குழந்தையொன்றின் அழுகுரல் கேட்கிறது. அந்தக் குழந்தையோடு வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த கிமோனோவை வழிப்போக்கன் எடுத்துக்கொள்கிறான். மற்றவன் அவனைத் தடுக்க மனிதாபிமானத்தோடு நடந்து கொள், இது அந்தக் குழந்தையைக் கண்டெடுப்பவர்களுக்கு உதவும் விதத்தில் வைக்கப்பட்டுள்ளது எனும்போது, குழந்தையைக் கைவிட்ட அந்தப் பெற்றோர் மனிதாபிமானத்தொடு நடந்து கொண்டார்களா? கொலை நடந்த இடத்திலிருந்து அந்தப் பெண்ணின் விலையுயர்ந்த குறுவாளைத் திருடினாயே நீ மனிதாபிமானத்தோடு நடந்துகொண்டாயா என்று கேட்டுவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறான் வழிப்போக்கன். இவன் மௌனமாக நிற்கிறான். மனிதத்தில் நம்பிக்கை இழக்க மறுக்கும் புத்த பிட்சு குழந்தையை எடுத்துக்கொண்டு நடக்க இவன் கை நீட்டுகிறான். போய்விடு, பிடுங்குவதற்கு இன்னும் ஏதாவது இருக்குமா என்று பார்க்கிறாயா? என்கிறான் புத்தபிட்சு வெறுப்போடு. இவன் கண்ணீருடன் எனக்கு ஆறு குழந்தைகள், இது சேர்வதால் எனக்கு ஒரு பெரிய வேறுபாடும் ஏற்படப்போவதில்லை என்று குழந்தையைக் கேட்கிறான். மனிதம் இன்னும் சாகவில்லை என்று மகிழும் பிட்சு கண்ணீரோடு அவனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு குழந்தையைத் தருகிறான். எத்தனையோ புதிர்கள் நிறைந்த மனித உள்ளத்தில் தவறுகள் புரிவதால் ஏற்படும் குற்ற உணர்ச்சிகள் உறுத்தி அவர்களை நல்வழிப்படுத்துகிறது என்றெண்ணலாம் போலத் தோன்றுகிறது.

Comments

  1. மிக நன்றாக அலசியிருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. நல்லா இருக்குங்க.

    முடிவை பார்வையாளன் வசம் விட்டுவிட்டும் இப்படத்தில் திரைக்கதை பிரமிக்க செய்வது..திரை நுணுக்கங்களை அகிரா நேரடியாகவும் மறைமுகமாகவும் பார்வையாளனுக்கு முன்வைக்கின்றார்.A complete Movie!

    ReplyDelete
  3. நன்றி எஸ்.கே

    நன்றி லேகா.

    எனக்கு இந்தப் படத்தில் மிகவும் பிடித்தது அந்தத் தீவிரமான மழைதான்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை